மகாத்மா ஜோதிபாய் புலேவும், இந்தியாவில் சமூகப் புரட்சியும்


பேராசிரியர் கெயில் ஆம்வேட் அவர்கள் 1971-ல் EPW-ல் எழுதிய கட்டுரையை Critical Quest பதிப்பகம் மறுபதிப்பு செய்துள்ளது. இக்கட்டுரை புலே குறித்து கவனப்படுத்துபவை முக்கியமான வாதங்கள்.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்திய மண்ணில் களமாடிய மற்ற சமூக சீர்திருத்தவாதிகளின் வரிசையில் புலே அவர்களை வைத்து பார்க்க கூடாது. அவரின் சிந்தனைகள், பார்வைகள், ஆர்வங்கள் அக்காலத்தில் இயங்கிய மேல்சாதி சமூக சீர்திருத்தவாதிகளிடம் இருந்து முற்றாக வேறுபட்டதாக இருந்தது. உயர்சாதியினரின் ‘தேசிய புரட்சி’ என்பது மேட்டுக்குடி, உயர்சாதி பாரம்பரியத்தை தேசியம் என்று இணைத்து கொண்டு முன்னிறுத்தியது. இதற்கு மாறாக விவசாயிகளின் நலன், சாதி ஒழிப்பு ஆகியவற்றின் அடிப்படையிலான சமூக புரட்சியை ஜோதிபாய் புலே முன்மொழிந்தார்.

இந்தியாவின் இந்து கலாசாரம், சாதி அமைப்பை பிராமணியத்தை சார்ந்திருந்திருக்கிறது. ஒட்டுமொத்தமாக இந்திய மரபில் நீக்கமற கலந்து விட்ட சாதி அமைப்பு, மூட நம்பிக்கைகள், ஏற்றத்தாழ்வுகள் ஆகியவற்றை வேரறுக்க கனவு கண்ட வகையில் புலே அவர்களே இந்திய மறுமலர்ச்சியின் முதன்மையான ஆளுமையாக கொண்டாடப்பட வேண்டும். அவரின் சிந்தனைகளே இந்தியாவின் சமூக புரட்சிக்கான முதல் எதிர்க்குரல்.

புலே எந்த அளவுக்கு தீர்க்கமான பார்வை கொண்டிருந்தார் என்பதை ஒரே ஒரு எடுத்துக்காட்டின் மூலம் உணரவைக்கலாம். அவரின் எழுத்துக்களில் ‘இந்து’ என்கிற பதத்தை அவர் பயன்படுத்துவதே இல்லை. இந்து கலாசாரத்தின் பகுதியாக தன்னை கருதிக்கொண்டு தன்னுடைய வாதங்களை முன்வைக்காமல் ஒட்டுமொத்த மரபையும் பகுத்தறிவு, சமத்துவ தராசுகளில் நிறுத்தி பார்த்து கூராய்வு செய்தார் புலே. இதனால் அவர் கள நிலைமை உணராத ஒருவர் என்று எண்ணிவிடக் கூடாது. அவர் எளிய மக்களின் மொழியிலேயே பேசினார். அவர்களின் பிரச்சினைகளில் தன்னுடைய கவனத்தை குவித்தார். அவர் சமூகத்திற்கு வெளியே நின்றபடி கனவுலகில் உலவிக்கொண்டு உரையாடவில்லை. பிரமாணிய கலாசார மரபிற்கு வெளியே இருந்து தன்னுடைய போரை முன்னெடுத்தார்.

ஒட்டுமொத்த சாதி அமைப்பும், அடக்குமுறை நிரம்பியிருக்கும் குடும்ப அமைப்பும் சமத்துவத்திற்கு எதிரானது. ஆகவே அவற்றை நிராகரிக்க வேண்டும். ஒட்டுமொத்த மூட நம்பிக்கைகளும், மத பாரம்பரியங்களும் பகுத்தறிவோடு நோக்கப்படுகையில் தூக்கி எறியப்பட வேண்டியவை. மத எழுத்துக்களை ஏற்க வேண்டியதில்லை. அவற்றின் அதிகார அரசியலை துடைத்து எறிய வேண்டும். புலேவின் பார்வையில் இந்து மத நூல்கள் எல்லாம் கடந்த கால இந்திய வரலாறு குறித்து மிகக் குறைந்த புரிதலை தரும் கர்ண பரம்பரை கதைகள். அதைத்தாண்டி அவற்றால் பயன் எதுவும் இல்லை. அவை மக்களின் மனங்களை கட்டுப்படுத்தும் நோக்கத்தோடு ஆரியர்கள், பிராமணர்கள் திணித்தவை.

இப்படி பிராமணிய மரபை முற்றாக நிராகரித்த புலே அதன் இடத்தில் புரட்சிகர கலாசாரம் ஒன்றை முன்மொழிந்தார். அதனை சர்வஜனிக் சத்திய தர்மம் என்று அழைத்தார். (சமூகத்தின் உண்மையான தர்மம்). இந்த தர்மம் ஆனது அனைவருக்கும் ஆனது. சமூகத்தின் அற அடிப்படை வாய்மை, பகுத்தறிவில் பிணைந்திருக்க வேண்டும். தன்னுடைய மக்கள் அனைவரையும் சமமாக நடத்தாமல், பிரித்து அணுகும் மரபு அருவருப்பானது. சமத்துவத்தை விரும்புவனே நமக்கான இறைவனாக இருக்க இயலும். ஆகவே, இறைவனுக்கும், நமக்கும் இடையே தரகர்/அர்ச்சகர் தேவை கிடையாது.

புலேவை கிறிஸ்துவ மிஷனரிக்களின் கைக்கூலி என்று வசைபாடினார்கள். ஆனால், அவர் உயர்சாதி சமூக சீர்திருத்தவாதிகள் அளவுக்கு கூட இயேசு குறித்து அக்கறை காட்டவில்லை. அவர் கிறிஸ்துவ மதத்திற்கும் மாறவில்லை. மதம் குறித்த மரபான கேள்விகளில் அவர் தன் மனதை செலுத்தவில்லை. புலேவின் காலத்தில் பிராமணர் அல்லாத மராத்தி சமூகத்தில், குன்பிக்கள் எனும் நிலத்தை உழுபவர்களும், மராத்தாக்கள் என்பது அவர்களை சுரண்டுபவர்கள், அடக்கி ஆள்பவர்களையும் குறித்தது. இத்தகைய மராத்தாக்களை தெறிக்கும் அங்கதத்தோடு புலே எள்ளி நகையாடுகிறார்.
கடைக்கோடி மனிதனையே சமூகத்தின் மையமாக மாற்ற வேண்டும் என்று புலே வாதிட்டார். அவர் குலம்கிரி நூலில் பிராமணிய மரபு சமத்துவத்திற்கு எதிரானது என்று கூர்மையாக பேசுகிறார். சமூகத்தில் பிராமணிய கலாசாரம் மிகக் கடையவர்கள் என்று கருதிய தீண்டப்படாதோர், பெண்கள் குறித்தே புலே அக்கறை செலுத்தினார் என்பது விபத்தில்லை. அவரின் சிந்தனை எதோ அரவணைப்புவாதம் கொண்ட மேல்தட்டு பார்வையில்லை. விவசாய தொழிலாளர்கள், தீண்டப்படாதோர் ஆகிய இருவரையும் பிராமணிய அடிமைத்தனத்தில் சிக்கி பாடுபடுபவர்களாக அவர் கருதினார். அவரின் சத்தியசோதக் இயக்கம் அவரின் காலத்திற்கு பிறகு அவரை பின்பற்றியவர்களாக சொல்லிக்கொண்டவர்கள் தங்களை சாதி இந்துக்கள் என்று அழைத்து கொண்ட காலத்தில் தான் தலித்துகளின் எழுச்சி அம்பேத்கரின் வழிகாட்டுதலில் வேறு திசையில் தீவிரமாக பயணித்தது எனலாம்.

புலே பெண் விடுதலையை தன்னுடைய மூச்சாக கொண்டிருந்தார். அவரின் தோள் சேர்ந்து பணியாற்றியவர் கிருஷ்ணராவ் பாலேகர் . பெண் விடுதலையை ஆதரித்து ஆண்-பெண் வேறுபாடுகளை விமர்சித்து தாராபாய் ஷிண்டே எழுதிய நூலை கூர்மையாக பாலேகர் தாக்கி எழுதினார். தன்னுடைய தளபதி என்று கூட பார்க்காமல் அவரின் விமர்சனத்தை கடுமையாக புலே தாக்கி எழுதினார். அத்தாக்குதல் பிராமணர்கள் மீதான அவரின் எழுத்தை விட கோபத்தோடு வெளிப்பட்டது.பாலேகர் பண்டைய, அடக்குமுறையின் உருவமாக திகழ்கிற குடும்ப முறையின் குரலாக வெளிப்படுகிறார், வீட்டோடு பெண் கட்டிப்போட பட்டுள்ளார். கணவன்-மனைவி உறவானது புதிய பாதையில் சமத்துவம் மிக்கதாக பயணிக்க வேண்டும் என்று எழுதினார் புலே. இந்த கருத்து மோதல்களை தாண்டி தன்னுடைய மரணம் வரை புலேவின் இயக்கத்தில் பங்காற்றினார் பாலேகர் என்பது கவனத்துக்கு உரியது. குடும்பத்தில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும்வரை சமூக சமத்துவம் என்பது சாத்தியமே இல்லை என்று புலே தெளிவாக உணர்ந்திருந்தார்.

ஆரியர்களும், ஆரியர் அல்லாதோரும்:

ஒரு முழுமையான கருத்தியல் என்பது அடிப்படை விழுமியங்கள் கொண்டதாக மட்டும் தேங்கி விடாது. அது சமூகத்தின் தற்கால நிலை குறித்து அக்கறை காட்டி, அதனை மாற்ற முனையும். அதையே புலேவும் செய்தார். எப்படி சாதி அமைப்பு தோன்றியது என்பது குறித்து தன்னுடைய கருதுகோளை புலே முன்வைத்தார். புலேவின் பார்வையில் பிராமணர், பிராமணர் அல்லாதோர் நலன்கள் என்பதை சமரசப்படுத்தி கொள்ள வாய்ப்பே இல்லை. ஆதிக்கம் செலுத்தும் மேட்டுக்குடியின் ஆதிக்கம் முடிவுக்கு வந்தே ஆக வேண்டும். புலே ‘பிராமண வெறுப்பு’ கொண்டிருந்தார் என்பது , சுரண்டிக்கொண்டிருந்த முதலாளிகள் மீது மார்க்சியர்கள் வெறுப்பு கொண்டிருந்தது என்பதை ஒத்ததே ஆகும் என்கிறார் கெயில் ஆம்வேட்.

புலேவின் ஆரியர் அல்லாதோர் குறித்த கருத்துகள் கலாசார, இன கூறுகளில் தான் கவனம் செலுத்தியது. பொருளாதார, அரசியல் கூறுகள் பெரிதாக கவனித்தில் கொலப்படவில்லை. அவர் காலத்தில் காலனியத்தின் பொருளாதார போக்குகள், அரசியல் தீர்வுகள் குறித்து அறிவது எளிதான ஒன்றாக இருக்கவில்லை. எனவேதான், அவரின் அக்கறை கலாசார, இன விஷயங்களில் நிலைபெற்றது. சாதி அமைப்பில் ஆதிக்கம் செலுத்தும் இடத்தில் இருந்த பிராமணர்கள் அறிவை தங்களின் தனிச்சொத்தாக ஆக்கி கொண்டார்கள். இவர்களை அந்நியர்கள், படை எடுத்து வந்த ஆரியர்களின் வழித்தோன்றல்கள் என்று புலே கருதினார். இவர்கள் சாதி அமைப்பை கொண்டு இம்மண்ணின் பூர்வ குடிகளை அடிமைப்படுத்தி விட்டார்கள். இவர்களிடம் தேங்கியிருக்கும் அதிகாரம், அறிவு அனைவர்க்கும் உரியதாக மாற்றப்பட்டே ஆகவேண்டும்.

எது தேசிய கலாசாரம் என்கிற கேள்வி எழுந்த போது மேல்சாதியினர், மேல்தட்டு வர்க்கத்தினர் பிரிட்டிஷார் இந்தியா என வரையறுத்ததை இந்தியா என்று ஏற்றுக்கொண்டார்கள். இந்தியாவின் கலாசாரம் என்பது இந்து கலாசாரம். அது வேத காலத்தில் ஆரிய மக்களின் படைப்பில் எழுந்தது என்றார்கள். இந்த மரபின் பிரிக்க முடியாத பண்பாக வர்ணாசிரம தர்மத்தை கருதினார்கள். ஆரியர் அல்லாதோர், இஸ்லாமியர், பழங்குடியினர், கீழ் சாதியினர், விவசாயிகள் ஆகியோரின் மரபுகளை இழிவான ஒன்றாக கருதினார்கள், தரம் தாழ்த்தி அணுகினார்கள்.

ஆரிய இனம் குறித்த கருதுகோள்கள் ஜெர்மனியில் ஒப்பீட்டு ஆய்வாளர்களின் மத்தியில் தோன்றியதை, இந்துக்களும்-பிரிட்டிஷாரும் ரத்த உறவுகள் கொண்டவர்கள் என்று மாக்ஸ் முல்லர் பிரபலப்படுத்துவதில் போய் நின்றது. இதை அப்படியே எடுத்துக்கொண்டு, ஆரிய இனம், கலாசாரமே உயர்ந்தது, உன்னதமானது. அதன் ஆன்மீக பண்பை மேற்கின் இந்தோ ஐரோப்பியர்கள் தொலைத்து விட்டார்கள் என்றார்கள். காட்டுமிராண்டிகளாக இருந்த ஆரியர் அல்லாதோர் ஆரிய பண்பாட்டின் காற்று பட்டே பண்பட்டார்கள். பிளந்து கிடந்த இந்திய சமூகத்தை சாதியே பிணைத்து என்பது அவர்களின் பார்வை. மேற்கின் பகுத்தறிவு சாதி அமைப்பை கேள்வி கேட்டது என்றால், மேற்கின் இனவெறி சாதி அமைப்பிற்கு வலிமை சேர்த்தது.

இரு பிறப்பாளர்கள் ஆன பிராமணர், சத்திரியர், வைசியர் ஆகியோர் மட்டுமே ஆரியர்கள் என அழைக்கப்பட்டார்கள். சூத்திரர்கள், தீண்டப்படாதோர், பழங்குடியினர் ஆரியர் அல்லாதோரின் வழித்தோன்றல்கள் எனப்பட்டார்கள். ஆரிய இனம் என்கிற கருதுகோளை அப்படியே ஏற்காத தயானந்தர் முதலியோர் கூட திராவிடர்கள், சூத்திரர்கள், பழங்குடியினர், இஸ்லாமியர் ஆகியோர் கலாசார, அற, அறிவுக்கூறுகளில் ஆரியர்களை விட கீழானவர்கள் என்றே கருதினார்கள். திலகர் இப்படி எழுதினார்:

ஆரியர்கள் வட துருவத்தில் இருந்து புதிய நிலங்களை தேடி நிலநடுக்கோட்டை நோக்கி பயணித்தார்கள். ஆரியர் அல்லாத இனங்களை ஆரியர்கள் வென்றது, கொன்றது, செரித்துக் கொண்டது ஆகியவை ஆரியர்களே உயர்ந்த, அவசியமான இனம் என்பதை வெளிப்படுத்துகிறது

இந்திய தேசியத்தின் அடிப்படையாக ஆரிய, வடமொழி மரபை முன்னிறுத்தியதன் மூலம் மேல்சாதி இந்துக்களின் குரல், கலாசாரமே வலுப்படுத்தப்பட்டது. வங்க அறிவுஜீவிகள் காளியை தங்களுடைய போராட்ட அடையாளமாக முன்னிறுத்தி வெகுமக்கள் மரபுகளை தூற்றினார்கள். திலகர் சித்பவன பிராமணர்களின் தெய்வமான கணபதியை சுற்றி இந்து தேசியத்தை பின்னினார். சிவாஜியை தனதாக்கி கொண்ட திலகர் அவரை பிராமணர்களின் பேச்சின் கேட்டு ஆண்டவராக, இஸ்லாமியர்களின் எதிரியாக முன்னிறுத்தினார். காந்தியின் ராம ராஜ்யம் இந்தியாவில் பெருமளவில் கவனம் பெற்றாலும், தமிழ் மண்ணில் திராவிடர்களை கொன்றொழித்த ஆரியனாக இராமன் அணுகப்பட்டான். சம்புகன் என்கிற சூத்திர பிள்ளை பிராமண நெறியை பின்பற்ற முயன்றதற்காக கொன்ற ஆதிக்க சாதி வெறி கொண்ட ஒருவனாக இராமன் பெரும்பான்மை மகாராஷ்டிர மக்களுக்கு திகழ்ந்ததை கெயில் ஆம்வேட் சுட்டிக்காட்டுகிறார்.

ஆரிய கலாசாரமே உயர்ந்தது. அந்த இனம் தந்த பங்களிப்பே வேதங்கள், வர்ணாசிரமம் என்கிற வாதத்தை மகாத்மா புலே நேருக்கு நேர் எதிர்கொண்டார். எதை பண்டைய நாகரிகத்தின் துவக்கம் என்று வாதிட்டார்களோ அதனையே அடிமை முறையின் துவக்கம் என்று சாடினார் புலே. பிரிட்டிஷார், இஸ்லாமிய ஆட்சி அந்நியர் ஆட்சி என்பதை தாண்டி அவர்களுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வந்த ‘இரானி-ஆரிய-பட்’கள் குறிப்பாக பிராமணர்கள் அந்நியர்களே. உயர்சாதியினர், பழமைவாத மதம், வேதங்கள், புராணங்கள் முதலிய அனைத்தும் மூட நம்பிக்கைகள் மட்டுமல்ல, அவை இந்த நிலத்திற்கு அந்நியமானவை. அவை ஆதிக்கத்தின் ஆயுதங்கள்.
புராணங்கள் புலேவின் சிந்தனையில் மறுவாசிப்புக்கு ஆட்பட்டன. தசாவதாரம் மண்ணின் மைந்தர்களை ஆரியர்கள் அடிமைப்படுத்திய கதைகள் என்று புலே நிறுவினார். நரசிம்ம அவதாரம் ஒரு அப்பாவி இளவரசனின் மனதை நஞ்சாக்கி தன்னுடைய தந்தையையே கொல்லத்தூண்டிய கதை என்றார். உச்சமாக வாமன அவதாரம் இம்மண்ணின் எளியவர்கள், விவசாயிகள் ஆகியோரின் தலைவரான பலியை ஏமாற்றி அதிகாரத்தை கைப்பற்றிக்கொள்ளும் ஆவணம் என்று புலே கருத்துரைத்தார். பலி வந்திட இன்பம் பெருகும் என்கிற மகாராஷ்டிரா பழமொழியும் இந்த வாசிப்பும் ஒன்றிணைந்து கொண்டன. இதனால் மதத்தை நோக்கி மக்களை புலே திருப்பினார் என்று தவறாக எண்ணிக்கொள்ள கூடாது.
பிராமணியத்தின் கதையாடலை வேறொரு கதையாடலின் மூலம் எதிர்கொள்ளும் எதிர்ச்செயல்பாடே இது. மேலும், கீழ் சாதியினரின் தெய்வங்களான காண்டோபா, ஜோதிபா, மார்த்தாண்ட், கல்பாஹிரி ஆகியோரை நெகிழ்வான பார்வையோடு அணுகிய அவர் சம்ஸ்கிருதமயமாக்கப்பட்ட தெய்வங்களை புறந்தள்ளினார்.

புலேவின் காலத்திற்கு பிறகு இந்த ஆரியர் அல்லாதோர் அடையாளத்தை சூத்திரர்கள் ஆகிய பெரும்பான்மை மராத்தியர்கள் புறந்தள்ளினார்கள். இந்து தேசிய ஒற்றுமைக்கு இனப்போர் என்கிற கருத்தாக்கம் தடையாக இருந்தது ஒருபுறம், இடைநிலை சாதியினர் இருபதாம் நூற்றாண்டில் தங்களை சத்திரியர்கள் என்று அழைத்துக்கொண்டார்கள். புலேவும் சத்திரியர்கள் பூர்வகுடிகள் என்று எழுதினார். ஆனால், அவர் அந்த அடையாளத்தை உயர்த்திப்பிடிக்கவில்லை. இவர்களோ ஆரியர்களின் வழித்தோன்றல்கள் ஆகிய சத்திரியர்கள் என்று அறிவித்துக்கொண்டார்கள். அடிமைத்தனம், சூத்திரர்கள், ஆரியர் அல்லாதோர் முதலியவை திமுகவின் இனவாத கருத்துகள் என்கிற வட இந்தியாவின் குரலையே இவர்களும் வழிமொழிந்தார்கள் என்று கெயில் ஆம்வேட் கவனப்படுத்துகிறார்.

புலே வெறுமனே மகாராஷ்டிராவோடு தன்னுடைய மாற்று அரசியலை குறுக்கிக்கொண்டவர் இல்லை. அதற்கு மாறாக குலம்கிரி நூலை அமெரிக்காவில் அரங்கேறிக்கொண்டிருந்த அடிமை முறை ஒழிப்பிற்கு அர்ப்பணித்தார் என்பது அவரின் உலகளாவிய பார்வையை காட்டுகிறது. பண்ணையார்கள், செல்வந்தர்கள், மேல்சாதியினர் ஆகியோரின் பக்கம் நிற்காமல் கீழ்சாதியினர், விவசாயிகள், பழங்குடியினர் பக்கம் குரல் கொடுத்து புலே தனித்த ஆளுமையாக உயர்ந்து நிற்கிறார். அவரின் கருதுகோள் சாதி அமைப்பை இந்தியாவிற்கு அந்நியமானது என்று தாக்கி, ஒரு ‘ஜனநாயகமயமான தேசிய கலாசாரத்திற்கு’ ஆன அடிப்படையை தந்தது. அதன் மீது சமத்துவ கோபுரத்தை அவரின் வழித்தோன்றல்கள் கட்டி எழுப்பாமல் போனாலும் அடித்தளம் வலுவாகவே இருக்கிறது என்கிறார் ஆம்வேட்.

புலேவின் பொருளாதார, சமூக தடுமாற்றங்கள்:

புலே அறிவுச்சுடராக எழுந்த காலத்தில் பிராமணர் அல்லாதோரில் இருந்து மாற்றுச்சிந்தனையை முன்வைப்பவர்களே பெரிதாக எழுந்திருக்கவில்லை. அப்படி புலே போன்றவர்கள் எழுந்தாலும் நுண்மையான மாற்று கலாசார கருத்தாக்கத்தை ஆழமாக, நுண்மையாக வைக்க காலம் கைகூடியிருக்கவில்லை. கடைக்கோடி மக்களோடு உடனடி உரையாடல் மேற்கொண்டு அவர்களை முன்னோக்கி அழைத்து செல்வதே அவசரத்தேவை என்கிற ரீதியில் தன்னுடைய ‘சர்வஜனிக் சத்திய தர்மம்’ நூலில் புலே எழுதுகிறார். எனினும், அவரின் எழுத்துகள் விவசாயக்கூலிகளின் வறுமையை பேசியது. கவிதையும், பரப்புரையும் இணைந்து கொண்டு பிரச்சினைகளின் வேர்களை, அவற்றுக்கான தீர்வுகளை கவனப்படுத்தியது.

இந்தியாவின் மேல்சாதி அறிவுஜீவிகள் ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டு இந்தியர்கள் சுரண்டப்படுவதாக சொன்ன போது, புலே மிகச்சரியாக இந்திய விவசாயி பிரமாண மேட்டுக்குடியினர், காலனிய ஆட்சியாளர்கள் என்று இருதரப்பாலும் சுரண்டப்படுவதை கவனப்படுத்தினார். தொழில்மயமாக்கல் இந்தியாவின் பிரச்சினைகளை தீர்க்கும் என்ற காலத்தில் விவசாயத்தின் பிரச்சினைகள், உழுபவர்கள் எதிர்கொள்ளும் பாடுகள் குறித்து புலே பேசினார்.

புலே ஆங்கிலேயரை எதிர்த்த மேல்சாதி அறிவுஜீவிகளை போலவே ஆங்கிலேய ஆட்சியை விமர்சனப்பார்வையோடு அணுகினார். இந்தியாவின் வளங்களை சுரண்டிக்கொண்டு போவதையும், தேசத்தை வறுமையில் உழலவிட்டு, உள்ளூர் கலைகள், தொழில்களை நசிய விட்டதையும் கவனத்தில் கொண்டார். ஆங்கிலேய அதிகார வர்க்கத்தை சாடிய அவர், அந்த அதிகாரத்தை கீழ்நிலையில் சுவைத்து, சுரண்டுபவர்களாக பிராமணர்கள் இருப்பதையும் கருத்தில் கொண்டார். மேல்சாதியினர் ஆங்கிலேயரை மட்டும் தாக்கிய போது, ஆங்கிலேயரின் ஆட்சியின் கனிகளை சுவைக்கும் மேல்சாதியினரையும் இணைத்து புலே சாடினார். ஒதுக்கப்பட்ட நிதியில் பெரும்பான்மையை மேல்சாதியினர் தங்களுடைய கல்விக்கு பயன்படுத்திக்கொண்டு விவசாயிகள் வறுமையில், வேதனையில் உழல்வதை கவனப்படுத்தினார் புலே.

புலே மார்க்சியர்களை போல விவசாயிகள், தொழிலாளிகளுக்குள் நிலவிய வர்க்க பேதங்களை கருத்தில் கொள்ளவில்லை. தொழிற்சாலைகளில் பாடுபடும் தொழிலாளர்கள் குறித்தும் அவர் பேசவில்லை. அவரின் காலத்தில் பொருளாதார புரட்சி முதலிய சிந்தனைகள் வளர்ந்திருக்கவில்லை தொழில்மயமாக்கம் இந்தியாவின் பிரச்சினைகளை தீர்த்து விடாது, விவசாயத்தில் அக்கறை காட்ட வேண்டும். நீர்நிலைகள் விரிவாக்கம், அறிவியல் முறையில் கால்நடை வளர்ப்பு, மண் பாதுகாப்பு திட்டங்கள் என்று புலேவின் கனவுகள் விரிந்தன. நவீன தொழில்நுட்பங்கள் கிராமங்களை வந்தடைய வேண்டும் என்றும் அவர் விரும்பினார். ஆனால், அவர் விவசாயத்தில் பலன்கள் விளைந்தாலும் அதையும் ஒரு மேட்டுக்குடி கைப்பற்றிக்கொள்ளும் என்பதை கருத்தில் கொள்ள தவறினார்.
வைஸ்ராய் வருகைக்கு ஆயிரம் ரூபாயை வாரி இறைப்பதை எதிர்க்கிறவராக இருந்தாலும், புலே ஆங்கிலேயரிடம் அடித்தட்டு மக்களின் கல்வி, முன்னேற்றத்துக்காக உதவி கேட்டு நின்றார். தங்களுக்கான அடிமை பாபுக்களை உருவாக்கி வேலை வாங்கிக்கொண்டிருந்த ஆங்கிலேயரிடமே கல்வியின் கதவுகளை திறக்க உதவுங்கள் என்று புலே கேட்க நேர்ந்தது. அதற்கான மனமும், நிதி ஒதுக்கீடும் ஆங்கிலேயருக்கு இருக்கவில்லை. மேலே இருந்து மேற்கொள்ளப்படும் முன்னேற்ற செயல்பாடுகள் பலன் தராது என்று தெளிவாக பேசிய புலே, அனைவர்க்கும் கல்வியை வழங்க வேண்டும் என்று கோரினார்.

புலே வட்டன், குல்கர்னி முதலிய சாதி முறையை கட்டிக்காக்கும் முறைகளை ஒழிப்பது, அப்பதவிகளை அனைவர்க்கும் திறந்து விடுவது ஆகியவற்றுக்கு தீவிரமாக குரல் கொடுத்தார். பல தார மணம், குழந்தை திருமணம், விபசாரம் ஆகியவற்றுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் இயற்றப்படவும் முழங்கினார்.

புலே சமூக மாற்றத்துக்காக ஆங்கிலேயரை நம்பியிருந்தது அவரின் போதாமை. அவர் பிராமணர் அல்லாதோர் அதிகார பீடங்களை கைப்பற்றிக் கொள்ளும் போது மாற்றங்கள் நிகழும் என்று நம்பினார். பிராமணர்களின் மக்கள் தொகைக்கு ஏற்பவே அவர்களுக்கு அதிகாரத்தில் இடம் தரப்பட வேண்டும் என்று அவர் எழுதினார். இது முடிவல்ல, துவக்கம் என்கிற தெளிவு அவருக்கு இருந்தது. புலே பிராமணர் அல்லாதோர் இயக்கத்தை சமூக மாற்றத்துக்கான கருவியாக மாற்றிக் காட்டினார். அதே வேளையில் அவருக்கு பின் வந்தவர்கள் அதனை பொருளாதார, அரசியல் தளங்களில் மாற்று சக்தியாக மாற்ற தவறி விட்டார்கள். ஆங்கிலேய அரசு சமூக மாற்றத்துக்கு தயாராக இல்லை, மேல்சாதி தேசியவாதிகள் போராட்டங்கள் கைமீறிப் போகாமல் பார்த்து கொண்டார்கள் (வரி கொடாத போராட்டம், குத்தகை மறுப்பு போராட்டமாக மாற அவர்கள் அனுமதிக்கவில்லை என்பது ஒரு எடுத்துக்காட்டு). அதிகாரத்தின் கனிகளை பிராமணர் அல்லாதோர் சுவைத்தார்கள், ஆனால், கிராமங்களின் ஏற்றத்தாழ்வுகளை அவர்கள் சமப்படுத்தவில்லை.
குல்கர்னி முதலிய இடங்களை தாங்களும் பங்கிட்டு கொண்டார்கள், கிராம வழிபாட்டு உரிமைகளை பெற்றார்கள். ஆனால், பாட்டீல் மாநாடுகளுக்கு ஆதரவி தந்து கொண்டே, மகர்களை அடிமைப்படுத்தும் வட்டன் முறையை அம்பேத்கர் எதிர்த்த போது அவருக்கு ஆதரவு தர மறுத்தார்கள்.

ஆண்-பெண், பல்வேறு சாதியினர், கிராமம்-குடும்பம் என்று பல தளங்களில் மாற்றமும், சமத்துவமும் ஏற்பட வேண்டும் என்கிற புலேவின் கனவு புறந்தள்ளப்பட்டது. புரட்சிகர மனப்பான்மை கொண்ட சத்திய சோதக் சமாஜ இளைஞர்கள் தங்களுடைய மூத்தவர்கள் அதிகாரத்தை பிடித்து கொண்டிருப்பதை கண்டார்கள். அவர்கள் அந்நிய ஆட்சியில் இருந்து உடைத்து வெளியேறும் விடுதலை போராட்டத்தை விட்டு முன்னோடிகள் விலகியிருப்பதாக எண்ணிக்கொண்டு தேசிய நீரோட்டத்தில் கலந்தார்கள். புலேவின் சமூகப் புரட்சி கனவு அப்படியே இருக்கிறது.

புலே ஆரியர் அல்லாதோர் கருத்தாக்கத்தை கூர்மையாக, செறிவாக முன்வைத்தார். ஆரிய இனத்தவர்கள் வெள்ளையர்களோடு தொடர்புடையவர்கள் எனப்பட்ட காலத்தில் ஆரியர் அல்லாதோரை கறுப்பின மக்களை தொடர்புபடுத்தி கொண்டு சமத்துவக்குரலை அவர் எழுப்பினார். உறிஞ்சி கொழுத்துக் கொண்டிருக்கும் ஆதிக்க சாதி குழுவினரை அதிகாரத்தை விட்டு அகற்றினாலே ஒடுக்கப்படும் மக்கள் முன்னேற முடியும் என்கிற சிந்தனையை முதலில் முன்மொழிந்தவர் என்கிற வகையில் இந்திய சமூக சிந்தனை மரபில் புலே மிக முக்கியமான இடத்தை பெறுகிறார்.

Jotirao Phule and The ideology of Social Revolution in India- Gail Omvedt
Critical Quest
பக்கங்கள் நாற்பது
விலை 30

கருத்துரிமை நெரிப்பின் கலங்க வைக்கும் வரலாறு – 2



ஆபாசம், அவமதிப்பு, அரசியலமைப்பு:
இந்தியாவில் காலனிய காலம் துவங்கி இன்று வரை கருத்துரிமை எப்படி கட்டுப்படுத்தப்படுகிறது என்பது குறித்த அபினவ் சந்திரசூடின் ‘Republic of Rhetoric’ நூல் அறிமுகத்தின் கடைசிப் பாகம் இது.எது ஆபாசம்?:
ஆபாசத்துக்கு உரிய ஒன்று கருத்துரிமையின் கீழ் வராது. எது ஆபாசம் என்பதைத் தீர்மானிக்க நீதிமன்றங்கள் காலனிய காலத்திலும், விடுதலைக்குப் பின்னரும் ஹிக்லின் சோதனையைப் பயன்படுத்தின. இந்தச் சோதனை ஒழுக்கமற்ற மனதானது எப்படி ஒரு படைப்பை காணும் என்பதைக் கணக்கில் கொண்டு ஆபாசம் எது என்பதை வரையறுத்தது. இதனால், ஒரு படைப்பில் ஏதேனும் ஒரு வரியோ, இல்லை பத்தியோ உடலுறவு, பாலியல் வர்ணனை சார்ந்து இருந்தால் நூலே ஆபாசம் என்று முடிவு கட்டப்பட்டது. காலனிய நீதிமன்றங்களில் ஆசன் என்கிற வார்த்தை இடம்பெற்றது, உடலுறவு கொள்ளச் சத்தான உணவு உண்ணுவது, கண்ணன் ராதையின் மார்பை அழுத்தியது, உடலுறவுக்கு அழைத்தது, வீதி நாடகம் எனும் தெலுங்கு படைப்பில் பெண்ணின் பாலுறுப்புகள் துன்புறுத்தப்பட்டது குறித்த விவரணை எனப் பலவற்றை ஆபாசம் என அறிவிக்கச் சொல்லி வழக்குகள் தொடரப்பட்டன. நபகோவின் லோலிதா நாவல் பதினொன்று அல்லது பதிமூன்று வயது பெண்ணோடு உடலுறுவு கொள்ளும் ஆண் குறித்த நாவல் என்பதால் அதைத் தடை செய்ய வேண்டும் என்று கராக்கா என்பவர் மொரார்ஜி தேசாய்க்குக் கடிதம் எழுதினார். நேரு தலையிட்டு நூலை வெளியிட வைத்தார்.

Image result for republic of rhetoric
Lady Chatterley’s Lover என்கிற டி.ஹெச்.லாரன்ஸ் நாவல் ஆபாசமாக இருக்கிறது எனச் சொல்லி அதைப் பம்பாயில் விற்ற ரஞ்சித் உதேஷி கைது செய்யப்பட்டார். அந்தக் கைது செல்லும் என்று தீர்ப்பளித்த நீதிபதி ஹிதயத்துல்லா கலை, இலக்கியத்தில் இருக்கும் காமம், நிர்வாணம் என்பது ஒட்டுமொத்தமாக மோசம் கிடையாது. காமம் என்பதே மோசமானதோ, மனிதரை பாழ்படுத்துவதோ இல்லை. அதே சமயம் அந்தப் படைப்பு பொது நன்மைக்குப் பயன்படுகிறதா என்பதைக் கணக்கில் கொள்ள வேண்டும். அது பொது நன்மையை உறுதி செய்யும் படைப்பா என்பதை நீதிமன்றமே முடிவு செய்யும் என்று தீர்ப்பில் எழுதினார். ஹிக்லின் சோதனையைப் பயன்படுத்தி அந்நாவல் ஆபாசமானது ஆகவே அதை விற்றது குற்றம், காம விருப்புடைய மனங்களைக் காக்க வேண்டியது நீதிமன்றத்தின் கடமை என்றும் அறிவித்தார். இந்தத் தீர்ப்பு எது ஆபாசம் என்பதைத் தீர்மானித்தாலும், காமத்தை பேசும் எல்லாப் படைப்புகளும் ஆபாசம் இல்லை என்று அறிவித்தது.
        அதே சமயம், உச்சநீதிமன்றம் தேவிதாஸ் ராமச்சந்திர துலிஜாபுர்கர் வழக்கில் காந்தி முதலிய தேசத்தலைவர்கள் குறித்து ஆபாசமாக எழுத கூடாது என்று தீர்ப்பு எழுதியது.  அவீக் சர்க்கார் தன்னுடைய செய்தித்தாளில் போரிஸ் பெக்கர் தன்னுடைய காதலியோடு நிற்கும் அரை நிர்வாண படத்தை நிறவெறிக்கு எதிரான அடையாளமாக வெளியிட்டார். அதை ஆபாசம் என்று அறிவிக்கக் கோரி வழக்குத் தொடரப்பட்டது. ஒரு படைப்பை முழுமையாகக் கணக்கில் கொண்டே அது ஆபாச உணர்வுகளைத் தூண்டுகிறதா என்று முடிவு செய்ய வேண்டும் என்று தீர்ப்பு எழுதியதன் மூலம் உச்சநீதிமன்றம் ஹிக்லின் சோதனையில் இருந்து ஓரளவிற்கு நகர்ந்து வந்தது.
Image result for boris becker aveek sarkar
   குஷ்பு கற்பு சார்ந்து கருத்து தெரிவித்ததற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில்,’காம உணர்ச்சியை, மோக சிந்தனைகளைத் தூண்டிவிடுவது ஆபாசமானது. அவர் பாலியல் இச்சைகளைத் தூண்டக்கூடிய எதையும் சொல்லிவிடவில்லை….திருமணம் என்பது சமூக அமைப்பு தான். எனினும், இந்தியாவில் பல்வேறு பூர்வகுடிகள் திருமண அமைப்புக்கு வெளியே உடலுறவு கொள்வது வழக்கமாக இருக்கிறது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.’ என்று விவரித்துக் குஷ்பு பேசியது ஆபாசமில்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு எழுதியது.
Image result for khusboo and supreme court
ராஜாஜி இந்தியாவின் உள்துறை அமைச்சராக இருந்த போது 1930-ல் நடந்த சிட்டாகாங் ஆயுத புரட்சியை அடிப்படையாகக் கொண்ட திரைப்படம் ஒன்று வருவது குறித்துக் கவலை தெரிவித்தார். அந்தத் திரைப்படம் ‘அரை வேக்காட்டுக் கல்வி கொண்ட மக்களைக் குற்றம் செய்வதற்குத் தூண்டி விடும்’ என்று அவர் பயந்தார். அதனைத் தொடர்ந்து தணிக்கை வாரியம் ஏற்படுத்தப்பட்டது. ராஜ் கபூர் வழக்கில் உச்சநீதிமன்றம் தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்கிய பின்னரும் ஒரு திரைப்படம் ஆபாசமாக இருக்கிறது என வழக்கு தொடர முடியும் என்று தீர்ப்பு எழுதியது. அதைத் தொடர்ந்து எண்பத்தி மூன்றில் திரைப்படச் சட்டம் திருத்தப்பட்டுத் தணிக்கை வாரியம் சான்றிதழ் தந்த பிறகு ஒரு திரைப்படம் ஆபாசம் என வழக்கு தொடர முடியாது என்று ஆக்கப்பட்டது.

        கேபிள் தொலைக்காட்சி விதிகள் தொலைக்காட்சிகளுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கின்றன. நல்ல ரசனை இல்லாதவற்றைக் காட்டக்கூடாது. எந்த இனக்குழு, மொழிக்குழுவையும் மோசமாகக் காட்டக்கூடாது. மூடநம்பிக்கைகளை வளர்க்க கூடாது. பொதுப் பார்வைக்கு உகந்ததாக இருக்க வேண்டும் (இதனால் தான் தொலைக்காட்சிகள் தாங்களே பல படங்களைத் தணிக்கை செய்து ஒளிபரப்புகின்றன) என்று இந்தப் பட்டியல் நீள்கிறது. மேலும், செய்தித்தாள்கள் போல அல்லாமல் தொலைக்காட்சிகளுக்கு உரிமம் தேவைப்படுவதால் அவை இவற்றுக்குக் கட்டுப்படுகின்றன. வானொலி நிலையங்கள் அனைத்திந்திய வானொலி எந்த விளம்பர, செய்தி நெறிமுறைகளைப் பின்பற்றுகிறதோ அதை அனைத்து வானொலி நிலையங்களும் பின்பற்ற வேண்டும். இன்னும் மோசமாக, அரசு ஒப்புதல் பெற்ற அரசியல் செய்திகளையே அவை அலைபரப்ப முடியும்.

நீதிமன்ற அவமதிப்பு:
நீதிமன்ற அவமதிப்பு என்பது தண்டனைக்குரிய குற்றமாக இங்கிலாந்தில் இருந்தாலும் அது அரிதாகவே பயன்படுத்தப்பட்டது. . நீதிமன்ற அவமதிப்புக் கருத்துரிமையில் சேர்க்கப்படாமல் கட்டுப்படுத்தப்படச் சில காரணங்களை அபினவ் முன்வைக்கிறார். நீதிபதிகள் தங்கள் மீது சாட்டப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக வாதிடவோ, பதில் சொல்லவோ இயலாது. அப்படியே வழக்குத் தொடர்ந்தாலும் அது வெகுநாட்களுக்கு இழுத்துக் கொண்டே இருக்கும். மேலும், நீதிபதிகள் நீதிமன்றத்தை நடத்த விடாமல் தொல்லை கொடுப்பவர்களைக் கட்டுப்படுத்தவும், நீதிமன்றத்தில் குழப்பம் விளைவிப்பவர்களை எச்சரிக்கவும் நீதிமன்ற அவமதிப்புத் தேவைப்படுகிறது. எனினும், இது கருத்துரிமையை நெரிப்பதாக, கட்டற்றதாக இருக்க வேண்டியதில்லை என்பது ஆசிரியரின் பார்வை.

Image result for contempt of court india

நேரு செய்த நீதிமன்ற அவமதிப்பு:
எல்.ஐ.சி. முந்த்ரா என்பவரிடம் சந்தை விலையை விடக் கூடுதல் விலைக்குப் பங்குகளை வாங்கியது. இது சார்ந்து எல்.ஐ.சி. நிர்வாகிகள், நிதித்துறை செயலர், நிதி அமைச்சர் ஆகியோர் குற்றஞ்சாட்டப்பட்டார்கள். விவியன் போஸ் என்கிற வங்கத்தைச் சேர்ந்த நீதிபதி விசாரணை மேற்கொண்டார். அவர் நிதித்துறை செயலாளர், எல்.ஐ.சி. தலைவர், நிர்வாக இயக்குனர் ஆகியோர் குற்றவாளிகள் என்று அறிக்கை சமர்ப்பித்தார். இது குறித்து நேருவிடம் கேட்ட போது, ‘அருமையான அனுமானம்… விவியன் போஸ் அறிவற்றவர்’ என்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

            இது நீதிமன்ற அவமதிப்பு என்பதற்காக நேரு மீது வழக்கு போட யோசிக்கப்பட்டது. நேருவே அதற்குள் விவியன் போஸ், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோருக்கு மன்னிப்பு கேட்டுக் கடிதம் எழுதினார். அக்கடிதத்தைப் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடவும் நேரு ஒப்பினார். நேருவின் மன்னிப்பு ஏற்கப்பட்டது. அதற்குப் பிறகு நடந்த உச்சநீதிமன்ற நீதிபதியின் பிரிவுபாசார விழாவில் நேரு கலந்து கொண்டார். டால்மியா-ஜெயின் நிறுவனங்கள் மீதான விசாரணை பொறுப்பை விவியன் போஸிடமே நேரு ஒப்படைத்தார்.
மான நஷ்ட வழக்கு:
இந்தியாவில் மானநஷ்ட சட்டப்பிரிவை இன்னமும் கடுமையாக மெக்காலே வரையறுத்தார். இங்கிலாந்தில் எழுத்தில் இடம்பெறும் கருத்துகள் மட்டுமே மான நஷ்ட குற்றத்துக்கு உரியது. இந்தியாவில் பேச்சளவில் வெளிப்படும் கருத்துக்களும் மான நஷ்ட வழக்குக்கு உரிய குற்றமாகக் கருதப்படுகிறது. பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தால் மட்டுமே இச்சட்டம் பயன்படுத்தப்பட வேண்டும் என்றெல்லாம் எந்தக் கட்டுப்பாடும் இல்லை .
நக்கீரன் ராஜகோபால் நடத்திய நக்கீரன் இதழில் ஆட்டோ சங்கர் எழுதிய தொடர் இடம்பெற்றது. அதில் பல்வேறு அரசு அதிகாரிகள் தன்னிடம் லஞ்சம் பெற்றதாகக் குறிப்பிட்டார் ஆட்டோ சங்கர். இது அவர்களின் புகழுக்குக் களங்கம் விளைவிக்கிற ஒன்று என்று மான நஷ்ட வழக்குப் போடப்பட்டது. நீதிமன்றம் அரசு அதிகாரிகள் குறித்த கருத்துக்களுக்காக மான நஷ்ட வழக்கு தொடர முடியாது. அதே சமயம், அந்தக் கருத்துக்கள் முழுக்க உண்மைக்குப் புறம்பானதாக, மோசமான உள்நோக்கம் கொண்டதாக இருந்தால் தண்டனைக்கு உரியது என்று அமெரிக்காவின் சுல்லிவன் வழக்கை மேற்கோள் காட்டி தீர்ப்பு எழுதப்பட்டது. ஆனால், அரசு அதிகாரிகள் மட்டுமே இப்படிப்பட்ட கருத்துக்களுக்கு மான நஷ்ட வழக்கு தொடர முடியாது. இதில் நீதிபதிகள் அடங்க மாட்டார்கள் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு எழுதியது.

Image result for nakheeran rajagopal auto shankar

வெறுப்பைத் தூண்டும் பேச்சுகள் கருத்துரிமையில் சேராது. இது சார்ந்த கடுமையான சட்டங்கள் ஆங்கிலேயர் காலத்தில் இயற்றப்பட்டன. இந்தியா போன்ற பல்வேறு இனக்குழுக்கள் கொண்ட நாட்டில் அமைதியை நிலைநாட்ட வெறுப்பு மிக்கப் பேச்சுக்களைக் கட்டுப்படுத்துவது அவசியம் என்று அரசு கருதியது. லேக் ராம் என்கிற ஆரிய சமாஜ உறுப்பினர் நபிகள் நாயகம் குறித்து வெறுப்பைக் கக்கினார். அதனால் அவர் ஆறு வருடங்களுக்குள் இறந்து விடுவார் என்று அகமதியா பிரிவை சேர்ந்த மிர்ஸா குலாம் முகமது தெரிவித்தார். லேக் ராம் கொல்லப்பட்டார். இதற்குப் பிறகே பல்வேறு குழுக்களிடையே குழப்பத்தை உண்டு செய்யும் பேச்சுகள் தடை செய்யப்படும் வகையில் 153A குற்ற சட்டப்பிரிவு கொண்டு வரப்பட்டது. இப்படிப்பட்ட சட்டங்கள் மதங்களைச் சீர்திருத்தும் நோக்கில் விமர்சிக்கும் கருத்துகளையும் வெளிப்பட விடாமல் தடுக்கும். உருவ வழிபாடு ஒழிப்பு இயக்கம், பிரம்ம சமாஜ இயக்கம், பிரார்த்தன சமாஜ இயக்கம் ஆகியவையும் இயங்காமல் போகக்கூடும் என்று அச்சம் தெரிவிக்கப்பட்டது.

         மேலும், மத உணர்வுகளைப் புண்படுத்தும் பேச்சுக்களையும் தடை செய்யும் சட்டப்பிரிவும் கொண்டு வரப்பட்டது. இதற்குப் பின்னணியில் ‘ரங்கீலா ரசூல்’ எனும் பிரசுரம் இருந்தது. வண்ணமயமான நபிகள் என்கிற பொருள் தரும் இந்த நூல் நபிகள் நாயகத்தின் அக வாழ்வு சார்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளை முன்வைத்தது. இது பண்டித சமுபதியால் எழுதப்பட்டது. இதைத் தடை செய்யக்கோரி தலிப் சிங் என்கிற நீதிபதி முன் வழக்குச் சென்றது. அந்நூல் மோசமானது என்றாலும் அது பகை, வெறுப்பை வளர்க்கவில்லை என்று தடை விதிக்க மறுத்தார் நீதிபதி. இருக்கிற சட்டமானது இறந்து போன மதத்தலைவர்களைக் காப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை, மேலும், வரலாற்று பார்வையுள்ள நூல்களும் இப்படிச் சட்டத்தைப் பயன்படுத்தினால் வராமல் போகும் என்று தீர்ப்பு எழுதினார். பல்வேறு கலவரங்கள் அந்நூலால் வெடித்தன.
Image result for rangeela rasool           

               ரிசலா-இ-வர்தமான் என்கிற உருது இதழ் ‘நரகப் பயணம்’ என்கிற தலைப்பில் வெளியிட்ட படைப்பில் நபிகள் நாயகம் நரகத்தில் துயரப்படுவதாக எழுதியது. இதை விசாரித்த இரண்டு நீதிபதிகள் அடங்கிய குற்றவியல் சட்ட அமர்வு தண்டனைக்குரிய குற்றமாக அக்கட்டுரையை அறிவித்து, அக்கட்டுரையின் ஆசிரியர் தேவி சரண் சர்மாவுக்கு ஒரு ஆண்டுச் சிறைத்தண்டனை விதித்தது. அந்த வழக்கில் நீதிபதி பிராட்வே இன்னும் சில கருத்துக்களைப் பதிவு செய்தார்: ‘ மதம், மதத்தை நிறுவியவர் மீதான அறிவார்ந்த, கூர்மையான, வலிமையான விமர்சனங்களைத் தடை செய்ய வேண்டியதில்லை. இழிவுபடுத்தும், அவதூறான கருத்துக்களே தண்டனைக்கு உரியவை’ என்று தீர்ப்பு எழுதினார்.

இதற்குப் பிறகு, பிரிட்டிஷ் அரசு புதிதாகச் சட்டப்பிரிவு 295A ஐ சேர்த்தது. இது மத உணர்வுகளைக் காயப்படுத்துவதைக் குற்றத்துக்கு உரிய தண்டனையாக அறிவித்தது. இந்தச் சட்டப்பிரிவு இன்னும் கடுமையாக இருக்க வேண்டும் என்று ஜின்னா கருத்து தெரிவித்தார். மேலும், ஜின்னா இந்த வழக்கில் சிறைத்தண்டனை பெற்றால் ஜாமீன் பெற முடியாது எனச் சட்ட திருத்தத்தைச் சாதித்தார். குற்றவியல் சட்டத்தில் சேர்க்கப்பட்டது.

விடுதலைக்குப் பின்னால் 153A சட்டப்பிரிவு இன்னமும் கூடுதல் அதிகாரங்களைப் பெற்றது. இதன்படி, மதம், இனம், பிறந்த ஊர், வசிக்கும் இடம், மொழி, சாதி, சமூகம் சார்ந்து ஊறு, பகை, வெறுப்பு, மோசமான சிந்தனைகளை விதைத்தால் அவையும் தண்டனைக்கு உரியவை என்று திருத்தப்பட்டது. இன்னமும் மோசமாக, இந்திரா காந்தி காலத்தில் இந்த இரு சட்டப்பிரிவுகளின் கீழ் ஒருவரை கைது உத்தரவு இல்லாமல் கைது செய்ய முடியும் என்றும் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

கருத்துரிமை பெரும்பான்மையினரின் விருப்பு, வெறுப்புகளுக்கு உட்பட்டதா?:
பல்வந்த் சிங் என்கிற அரசு அதிகாரி இந்திரா காந்தி கொல்லப்பட்ட அன்று, ‘காலிஸ்தான் ஜிந்தாபாத்’ என்று கோஷம் எழுப்பியதற்காகக் கைது செய்யப்பட்டார். நீதிமன்றம் அவரை விடுவித்தது. பொது அமைதிக்கு எந்தத் தீங்கையும் அவரின் செயல் விளைவிக்கவில்லை. வன்முறையையும் அது தூண்டவில்லை என்பதை நீதிமன்றம் கருத்தில் கொண்டது. ஜாவலி எதிர் கர்நாடகா அரசு வழக்கில், ‘கன்னட மொழிக்கே முன்னுரிமை, இந்தி அதற்கு அடுத்த இடத்தையே கர்நாடகாவில் பெறவேண்டும்’ என்று கருத்து தெரிவித்த அரசு அதிகாரியின் கருத்து வெறுப்பைத் தூண்டும் பேச்சல்ல என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. எவ்வளவு பிரபலமற்ற கருத்தாக இருந்தாலும் அதை விவாதிப்பதோ, ஆதரிப்பதோ தண்டனைக்கு உரியது அல்ல என்று அத்தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது.

பெரியாரின் ராமாயணம் குறித்த நூல் இந்தியில் லலாய் சிங் யாதவால் மொழிபெயர்க்கப்பட்டது. அந்த நூலுக்கு உத்தரப் பிரதேச அரசு தடை விதித்தது. இதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் நீதிபதி கிருஷ்ண ஐயர் இப்படித் தீர்ப்பு எழுதினார்:
‘எது ஆதிவாசிகளைக் காயப்படுத்துகிறதோ அது நவீன சமூகங்களுக்குச் சிரிப்பை வரவைக்கக் கூடியதாக இருக்கலாம். ஒரு மதம், பிரிவு, நாடு, காலம் ஆகியவற்றுக்கு எதிரானதாக, நிந்தனையாகத் தோன்றும் ஒன்று இன்னொரு தரப்புக்கு கேள்விக்கு அப்பாற்பட்ட புனிதமாக இருக்கலாம்…கலிலியோ, டார்வின் துவங்கி தோரோ, ரஸ்கின், காரல் மார்க்ஸ், ஹெச்.ஜி.வெல்ஸ், பெர்னார்ட் ஷா, ரஸ்ஸல் முதலிய பல்வேறு தலைசிறந்த சிந்தனையாளர்களின் கருத்துகள், பார்வைகள் மக்களால் எதிர்க்கப்பட்டுள்ளன. ஏன் மனு முதல் நேரு வரை தலைசிறந்த இந்தியர்களின் கருத்துகள் தவிர்க்கப்பட்டு இருக்கின்றன. இப்போதும் கூட அங்கொன்றும், இங்கொன்றுமாகச் சிலர் இந்தக் கருத்துக்களால் காயப்படுவார்கள். அதற்காக இந்த மகத்தான எழுத்துக்களைத் தங்களுடைய மூர்க்கமான பார்வையால் சில வெறியர்கள் வெறுக்கிறார்கள் என்பதற்காக எந்த அரசும் பழங்கால அரசுகளைப் போல அந்த நூலை கைப்பற்றாது’ என்று தடையை நீக்கினார்.

          ஒரே ஒரு கிராமத்திலே என்கிற இட ஒதுக்கீட்டை விமர்சிக்கும் படத்திற்கு எதிராகத் தொடரப்பட்ட ரங்கராஜன் எதிர் ஜெகஜீவன் ராம் வழக்கில் பெரும்பான்மை மக்கள் எதிர்ப்பார்கள்,. வன்முறை நிகழும் என்றெல்லாம் அஞ்சி தணிக்கை வாரியம் அனுமதி வழங்கிய திரைப்படத்தை வெளியிடாமல் விட முடியாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. ஒரு படைப்பின் எதோ ஒரு கருத்துக் காயப்படுத்துகிறது என்பதற்காக அதனைத் தடை செய்ய முடியாது, அப்படைப்பின் மைய நோக்கத்தைக் கணக்கில் கொள்ள வேண்டும் என்று அத்தீர்ப்பில் கூறப்பட்டது.

Image result for periyar  ramayana

அதே சமயம், பரகூர் ராமச்சந்திரப்பா வழக்கில் நீதிமன்றம் பசவர் குறித்த ஆசிரியரின் கருத்துக்களுக்காக நூலை தடை செய்ததோடு, ‘மிகப்பெரிய மொழி, மத வேறுபாடுகளைக் கொண்ட நாட்டில் பலவீனமான மக்களின் மனங்கள் காயப்படாமல் கருத்துக்களை வெளிப்படுத்தும் வகையில் கவனமும், கரிசனமும் வேண்டும்’ என்று அறிவுறுத்தியது. பல்வேறு புத்தகத் தடைகளை, திரைப்படத் தணிக்கைகளை நீதிமன்றங்கள் ஏற்றுக்கொண்டு இருந்திருக்கின்றன என்பதைப் பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர்.
சிவாஜி குறித்த லெய்ன் நூலில் சிவாஜியின் தந்தை வேறொருவர் என்றும், அவரின் அப்சல் கான் மீதான தாக்குதல் இருக்கிற பிராமணிய அடுக்கை காப்பாற்றும் முயற்சியே ஆகும் என்றெல்லாம் கருத்துகள் நிலவியதால் அந்நூல் மகாராஷ்டிராவில் வன்முறைக்குக் களமானது. அந்நூலில் குறிப்பிடப்பட்ட நூலகம் தீக்கிரையானது. நூல் தடைக்கு ஆளானது. உச்சநீதிமன்றம் தடையை நீக்கியது. 

பத்திரிகைகளின் கழுத்தை நெரித்தல்:
இந்திய விடுதலைக்குப் பிறகு நேரு கொண்டு வந்த Press Act ஆங்கிலேயர் காலத்துப் பத்திரிகை அவசரநிலை சட்டத்தை விடக் கடுமையானதாக இருந்தது என்கிற அபினவ். மத்திய அரசு செய்தித்தாள்களின் பக்கங்கள், விளம்பரங்கள் எவ்வளவு இருக்க வேண்டும் என்று தீர்மானிக்க முயன்றது. சிறிய இதழ்களுக்கு வாய்ப்பு தரவும், ஒரு பத்திரிகை ஆதிக்கம் செலுத்தாமல் தடுக்கவும் இம்முயற்சி என்று காரணம் சொல்லப்பட்டது. நீதிமன்றம் நேரடியாக இது கருத்துரிமையைப் பாதிக்கா விட்டாலும் இது செய்தி நிறுவனத்துக்கு வருமான இழப்பை உண்டாக்கி, கருத்துகள் சென்று சேராமல் தடுப்பதை உள்நோக்கமாகக் கொண்டிருக்கிறது என்று சொல்லி அரசின் கட்டுப்பாடுகளை நீக்கியது. பத்திரிக்கையாளர்கள் சம்பளத்தைத் தீர்மானிக்க அரசு முயன்ற போது அதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டாலும், அது நியாயமானதாக இருக்க வேண்டும் என்றது. எத்தனை தாள்களை ஒரு செய்திதாளுக்கு ஒதுக்கலாம் என்பதை அரசு கட்டுப்படுத்த முயன்ற போது, நீதிமன்றம் மீண்டும் அதைக் கருத்துரிமையை நெரிக்கும் முயற்சி என்று ரத்து செய்தது. எனினும், அதில் பெரும்பான்மையோடு உடன்படாத நீதிபதி மாத்யூவின் தீர்ப்பு கவனத்துக்கு உரியது. ‘வெகு சிலரின் ஆதிக்கம் சந்தையை ஆளக்கூடாது. அது கருத்துரிமைக்குக் கேடானது’ என்றது இன்று ரிலையன்ஸ் முதலிய பெருநிறுவனங்கள் செய்தி நிறுவனங்களை நடத்தும் காலத்தில் பொருந்துவது என்கிறார் அபினவ். அதே சமயம், மேற்சொன்ன கட்டுப்பாடுகள் அதை மட்டுப்படுத்துமா என்றால் இல்லை என்றுதான் சொல்ல முடியும் என்கிறார் ஆசிரியர். சிறைத்தண்டனை கைதிகள் என்றாலும் அவர்களின் தனிப்பட்ட அந்தரங்க உரிமைகளை மீறி அவர்களைப்பற்றிச் செய்தியாளர்கள் கருத்துரிமை என்று சொல்லி பதிவு செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு எழுதியுள்ளது.
லஹிரி அடிப்படை உரிமைகள் சார்ந்த விவாதங்கள் நடைபெற்ற போது, ‘இச்சட்டங்கள் ஒரு காவல்துறை கான்ஸ்டபிள் பார்வையில் எழுதப்பட்டவை போல இருக்கின்றன’ என்றார். அபினவ் சந்திரசூடின் நூலை படிக்கிற போதும் அதுவே தோன்றியது. வெறும் வாய்ப்பந்தல் போட்டுவிட்டுக் கருத்துரிமைகள் விடுதலைக்குப் பிந்தைய காலத்திலும் காற்றில் பறக்க விடப்பட்டது நூலில் தெளிவாக வெளிப்படுகிறது. அதே சமயத்தில், ஏன் இந்தச் சட்டங்களுக்குத் தேவை இருக்கிறது, அவை ஏன் எழுந்தன என்பதைப் புரிந்து கொள்ள நூல் உதவுகிறது. நூலின் மிக முக்கியமான விடுபடல் அவசரநிலை காலம், அது எப்படிக் கருத்துரிமை சார்ந்த சட்டங்களில் மாற்றத்தை கொண்டுவந்தது என்பதை ஆசிரியர் கவனத்தில் கொள்ளவில்லை. ஒருவேளை ஆசிரியரின் தாத்தா சந்திரசூட் கருத்துரிமையைக் காக்க தவறிய ஜபல்பூர் வழக்கை விமர்சிக்க நேரிடுமோ என்று தவிர்த்திருக்கிறாரோ ஆசிரியர் என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை. எனினும், மிக முக்கியமான நூல்.

Continue reading

இந்தியாவைச் சுற்ற எண்பது ரயில்கள்


மோனிஷா ராஜேஷ் எனும் பிரிட்டனில் வாழும் பெண்ணுக்கு ஒரு வித்தியாசமான ஆசை துளிர்க்கிறது. உலகைச்சுற்றி எண்பது நாட்கள் என்கிற ஜீல்ஸ் வெர்னே நாவலைப்போல இந்தியாவை 80 தொடர்வண்டிகளில் கண்டடைய முடிவு செய்கிறார். பிரிட்டனில் இந்தியா முழுக்கச் செல்லுபடியாகும் சிறப்புப் பயணச்சீட்டுக்களைப் பெற்றுக் கொண்டு வந்து சேர்கிறார். கூடவே நார்வே நாட்டைச் சேர்ந்த இன்னொருவரை துணைக்கு அழைத்துக் கொள்கிறார்.

தொடர்வண்டியின் இரவுகளில் அவரை நோக்கி பாலியல் சீண்டல் முயற்சிகள் நடக்கின்றன. விளக்கை ஒளிரவிட்டால் தன்னுடைய பெட்டியை எடுப்பதைப் போலப் பாவனைச் செய்கிற நபர்களைக் கடக்கிறார். இந்தியர்கள் ஆங்கிலத்தை வெவ்வேறு வகைகளில் கொலை செய்வது அவரைக் கடும் அயற்சிக்கு ஆளாக்கியிருப்பதை நூலில் புரிந்து கொள்ள முடிகிறது.

இந்தியாவில் வாழ பிரிட்டனில் இருந்து கிளம்பி வந்த மோனிஷாவின் குடும்பம் பல்வேறு வருத்தங்கள், அதிர்ச்சிகளால் நாட்டை விட்டு வெளியேறுகிறது. கடந்த கால வெறுப்புகளை ஒரு பெரும்பயணம் எப்படி அடித்துச் செல்லும் என்பதை மோனிஷாவின் நூல் அழகாய் வெளிப்படுத்துகிறது.

பெரிதாக மத நம்பிக்கை இல்லாத மோனிஷா தான் இந்து என்பதை முற்றாகத் துறக்க முடியாமல் பயணத்தைத் துவங்குகிறார். தீவிர நாத்திகரான நண்பர் ‘நீ ஏன் ஏமாற்றுக்கார சாமியாரான சத்ய சாயிபாபாவின் படத்தை வைத்திருக்கிறாய்? உன் மதத்தின் பெயரால் நடக்கும் அநீதிகளை எளிதாகக் கடக்கிறாய்.’ என்கிறார். ‘என் தந்தையின் நம்பிக்கை அது. இந்தத் தனிமையான பயணத்தில் நான் தந்தையின் கதகதப்பை பற்றிக்கொள்ளும் வழி அது. அம்மா கொடுத்த சிறிய பிள்ளையார் சிலையும் அவ்வாறே. இவை அவர்கள் என் மீது வெளிப்படுத்தும் அக்கறையின் அடையாளம்’ என்கிறார் மோனிஷா.

Image may contain: text

பயணங்கள் தொடர்களில் இந்து மதம் எப்படிப் பெண்களைப் பாகுபடுத்துகிறது எனக் கண்ணுறுகிறார். ஆன்மீகம் எப்படி வியாபாரமாகக் கடை பரப்பப்படுகிறது எனக் கண்டு கொதிக்கிறார். கடவுள் இருக்க வேண்டிய ஆலயங்களில் கயமைகளின் பல்வேறு முகங்கள் அவரை வந்தடைகின்றன. மத நம்பிக்கையில் இருந்து விலகி புத்தரின் விபாஸானவை பற்றிக் கொள்கிறார்.

ஒரு பெட்டியில் மூன்று ஆண்கள் பெண்ணான மோனிஷாவுடன் இருக்கையைப் பகிர்ந்து கொள்ள மறுக்கிறார்கள். ஒரு தெரிந்த ஆணாவது உடனிருக்க வேண்டும் எனும் ரயில்வே விதி ஆச்சரியம் தருகிறது. பல்வேறு தொடர்வண்டிகள் கதை முழுக்கப் பயணிக்கின்றன.

முன்முடிவுகளாலான மனிதர்களாய் இந்தியர்கள் திகழ்வதை அவரின் பயணம் நமக்கு உணர்த்துகிறது. மனிதர்களைத் திறந்த மனதோடு அணுகும் மாண்பு ஐயங்கள், வேறுபாடுகள் மிகைத்த நாட்டில் அரிதாக நடப்பதை அவர் பயணம் நமக்குப் புரிய வைக்கிறது. ஆங்கிலேயர்களைப் பிரங்கிகள், அங்கிரேஸிக்கள் என இழிவாக இந்தியர்கள் அழைப்பதை, ‘கோஹினூர் கொள்ளையர்கள்’ என்பதை எல்லாம் மோனிஷா எதிர்கொள்ள நேரிடுகிறது.

ஒரு தொடர்வண்டியை மருத்துவமனையாக மாற்றிய ஒதுக்கப்பட்ட மக்களுக்குச் சேவை செய்யும் லாசரஸ், ‘வண்டியில் எதிரே நின்றபடி பேசுபவரை ‘உட்காருங்கள்’ எனச்சொல்லத் தெரியாத சுயநலவாதிகள் ஆங்கிலேயர்கள்’ என உணர வைக்கும் எளிய மனிதர் எனப்பலர் கையசைத்து கடக்கிறார்கள். தனிமை வாட்ட பொற்கோயிலில் வீட்டு ஞாபகம் வழிய மோனிஷா நிற்கிறார். லட்சம் பேருக்கு உணவிடும் அன்னசாலையில் அனாதையாகக் கசிகிறார். அவரின் பையை எடுத்து தரும் முதிய பணியாளர் அதை உணர்கிறார். தன் உணவை முழுக்க அவர் தட்டில் வார்த்து மகள் போல உணரவைத்து நகர்கிறார்.

Image result for monisha rajesh

அசாமிய கடத்தல்காரர் ‘ஏன் கொல்கிறோம்? ஏன் கடத்துகிறோம்? அப்படியாவது எங்கள் குரலை இந்தியா காது கொடுத்து கேட்காதா எனும் நப்பாசை தான். புரட்சி எல்லாம் சாத்தியமில்லை எனத்தெரியும்’ என்கிறார். நூல் முடிகையில் மோனிகாவின் முன்முடிவுகள் தென் மேற்கு பருவக்காற்று வாரிக்கொள்ளும் வெம்மை போலக் காணாமல் போகின்றன. குறைகள் நிறைய இருந்தாலும் பிரியமும், கனிவும், எதிர்பார்ப்பும் இல்லாத மனிதர்களும், தொடர்வண்டிகளும் அவரை நிறைக்கின்றன. நூலின் ஒரு போதாமை சமயங்களில் அயர்ச்சி தரும் நெடிய வர்ணனைகள். சாதியோ, கிராமப்புற வாழ்வோ, இந்தியாவின் சமத்துவமின்மையோ நூலில் எதிரொலிக்கவில்லை. எனினும் மோனிகாவின் பயணம் துணையற்று துணிச்சலாகத் தனியாக நீள்கிறது. பயணங்கள் போ தோழி என்கிற தட்ட முடியாத குரல் நூலை முடிக்கையில் ஆழ்மனதிலிருந்து கேட்கும்.

பக்கங்கள் 248
விலை 235
LOTUS ROLI books

Walking with foot soldiers of freedom holding hands of P.Sainath


I had once been assigned translation of a piece on the freedom fighter Salihan, by P.Sainath. I then underwent one of the most traumatic phases of my relatively energetic life. Sainath’s reportage is so nuanced that you can very rarely hear the distinct voice of the author. His interventions happen in such a way that it resembles a pebble in a moving river. This piece was an exception. The poem written as a tribute to Salihan, in the end, was one emotional and moving piece I had ever translated in my life. I realised at the end that my eyes were wet. My trauma vanished to a greater extent with those tears, maybe.

Then, I was given the rare privilege of translating another nine pieces in the same series. Due to various constraints and the heart-warming reportage I took nearly over a month to complete the work. Travelling into the dalit basti of Sherpur and soaking my legs in the filth of caste discrimination to which I am also a party by being able to do nothing, landing with awe amidst the protests of Kalliaseri, participating in court trials in Panimara, closing my eyes when Koya tribals got dispossessed, and seeing the signature of INA warrior Laxmi Panda in Tamil. I had lived a life and felt one life is not enough to understand even a drop of India’s endless tradition of subaltern protests.

There are few observations I made during translating these pieces. Sainath has always used ‘we’ and not even a single ‘I’ in these stories. If the pieces had only reported the past achievements and struggles it would have been another nostalgic ‘Freedom at midnight’ kind of stuff. The master craftsman weaves the text in finer ways between past and present, making us realise how we had failed our freedom fighters’ dreams. You would expect the pieces to be serious. Emotions, complex realities, humor even in the cliff of death, all filled the terrain of thoughts and made me immovable for nearly a month. More than all this, the pieces offer hope, and hand over the sense of guilt with finest surgical precision through simple words.

Thank you Sainath for making us meet those foot soldiers of freedom. It will take a long time for me to come out of their struggles. I wish its longer and lasting.

மறத்தல் தகுமோ?: விடுதலையின் வீரக்கதைகள்!


பி.சாய்நாத் இந்திய கிராமங்களை, அவற்றின் ஆன்மாவை ஆவணப்படுத்தும் People’s Archive of Rural India-ன் நிறுவனர்-ஆசிரியர். பல வருடங்களாகக் கிராமப்புற நிருபராக இந்தியா முழுக்கப் பயணிப்பவர். ‘Everybody Loves a Good Drought’ எனும் நூலின் ஆசிரியர். 1997-2007 காலகட்டத்தில் இந்தியா முழுவதும் பயணம் செய்து கொண்டாடப்படாத, அறியப்படாத விடுதலை வீரர்களின் கதைகளை எழுத்தாக்கினார். இந்திய விடுதலை வரலாற்றின் மறக்கப்பட்ட பக்கங்களின் தொகுப்பாக மட்டுமில்லாமல், தற்கால அவலங்களை, அநீதிகளையும் இவை கண்முன் நிறுத்துகின்றன. ‘Footsoldiers of freedom’ எனத் தலைப்பிடப்பட்ட இந்த பத்து கட்டுரைகளும் தமிழில் இங்கே வாசிக்க கிடைக்கும் :
Image result for சாய்நாத்
 
முதல் கட்டுரை:
 
ஆங்கிலேயரை அசைத்துப் பார்த்த சாலிஹான் (ஒடிசா)
 
#அவர் பிறந்த சாலிஹா கிராமத்தில் ‘சாலிஹான்’ என்று அறியப்படுகிறார். ஆயுதமேந்தி இருந்த ஆங்கிலேய அதிகாரியை லத்தியை கொண்டு எதிர்கொண்ட வீராங்கனையாக அவரைக் காண்கிறார்கள். அவர் அச்சமில்லாதவர் என்றாலும் அது குறித்து எந்தப் பெருமிதமும் அவருக்கு இல்லை. தான் எதையும் பெரிதாகச் செய்யவில்லை என்கிறார். “எங்களின் வீடுகள், பயிர்களை அழித்தார்கள். என் தந்தையைத் தாக்கினார்கள். ஆகவே தான் அவர்களோடு போரிட்டேன்.” என்கிறார்.#
 
#என்னோடு பேசு சாலிஹான்
 
ஒரு மணிநேரமாவது உன் குரலோடு உறவாட வேண்டும்
 
இந்த அபலை பிரிகையில் உன் இதயத்தின் குரலை
 
ஏட்டில் வடித்துவிடத் துடிக்கிறேன்.
 
இந்தியாவின் அறமற்ற அரசர்களோடு காதல் புரிவதினும் உன்னதமல்லவா உன் உடனான உறவு?#
 

விடுதலையின் வீரக்கதைகள்: லட்சுமி பண்டாவின் இறுதிப்போர் (ஒடிசா)

//இந்தியாவின் விடுதலைக்காக அர்ப்பணிப்போடு போராடிய எண்ணற்ற கிராமப்புற இந்தியர்களில் லட்சுமியும் ஒருவர். இவர்கள் புகழ்பெற்ற தலைவர்களாக, அமைச்சர்களாக, ஆளுநர்களாக மாறாமல் இருந்துவிட்ட சாதாரண மனிதர்கள். மிகப்பெரிய தியாகங்களைச் செய்துவிட்டு, விடுதலை கிடைத்ததும் இவர்கள் அன்றாட வாழ்க்கைக்குத் திரும்பினார்கள். இந்தியா தன்னுடைய விடுதலை வைரவிழாவை கொண்டாடும் தருணத்தில் இவர்களில் பெரும்பாலானோர் இறந்து விட்டார்கள். மிச்சம் இருக்கும் சிலரும் எண்பது, தொன்னூறு வயதில் நோயோடு போராடிக்கொண்டு இருக்கிறார்கள், இல்லை வறுமையில் சிக்கிக்கொண்டு தவிக்கிறார்கள்.//

 

https://ruralindiaonline.org/articles/%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D/

 

கொதித்து எழப்போகும் கோயா மக்கள்! (ஆந்திரப் பிரதேசம்)

//முழுமையான கொரில்லா போராக மாறியது. பழங்குடியின மக்களின் தீரமிகுந்த போர்க்குணத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் ஆங்கிலேய அரசு திணறியது. போராட்டத்தை நசுக்க மலபாரில் இருந்து சிறப்புப் படையைக் களமிறக்கியது. இந்தப் படைகள் காடுகளில் போரிடும் திறமைமிக்கவையாக இருந்தன. மேலும், கம்பியில்லா தகவல் தொடர்பு கருவிகளைப் பயன்படுத்தவும் செய்தன. சீதாராம ராஜூவின் மரணத்தோடு இப்புரட்சி 1924-ல் முடிவுக்கு வந்தது. எனினும், வரலாற்று ஆசிரியர் எம்.வேங்கடரங்கையா எழுதுவதைப் போல, “ஒத்துழையாமை இயக்கத்தை விட ஆங்கிலேய அரசுக்கு பெரும் தலைவலியாக இப்போராட்டம் மாறியது.”//

 

 

மகத்தான தியாகம், மறக்கப்பட்ட மகத்தான கனவுகள் (உத்தரப் பிரதேசம்)

//தலித்துகள் விருப்பப்பட்டு ஆதிக்க ஜாதியினர், அதிகாரிகளோடு மோதுவதில்லை. காவல்துறை தலித்துகளை நடத்துகிற முறை ஐம்பது வருடங்களில் பெரிதாக மாறிவிடவில்லை. கரகத்பூர் கிராமத்தில் வாழும் முஷாஹர் தலித்தான தீனநாத் வன்வாசி காவல்துறையின் கடுமையான அடக்குமுறையை அனுபவித்து இருக்கிறார். “ஏதேனும் அரசியல் கட்சி சிறை நிரப்பும் போராட்டம் நடத்தும். காஜிபூர் சிறைச்சாலை முழுக்கக் கைதிகளால் நிரம்பி விடும். ஒட்டுமொத்த சிறைச்சாலையே களேபரமாக இருக்கும். காவல்துறை என்ன செய்யும் தெரியுமா. கையில் கிடைக்கிற முஷாஹர் ஜாதியினரை காவல்துறை கைது செய்யும். ‘கொள்ளையடிக்கத் திட்டம் போட்டார்கள்’ என்று வழக்கு ஜோடிக்கப்படும். சிறையில் குவிந்திருக்கும் கைதிகளின் மலம், வாந்தி, எல்லாக் கருமத்தையும் கழுவ வேண்டும். அதற்குப் பின் விடுதலை செய்துவிடுவார்கள்.” என்று அதிரவைக்கிறார். //

 

கல்லியசேரிக்கு அருகில் உள்ள பரஸ்சினியில் உள்ள ஆலயம் வித்தியாசமானது. இது எல்லா ஜாதியினருக்கும் திறந்திருப்பது. இங்கே அர்ச்சகர்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள். இந்த ஆலய தெய்வம் முத்தப்பன், ‘ஏழைகளின் தெய்வம்’ என அறியப்படுபவர். வெண்கல நாய்களை வழிபாட்டு சிலைகளாகக் கருதும் ஆலயம் இது. அவருக்குக் கள்ளும், மாமிசமும் படையல்கள். கன்னூரில் இருக்கும் இந்த முத்தப்பன் ஆலயத்தின் மூலவரான முத்தப்பன் வேட்டையாடுபவர்களின் தெய்வம்.

எப்படி இறை மறுப்பாளர்களும், பக்தர்களும் கைகோர்க்க முடியும்? அதற்கு ஒரு நியாயமான அடிப்படை இருந்தது. இரு தரப்பும் ஒரே வர்க்கத்தைத் தான் எதிர்த்தார்கள். ஆதிக்க ஜாதி அடக்குமுறைக்கு எதிராகவே இரு தரப்பும் போராடியது. இரு தரப்பும் பண்ணையார்களின் கோபத்துக்கு ஆளானது. மேலும், தேசிய உணர்வு ஊறிப் பெருக்கெடுத்த காலத்தில் இயங்கிய இவர்கள் ஆங்கிலேயருக்கு எதிராக இயங்கினார்கள்.

 

https://ruralindiaonline.org/articles/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF/

 

 

#செருப்பு அணியக்கூடாது. ஒரு துண்டையே இடுப்பில் சுற்றிக்கொள்ள வேண்டும். அது அரை வேட்டி அளவே இருக்கும்.” என்கிறார் 63 வயதாகும் குன்ஹாம்பு. அவரின் தந்தை திய்யா விவசாயி. சமயங்களில் ஒடுக்கப்பட்ட ஜாதி பெண்கள் ரவிக்கை அணியவும் அனுமதி கிடையாது. “சில சாலைகள் வழியாக நாங்கள் போக முடியாது. எந்தப் பிரிவு ஆதிக்க ஜாதி ஆள் வருகிறார் என்பதைப் பொறுத்து நாங்கள் தள்ளி நடக்க வேண்டிய தூரமும் மாறுபடும்.” என்கிறார் குன்ஹாம்பு.

இந்த ஒடுக்குமுறைகளின் ஒரு பகுதியே ஒடுக்கப்பட்ட ஜாதியினரை பள்ளியை விட்டு தள்ளி வைத்தது. அதிகாரத்தை அடையும் வழிகளை அவர்களுக்கு அடைத்துவிடுவதே நோக்கம். அம்மக்களுக்கு எந்த வகையான மரியாதையும் தரக்கூடாது என்பதும் நோக்கம். ஜன்மிக்கள் ஏழைகளுக்கு எதிராக வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டார்கள்.

சுமுகனை அடித்தது மிக முக்கியமான திருப்புமுனையாக மாறியது.#

மேலும் வாசிக்க

https://ruralindiaonline.org/…/கல்லியசேரியில்-சுமுகனை-தேடி…

 

 

#அவர் பேசி முடித்ததும், ஒட்டு மொத்த கூட்டமும் எழுந்து நின்று கரவொலி எழுப்பியது. தங்களின் விடுதலைக்காகத் தன்னிகரில்லா போர் புரிந்த வீரர்களுக்கான அந்த மரியாதை வெகுநேரம் நீண்டது. ஒருவர் நினைத்து பார்ப்பதை விட நெடுநேரம் கூட்டத்தினர் நின்றபடி கரவொலி எழுப்பினார்கள். பலரின் கண்கள் கண்ணீரால் நிரம்பியிருந்தன. நானும் மற்றவர்களோடு நின்றபடி தங்களுடைய 9௦ வயதில் இருக்கும் இந்த அற்புதமான ஆண்கள், பெண்களுக்கு கைதட்டி, கண் கலங்கினேன். அவர்கள் உணர்ச்சி பெருக்கில் மூழ்கியிருந்தார்கள். தங்களுடைய நகரம் ஒரு வழியாகத் தங்களைக் கவுரவிக்கும் பெருமைமிகுந்த, மகிழ்ச்சிகரமான பொன்மாலைப் பொழுதில் திளைத்துக் கொண்டிருந்தார்கள். இது அவர்களுடைய இறுதிக்காலத்தின் மகத்தான தருணம். அது அவர்களுக்கான இறுதி உற்சாகம்.#

 

https://ruralindiaonline.org/articles/%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8B-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/

 

Image result for footsoldiers of freedom

 

ஆதிவாசி நடனம் ஆடப்போவதில்லை


ஜார்கண்டில் மருத்துவ அதிகாரியாக பணியாற்றும் ஹன்சா சௌவேந்திர  சேகரின் ‘The Adivasi will not dance’ சிறுகதை தொகுப்பை வாசித்து முடித்தேன். ஆங்கிலத்தில் எழுதப்பட்ட நூல் என்றாலும் மிக எளிய மொழியில் பெரும்பாலான கதைகள் மனதை நெகிழ வைக்கின்றன. இந்த கதைகள் பேசும் அரசியல், வெளிப்படுத்தும் ஆதிவாசி மக்களின் நுண்ணர்வுகள் கவனத்துக்கு உரியவை.

‘அவர்கள் கறி  சாப்பிடுகிறார்கள்’ சிறுகதை சைவ உணவு உண்பவர்கள் நிறைந்த 2002-க்கு முந்தைய குஜராத்தை களமாக  கொண்டது. அங்கே வசிக்க  வரும் பழங்குடியினர் படும் பாடு பெரும்பான்மைவாதத்தின் அடக்குமுறையை இலக்கிய வடிவில் உணர்த்துகிறது. வெவ்வேறு மதத்தினர் தனித்தனி காலனிகளில் வாழ்வது, ஒரு முட்டையை சமைத்து உண்டு விட்டு அந்த வாசனையை போக்கவும், ஓடுகளை பத்திரமாக குப்பை வண்டியில் சேர்க்கவும் படுகிற பாடுகள் தரும் நரக  வேதனையை வாசித்து உணர வேண்டும். அந்த  மாநிலத்தை  விட்டு நீங்கியதும், ‘நாம் என்ன சாப்பிடுகிறோம் என்று பிறரும், அவர்கள் என்ன சாப்பிடுகிறார்கள் என்று நாமும் கவலைப்படப்போவதில்லை.’ என்கிற வரி எல்லாருக்குமானது.
சந்தாலி பழங்குடியின பெண்களின் மீதான பாலியல் வன்முறையை படபடப்பும், வெம்மையும் குறையாமல் நான்கே பக்கங்களில் ‘நவம்பர் என்பது இடப்பெயர்வுகளின்  மாதம்’ கதை கடத்துகிறது. ‘உங்களைப்போன்ற சந்தாலி பெண்கள் இதற்காகவே படைக்கப்பட்டவர்கள்.’ என்றபடி இடப்பெயர்வுக்கு போகும் பெண்ணுடன் உடலுறவு கொள்ளும் காவல்துறை அதிகாரி பேசுகிறான். அதிகாரத்தின் வன்முறை வர்ணனையில் பொதிக்கப்பட்டு  வாசிக்க கிடைக்கிறது.  ‘இறுதியில் ஒரு ஆறிப்போன பிரெட் பக்கோரா, ஐம்பது ரூபாயை திணித்தான். அவள் பக்கோராவை தின்றாள், தன்னுடைய உள்ளாடைக்குள் ஐம்பது ரூபாயை பத்திரப்படுத்தினாள். லுங்கியை சரி செய்து கட்டிக்கொண்டு தன்னுடைய குழு நோக்கி நடந்தாள்’ என்று கதை முடிகிறது.
பழங்குடியினர் பகுதியில் நடக்கும் பல்வேறு அநீதிகளை, ‘அதற்குள் பல    சந்தாலி பெண்கள் விற்கப்பட்டு இருப்பார்கள். பல சந்தாலி ஆண்கள் போலி வழக்குகளில் சிக்க வைக்கப்பட்டு இருப்பார்கள். மோதிக்கொள்ளும் குழுக்கள் தங்களிடையே உள்ள பகையை தீர்த்துக்கொள்ள பல்வேறு வழக்குகளை ஜோடித்து இருப்பார்கள்’ எனும் சில வரிகள் சாவகாசமாக கடத்துகிறது.
The Adivasi Will Not Dance
விருப்பத்தை மீறிய திருமணத்துக்கு முந்தைய நாள் தான் காதலிப்பவனை  சந்திக்கும் பெண்ணைப்பற்றிய கதையின் வர்ணனை இது
‘நான் எப்பவும் உனக்காக மட்டும் தான். என்னோட எப்பவும் இருப்பேன்னு சொல்லுடா’. அவன் அவளை காதலித்ததால் எதுவும் சொல்லவில்லை. அவன் அவளை காதலிக்கவில்லை என்பதால் சொல்வதற்கு எதுவும் இல்லை என்று நின்றான்.
இனிமேல் எப்போதும் சந்திக்கவே முடியாது என்கிற முகத்தில் அறையும் உண்மை, தள்ளியே இருக்க வேண்டும் என்கிற கட்டாயம் அவர்களை நெருக்கமாக்கியது.’
நாட்டார் தெய்வங்களை நினைவுபடுத்தும் கதை ஒன்றும், பழங்குடியின பெண்களான சக இல்லத்திகள் இருவரின் அன்னியோன்னியம் நிறைந்த மோதல், அன்பு ததும்பும் கதை ஒன்றும், வேசையாக  அளவற்ற அன்போடு திகழும் சோனாவின் செறிவு மிகுந்த கதையும் நூலில் இடம் பெறும்  வேறு சில கதைகள்.
‘ஆதிவாசி நடனம் ஆடப்போவதில்லை ‘ கதை நூலின் மிக முக்கியமான கதை. எப்படி ஆதிவாசிகளின் வாழ்க்கையை, வேர்களை வளர்ச்சி என்கிற பெயரில் பெயர்த்து எடுக்கிறோம் என்பதை ஆதிவாசி நாட்டியக்கலைஞனின் தேர்ந்த நினைவலைகளில் கடத்துகிறார் சேகர். இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள், முதலாளிகள், அரசுகள் என்று சகலரின் மீதும் படபடக்கும் இந்த ஒரு கதையெனும் தமிழில் மொழிபெயர்க்கப்பட வேண்டும். பிடுங்கப்பட்ட நிலத்தின் மீது எழும் தொழிற்சாலையின் திறப்பு விழாவில் நாட்டியமாடும் ஆதிவாசிகள் எத்தனையோ சொல்லாத சங்கதிகளை சொல்லுகிறார்கள். எளிய நடையில் அமைந்த, வெவ்வேறு தளங்களில் பயணிக்கும் சிறுகதை நூல்
Hansda Sowvendra Shekhar
The Adivasi will not dance
Speaking Tiger
ஹன்சா சௌவேந்திர  சேகர்
விலை: 245
பக்கங்கள்: 140

‘ராமச்சந்திர குஹா’வின் ‘Democrats and Dissenters’ கட்டுரைத் தொகுப்பு அறிமுகம் -1


ராமச்சந்திர குஹாவுக்குத் தனிப்பட்ட அறிமுகம் தேவையில்லை. அவரின் ‘Democrats and Dissenters’ கட்டுரைத் தொகுப்பை வாசித்து முடித்தேன். வாரத்துக்கு அவரின் இரண்டு கட்டுரைகளைக் குறைந்தபட்சம் படித்துவிடுவதாலும், ஏற்கனவே வெளிவந்த நூலின் கருத்துக்களின் நீட்சியாகச் சில கட்டுரைகள் அமைவதாலும் நூல் சற்றே சலிப்பைத் தந்தது. எனினும், நூல் சுவையான வாசிப்பு அனுபவமாக நிறைய இடங்களில் இருந்தது. இரு பகுதிகளாக நூல் அறிமுகம் அமையும். முதல் பாகத்தில் அரசியல் சார்ந்த கட்டுரைகளின் தொகுப்பும், இரண்டாவது பகுதியில் ஆளுமைகள் குறித்த அறிமுகங்களும் இடம்பெறும்.

Image result for ramachandra guha democrats and dissenters

காங்கிரஸ் பேரியக்கத்துக்கு அஞ்சலி:

காங்கிரஸ் இயக்கம் காந்தியின் வருகைக்கு முன்னரே இந்தியா முழுக்க இருந்து ஆளுமைகளைத் தனதாக்கி கொண்டது. அதே சமயம் நகரங்களில் அது இயங்கியது. ஆங்கிலமே அதன் அலுவல் மொழியாக இருந்தது. காந்தி காங்கிரசில் ஏழைகள், விவசாயிகள், தொழிலாளர்கள் ஆகியோரை இணைத்தார். கட்சியின் அலுவல்கள் உள்ளூர் மொழிகளில் நிகழ்த்தப்பட்டன. மூன்றாவதாகப் பெண்களுக்கான உரிமைகள், தீண்டாமை ஒழிப்பு, இந்து-முஸ்லீம் ஒற்றுமை ஆகியவற்றுக்குப் பாடுபட்டார். இதன் மூலம் கட்சி காயஸ்தர்கள், பனியாக்கள், பிரமணர்கள் ஆகியோருக்கு மட்டுமே ஆன கட்சி என்கிற அவப்பெயரை துடைக்க முயன்றார். இரண்டாம் கட்டத் தலைவர்கள் பலரை உருவாக்கினார். காந்தி மூன்றாவது இலக்கில் பெருமளவில் வெற்றியை பெற முடியவில்லை.

விடுதலைக்குப் பிந்தைய காங்கிரஸ் அறுபதுகள் வரை நம்பிக்கையை, பொருளாதார வளர்ச்சியைக் கொண்டு தேசத்தை இணைக்க முயன்றது. வெறுப்பினால் ஒரு புதிய தேசத்தை அது எழுப்ப முனையவில்லை. மதச்சார்பின்மை, சகல குடிமக்களுக்கும் சம உரிமைகள் ஆகியவற்றை அது முழக்கமாகக் கொண்டிருந்தது. ஊடகம், நீதித்துறை, தேர்தல் ஆணையம் ஆகியவை சுயமாக, வலிமை மிக்கவையாக மாறுவதை நேருவின் காலம் உறுதி செய்தது.

Image result for CONGRESS NEHRU INDIRA RAJIV

நேருவுக்குப் பிந்தைய இந்திராவின் காலத்தில் நாகலாந்து, மிசோரம் பகுதிகளில் கிளர்ச்சிகள் எழுந்தன. தமிழகம் இந்தி திணிப்பில் குமைந்து கொண்டிருந்தது. நக்சலைட் இயக்கம் உருப்பெற்று இருந்தது. பொருளாதாரம் பெருமளவு அடிவாங்கி இருந்தது. இரண்டு போர்களின் காயங்களில் இருந்து இந்தியா மீண்டிருக்கவில்லை. அறுபத்தி ஏழு தேர்தல்களில் கேரளா, தமிழகம், வங்கம், ஒரிசாவில் ஆட்சி பறிப் போயிருந்தது. பீகார், உத்திர பிரதேசம், மத்திய பிரதேசம் மாநிலங்களில் கட்சி தாவி காங்கிரஸ் ஆட்சிக்கு உலை வைக்கப்பட்டது. இந்திராவை ஊமை பொம்மையாகக் கருதி பதவிக்குக் கொண்டு வந்த சிண்டிகேட் வேறு தலைக்கு மேலே கத்தி போல இருந்தது. இப்படிப்பட்ட சூழலில் இந்திரா அதிகாரத்தை மையப்படுத்திக் கொண்டார். கட்சியைப் பிளந்து தனக்குத் தலைவணங்கி, துதிபாடுபவர்களை வளர்த்தார்கள். காஷ்மீரி பண்டிட்கள் நான்கு பேரை கொண்டு தன்னுடைய ஆட்சி அதிகாரத்தின் மிக முக்கியமான முடிவுகளை எடுத்தார். எல்லாவற்றுக்கும் மேலே அவசரநிலையின் மூலம் ஜனநாயகத்தைக் கல்லறைக்கு அனுப்பினார். அவரின் படுகொலைக்குப் பிறகு காங்கிரஸ் மீண்டு எழுவது போலத் தோன்றினாலும் அடுத்து வந்த தேர்தலில் நாற்பது சதவிகித அளவு வாக்குகளைப் பெற்றது. சமீபத்திய தேர்தலில் அது 20% க்கும் கீழே போய்விட்டது.

காங்கிரஸ் மீண்டு எழுவதற்குப் வாய்ப்பே இல்லை என்கிறார் ராமச்சந்திர குஹா. அது படிப்படியாக மரணத்தைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது என்கிற அவர் நேரு குடும்பத்தை விட்டு அது விலக வேண்டும் என்று எப்பொழுதும் சொல்வதை மீண்டும் சொல்கிறார். எனினும், காங்கிரஸ் கட்சி எப்படி அதனுடைய அஸ்தமனத்துக்குப் பின்னர் நினைவுகூரப்பட வேண்டும்? இந்திய விடுதலை காலத்தில் காங்கிரஸ் பல்வேறு மத, மொழிக்குழுக்களை உள்ளடக்கி, பல கட்சிகள் பங்குகொள்ளும் தேர்தல் ஜனநாயகத்தை, மதசார்பின்மையைச் சாதித்தது. வயது வந்த எல்லாருக்கும் வாக்குரிமை தந்தது. ஜாதி, பாலின பாகுபாடுகளைப் போக்க ஆரம்பக் காலத்தில் பெருமளவில் முயன்றது. இதை மதச்சிறுபான்மையினருக்கு சம உரிமைகள், இடம் தராமல் இரண்டாம் தர குடிமக்களாக நடத்த வேண்டும் என்ற இந்துத்வவாதிகள், சர்வாதிகார போக்குக் கொண்ட ஆட்சியை நிறுவ பார்த்த இடதுசாரிகள், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உரிமைகள் தரக்கூடாது என்று இயங்கிய பிராமணியர்கள், பெண்களுக்கு உரிமைகளை மறுத்த இந்து, இஸ்லாமிய, கிறிஸ்துவ அடிப்படைவாதிகளுக்கு நடுவே இவற்றை முன்னெடுத்தார்கள். இந்தத் தேசம் முன்னைவிட ஒன்றுபட்டதாக, வன்முறை குறைந்ததாக அவர்கள் காலத்தில் மாறியது. சமூகத்தின் ஆணாதிக்கப் போக்கு குறைவதிலும், சகிப்பின்மை அறுபதுகள் வரை இருந்த காங்கிரசால் மட்டுப்படுவது நிகழ்ந்தது. சமூகத்தின் சமத்துவமின்மை, கட்டுப்பாடுகள் குறைந்தது. இவற்றைக் காங்கிரஸ் தன்னுடைய குறைகளோடு சாதித்தது. இவ்வாறே நினைவுக்கூரப்பட வேண்டும் என்கிறார்.

கருத்துரிமைக்கு எதிரான எட்டு ஆபத்துகள்:

காந்தியின் ‘இந்து சுயராஜ்யம்’ நூல் வெளிவந்த பொழுதே அதை ஆங்கிலேய அரசு இந்தியாவில் தடை செய்தது. அப்பொழுது காந்தி, ‘ஒருவர் சிந்திக்கவும், தன்னுடைய கருத்துக்களை வெளிப்படுத்தவும் முழு உரிமை உண்டு. அவர் வன்முறையைப் பயன்படுத்தாதவரை அவரின் கருத்தை வெளிப்படுத்த உரிமை உண்டு.’ என்று எழுதினார். வன்முறையைத் தூண்டிவிடவும் கூடாது என்று சேர்த்துக் கொள்ளலாம் என்கிறார் குஹா.

Image result for eight threats to freedom of expression

இந்தியாவில் கருத்துரிமைக்குப் பெரும் சவாலாக ஆங்கிலேயர் கால IPC சட்டங்களான 153, 153A, 295, 295A , 499, 500, 505 ஆகியவை திகழ்கின்றன, எல்லாவற்றுக்கும் மேலாகக் காந்தி ஆங்கிலேயர் சட்டம் என்கிற பெயரில் செய்யும் வன்புணர்வு என்று வர்ணித்த 124A கருத்துரிமையைப் பெருமளவில் கட்டுப்படுத்துகிறது என்று சுட்டிக்காட்டுகிறார். விடுதலைக்குப் பின்னால் இடது, வலது இரண்டும் இந்திய அரசுக்கு எதிராக வன்முறை வழியைக் கைக்கொண்ட பொழுது இந்துத்துவ இதழான Organiser, இடதுசாரி இதழான Crossroads ஆகியவை தடை செய்யப்பட்டன. பிரிவினை, அகதிகள் சிக்கல், காஷ்மீர் பிரச்சனை ஆகியவற்றில் வன்முறையைத் தூண்டும் பேச்சுகளுக்கு அரசு பயந்து முதலாவது சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தது. இதற்கு நேரு, அம்பேத்கர் மீது கருத்துரிமையைக் கட்டுப்படுத்துகிற கடுமையான செயலை செய்தார்கள் என்கிறார் குஹா. ஒரு வரலாற்று ஆசிரியராக அவர் சறுக்கும் இடம் அது. முதலாவது சட்டத்திருத்தத்தில் மதவாதத்தை எதிர்கொள்ளப் பேச்சுரிமையைக் கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்தாலும், அதில் கருத்துரிமைக்கு வலு சேர்க்கும் செயல்பாட்டையும் இருவரும் செய்தார்கள். மேலும், முதலாவது சட்டதிருத்தத்துக்கு முன்னே பேச்சுரிமைக்குக் கட்டுப்பாடுகள் இருந்தது. எப்படி என்று விரிவாகத் தெரிந்து கொள்ள இந்தக் கட்டுரையை வாசியுங்கள்: https://indconlawphil.wordpress.com/…/on-reasonable-restri…/

இந்தியாவில் நீதித்துறை மிகவும் மெத்தனமாக இயங்குவதும், நீண்டு கொண்டே போகும் வழக்குகளும் கருத்துரிமைக்குச் சவாலாக அமைகின்றன என்கிறார் குஹா. அடையாள அரசியலும் கருத்துரிமைக்கு ஆபத்தாக இருக்கிறது; Satanic Verses எனும் சல்மான் ரூஷ்டியின் நூலை வாசிக்காமல், ஈரானுக்கு முன்னால் முந்திக்கொண்டு ராஜீவ் காந்தி அரசு தடை செய்தது. சிவாஜியின் பிறப்பு பற்றிய பல்வேறு கதைகளைத் தொகுத்த லென் அவர்களின் நூல் வராமல் இந்துத்வவாதிகள் பார்த்துக் கொண்டார்கள். மேற்கு வங்க இடதுசாரி அரசு தஸ்லீமா நஸ்ரினின் நாவலை தடை செய்தது. கருத்துரிமையை நீதிமன்றங்கள் காக்க முயன்றாலும் காவல் துறை கைகட்டி நிற்பதும் நிகழ்கிறது. சட்டம், ஒழுங்கு முக்கியம் என்று சொல்லியபடி கருத்துரிமையைக் காவு கொடுப்பது நிகழ்கிறது. ஹுசைன்-தோஷி இருவரும் இணைந்து ஓவிய கண்காட்சி நிகழ்த்திய பொழுது அது முழுவதும் தாக்கப்படுவதைக் காவல்துறை வேடிக்கை பார்த்தது. சிவாஜி குறித்த லேனின் புத்தகத்திற்கு உயர்நீதிமன்றம் அனுமதி கொடுத்ததும் காவல் துறை பதிப்பகத்துக்குப் பாதுகாப்பு தர மறுத்துவிட்டது.

அரசியல்வாதிகள் எப்படிக் கருத்துரிமைக்கு எதிராக இருக்கிறார்கள் என்று முன்னரே சுட்டிக்காட்டப்பட்டது. குஜராத்தில் சாயஜிராவ் பல்கலையை இந்துத்வர்கள் தாக்கிய பொழுது அப்பொழுதைய மோடி அரசு வேடிக்கை பார்க்கவே செய்தது. இந்தியாவின் மிகச்சிறந்த கலை சார்ந்த படைப்பகம் அழிக்கப்பட்டது. தமிழகத்தில் பெருமாள் முருகனின் கருத்துரிமைக்கு அதிமுக, திமுக இரண்டுமே ஆதரவுக்கரம் நீட்டவில்லை என்று குஹா சுட்டிக்காட்டுகிறார். அரசாங்க விளம்பரங்களை நம்பிக்கொண்டு இருக்கும் ஊடகங்கள் மறந்தும் எதிர்க்குரல் எழுப்புவது இல்லை. ஊடகத்தினர் எதோ ஒரு கருத்தால் காயப்பட்டதாகச் சொல்லிக்கொண்டு தாக்க கிளம்பும் குண்டர்கள் குழு தங்களுக்குத் தகவலை தெரிவித்ததும் அதைக் காவல்துறைக்குத் தெரியப்படுத்தாமல் பிரேக்கிங் நியூஸ், exclusive என்று கல்லா கட்டுவதைக் கவனப்படுத்துகிறார். தாராளமயம் காலத்திற்கு முன்பு பல்வேறு இதழ்களில் தனியாகச் சுற்றுசூழலுக்கு என்று நிருபர்கள் இருந்தார்கள். அவர்களின் பொருளாதாரப் பாய்ச்சலின் பொழுது வீட்டுக்கு அனுப்பப்பட்டார்கள். விளம்பரம் தரும் நிறுவனங்கள் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பொழுது கண்டும், காணாமல் ஊடகங்கள் இருக்கின்றன. கார்ப்பரேட் நிறுவனங்களால் பல்வேறு ஊடக நிறுவனங்கள் நடத்தப்படுகின்றன. அதுவும் வெகுசில நிறுவனங்கள் பெரும்பான்மை ஊடகத்தைக் கட்டுப்படுத்துவது நிகழ்கிறது. மேலும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிராக இதழ்கள் எழுதினால் டாட்டா நிறுவனம் செய்தது போல விளம்பரத்தை நிறுத்துவது நிகழ்கிறது. அரசியல் சார்புநிலைகள் எடுத்துக்கொண்டு படைப்பாளிகள் கருத்துரிமை சார்ந்தும் சார்புநிலைகள் குரல் கொடுப்பதும் கருத்துரிமைக்கு ஆபத்தாக அமைகிறது என்று சுட்டுகிறார் குஹா.

எங்கே போனது ஆழமான அரசியல் உரையாடல்?:
இந்தியாவின் அரசியலில் மிக முக்கியமான பங்களிப்பை வழங்கிக் கொண்டு இருந்த ஜெயபிரகாஷ் நாராயணன் விடுதலைக்குப் பிந்தைய காலத்தில் தேர்தல் அரசியலை விடுத்துச் சேவைகளில் ஈடுபட்டு வந்தார். எனினும் இரண்டாவது பொதுத் தேர்தல் காலத்தில் நேருவுக்கு எழுதிய கடிதத்தில், ‘ஒரு கட்சித்தலைவராகச் செயல்படுவதை விட தேசிய தலைவராகச் செயல்பட வேண்டும். எதிர்க்கட்சிகளை வளர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும். இங்கிலாந்தில் இடதுசாரியான தனக்கு லேபர் கட்சியை நெருக்கமானது என்றாலும், அக்கட்சி ஆட்சிக்கு வந்தால் கன்சர்வேடிவ் கட்சி வலிமை பெறவே விரும்புவேன். ஒரு கட்சி சகல அதிகாரத்தையும் பெறுவதை விட, விரும்பத்தகாத எதிர்கட்சிகள் கொஞ்சம் கூடுதல் வலிமை பெறுவது தவறில்லை. நாடாளுமன்ற முறை தோற்றுவிட்டது. வேறு வகையான அரசியல் முறைகள் குறித்து யோசிக்க வேண்டும்’ என்றெல்லாம் குறிப்பிட்டார்.

நேரு போர்க்காலங்களில் இப்படிப்பட்ட பொதுவான அரசுகள் சாத்தியம் என்றாலும், வெவ்வேறு இலக்குகள்,தொலைநோக்குகள் கொண்டவர்கள் இணைந்து செயல்படுவது சமூக, அரசியல், பொருளாதாரத் தளங்களில், அயலுறவில் உகந்ததாக இருக்காது என்றார். தேர்தலில் நிற்பது, கருத்துக்களைப் பரப்புவதன் மூலம் மக்களின் மனதை மாற்றுவது முதலிய முறைகளை மற்ற கட்சிகள் செய்ய எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை. நாடாளுமன்றத்தில் 150 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இருக்கையில் இன்னமும் வலிமைப்படுத்துவதை எப்படித் தான் செய்ய முடியும் என்று புரியவில்லை நேரு எழுதினார். அப்படி எதிர்க்கட்சிகளைப் பாதுகாத்து, பராமரித்து வளர்க்க முனைந்தால் அது ஏமாற்று வேலையாகவே இருக்கும். நாடாளுமன்ற முறை பல்வேறு தோல்விகளால் ஆனது. எனினும் இருப்பதில் அதுவே சிறந்த முறை என்று நேரு பதில் தந்ததோடு மாற்று முறையைப் பரிந்துரைக்கும்படி ஜெபியிடம் கேட்டார். அவர் ‘ Plea for the Reconstruction of the Indian Polity’ என்கிற கட்டுரையில் இன்றைய பஞ்சாயத்து ஆட்சிமுறைக்கான விதையை ஊன்றினார்.

Image result for NEHRU AND JAYAPRAKASH NARAYAN

இப்படிப்பட்ட தேர்ந்த உரையாடல்கள் இந்திய அரசியலில் பல்வேறு தளங்களில் அப்பொழுது நிகழ்ந்தது. ராஜ ராம் மோகன் ராய், கிறிஸ்துவ மிஷனரிகள் இந்து மதம் தன்னைப் புதுப்பித்துக் கொள்ளுமா என உரையாடினார்கள். மேற்கை பற்றிய பார்வை எப்படி இருக்க வேண்டும் என்று தாகூர், காந்தி உரையாடினார்கள். ஜாதியை எப்படி அற, அரசியல் தளங்களில் எதிர்கொள்வது என்று காந்தி, அம்பேத்கர் உரையாடினார்கள். இந்துக்கள், முஸ்லீம்கள் ஒரு தேசமாக இணைந்து இருக்க முடியுமா என்று காந்தி, ஜின்னா பேசினார்கள். பொருளாதாரத்தைக் கட்டமைப்பதில் முதலாளிகளின் பங்கு என்ன என்று நேரு, ராஜாஜியும், அடிமைப்படுத்தியவர்களின் மொழியான ஆங்கிலத்துக்கு இந்தியாவில் என்ன இடம் என்று ராஜாஜி, லோகியாவும் உரையாடினார்கள். இப்படிப்பட்ட உரையாடல்கள் இல்லாமல் இன்றைய அரசியல் இருக்கிறது.

சீனா, பாகிஸ்தானை புரிந்து கொள்வது:
சீனாவில் மாண்டரின் மொழியும் ஹன் இனமும் ஆதிக்கம் செலுத்துகின்றன. அங்கே திபெத்திய மொழியோ, யூகுர் மொழியோ கவனத்தில் கொள்ளப்படுவதில்லை. அரசில் இணைந்து பணியாற்ற சீன மொழியைக் கற்பது கட்டாயம். காலனியம், ஜப்பானிய தாக்குதல், கம்யூனிச புரட்சி ஆகியவற்றால் நாட்டைப் பிணைக்க மொழியைச் சீனா பயன்படுத்துகிறது. தாய்மொழியில் கற்பிக்க வேண்டும் என்று குரல் கொடுத்தால் போலீஸ் வந்து நிற்கும். சீனாவில் பெண்கள் இந்தியாவை விட மேம்பட்ட நிலையில் நடத்தப்படுகிறார்கள். இந்தியாவில் வேலை செய்யும் பெண்களின் சதவிகிதம் 30%, சீனாவில் 70%. இந்தியாவில் 25 வயது நிறைந்த பெண்களில் பள்ளிக்கல்வியை முழுமையாக முடித்தவர்கள் 27% சீனாவில் 54%. நாடாளுமன்றத்தில் இந்தியாவில் பெண்களின் பங்கு 12% அங்கே 21%. இங்கே பிரசவத்தின் பொழுது மரணிக்கும் தாய்மார்களின் எண்ணிக்கை 37/1 லட்சம், 174/1 லட்சம். இந்தியா சீனாவுக்குப் போட்டி என்று பலவற்றில் தன்னைக் கருதிக் கொள்கிறது. பெண்கள் விஷயத்தில் அதைக்கருத்தில் கொள்ளலாம்.

பழங்குடியினர் குறித்த குஹாவின் கட்டுரை பெருமளவில் இந்த உரையில் அடங்கி இருக்கிறது: https://saravananagathan.wordpress.com/…/%E0%AE%AA%E0%AE%B…/

பாகிஸ்தான் தன்னுடைய அரசியல் தலைவர்களில் ஊக்கம் தேட முடியாமல், அக்பர், பாபர் என்று பெருமை கொள்கிறது. அதற்கு மாறாக இந்தியாவில் எண்ணற்ற அரசியல் தலைவர்கள் உத்வேகம் தருவதற்குக் கடந்த காலங்களில் இருக்கிறார்கள். லாகூர் நகரத்தில் இந்து, சீக்கிய, இஸ்லாமிய, பார்சி கலாசாரங்கள் இணைந்து இருந்தாலும் லாகூர் குறித்த நூல்களில் இஸ்லாமிய முகத்துக்கு மட்டுமே கவனம் தரப்படுகிறது. இப்படிப்பட்ட ஒற்றைப்படையான வரலாற்று எழுதியல் இந்தியாவிலும் நிகழலாம் என்கிறார் குஹா. பாகிஸ்தான் என்கிற தேசம் குறித்த முழக்கத்தை முதன்முதலில் மின்டோ பார்க்கில் ஜின்னா வைத்தார். அங்கே ஒரு கோபுரத்தை கட்ட மக்கள் நிதி தராமல் போகவே திரைப்பட நுழைவுச்சீட்டு, குதிரைப்பந்தய நுழைவுச்சீட்டு ஆகியவற்றின் மீது வரி போட்டு அதைப் பாகிஸ்தானிய அரசு கட்டியது.

வன்முறையை எப்படிப் போராட்டக்குழுக்கள் கைக்கொள்வைது?:

. தேர்தல், பல கட்சி ஆட்சிமுறை, வலுவான நீதித்துறை, வாழ, பணி செய்ய, சொத்து சேர்க்க குடிமக்களுக்கு உரிமை ஆகியவை எந்தளவுக்கு ஒரு ஜனநாயகத்தில் கிடைக்கின்றன என்பதைப் பொறுத்தே அது எவ்வளவு வலிமையான அரசு என்று அறிய முடியும். இவற்றோடு பல்வேறு மதங்கள் இணைந்து இருப்பது, தங்களுடைய மொழியில் சிந்திப்பது, எழுதுவது, பேசுவது, விரும்பியதை உண்பது, உடுத்துவது, விரும்பியவரை மணத்தல் ஆகிய அனைத்தும் ஒரு நாட்டில் சகலருக்கும் கிடைக்கிறதா என்று பல்வேறு கேள்விகள் உண்டு. காஷ்மீரில் தேர்தல்கள் பெரும்பாலும் நேர்மையாக நடத்தப்பட்டதில்லை. ஒடுக்குமுறைகள் மிகுந்தே இருந்திருக்கிறது. இலங்கையில் தமிழர்கள் அதிகாரத்தை விட்டு திட்டமிட்டு விலக்கப்பட்டதோடு, தமிழ் மொழி இரண்டாம்பட்சமான இடத்தைப் பெற்றது. திட்டமிட்ட படுகொலைகள் வன்முறை பாதைக்குத் திருப்பியது. காஷ்மீரிலும் ஒட்டுமொத்த நம்பிக்கையும் போய் ஆயுத போராட்டங்கள் எழுந்தன. இலங்கையில் 2009-ல் போர் முடிந்து பல்வேறு இழப்புகளுக்குப் பிறகு நாடு அமைதிக்குத் திரும்பியிருக்கிறது.

எனினும், அங்கே பூரண உரிமைகளோ, நிம்மதியான வாழ்க்கையோ இன்னமும் சாத்தியமாக இல்லை. காஷ்மீர் எரிந்து கொண்டு இருக்கிறது. இதில் வன்முறையின் பங்கு என்ன? வன்முறை எதிர்க்கிற அரசு, அதிகாரிகள், மக்கள், தன் குழுவில் வேறு மதம், மொழியைச் சார்ந்தவர்கள், அரசியல் ரீதியாகத் தன்னோடு முரண்படும் தன்னுடைய குழுவினர் ஆகியோர் மீது நிகழ்த்தப்படுகிறது. முதல் இரண்டுக்கு ஓரளவுக்கு நியாயம் கற்பித்தாலும், இறுதி மூன்று ஏற்புடையது இல்லை. அப்பாவி மக்களைக் கொல்வது ஏற்புடையது அல்ல. விடுதலைப்புலிகள் அதை இலங்கையில் செய்தார்கள். காஷ்மீர் போராளிகள் மும்பை, டெல்லி ஆகிய இடங்களில் குடிமக்களைக் கொன்றார்கள். விடுதலைப்புலிகள் இஸ்லாமியர்களைத் தமிழர்களாக இருந்தும் கொன்றார்கள். காஷ்மீர் போராளிகள் காஷ்மீரி பண்டிட்கள் இரண்டு லட்சம் பேரை வெளியேற்றினார்கள். எந்த ஜனநாயகம், பன்மைத்தன்மைக்குப் போராடுகிறார்களோ அதைத் தங்களின் சகாக்களுக்கு மறுப்பதோடு அவர்களைக் கொல்லவும் செய்திருக்கிறார்கள். வன்முறையை எப்படித்தான் கையாள்வது? ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் வெகுமக்கள் மீது எப்பொழுதும் ஆயுதம் ஏந்தி போரிட்டது இல்லை.

இந்தியாவில் அமைதியாகத் தனிநாடு கேட்ட திராவிட இயக்கம் பின்னர்த் திமுகவால் தேர்தல் அரசியலில் கலந்து மத்திய அரசிலும் பங்கு பெற்றது. மாநில அளவில் ஆட்சி செய்யவும் செய்தது. மிசோரம் மாநிலத்தில் மிசோ தேசிய முன்னணி ஆயுத கிளர்ச்சியை விடுத்து முழுமையான மன்னிப்பு பெற்றுத் தேர்தலில் நின்றது. வெற்றி பெற்று ஆட்சியில் இருந்ததோடு எதிர்க்கட்சியாகவும் அமர்ந்தது. அரசுகள் ஜனநாயக அமைப்புகளை வலிமைபப்டுத்த வேண்டும், நேர்மையான தேர்தல்களை நடத்த வேண்டும். சிறுபான்மையினரின் மொழி, கலாசாரம் ஆகியவற்றை மதிக்க வேண்டும், சட்டங்கள், கொள்கைகளில் சிறுபான்மையினர் கருத்தை கணக்கில் கொள்ள வேண்டும். மாநில சுயாட்சியை வழங்குவதோடு வேலை, சுகாதாரம், பள்ளிகள் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும். ராணுவங்கள் செய்த மனித உரிமை மீறல்கள் குறித்துத் தனிப்பட்ட நேர்மையான விசாரணைகள் நிகழ்த்தி தண்டனை தரவேண்டும் என்கிறா குஹா.

Democrats and Dissenters
Ramachandra Guha
Allen Lane Publishers
பக்கங்கள்: 310
விலை: 699

சாய்நாத் – இந்தியாவின் குரலற்றவர்களின் குரல்!


என்னுடைய இதழியல் கனவுகளின் நாயகனாக இருந்த பாலகும்மி  சாய்நாத் இன்றோடு பத்திரிக்கை துறையில் நுழைந்து முப்பத்தி ஆறு ஆண்டுகள் ஆகின்றன. இரண்டு வகையான பத்திரிக்கையாளர்கள் இங்கே இருக்கிறார்கள்: ஒரு வகை உண்மையை உரக்கச் சொல்பவர்கள், இன்னொரு வகை ஸ்டெனோகிராபர்கள் என்பார் சாய்நாத்.

 

Image result for sainath PALAGUMMI
“நீரோ தன்னுடைய ரோம் நகரம் பற்றி எரிந்த பின்பு பலரை விருந்துக்கு அழைத்தான். பலரும் அந்தக் கொண்டாட்டங்களில் குற்ற உணர்ச்சியில்லாமல் கலந்து கொண்டார்கள். அங்கே இருளைப் போக்க எரிபொருள் போதாமல் அடிமைகளை எரிய விட்டு கொண்டாடினார்கள். என்னுடைய சீற்றம் நீரோவின் மீதல்ல, அந்த விருந்தினர்கள் மீது தான். இந்தியாவில் யார் நீரோவின் விருந்தினர்கள் என்று தெரிகிறதா?” என்று அந்தக் குரல் ஒலிக்கையில் மனசாட்சி உலுக்கப்படும்.

இந்தியாவில் மிக வேகமாக வளர்வது எந்தத் துறை தெரியுமா? சமத்துவமின்மை என அவர் அதிர வைக்கையில் சமூகத்தின் அவலம் முகத்தில் அறையும். “ஒரு சில கிலோமீட்டர் தூரத்தில் ஒரிசாவில் முப்பது மொழிகளைக் கடந்தேன். எப்படிப்பட்ட நாடு இந்தியா?” என அவர் கேட்கையில் மால்கள், ஆரணங்குகள், கேளிக்கைகள் , கொண்டாட்டம் என்பதைத் தாண்டியும் இதழியல் உண்டு என்பது புலப்படும்.

 

Image result for sainath PALAGUMMI

வருடத்தில் முக்கால்வாசி நாட்களைக் கிராமங்களில் மக்களோடு மக்களாக, முகவரி, அலைபேசி தொலைத்து அலையும் அவரின் கால்கள் லட்சக்கணக்கான மைல்களைக் கடந்து கொண்டே இருக்கின்றன. மானுடம் ததும்பும் அந்த எழுத்தில் தொனிக்கும் கோபம் மிகையானது என்று தோன்றினால் மன்னிக்க. அடித்தட்டு மக்களின் அவலங்களைக் கண்டுகொள்ளத் தவறிய சமூகத்தின் மனசாட்சியைத் தட்டி எழுப்ப முயலும் ஒரு சில முயற்சிகளில் அது ஒன்று.

அவரின் ‘Everybody loves a Good Drought’ இந்தியாவின் கிராமங்களின் உண்மையான ஆவணம். அதில் முழுக்க, முழுக்க உண்மையின் நிழல் மட்டுமே நம்மைத் தொடரும். நம்பிக்கைகளையும் இணைத்தே தரும் அந்தப் புத்தகத்தில் கிராமங்களை மாடமாளிகைகளில் உட்கார்ந்து கொண்டு புரிந்து கொள்ள முயல்வது எத்தனை தவறானது என்று எளிமையாகப் புலப்படும்.

 

பசுவின் பாலை விற்காத பழங்குடியினருக்கு அதிகப் பால் தரும் பசு வகையைத் தருவது. பீடி, பனைத் தொழிலாளர்களின் அவல நிலை, மறக்கப்பட்ட விடுதலை போராளிகளின் வாழ்க்கை, ஒடுக்கப்பட்ட மக்களின் குரல்களைக் கடந்துவிடும் கிராம அடக்குமுறை, ஒரு மிதிவண்டி பெண்களுக்குத் தரும் மகத்தான விடுதலை, ஏன் பஞ்சத்தை அதிகார மையங்கள் விரும்புகின்றன எனப் பலவற்றை அடுக்கிச் செல்லும் நூல் அது. எப்படிக் கிராமங்களிலிருந்து ரிப்போர்டிங் செய்ய வேண்டும் என்பதற்கான பாலபாடம் அந்தப் புத்தகம்.

கல்லூரிக்காலத்தில் ஜே.என்.யூவில் போராட்டங்களில் கழித்த அவர் தன்னுடைய முனைவர் பட்ட ஆய்வை இதழியல் பணிக்காக விட்டு விட்டு வந்தார். அவருக்கும் ஒரு காதல் அத்தியாயம் உண்டு என்றாலும் இருவருமே களப்பணியில், மக்களுக்காக இயங்குவதில் இன்றளவும் பெருமிதம் கொள்பவர்கள் என்பதே நெகிழ்வானது.
அவர் போகிற இடங்களில் இளைஞர் குழாம் கூடி கேட்டு அற ரீதியான கோபத்தைத் தனக்குள் வார்த்துக் கொள்கிறது. கடுமையான குரலில் மட்டுமே அவர் பேசுவார் என்று எதிர்பார்த்தால் சட்டென்று நகைச்சுவை இயல்பாக எட்டிப்பார்த்து நிலைமையின் தீவிரத்தை இன்னமும் துரிதமாகக் கடத்தும். தரவுகள் மூலமும், பெரு ஊடகங்கள் சமைக்கும் விவசாயத்தைப் பற்றிய பளபளப்பான தோற்றத்தை நேரடி களப்பணியின் மூலம் அம்பலப்படுத்துவதிலும் தன்னுடைய வாழ்வை கழிக்கும் சாய்நாத் அவர்களின் இப்பொழுதைய முன்னெடுப்பு PARI.

இந்தியாவை 95 பகுதிகளாகப் பிரித்து ஒவ்வொரு ஊரகப்பகுதியின் குரலையும் கேட்க வைக்கும், ஆவணப்படுத்தும் மகத்தான முயற்சி இது. முழுக்க முழுக்க மக்களின் பங்களிப்பில் பெரு முதலாளிகள், அரசு ஆகியோரின் உதவியை நாடாமல் நடக்கும் இந்தத் தளத்திற்கு யார் வேண்டுமானாலும் தங்களின் பங்களிப்பை தர முடியும். அது முகங்களைப் படம்பிடிப்பதாக இருக்கலாம், உங்களின் கிராமத்தை ஆவணப்படுத்துவதாக இருக்கலாம், பொருள் ரீதியான உதவியாக இருக்கலாம்.

முன்னாள் ஜனாதிபதியின் பேரன் அவர் என்பதோ, முன்னணி தேசிய இதழின் ஊரக ஆசிரியராக இருந்தார் என்பதோ, மகசேசே விருது பெற்றவர் என்பதோ அவருக்குப் பெருமை தந்திருக்குமா என்றால் தெரியாது. கிராமங்களின் ஆன்மாவை, அம்மக்களின் குரலை ரத்தமும், சதையுமாகக் கொண்டு வருகிற பொழுது அவருக்கு உண்டாகும் கிளர்ச்சி தான் அவரைச் செலுத்துகிறது என உறுதியாகச் சொல்ல முடியும். அவர் நெடுங்காலம் தொடர்ந்து இயங்க வேண்டும்.. எழுத்துலக அறம் என்பதைத் தன்னுடைய வாழ்வின் மூலம் கற்பித்துக் கொண்டே இருக்கும் சாய்நாத் அவர்களுக்கு வாழ்த்துகள்.

(என்னுடைய தனிப்பட்ட தொடர்பு, அவர் எனக்கு எழுதிய கடிதங்கள், எப்பொழுதும் காட்டும் நெருக்கம் ஆகியவை கட்டுரையின் மையத்தைக் குலைக்கக்கூடும் என அஞ்சி அவற்றைத் தவிர்த்து இருக்கிறேன். )

மாவோயிஸ்ட்கள் ஆதிவாசிகளின் பாதுகாவலர்கள் இல்லை!


மக்கள் சிவில் உரிமைகள் கூட்டமைப்பின் முப்பத்தி ஆறாவது ஜெயபிரகாஷ் நாராயணன் நினைவு சொற்பொழிவில் வரலாற்று ஆசிரியர் ராமச்சந்திர குஹா ‘சுதந்திர இந்தியாவில் ஆதிவாசிகளின் அவலகரமான நிலைமை’ எனும் தலைப்பில் உரையாற்றினார். அதன் எழுத்து வடிவம் இது:
 மக்கள் சிவில் உரிமைகள் கூட்டமைப்பு நடத்தும் இந்த ஜெயபிரகாஷ் நாராயணன் பேசுவதில் எனக்குப் பெருமகிழ்ச்சி. இந்த அமைப்பின் நெடிய பயணத்தில் நான் முப்பத்தி ஐந்து ஆண்டுகளாக இணைந்து பயணிக்கிறேன். சுப்பாராவ் அவர்கள் ‘நாம் குற்றவாளிகள்’ என்கிற தலைப்பில் வெளியிட்ட துண்டறிக்கை எண்பத்தி நான்கின் சீக்கிய படுகொலைகளின் பின்னால் இருந்த அநீதியை உலகுக்குப் புலப்படுத்தியது. பாகல்பூரில் இஸ்லாமிய நெசவாளர்கள் எத்தகு கொடிய வன்முறைக்குச் சக இந்துக்களால் ஆட்படுத்தப்பட்டார்கள் என்பதை நேரில் காணும் வாய்ப்பு இந்த அமைப்பாலேயே எனக்குக் கிடைத்தது. சுற்றுச்சூழல் குறித்துக் கவனம் பெரிதாக ஏற்படுவதற்கு முன்பே சுரங்கப் பணிகளால் காடுகள் எப்படிப் பாதிக்கப்படுகின்றன, காடுகள் அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால் நேரிடும் சிக்கல்கள் என்பன குறித்து விரிவான அறிக்கைகள் வெகுகாலத்துக்கு முன்னரே அவர்களால் தயாரிக்கப்பட்டுள்ளன.
Displaying IMG_0455.JPGDisplaying IMG_0455.JPG
ஜெயபிரகாஷ் நாராயணனை ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தின் மகத்தான போராளியாகப் பலருக்குத் தெரியும். அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்ட காலத்தில் அவர் நடத்திய தீரமிகுந்த இரண்டாவது விடுதலைக்கான போரும் மறக்க முடியாத ஒன்று. அவர் அதே சமயம் காஷ்மீரிகள், நாகாக்கள் ஆகியோரோடு இந்திய அரசு பேசுவதற்கான, உரையாடல் நிகழ்த்தி சமரசம் செய்து கொள்வதற்கான சூழலை உருவாக்கித் தந்தவர். அவர் காஷ்மீர் சிக்கலில் சொன்னதை நேரு, சாஸ்திரி, இந்திரா என்று யாரேனும் கேட்டிருக்கலாம். படேல் ‘மோசமான தலைவலி’ என அழைத்த காஷ்மீர் சிக்கல் பெரும் இன்னலைத் தரும் தீராத மைக்ரேன் தலைவலியாக மாறியிருக்காது. மேலும், ஜெ.பி கிராம சுயாட்சியைக் கொண்டு வரவேண்டும் என்று விடுதலைப் பெற்ற காலத்திலேயே நேருவுக்குக் கடிதம் எழுதி வலியுறுத்தினார். வெறுமனே, பிரிட்டனின் நாடாளுமன்ற, வெஸ்ட்மினிஸ்டர் பாணியிலான ஜனநாயகமே முழு ஜனநாயகம் என்பது குறைபாடுள்ள பார்வை எனச் சரியாக அவர் சுட்டிக்காட்டினார்.
ஆதிவாசிகளின் நிலைமை சுதந்திர இந்தியாவில் மிகுந்த கவலைக்கிடமான ஒன்றாக இருக்கின்றது. இந்த வரலாறு விடுதலைக்கு ஒரு வருடத்துக்கு முன்னரே துவங்கி விடுகிறது. 13/12/46 அன்று நேரு வழிநடத்திய இடைக்கால அரசு அரசமைப்பு சட்டக்குழுவின் முன்னால் ‘குறிக்கோள் தீர்மானங்கள்’ விவாதத்துக்கு வந்தன. இன்றைக்கு அடிப்படை உரிமைகள், வழிகாட்டு நடைமுறைகள் எனக் கொண்டாப்படும் யாவும் அதில் அடங்கியிருந்தன. நேரு அவற்றை அறிமுகம் செய்து பேசுகிற பொழுது,
‘சமூக, பொருளாதார, அரசியல் நீதி உறுதி செய்யப்படும். வாழ்க்கை நிலை, வாய்ப்புகள் ஆகியவற்றில் சமமான வாய்ப்புகள் வழங்கப்படும். அனைவரும் சட்டத்தின் முன்னர்ச் சமமாக நடத்தப்படுவர். கருத்துரிமை, வழிபாட்டு உரிமை, கல்வி உரிமை, ஒரு இடத்தில் கூடும் உரிமை, விரும்பும் செயலை செய்யும் உரிமை ஆகியவை சட்டம், பொது நீதிக்கு உட்பட்டு வழங்கப்படும். அதே சமயம், சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்ட, பழங்குடிய பகுதிகளைச் சேர்ந்த மக்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆகியோரின் பாதுகாப்பு விடுதலை இந்தியாவில் உறுதி செய்யப்படும்.’ என்று வாக்களித்தார்.
இந்தத் தீர்மானங்கள் குறித்துப் பழமைவாதியான புருஷோத்தமதாஸ் தாண்டன், இந்துத்வவாதியான ஜனசங்கத்தின் ஷ்யாமபிரசாத் முகர்ஜி, பட்டியல் ஜாதியினரின் தலைவரான அம்பேத்கர், எம்.ஆர்.ஜெயகர், பொதுவுடைமைவாதியான மினு மசானி, பெண்கள் இயக்கத் தலைவரான ஹன்சா மேத்தா, இடதுசாரியான சோம்நாத் லஹிரி என்று பலரும் இந்தத் தீர்மானங்களை விவாதித்தார்கள். ஒருவர் இந்தத் தீர்மானம் குறித்துப் பேச எழுந்தார்.
அவர் இந்திய ஹாக்கி அணியில் கலக்கியவரும், கிறிஸ்துவராக இருந்து பின்னர் அம்மதத்தை விட்டு வெளியேறியவரும் ஆன பழங்குடியினத் தலைவர் ஜெய்பால் சிங். அவர் பின்வருமாறு பேசினார்:
ஒரு காட்டுவாசியாக, ஆதிவாசியாக நான் இந்தத் தீர்மானத்தின் நுணுக்கங்களை நான் உணர்ந்திருப்பேன் என்று நீங்கள் எதிர்பார்த்திருப்பீர்கள். என் பகுத்தறிவு, என்னுடைய மக்களுடைய பகுத்தறிவு நாம் விடுதலைச் சாலையில் இணைந்து பயணித்துப் போரிடவேண்டும் என்று சொல்கிறது. நெடுங்காலமாக ஒரு குழு மோசமாக இந்தியாவில் நடத்தப்பெற்றது என்றால் அது நாங்கள் தான். அவமானம் தரும் வகையில் நடத்தப்பட்டும், நிராகரிக்கப்பட்டும் நாங்கள் 6,000 வருடங்கள் அடக்குமுறையில் வாழ்ந்து வருகிறோம். சிந்து சமவெளி நாகரிகத்தின் குழந்தையான நான் எங்களுக்குப் பின்னர்ச் சிந்து சமவெளிக்கு வந்து எங்களைக் காட்டுப் பகுதியை நோக்கி நீங்கள் துரத்தினீர்கள் எனச் சொல்லமுடியும்.
என் மக்களின் வரலாறு முழுக்கத் தொடர் சுரண்டல், தங்களின் இருப்பிடத்தை விட்டு ஆதிவாசிகள் அல்லாத இந்திய குடிகளால் வெளியேற்றப்படுவது ஆகியவற்றால் ஆக்கப்பட்டுள்ளது. இந்த வரலாறு நெடுக போராட்டங்கள், குழப்பங்கள் நிரம்பிக் கிடக்கின்றன. என்றாலும், பண்டித நேருவின் வார்த்தையை நான் நம்புகிறேன். நீங்கள் எல்லாரும் விடுதலை இந்தியாவின் சமமான வாய்ப்புகளை வழங்கி யாரையும் புறக்கணிக்காமல் செயல்படும் புதிய அத்தியாயத்தைப் படைக்கப்போவதாகச் சொல்லுவதை முழுமையாக நம்புகிறேன்.
இந்த உரை நிகழ்த்தப்பட்டு எழுபது வருடங்கள் ஆகிவிட்டது. ஆதிவாசிகளின் நிலைமை இந்தியாவில் எப்படியிருக்கிறது?அவர்கள் இன்னமும் சுரண்டப்படுகிறார்கள், புறக்கணிக்கப்படுகிறார்கள், தங்களின் நிலங்களை விட்டு வெளியேற்றப்படுகிறார்கள். பத்து கோடி பழங்குடியின மக்களில் 85% பேர் மத்திய இந்தியாவிலும் 15% பேர் வடகிழக்கிலும் வாழ்கிறார்கள். இவற்றில் 1.2 ஆதிவாசி என்கிற சொல் நிலத்தின் ஆதிக்குடிகள் எனப் பொருள்படும். குஜராத்தில் துவங்கி ஒரிசா வரை மத்திய இந்தியாவில் பழங்குடியினர் பெரும்பாலும் மலைப்பகுதிகளில் வசிக்கிறார்கள். இவர்களை ஆதிவாசிகள் என்று இந்த உரையாடலில் அழுத்தமாக அழைப்பேன்/ சமவெளியில் வசிக்கும் மக்களுடன் அவர்களுக்கு இணக்கமான உறவு இருந்தது. தேன், மருத்துவப் பச்சிலைகள் தந்துவிட்டு உப்பு முதலிய பிற பொருள்களைப் பெற்றுக்கொள்ளும் வகையில் அவர்களின் உறவு இருந்தது.
 ஆங்கிலேயர் காலத்தில் ஆதிவாசிகள் மீதான சுரண்டல் வேகமெடுத்தது.
தொடர்வண்டிகள் ஏற்படுத்தி ஆங்கிலேயர்கள் ஆதிவாசிகளின் நிம்மதியான வாழ்க்கையைக் குலைத்தார்கள். அவர்கள் உருவாக்கிய சாலைகள், தொடர்வண்டிகள் அதுவரை நுழைய முடியாமல் இருந்த ஆதிவாசிகள் பகுதிக்குள் வியாபாரிகள், ஒப்பந்தக்காரர்கள் நுழைந்தார்கள். அவர்களின் நிலங்கள் பிடுங்கப்பட்டன. அம்மக்கள் சுரண்டப்பட்டார்கள். இதற்கு எதிரான தீவிரமான எழுச்சிகள், ஆயுதப்போராட்டங்கள் எழுந்தன. பத்தொன்பதாம் நூற்றாண்டில் சந்தால் புரட்சியில் (1830-1850) துவங்கி பிரஸா முண்டா (1890) தலைமையிலான கலகம், ஆந்திராவில் ஆலடி சீதாராமா ராஜூ (1920) இருபதாம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு விடுதலை கிடைக்கும் வரை போராட்டங்கள் வெவ்வேறு வகையில் எழுந்தன.
விடுதலை கிடைத்த பொழுது ஆதிவாசிகளுக்கு ஒரு ‘புதிய அத்தியாயம்’ காத்திருப்பதாகச் சொல்லப்பட்டது. மக்களியல் ஆய்வாளர் அரூப் மகாராத்தா பல்வேறு தரவுகளை ஒப்பிட்டு அதிர்ச்சி தருகிறார். ஆதிவாசிகள், தலித்துகள் இருவரும் ஒப்பிடப்படுகிறார்கள். கல்வியறிவில் முறையே 23, 30 % என்கிற அளவிலும், பள்ளியை விட்டு விலகும் குழந்தைகளின் எண்ணிக்கையில் 62, 48 சதவிகிதத்திலும் 50, 40 என்கிற சதவிகிதத்தில் அவர்களின் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்களின் நிலையும் உள்ளது. இவை ஆதிவாசிகள் மிக மோசமான நிலையில் இருப்பதையும் அவர்கள் நிலை அவர்களைப் போலவே கடும் அடக்குமுறை, சுரண்டல் ஆகியவற்றுக்கு ஆளாகும் தலித்துகளை விட மோசமாக இருப்பதை வெளிப்படுத்துகிறது.
ஆதிவாசிகள் மிக மோசமான சூழலில் வாழ்கிறார்கள். அடிப்படை சமூக வசதிகளான நல்ல குடிநீர், மின்சாரம், மருத்துவ வசதி, சுத்தமான கழிப்பறைகள் கூட அவர்களுக்குப் பெரும்பாலும் கிடைப்பதில்லை. சமூகவியல் கூறுகள் நமக்குச் சொல்வது ஒன்றுதான். புதிய அத்தியாயம் எதுவும் இம்மக்களுக்கு எழுதப்படவில்லை. தலித்துகளுக்கு அடிப்படை வசதிகள் மிகவும் மோசமான அளவுக்கே கிடைக்கிறது. அதைவிட அவலமான சூழலில் ஆதிவாசிகளின் நிலைமை உள்ளது. அதே சமயத்தில் அரசின் கொள்கைகள் ஆதிவாசிகளை அடிக்கடி புலம்பெயர வைக்கிறது.
 ஆதிவாசிகள் வாழும் காடுகள் செம்மையானவை, அங்கே நெடிய நதிகள் விரிந்து ஓடுகின்றன, எண்ணற்ற தனிமங்கள் இந்தப் பகுதிகளில்
மண்ணுக்குள் புதைந்து கிடக்கின்றன. இவை மூன்றையும் சேர்த்து ‘ஆதிவாசிகளின் முப்பெரும் சாபம்’ என்று சொல்வேன். விடுதலைக்குப் பிறகு தொழில்மயமாக்கல், வளர்ச்சி ஆகியவை வேகமெடுத்தது. அப்பொழுது தொழிற்சாலைகள், அரசு சுரங்குகள், அரசு நீர்மின் திட்டங்கள் ஆகியவை இப்பகுதிகளைக் கூறுபோட்டு எழுந்தன. சமவெளி மக்களின் நல்வாழ்வுக்கு இம்மக்கள் பலிகொடுக்கப்பட்டார்கள். எத்தனை லட்சம் மக்கள் இடப்பெயர்வுக்கு உள்ளாகி இருப்பார்கள் என்பது குறித்துப் பல்வேறு கணிப்புகள் உள்ளன. அதே சமயம், 1.2 கோடி வரை மிதமான அளவீடுகளும் அதிகபட்சமாக 1.5 கோடி வரையும் இந்த எண்ணிக்கை கணக்கிடப்படுகிறது. எப்படியிருந்தாலும், மிக அதிக எண்ணிக்கையிலான ஆதிவாசிகள் தங்களின் இருப்பிடங்களை விட்டு அரசின் கொள்கைகளால் துரத்தப்படுகிறார்கள் என்பது மட்டும் உறுதி.
631b5950-0d94-411b-ab01-b363a816044a
இந்திய மக்கள் தொகையில் எட்டு சதவிகித எண்ணிக்கையில் உள்ள ஆதிவாசிகள் நாற்பது சதவிகித அளவுக்கு இடப்பெயர்வுக்கு உள்ளாகும் ஆபத்தில் இருப்பதாகச் சமூகவியல் அறிஞர் வால்டர் பெர்னாண்டஸ் கண்டறிந்து உள்ளார். அதாவது இடப்பெயர்வுக்கு உள்ளாவதற்கு ஆதிவாசிகள் அல்லாத மக்களைவிட ஐந்து மடங்கு அதிகம். இப்படிச் செய்யப்படும் இடப்பெயர்வில் ஒழுங்கான இழப்பீடோ, வசதிகளோ தரப்படுவதில்லை. இம்மக்கள் தங்களின் வாழ்க்கையை, வாழ்வாதாரத்தை, கிராமத்தை, நிலத்தை, மொழியை, நாட்டுப்புற பாடல்களை, இசையை முப்பெரும் சாபத்தால் இழந்து வெளியேற நேரிடுகிறது.
ஆங்கிலேயர்கள் காலத்தில் தொடர்வண்டிப்பாதைகள், சாலைகள் அமைப்பதற்கு ஆதிவாசிகளின் வனங்களுக்குள் அரசு நுழைய முயற்சித்த பொழுது கடும் எதிர்ப்புகள் எழுந்தன. இத்தனைக்கும் விடுதலைக்குப் பிந்தைய இந்திய அரசைப் போலப் பெரிய அணைகளையோ, கனிம வள சுரண்டலையோ ஆங்கிலேய அரசு ஆதிவாசிகளின் வாழ்விடங்களில் மேற்கொள்ளவில்லை. காடுகளின் வளங்களையே அது அள்ளிக்கொண்டு போனது.
விடுதலைக்குப் பிந்தைய முதல் பதினைந்து வருடங்களில் வளர்ச்சி திட்டங்கள்
பழங்குடியின மக்களின் வாழ்விடங்களின் வழியாக மேற்கொள்ளப்பட்ட பொழுது அம்மக்கள் போராட்டங்களை நடத்தவில்லை. புதிதாக எழுந்திருக்கும் அரசு தங்களின் வாழ்க்கையை முன்னேற்றி வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துப் போகும் என்று நம்பினார்கள். விடுதலைப் போராட்டத்தில் பங்குபெற்று சிறைக்குச் சென்று நாட்டுக்காகத் தியாகம் செய்த தலைவர்கள் நாட்டை ஆள்வது அவர்களுக்கு நம்பிக்கை தந்தது. பிறருக்கு மக்களுக்குத் தங்கள் நிலங்களைக் கொடுத்தால் தங்களின் வாழ்க்கையும் முன்னேறும் என்று உளமார அவர்கள் நம்பினார்கள். கல்வி, முன்னேற்றம், அடிப்படை வசதிகள் தங்களுக்குக் கிடைக்கும் என அவர்கள் எதிர்பார்த்தார்கள். வேலைவாய்ப்புகள், கல்லூரிகளில் இடம் ஆகியவற்றைக் கூட அவர்கள் எதிர்பார்க்கவில்லை. ஓரளவுக்குத் தன்மானம் மிகுந்த வாழ்வை அவர்கள் எதிர்நோக்கினார்கள். அந்த நம்பிக்கை பொய்க்க ஆரம்பித்த பொழுது தான் கிளர்ச்சிகள் ஏற்பட்டன.
1966-ல் பிரவீர் சந்திர பன்ஜ் தியோ தலைமையில் விடுதலை இந்தியாவின் ஆதிவாசி கிளர்ச்சி முதல்முறையாக நிகழ்த்தப்பட்டது. அரசின் வனக்கொள்கைகளுக்கு எதிராக ஆதிவாசிகளை அந்த முன்னாள் பழங்குடியின மகாராஜா அணிதிரட்டினார். போலீஸ் இரும்புக்கரம் கொண்டு அவர்களை அடக்கியது/ பிரவீர் சந்திர பன்ஜ் தியோ தன்னுடைய ஊரான ஜந்தர்பூரில் சுட்டுக்கொல்லப்பட்டார். எழுபதுகளில் நிலவுரிமை சார்ந்து பூமி சேனா, முன்னாள் பாதிரியார்கள் ஆதிவாசிகளின் நில, வன உரிமைகளைக் காக்க நடத்திய கஷ்டகாரி சங்கத்தனா இயக்கங்கள் இயங்கின. ஜார்கண்ட் இயக்கம் பழங்குடியின தலைவரான ஜெய்பால் சிங்கின் கருத்தாக்கமான தனிப் பழங்குடியின மாநிலம் என்பதை அமைக்கும் நோக்கத்தோடு எழுந்தது. மத்திய இந்தியாவின் பீகார், ஒரிசா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் இருக்கும் இருபது மாவட்டங்களை ஒன்றாக இணைத்து ஒரு மாநிலத்தை அமைக்க அவர் விரும்பினார். 56-ல் மாநில மறுசீரமைப்புக் குழுவிடம் அந்த வைத்த பொழுது அது ஏற்கப்படவில்லை. ஜெய்பால் சிங்கின் மாநிலமான பீகாரில் இருந்த பழங்குடியின மாவட்டங்கள் கனிமங்கள், வன வளங்களைக் கொடுத்தார்கள். ஆதிவாசிகள் அல்லாத பிராமணர்கள் அவர்களை ஆண்டார்கள். அவர்களின் சுரண்டலை எதிர்த்து இம்மக்கள் போராடினார்கள். அந்தப் போராட்டம் நிகழ்ந்தது. அது வன்முறையைப் பயன்படுத்தியது.
எண்பதுகளில் பெரும்பாலும் ஆதிவாசிகளை உள்ளடக்கிய நர்மதா பச்சோ அந்தோலன் இயக்கம் மேதா பட்கரால் துவங்கி மேற்கொள்ளப்படுகிறது. நர்மதா அணையின் மீது கட்டப்படும் சர்தார் சரோவர் அணைக்கு எதிராக இந்த இயக்கம் இயங்குகிறது. இந்த அணைக்கு எதிரான இயக்கம் வித்தியாசமானது. நதியின் மீது கட்டப்படும் அணையின் பயன்கள் பெரும்பாலும் குஜராத்துக்குச் செல்கிறது. ஆனால், பாதிக்கப்படும் மக்கள் மத்திய பிரதேச மாநிலத்தைப் பெரும்பாலும் சேர்ந்தவர்கள். அதிலும் அறுபது சதவிகிதத்துக்கு மேற்பட்டவர்கள் பழங்குடியினர். இந்தப் போராட்டம் இன்றுவரை தொடர்கிறது/.
இந்த அநீதிகள், இடப்பெயர்வுக்கு எதிரான போராட்டங்களை எல்லாம் விடப் பெருமளவில் நிகழும் இன்னொரு கிளர்ச்சி மாவோயிஸ்ட்கள், நக்சலைட்கள் ஆகியோரால் முன்னெடுக்கப்படுகிறது. 67-ல் மேற்குவங்கத்தின் நக்சல்பாரியில் பழங்குடியினரையும் உள்ளடக்கி எழுந்த இந்த இயக்கம் வன்முறையைத் தன்னுடைய முறையாகக் கையாண்டது. அந்த அமைப்பு தன்னுடைய போராளிகளாக ஆதிவாசிகளை மாற்றிக்கொண்டது. முதலில் மாவோயிச இயக்கங்கள் மேற்கு வங்கத்தில் கானு சன்யால், சாரு மஜூம்தார் ஆகியோரால் துவங்கப்பட்டது. ஆந்திராவில் நாகி ரெட்டியின் தலைமையில் ஸ்ரீகாகுளம், அதிலாபாத் மாவட்டங்களில் இந்தக் கிளர்ச்சி எழுந்தது. ஆரம்பத்தில் இருந்தே மாவோயிஸ்ட இயக்கம் பழங்குடியினரின் பகுதிகளில் இயங்கியது. அது அவ்வப்பொழுது எழுச்சி பெற்று மீண்டும் அடக்கப்படும். 6o களிலிருந்து தற்போது வரை பல்வேறு மத்திய இந்திய மாவட்டங்களில் இந்த இயக்கம் பழங்குடியினரை அங்கமாகக் கொண்டு இயங்குகிறது. மகாராஷ்டிராவின் கச்சிரோலி, சத்தீஸ்கரின் பஸ்தார், ஒரிசாவின் கலஹாண்டி, கோராபுட், ஜார்க்கண்டின் பெரும்பான்மை மாவட்டங்களில் இந்த இயக்கம் இயங்கி வருகிறது.
அறுபதுகளில் இருந்து சுரண்டல், இடப்பெயர்வு ஆகியவற்றுக்கு உள்ளானதற்கு எதிராகக் கிளரச்சிகளில் பல்வேறு பகுதிகளில் ஆதிவாசிகள் இயங்கி வருகிறார்கள். இவை மூன்று வகையில் நடைபெறுகின்றன. ஆதிவாசிகளின் பாரம்பரிய தலைவர்கள் பிரவீர் சந்திர பன்ஜ் தியோவைப் போன்றோர் வழிநடத்துவது நடக்கிறது. சமூகச் சேவை இயக்கங்களான கச்டகாரி சங்கத்தன், நர்மதா பச்சோ அந்தோலன் முதலிய இயக்கங்கள் அமைதிவழியில் இன்னொருபுறம் செயல்படுகின்றன. ஆயுதம் ஏந்தி மாவோயிஸ்ட்கள், நக்சலைட்கள் போராடுகிறார்கள்.
இம்மக்களைப் போலவே கொடுமையான அடக்குமுறை, சுரண்டல் ஆகியவற்றுக்கு உள்ளாக்கப்படும் ஆதிவாசிகளின் போராட்டங்கள் ஆச்சரியம் தரும் வகையில் அமைதி வழியில் நடக்கிறது. அவர்களின் நலன்களைப் பேசும் அரசியல் தலைவர்களான கன்ஷி ராம், ராம் விலாஸ் பஸ்வான் மாயாவதி முதலியோர் எழுந்தார்கள். மாயவாதி மூன்று முறை உபியின் முதல்வராக இருந்துள்ளார். அடுத்துவர இருக்கும் தேர்தலிலும் அவர் முதல்வர் ஆவார் என்கிறார்கள். பல்வேறு கூட்டணி அரசுகள், மாநில அரசுகளைத் தலைமையேற்று நடத்துவதும் தலித் தலைவர்களால் செய்யப்பட்டது.
மாயாவதி 2006-ல் நடந்த உத்திர பிரதேச சட்டசபை தேர்தலில் தனிப்பெரும் பெரும்பான்மை பெற்றார். அம்மக்கள் சட்டரீதியான வழிமுறைகளையே தங்களின் எழுச்சிக்கு பயன்படுத்துகிறார்கள். ஆதிவாசிகளைவிட ஏன் தலித்துகள் ஏன் சட்டரீதியான வழிமுறைகளைச் சிறப்பாகப் பயன்படுத்துகிறார்கள்? ஆதிவாசிகள் மாவோயிஸ்ட்கள், சமூகச் சேவை இயக்கங்களைக் கொண்டு தங்களின் எழுச்சியை மேற்கொள்ள முயல்கிறார்கள். தலித்துகள் சமயங்களில் மாவோயிஸ்ட்களுடன் இணைந்தாலும் பெரும்பாலும் அமைதி வழியில் போராடுகிறார்கள். ஏன் இந்த முரண்பாடு. பல்வேறு காரணங்கள் இருந்தாலும் நான் இரண்டு காரணங்களை முன்வைக்கிறேன். ஒன்று வரலாற்று ரீதியானது, இன்னொன்று புவியியல் சார்ந்தது.
அப்பட்டமாக, நேராகச் சொல்வது என்றால் இதற்குக் காரணம் அண்ணல் அம்பேத்கர். ஆதிவாசி அம்பேத்கர் ஒருவர் அவர்களுக்குக் கிட்டவில்லை. ஆதிவாசிகளுக்கு ஒரு தேசிய தலைவர் இன்னமும் கிடைக்கவில்லை. அவரின் காலத்தில் மகாராஷ்டிராவில் மட்டுமே தலைவராகப் பார்க்கப்பட்ட அம்பேத்கர் இந்தியாவின் தலைவராக நேசிக்கப்பட்டு, போற்றப்பட்டுக் கொண்டாடப்படுகிறார், மறுகண்டுபிடிப்புக்கு அவர் உள்ளாகி இருக்கிறார். பிற தலைவர்கள் மாநிலத்தலைவர்களாகவோ, கட்சியின் முகமாகவோ மாற்றப்பட்டுவிட்ட சூழலில் அவர் இந்தியா முழுக்க இருக்கும் தலித்துகளின் நம்பிக்கை ஒளியாக உள்ளார். சுரண்டலுக்கு, ஒடுக்குமுறைக்கு எதிரான அவரின் வெற்றிகரமான போராட்டம் அவரை முன்மாதிரியாக ஆக்கியுள்ளது. அரசமைப்புச் சட்டத்தைப் பெருமளவில் உருவாக்கிய அம்பேத்கர் கல்வி, மக்களை ஒன்று சேர்த்தல், அமைதி வழியில் கிளர்ச்சி செய்வது ஆகியவற்றின் மூலம் தன்னுடைய மக்களுக்காகப் போராடினார். அம்பேத்கர் எப்பொழுதும் அரசமைப்புச் சட்டத்தின் வழியில் இயங்கினார். சத்தியாகிரகத்தில் கூட அவர் ஈடுபட்டார். கல்வி, அமைப்புகளைக் கொண்டு இயங்க அவர் காட்டிய வழியில் தலித்துகள் இயங்குகிறார்கள். அப்படியொரு வழிகாட்டும் தலைவர் ஆதிவாசிகளுக்கு இல்லை.
மேலும், ஆதிவாசிகள் பல்வேறு மொழிகள், நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள் கொண்டவர்களாக உள்ளார்கள். அவர்களின் மீதான வன்முறைகள், சுரண்டல்கள் பல்வேறு வடிவங்களை எடுக்கின்றன. அவர்கள் அனைவரும் தங்களின் சிக்கல்கள் ஒன்றே என்று இந்திய அளவில் அணிதிரளவில்லை. அதே சமயம் ஆதிக்க ஜாதி இந்துக்களின் கொடுமைகளுக்கு ஆளாகும் தலித்துகள் இந்திய அளவில் திரண்டு போராடுவது நிகழ்கிறது.
புவியியல் ரீதியாக ஆதிவாசிகள் பீடபூமியின் பகுதிகளில் பெரும்பாலும் வசிக்கிறார்கள். ஆந்திராவில், மகாராஷ்டிராவில் 9%, தமிழகத்தில் 1% என்று இருக்கும் அவர்கள் இந்தியாவின் பழங்குடியின மாநிலம் என அறியப்படும் சத்தீஸ்கரில் கூட 30% என்கிற அளவில் தான் இருக்கிறார்கள். தலித்துகளோ இந்தியா முழுக்கப் பரவியிருக்கும் சிறுபான்மையினராக உள்ளார்கள். அவர்கள் 350 – 400 மக்களவைத் தொகுதிகள் வரை வாக்குவங்கி கொண்டவர்களாக உள்ளார்கள். தமிழகத்தில், கர்நாடகாவில், ஆந்திராவில் என்று பல்வேறு மாநிலங்களில் ஒவ்வொரு தொகுதியிலும் பத்துச் சதவிகிதம் அளவுக்கு ஓட்டுக் கொண்டிருக்கிறார்கள். பஞ்சாபில் இது இருபது சதவிகிதத்தைக் கடந்து அவர்களின் எண்ணிக்கை இருக்கிறது. ஆதிவாசிகளோ அதிகபட்சம் எழுபது தொகுதிகளில் மட்டுமே காணப்படுகிறார்கள். இவ்வாறு ஒப்பிடுவதால் தலித்துகள் கொடுமைக்கு ஆளாவதில்லை என்று நான் சொல்வதாக எண்ணிக்கொள்ளாதீர்கள். தலித்துகள் கடும் அநீதிகள், சுரண்டல்கள், அடக்குமுறைகள், மனித உரிமை மீறல்கள் ஆகியவற்றுக்கு அனுதினமும் ஆளாக்கப்படுகிறார்கள். அதே சமயம், அவர்கள் தங்களின் போராட்டத்தைத் தேர்தல் அரசியல், சட்ட ரீதியிலான வழிமுறைகளின் மூலம் மேற்கொள்கிறார்கள்.
நியாயமான, கவலையளிக்கும், நேர்மையான தங்களின் பிரச்சனைகளுக்கு அமைதி வழியில் போராடுவது., கருத்தை முன்னிறுத்துவது ஆகியவற்றைச் செய்கிறார்கள். ஆதிவாசிகள் மாவோயிஸ்ட்களுடன் இணைந்து கொண்டு வன்முறையில் ஈடுபட்டு தங்களின் உரிமைகளைப் பெற்றுவிட முடியும் என்று எண்ணுகிறார்கள்.
முஸ்லீம்கள் கடுமையான ஒடுக்குமுறைக்கு உள்ளானாலும் அவர்கள் பெரும்பாலும் ஆயுதம் ஏந்துவது கிடையாது. அவர்கள் மாநில, நாடாளுமன்ற தேர்தல்களில் முக்கியமான தேர்தல் சக்தியாக உள்ளார்கள். எனினும், ஆதிவாசிகள் இவர்கள் இருதரப்பினரையும் விடக் கடுமையான ஒடுக்குமுறை, அநீதிகளுக்கு ஆளாகிறார்கள். அதேசமயம், அவர்கள் இந்தியாவில் மிகக்குறைந்த கவனமே பெறுகிறார்கள். அவர்கள் குறித்துப் பேச வேண்டிய அரசு, அதிகாரிகள், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள். பல்கலை பேராசிரியர்கள், பத்திரிக்கையாளர்கள் பெருமளவில் அவர்களை இந்தியாவின் சமமான குடிமக்களாக ஆக்க செயல்படுவதில்லை. இஸ்லாமியர்கள், தலித்துகள் குறித்தும் பெரிதாகக் கவனம் தரப்படுவதில்லை என்பது கவலை தருவது. தலித்துகள், முஸ்லீம்கள் மத்திய அமைச்சரவையில் பாஜக அரசைத் தவிர்த்து இடம்பெறுவது நிகழ்கிறது. முக்கியமான அமைச்சரவைகள், ஜனாதிபதி பதவி முதலிய அரசமைப்புப் பதவிகள் அவர்களுக்குக் கிட்டியிருக்கிறது. அதேசமயம் எந்த ஆதிவாசியும் இப்படிப்பட்ட இடங்களைக் கூட அடையவில்லை. தலித், முஸ்லீம் சிக்கல்கள் தேசிய பிரச்சனையாகக் காணப்படுகிற பொழுது, ஆதிவாசிகள் சிக்கல் உள்ளூர் பிரச்சனையாகவே முடிக்கப்பட்டு விடுகிறது.
அரசு, ஆதிவாசிகள் அல்லாத பிற குடிமகன்கள் ஆதிவாசிகளின் நலனில், போராட்டங்களில் கவனம் செலுத்தாமல் போனதால் ஏற்பட்ட மிகப்பெரிய இடைவெளியை தங்களுடையதாக மாவோயிஸ்ட்கள் மாற்றிக்கொண்டார்கள். ஆதிவாசிகளின் பகுதியில் மாவோயிசம் செழிப்பதற்கு வரலாறு, புவியியல் ஆகியவற்றோடு வேறொரு முக்கியக் காரணமும் உள்ளது. சுதந்திர இந்தியாவின் வளர்ச்சியில், தேச கட்டமைப்பில், ஜனநாயக அமைப்பில் ஆதிவாசிகள் மிகக்குறைவாகப் பெற்று, மிகப்பெரிய அளவில் இழந்திருக்கிறார்கள். ஆகவே, அந்தக் கடும் அதிருப்தியை மாவோயிஸ்ட்கள் தங்களுடையதாக மாற்றிக்கொள்வதில் வெற்றிக் கண்டிருக்கிறார்கள். ஆதிவாசிகளின் நலன்களைக் குறித்துக் குரல் கொடுப்பதை மாவோயிஸ்ட்கள் செய்வதாகக் காட்டிக்கொள்கிறார்கள்.
மாவோயிஸ்ட்கள் புவியியல் ரீதியாக வெற்றிகரமாக இயங்குவதற்கு ஆதிவாசிகள் வசிக்கும் மலைகள், வனங்கள் உதவுகின்றன. அவர்களின் கொரில்லா போர்முறைகளுக்கு அதுவே உகந்த நிலம். திடீரென்று தோன்றி தாக்கிவிட்டு மறைந்துவிட முடியும். காவல்துறையைச் சுட்டுக் கொல்வதோ, எதிர்பாராத தருணத்தில் அரசியல் தலைவர்களை அழிப்பதோ இந்த நிலப்பரப்பில் சுலபமான ஒன்றாக இருக்கிறது. மேலும் காவல்துறை ஒரு மாநில எல்லையைக் கடந்து நகர முடியாது என்பதால் சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, ஆந்திரா என்று மாநிலம் விட்டு மாநிலம் தாவி தப்பிக்கும் போக்கும் ஆதிவாசிகளிடம் உள்ளது.
மிகக்குறைவாகப் பெற்று, அதீதமாக இழந்த பழங்குடியினர் மாவோயிஸ்ட்கள் கட்டுப்பாட்டில் உள்ளார்கள். அரசு எப்படி இவர்களை எதிர்கொள்வது. அரசமைப்புச் சட்டத்தைப் பின்பற்றுபவனான நான் மாவோயிஸ்ட்களின் வன்முறையை ஏற்க மறுக்கிறேன். ஒரு கட்சி ஆட்சி ரஷ்யா, சீனாவில் எப்படிப்பட்ட படுகொலைகள், ரத்த வெள்ளம், கொடுமை, அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்தன என்பதை உலக வரலாற்றின் மாணவனாக அறிவேன். அதனால் நான் மாவோயிஸ்ட்களை நிராகரிக்கிறேன். எப்படி ஒரு ஜனநாயக அரசு மாவோயிசத்தை எதிர்கொள்வது.
இருவழிகள் உள்ளன. காவல்துறையைக் கொண்டு இவர்களைக் கட்டுப்படுத்துவது ஒரு புறம் நிகழவேண்டும். மாவோயிஸ்ட்களைத் தனிமைப்படுத்தி, ஓரங்கட்டி, சரணடைய சொல்லவேண்டும், அவர்கள் அப்பொழுதும் வன்முறையைப் பின்பற்றுவார்கள் என்றால் அவர்களைச் சுட்டு வீழ்த்த வேண்டும். இன்னொரு புறம் வளர்ச்சியின் கனிகள் பழங்குடியின மக்களைச் சென்றடைய வேண்டும். நல்ல பள்ளிகள், மருத்துவ மையங்கள், சுகாதாரம், பொருளாதார வளர்ச்சி ஏற்பட வேண்டும். PESA எனப்படும் கிராம சுயாட்சியை இப்பகுதிகளுக்குப் பரவலாக்க வேண்டும். ஐந்தாவது பட்டியலில் கனிம வளங்களின் மூலம் கிடைக்கும் லாபத்தில் பாதியை பகிர்ந்து கொள்ள இடமிருப்பதாக ஏ.எஸ்.சர்மா எனும் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சொன்னதைப் பின்பற்ற வேண்டும்.
இவை இரண்டிலும் மத்திய அரசு தவறியிருக்கிறது. காவல்துறை செயல்பாட்டை அது அவுட் சோர்ஸிங் செய்கிறது. உங்கள் ஊரைச் சேர்ந்த மிக மோசமான உள்துறை அமைச்சர் என நான் உறுதியாகக் கருதும் ப.சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருந்த காலத்தில், சல்வா ஜூடும் எனும் அநீதி சத்தீஸ்கரில் அரங்கேற்றப்பட்டது. மாநில ஆளும் பாஜக, மத்திய காங்கிரஸ் ஆகியவை கூட்டு சேர்ந்து இதனை அரங்கேற்றின. பதினான்கு முதல் இருபத்தி ஒரு வயது பழங்குடியின இளைஞர்கள் கையில் ஆயுதங்கள் கொடுக்கப்பட்டு மாவோயிஸ்ட்கள், பழங்குடியினர் எதிர்கொள்ளப்பட்டார்கள். இடதுசாரிகள் மத்திய அரசை வெளியில் இருந்து ஆதரித்து வந்தார்கள். அவர்கள் பெரும்பாலும் வங்க, இந்து, பத்ரோலக் கட்சி போலவே நடந்து கொள்வதால் இதற்கு எதிராகப் பெரிதாக எதுவும் முயலவில்லை. இது அரசமைப்பு சட்டத்துக்கு முற்றிலும் எதிரானது. உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் தான் ஓய்வு பெறும் நாளன்று நீதிபதி ராவ் தலைமையிலான பெஞ்ச் அது சட்டத்துக்குப் புறம்பானது எனத் தீர்ப்பளித்துச் சல்வா ஜூடுமை கலைக்கும்படி சொன்னது. சத்தீஸ்கர் அரசு மத்திய அரசின் ஆசியோடு வேறு பெயர்களில் அடக்குமுறை சாம்ராஜ்யத்தைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. சட்டம், ஒழுங்கு காவல்துறையின் கையில் இல்லாமல் அது இப்படித் தவறாக அவுட் சோர்சிங் செய்யப்படுவது கவலைக்குரியது.
ஆதிவாசிகள் நம்முடைய பொருளாதார அமைப்பில் பெரும் கொடுமைக்கும், ஒடுக்குமுறைக்கும், துரத்தியடிக்கப்படுவதற்கும் உள்ளாகிறார்கள். அரசின் கட்டுப்பாட்டில் பொருளாதாரம் இருந்த பொழுது கடும் அடக்குமுறைகளுக்கு உள்ளானார்கள் என்றால், தாரளமயமாக்கல் காலத்தில் வளர்ச்சி என்கிற பெயரில் அவர்கள் அடித்து விரட்டப்படுகிறார்கள். பல்வேறு பகுதிகளில் மாவோயிஸ்ட்கள் பரவியிருக்கிறார்கள் என்றாலும், ஓடிஸா எடுத்துக்காட்டுத் தாராளமயக்காமல் என்ன செய்திருக்கிறது என்பதைத் தெளிவாக விளக்கும். பதினைந்து வருடங்களுக்கு முன்வரை அங்கே மாவோயிஸ்ட்கள் தாக்கம் இல்லை. ஆனால், ஒரிசா அரசு சுரங்க நிறுவனங்களோடு பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களைக் கையெழுத்திட்டது. பாக்சைட் முதலிய பல்வேறு தனிமங்கள் வெட்டியெடுக்கப்பட ஆதிவாசிகள் தங்களின் வாழ்விடங்களை விட்டு அதிகாரத்தைக் கொண்டு விரட்டியடிக்கப்பட்டார்கள். இப்பொழுது ஆறு மாவட்டங்கள் மாவோயிஸ்ட்கள் கட்டுப்பாட்டில் ஓடிசாவில் உள்ளன.
மாவோயிஸ்ட்களை எதிர்கொள்ள அரசு பாதுகாப்பை உறுதி செய்து, வளர்ச்சியில் ஆதிவாசிகளுக்குப் பங்கைத் தரவேண்டும். இதற்கு மாறாகக் கண்காணிக்கும், அச்சுறுத்தல் தரும் அடக்குமுறை அரசாக ஒருபுறமும், இன்னொரு புறம் உலகமயமாக்கல் காலத்தில் வளர்ச்சியின் கனிகளைச் சற்றும் ஆதிவாசிகளுக்கு வழங்கும் முயற்சிகளை மேற்கொள்ளாத புறக்கணிப்பை அரசு செய்கிறது. அரசும், குடிமக்களும் நிரப்பத் தவறிய இடத்தை மாவோயிஸ்ட்கள் பிடித்துக் கொண்டார்கள்.
அதேசமயம், ஏழைகளை விடுவிப்பவர்கள் என்றோ, பழங்குடியினரின் பாதுகாவலர்கள் என்று மாவோயிஸ்ட்கள் என எண்ணிக்கொள்ள வேண்டாம்.
ஆதிவாசிகள் தண்டகாரண்யம் பகுதியை விடுதலை பெற்ற பகுதியாக்க கனவு காண்கிறார்கள். சுக்மா, பஸ்தார் முதலிய மாவட்டங்களில் பரவியுள்ள அவர்கள் மத்தியில் உள்ள அரசை நீக்கிவிட்டுத் தாங்கள் ஆள பகல் கனவு காண்கிறார்கள். அவர்களின் போராட்டம் காடுகளில் வெற்றிகரமாக இயங்கலாம். சமவெளிக்கு வந்தால் அவர்கள் ராணுவத்தால் நசுக்கப்படுவார்கள். அதேபோலப் பழங்குடியினரிடம் கிடைக்கும் ஆதரவு விவசாயிகள், மத்தியவர்க்க மக்கள் ஆகியோரிடம் அவர்களுக்குக் கிடைக்காது. அவர்களின் சாகசம் மிகுந்த கனவு ஓரளவுக்குக் கிளர்ச்சியையும் பெருமளவில் அச்சத்தையும் ஒருங்கே எனக்குத் தருகிறது. எங்கெல்லாம் மாவோயிஸ்ட்கள் வருகிறார்களோ அங்கெல்லாம் கடும் வன்முறை நிகழ்கிறது. அரசும், அவர்களுக்கும் இடையே அப்பாவி ஆதிவாசி மக்கள் சிக்கி சீரழிகிறார்கள்.
அரசைப் போலவே சிறுவர்களை அவர்கள் தங்களின் படையில் சேர்க்கிறார்கள். மக்கள் கல்வி கற்க விரும்பாததால் பள்ளிகளைக் குண்டு வைத்து தகர்க்கிறார்கள். ஜெயபிரகாஷ் நாராயண் கனவு கண்ட கிராம சுயராஜ்யம் அவர்களின் எழுச்சிக்குத் தடை என்பதால் ஜனநாயக முறைப்படி நேர்மையாகத் தேர்ந்தெடுக்கப்படும் கிராமத்தலைவர்கள் கடத்தி கொல்லப்படுகிறார்கள். அவர்கள் அமைதிவழி அரசமைப்பு வழிமுறை, அரசு அதிகாரத்தின் அடையாளமாக, வளர்ச்சியைக் கொண்டு வருபவர்களாக இருப்பதால் கிராமத் தலைவர்களைக் கொல்கிறார்கள். தகவல் சொல்லுபவர்கள், இருபக்கமும் நிற்காமல் அமைதியாக இருக்கும் அப்பாவிகள் ஆகியோர் மாவோயிஸ்ட்களால் கொல்லப்படுவது பலபேரால் நன்றாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. எதிர்வினை ஆற்றும், ஜனநாயகம், அரசமைப்புக்கு எதிரான, வன்முறை, ரத்த வெறி மிகுந்த கருத்தாக்கம் ஒன்றே மாவோயிஸ்ட்களால் முன்னெடுக்கப்படுகிறது. எனவே. இவர்களைக் கனவு நாயகர்களாக, தன்னிகரில்லா தலைவர்களாகக் கொண்டாடுவது அபத்தமானது.
ஏன் மாவோயிசம் ஆதிவாசிப்பகுதியில் வளர்ந்துள்ளது என்பதையும், ஆதிவாசிகள் நம்முடைய ஜனநாயகத்தில் மற்ற எல்லாச் சிறுபான்மையினரை விடவும் கடும் அடக்குமுறை, அநீதிகளுக்கு உள்ளாகிறார்கள் என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும். அதேசமயம், மாவோயிஸ்ட்களை அதற்கான தீர்வு என்று எண்ணிக்கொள்ளக் கூடாது. சமூகச் சேவை இயக்கங்கள், மருத்துவர்கள். பல்வேறு அதிகாரிகள் மருத்துவ வசதிகள், கல்வி ஆகியவற்றை ஜனநாயக முறையில் பழங்குடியினருக்கு வழங்க முடியும் எனச் செய்துகாட்டியுள்ளார்கள். அதை நாம் தீவிரமாக முன்னெடுக்க வேண்டும். காங்கிரஸ் அரசு கொண்டுவந்த வன உரிமைச் சட்டம் தீரமிகுந்த பழங்குடிகள் அமைச்சரால் ஏற்பட்டது. அதை மற்ற அமைச்சர்கள் நிறைவேற்ற தயாராக இல்லை. அதே போல, இப்பொழுதைய அரசு வன உரிமைச் சட்டத்தை நீர்த்துப் போகும் செயல்களை தொடர்ந்து செய்கிறது, அனுமதிக்கிறது.
என்னுடைய உரையின் இறுதிப்பகுதிக்கு வந்துள்ள நான் ஆதிவாசிகளின் அவலகரமான நிலையை எட்டுப் புள்ளிகளில் முக்கியமாக நிகழ்வதாகக் காண்கிறேன். அது இன்னமும் அதிகமாக இருக்கும் என்பதையும் நினைவில் நிறுத்த வேண்டும்.
வளமிகுந்த வனங்கள், நெடிய நதிகள், கனிம வளங்கள் ஆகிய மூன்றும் ஒன்றாகச் சேர்ந்த பகுதிகளில் வாழும் ஆதிவாசிகள் தாராளமயமாக்கல் காலத்தில் முப்பெரும் சாபத்துக்கு உள்ளாகி விரட்டியடிக்கப்படுகிறார்கள்.
தேசிய இயக்கத் தலைவர்களான காந்தி முதலியோர் பெண்கள்., இஸ்லாமியர்கள், தலித்துகள் ஆகியோருக்காகப் பேசினாலும் ஆதிவாசிகளைக் கண்டுகொள்ளவில்லை. அண்ணல் அம்பேத்கரும் கூட ஆதிவாசிகளின் நலனில் அக்கறையில்லாதவராக, கடுமையான கருத்துக்களைக் கொண்டவராக இருந்தார். இதனால் அவர்கள் நலன் கவனம் பெறவே இல்லை.
மக்கள்தொகையில் குறிப்பிட்ட சில பகுதியில் அவர்கள் அடங்கிவிடுவதால் தேர்தல் அரசியலில் அவர்கள் கவனிக்கப்படுகிறவர்களாக இல்லை.
அவர்களுக்கு இருக்கும் இட ஒதுக்கீட்டையும் அவர்களைவிட நன்றாக ஆங்கிலம் அறிந்த வடகிழக்கு பழங்குடியினர் கைப்பற்றிக்கொள்கிறார்கள். மேலும், கிறித்துவ, இந்து., மாவோயிச மிஷனரிக்களுள் சிக்கிக்கொண்டு அவர்கள் பரிதவிக்கிறார்கள். அம்மக்களின் எண்ணற்ற தாய்மொழிகளில் பிள்ளைகள் கல்வி கற்க முடியாமல் இந்தி, ஓடியா முதலிய மொழிகளில் கல்வி கற்கும் அவலமும், தங்களின் மகத்தான கலாசார வளங்களை இழக்கும் கொடுமையும் அரங்கேறுகிறது.
ஆதிவாசிகளுக்கு உத்வேகம் தரும், அகில இந்திய அளவில் ஒன்று திரட்டும் ஒரு தலைவர் அம்பேத்கரை போலக் கிடைக்கவில்லை.
திறன், அறிவு, சுற்றுச்சூழல், பல்லுயிர் வளம் ஆகியவற்றைக் கொண்டு வளர்ச்சியை அடையும் எடுத்துக்காட்டுகள் இன்னமும் அவர்களிடையே எழும் சூழலும், வாய்ப்பும் இல்லை. தலித்துகளில் தொழில்முனைவோர் எழுவதைத் தேவேஷ் கபூர் முதலியோர் படம்பிடித்துள்ளார்கள். ஆதிவாசிகள் வளர்ச்சியின் பாதையில் எப்பொழுது செல்லமுடியும் எனத் தெரியவில்லை.
அரசு அதிகாரிகள். காவல்துறையினர், வனத்துறை அலுவலர்கள் எல்லோரும் இம்மக்களின் நியாயமான சிக்கல்கள் குறித்துப் பாராமுகம் கொண்டவர்களாகவே உள்ளார்கள்.
தங்களின் போராட்ட நெருப்பு எரிய எரிபொருளாக ஆதிவாசிகளை மாவோயிஸ்ட்கள் பயன்படுத்திக்கொள்கிறார்கள். அவர்கள் வன்முறையை அரசும் கடும் வன்முறையால் எதிர்கொள்கிறது. வளர்ச்சி என்பதை மறந்ததைப் போல அரசு நடந்து கொள்கிறது.
வரலாற்று ஆசிரியர்கள் ஜோசியர்கள் இல்லை. அதேசமயம், தற்போதைய ஆதிவாசிகளின் நிலைமை கவலைக்கிடமானதாக உள்ளது. அது வருங்காலத்தில் செம்மையுறும் என்கிற நம்பிக்கையை மட்டும் வெளிப்படுத்தி உரையை முடிக்கிறேன். நன்றி!
தமிழில்: பூ.கொ.சரவணன்