அம்பேத்கர் – கடவுள்களை அழித்து ஒழித்தவர் – 5


அம்பேத்கர்-கடவுள்களை அழித்து ஒழித்தவர் – 5 – பேராசிரியர். பிரதாப் பானு மேத்தா

விடுதலை, சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய மூன்றையும் புரட்சிகரமாக அம்பேத்கர் பற்றிக்கொள்கிறார். அதனாலேயே, அம்பேத்கர்
நம் காலத்தின் பெரும் போராட்டங்களில் ஒன்றான ‘ஜனநாயகத்தின் பண்பு என்ன?’ என்பதன் மைய ஆளுமையாகத் திகழ்கிறார். அரசமைப்புச் சட்டத்தை உருவாக்குவதில் அம்பேத்கர் அறிவார்ந்த பங்களிப்பை வழங்கினார். அதுவே
அரசமைப்பு சட்டத்தின் போதாமைகள் குறித்து அம்பேத்கர் கொண்டிருந்த தெளிவான பார்வையை நாம் கண்டுகொள்ளாமல் போகக் காரணமாக இருக்கக் கூடாது. முனைவர் ஐஸ்வரி குமார் தனது மிக முக்கியமான புத்தகமான Radical Equality: Ambedkar, Gandhi and the Risk of Democracy (Stanford University Press)-ல் புலப்படுத்துவதைப் போல அம்பேத்கர் பல வகைகளில் புரட்சிகரமானவர். அவர் ஏன் புரட்சிகரமானவர்? ஜனநாயகம் குறித்து உணர்ச்சிவசப்படாத, தயவு தாட்சண்யமில்லாத பார்வையை அவர் கொண்டிருந்தார். சிந்தனையாளர் க்ராட்வேயின் ‘அரசமைப்பு அறநெறி’ என்கிற கோட்பாட்டைத் தனதாக்கி கொண்டே ஒரே இந்திய சிந்தனையாளர் அண்ணல் அம்பேத்கர் மட்டுமே. அந்தக் கோட்பாட்டின்படி அரசாங்கம் என்பது அறத்தின் அடிப்படையிலான சுயகட்டுப்பாடு, வெவ்வேறு கருத்துகளுக்கு மரியாதை தருவது, கட்டற்ற உரையாடல் ஆகியவற்றைக் கூறுகளாகக் தன்னுடைய கூறுகளாகக் கொண்டது. எனினும், அரசமைப்பு அறமானது ஜனநாயகப்பண்புகள் அற்ற ஆழமான நிலத்தின் மேற்பகுதி மண் மட்டும் செழிப்பாக இருப்பதைப் போன்றதே ஆகும் என்று அம்பேத்கர் தெளிவாகக் குறிப்பிட்டார்.

p19.gif
அரசமைப்பு சட்ட அடிப்படையிலான அரசை பேணுவது மட்டுமே ‘மக்களின் சுயாட்சிக்கு ஈடாக முடியாது.’ என்பதையும் கவனப்படுத்தினார். எனினும், அரசமைப்பு அறத்திற்கு இரண்டு முக்கியமான போதாமைகள் உண்டு என்று தீர்க்கதரிசியாக அவர் எச்சரித்தார். அரசமைப்புச் சட்டத்தை ஆட்சிமுறையும் ஒத்திருக்க வேண்டும். இதனால் தான், சட்ட அறிஞர் மாதவ் கோஸ்லா வாதிடுவதைப் போல, இந்தியாவில் ஆட்சிமுறையை அரசமைப்பு சட்டத்தின் வரையறைகளுக்குள் அமைப்பதற்கு ஆழமான அழுத்தம் தரப்படுகிறது. எழுபது வருடங்கள் கடந்த பின்னர், இப்பொழுது நம் முன் நின்று கொண்டு நம்மைக் கடுமையாகச் சாடுவதைப் போல இருக்கிறது அம்பேத்கரின் இந்த வாசகங்கள்: ‘அரசமைப்பு சட்டத்தின் வடிவத்தைத் துளிகூட மாற்றாமல், ஆட்சிமுறையின் வடிவத்தை மட்டும் மாற்றுவதன் மூலம் அரசமைப்பு சட்டத்தின் ஆன்மாவில் இருந்து முற்றிலும் வேறுபட்ட, ஒவ்வாத ஆட்சிமுறையைத் தர முடியும். அதன் மூலம் அரசமைப்பு சட்டத்தின் ஆன்மாவை சீர்குலைக்க முடியும். ‘

அதே போல மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மக்களுக்கான பொறுப்புமிகுந்த அரசாக இருக்க வேண்டியதில்லை. அவர், ‘காந்தியும், காங்கிரசும் தீண்டப்படாத மக்களுக்குச் செய்தது என்ன?’ நூலில் எழுதுவதைப் போல, ‘வயது வந்த அனைவருக்குமான வாக்குரிமை மட்டுமே மக்களுக்கான, மக்களாலான அரசை கொண்டு வந்துவிட முடியாது.’ எல்லாவற்றுக்கும் அமலாக, ஜனநாயகத்தின் மிக முக்கியமான முரண்பாட்டை அவர் உணர்ந்திருந்தார்: ஆழமான சமூக, பொருளாதாரச் சமத்துவமின்மைகளுக்கு இடையே ஜனநாயக சமத்துவத்தை ஏற்படுத்த முயல்வது. இப்படிப்பட்டமுரண்பாடுகளின் போரை வெகுகாலத்துக்கு எந்த ஜனநாயகமும் தாங்க முடியாது.

ஜனநாயகத்தைப் பற்றிய கூர்மையான விமர்சனத்தை வைத்த வகையில் மரபார்ந்த தாராளவாதிகளில் இருந்து மாறுபட்டவராக அம்பேத்கர் திகழ்கிறார். அம்பேத்கரை புரட்சிகரமான போக்குக் கொண்டு குடியரசாளர் என்று கருதுவதற்கு ஏற்றாற்போல அவர் சகோதரத்துவத்தில் நம்பிக்கை கொண்டிருந்தார், பொருளாதார ஏற்றத்தாழ்வும், உண்மையான ஜனநாயகமும் ஒன்றாக இயங்க முடியுமா என்கிற ஐயப்பாடு உடையவராக அவர் இருந்தார். தனக்குத் தானே விதித்துக் கொண்ட கட்டுப்பாட்டைத் தவிர்த்துக் குடியரசில் வேறு எதற்கும் அதிகாரம் செலுத்த இடமில்லை என்று அவர் குடியரசாளர் போல எண்ணினார். எனினும், இப்படிப்பட்ட பண்புகளால் அவரைக் குடியரசு முறையை முற்றாக ஏற்றுக்கொண்டவர் என்று எண்ணக்கூடாது. இதற்கு மூன்று முக்கியக் காரணங்கள்.

முதலாவதாக, மக்களின் அரசாள்வதற்கான தலைமை உரிமையான, ‘இறையாண்மை’ ஒற்றைப்படையானது என்பதை அவர் ஆழமாகச் சந்தேகித்தார். இதனாலேயே பல்வேறு வகைகளில் நாட்டின் ஆட்சிமுறையைக் கட்டுப்பாட்டில், பொறுப்பான செயல்பாட்டில் வைக்கும் தடுப்புகள், ஜனநாயகத்தின் சமநிலையை உறுதி செய்யும் அமைப்புகள் ஆகியவை தேவை என்கிற தாராளவாத பார்வை கொண்டவராக அவர் இருந்தார். அம்பேத்கரை பொறுத்தவரை இறையாண்மை என்பது ஒற்றைப்படையானது இல்லை. அதை யாரோ ஒருவர் மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்தி விட முடியாது. இந்தியாவின் சமூகச் சூழ்நிலை சீர்கேடுகளால் நிறைந்திருந்ததால், விழுமியங்களால் சமூக இணக்கத்தைச் சாதிப்பதை விட அரசைக்கொண்டு சமூக ஒழுங்கை உறுதி செய்ய முடியும் என்று அவர் நம்பினார். அதிகார பரவலாக்கல், பிரதேசவாதம் ஆகியவை குறித்த அவரின் ஓயாத விமர்சனம் இப்படிப்பட்ட முயற்சிகள் உள்ளூர் சர்வாதிகாரத்துக்கு வழிவகுத்து விடும் என்கிற ஐயப்பாட்டின் அடிப்படையில் ஓரளவுக்கு அமைந்திருந்தது. அதேசமயம் , அரசு சமூகத்தைப் புணரமைக்கும் என்பதில் அவர் நம்பிக்கை கொண்டிருந்தார். அதேசமயம், அம்பேத்கர் அனைவரும் சகோதரர்களாகக் கூடி வாழும் சகோதரத்துவத்துக்கு ஏங்கினாலும், பெரும்பாலான குடியரசாளர்கள் கொண்டிருந்த ‘சகோதரத்துவம் என்பது ஒற்றுமையில் களிப்புக் கொள்வது.’ என்பதை அவர் ஏற்கவில்லை. அம்பேத்கர் தனி மனிதனின் தனித்துவதில் நம்பிக்கை கொண்டவர் என்பதால், அவர் கருத்தியல் ரீதியாக ஒற்றுமையைக் கோரிய குடியரசியலை முழுமையாக ஏற்கவில்லை. அவரின் செறிந்த, தன்னிகரில்லாத பகுத்தறிவு அவரைக் குடியரசியலை விட்டு சற்றுத் தள்ளியே இருக்க வைத்தது.

சமூகநீதி என்பது தலித்துகளை அதிகாரப்படுத்தலில் இருக்கிறது என்பதையும், அப்படிப்பட்ட அதிகாரப்படுத்தலுக்கு எல்லா வகையான அதிகாரங்களிலும் தலித்துகளுக்குப் பங்கு வேண்டும் என்பதிலும் அம்பேத்கர் சந்தேகத்துக்கு இடமில்லாமல் தெளிவாக இருந்தார். மற்ற அமைப்பு முறைகள் பொருளாதார வளம், ஆயுதம், கல்வி ஆகிய பரிமாணங்களில் ஒன்று, இரண்டு பரிமாணங்களில் தான் விலக்குதலை மேற்கொண்டன. ஆனால், ஜாதி அமைப்பில் மட்டும் தான் தலித்துகளைப் பொருளாதாரப் பலம், ராணுவம், கல்வி ஆகிய அனைத்து தளங்களிலும் ஒதுக்கி வைப்பது ஒரே சமயத்தில் நடைபெற்றது. அதனால் அது மிகக்கொடுமையான அடக்குமுறையாக இருந்தது.

ambedkarcu2.gif
அம்பேத்கர் கல்வியை மட்டுமே அதிகாரத்துக்கான திறப்பாகக் காணவில்லை. மஹர் ராணுவப்பிரிவை உருவாக்கி, விரிவுபடுத்தினார். பொருளாதார வளத்திலும் தலித்துகளுக்குப் பங்கு கிடைப்பதற்கான வெளிகளை அவர் கட்டமைக்க முயன்றார். இவையெல்லாம் வெறும் விபத்துக்கள் அல்ல. இவை அனைத்துக்கும் மேலாக, இவற்றை அடைய அரசு அதிகாரத்தில் பங்கு வேண்டும். தலித்துகளுக்குச் சட்டமியற்றும் சபைகளில் நியாயமான இடத்தைப் பெறுவதற்கான அவரின் வாழ்நாள் போராட்டத்தின் பின்னால் இந்தப் புரிதல் இருந்தது. திறமையானவர்கள், தகுதியானவர்கள் என்கிற கருத்தாக்கம் உண்மையில் பரம்பரை, பரம்பரையாகப் பெறப்பட்ட வாய்ப்புகளின் மீது எழுப்பப்பட்ட ஒன்று என்று முதன்முதலில் அப்பட்டமாக அம்பலப்படுத்தியவர்களில் அம்பேத்கரும் ஒருவர். திறமை என்பது தானே வருவதில்லை, அதற்குப் பின்னால் பல்வேறு காரணிகள், வாய்ப்புகள் இருக்கின்றன என்பதை இத்தனை காலம் கழித்தும் அழுத்தி சொல்ல வேண்டிய நிலைமை இருப்பது அவரின் கொள்கைகளில் இருந்து நாம் எவ்வளவு தூரம் தள்ளியிருக்கிறோம் என்பதற்குச் சாட்சியாகும்.

எனினும், இட ஒதுக்கீடு உருவாக்கத்தில் ஓரளவுக்கு முரண் உள்ளது. அம்பேத்கர் தன்னுடைய வாழ்நாள் முழுக்கத் தலித் அனுபவம் தனித்துவமானது என்று ஓயாமல் அழுத்தி சொல்லிக்கொண்டே இருந்தார். இப்படிப்பட்ட ‘தலித்துகள் தனித்துவமானவர்கள்’ என்கிற அவரின் ஓயாத குரல் மற்றவர்கள்
அவரோடு இணைந்து கூட்டணி அமைக்க முடியாமல் தடுத்தது என்று அவரின் செயல்முறைகளை விமர்சிப்பவர்கள் சுட்டிக்காட்டுவார்கள். தலித்துகள் தனித்துவமானவர்கள் என அழுத்தி சொன்னதன் மையத்தில் அவர்களை ஒடுக்கும் அனுபவத்தின் வலி நிறைந்திருந்தது. இதனால் தான் தலித்துகள் சிறுபான்மையினர் என்கிற தனி அடையாளத்தைப் பிறர் ஏற்க வேண்டும் என்று அம்பேத்கர் போராடினார். இட ஒதுக்கீடுகள் எப்படி மாறின என்பதைக் காண்கிற பொழுது அம்பேத்கரின் இந்தச் சிந்தனைகளின் அடிப்படைகள் ஓரளவுக்கு மழுங்கடிக்கப்பட்டு விட்டன என்பது பெரிய முரண்களில் ஒன்று.

தலித்துகளுக்கான இட ஒதுக்கீடு பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கும் நீட்டிக்கப்பட்டது இரு விஷயங்களைச் செய்தது. ‘சாதி போர்களில்’ தலித்துகளின் தனித்த வரலாற்றை அது இருட்டடிப்பு செய்தது; அவர்களின் வரலாறை மற்றவர்கள் தங்களுடையதாகக் கையகப்படுத்திக் கொண்டார்கள். இந்தக் கையகப்படுதலை அவர்களைப் பல சமயங்களில் நேரடியாக ஒடுக்கும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரே அடிக்கடி மேற்கொண்டார்கள். அதிகார பகிர்வு என்பதன் சொல்லாடல் பலருக்கும் உரியதாக ஆக்கப்பட்டதன் மூலம் தலித்துகளுக்கு எதிராக நிகழ்த்தப்படும் ஒடுக்குமுறைகள் அனைவருக்கும் உரியதாக, ஏன் புலப்படாத ஒன்றாக மாற்றப்பட்டு விட்டது. அம்பேத்கர் ஒரு புதிய அறத்தின் அடிப்படையிலான உறவினை அதிகாரத்திற்கான நேரடிப் போராட்டமாக, எதிர்வினைகளாலான எதிர்ப்பரசியலாக மாற்ற முயன்ற நம்பிக்கை மிகுந்த முன்னெடுப்பை இது காணடித்து விட்டது. அதே வேளையில், இட ஒதுக்கீடுகளுக்கான அரசியல் அடிப்படையை அது மாற்றியமைத்து உள்ளது. தலித்துகள், பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் இடையே உள்ளே பெரும்பான்மை கூட்டணி இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்தி உள்ளது. இடஒதுக்கீட்டுக்கு அரசியல் திடத்தன்மையை அது வழங்குகிறது. அதே சமயம், தலித்துகளின் அவலமிகுந்த நிலைமையின் தனித்த அறக்குரலை அது கேட்காமல் செய்துவிட்டது.

ambedkar_statue_0.jpg
அம்பேத்கர் தொடர்ந்து நம்மை அசைத்து பார்ப்பவராக இருக்கிறார். அவர் எல்லா வகையான அரசியல்கள் அவற்றோடு தொடர்புடைய பிரமைகள்
கேள்விக்கு உட்படுத்துகிறார். அம்பேத்கர் பாரம்பரியம், அதிகாரம், இந்து மதம், ஜனநாயகம். எல்லாவற்றுக்கும் மேலாக மெய்யியியல் என்கிற பெயரில் நிகழ்த்தப்படும் நேர்மையற்ற, அபத்தமான சொற்பொழிவுகள் ஆகியவை குறித்த நம்முடைய பிரமைகளைக் கடுமையாகக் கேள்விக்கு உட்படுத்துகிறார். இப்பொழுது இருக்கும் சூழலில், தேசபக்தியை நீதியை விட முக்கியத்துவப்படுத்துவது குறித்த அவரின் அவநம்பிக்கை மிகுந்த குரலுக்குச் செவிமடுத்து அவசியமாகிறது. ‘தேசியம் என்பது ஒன்றும் புனிதமானது அல்ல. அது கேள்விகளுக்கு அப்பாற்பட்ட கொள்கையும் அல்ல. ஆகவே, மற்ற எதைவிடவும் அதிமுக்கியமான ஒன்றாக தேசியத்தை மட்டும் தேர்ந்தெடுத்து கட்டாயப்படுத்தி ஏற்க வைப்பது ஏற்புடைய ஒன்று அல்ல.’

அவரின் சிந்தனைகளின் மையத்தில் பெரும் சோகத்தை ஊற்றெடுக்க வைக்கும் ஒரு கேள்வி எழுகிறது: மற்ற எவரைவிடவும் மனிதர்களின் கயமைகளை, அடக்குமுறைகளை அனுபவித்த ஒருவர் எப்படி நம்பிக்கையைக் கைவிடாதவராக இருந்தார்? எந்தப் புற ஊன்றுகோல்களையும் அவர் நம்பவில்லை, வரலாற்றின் இயங்கியலிலோ, மெய்யியலின் நிம்மதியிலோ, மதத்தின் ஆறுதல்களிலோ, போலி அறிவியலின் நிச்சயத் தன்மைகளிலோ அவர் பல நூறு ஆண்டுகாலத் துயரங்களில் இருந்து தப்பிக்கும் நம்பிக்கை இருப்பதாக நம்பாதது அவரின் அழியா தீரத்துக்குச் சான்றாகும். ஒரு பண்பில் அவர் காந்தியைப் போலவே தோன்றுகிறார்: நம்முடைய மனசாட்சியின் அறிவார்ந்த குரலை விடச் சமூகச் செயல்பாட்டிற்குச் சிறந்த அடித்தளம் எதுவும் இல்லை.

அவரின் கூர்மையான இன்னுமொரு கட்டுரையான ‘ரானடே, காந்தி, ஜின்னாவில்’ அவர் இப்படி அழுத்தமாக எழுதினார்:

உரிமைகள் சட்டங்களால் பாதுகாக்கப்படுவது இல்லை, அது சமுதாயத்தின் சமூக மனசாட்சி, அற மனசாட்சி ஆகியவற்றின் மூலமே காக்கப்படுகிறது என்று அனுபவம் நிரூபிக்கிறது. சட்டம் எந்த உரிமைகளைக் காக்க சட்டம் இயற்றப்படுகிறதோ,
அவற்றைச் சமூக மனசாட்சி அங்கீகரிக்கத் தயாராக இருந்தால் உரிமைகள் பாதுகாப்பாக, பத்திரமாக இருக்கும். அடிப்படை உரிமைகளைச் சமூகம் எதிர்க்கும் என்றால் எந்தச் சட்டமும், நாடாளுமன்றமும், நீதித்துறையும் உண்மையில் அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்த முடியாது. அமெரிக்காவில் நீக்ரோக்களுக்கும், ஜெர்மனியில் யூதர்களுக்கும், இந்தியாவில் தீண்டபப்டாத மக்களுக்கும் அடிப்படை உரிமைகளால் என்ன பயன்? பர்க் சொல்வதைப்போலப் பெரும் கூட்டத்தைத் தண்டிக்க எந்த முறையும் கண்டுபிடிக்கப்படவில்லை. சட்டமானது ஒரு தனித்த, ஒற்றை அடங்கமறுக்கிற குற்றவாளியை தண்டிக்க இயலும். சட்டத்தை ஏற்க மறுக்கிற பெரும் கூட்டத்தைச் சட்டம் ஒன்றும் செய்ய முடியாது.

கோல்ரிட்ஜ் குறிப்பிடும் சமூக மனசாட்சி தான் ஆன்மாவின் அமைதியான, களங்கப்படுத்த முடியாத நெறியாளர். அந்தச் சமூக மனசாட்சி தான் , “அடிப்படை உரிமைகள், பிற உரிமைகளின் பாதுகாவலன், அது இல்லாமல் மற்ற எல்லா அதிகாரங்களும் கடும் எதிர்ப்பையே சந்திக்கும்.”இது பெரும் நம்பிக்கை தருகிற அல்லது பெருமளவில் அவநம்பிக்கை தரும் சிந்தனையாக உங்களின் பார்வைக்கு ஏற்ப அமையும். நம்முடைய மனசாட்சியைத் தவிர வேறு எந்தத் தீர்வுகளும் இல்லை என்பது நம்மை எதிர்ப்பேச்சு பேச முடியாதவர்களாக மாற்றும், குறிப்பாக, அம்பேத்கருக்கு போலியான நம்பிக்கைகளால் மனசாட்சி பல சமயங்களில் மரித்துப் போகிறது என்பது புரிந்திருந்தது. அம்பேத்கருக்கு பெரும் அரசியல் செல்வாக்கு அவர் காலத்தில் இல்லை. அரசியல் வெற்றியின் மரபார்ந்த அளவுகோல்களின்படி அவர் அரசியலில் பெரும் தாக்கத்தை உண்டு செய்தவர் இல்லை. “நான் உருகாத பாறை போன்றவன். பாய்ந்து வரும் நதிகளின் போக்கை திசைதிருப்பும் வல்லமை மிக்கவன்.” என்று அம்பேத்கர் தன்னைப்பற்றி ஒரு சமயம் எழுதினார். நிச்சயமாக ஒட்டுமொத்த பண்பாட்டின் பயணத்தை நீதி நோக்கி அவர் திசை திருப்பினார். அதனால் ஏற்பட்ட போராட்டங்கள், அதிர்வுகள் இன்னமும் முழுமையாக உணரப்படவில்லை. அவை விடுதலைக்கான போராட்டங்களால், வன்முறை மிகுந்த எதிர்ப்புகளோடு இந்திய சமூகத்தில் வெளிப்பட்டுக் கொண்டு இருக்கிறது. அண்ணல் அம்பேத்கர் அனைவருக்குமான சிந்தனையாளர் இல்லை. அவரை நம்முடையவர் என்று உரிமை கொண்டாட நாம் போதுமானதை செய்யவில்லை. ஒரு வகையில் நம் அனைவருக்குமான சிந்தனையாளர் அவர்- நம் அனைவரையும் நிரந்தரமாக எச்சரிக்கும் எம்மான் அவர்.

(முடிந்தது)

தமிழில்: பூ கொ சரவணன்

அம்பேத்கர் – கடவுள்களை அழித்து ஒழித்தவர் – 4


அம்பேத்கர்-கடவுள்களை அழித்து ஒழித்தவர் – 4 – பேராசிரியர். பிரதாப் பானு மேத்தா

இப்படிப்பட்ட அம்பேத்கரின் அறிவு புகட்டலுக்குப் பின்னால் எப்படிப்பட்ட அறிவு சார்ந்த வாழ்க்கையை ஒரு தேசம் கட்டமைக்கும்? எந்த வகையான மீட்டெடுப்பு, நீதி நோக்கிய செயல்திட்டத்துக்கும் மையம் பிராமணியத்தை அழித்தொழிப்பதே என்பதில் அம்பேத்கர் மிகத்தெளிவாக இருந்தார். அம்பேத்கர் புத்த மதத்துக்கு மாறினாலும், மரபு என்பது என்ன என்கிற கேள்வி மனவேதனை தருகிற ஒன்றாகவே இன்றுவரை இருக்கிறது. ஒரு வகையில் அம்பேத்கரை புரிந்து கொள்ள அவர் ‘காந்தியும், காங்கிரசும் தீண்டப்படாதோருக்கு செய்தது என்ன?’ நூலில் செய்திருக்கும் உணர்ச்சி ததும்பும், நெகிழவைக்கும் சமர்ப்பணத்தைக் காண வேண்டும். உணர்ச்சிவசப்படாதவராக எப்பொழுதும் தன்னுடைய எழுத்துக்களில் வெளிப்படும் அம்பேத்கர் இந்தக் கணத்தில் உணர்ச்சிமயமாகிறார். தன்னுடைய குழந்தைகளின் மரணத்தைப் பற்றி எழுதுகையில் உணர்ச்சிகள் மிகுந்தவராக அம்பேத்கர் வெளிப்படுகிறார். ‘நம் குழந்தைகளின் மரணத்தோடு நம் வாழ்க்கையின் சாரமும், சுவையும் முடிந்து போகிறது’ விவிலியம் சொல்வதைப் போல,’“பூமிக்கு நீங்கள் உப்பாக இருக்கிறீர்கள். தன் சுவையை உப்பு இழந்தால் மீண்டும் அதை உப்பாக மாற்றவோ, வேறு எதற்கும் பயன்படுத்தவோ முடியாது. அது தெருவில் எறியப்பட்டு மக்களால் மிதிக்கப்படும்.”‘. என்று குழந்தைகளின் மரணத்தின் பொழுது எழுதுகிறார். தன்னுடைய நூலை ‘F’ என்று அவர் விளிக்கும் நபருக்கு சமர்ப்பிக்கிறார். அந்தச் சமர்ப்பணம் விவிலியத்தின் ரூத் புத்தகத்தில் ரூத்தும், நகோமியும் மேற்கொள்ளும் உரையாடலுடன் துவங்குகிறது. அந்தச் சமர்ப்பணம் ‘நீர் மரிக்கும் இடத்திலேயே நானும் மரிப்பேன். அதே இடத்தில்தான் நான் அடக்கம் பண்ணப்பட வேண்டும். நான் இந்த வாக்குறுதியைக் காப்பாற்றாவிட்டால் என்னைத் தண்டிக்கும்படி கர்த்தரிடம் கேட்டுக்கொள்வேன்: மரணம் ஒன்றுதான் நம்மைப் பிரிக்கும்’ எனும் வாசகத்துடன் முடிகிறது. அதற்குப்பின்னர் அம்பேத்கர் எழுதுகிற பத்தியை முழுமையை மேற்கோள் காட்டுவது சரியாக இருக்கும்:

நாம் இருவரும் இணைந்து விவிலியத்தை வாசிக்கும் போது , இந்தப் பத்தியின் இனிமை, சோகரசம் ஆகியவற்றால் நாம் உருகுவோம். நாம் இருவரும் ரூத்தின் ‘உம் ஜனங்களே என் ஜனங்கள். உம்முடைய தேவனே என் தேவன்.’ எனும் கூற்றைப் பற்றி நாம் விவாதித்துக் கொண்டோம். அப்போது நாம் இருவரும் அதன் சாரம் எது என்பதில் முரண்பட்டது இன்னமும் எனக்குப் பசுமையாக நினைவில் இருக்கிறது. ஒரு முழுமையான மனைவிக்குப் பொருத்தமான உண்மையான உணர்வுகளை அது வெளிப்படுத்துகிறது என்று நீ வலியுறுத்தினாய். அந்தப் பத்தியானது உண்மையில் சமூகவியல் மதிப்பு கொண்டுள்ளது எனவும், அதன் உண்மையான அர்த்தம் பேராசிரியர் ஸ்மித் வாதிடுவதைப் போல நவீன சமூகத்தைப் பழங்காலச் சமூகத்திடம் இருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது என்கிற கருத்தை நான் முன்வைத்தேன். ரூத்தின் கூற்றான, ‘பழங்காலச் சமூகமானது தன்னுடைய மேலாதிக்கம் மிகுந்த பண்புநலனான மனிதனும், இறைவனும் இணைந்தவர்கள் என்பதாக அறியப்பட்டது, திகழ்ந்தது. நவீனகாலச் சமூகமோ மனிதர்களின் சமூகமாக மட்டும் உள்ளது. (மனிதர் என்பதில் பெண்களையும் இணைத்தே நான் பேசுகிறேன் என்று நீ உணர்வாய் எனப் பிரார்த்திக்கிறேன்.) என்னுடைய கருத்து உனக்கு ஏற்புடையதாக இருக்கவில்லை. எனினும், இந்தத் தலைப்பினில் நான் ஒரு நூலை ந எழுத வேண்டும் என்று நீ ஆர்வத்தோடு உற்சாகப்படுத்தினாய். நான் நிச்சயம் எழுதுவதாக வாக்களித்தேன். ஒரு கீழை தேசத்தைச் சேர்ந்தவனாக என் சமூகம் இன்னமும் பழங்காலச் சமூகமாகவே உள்ளது, இதில் மனிதர்களைப் பற்றிய அக்கறையை விடக் கடவுள்கள் பற்றிய கவலையே முக்கியமாக உள்ளது. இப்பொழுதைய சூழலில் அந்த உரையாடலின் மிக முக்கியமான நினைவாக உனக்கு அளித்த வாக்குறுதியே கண்முன் நிற்கிறது. அந்தப் புத்தகத்தை எழுதினால் அதை உனக்குச் சமர்ப்பிப்பதாக வாக்குறுதி தந்திருந்தேன். பேராசிரியர் ஸ்மித்தின் விளக்கம் எனக்குப் புதிய திறப்புகளைத் தந்தது, அந்த நூலை எப்படியேனும் எழுதிவிட வேண்டும் என்று நான் அளவில்லாத நம்பிக்கை கொண்டிருந்தேன். அந்த ஆய்வுப்பொருளில் இப்பொழுது ஒரு புத்தகம் எழுதுவதற்கான வாய்ப்புகள் வெகு குறைவு. அரசியலின் சுழலில் மாற்றிக்கொண்ட என்னால் இலக்கியத் தேடல்களை மேற்கொள்ள முடியாது என நீ அறிவாய். இந்தச் சுழலை விட்டு எப்பொழுது நான் வெளியேறுவேன் என்று எனக்குத் தெரியவில்லை. உலகப்போர் துவங்கியதில் இருந்தே உனக்குத் தந்த வாக்கை காப்பாற்ற முடியவில்லையே என்கிற நினைவு என்னைத் தொடர்ந்து வாட்டி வதைத்தது. இந்தப் போரில் நீ இறந்து போகலாம் என்கிற நினைப்பே என்னை அதற்கு இணையாக உருக்குலைத்தது. மரணத்தின் பிடியிலிருந்து நீ தப்பி விட்டாய். இதோ உனக்கு அர்ப்பணிக்க ஒரு புத்தகம். இந்த இரு நிகழ்வுகளும் சங்கமிப்பதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. அந்த நூலை எழுத வேண்டும் என்கிற திட்டத்தைக் காலத்துக்கும் தள்ளிப்போடுவதை விட நான் வெற்றிகரமாக எழுதி முடித்த புத்தகத்தை உனக்குச் சமர்ப்பிப்பதன் மூலம் என் வாக்கை நான் காப்பாற்றி விட்டேன். இந்தப் புத்தகத்தின் ஆய்வுப்பொருள் வேறு என்றாலும் இது அதற்கு மகத்தான மாற்று தான். இந்தச் சமர்ப்பணத்தை நீ ஏற்றுக்கொள்வாயா?’

இந்தச் சமர்ப்பணத்தில் தாங்கமுடியாத அளவு கனிவும், பொறுப்புணர்ச்சியும் நிறைந்து நமக்குள் ஆழமான ஆர்வத்தை ஏற்படுத்துகிறது. அம்பேத்கரை எப்படி நாம் கண்டுகொள்ளாமல் இருக்கிறோம் என்பதற்கு ‘F’ என்று அம்பேத்கர் குறிக்கும் நபர் குறித்து நமக்குக் கிட்டத்தட்ட ஒன்றுமே தெரியாது என்பது சாட்சியாக நிற்கிறது. அந்தப் பெண்ணை அம்பேத்கர் குறித்த தனஞ்செய் கீரின் நூல் அம்பேத்கரின் ‘விவிலிய ஆசிரியை’ என்று விவரிக்கிறது. எனினும், இன்னும் தத்துவார்த்தமாகப் பார்த்தால் அம்பேத்கர் தன்னுடைய தர்க்கத்தின் அம்புகளைத் தொடுக்கிறார். நவீன உலகுக்கும், பழங்காலத்து உலகுக்கும் இடையே உள்ளே பெரும் வேறுபாடாக மனிதனை மையப்படுத்தல் இருக்கிறது. நம்மை அப்படியே உறையவைக்கும் வாக்கியமாக, ‘என் சமூகம் இன்னமும் பழங்காலச் சமூகமாகவே உள்ளது, இதில் மனிதர்களைப் பற்றிய அக்கறையை விடக் கடவுள்கள் பற்றிய கவலையே முக்கியமாக உள்ளது.’ உள்ளது. அது ஆறாத துன்பத்தோடு அவரின் நிலையை வெளிப்படுத்துகிறது. மனிதனை விட வேறொன்று மேலானது என்பது மனிதத்துக்கான சாவுமணி. இந்த அவலமான நிலையை நாம் வென்றெடுக்க வேண்டும். அண்ணல் அம்பேத்கர் எல்லாக் கடவுள்களையும் அழித்து ஒழிக்கக் களம் கண்டார்.

gadhi_ambedkar_20120820.jpg
அம்பேத்கர் புத்த மதத்தைத் தழுவியதை இந்தப் பின்னணியிலேயே காண வேண்டும். மனிதத்தை உண்மைக்கான தேடலின் மையமாக, அளவுகோலாக மாற்றும் அவரின் தேடல் தீவிரமாகத் தொடர்ந்துகொண்டே இருந்தது. கடவுளை அழித்து ஒழிப்பதோடு மட்டுமல்லாமல், கண்ணுக்கு புலப்படாதவற்றைத் தேடிச்செல்லும் எல்லா வகையான தேடலையும் மாய்த்துவிட முயலும் அளவுக்கு அந்தத் தேடல் தீவிரமானதாக இருந்தது. அம்பேத்கரின் பல்வேறு தேவைகளுக்குப் புத்த மதம் பயன்பட்டது.எந்த அறரீதியான, வரலாற்று ரீதியான மோதலை சுற்றி இந்திய வரலாறு கட்டமைக்கப்பட்டது அதன்மைய அச்சாகப் புத்த மதம் இருந்தது. Iபுத்தம் பிராமணியத்தின் கயமைகளைத் தோலுரித்துக் காண்பித்த மாற்று மரபாக இருந்தது. அது பிராமணியத்தால் அடக்கப்பட்டது. சமூக எதிர்ப்பின் ஒரு நடைமுறை செயல்பாடாகப் புத்த மதத்துக்கு மாறுவது அமைந்தது. புத்த மதத்தில் விடுதலை,சமத்துவம், சமூக இணக்கம் ஆகியவற்றை ஒன்றைந்து ஒரு புரட்சிகரமான சமூக அறமாக அதை மறு உருவாக்கம் செய்ய முனைந்தார். புத்த சங்கத்தில் இணக்கமாகக் கூட்டுறவோடு பல்வேறு மக்கள் ஒன்றிணைந்து இயங்கினார்கள். அதனால் புத்த மதத்தின் சங்கம் ஜனநாயக அமைப்புக்கான மாதிரியாகத் தோன்றியது. அறிஞர்கள் அம்பேத்கர் புத்த மதத்தைக் காரணக் காரியங்கள், கர்மா, சுயம் ஆகிய மெய்யியல் சார்ந்த கேள்விகள் அற்றதாகக் கட்டமைக்க முயன்றார் என்கிறார்கள். அம்பேத்கரின் புத்த மதம் சார்ந்த அணுகுமுறைக்கும், பிறரின் அணுகுமுறைக்கும் இருந்த மலையளவு வேறுபாட்டை உணர்ந்து கொள்ளப் பொதுவுடைமைத் தலைவரான ஆச்சார்ய நரேந்திர தேவ் ஐநூறு பக்கங்களில் எழுதிய மகத்தான நூலான ‘பவுத்ததர்ம இதிஹாஸ்’ நூலை அதே காலத்தில் எழுதப்பட்ட அம்பேத்கரின் ‘புத்தரும், தம்மமும்’ நூலோடு ஒப்பிட்டு பார்த்தால் போதுமானது. புத்த மதத்தின் மெய்யியல் சார்ந்த கேள்விகளில் அம்பேத்கருக்கு சற்றும் ஆர்வமில்லை. இன்னொரு புறம், நரேந்திர தேவ் பொதுவுடைமை சித்தாந்த பார்வை கொண்டவர் என்றாலும் புத்த மதத்தின் சமூக அறத்தேவையை அவர் சற்றும் கருத்தில் கொள்ளவில்லை. இந்த இரு வேறு நூல்களை எதிர்கொண்டு ஆய்கையில் இந்தியாவின் அறிவுலகத் துன்பியலை அது புரிய வைக்கிறது. மெய்யியல் சமூக அறம் இல்லாமல் இருக்கிறது; சமூக அறம் மெய்யியலை பெரும் ஐயத்தோடு அணுகுகிறது. இருதரப்பும் எப்பொழுதும் உரையாடல் மேற்கொள்ளவே முடியாது என்றாகி விட்டது. இந்தியாவின் ஞான மரபின் தீர்க்க முடியாத உள்முரண்பாட்டின் அடையாளமாக மெய்யியலின் பக்தியானது, ஆழமான சந்தேகம் மிகுந்த தேடலோடு பின்னிப்பிணைந்து உள்ளது. ஒருவர் சமூக அறத்தை கைக்கொள்ளவோ , அல்லது போலியான மெய்யியலுக்கு அடிமைப்பட்டோ இருக்க முடியும். இரண்டையும் ஒருங்கே உடையவராக இருக்க முடியாது என்று புத்த மதத்துக்கு மாறியதன் மூலம் அம்பேத்கர் அறிவித்தார். மதமாற்றம் மனிதத்தை மீட்கும் பெருஞ்செயலாகும்.

அம்பேத்கர் பெரும்பாலும் புத்த மதத்தைச் சமூக அறமாகவே கண்டார். புத்த சங்கங்களின் அமைப்புமுறையோடு அவர் தன்னுடைய கொள்கையான சகோதரத்துவதைக் கொண்டு போய் இணைத்தார். இது வெறும் விபத்தில்லை. புத்தர் பிராமணியத்தின் சடங்குகளை நிர்மூலம் ஆக்கினார், அம்பேத்கர் புத்த மதத்தை மெய்யியலின் எந்தத் தடயமும் இல்லாத ஒன்றாக மாற்ற முயன்றார். மெய்யியல் சார்ந்த தேடல்களில் மனிதன் எதோ ஒரு பெரிய ஆற்றலின் விளைவாக, நுண்பொருளை தேடுபவனாக மாறிவிடுவதைத் தவிர்க்க அம்பேத்கர் முனைந்தார். அவர் மீண்டும், மீண்டும் மந்திர தாயத்தைப் போலத் தன்னுடைய வழிகாட்டும் ஒளிவிளக்காகச் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை வலியுறுத்துவது ஆச்சரியமில்லை. அவர் இன்னமும் குறிப்பாகச் சகோதரத்துவதை உண்மையோடு ஒப்பிட்டார். ‘உண்மையும் சகோதரத்துவமும் ஒன்றே’ என்றார். எல்லாவகையான தேடல்களுக்கும் ஒரு மையப்புள்ளி உண்டு அது சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம். இந்த மதத்தை மட்டுமே அம்பேத்கர் ஏற்றுக்கொள்வார்.

(தொடரும்)

தமிழில்: பூ கொ சரவணன்

அம்பேத்கர் – கடவுள்களை அழித்து ஒழித்தவர் – 3


பேராசிரியர் பிரதாப் பானு மேத்தா இந்தியாவின் முதன்மையான அரசியல் அறிவியல் அறிஞர்களில் ஒருவர். ப்ரின்ஸ்டனில் முனைவர் பட்டம் பெற்ற அவர் ஹார்வர்ட், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகங்களில் பேராசிரியராக பணியாற்றினார். தற்போது Centre For Policy Research மையத்தின் தலைவராக உள்ளார். ஆழமான பார்வைகளுக்கும், கூர்மையான கருத்துக்களுக்கும் பெயர் பெற்ற அவரின் ‘Ambedkar-Slayer of All Gods’ கட்டுரையின் 3)வது பகுதி இது:

18056994_1476284712402600_519730714716659236_n.jpg
அம்பேத்கர் நமக்கு இன்னமும் ஆழமான சங்கடத்தைத் தந்துகொண்டிருக்கிறார். அதற்கான காரணம் தற்காலத்தில் இந்தியாவின் ஆன்மாவுக்கான போராட்டத்ன் மையமாகத் திகழும் அம்பேத்கரின் சில கருத்துக்கள் ஆகும். ஒன்று இந்து சமூகம் என்பதன் கட்டமைப்பின் மையமாக வன்முறையே உள்ளது என்பது ஆகும். வன்முறை என்பது வழக்கத்துக்கு மாறாக நிகழ்கிற ஒன்றல்ல. இந்து சமூகத்தின் மேற்புறத்தில் மிதக்கும் குப்பைக் கூளமல்ல வன்முறை. அந்தக் குப்பையைச் சுத்தப்படுத்தினால் இந்து சமூகத்தின் தெளிவான, சுத்தமான நீர்நிலை தென்படும் என்பது புரட்டு. வன்முறையே இந்து சமூகத்தின் அடையாளம், அதன் இயங்குசக்தி. அம்பேத்கரை பொறுத்தவரை நீதியை அடைய இந்து மதத்தின் மீது கிட்டத்தட்ட ஒரு போரை அறிவிப்பதே வழி என்று அவர் கருதியதைப் பூசிமெழுக முடியாது. காந்திக்கு எழுதிய பதிலில் அம்பேத்கர் இப்படி எழுதினார்: ‘ நான் மகாத்மாவிடம் உறுதியாக ஒன்றை சொல்ல விரும்புகிறேன். இந்துக்கள், இந்து மதம் மீது நான் அருவருப்பு, அவமதிப்பு மிகுந்த உணர்வுகளை வெளிப்படுத்துவது அவர்களின் தோல்வியால் மட்டும் அல்ல. இந்துக்கள், இந்து மதம் மீது நான் அருவருப்புக் கொள்ளக் காரணம் அவர்கள் தவறான லட்சியங்களைக் கொண்டவர்களாக, மோசமான சமூக வாழ்வை மேற்கொள்வதாக உளமார உணர்ந்துகொண்டேன். இந்து மதம், இந்துக்களுடனான எனது பிரச்சினை என்பதுஅவர்களின் சமூக நடத்தையில் உள்ள குறைபாடுகள் பற்றியதல்ல. அது மேலும் அடிப்படையானது. அது இந்துக்கள், இந்து மதத்தின் ஆதர்சங்களைப் பற்றியது.’

இப்படிப்பட்ட திட்டவட்டமான அறிவிப்பு அம்பேத்கரைத் தற்காலப் போராட்டங்கள் பலவற்றுக்கும் மிகவும் மையமாக ஆக்குகிறது. நீதியை வென்று எடுப்பதற்கான இயக்கம் என்பது ஒரு பாரம்பரியத்தைச் சீர்திருத்துவதும் அதன் ஆதர்சங்களுக்கு நேர்மையாக அதனை நடந்துகொள்ள வைப்பதும் அல்ல. நீதியை அடைவதற்கு ஒரு பாரம்பரியத்தை ஒட்டுமொத்தமாக அழித்தொழிக்க வேண்டியிருக்கிறது. இந்திய கல்விக்கூடங்களில் ஒரு புதிய தலித் விழிப்புணர்வு ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது. இது சமகால இந்தியாவின் மிகப்பெரிய கலாச்சாரப் பிளவாக இருக்கப் போகிறது என்று கருதுகிறேன். அம்பேத்கர்-பெரியார் செயல்பாட்டாளர்களுக்கும்,ABVP -க்கும் இடையே உருவாகியிருக்கும் மோதலானது அடிநாதமாக ஓடிக்கொண்டிருக்கும் பிரச்சினையின் சிறு அறிகுறி மட்டுமே. அடையாள அரசியல் சார்ந்து ஏன் கல்விக்கூடங்களில் மாணவர் அரசியல் தீவிரமடைகிறது என்பதை இந்தப் பின்னணியில் புரிந்துகொள்ள வேண்டும். அம்பேத்கர் தன்னுடைய விமர்சனத்தில் தாக்க முனைந்தது உலகத்திலேயே மிகவும் ஆச்சரியப்படுத்துவதும், சிறைப்படுத்துவதுமான தத்துவ அமைப்பான பிராமணியமே ஆகும். பிராமணியம் அல்லாத இந்து கருத்தியல் முறைகளையும் அது பெரும் தீமையாய்ப் பற்றிக்கொண்டதால் பிராமணியத்தை அக்குவேறு ஆணிவேராகக் கழற்றி எறியாமல் நீதி என்பது சாத்தியமில்லாத ஒன்றாக இந்து மதம் இருக்கிறது.

main-qimg-377022f438193bb396dabe5a16298cee-c.jpg

அம்பேத்கரின் பெரும்பாலான படைப்புகளை மீண்டும் வாசிக்கையில் மிக முக்கியமான தேடல் ஒன்று புலப்படுகிறது: அது சாதி என்கிற கொடூரமான ஒடுக்குமுறை அமைப்பை எது உற்பத்தி செய்தது என்பதைப் புரிந்து கொள்ளும் ஓயாத முயற்சி. அம்பேத்கரின் பெரும்பாலான ஆய்வுக்கட்டுரைகள் அவற்றின் சமூகவியல் ஆழம், வரலாற்று கூர்மையால் அசரடிக்கின்றன. ஆரியர் படையெடுப்பால் அடிமைப்படுத்துதல் ஏற்பட்டது எனும் கோட்பாட்டை அவர் நிராகரித்தார். சாதி அமைப்பு குறித்து இனத்தை அடிப்படையாகக் கொண்டு தரப்பட்ட எல்லா வகையான விளக்கங்களையும் அவர் நிராகரித்தார். சாதி என்பது தொழில்கள் சார்ந்து எழுந்தது என்பது போன்ற விளக்கங்களை அவர் கடுமையாகச் சாடினார். சாதி என்பது தொழில்கள் அடிப்படையிலான அமைப்புமுறை அல்ல, அது தொழிலாளர்களை அடுக்குமுறையில் வைத்து அடிமைப்படுத்தும் முறையாக இயங்கியது என்பதே இந்தக் கடுமைக்குக் காரணம். அம்பேத்கர் எனும் வரலாற்றாளர், இந்தியவியல் அறிஞரின் பலங்களுக்குள் போவது இந்தக் கட்டுரையின் இலக்கு அல்ல. அர்விந்த் ஷர்மாவின் ‘BR Ambedkar, on the Aryan invasion and the Emergence of the Caste System in India’ எனும் கட்டுரையின் கருத்துக்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை.

அம்பேத்கரின் ஆய்வுகளின் மூலம் இரு முக்கியமான கூறுகள் தெரிய வருகிறது. சாதி அமைப்பின் வினோதமான தன்மையைப் பொருளியல், தொழில்முறை சார்ந்த விளக்கங்களால் விளக்க முடியாது. சாதியமைப்பின் அடிப்படை பிராமணர்களால் அதிகாரத்தின் செயல்பாடாகத் திணிக்கப்பட்ட கொடூரமான தொடர் பிரதிநிதித்துவப்படுத்தல்களால் ஆனது. தீண்டப்படாத மக்களின் முன்னேற்றத்துக்கான வழிகளான அதிகாரம், பொருளாதார வளம், கல்வி ஆகிய மூன்றும் அவர்களுக்கு மறுக்கப்பட்டதன் மூலம் சாதியமைப்பு தொடர்ந்து உயிர்த்திருக்கிறது. சாதி அடுக்குமுறையில் உள்ள ஒவ்வொரு பிரிவினரும் தனக்குக் கீழுள்ள இன்னொரு பிரிவினரை ஒடுக்குவதன் மூலம் இன்பம் காணும் கொடூரமான அமைப்பு முறையாக அது திகழ்கிறது. சாதியமைப்பு நிரந்தரமான பாகுபாட்டில் களிப்புக் கொள்கிறது. இதனால் தான் பிராமணியம் மீதான அறச்சீற்றம் அம்பேத்கரிடமிருந்து வெளிப்படுகிறது. எந்த வகையிலும் பிராமணியம் உருவாக்கிய அடுக்குமுறைக்கு நியாயம் கற்பிக்க முடியாது. அதிகாரத்தைத் தெளிவாக, எளிமையாகத் திணிக்கும் முறை அது. இந்த அதிகாரம் ஒரு குறிப்பிட்ட கருத்தாக்கத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது, இந்த ஒட்டுமொத்த கருத்தாக்கத்தை அடித்து நொறுக்கினால் மட்டுமே விடுதலை சாத்தியம்.

இதை நேருக்கு நேராக எதிர்கொள்வது இங்கே நிகழ்வதில்லை. இந்து மதத்தின் சாதி சார்ந்த எல்லா உரையாடல்களிலும் ஒரு வகையான மன்னிப்பு கோரும் தொனியோடு, ‘சாதி ஒரு காலத்தில் தொழில் சார்ந்து இருந்தது’ என்பார்கள். சாதி என்னவோ நியாயமான லட்சியத்தைக் கொண்டிருந்ததைப் போல, ‘சாதியின் இலட்சியங்களோடு அதன் சமூக யதார்த்தம் ஒத்துப்போகவில்லை’ என்று சப்பைக்கட்டு காட்டுவார்கள். சாதி என்பது நியாயப்படுத்த கூடிய கருத்தாக்கம் என்கிற ரீதியில் அவர்களின் உரையாடல் அமையும்.சாதி அமைப்பின் அருவருப்பு ஊட்டுகிற செயல்பாட்டை, ‘சாதி அமைப்பில் பொதுவாக நெகிழ்வுத்தன்மையும், இயக்கமும் இருந்தது’ என்று சொல்லி சீர்கட்ட முயல்வார்கள். ‘சாதி பண்புகளின் அடிப்படையிலானது, பிறப்பின் அடிப்படையிலானது இல்லை.’என்பர். இறுதியாக, சாதியை ஓரளவுக்கு நியாயப்படுத்துவது கூட மிக மோசமான ஒரு சமூக அமைப்பின் கொடூரத்தை உணரவிடாமல் தடுக்க முயலும் கபடநாடகமே ஆகும்.

இன்னமும் மோசமாகச் சாதியமைப்பை நியாயப்படுத்துபவர்கள் இந்து மதம் சமத்துவத்தை உறுதி செய்கிறது என்பர். மெய்யியல் கருத்தாக்கமான இந்தச் சமத்துவம் எப்பொழுதும் தன்னை ஒடுக்குமுறை நிறைந்த சமூக அமைப்போடு சாமர்த்தியமாக இணைத்துக் கொள்ளும். அம்பேத்கரை பொறுத்தவரை வர்ணாசிரமத்துக்கான அடிப்படையை வழங்கும் புருஷ சுக்தா பிற்காலத்தில் வேதத்தில் சேர்க்கப்பட்டது. எனினும், இப்படிப்பட்ட மெய்யியல் பகுப்புகளில் சமூகப் படிநிலை பின்னிப்பிணைந்தே இருக்கும். எவ்வளவு தான் வேதங்கள், கீதை முதலியவற்றை உருவகக் கதைகளாக மாற்றிப் பேசினாலும், இவை சமூகத்தின் சாதி அடுக்குக்குச் சேவகம் செய்வதையே பண்பாகக் கொண்டிருந்தன. இவை இரண்டையும் பிரித்துப் பார்க்க முயல்வது தவறான நம்பிக்கையின் அடிப்படையிலானது. இந்து மதத்துடன் அம்பேத்கர் மேற்கொண்ட உரையாடல் ஒரு சமூக அமைப்பு குறித்த விமர்சனம் மட்டுமல்ல, சாதி அமைப்பு எந்த அறிவுத்தளத்தின் மீது எழுப்பப்பட்டு உள்ளதோ அதை முழுவதும் நிர்மூலமாக்க முயலும் விமர்சனம் ஆகும்.

A42-14238.jpg
இந்தியாவின் ஞான மரபின் இருப்புக்கான பேராபத்து மேற்கின் அங்கீகார மறுப்பில் இல்லை. அதற்கு மாறாகச் சமூகத்தில் நிலவும் பாகுபாடு சார்ந்த கொந்தளிப்புகளில் உள்ளது. ஒரு ஞான மரபின் மையம் அடக்குமுறை, அடுக்குநிலை, பிளவுபட்ட சமூக அமைப்பால் கட்டமைக்கப்பட்டு இருக்கும் பொழுது எந்த முகத்தோடு, எந்த நன்னம்பிக்கையோடு அதனை நியாயப்படுத்துவீர்கள்? ஒரு மரபின் அறிவார்ந்த புரட்சிக்கருத்துக்கள் கூட இறுதியில் பழமைவாதத்தையே வெவ்வேறு வடிவங்களில் காக்கும் பொழுது அதை எப்படி ஒருவர் புரிந்து கொள்வது?

ஆன்மீகத்துக்கும், சமூகத்துக்கு இடையே உள்ள உறவு சார்ந்த அறிவுப்பூர்வமான விவாதத்தைச் செய்ய இது இடமில்லை. சமூகத்தை ஒட்டி மட்டும் தத்துவத்தைக் காணும் அம்பேத்கரின் வாசிப்பை நிச்சயம் விமர்சிக்கலாம். பண்டைய ஞானக் கட்டமைப்பின் அதிகாரம், அடுக்குமுறை ஆகியவை குறித்து யாரேனும் வெளிச்சத்தைப் பாய்ச்சினால் அவரைச் சந்தேகக் கண்ணோடு பார்ப்பது பொதுப்போக்கு. இதில் இருந்தே எவ்வளவு உணர்ச்சிவயப்படுபவர்களாக இருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாம். சமீபத்தில் இந்துத்வா இந்தியவியல் அறிஞர் ஷெல்டன் பொல்லாக்கை கடுமையாகச் சாடியது. அதற்குக் காரணம் அவர் மேற்கை சேர்ந்தவர் என்பதல்ல. ஷெல்டன் பொல்லாக் பண்டைய மரபுக்கும் , அதிகாரத்தின் அமைப்புகளுக்கும் இடையே உள்ள தொடர்பை அவர் இணைத்து வாசிக்கிறார் என்பதில் இருந்தே இந்தக் கடுமையான என்பதில் இருந்தே எழுந்தது. அதிகாரத்தை மரபைத் தீர்மானிக்கும் அளவுகோலாக மாற்றியது அம்பேத்கரின் மகத்தான சாதனை. அம்பேத்கர் எங்களுக்கு உரியவர் என்கிற போட்டியானது இந்து மதத்தை அவர் ஆட்படுத்திய அதிகாரத்தின் அறக் களங்கத்தில் இருந்து காப்பாற்றும் ஒரு முயற்சியே ஆகும். இந்த வகையில், இந்திய பண்பாட்டின் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களில் அம்பேத்கரின் விமர்சனமே மிகப் புரட்சிகரமானது.

அம்பேத்கர் நம்மை மேலும் மேலும் அதிர்ச்சியடைக்க வைக்கும் வகையில் இந்து அடையாளத்தின் அற, உளவியல் கூறுகளைத் தன்னுடைய விமர்சனங்களால் தோண்டி எடுக்கிறார். இந்து அடையாளத்தைக் கட்டமைப்பதில் பங்கு வகிக்கும் பல்வேறு அடுக்கு வன்முறை, எதிர்ப்பு ஆகியவற்றைத் தோலுரித்துக் காட்டுகிறார். அவரே சாதி அமைப்போடு தொடர்புடைய பாலின வன்முறை, மதவாதம் ஆகியவற்றைக் கேள்வி கேட்ட முதன்மையான சிந்தனையாளர். அவரின் ஆரம்பக் காலக் கட்டுரைகளில் அக மண முறையானது சாதியமைப்புக்கு மையம் மட்டுமல்ல. அதுவே பெண்களை, கைம்பெண்களை, மணமாகாத பெண் குழந்தைகளைக் கட்டுப்படுத்தி அதன்மூலம் சாதி அடையாளத்தைக் காக்க முயல்கிறது என அம்பேத்கர் வெளிப்படுத்தினார். அவர் எழுதுவதைப் போல, சாதியின் பிரச்சனை, ‘கூடுதலான ஆண்கள் கூட்டல் கூடுதலான பெண்கள்’ ஆகும். இந்த வகையில் பெண்களைக் கட்டுப்படுத்துவது சாதியின் மையமானது. அவரின் கருணையற்ற வாள் வீச்சாக மதவாதம் என்பது இந்து அடையாளத்தை உருவாக்குவதற்கான ஒரு வழிமுறையாகும் என்கிற வாதம் அமைந்தது. அவர் அதிர்ச்சி தரும் ஒரு உண்மையைப் புலப்படுத்துகிறார். ஒரு சாதியினர் மற்றொரு சாதியினரோடு இணைத்துத் தன்னை உணர்வதில்லை. ஒரு இந்து-முஸ்லீம் கலவரம் வரும் பொழுது தான் அவர்கள் ஒன்றாக உணர்கிறார்கள். தங்களுடைய உள்ளார்ந்த பாகுபாட்டைத் தாண்டி தங்களுடைய அடையாளத்தை நிலைப்படுத்த இந்துக்களுக்கு ஒரு எதிரி தேவைப்படுகிறார்.

இந்திய மரபின் மையமாக அகிம்சையை நிறுத்துவது நம்முடைய வன்முறையற்ற வரலாற்றின் விவரிப்பு அல்ல. அதற்கு மாறாக, வன்முறையே வரலாற்றின் மையமாக இருந்துள்ளது என்பதற்கான சாட்சி அது. சமூகவியல் அறிஞர் ஆர்லாண்டோ பாட்டர்சன் பண்டைய கிரேக்கத்தில் விடுதலை சார்ந்த முறையான உரையாடல் ஏற்படக் காரணம் என்று அந்தச் சமூகம் அடிமைமுறையால் கட்டமைக்கப்பட்டு இருந்ததைக் காரணம் காட்டுகிறார். விடுதலை போற்றப்பட்டதன் காரணம் சமூகத்தில் நிலவிய அடிமைத்தனத்தை மறுதலிக்கும் முயற்சியே ஆகும். சமூகத்தில் வன்முறை உள்ளார்ந்து நிறைந்திருந்ததன் அடையாளமே அகிம்சை சார்ந்த உரையாடல் காட்டுகிறது. பிராமணியம் புத்த மதத்தின் வன்முறை சார்ந்த விமர்சனத்தை உள்வாங்கியது என்றாலும் அதற்கு ஒரு அடையாளம் தேவைப்பட்டது. அம்பேத்கர் தீண்டாமையை மாட்டுக்கறியோடு தொடர்பு படுத்தினார். ஆதிக்க ஜாதியினர் தீண்டப்படாதோரிடம் வெளிப்படுத்தும் வினோதமான அருவருப்பை அவர்கள் மாட்டு இறைச்சி உண்பதன் மூலமே விளக்க முடியும். தீண்டப்படாதோர் மீது அவர்களுக்கு இருந்த ஆழ்ந்த வெறுப்பை விளக்க அம்பேத்கர் முயன்றார். அது வெறுமனே சமத்துவமின்மை, அடக்குமுறையோடு உள்ள உறவு அல்ல. அது தூய்மைவாதத்தைக் கைப்பற்றும் பணிக்கு உதவியது. இந்த வரலாறு தெரியாதவர்கள் தான் கல்விக்கூடங்களில் மாட்டு இறைச்சி சார்ந்து நிகழும் போராட்டங்களைப் புரிந்து கொள்ளத் தவறுவர்.

p19.gif

சுருக்கமாக, அம்பேத்கரின் செயல்பாடு எந்த ஒரு பண்பாட்டையும் பெரிய அளவில், மிகவும் தீரத்தோடு அறிவார்ந்த முறையில் தோலுரித்த முன்மாதிரி இல்லாத செயல்பாடு ஆகும். விழுமியங்களை மறுவாசிப்புச் செய்து அவற்றின் உண்மையான நோக்கங்களை அவர் புலப்படுத்தினார். அறம் என்றதற்குப் பின்னிருந்த அடக்குமுறைகளை அவர் கண்டெடுத்தார். அகிம்சையைக் கொண்டாடியதற்குப் பின்னால் பெரும் இம்சை இருந்ததாக அவர் சொன்னார். சடங்குகளுக்குப் பின்னால் பல்வேறு தடைகள் அடங்கியிருந்தன. அவற்றின் மூலம் யாரும் அதுவரை கண்டிராத மனித ஆளுமையின் மீதான மிக மோசமான சிதைப்பு மேற்கொள்ளப்பட்டது. பிரபஞ்ச அமைப்பு என்பது ஒன்று போன்ற நீண்ட பிரசாங்கங்களுக்குப் பின்னால் சமூகத்தின் ஆழமான பாகுபாடுகள் இருந்தன. பசுவின் மீது இருக்கும் அக்கறைக்குப் பின்னால் மாட்டு இறைச்சி உண்பவர்கள் மீதான ஆழமான வெறுப்பு ஒளிந்திருக்கிறது. பசுவிடம் காட்டப்படும் மிக மென்மையான போக்கு என்பது மற்றவர்களின் மீதான சித்திரவதையின் சுத்திகரிக்கப்பட்ட வடிவமே ஆகும். மனித உயிர்கள் பற்றி இரக்கமற்றவர்களாகப் பசுப் பாதுக்காப்பாளர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று எப்பொழுதேனும் ஆச்சரியப்பட்டிருப்பீர்கள் என்றால் அம்பேத்கரை வாசியுங்கள். அவரின் விமர்சனம் உங்களைக் கொட்டும். நம்முடைய கொள்கையில் இருந்து திசைமாறிவிட்டோம் என்று அவர் வாதிடவில்லை. இந்தக் கொள்கைகளுக்குப் பின்னால் வன்முறையும், சித்திரவதை செய்யும் பண்பும் நிறைந்து இருப்பதாக அதிரவைக்கிறார். இந்தியாவில் பிராமணியத்தின் ஆதிக்கத்தால் வால்டேர் போன்ற ஒரு சுதந்திரமான சிந்தனையாளரும் எழவில்லை என்று அவர் சாடினார். இருக்கிற சமூக அமைப்புக்குள் வேலை பார்க்கும் அரைகுறை சீர்திருத்தவாதிகளே நமக்கு வாய்த்தனர். யாருமே சாதியமைப்பின் அடிப்படையையே தீரத்தோடு கேள்விக்கு ஆட்படுத்தவில்லை.

அம்பேத்கரை தீவிரமாகக் கவனத்தில் எடுத்துக்கொள்வது அவரின் விமர்சனத்தைத் தீவிரமாகக் கவனத்தில் கொள்வதாகும். அம்பேத்கரை நோக்கிய எதிர்வினைகள் எதிர்ப்பாக இருந்தன: அரசமைப்பு சட்ட வரைவில் அவரை இணைத்துக்கொண்டதை தவிர்த்து அவரைத் திட்டமிட்டு ஓரம்கட்டவே முயன்றார்கள். அதற்கு அடுத்தக் கட்டம் தற்காப்புத் தொனியில் பேசுவது. நாம் தலித் உடல்களின் மீது நிகழ்த்தப்படும் வன்முறையை எவ்வளவு கீழ்மையாக வேண்டுமானாலும் நடந்து கொண்டு மறுதலிப்போம். அவர்கள் முன்னேறுவதற்கான வாய்ப்புகளை மறுப்போம். தற்காப்பு அரசியல் இனிமேலும் ஈடுபடுவது இல்லை என்கிற பொழுது அவரைக் கையகப்படுத்த முயல்வது. இந்து மதம் பற்றிய அவருடைய விமர்சனங்களை உள்வாங்கிக் கொண்டே ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் அம்பேத்கரின் பெயரை உச்சரிக்கிறார்கள் என்பதைக் கற்பனைக்குக் கூட நம்பும்படியாக இல்லை. அவரின் இந்து மதத்தின் புதிர்கள் நூல் தடை செய்யப்பட்டது. நம் அனைவர்க்கும் அம்பேத்கர் உரியவர் என்று நாடகம் நிகழ்த்துவதன் மூலம் நம்மைப்பற்றி அம்பேத்கர் சொல்லும் கடுமையான உண்மைகளை வசப்படுத்தவோ, மூடி மறைக்கவோ முயல்கிறோம். இந்து மதத்தை ஆதரிப்பவர்கள் அம்பேத்கரின் விமர்சனங்களில் உள்ள உண்மையை ஒப்புக்கொண்டு விடலாம். அது உண்மையில் நன்னம்பிக்கை அடிப்படையிலான செயலாக இருக்கும். தேசிய இயக்கம் தான் மரபை வெறுக்காமல் மரபைக் கடக்க முயன்ற போராட்டங்கள் மிகுந்த அறிவார்ந்த கடைசிச் செயல்திட்டமாகும். மரபை சீர்திருத்தி அதைப் பாதுகாக்க முடியும் என்று எண்ணினார்கள். அம்பேத்கர் இந்தச் செயல்திட்டத்திற்குள் வலிமைமிகுந்த தாக்குதலை மேற்கொண்டார்: ‘மதத்தை ஒழிப்பது அடிமை முறையை ஒழிப்பதற்கு அவசியமாகும்.மதத்தை மரபைப் பாதுகாப்பதன் மூலம் சீர்திருத்த முயலாதீர்கள்; அதனை அழிப்பதன் மூலம் விடுதலையைப் பெறலாம்.

(தொடரும்)

அம்பேத்கர் – கடவுள்களை அழித்து ஒழித்தவர் – 2


பேராசிரியர் பிரதாப் பானு மேத்தா இந்தியாவின் முதன்மையான அரசியல் அறிவியல் அறிஞர்களில் ஒருவர். ப்ரின்ஸ்டனில் முனைவர் பட்டம் பெற்ற அவர் ஹார்வர்ட், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகங்களில் பேராசிரியராக பணியாற்றினார். தற்போது Centre For Policy Research மையத்தின் தலைவராக உள்ளார். ஆழமான பார்வைகளுக்கும், கூர்மையான கருத்துக்களுக்கும் பெயர் பெற்ற அவரின் ‘Ambedkar-Slayer of All Gods’ கட்டுரையின் இரண்டாவது பகுதி இது:

அம்பேத்கர் – கடவுள்களை அழித்து ஒழித்தவர் – 1
அம்பேத்கர் பல்வேறு தளங்களில் உங்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துகிறார். அதிரவைக்கிறார். அவர் தலைமுறையின் எல்லாத் தலைவர்களில் அம்பேத்கருக்கு இருந்த தெளிவு ஒப்புமை இல்லாத புத்துணர்வோடு திகழ்கிறது. தரவுகள், தர்க்கம் ஆகியவற்றை அடுக்குவதில் மதிநுட்பம் மிகுந்தவராக, ஈடிணை இல்லாதவராக அவர் திகழ்கிறார். நேருவை போல அவர் தன்னுடைய வாதங்களில் எப்போதும் உணர்ச்சிவசப்படுபவராக இல்லை. அவரின் முனைவர் பட்ட ஆய்வுகளிலும் இது புலப்படுகிறது. அசரவைக்கும் அளவுக்குப் பொருளாதார ஆய்வுகள் மேற்கொண்ட அவர், சட்டம் ஆக்குபவராகப் பம்பாய் சட்டசபையிலும், அரசியல் நிர்ணய சபையிலும் செயல்பட்ட அம்பேத்கர் அங்கேயும் இப்படிப்பட்ட பிரமிக்க வைக்கும் அறிவுபூர்வமான வாதங்களை முன்வைத்தார். அவரின் புலமை, பேரறிவு, அடுக்கும் மேற்கோள்கள் ஒப்பிட முடியாதவை. அவரின் ஓயாத தர்க்கம், முழுமையான தெளிவுக்கு ‘Thoughts on Pakistan’ நூலை வாசித்துப் பாருங்கள். இன்று வரை பாகிஸ்தான் குறித்த மிக மிகத் தெளிவான, சமரசங்கள் செய்து கொள்ளாத பார்வையை அந்நூல் வாரி வழங்குகிறது. இந்த நூலின் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளை, தங்களுக்கு வசதியாக உள்ளவற்றை மட்டும் இந்துத்துவர்கள், பாகிஸ்தான் ஆதரவாளர்கள் மேற்கோள் காட்டுவது வழக்கமாக உள்ளது. எனினும், அந்நூல் இரு தரப்பின் தர்க்கத்திலும் உள்ள கோளாறுகள், அபத்தங்களை அம்பலப்படுத்துகிறது. நம்முடைய போலித்தனங்களை அம்பேத்கர் தொடர்ந்து புலப்படுத்திக் கொண்டே இருப்பதால் அவர் அசௌகரியம் ஏற்படுத்துபவராக உள்ளார். அவர் எப்போதும் அநீதியின் உண்மை முகத்தை நமக்கு நினைவுறுத்தியபடியே இருந்தார் என்ற மேலோட்டமான அர்த்தத்தில் நான் சொல்லவில்லை. நாம் பின்பற்றும் எந்தச் சித்தாந்தத்தையும் எடுத்துக்கொண்டு, அதனை எப்படி நாம் முழுமையாகப் பின்பற்றுவதில்லை என்று புலப்படுத்தி நம்மைச் சங்கடப்பட வைக்கிறார் என்பதே நான் சொல்வதன் அர்த்தம்.

Ambedkar-and-his-followers-saw-Gandhi-as-their-Enemy.jpg

> அம்பேத்கர் காந்தி மீது வைக்கும் மிக முக்கியமான குற்றச்சாட்டு அவர் தலித்துகளுக்கு நியாயம் செய்யத் தவறிவிட்டார் என்பது மட்டுமல்ல. அம்பேத்கரின் பார்வையில் தலித்துகளின் கோரிக்கைகளை மழுங்கடிக்கும் அறமற்ற செயல்களுக்குத் துணை போகும் கருவியாக அகிம்சையைக் காந்தி பயன்படுத்தினார். ஆழமாக நோக்கினால் அகிம்சையின் கொள்கைக்குக் காந்தி நியாயம் செய்யத் தவறிவிட்டார். காந்தியின் செயல்பாட்டு முறைகளின் மையமாக நம்பமுடியாத உளவியல் ரீதியான கட்டாயப்படுத்தல் இருந்தது. இந்தக் கட்டாயப்படுத்துதல் என்பது கணிசமாக உள்முகம்நோக்கி, ஒருவரின் ஆன்மாவை நோக்கித் திருப்பப்படுவது என்று சொல்லும் அதீத தைரியமும் காந்திக்கு இருந்தது. இந்தக் குற்றச்சாட்டில் கொஞ்சம் உண்மை உண்டு என்று காந்தி நிச்சயம் ஒத்துக்கொண்டிருப்பார். அரசமைப்புக் கலாச்சாரத்தில் சத்தியாகிரகம் என்பது ஒருவர் தான் உண்மை என்று நம்புவதன் மீது சுயமோகம் கொண்டு, சமூகத்தின் பல்வேறு கருத்துநிலைகளை அங்கீகரிக்க மறுக்கும் வன்முறை என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய குற்றச்சாட்டாகும். அநீதி ஏற்படும்போது அரசமைப்பு சட்ட முறைகளில் நம்பிக்கை கொண்டு செயல்பட வேண்டும் என்கிற அம்பேத்கரின் எண்ணம், காந்தியின் அகிம்சை என்ற கருத்தாக்கத்துக்கு இணையாகப் புரட்சிகரமாகக் கருதப்பட வேண்டியது. மிக ஆழமான அடக்குமுறையைத் துப்புரவாகத் துடைத்து எறியும் வன்முறையின் மூலம் எதிர்கொள்ளலாம் என்று அறைகூவல் விடுக்காமல் இருப்பதற்குச் செறிவான, வேறு வகையான தைரியம் தேவைப்படுகிறது. பல்வேறு வகைகளில், காந்தியை விட இந்தியாவை அதிகமாக அகிம்சையோடு பிணைத்தவர் அண்ணல் அம்பேத்கரே ஆவார். தலித்துகளை அரசமைப்புச் சட்ட முறைகளின் படி இயங்க வேண்டும் என்று ஒப்புவித்ததன் மூலம் அவர் அதை நிகழ்த்தினார். இது தங்களின் கைகளைக் கட்டிப்போட்டிருப்பதாகச் சில தலித் புரட்சியாளர்கள் முணுமுணுக்கிற அளவுக்குத் தாக்கம் செலுத்தியுள்ளது.

நேருவின் மீது மிகக் கடுமையான குற்றச்சாட்டை அம்பேத்கர் முன்வைக்கிறார். அவரின் ‘கண்டடைந்த இந்தியா’ நூலில் அநீதியின் மீது ஒரு வகையான திரை சத்தமில்லாமல் போர்த்தப்படுவதாக அம்பேத்கர் சுட்டிக்காட்டுகிறார். பிராமணியத்தைத் தூக்கிப் பிடிப்பவராக நேரு திகழ்ந்தார் என்று அம்பேத்கர் அடிக்கடி குற்றஞ்சாட்டுகிறார்.

சமூகத்தின் மீது பொருளாதார வளம் எப்படிப்பட்ட ஆழமான மாற்றங்களை உருவாக்கும் தாக்கங்களைச் செலுத்தும் என்பதை உணர்ந்த வெகு சில தலைவர்களில் ஒருவராக அம்பேத்கர் திகழ்ந்தார். துறவு என்பது ஆதிக்கச் சாதியினருக்கு அர்த்தமுள்ள செயல்பாடாக இருந்தாலும், எதுவுமே இல்லாமல் அல்லலுற்று வாழும் ஒடுக்கப்பட்ட மக்களை அப்படித் துறவு உணர்வோடு செயல்படச் சொல்வது மிக மோசமான நையாண்டி என்று கருதியதால்தான் அம்பேத்கரால் அப்படி இருக்க முடிந்தது. இந்தியாவை நவீனமயப்படுத்த முயன்ற அனைவரும் கருத்தில் கொள்ளத் தவறிய பொருளாதார வளம் பற்றிய மிக முக்கியமான, தனித்த அம்பேத்கரின் சமூகவியல் பார்வையாலே இது சாத்தியமானது.

18011024_1475411165823288_6580252952729044213_n.jpg
அம்பேத்கரின் மிக முக்கியமான கட்டுரைகளில் ஒன்று, பெர்ட்ரண்ட் ரஸ்ஸலின் Reconstruction of Society கட்டுரையை அவர் விமர்சித்து எழுதிய மறுப்புக்கு கட்டுரை. நிலச்சுவான்தார் குடும்பத்தில் இருந்து வந்த ரஸ்ஸல் பணத்தின் மீதான மோகத்தை, சலிப்பூட்டும் விதத்தில் விமர்சிப்பதை அம்பேத்கர் கடிந்துகொண்டார்.. “ரஸ்ஸல் ‘பணத்தின் மீதான மோகத்தின் தீமைகள்’ என்று காலங்காலமாகச் சொல்லப்பட்டதைத் திரும்பிச் சொன்னதன் மூலம் தன்னுடைய தரப்பின் வரலாற்று மதிப்புக்கு எந்த விதமான தத்துவார்த்தரீதியிலான அழுத்தத்தையும் கூட்டவில்லை… பணத்தின் தேவையைக் கருத்தில் கொண்டு ஆய்வு செய்யாமல் பணத்தின் மீதான மோகத்தை ரஸ்ஸல் விமர்சிப்பதால் இந்தத் தவறான கருத்தாக்கம் ஏற்பட்டுள்ளது. தெளிவான அறிவு கொண்டவர், மனத்தளவில் பணத்தின் மீது மோகம் கொள்ள மாட்டார் என்று வாதிடலாம். பணத்தின் மீதான காதல் ஏதோ ஒன்றுக்கான ஆசையிலிருந்தே கிளைக்கிறது …அந்த ஆசைப்படும் பொருளுக்கான தேவையைப் பொறுத்தே பணத்தின் மீதான மோகம் நன்மையைத் தருமா, அவமானத்தைத் தருமா என்பதைச் சொல்ல முடியும்…பணத்திற்கான மோகத்தின் மூலம் ஏற்படும் தேடல் கூடப் பல்வேறு வகையான குணங்களை ஏற்படுத்தக்கூடும்.’ என்று அவர் எழுதினார். பணத்துக்கும் பல்வேறு வகை, குணங்களுக்கும் இடையிலான கூட்டணி உள்ளது, அப்படிக் கூட்டணி இல்லாததால் பல விஷயங்கள் இல்லாமல் போய் முற்றிலும் ஒரே மாதிரியாக இருப்பது நிகழ்கிறது என்பது அம்பேத்கரின் வாதம். இந்த வாதம் ஆழமில்லாத அறவியல்வாதமானது பேராசை குறித்து மேற்கொள்ளும் ஆய்வுகளை விட ஏற்புடையதாக உள்ளது. ஆகவேதான் அம்பேத்கர் நம்மைச் சங்கடப்படுத்துகிறார். காந்தியை விட அரசியலமைப்புச் சட்ட தர்க்கத்தை அகிம்சையோடு அம்பேத்கர் சிறப்பாக இணைக்கிறார், நவீனத்துவத்தைப் பன்மைத்தன்மையோடு உள்ள தொடர்போடு நேருவை விடச் சிறப்பாக ஒருங்கிணைக்கிறார் ; அவரின் வரலாற்றுப் பிரக்ஞையை இருள் அடர்ந்த, தீமை மிகுந்த வெளிகளை ஆய்வுசெய்வது நோக்கி யாரைக் காட்டிலும் தீவிரமாக அவர் செலுத்துகிறார் இப்படி ஆய்வு செய்ததன் மூலம் நம் நம்பிக்கைகளுக்கு ஏற்ப நாம் கொண்டிருந்த சார்புகளின் போதாமைகளை அவர் அம்பலப்படுத்தினார்.

(தொடரும்)

அம்பேத்கர் – கடவுள்களை அழித்து ஒழித்தவர் – 1


 

பேராசிரியர் பிரதாப் பானு மேத்தா இந்தியாவின் முதன்மையான அரசியல் அறிவியல் அறிஞர்களில் ஒருவர். ப்ரின்ஸ்டனில் முனைவர் பட்டம் பெற்ற அவர் ஹார்வர்ட், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகங்களில் பேராசிரியராக பணியாற்றினார். தற்போது Centre For Policy Research மையத்தின் தலைவராக உள்ளார். ஆழமான பார்வைகளுக்கும், கூர்மையான கருத்துக்களுக்கும் பெயர் பெற்ற அவரின் ‘Ambedkar-Slayer of All Gods’ கட்டுரை அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது:

#அம்பேத்கர் அதிகாரம்-ஜனநாயகம், பொருளாதார வளம்-வன்முறை, இந்து மதம்-பாரம்பரியம், தேசியம்-நீதி, எல்லாவற்றுக்கும் மேலாக மெய்யியல் என்கிற பெயரில் நிகழ்த்தப்படும் நேர்மையற்ற, அபத்தமான சொற்பொழிவுகள் ஆகியவை குறித்த நம்முடைய பிரமைகளைக் கடுமையாகக் கேள்விக்கு உட்படுத்துகிறார். அம்பேத்கர் நம்மை நாமே பார்த்துக்கொள்ள அஞ்சுகிற கண்ணாடியாகச் சுட்டெரிக்கிறார். அவரின் இருப்பு நம்முடைய மோசமான மனசாட்சி, இறைநம்பிக்கை குறித்த உறுத்தலை தந்துகொண்டே இருக்கிறது.#

தலைவர்களின் பிறந்தநாள்கள், வரலாற்று நிகழ்வுகளை நினைவுகூறும் நாட்கள் போன்றவை அப்போதைய நிலைமையை உணர்ந்து கொள்ளவும், வெற்றி, தோல்விகளைச் சீர்தூக்கிப் பார்க்கவும் வாய்க்கும் தருணங்களாகவே பெரும்பாலும் திகழ்கின்றன. இப்படிப்பட்ட அளவுகோல்கள், வெற்றி-தோல்விகளுக்குள் அண்ணல் அம்பேத்கரை அடக்க முயல்வது முந்திரிக்கொட்டைத்தனமானதும், முட்டாள்தனமானதும் ஆகும். மகத்தான தலைவர்கள் பலரைப் பொறுத்தவரை, ஒரு பண்பாட்டின் தர அளவுகோல்கள் லட்சியங்கள் ஆகியவற்றுக்கு ஏற்ப அவர்கள் எந்த அளவுக்கு வாழ்ந்தார்கள் என்றே நாம் அவர்களைச் சீர்தூக்கிப் பார்க்கிறோம். அண்ணல் அம்பேத்கரைப் பொறுத்தவரை இது தலைகீழான ஒன்று. ஒட்டுமொத்த பண்பாடே தன்னை மதிப்பிட்டுப்பார்த்துக்கொள்ள வேண்டிய அளவுகோல் அவரே. நம்முடைய ஆதர்சங்களால் அவரை எடை போட முடியாது. அம்பேத்கர் எனும் ஆளுமையின் ஆதர்சங்களால் தான் நம்மை நாமே மதிப்பிட்டுப் பார்க்க வேண்டும். அம்பேத்கருடன் உறவாடுவதென்பது அவரை மதிப்பிடுவதென்பதல்ல, நம்மை மதிப்பிட்டுக்கொள்வதும், நாம் ஏன் இன்னமும் அவரின் நீதிக்கான அறைகூவலை, பகுத்தறிவுக்கான வாதத்தை, அமைப்புகள் குறித்த ஆழமான கற்பனைகளைப் பற்றிக்கொள்ளவும், முகத்துக்கு நேராக எதிர்கொள்ளவும் மறுக்கிறோம் என்பதைப் புரிந்துகொள்வதும் ஆகும்.? அம்பேத்கர், நம்மை நாமே பார்த்துக்கொள்ள அஞ்சுகிற கண்ணாடி. அவரின் இருப்பு நம்முடைய மோசமான மனசாட்சியையும்,மோசமான நம்பிக்கைகளையும் பற்றி நமக்குத் தொடர்ந்து நினைவுறுத்துகிறது.

அம்பேத்கர் குறித்து எழுதுவது மிகவும் கடினம்; இதற்குப் பல காரணங்கள் உண்டு. அறிவுத்துறையைச் சேர்ந்தவர்கள் அம்பேத்கர் குறித்துப் போதுமான அளவில் பங்களிப்பு செய்யவில்லை என்பது வருத்தம் தரும் உண்மையாகும். தன்னைக் குறித்த ஒரு நல்ல வாழ்க்கை வரலாறுக்காக அம்பேத்கர் இன்னும் காத்துக் கொண்டிருக்கிறார். மராத்தி மொழியில் மேற்கொள்ளப்பட்ட ஒரு சில முயற்சிகளைத் தவிர்த்து செறிந்த விளக்கங்கள் கொண்ட, அதிகாரப்பூர்வ அம்பேத்கர் படைப்புகள் இன்னமும் கனவாகவே உள்ளது. அவருடைய கடிதங்கள் இங்கும் அங்குமாகச் சிதறியும் தேடிக் கண்டுபிடிப்பதற்கு வெவ்வேறு அளவில் சிரமம் கொண்டதாக இருப்பதோடு, வெவ்வேறு வகையான அமைப்பு ரீதியான உரிமைப்போர்களில் சிக்கிக்கொண்டிருக்கின்றன.. அவருடைய 125-வது பிறந்தநாளுக்குச் செய்யப்படும் மிக மிக அவசியமாக மேற்கொள்ள வேண்டிய ஒரு பணி உண்டென்றால், அது அவரின் படைப்புகள், கட்டுரைகள், கடிதங்கள் ஆகிய அனைத்தையும் முழுமையாக, கச்சிதமாகத் தொகுப்பதே ஆகும். அவருடைய எல்லாப் படைப்புகளிலும் நீங்கள் மூழ்கி முத்தெடுத்தாலும் காந்தி, நேருவை நெருக்கமாக உணர்வதைப் போல அம்பேத்கர் என்கிற ஆளுமையை நீங்கள் கண்டுணர முடியாது. அறிவுத்துறை சார்ந்த ஆய்வுகள், அதிகாரபீடங்கள், பலத்த சமூக ஆதரவு, சமகால நினைவலைகள் காந்தி, நேரு குறித்த அறிவுத்துறை ரீதியான கட்டமைப்பை உறுதிசெய்வதற்கு வழிகோலின. அந்த அளவுக்குக் கண்டுகொள்ளப்படாமல் இருக்கும் அண்ணல் அம்பேத்கர் அலட்சியத் திரை தாண்டி பிரகாசிக்க வேண்டியவராக இருக்கிறார்.

Dr.babasaheb-ambedkar.jpg
அம்பேத்கரை ஓரங்கட்டப் பார்க்கும் எந்த முயற்சியும் சுடர்விட்டு எரியும் அவரின் அரசியல், அற ஆற்றலை அணைத்து விட முடியாது. அவர் காலத்தின் தலைவர்களில் அவர் மட்டுமே இன்று பல கோடி மக்களிடையே மதரீதியிலான முக்கியத்துவத்தைவிட மேலான முக்கியத்துவத்தைப் பெற்றிருக்கிறார். தலித் காலனிகளின் வழிப்பாதைகளில் அவர் கடவுளாக்கப்பட்டு, சிலைவைக்கப்பட்டு நினைவுகூரப்படுகிறார். சாதாரண அரசியல் தலைவர்களை மக்கள் கொண்டாடுவதோடு அதனை ஒப்பிட முடியாது. அவரைப் பற்றிய நினைவுகூரல் கடந்த காலங்களின் மதப் புரட்சிகளை ஒத்திருக்கிறது. ‘ஜெய் ஸ்ரீராம்’ என்பதைவிட அதிக வல்லமை கொண்ட சக்தியாக ‘ஜெய் பீம்’ எனும் தலித் இயக்க வழிபாட்டுத் தன்மைகொண்ட ‘அம்பேத்கர் வணக்க முழக்கம்’ திகழ்கிறது. அம்பேத்கர் இனி வெறும் தலைவர் இல்லை. அவர் தீர்க்கதரிசி, மீட்பர்.

தீர்க்கதரிசிகள் குறித்து எழுதுவது மிகவும் கடினம். அதற்கு ஒன்றுக்கொன்று நேரெதிரான இரு முரண்பாடான காரணங்கள் உண்டு. அம்பேத்கர் கண்மூடித்தனமான வழிபாடு, துதிபாடல் ஆகியவற்றைக் குறித்து எச்சரித்தார். அதைக் கருத்தில் கொண்டால் அவரை ஆதர்சமாகக் கொண்ட மக்களோடு விவாதத்தில் ஈடுபடவே முடியாது.. அவர்களைப் பொறுத்தவரை அம்பேத்கர், கருத்தாடல் நிகழ்த்துவதற்கானவர் என்பதைவிட ஒரு பீடமாகக் கருதப்படுபவர். அம்பேத்கர் குறித்து எழுதுபவர்களை ஒரு சந்தேகக் கண்ணோடு காண்பது நிகழ்கிறது. தலித் அல்லாதோர் அவரைப் பற்றித் தாங்கள் ஏன் எழுத வேண்டும் என்கிற மனதளவிலான விலக்கலை மேற்கொண்டிருக்கிறார்கள். பல்லாண்டுகளாக நமக்கு அசௌகரியமான உணர்வைக் கொடுத்துக்கொண்டிருந்த ஆளுமையாகத் திகழும் அவரைக் கண்டுகொள்ளாமல் தவிர்த்தோம். ஒரு பெருந்தலைவரை ஓரங்கட்ட சமூகம் முயன்றாலும், அவர் அதைத் தாண்டி வெல்லும் அவரது பரிவாரத்தில் இணைந்துகொள்ள முயல்கிறது.

அம்பேத்கரை பயன்படுத்திக் கொள்வது கொள்ளும் முயற்சிகள் அவரை வசப்படுத்தி, கட்டுப்படுத்தும் முயற்சி என்றும் ஐயத்தோடு நோக்கப்படுகிறது. அம்பேத்கரைக் கடவுள் போல ஆக்குவது அவரின் புரட்சிகரமான கருத்துக்களை எதிர்கொள்ளாமல் தவிர்ப்பதற்கான எளிமையான, செய்கையே. அம்பேத்கரை பாஜக அபகரித்துக்கொள்வதற்கான முயற்சிகளில் இது வெளிப்படையாகத் தெரிகிறது. காங்கிரஸ் அவரை ஓரங்கட்டியதும், பாஜக அவரை அரசியல் லாபங்களுக்காகப் பயன்படுத்திக் கொள்ள முயல்வது நமக்குப் பலவற்றைச் சொல்லாமல் சொல்கின்றன. குறைந்தபட்சம் இப்பொழுதாவது அவர் குறித்து அதிகம் பேசுகிறார்கள். இப்படிப்பட்ட பெயரளவிலான போற்றுதல்கள் அவை பெரிதளவில் பயன் தராது என்பதை உணர்த்துவதோடு நின்றுவிடவில்லை. அம்பேத்கர் முன் நாம் தலைகுனிந்து வணங்கி நிற்பதன் மூலம் அவர் நம்முடைய ஆன்மாவைக் குத்திக் கிழிப்பதில் இலிருந்து தப்பிக்க எண்ணுகிறோம்.

dr-b-r-ambedkar-1_1.jpg
பிரதமர் நரேந்திர மோடி அண்ணல் அம்பேத்கர் நினைவகத்துக்கான அடிக்கல் நாட்டும் விழாவில் அம்பேத்கரை தலித்துகளின் தலைவர் என்பதைத் தாண்டிக் காண வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். இது உண்மை என்பதில் ஐயமில்லை.நீதி, ஜனநாயகம் குறித்துக் கவலை கொள்ளும் யாரும் அம்பேத்கரின் அறிவாற்றலால் நிச்சயம் பயன்பெறுவார்கள். அதே சமயம் அம்பேத்கர் வெறும் தலித் தலைவர் அல்ல என்பது வெற்று முழக்கமாக இருக்கக் கூடாது. அம்பேத்கர் ஏன் நம் எல்லாருக்குமான தலைவர் என்கிற ஆழமான கேள்வியை எழுப்பிக்கொள்ளும் திறப்பாக இந்த முழக்கம் அமையவேண்டும். அம்பேத்கர் பல்வேறு உலகளாவிய பொதுஉண்மைகளைப் பேசினார். தன்னை யாரேனும் உரிமை கொண்டாட வேண்டும் என்றால் அதற்கு அவர்கள் தங்களைத் தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதில் அவர் தெளிவாக இருந்தார். என்றைக்குத் தலித் விடுதலையைச் சாதிக்கிறோமோ அன்றே அம்பேத்கரை உரிமை கொண்டாடுவதற்கு நாம் தகுதியானவர்களாக ஆவோம் அம்பேத்கர் தலித்துகளுக்கு மட்டுமல்ல, எங்களுக்கும் தலைவர் என்கிறோம் என்றால் அவரின் அறைகூவல்களுக்கு நேர்மையானவர்களாக, அவர் வைத்திருக்கக் கூடிய தேர்வுகளைத் திடமாக எதிர்கொள்பவர்களாக இருக்க வேண்டும்.

அம்பேத்கரை தலித் தலைவர் என்கிற முகம் மட்டுமே கொண்டவரில்லை என்பதன் மூலம் அவரின் புரட்சிக்குரலை மழுங்கடிப்பது சத்தமில்லாமல் சாதிக்கப்படுகிறது எனத் தலித்துகள் அஞ்சுவது பல சமயங்களில் நியாயமாகவே உள்ளது. அநீதிக்கு எதிராக அண்ணல் அம்பேத்கர் காட்டும் குத்திக் கிழிக்கும், தயவு தாட்சண்யமற்ற கோபத்தை மழுங்கடிப்பதன் மூலம் அம்பேத்கரோடு இணக்கமாகத் தலித் அல்லாதோர் உணர்கிறார்கள். அவரின் ஆங்கில எழுத்துக்களை விட மராத்தி மொழியில் இந்தக் கோபம் கூடுதலாகக் கொப்பளிக்கிறது. அவர் வாழ்நாள் முழுக்க அநீதியை அம்பலப்படுத்துவதை அயராமல் செய்தார். ஒரு செயல்நோக்கமோ, தேசமோ, அதிகாரமோ, கலாச்சாரமோ, செல்வமோ அநீதியைச் சற்று மூடி மறைக்க முயன்றாலும் அவற்றை ஏற்றுக்கொண்டு, அவற்றுக்கு அர்ப்பணிப்போடு இருக்க முடியவே முடியாது என்பதில் அம்பேத்கர் தெளிவாக இருந்தார். அருண் ஷோரி முதலிய விமர்சகர்கள் அம்பேத்கர் தேசியவாதி இல்லை என்கிறார்கள். ‘நீதியின் அடித்தளத்தின் மீது எழுப்பப்படாத ஒரு தேசம் தேசமே அல்ல’ என்றதில் அம்பேத்கரின் ஆளுமை பிரமிக்க வைக்கிறது. அவர், கிட்டத்தட்ட எல்லாச் சித்தாந்தங்களும் தலித்துகள் ஒடுக்கப்படுவதை மூடி மறைக்கும் சூழ்ச்சிகளாக நிகழ்ந்ததைக் கண்டு கொதித்தார். சித்தாந்தங்களின் நுண்மையான விவாதங்கள் எனும் பனிமூட்டத்தில், தலித் அடக்குமுறை எனும் உள்ளார்ந்த உணர்வு மூடி மறைக்கப்படுகிறது என்பதை அவர் புலப்படுத்தினார்.

தலித்துகள் மீது கட்டவிழ்த்து விடப்படும் மூர்க்கமான வன்முறை, தந்திரமான ஒடுக்குமுறை, தினசரி அவமானங்கள் ஆகியவற்றை நாம் கண்கொண்டு பார்ப்பதே இல்லை. தலித்கள் மீதான வன்முறைகளை அப்படி நடப்பதாக முழுமையாக யாரும் ஒப்புக்கொண்டதே இல்லை. அப்படியே ஒப்புக்கொண்டாலும், அந்த ஒப்புதல் வாக்குமூலத்தின் முக்கியத்துவத்தைப் பொய் வேடத்தாலும், தற்காப்புத் தொனியின் மூலமும் இருட்டடிப்பு செய்துவிடுவதை அவர் சுட்டிக்காட்டினார். காந்தியை கடுமையாகத் தாக்கிய அம்பேத்கர் அதைவிடக் கூடுதலான கடுமையோடு நேருவை நோக்கி முக்கியமான விமர்சனத்தை இப்படி வைத்தார்: இந்திய சமூகத்தின் மையமாக உள்ள இந்த வன்முறையின் இருப்பை நேரு ஒப்புக்கொள்ள மறுக்கிறார். ‘நேருவை பாருங்கள். அமெரிக்காவை உருவாக்கிய தலைவர்களில் ஒருவரான ஜெபர்சனின் விடுதலை அறிவிப்பில் அவர் உத்வேகம் பெறுவதாகப் பெருமிதம் கொள்கிறார்.

இந்தியாவில் உள்ள ஆறு கோடி தீண்டப்படாத மக்களின் நிலை குறித்து எப்போதாவது சஞ்சலமோ, அவமானமோ நேரு அடைந்திருக்கிறாரா? அவரின் எழுதுகோலிலிருந்து ஊற்றெடுக்கும் இலக்கிய வெள்ளத்தில் எங்கேனும் அவர்கள் பற்றிய குறிப்புகள் இருக்கின்றனவா?’. அம்பேத்கர் தலித் அல்லாத மக்களை நோக்கித் தொடர்ந்து ஒரு குற்றச்சாட்டை முன்வைக்கிறார். ‘தாங்கள் எப்படிப்பட்ட அநீதியை மேற்கொண்டிருக்கிறோம் என்று அவர்கள் உணர்வதே இல்லை!’. இன்றுவரை நாமும் உணர்ந்ததாகத் தெரியவில்லை.

18033372_1473707332660338_4144983509933142800_n.jpg
அம்பேத்கரின் கோபத்தில் பழிவாங்கும் சாயல் எங்கும் இல்லாததால் அது ஆக்கப்பூர்வமானதாகத் திகழ்கிறது. அது கூர்மையான இலக்குக் கொண்ட சமூக விமர்சனமாகவே எப்பொழுதும் திகழ்கிறது. பழிக்குப் பழி எனப் பேசாத அம்பேத்கரின் பண்பை கொண்டே அவரின் புரட்சிகரமான முகத்தை மழுங்கச் செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இரண்டு சிக்கல்கள் எழுகின்றன. முதலாவது இறுதி இலக்கு, அதற்கான வழிமுறை ஆகியவற்றுக்கு இடையே உள்ள தொடர்பு குறித்த அம்பேத்கரின் ஆழமான அலசல். இது குறித்து விரிவாகப் பின்னர்க் காண்போம். சாதி, அமைப்பு ரீதியாக அடக்குமுறையை மேற்கொண்டு சமூகத்தில் தலித்துகளைத் தொடர்ந்து அடிமைப்படுத்துவதன் மீது நமக்கு எழவேண்டிய நியாயமான கோபத்தை, அம்பேத்கரிடம் பழிவாங்கும் உணர்ச்சி இல்லாததைக் கொண்டு தணித்துக் கொள்கிறோம் என்று தலித்துகள் குற்றஞ்சாட்டுவது சரியே ஆகும்.

காந்தியுடன் அம்பேத்கர் மேற்கொண்ட உரையாடல்களில் ‘தலித் விடுதலை என்பது தலித்துகளை அதிகாரம் மிக்கவர்களாக மாற்றுவதற்குக் குறைவானது.’ என்கிற கருத்தாக்கத்தால் காயப்பட்டார். தலித்துகள் மீதான அடக்குமுறையை ஆதிக்கச் சாதியினரின் பிரச்சினையாகக் காந்தி புரிந்துகொள்ள முயன்றது ஒருவகையில் தலித் அதிகாரத்தை மறுதலிக்கும் தந்திரமே. காந்தி-அம்பேத்கர் விவாதத்துக்குள் போவதற்கு இது தருணமில்லை. (இந்தத் தலைப்பில் மேலும் ஆர்வம் கொண்டவர்கள் காண்க: டி.ஆர்.நாகராஜின் சிறந்த நூல்: The Flaming Feet and Other Essays: The Dalit Movement in India தமிழில் : ‘தீப்பற்றிய பாதங்கள்’ மொழிபெயர்ப்பு: ராமாநுஜம்)).

அம்பேத்கர் தலித்துகள் பேசாமடந்தைகளாக அநீதிகளை வாங்கிக்கொள்பவர்களாக இருக்க மாட்டார்கள் என அழுத்தி சொன்னது, எந்த அளவுக்குத் தலித்துகள் ஒடுக்கப்படுகிறார்கள் என்பதை நாம் மறப்பதற்கு வசதியாக உள்ளது. அரசமைப்பு சட்டத்துக்கு உட்பட்டு அரசியல் செய்ய வேண்டும் என்று அம்பேத்கர் வலியுறுத்தியதைக் கொண்டு, அரசமைப்புரீதியான மேலோட்டமான சலுகைகள் மட்டுமே தலித் விடுதலை என்கிற கயமையை மேற்கொள்கிறோம். நீங்கள் மனசாட்சி உள்ளவராக இருந்தால், அம்பேத்கரின் எழுத்துக்கள் உங்களை அதிர்ச்சியடைய வைக்கும், பேச்சற்றவர்களாக வெட்கித் தலைகுனிய வைக்கும். அம்பேத்கரை தங்களுக்குரியவராக அபகரிக்க முயலும் விந்தையான ரசவாதத்தின் மூலம், அசௌகரியமான உணர்வை ஏற்படுத்த வேண்டிய அம்பேத்கர் கதகதப்பைத் தருபவராக மாற்றப்பட்டுள்ளார். அவர் புனிதராகக் கொண்டாடப்பட வேண்டியவர் என்று,வரும்போது எல்லோரும் ஒருமித்த கருத்துடையவர்களாக இருக்கிறார்கள். உண்மையில், இந்தியாவின் ஆன்மாவின் மீது நடக்கும் மிக முக்கியமான அடிப்படையான மோதல்களின் மையமாக அவரே உள்ளார்.

(தொடரும்)