துயர்மிகு வரிகளால் இன்றிரவை நிறைக்கப் போகிறேன் – நெரூதா


துயர்மிகு வரிகளால் இன்றிரவை நிறைக்கப்போகிறேன்

இப்படி எழுதலாம் : முறிந்த இரவில் தொலைவில் நீல விண்மீன்கள் நடுங்குகின்றன

இரவின் தென்றல் வானில் கீதம் மீட்டுகிறது

துயர்மிகு வரிகளால் இன்றிரவை நிறைக்கப்போகிறேன்
நான் அவளை காதலித்தேன்,
அவளும் சில சமயங்களில் என்னைக் காதலித்தாள்

அந்த இரவுகளில்
அவளை என் கரங்களில் ஏந்தி இருந்தேன்

அளவற்ற ஆகாயத்தின் கீழே முத்தங்களால் அவளை நிறைத்தேன்

எப்படி அவளை காதலிக்காமல்
இருந்து இருப்பேன்,
அதுவும் அந்த கண்களை !

துயர்மிகு வரிகளால் இன்றிரவை நிறைக்கப்போகிறேன்

அவள் எனக்கானவள் இல்லை
என்றே எண்ணுகிறேன்;
அவளை இழந்ததாக உணர்கிறேன்

நீண்ட இரவு,
இன்னமும் நெடிதாக
அவளில்லாமல் நீள்கிறது

புல்நுனி மீது விழும் பனித்துளியாக
வரிகள் உயிரில் விழுகிறது

துயர்மிகு வரிகளால் இன்றிரவை நிறைக்கப்போகிறேன்

என்னுடன் அவளை
பிணைத்திருக்க முடியவில்லையே என்பதே உலுக்குகிறது

இரவு முறிந்திருக்கிறது; அவள் என்னுடனில்லை

அவ்வளவே; தொலைவில் யாரோ பாடுகிறார்கள்

என் ஆன்மா அவளை இழந்து புழுங்குகிறது

என் பார்வை அவளைத்தேடுகிறது; அவளை அடைய

அவளுக்காக என் இதயம் மருகி காத்திருக்கிறது; அவள் என்னுடன் இல்லை

அதே கிளைகளில் அதே இரவு வெளுக்கிறது

அந்தப்பொழுதில் இருந்து நாங்கள் ஒன்றில்லை

நான் அவளை காதலிக்கவில்லை; அது உறுதி. ஆனால் அவளை எப்படியெல்லாம் காதலித்தேன்

என் குரல் அவளை அடையும் தென்றலைத் தீண்டுகிறது

அவள் மீது என் முத்தங்கள் பொழிவதைப் போல இன்னொருவரின் முத்தங்கள்

அவளின் குரல்,ஒளிர் மேனி,விரிந்த விழிகள்

நான் அவளை காதலிக்கவில்லை;அது உறுதி,ஆனால் நான் அவளை காதலிக்கிறேன்

காதல் தவச்சிறிது; மறத்தல் சாலப்பெரிது

அந்த இரவுகளில் அவளை என் கரங்களில் ஏந்தி இருந்தேன்

என் ஆன்மா அவளை இழந்து புழுங்குகிறது

இதுவே நான் அனுபவிக்க அவள் எனக்கு தந்த இறுதி வலி

இதுவே நான் அவளுக்காக எழுதும் இறுதி வரி -நெரூதா

 

Image result for நெரூதா