அம்பேத்கர்-கடவுள்களை அழித்து ஒழித்தவர் – 5 – பேராசிரியர். பிரதாப் பானு மேத்தா
விடுதலை, சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய மூன்றையும் புரட்சிகரமாக அம்பேத்கர் பற்றிக்கொள்கிறார். அதனாலேயே, அம்பேத்கர்
நம் காலத்தின் பெரும் போராட்டங்களில் ஒன்றான ‘ஜனநாயகத்தின் பண்பு என்ன?’ என்பதன் மைய ஆளுமையாகத் திகழ்கிறார். அரசமைப்புச் சட்டத்தை உருவாக்குவதில் அம்பேத்கர் அறிவார்ந்த பங்களிப்பை வழங்கினார். அதுவே
அரசமைப்பு சட்டத்தின் போதாமைகள் குறித்து அம்பேத்கர் கொண்டிருந்த தெளிவான பார்வையை நாம் கண்டுகொள்ளாமல் போகக் காரணமாக இருக்கக் கூடாது. முனைவர் ஐஸ்வரி குமார் தனது மிக முக்கியமான புத்தகமான Radical Equality: Ambedkar, Gandhi and the Risk of Democracy (Stanford University Press)-ல் புலப்படுத்துவதைப் போல அம்பேத்கர் பல வகைகளில் புரட்சிகரமானவர். அவர் ஏன் புரட்சிகரமானவர்? ஜனநாயகம் குறித்து உணர்ச்சிவசப்படாத, தயவு தாட்சண்யமில்லாத பார்வையை அவர் கொண்டிருந்தார். சிந்தனையாளர் க்ராட்வேயின் ‘அரசமைப்பு அறநெறி’ என்கிற கோட்பாட்டைத் தனதாக்கி கொண்டே ஒரே இந்திய சிந்தனையாளர் அண்ணல் அம்பேத்கர் மட்டுமே. அந்தக் கோட்பாட்டின்படி அரசாங்கம் என்பது அறத்தின் அடிப்படையிலான சுயகட்டுப்பாடு, வெவ்வேறு கருத்துகளுக்கு மரியாதை தருவது, கட்டற்ற உரையாடல் ஆகியவற்றைக் கூறுகளாகக் தன்னுடைய கூறுகளாகக் கொண்டது. எனினும், அரசமைப்பு அறமானது ஜனநாயகப்பண்புகள் அற்ற ஆழமான நிலத்தின் மேற்பகுதி மண் மட்டும் செழிப்பாக இருப்பதைப் போன்றதே ஆகும் என்று அம்பேத்கர் தெளிவாகக் குறிப்பிட்டார்.
அரசமைப்பு சட்ட அடிப்படையிலான அரசை பேணுவது மட்டுமே ‘மக்களின் சுயாட்சிக்கு ஈடாக முடியாது.’ என்பதையும் கவனப்படுத்தினார். எனினும், அரசமைப்பு அறத்திற்கு இரண்டு முக்கியமான போதாமைகள் உண்டு என்று தீர்க்கதரிசியாக அவர் எச்சரித்தார். அரசமைப்புச் சட்டத்தை ஆட்சிமுறையும் ஒத்திருக்க வேண்டும். இதனால் தான், சட்ட அறிஞர் மாதவ் கோஸ்லா வாதிடுவதைப் போல, இந்தியாவில் ஆட்சிமுறையை அரசமைப்பு சட்டத்தின் வரையறைகளுக்குள் அமைப்பதற்கு ஆழமான அழுத்தம் தரப்படுகிறது. எழுபது வருடங்கள் கடந்த பின்னர், இப்பொழுது நம் முன் நின்று கொண்டு நம்மைக் கடுமையாகச் சாடுவதைப் போல இருக்கிறது அம்பேத்கரின் இந்த வாசகங்கள்: ‘அரசமைப்பு சட்டத்தின் வடிவத்தைத் துளிகூட மாற்றாமல், ஆட்சிமுறையின் வடிவத்தை மட்டும் மாற்றுவதன் மூலம் அரசமைப்பு சட்டத்தின் ஆன்மாவில் இருந்து முற்றிலும் வேறுபட்ட, ஒவ்வாத ஆட்சிமுறையைத் தர முடியும். அதன் மூலம் அரசமைப்பு சட்டத்தின் ஆன்மாவை சீர்குலைக்க முடியும். ‘
அதே போல மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மக்களுக்கான பொறுப்புமிகுந்த அரசாக இருக்க வேண்டியதில்லை. அவர், ‘காந்தியும், காங்கிரசும் தீண்டப்படாத மக்களுக்குச் செய்தது என்ன?’ நூலில் எழுதுவதைப் போல, ‘வயது வந்த அனைவருக்குமான வாக்குரிமை மட்டுமே மக்களுக்கான, மக்களாலான அரசை கொண்டு வந்துவிட முடியாது.’ எல்லாவற்றுக்கும் அமலாக, ஜனநாயகத்தின் மிக முக்கியமான முரண்பாட்டை அவர் உணர்ந்திருந்தார்: ஆழமான சமூக, பொருளாதாரச் சமத்துவமின்மைகளுக்கு இடையே ஜனநாயக சமத்துவத்தை ஏற்படுத்த முயல்வது. இப்படிப்பட்டமுரண்பாடுகளின் போரை வெகுகாலத்துக்கு எந்த ஜனநாயகமும் தாங்க முடியாது.
ஜனநாயகத்தைப் பற்றிய கூர்மையான விமர்சனத்தை வைத்த வகையில் மரபார்ந்த தாராளவாதிகளில் இருந்து மாறுபட்டவராக அம்பேத்கர் திகழ்கிறார். அம்பேத்கரை புரட்சிகரமான போக்குக் கொண்டு குடியரசாளர் என்று கருதுவதற்கு ஏற்றாற்போல அவர் சகோதரத்துவத்தில் நம்பிக்கை கொண்டிருந்தார், பொருளாதார ஏற்றத்தாழ்வும், உண்மையான ஜனநாயகமும் ஒன்றாக இயங்க முடியுமா என்கிற ஐயப்பாடு உடையவராக அவர் இருந்தார். தனக்குத் தானே விதித்துக் கொண்ட கட்டுப்பாட்டைத் தவிர்த்துக் குடியரசில் வேறு எதற்கும் அதிகாரம் செலுத்த இடமில்லை என்று அவர் குடியரசாளர் போல எண்ணினார். எனினும், இப்படிப்பட்ட பண்புகளால் அவரைக் குடியரசு முறையை முற்றாக ஏற்றுக்கொண்டவர் என்று எண்ணக்கூடாது. இதற்கு மூன்று முக்கியக் காரணங்கள்.
முதலாவதாக, மக்களின் அரசாள்வதற்கான தலைமை உரிமையான, ‘இறையாண்மை’ ஒற்றைப்படையானது என்பதை அவர் ஆழமாகச் சந்தேகித்தார். இதனாலேயே பல்வேறு வகைகளில் நாட்டின் ஆட்சிமுறையைக் கட்டுப்பாட்டில், பொறுப்பான செயல்பாட்டில் வைக்கும் தடுப்புகள், ஜனநாயகத்தின் சமநிலையை உறுதி செய்யும் அமைப்புகள் ஆகியவை தேவை என்கிற தாராளவாத பார்வை கொண்டவராக அவர் இருந்தார். அம்பேத்கரை பொறுத்தவரை இறையாண்மை என்பது ஒற்றைப்படையானது இல்லை. அதை யாரோ ஒருவர் மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்தி விட முடியாது. இந்தியாவின் சமூகச் சூழ்நிலை சீர்கேடுகளால் நிறைந்திருந்ததால், விழுமியங்களால் சமூக இணக்கத்தைச் சாதிப்பதை விட அரசைக்கொண்டு சமூக ஒழுங்கை உறுதி செய்ய முடியும் என்று அவர் நம்பினார். அதிகார பரவலாக்கல், பிரதேசவாதம் ஆகியவை குறித்த அவரின் ஓயாத விமர்சனம் இப்படிப்பட்ட முயற்சிகள் உள்ளூர் சர்வாதிகாரத்துக்கு வழிவகுத்து விடும் என்கிற ஐயப்பாட்டின் அடிப்படையில் ஓரளவுக்கு அமைந்திருந்தது. அதேசமயம் , அரசு சமூகத்தைப் புணரமைக்கும் என்பதில் அவர் நம்பிக்கை கொண்டிருந்தார். அதேசமயம், அம்பேத்கர் அனைவரும் சகோதரர்களாகக் கூடி வாழும் சகோதரத்துவத்துக்கு ஏங்கினாலும், பெரும்பாலான குடியரசாளர்கள் கொண்டிருந்த ‘சகோதரத்துவம் என்பது ஒற்றுமையில் களிப்புக் கொள்வது.’ என்பதை அவர் ஏற்கவில்லை. அம்பேத்கர் தனி மனிதனின் தனித்துவதில் நம்பிக்கை கொண்டவர் என்பதால், அவர் கருத்தியல் ரீதியாக ஒற்றுமையைக் கோரிய குடியரசியலை முழுமையாக ஏற்கவில்லை. அவரின் செறிந்த, தன்னிகரில்லாத பகுத்தறிவு அவரைக் குடியரசியலை விட்டு சற்றுத் தள்ளியே இருக்க வைத்தது.
சமூகநீதி என்பது தலித்துகளை அதிகாரப்படுத்தலில் இருக்கிறது என்பதையும், அப்படிப்பட்ட அதிகாரப்படுத்தலுக்கு எல்லா வகையான அதிகாரங்களிலும் தலித்துகளுக்குப் பங்கு வேண்டும் என்பதிலும் அம்பேத்கர் சந்தேகத்துக்கு இடமில்லாமல் தெளிவாக இருந்தார். மற்ற அமைப்பு முறைகள் பொருளாதார வளம், ஆயுதம், கல்வி ஆகிய பரிமாணங்களில் ஒன்று, இரண்டு பரிமாணங்களில் தான் விலக்குதலை மேற்கொண்டன. ஆனால், ஜாதி அமைப்பில் மட்டும் தான் தலித்துகளைப் பொருளாதாரப் பலம், ராணுவம், கல்வி ஆகிய அனைத்து தளங்களிலும் ஒதுக்கி வைப்பது ஒரே சமயத்தில் நடைபெற்றது. அதனால் அது மிகக்கொடுமையான அடக்குமுறையாக இருந்தது.
அம்பேத்கர் கல்வியை மட்டுமே அதிகாரத்துக்கான திறப்பாகக் காணவில்லை. மஹர் ராணுவப்பிரிவை உருவாக்கி, விரிவுபடுத்தினார். பொருளாதார வளத்திலும் தலித்துகளுக்குப் பங்கு கிடைப்பதற்கான வெளிகளை அவர் கட்டமைக்க முயன்றார். இவையெல்லாம் வெறும் விபத்துக்கள் அல்ல. இவை அனைத்துக்கும் மேலாக, இவற்றை அடைய அரசு அதிகாரத்தில் பங்கு வேண்டும். தலித்துகளுக்குச் சட்டமியற்றும் சபைகளில் நியாயமான இடத்தைப் பெறுவதற்கான அவரின் வாழ்நாள் போராட்டத்தின் பின்னால் இந்தப் புரிதல் இருந்தது. திறமையானவர்கள், தகுதியானவர்கள் என்கிற கருத்தாக்கம் உண்மையில் பரம்பரை, பரம்பரையாகப் பெறப்பட்ட வாய்ப்புகளின் மீது எழுப்பப்பட்ட ஒன்று என்று முதன்முதலில் அப்பட்டமாக அம்பலப்படுத்தியவர்களில் அம்பேத்கரும் ஒருவர். திறமை என்பது தானே வருவதில்லை, அதற்குப் பின்னால் பல்வேறு காரணிகள், வாய்ப்புகள் இருக்கின்றன என்பதை இத்தனை காலம் கழித்தும் அழுத்தி சொல்ல வேண்டிய நிலைமை இருப்பது அவரின் கொள்கைகளில் இருந்து நாம் எவ்வளவு தூரம் தள்ளியிருக்கிறோம் என்பதற்குச் சாட்சியாகும்.
எனினும், இட ஒதுக்கீடு உருவாக்கத்தில் ஓரளவுக்கு முரண் உள்ளது. அம்பேத்கர் தன்னுடைய வாழ்நாள் முழுக்கத் தலித் அனுபவம் தனித்துவமானது என்று ஓயாமல் அழுத்தி சொல்லிக்கொண்டே இருந்தார். இப்படிப்பட்ட ‘தலித்துகள் தனித்துவமானவர்கள்’ என்கிற அவரின் ஓயாத குரல் மற்றவர்கள்
அவரோடு இணைந்து கூட்டணி அமைக்க முடியாமல் தடுத்தது என்று அவரின் செயல்முறைகளை விமர்சிப்பவர்கள் சுட்டிக்காட்டுவார்கள். தலித்துகள் தனித்துவமானவர்கள் என அழுத்தி சொன்னதன் மையத்தில் அவர்களை ஒடுக்கும் அனுபவத்தின் வலி நிறைந்திருந்தது. இதனால் தான் தலித்துகள் சிறுபான்மையினர் என்கிற தனி அடையாளத்தைப் பிறர் ஏற்க வேண்டும் என்று அம்பேத்கர் போராடினார். இட ஒதுக்கீடுகள் எப்படி மாறின என்பதைக் காண்கிற பொழுது அம்பேத்கரின் இந்தச் சிந்தனைகளின் அடிப்படைகள் ஓரளவுக்கு மழுங்கடிக்கப்பட்டு விட்டன என்பது பெரிய முரண்களில் ஒன்று.
தலித்துகளுக்கான இட ஒதுக்கீடு பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கும் நீட்டிக்கப்பட்டது இரு விஷயங்களைச் செய்தது. ‘சாதி போர்களில்’ தலித்துகளின் தனித்த வரலாற்றை அது இருட்டடிப்பு செய்தது; அவர்களின் வரலாறை மற்றவர்கள் தங்களுடையதாகக் கையகப்படுத்திக் கொண்டார்கள். இந்தக் கையகப்படுதலை அவர்களைப் பல சமயங்களில் நேரடியாக ஒடுக்கும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரே அடிக்கடி மேற்கொண்டார்கள். அதிகார பகிர்வு என்பதன் சொல்லாடல் பலருக்கும் உரியதாக ஆக்கப்பட்டதன் மூலம் தலித்துகளுக்கு எதிராக நிகழ்த்தப்படும் ஒடுக்குமுறைகள் அனைவருக்கும் உரியதாக, ஏன் புலப்படாத ஒன்றாக மாற்றப்பட்டு விட்டது. அம்பேத்கர் ஒரு புதிய அறத்தின் அடிப்படையிலான உறவினை அதிகாரத்திற்கான நேரடிப் போராட்டமாக, எதிர்வினைகளாலான எதிர்ப்பரசியலாக மாற்ற முயன்ற நம்பிக்கை மிகுந்த முன்னெடுப்பை இது காணடித்து விட்டது. அதே வேளையில், இட ஒதுக்கீடுகளுக்கான அரசியல் அடிப்படையை அது மாற்றியமைத்து உள்ளது. தலித்துகள், பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் இடையே உள்ளே பெரும்பான்மை கூட்டணி இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்தி உள்ளது. இடஒதுக்கீட்டுக்கு அரசியல் திடத்தன்மையை அது வழங்குகிறது. அதே சமயம், தலித்துகளின் அவலமிகுந்த நிலைமையின் தனித்த அறக்குரலை அது கேட்காமல் செய்துவிட்டது.
அம்பேத்கர் தொடர்ந்து நம்மை அசைத்து பார்ப்பவராக இருக்கிறார். அவர் எல்லா வகையான அரசியல்கள் அவற்றோடு தொடர்புடைய பிரமைகள்
கேள்விக்கு உட்படுத்துகிறார். அம்பேத்கர் பாரம்பரியம், அதிகாரம், இந்து மதம், ஜனநாயகம். எல்லாவற்றுக்கும் மேலாக மெய்யியியல் என்கிற பெயரில் நிகழ்த்தப்படும் நேர்மையற்ற, அபத்தமான சொற்பொழிவுகள் ஆகியவை குறித்த நம்முடைய பிரமைகளைக் கடுமையாகக் கேள்விக்கு உட்படுத்துகிறார். இப்பொழுது இருக்கும் சூழலில், தேசபக்தியை நீதியை விட முக்கியத்துவப்படுத்துவது குறித்த அவரின் அவநம்பிக்கை மிகுந்த குரலுக்குச் செவிமடுத்து அவசியமாகிறது. ‘தேசியம் என்பது ஒன்றும் புனிதமானது அல்ல. அது கேள்விகளுக்கு அப்பாற்பட்ட கொள்கையும் அல்ல. ஆகவே, மற்ற எதைவிடவும் அதிமுக்கியமான ஒன்றாக தேசியத்தை மட்டும் தேர்ந்தெடுத்து கட்டாயப்படுத்தி ஏற்க வைப்பது ஏற்புடைய ஒன்று அல்ல.’
அவரின் சிந்தனைகளின் மையத்தில் பெரும் சோகத்தை ஊற்றெடுக்க வைக்கும் ஒரு கேள்வி எழுகிறது: மற்ற எவரைவிடவும் மனிதர்களின் கயமைகளை, அடக்குமுறைகளை அனுபவித்த ஒருவர் எப்படி நம்பிக்கையைக் கைவிடாதவராக இருந்தார்? எந்தப் புற ஊன்றுகோல்களையும் அவர் நம்பவில்லை, வரலாற்றின் இயங்கியலிலோ, மெய்யியலின் நிம்மதியிலோ, மதத்தின் ஆறுதல்களிலோ, போலி அறிவியலின் நிச்சயத் தன்மைகளிலோ அவர் பல நூறு ஆண்டுகாலத் துயரங்களில் இருந்து தப்பிக்கும் நம்பிக்கை இருப்பதாக நம்பாதது அவரின் அழியா தீரத்துக்குச் சான்றாகும். ஒரு பண்பில் அவர் காந்தியைப் போலவே தோன்றுகிறார்: நம்முடைய மனசாட்சியின் அறிவார்ந்த குரலை விடச் சமூகச் செயல்பாட்டிற்குச் சிறந்த அடித்தளம் எதுவும் இல்லை.
அவரின் கூர்மையான இன்னுமொரு கட்டுரையான ‘ரானடே, காந்தி, ஜின்னாவில்’ அவர் இப்படி அழுத்தமாக எழுதினார்:
உரிமைகள் சட்டங்களால் பாதுகாக்கப்படுவது இல்லை, அது சமுதாயத்தின் சமூக மனசாட்சி, அற மனசாட்சி ஆகியவற்றின் மூலமே காக்கப்படுகிறது என்று அனுபவம் நிரூபிக்கிறது. சட்டம் எந்த உரிமைகளைக் காக்க சட்டம் இயற்றப்படுகிறதோ,
அவற்றைச் சமூக மனசாட்சி அங்கீகரிக்கத் தயாராக இருந்தால் உரிமைகள் பாதுகாப்பாக, பத்திரமாக இருக்கும். அடிப்படை உரிமைகளைச் சமூகம் எதிர்க்கும் என்றால் எந்தச் சட்டமும், நாடாளுமன்றமும், நீதித்துறையும் உண்மையில் அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்த முடியாது. அமெரிக்காவில் நீக்ரோக்களுக்கும், ஜெர்மனியில் யூதர்களுக்கும், இந்தியாவில் தீண்டபப்டாத மக்களுக்கும் அடிப்படை உரிமைகளால் என்ன பயன்? பர்க் சொல்வதைப்போலப் பெரும் கூட்டத்தைத் தண்டிக்க எந்த முறையும் கண்டுபிடிக்கப்படவில்லை. சட்டமானது ஒரு தனித்த, ஒற்றை அடங்கமறுக்கிற குற்றவாளியை தண்டிக்க இயலும். சட்டத்தை ஏற்க மறுக்கிற பெரும் கூட்டத்தைச் சட்டம் ஒன்றும் செய்ய முடியாது.
கோல்ரிட்ஜ் குறிப்பிடும் சமூக மனசாட்சி தான் ஆன்மாவின் அமைதியான, களங்கப்படுத்த முடியாத நெறியாளர். அந்தச் சமூக மனசாட்சி தான் , “அடிப்படை உரிமைகள், பிற உரிமைகளின் பாதுகாவலன், அது இல்லாமல் மற்ற எல்லா அதிகாரங்களும் கடும் எதிர்ப்பையே சந்திக்கும்.”இது பெரும் நம்பிக்கை தருகிற அல்லது பெருமளவில் அவநம்பிக்கை தரும் சிந்தனையாக உங்களின் பார்வைக்கு ஏற்ப அமையும். நம்முடைய மனசாட்சியைத் தவிர வேறு எந்தத் தீர்வுகளும் இல்லை என்பது நம்மை எதிர்ப்பேச்சு பேச முடியாதவர்களாக மாற்றும், குறிப்பாக, அம்பேத்கருக்கு போலியான நம்பிக்கைகளால் மனசாட்சி பல சமயங்களில் மரித்துப் போகிறது என்பது புரிந்திருந்தது. அம்பேத்கருக்கு பெரும் அரசியல் செல்வாக்கு அவர் காலத்தில் இல்லை. அரசியல் வெற்றியின் மரபார்ந்த அளவுகோல்களின்படி அவர் அரசியலில் பெரும் தாக்கத்தை உண்டு செய்தவர் இல்லை. “நான் உருகாத பாறை போன்றவன். பாய்ந்து வரும் நதிகளின் போக்கை திசைதிருப்பும் வல்லமை மிக்கவன்.” என்று அம்பேத்கர் தன்னைப்பற்றி ஒரு சமயம் எழுதினார். நிச்சயமாக ஒட்டுமொத்த பண்பாட்டின் பயணத்தை நீதி நோக்கி அவர் திசை திருப்பினார். அதனால் ஏற்பட்ட போராட்டங்கள், அதிர்வுகள் இன்னமும் முழுமையாக உணரப்படவில்லை. அவை விடுதலைக்கான போராட்டங்களால், வன்முறை மிகுந்த எதிர்ப்புகளோடு இந்திய சமூகத்தில் வெளிப்பட்டுக் கொண்டு இருக்கிறது. அண்ணல் அம்பேத்கர் அனைவருக்குமான சிந்தனையாளர் இல்லை. அவரை நம்முடையவர் என்று உரிமை கொண்டாட நாம் போதுமானதை செய்யவில்லை. ஒரு வகையில் நம் அனைவருக்குமான சிந்தனையாளர் அவர்- நம் அனைவரையும் நிரந்தரமாக எச்சரிக்கும் எம்மான் அவர்.
(முடிந்தது)
தமிழில்: பூ கொ சரவணன்