விசாவுக்காக காத்திருக்கிறேன் – அண்ணல் அம்பேத்கரின் நினைவலைகள்


‘விசாவுக்காக காத்திருக்கிறேன்’ எனும் இரு சொற்களின் அடர்த்தி, வலி அபரிமிதமானது. எது தனக்கான நாடு? சமத்துவம், சம உரிமைகள், சம வாய்ப்புகள் மறுக்கப்பட்டு பிறப்பின் அடிப்படையில் அந்நியரைப் போல நடத்தப்படுவது தகுமா? நீதி, நியாயம், நம்பிக்கை, ஆதரவு, பாதுகாப்பை உறுதியளிக்கும் அந்த சமத்துவ விசாவுக்கான காத்திருப்பு எப்போது கைகூடும்? இப்படி பற்பல வினாக்களை முப்பதிற்கும் குறைவான பக்கங்களில் பாபாசாகேபின் தன் வரலாறு எழுப்புகிறது.

ஏராளமான நூல்களை எழுத வேண்டும் என்கிற கனவுகள் கைகூடுமுன்னே அண்ணல் நம்மை விட்டுப்பிரிந்தார். அரசமைப்புச் சட்ட உருவாக்கம், கட்சிப் பணிகள், இந்து சட்ட மசோதா வரைவினை எழுதுதல், சித்தார்த்தா கல்லூரி உள்ளிட்ட கல்வித்தலம் எழுப்பல், மக்கள் பணி, இதழில் என ஓய்வு அலைச்சல் இல்லாமல் இயங்கியவரை வறுமை, ஏளனம், அவமதிப்பு, புறக்கணிப்பு வீழ்த்தவில்லை. அத்தனைக்கு நடுவிலும் அவர் எழுதினார், இயங்கினார். டாக்டர் அம்பேத்கரின் அகவுலகினை கண்முன் நிறுத்தும் எழுத்து இப்போது தமிழில். இந்நூலின் முதல் பதிப்பினை வெளியிட்ட நீலம் பதிப்பகத்திற்கு நன்றிகள்.

இந்நூல் சென்னை புத்தகக் கண்காட்சி அரங்கு எண் 158,159-ல் கிடைக்கும்.
நன்செய் வெளியீடு
ஓவியம்: சந்தோஷ் நாராயணன்
விலை: 20

தமிழில்: பூ.கொ.சரவணன்.

‘அம்பேத்கரும், அரசியலமைப்புச் சட்ட உருவாக்கமும்’ – கிறிஸ்தோஃபி ஜாப்ரிலா’


‘நல்ல உயரம், கட்டுகோப்பான உடல், கரிய நிறம். லாவகமாகவும், துரிதமாகவும் இயங்கும் மூளைக்குச் சொந்தக்காரர். அவர் அறிவின் பேருரு. வெளியே கரடுமுரடாகத் தெரிந்தாலும், உள்ளுக்குள் மானுடம் மிகைத்த பண்பாளர். இன்னல்கள் இடைவிடாது துரத்தினாலும், எப்போதும் வளைந்து கொடுக்காத, விட்டுக்கொடுக்காத தீரம் மிக்கவர். ஒரு காலத்தில் சமூகத்தில் மேல்தட்டினர் வாழும் பகுதியில் அவர் கீழ்சாதி என்பதால் தங்க கூட இடம் தரப்படவில்லை. அவரின் மனவுறுதியின் தீரம் அவரை மகத்தான இடங்களுக்கு அழைத்துச் சென்றது.’ (ஹரி ஷரண் சப்ரா (தொகுப்பாசிரியர்) Opposition in the Parliament, Delhi, New Publishers, 1952, பக்கம் 142)

மேற்கோள் காட்டப்பட்டிருக்கும் பத்தி ஐம்பதுகளின் ஆரம்பத்தில் ஒரு பிராமண எழுத்தாளரால் எழுதப்பட்டதாகும். இது அப்போது அம்பேத்கர் தன்னுடைய அரசியல் வாழ்வின் உச்சத்தில் இருந்தார் என்பதைத் தெளிவாக நிறுவுகிறது. இப்படிப்பட்ட அங்கீகாரம் அம்பேத்கருக்கு கிடைத்தற்கு அவர் விடுதலை இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராக நியமிக்கப்பட்டது ஒரு காரணம். அதைவிட முக்கியமாக, தேசத்தின் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க வேண்டிய பொறுப்புக்கு உரிய ‘வரைவுக்குழு’வின் தலைவராக அம்பேத்கர் திகழ்ந்ததும் காரணம். அந்த வரைவுக்குழுவில் சட்ட நிபுணரான அம்பேத்கர் உன்னதமான உச்சத்தை எட்டினார். அதுவே அம்பேத்கரின் வாழ்வின் பெருமைமிகு காலமாகும். இறுக்கமான சூட், டை, வட்ட வடிவிலான கண்ணாடி, கச்சிதமாக வாரப்பட்ட தலைமுடி, கையில் அரசியலமைப்புச் சட்டம் என்கிற அம்பேத்கரின் உருவமே பொதுமக்களின் மனக்கண்ணில் இன்றும் அகலாமல் ஆழமாகப் பதிந்திருக்கிறது. இப்படி அம்பேத்கரை சிலையாகச் செதுக்குவதும் வழக்கமானது. 1

தீண்டப்படாத சாதியை சேர்ந்த ஒருவர் தேசிய அரசியலில் மாபெரும் தாக்கம் செலுத்துகிற நிலையை அடைந்தார் என்பதே உயர் சாதி இந்துக்களிடமிருந்து கசப்பான விமர்சனங்களை ஊற்றெடுக்க வைக்கப் போதுமானதாக இருந்தது. அரசியலமைப்பு சட்ட நிர்ணய சபையில் அரசியலமைப்பு சட்ட உருவாக்கத்தில் அம்பேத்கர் மிக முக்கியமான பங்காற்றினார் என்பதையே நிராகரிக்கிற அளவிற்குச் சிலர் சென்றார்கள்.

அம்பேத்கர் ‘போலி மனுவா’?

அரசியலமைப்பு சட்ட வரைவுக்குழுவிற்கு அம்பேத்கர் நியமிக்கப்பட்டதால், அவருக்கு ‘நவீன மனு’ என்கிற பட்டம் சூட்டப்பட்டது. இப்பட்டம் மனுநீதியை இயற்றிய புரதான மனுவை நினைவுபடுத்தியது. மனுநீதியை 1927-ல் நடைபெற்ற மகத் சத்தியாகிரகத்தின் போது அம்பேத்கர் எரித்தார் என்பதை நினைவுகூர்ந்தால் இந்தப்பட்டம் வேடிக்கையான ஒன்றாகத் தெரியும்.
அம்பேத்கர் குறித்த தன்னுடைய குற்றப்பத்திரிகையில் அருண் ஷோரி, அம்பேத்கரை ‘போலி மனு’ என்று முத்திரை குத்துகிறார். அரசியலமைப்பு சட்ட உருவாக்கத்தில் பல்வேறு துணை குழுக்கள் உருவாக்கிய சட்டப்பிரிவுகளைச் செப்பனிடும் பொறுப்பு மட்டுமே வரைவுக்குழுவிற்கு இருந்தது. வரைவுக்குழுவின் பரிந்துரைகளையும் கூட அரசியலமைப்பு சட்ட நிர்ணய சபையின் முழு அமர்வு விவாதித்தே முடிவுகள் எடுக்கப்பட்டன. இதனால், அரசியலமைப்பு சட்ட உருவாக்கத்தில் அம்பேத்கர் எந்த வகையிலும் தாக்கம் செலுத்தவில்லை என்பது அருண் ஷோரியின் வாதம். மேலும் அம்பேத்கர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் இல்லை. அக்கட்சியினருக்குள் தான் ஒவ்வொரு சட்டப்பிரிவின் முக்கியமான அம்சங்கள் தீர்மானிக்கப்பட்டன என்பது அருண் ஷோரியின் வாதம்.2 அம்பேத்கர் துணை குழுக்கள், வரைவு குழு, முழு அமர்வு ஆகிய பல இடங்களில் நடைபெற்ற வாக்கெடுப்புகளில் தோற்கிற பக்கமே இருந்தார் என்று ஷோரி வாதிடுகிறார். அருண் ஷோரியின் இக்கருத்துகள் அரசியலமைப்பு சட்ட நிர்ணய சபையில் அம்பேத்கரின் பங்களிப்பை குறைத்து மதிப்பிடுகின்றன என்பதே என்னுடைய வாதமாகும். காங்கிரஸ் தலைவர்கள் முன்னரே பேசி வைத்துக்கொண்டு சில சட்டப்பிரிவுகளை வேகமாக நிறைவேற்ற முயன்றார்கள் என்று அம்பேத்கர் அவ்வப்போது குறைபட்டுக்கொண்டார் என்றாலும், அம்பேத்கர் மற்றவர்கள் உருவாக்கிய சட்டப்பிரிவுகளை வெறுமனே செப்பனிடுவதொடு மட்டும் நின்றுவிடவில்லை. 3

அருண் ஷோரி அம்பேத்கரை சித்தரிக்கும் விதத்தில் இருந்து அறிஞர்கள் ஹெச்.எஸ்.வர்மா, நீதா வர்மா முற்றிலும் முரண்படுகிறார்கள். அம்பேத்கர் அரசியலமைப்பு சட்ட நிர்ணய சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட அவரின் ஆட்சி நிர்வாகத்திறனும், அரசியல் தாக்கமும் தான் காரணம் என்று இவர்கள் வாதிடுகிறார்கள்.4 அம்பேத்கரை வரைவுக்குழுவின் தலைவராகத் தேர்ந்தெடுக்கக் காரணமான சம்பவத்தைச் சுட்டிக்காட்டுகிறார்கள். 1946-ல் சபையில் விவாதங்கள் நிகழ்ந்து கொண்டிருந்த போது, அம்பேத்கரின் தலையீடு பலரையும் கவர்ந்தது. நேரு அரசியலமைப்பு சட்ட நிர்ணய சபையின் முன் அரசியலமைப்பு சட்டத்தின் நோக்கங்களைப் பட்டியலிட்டார். சபையின் இன்னொரு உறுப்பினராக ஜெயகர் ஒரு பிரச்சினையை எழுப்பினார் பாகிஸ்தானா, இந்தியாவா என்று இன்னமும் ஊசலாடிக்கொண்டிருந்த முஸ்லீம் லீக் உறுப்பினர்கள் சபையில் இணைவதா, வேண்டாமா என்று முடிவெடுக்காத நிலையில் இந்தத் தீர்மானத்தை வாக்கெடுப்பிற்கு எடுத்துக்கொள்ள முடியாது என்றார் ஜெயகர். அடுத்து எழுந்த அம்பேத்கர், மிகவும் அற்புதமானதொரு ஒரு உரையை நிகழ்த்தினார். அந்த உரை நடுநிலைமையோடு திகழ்ந்ததோடு, அம்பேத்கருக்கு இருந்த கச்சிதமான, ஆழ்ந்த சட்ட அறிவையும் புலப்படுத்தியது. அம்பேத்கர் அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு சமரசத்தீர்வை முன்வைத்தார். ஆகவே, அம்பேத்கரின் திறமையினால் தான் அவரை அரசியலமைப்பு சட்ட வரைவுக்குழுவின் தலைவராக நியமித்தார்கள் என்று வர்மாக்கள் வாதிடுகிறார்கள்.

அடுத்ததாக, நாம் அரசியலமைப்பு சட்ட வரைவுக்குழுவின் செயல்பாட்டை மறு ஆய்வு செய்ய வேண்டியிருக்கிறது. இக்குழு அடிப்படையான சட்டங்களை இயற்றுகிற பணியில் ஈடுபடவில்லை. பல்வேறு துணைக்குழுக்கள் பரிந்துரைத்த சட்டப்பிரிவுகளை, செம்மைப்படுத்தி, செப்பனிட்டு அரசியலமைப்பு சட்ட நிர்ணய சபையின் முன்னால் சமர்ப்பிக்க வேண்டிய பொறுப்பே வரைவுக்குழுவுக்கு உரியது. சபையானது பல்வேறு வரைவுகளை வாசிக்க வேண்டிய சூழல்கள் ஏற்பட்டன. அப்போதெல்லாம் சட்டப்பிரிவுகள் குறித்து நிகழ்ந்த விவாதங்களை நெறிப்படுத்தி, வழிநடத்தும் பணியில் வரைவுக்குழுவின் உறுப்பினர்கள், அதிலும் அடிக்கடி அம்பேத்கரே ஈடுபட்டார். மேலும், அரசியலமைப்பு சட்ட நிர்ணய சபையில் வரைவுக்குழுவின் உறுப்பினராகவும், பதினைந்து குழுக்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட குழுக்களின் உறுப்பினராகவும் திகழ்ந்த வெகு சில உறுப்பினர்களில் அம்பேத்கரும் ஒருவர்.5 ஆகவே, அம்பேத்கரால் அனைத்து சட்டப்பிரிவுகள் சார்ந்து நடைபெற்ற விவாதங்களையும் கவனிக்க முடிந்தது. சிறுபான்மையினர் உரிமைகள் உள்ளிட்ட மிக முக்கியமான சட்டப்பிரிவுகள் சார்ந்த விவாதங்களையும் கூர்ந்து நோக்க முடிந்தது.

பல்வேறு குழுக்களின் பரிந்துரைகள் வரைவுக்குழுவின் தலைவர் என்கிற முறையில் அம்பேத்கருக்கும், குழுக்களின் செயலாளராகத் திகழ்ந்த எஸ்.என்.முகர்ஜிக்கும் (இவருக்கு இறுதியாக அம்பேத்கர் நெகிழவைக்கும் புகழாரத்தைச் சூட்டினார்) அனுப்பி வைக்கப்பட்டன. இவர்கள் சட்டப்பிரிவுகளைத் திருத்தியமைப்பதோடு,பல சட்டப்பிரிவுகளுக்கு விளக்கங்கள் தேவைப்படுகிற போது அவற்றைப் பல்வேறு குழுக்களிடம் இருந்து பெறுகிற பொறுப்பும் இருவருக்கும் உரியதாக இருந்தது. அரசியலமைப்பு சட்ட வரைவுக்குழுவின் பெரும்பாலான உறுப்பினர்கள் கூட்டங்களில் தொடர்ந்து கலந்து கொள்ளவே இல்லை. இதனால், இந்தத் திருத்தியமைக்கும் பணிச்சுமைகள் பெரும்பாலும் அம்பேத்கரின் தோளிலேயே விழுந்தன. இந்த வரைவுக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான டி.டி.கிருஷ்ணமாச்சாரி நவம்பர் 1948-ல் சபையின் முன்னால் இப்படிப் பேசினார்:

‘நீங்கள் வரைவுக்குழுவிற்கு நியமித்த ஏழு உறுப்பினர்களில் ஒருவர் பதவியை விட்டு விலகியதால், அந்த இடத்துக்கு வேறொரு நபரை நியமனம் செய்தீர்கள். ஒரு உறுப்பினர் காலமானார். அவரின் இடம் நிரப்பப்படவில்லை. இன்னொரு உறுப்பினரோ அமெரிக்காவில் இருந்தார். அவரின் இடத்திற்கும் யாரும் கொண்டுவரப்படவில்லை. இன்னொரு நபரோ அரசாங்க அலுவல்களில் மும்முரமாக மூழ்கிவிட்டார். ஓரிரு உறுப்பினர்கள் டெல்லியில் இருந்து வெகுதூரம் தள்ளியிருந்தார்கள். அவர்களின் உடல்நலக்குறைவால் கூட்டங்களில் கலந்து கொள்ள முடியவில்லை. இறுதியாக, அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைக்கும் ஒட்டுமொத்த பொறுப்பும் டாக்டர்.அம்பேத்கரின் தலைமேல் விழுந்தது. இப்பணியை மெச்சத்தக்க வகையில் சிறப்பாகச் செய்து முடித்திருக்கும் டாக்டர். அம்பேத்கருக்கு நாம் அனைவரும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம் என்பதில் எனக்கு எந்த ஐயமுமில்லை.’ 6
அம்பேத்கர் மட்டுமே அரசியலமைப்புச் சட்டத்தை எழுதவில்லை என்றாலும், அதன் உருவாக்கத்தின் எல்லாக் கட்டங்களிலும் அவரின் கைவண்ணம் இருந்து கொண்டே இருந்தது. அவர் குழுக்களின் பரிந்துரைகளைத் திருத்தியமைப்பதோடு நிம்மதியடையவில்லை. சபையின் முழு அமர்வில் கலந்து கொண்டு, பொறி பறக்கும் விவாதங்களில் சட்டப்பிரிவின் ஒரு வரைவு ஏன் மற்றொன்றை விட மேம்பட்டது என விளக்கினார். விவாதங்களின் போக்கையே தொடர்ந்து திசைமாற்றும் பணியிலும் அவர் அயராது ஈடுபட்டார். ஆகவே, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் உருவாக்கத்தில் அம்பேத்கர் மிக முக்கியமான பங்காற்றினார். இதுவே, ஏன் அருண் ஷோரி அவர் மீது இத்தனை வன்மமிகுந்த விமர்சனங்களை வைக்கிறார் என்பதை விளக்குகிறது. அருண் ஷோரியின் இன்னொரு வாதமான, காந்திய சிந்தனைகளை அம்பேத்கர் புறந்தள்ளினார் என்பதில் ஓரளவிற்கு நியாயம் இருக்கிறது.

காந்தியை பழிதீர்த்த மேற்கத்திய ஜனநாயகவாதி:

அம்பேத்கர் இளவயதில் வெளிநாட்டில் படித்த போது தான் உள்வாங்கிக்கொண்ட விழுமியங்களையும், அரசியல் மாதிரிகளையும் அரசியலமைப்பு சட்ட நிர்ணய சபையில் நியாயப்படுத்தினார். அவர் தாராளவாத ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டவராகத் திகழ்ந்தார். அரசியலமைப்பு சட்டத்தின் முதல் சட்டப்பிரிவில், இந்தியாவைச் ‘சோசியலிஸ்ட்’ என அறிவிப்பதில் துவங்கி, இந்திய குடியரசை முழுவதும் மாற்றியமைக்க முயன்ற இடதுசாரிகளை அம்பேத்கர் எதிர்த்தார். அப்படி, இந்தியக்குடியரசை சோசியலிஸ்ட் என்று அறிவித்து விட்டால், ‘அது ஜனநாயகத்தை எளிதாக அழித்துவிடும்’ என்று அவர் எண்ணினார்.7 மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசே எது மிகச்சிறந்த சமூக அமைப்பு என்பதை முடிவு செய்ய வேண்டும். இதனை, அவர் நவம்பர் 19, 1948 அன்று கீழ்கண்டவாறு விளக்கினார்:

‘ நாம் நம்முடைய அரசியலமைப்பு சட்டத்தின் வாயிலாக அரசியல் ஜனநாயகத்தை ஏற்படுத்தி இருக்கிறோம். எந்த வகையிலும் எந்த ஒரு குறிப்பிட்ட மக்கள் குழுவும் தொடர்ந்து சர்வாதிகாரத்தோடு கோலோச்ச கூடாது என்கிற காரணத்துக்காகவே அரசியல் ஜனநாயகத்தை உருவாக்கியுள்ளோம். நாம் அரசியல் ஜனநாயகத்தை நிறுவி விட்டோம் என்பதால், லட்சியவாதமிக்க பொருளாதார ஜனநாயகத்தையும் ஏற்படுத்த வேண்டும் என்று விருப்பப்படுகிறோம்… […] [இப்போது], பொருளாதார ஜனநாயகத்தை ஏற்படுத்துவதற்குப் பல்வேறு மக்கள் பல்வேறு வழிகளைக் கைக்கொள்ளலாம் என்று நம்புவார்கள். தனி உரிமை கோட்பாடே மிகச்சிறந்த பொருளாதார ஜனநாயகம் என்று சிலர் நம்புகிறார்கள்; வேறு சிலரோ சோசியலிச அரசே மிகச்சிறந்த பொருளாதார ஜனநாயகம் என்று கருதுகிறார்கள்; இன்னும் சிலர், கம்யூனிச சிந்தனைகளே மிகக் கச்சிதமான பொருளாதார ஜனநாயக வடிவம் என்று எண்ணுகிறார்கள் […] [இப்படிப்பட்ட சூழல்களில்] வழிகாட்டு நெறிமுறைகளில் நாங்கள் பயன்படுத்தியிருக்கும் மொழி திட்டமிட்டே இறுக்கமானதாக, நிலையானதாக எழுதப்படவில்லை. பல்வேறு வகையான சிந்தனைகள் கொண்ட பல்வேறு மக்களுக்குப் போதுமான இடத்தை வழங்கியுள்ளோம். லட்சியவாதமிக்க பொருளாதார ஜனநாயகத்தை அடைய அவரவரும் அவர்களின் சொந்த வழியில் முயற்சிக்கலாம். அவர்களின் வழியே பொருளாதார ஜனநாயகத்தை எட்டுவதற்கு மிகச்சிறந்த வழியாகும் என்று பொதுமக்களை நம்பவைக்க அவர்கள் முயலட்டும்.’8

இந்த வாதத்திற்குத் தன்னை உளமார ஒப்புக்கொடுத்ததன் அடையாளமாக, இயற்கை வளங்கள் அனைத்தையும் தேசியமயமாக்க வேண்டும் என்கிற அரசியலமைப்பு சட்ட திருத்தத்தை அவர் எதிர்த்தார். அந்தச் சட்டத்திருத்தம் வாக்களிப்பிற்குக் கூட எடுத்துக்கொள்ளப்படவில்லை. இது அம்பேத்கர் அரசியலமைப்பு சட்ட நிர்ணய சபையில் எத்தகைய அறரீதியான வல்லமை மிக்கவராக திகழ்ந்தார் என்பதற்கு அடையாளமாகத் திகழ்கிறது.9 அம்பேத்கர் தாராளவாத ஜனநாயகத்தின் மீது அளவற்ற பற்றுக் கொண்டிருந்தார் என்பதற்கு ஆதாரமாக ஒரு சம்பவம் நடைபெற்றது. எப்போதும், வரைவுக்குழுவால் இறுதி செய்யப்பட்ட சட்ட வடிவத்தை நியாயப்படுத்துவதையே அம்பேத்கர் செய்வார். ஆனால், ஒருமுறை அவ்வாறு சட்ட வடிவத்தைத் தாக்கல் செய்த போது, அதில் திருத்தம் மேற்கொள்ள வேண்டுமென்று முழு அமர்வை கேட்டுக்கொண்டார். அவர் தாக்கல் செய்த சட்டவடிவத்தைத் திருத்தி, அரசு நிர்வாக அதிகாரத்தையும் , நீதித்துறையையும் முழுமையாகப் பிரித்தே வைத்திருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.10 சில உறுப்பினர்கள், அரசின் அதிகாரத்துக்கு ஆதரவாக வாதிடுவதாகச் சொல்லிக்கொண்டு, நீதித்துறையின் மிகக்கடுமையான கட்டுப்பாடு அரசை பலவீனப்படுத்தும் என்றார்கள். நிற்க கூட நேரமின்றிப் பிரதமராக பல்வேறு பொறுப்புகளோடு இயங்கிக்கொண்டு இருந்த நேரு கூட, அம்பேத்கரின் சட்ட திருத்தத்தை ஆதரிக்கும் பொருட்டு விவாதத்தில் கலந்து கொண்டார்.11 இதன் விளைவாக, அம்பேத்கரின் பரிந்துரை ஏற்கப்பட்டு, இந்த முழுமையான அதிகாரப் பிரிப்பு, வழிகாட்டு நெறிமுறைகள் சட்டப்பிரிவு 50 ஆனது. பிரிட்டிஷ் நீதித்துறையின் தாக்கத்தில் ஒரு நீதிபரிபாலன முறையை ஏற்படுத்தி இருப்பதை அம்பேத்கர் பின்னர் நியாயப்படுத்திப் பேசினார்.12 அதிகாரங்களைப் பிரித்து வைப்பது, எந்த வகையிலும் அரசை பலவீனப்படுத்தி விடாது என்பது அவரின் பார்வையாக இருந்தது.

கூட்டாட்சி முறையினால் ஏற்படும் அதீதமான அதிகாரப்பரவலாக்கம், ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் ஒரு பொதுவான அரசியலமைப்புச் சட்டத்தை அமல்படுத்துவதைப் பாதிக்கும் என்பதால் அம்பேத்கர் வலிமைமிக்க மத்திய அரசையே ஆதரித்தார். எடுத்துக்காட்டாக, மாநிலங்களுக்குக் கூடுதலான சுயாட்சி கிடைத்தால், தீண்டாமை ஒழிப்பை கட்டாயமாக்கும் அரசியலமைப்பு சட்டப்பிரிவை அனைத்து மாநிலங்களும் ஒரே மாதிரி அமல்படுத்தாமல் போகக்கூடும் என்று வாதிட்டார்.13 காந்தியவாதிகள் கிராமத்தில் இருந்து துவங்கி எல்லா மட்டத்திலும் அதிகாரத்தைப் பரவலாக்க வேண்டும் என்கிற பார்வை கொண்டிருந்தார்கள். இதனால், அதிகாரத்தை மையப்படுத்த வேண்டும் என்கிற முடிவு, இயல்பாகவே காந்தியின் ஆதரவாளர்களைக் காயப்படுத்தியது. மிகவும் தீவிரமான காந்தியவாதிகளின் பரிந்துரைகளை அம்பேத்கர் புறந்தள்ளினார், அல்லது அவற்றின் தாக்கத்தை மட்டுப்படுத்தினார். இவ்வாறு அம்பேத்கர், மகாத்மா காந்தியின் மறைவுக்குப் பிறகு அவரைப் பழிதீர்த்துக் கொண்டார்.

அரசியலமைப்பு சட்ட வரைவுக்குழு, அரசியலமைப்புச் சட்டத்தை எழுத உபயோகப்படுத்திய எழுத்துக்கள் பெரும்பாலும் காந்திய பார்வை கொண்டவையாக இருக்கவில்லை. நேரு கொண்டுவந்த அரசியலமைப்பு சட்டத்தின் நோக்கங்கள் குறித்த தீர்மானத்தில் மகாத்மா காந்தியின் தாக்கம் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே தென்பட்டது. பல்வேறு குழுக்கள், துணைக்குழுக்களின் அறிக்கைகள் (இவற்றில் முக்கியமான குழுக்கள், துணைக்குழுக்களுக்கு நேரு, படேல் தலைமை தாங்கினார்கள்) காந்தி குறித்து மூச்சே விடவில்லை. இவற்றால் மட்டுமே, நவம்பர் 1948-ல் அம்பேத்கர் சமர்ப்பித்த அரசியலமைப்புச் சட்டத்தில் காந்தியத்தின் முத்திரை இல்லாமல் போனது என்பதற்கு இல்லை. அம்பேத்கர் தாக்கல் செய்த சட்ட வடிவத்தில், மலைப்பை ஏற்படுத்தும் வகையில் 315 சட்டப்பிரிவுகள் இருந்தன. இதனால் தான், அம்பேத்கர் அப்பட்டமான நிறைவோடு, ‘உலகத்தின் வேறு எந்த அரசியலமைப்பு சட்டமும் இத்தனை பெரிதில்லை.’ என்றார்.14 அதற்குப் பின்னர், அம்பேத்கர், அரசியலமைப்புச் சட்டத்தில் கிராமங்களுக்கு இடமில்லை என்கிற காந்தியவாதிகளின் விமர்சனத்தைக் கீழ்கண்டவாறு தவிடுபொடியாக்கினார்:

‘வரைவு அரசியலமைப்பு சட்டத்தின் மீது வைக்கப்படும் இன்னுமொரு குற்றச்சாட்டு உண்டு. அது பண்டைய இந்திய ஆட்சியமைப்பை எந்த வகையிலும் பிரதிபலிக்கவில்லை என்பதே அந்தக் குற்றச்சாட்டாகும். புதிய அரசியலமைப்புச் சட்டத்தைப் பண்டைய இந்து அரசை மாதிரியாகக் கொண்டு உருவாக்கியிருக்க வேண்டும் என்கிறார்கள். மேற்கின் கோட்பாடுகளை ஏற்றுக்கொண்டதற்குப் பதிலாக, புதிய அரசியலமைப்புச் சட்டத்தைக் கிராம, மாவட்ட பஞ்சாயத்துகளை அடிப்படையாகக் கொண்டு கட்டியெழுப்பி இருக்க வேண்டும் என்றும் சொல்கிறார்கள். இன்னும் சிலர், இன்னமும் தீவிரமான காந்தியப்பார்வை கொண்டவர்களாக இருக்கிறார்கள். இந்தியாவில் எந்த மத்திய, மாநில அரசுகளும் அவர்களுக்கு வேண்டாம். அவர்களுக்கு இந்தியாவில் ஏராளமான கிராம அரசுகள் மட்டும் இருந்தால் போதுமானது. அறிவார்ந்த இந்தியர்கள் கிராம சமூகத்தின் மீது கொண்டிருக்கும் காதல் பரிதாபப்படும்படியாக இல்லாவிடினும், அளவில்லாததாக இருக்கிறது. […] கிராமம் என்னவாக இருக்கிறது? உள்ளூர் பெருமிதம் ஊற்றெடுக்கும் சாக்கடையாக, அறியாமை, குறுகிய மனப்பான்மை, வகுப்புவாதத்தின் கிடங்காக அல்லவா இருக்கிறது. வரைவு அரசியலமைப்புச் சட்டம் கிராமத்தை தூக்கி எறிந்துவிட்டு, தன்னுடைய அடிப்படையாகத் தனிமனிதனை ஏற்றிருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.’15

தமிழில்: பூ.கொ.சரவணன்

(இப்பகுதிகள் ‘அம்பேத்கரும், சாதி ஒழிப்பும்’ எனும் மொழியாக்கத்தில் இருந்து எடுத்தாளப்பட்டுள்ளன. நூலை வாங்க: https://www.amazon.in/Ambedkarum-Saathi-Ozhippum-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/dp/9386737663/ref=mp_s_a_1_1?keywords=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D&qid=1574734728&sprefix=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87&sr=8-1#mediaMatrix_secondary_view_div_1574734735906)

மகத்தான மகத் போராட்ட வரலாறு – கிறிஸ்தோஃப் ஜாஃப்ரிலா


மகத் சத்தியாகிரகம் அம்பேத்கரால் மார்ச் 20 அன்று 1927-ல் நிகழ்த்தப்பட்டது. அதைப்பற்றி பேராசிரியர் கிறிஸ்தோஃப் ஜாஃப்ரிலா எழுதிய ‘அம்பேத்கரும், சாதி ஒழிப்பும்’ நூலில் காணப்படும் பக்கங்கள் உங்கள் வாசிப்புக்காக:

மார்ச் 1927-ல் ஒரு மாநாட்டை அம்பேத்கர் மகத்தில் கூட்டினார். இந்த மாநாட்டிற்குத் தலித் அல்லாத தலைவர்கள் ஆதரவு நல்கினார்கள். காயஸ்தரான எஸ்.திப்னிஸ், பூனாவில் பிராமணரல்லதோர் இயக்கத்தின் தலைமை பொறுப்பில் இருந்தவரும், அம்பேத்கர் வழக்கேற்று நடத்தியவருமான கே.எம்.ஜெத்தே ஆகியோர் இந்த மாநாட்டுக்கு ஆதரவு தந்தார்கள். மகத்தில் அம்பேத்கர் ஆற்றிய தலைமை உரை சமஸ்கிருதமயமாக்கலின் இலட்சியங்களை நோக்கிய பயணமாக இருந்தது:

‘நாம் காலத்திற்கும் நிலைத்து நிற்கும் முன்னேற்றத்தை எட்ட மூன்று கட்ட சுத்திகரிப்பிற்கு நம்மை நாமே ஆட்படுத்திக் கொள்ள வேண்டும். நம்முடைய நடத்தையின் பொதுவான தொனியை மேம்படுத்திக் கொள்ள வேண்டும், நம்முடைய உச்சரிப்பை செம்மைப்படுத்த வேண்டும், நம்முடைய சிந்தனைகளைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். ஆகவே, இந்தக் கணத்தில் இருந்து நீங்கள் அழுகிப்போன இறைச்சியை உண்பதை துறப்பீர்கள் என்று உறுதி பூணுமாறு கேட்டுக்கொள்கிறேன்.’

இதற்குப் பிறகு அம்பேத்கர் ஒரு ஊர்வலத்திற்குத் தலைமை தாங்கினார். அவர் பேசிய மேடையில் துவங்கிய அந்த ஊர்வலம், சவுதார் குளத்தில் முடிந்தது. தண்ணீர் மூலமான அந்தக் கிணறு எழுத்தளவில் தீண்டப்படாத மக்களுக்குத் திறந்திருந்தது. ஆனால், அந்தக் குளத்தைப் பயன்படுத்த தீண்டப்படாத மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. காந்தி தண்டி யாத்திரையின் போது உப்பை கையில் எடுத்ததைப் போல, சாதி தடையை உடைத்ததன் அடையாளமாக, கம்பீரமாக அம்பேத்கர் குளத்தில் இருந்து நீரை எடுத்து பருகினார். இந்த அத்துமீறல் தங்களை உசுப்பேற்றுகிற செயல் என்று கருதிய உள்ளூர் உயர் சாதி இந்துக்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் கூட்டம் நடந்த இடத்திற்குத் திரும்பிக்கொண்டு இருந்த போது தாக்கினார்கள்.

அடுத்தடுத்த நாட்கள், வாரங்களில் மகத்தின் உயர் சாதியினர் தீண்டப்படாத மக்களைச் சமூகப் புறக்கணிப்பிற்கு ஆட்படுத்தினார்கள். சமயங்களில் அவர்களை வேலையை விட்டு நீக்குவது, உழுது கொண்டிருந்த நிலத்தை விட்டு வெளியேற்றுவது ஆகிய செயல்களிலும் ஈடுபட்டார்கள். இவை எல்லாவற்றுக்கும் மேலாக, ஆகஸ்ட் 4,1927 அன்று மகத் நகராட்சி மூன்றாண்டுகளுக்கு முன்னால் சவுதார் குளத்தைத் தீண்டப்படாத மக்கள் பயன்படுத்தலாம் என்கிற தன்னுடைய 1924-ம் ஆண்டு உத்தரவை திரும்பப் பெற்றுக்கொண்டது. அம்பேத்கர் இரண்டாவது கூட்டத்தைக் கூட்டினார். இதில் ஒரு புதிய வகையான போராட்டம் உருப்பெற்றது. இந்த இரண்டாவது மகத் மாநாடு டிசம்பர் 1927-ல் நடைபெற்றது. அம்பேத்கரின் பேச்சு சாதி அமைப்பை அக்குவேர், ஆணிவேராக அறுத்தெறிய அறைகூவல் விடுத்தது. அவர் பிரெஞ்சு புரட்சியின் முழக்கங்களை நினைவுகூர்ந்தார். மகத் மாநாட்டை, மூன்றாவது எஸ்டேட் பிரெஞ்சு புரட்சியை ஒட்டுமொத்தமாக, அதிகாரப்பூர்வமாக அறிவித்த ‘Etats Generaux de Versailles’ நிகழ்வோடு ஒப்பிட்டார்.

‘துவக்கத்திலேயே நான் உங்களுக்கு ஒன்றை கூறிக் கொள்கிறேன். இந்தச் சவுதார் குளத்தில் இருந்து தண்ணீர் குடிக்க வேண்டாம் என்பதற்காகக் கலைந்து செல்லவில்லை. இப்போது அந்தக் குளத்திற்குள் நாங்க நுழைய விரும்புவதற்கு ஒரே காரணம் தான் உண்டு…நாங்களும் மற்றவர்களைப் போல மனிதர்கள் என்று நிரூபிக்க விரும்புகிறோம் […] இந்த மாநாட்டைக் கூட்டியதன் மூலம் இந்த மண்ணில் சமத்துவச் சகாப்தத்தைத் துவக்கி வைத்துள்ளோம். தீண்டாமையை அகற்றுவது, அனைத்து சாதியினரும் கலந்து உணவுண்ணும் சமபந்தி ஆகியவை மட்டுமே நமக்கு ஏற்பட்டிருக்கும் கொடுமைகளுக்கு முடிவு கட்டிவிடாது. நீதிமன்றங்கள், ராணுவம், காவல்துறை, வியாபாரம் முதலிய அனைத்து சேவைத்துறைகளும் நமக்குத் திறந்து விடப்பட வேண்டும் […] இந்து மதம் சமத்துவம், சாதிய ஒழிப்பு ஆகிய இரண்டு முக்கியக் கொள்கைகளின் மீது மறு கட்டமைப்பு செய்யப்பட வேண்டும்.’

இந்தப் பேச்சை தொடர்ந்து மனித உரிமை அறிக்கை, மனிதர்களுக்கான பிரிக்க முடியாத சமத்துவத்தை ஆதரிக்கும் தீர்மானம் ஆகியவை கைகளை உயர்த்தி வாக்கெடுப்பு நடத்தி நிறைவேற்றப்பட்டன. இந்த மாநாட்டில் இன்னும் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒரு தீர்மானம் இந்து சமூகத்தின் உட்பாகுபாடுகள் முற்றாக ஒழிக்கப்பட்டு ஒரே மக்கள் குழுவாக இணைய வேண்டும் என்றது. இரண்டாவது தீர்மானம் அர்ச்சகர் தொழிலை அனைத்து சாதியினருக்கும் உரியதாக ஆக்க வேண்டும் என்றது. இறுதியாக, பல்வேறு பேச்சாளர்களும் மனுஸ்மிருதியை கடுமையாகத் தாக்கினார்கள். அந்நூலின் ஒரு பிரதி மேடையின் முன்னால் இருந்து பீடத்தின் மீது வைக்கப்பட்டிருந்தது. மனுஸ்மிருதியை ஒரு தலித் துறவி கம்பீரமாக எரித்தார்.

அடுத்த நாள், சவுதார் குளத்திற்குள் இலவச நுழைவை பெறுவதற்கான சத்தியாகிரகத்தை அம்பேத்கர் துவங்கினார். அதில் நான்காயிரம் தன்னார்வலர்கள் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்தார்கள். சவுதார் குளம் தனியார் சொத்து என்று சொல்லி மேல்சாதி இந்துக்கள் நீதிமன்றத்தை நாடியிருந்தார்கள். ஆகவே, மாவட்ட மாஜிஸ்ட்ரேட் தீர்ப்பு வரும்வரை அமைதியாகக் காத்திருக்குமாறு கேட்டுக்கொண்டார். இதனால், அம்பேத்கர் போராட்டத்தை ஒத்திவைத்து விட்டு, நீர்நிலையைச் சுற்றி ஒரு ஊர்வலத்தை நடத்தினார். இந்த அணுகுமுறை இப்படிப்பட்ட சூழல்களில் வருங்காலத்தில் அவர் பின்பற்றப்போகும் யுக்தியை ஒத்திருந்தது. அந்த யுக்தியானது பிரச்சினைகளை வீதிகளில் தீர்த்துக் கொள்வதை விட, நீதிமன்றத்திடம் அவற்றை ஒப்புக்கொடுப்பதே ஆகும். இது சட்டத்தை முழுமையாகச் சார்ந்திருப்பது, அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு நடப்பது என்கிற அம்பேத்கரின் பாணியை வெளிப்படுத்துகிறது. குறிப்பாக, அம்பேத்கரின் நிலைப்பாடு சரியென்று நீதிமன்றங்கள் 1937-ல் தீர்ப்பளிக்கும்.

தமிழில்: பூ.கொ.சரவணன்

நூலினை வாங்க: https://www.amazon.in/Ambedkarum-Saathi-Ozhippum-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/dp/9386737663/ref=sr_1_1?s=digital-text&ie=UTF8&qid=1553070070&sr=8-1&keywords=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D

தண்ணீரும், விடுதலையும்- அம்பேத்கரின் மகத் போராட்டமும், காந்தியின் உப்பு சத்தியாகிரகமும் நமக்குச் சொல்வது என்ன?


தண்ணீரும், விடுதலையும்- அம்பேத்கரின் மகத் போராட்டமும், காந்தியின் உப்பு சத்தியாகிரகமும் நமக்குச் சொல்வது என்ன? – பேராசிரியர் சுனில் அம்ரித்

இன்று மகத் சத்தியாகிரகம் நிகழ்ந்த நாள். (மார்ச் 20, 1927)

தண்ணீரை அறுவடை செய்வது என்பது இயற்கையின் ஏற்றத்தாழ்வுகளைச் சீர்செய்வது. அது எல்லாப் பகுதிகளுக்கும் சமமாகப் பொழியாத பருவமழையைச் சீராகப் பங்கிட்டு வழங்க முயல்வது. மேலும், மழைக்காக வானம் பார்த்திருக்கும் பகுதிகளில் காலந்தப்பிப் பெய்யும் மழையின் நம்பகத்தன்மையற்ற போக்கில் இருந்து பாதுகாக்க முனைவதும் ஆகும். அதேவேளையில், தண்ணீரானது ஏற்றத்தாழ்வை வளர்த்தெடுக்கும் இயந்திரமாகவும் திகழ்கிறது. மக்களிடையே, வர்க்கங்கள் மற்றும் சாதிகள் இடையே, நகரத்துக்கும் -கிராமத்துக்கும் இடையே, பகுதிகளுக்கு இடையே என்று தண்ணீரால் நிகழ்த்தப்படும் பாகுபடுத்தல் கவனத்துக்கு உரியது. தண்ணீரை கட்டுப்படுத்துவது என்பதற்கு அதிகாரத்தின் ஊற்று. தண்ணீரின்றித் தவிப்பது என்பது தொடர்ந்து கொண்டே இருக்கும் ஒதுக்கி வைப்பின் அடிப்படையாகும். பத்தொன்பதாம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகளில் தண்ணீரானது பல்வேறு விடுதலைப் போராட்டங்களின் மைய நாதமாகத் திகழ்ந்தது. ஆனால், இந்த விடுதலை உண்மையில் யாருக்கான விடுதலை?

இந்தக் கேள்வி இந்தியாவின் மேற்குப்பகுதியில் பூனாவிற்கு அருகில் உள்ள மகத் நகரில் தீவிரமாக மார்ச், 1927-ல் எதிரொலித்தது. அந்தப்பகுதியின் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் – இந்து சாதி அமைப்பில் இருந்தில் விலக்கி வைக்கப்பட்டவர்கள், முற்காலத்தில் தீண்டப்படாதவர்கள் என்று அறியப்பட்டவர்கள். ஆதிக்க சாதி இந்துக்களால் தொழில் சார்ந்து பாகுபடுத்தப்பட்டு அவர்களின் வாழ்க்கை அனுதினமும் நரக வேதனைக்கு ஆளாகிற ஒன்றாக இருந்தது. மேல் சாதி இந்துக்கள் அவர்களை வன்முறை,
பொருளாதார வளங்களைப் பிடுங்கிக்கொள்வது ஆகியவற்றின் மூலம் கொடுமைக்கு ஆட்படுத்தினார்கள். மகத் நகரில் உள்ளூர் குளத்தில் குடிநீர் எடுக்கும் உரிமை தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மேல்சாதி இந்துக்களால் மறுக்கப்பட்டது. இப்படிக் குளத்தை அவர்கள் பயன்படுத்தக் கூடாது என்று விலக்கி வைப்பது சட்டத்துக்குப் புறம்பானது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்த பின்பும், அந்த அநீதி தொடர்ந்தது. இன்றும் இத்தகைய அநீதி எண்ணற்ற இந்திய நகரங்கள், கிராமங்களில் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. தலித் தலைவரான பீமாராவ் அம்பேத்கர் – மேற்கு இந்தியாவின் ஏழைக் குடும்பத்தில் பிறந்த அவர் அறிவுத்திறமிக்க வழக்கறிஞர். லண்டன் ஸ்கூல் ஆப் எகானமிக்ஸ், கொலம்பியா பல்கலைக்கழங்களில் பட்டம் பெற்ற அந்த ஆளுமை மகத் குளம் நோக்கி மக்களை அணிவகுத்தார். அந்தக் குளத்தில் இருந்து ஒரு குவளை தண்ணீரை அடையாளப்பூர்வமாக அள்ளிக் குடித்தார். தங்களுடைய சமூக ஆதிக்கத்துக்கு ஊறு நேர்ந்து விட்டதாக அஞ்சிய உள்ளூர் சாதி இந்துக்கள் உடனடியாக மிருகத்தனமாக வன்முறை வெறியாட்டம் ஆடினார்கள். தலித்துகள் தாக்கப்பட்டார்கள்; பலரின் வேலை பறிபோனது. “பிறரைப் போல நாங்களும் மனிதர்கள் தான் என்று நிறுவவே குளம் நோக்கி நடைபோடுகிறோம்” என்று அம்பேத்கர் அறிவித்தார். நான்காயிரம் தன்னார்வமிக்க மக்களோடு சத்தியாகிரகத்தைத் தொடங்கினார். கடைசி நிமிடத்தில், நீதிமன்றங்கள் தன்னுடைய சமூகத்திற்கு நியாயம் வழங்கும் என்கிற நம்பிக்கையில் போராட்டத்தைத் தள்ளிவைத்தார். அம்பேத்கரின் நம்பிக்கை சரி தான் என்று நிரூபணமாகப் பத்தாண்டு ஆகிற்று. சாதி இந்துக்கள் அக்குளம் தனியார் சொத்து, ஆகவே, குளத்தின் நீரை யார் அருந்தலாம், யார் பருகக்கூடாது என்று விலக்கி வைக்கும் உரிமை தங்களுக்கு உண்டு என்கிற சாதி இந்துக்களின் வாதத்தை ஏற்க மறுத்து, அக்குளத்தைப் பயன்படுத்த அனைவருக்கும் உரிமையுண்டு என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

விரிவான தளத்தில் அணுகினால், இந்திய தேசிய இயக்கத்தின் மையமாக ஒரு பதற்றம் திகழ்ந்தது. ஒரு அரசியல் கருத்தியலாளர் (சுதீப்தா கவிராஜ்) விவரிப்பதை போல, அது எந்த விடுதலையை உடனே அடைந்திட வேண்டும் என்கிற பதற்றம் ஆகும். ஒரு பக்கம், “சாதி ஆதிக்கத்தில் இருந்து சமூக விடுதலை” என்கிற பார்வையும்,
இன்னொருபுறம், “காலனிய ஆட்சியில் இருந்து அரசியல் விடுதலை”யே உடனடி அவசரத்தேவை என்கிற பார்வையும் மோதிக்கொண்டன. இந்த விவாதத்தின் எதிரெதிர் பக்கங்களில் அம்பேத்கரும், காந்தியும் நின்றார்கள். இந்திய முஸ்லீம்களைப் போலப் பிரிட்டிஷ் சட்ட அவைகளில் தலித்துகளுக்கும் தனித்தொகுதிகள் மூலம் பிரதிநிதித்துவப்பட வேண்டுமா என்கிற விஷயத்தில் மோதிக்கொண்டார்கள். இருவருமே தண்ணீரை அடையாளரீதியாகவும், அதனுடைய பொருளாதாரப் பலத்திற்காகவும் பயன்படுத்தினார்கள் என்பது வெறும் விபத்தல்ல. 1930-ல் தண்டி கடற்கரை நோக்கி காந்தி மேற்கொண்ட “உப்பு யாத்திரை” அவரின் பெரும்வெற்றி பெற்ற, மனதைவிட்டு அகலாத போராட்டங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. தன்னுடைய சத்தியாகிரகத்தின் அடையாளப்புள்ளியாக அவர் ஆங்கிலேயரின் உப்பு வரியை தேர்ந்தெடுத்தார். “காற்று, தண்ணீருக்கு அடுத்தபடியாக உப்பே வாழ்க்கைக்கு மிகவும் இன்றையமையாதது ஆகும்’ . உப்பின் முக்கியப் பண்புகள் கடற்கரைசார் சூழல் மண்டலத்தை நாட்டின் உட்பகுதியில் வாழும் பல லட்சம் மக்களோடு இணைக்கிறது. காந்தியின் பார்வையில், கொடும் வறுமையில் உழலும், வெயிலில் அயராது பாடுபடும் ஏழைகளுக்கே உப்பு அதிகமாகத் தேவைப்படுகிறது. இது பருவநிலை, சமூகம் சார்ந்த வாதமாகும். அம்பேத்கரின் மகத் நோக்கிய பயணம் தண்ணீர் என்பது முகத்தில் அறையும் சமூக ஏற்றத்தாழ்வின் குறியீடாகத் தண்ணீர் திகழ்வதைக் கவனப்படுத்தியது. காந்தி தண்ணீரை ஒற்றுமைக்கான அடையாளமாகப் பயன்படுத்தினார். முப்பதுகளில் தண்ணீர், தண்ணீர் வளங்களைச் சுற்றி வேறுபட்ட உரிமை கோரல்கள் இந்தியாவிலும், உலகம் முழுக்கவும் அரங்கேறியது.

(ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தெற்காசிய ஆய்வுத்துறை பேராசிரியராகத் திகழ்கிறார் சுனில் அம்ரித். அவரின் ‘Unruly Waters- How Rains, Rivers, Coasts and Seas have developed Asia’s history’ நூலின் ஆறாவது அதிகாரத்தில் இருந்து மேற்கண்ட பத்தி மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. )

தமிழில்: பூ.கொ.சரவணன்

அம்பேத்கரை அறிவோம் : வழக்கறிஞர் அம்பேத்கர்


‘சட்ட மேதை அம்பேத்கர்’, ‘இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் தந்தை’ என்றும் மெச்சப்படுகிற அண்ணலின் இந்த இரு பட்டங்களுக்கு இடையே ஒளிந்து கொண்டிருக்கும் அற்புதம் ஒன்றுள்ளது. அது வழக்கறிஞர் அம்பேத்கர். ரோஹித் தே யேல் பல்கலையில் வரலாற்றுத் துறையில் பணியாற்றுகிறார். அவர் ‘People’s Constitution’ என்கிற தலைப்பில் எளிய மக்கள் எப்படி இந்தியாவின் அரசியலமைப்பை செதுக்கினார்கள் என்கிற நூலை எழுதியுள்ளார். அவரின் தேடலில் அம்பேத்கர் எப்படிப் பிரமிக்க வைக்கும் மனிதம் மிக்க வழக்கறிஞராக ஒளிர்ந்தார் என்பது தெளிவாகிறது.

‘சட்ட பயிற்சியும், பொது வாழ்வும் என் வாழ்வின் இரு மின்னோட்டங்கள். இவற்றில் நேர்திசை/மாறுதிசை மின்னோட்டம் எதில் என் வாழ்க்கை முடியுமா எனத் தெரியவில்லை.’- அம்பேத்கர் ஜலந்தரில் அக்டோபர் 15,1956-ல் ஆற்றிய உரையிலிருந்து…

அம்பேத்கர் வாழ்க்கையில் அவரின் பன்முக ஆளுமை பற்றிப் பலரும் பேசி காணமுடிகிறது. அவரின் அரசியல் செயல்பாடுகள், வரலாறு, சமூகம் குறித்த எழுத்துகள், சட்ட வல்லுநர், இந்திய அரசியலமைப்பு சட்ட மேதை என்றெல்லாம் அப்பட்டியல் நீள்கிறது. ஆனால், வழக்கறிஞராக அவரின் வாழ்வும், பணியும் புறக்கணிக்கப்பட்டே வந்திருக்கிறது.

இத்தனைக்கும் அம்பேத்கர் 1916 சட்டம் படிக்கக் கிரேஸ் இன்னிற்குள் நுழைந்தார். அவருக்கு வழங்கப்பட்டு வந்த உதவித்தொகை நின்று போனதால் சட்டப்படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு இந்தியா திரும்பினார். எளிமையான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு, சிடேன்ஹாம் கல்லூரியில் பொருளாதாரப் பேராசிரியராக வேலை பார்த்தார். வெளியே ட்யூசன் நடத்தி அதில் கிடைத்த பணத்தைச் சேமித்து 1923-ல் பெரும் போராட்டங்களுக்குப் பிறகு வழக்கறிஞர் ஆனார்.

நண்பரிடம் கடன்வாங்கிய ஒரு சிறிய இடத்தில் பம்பாயில் தன்னுடைய அலுவலகத்தை அண்ணல் அம்பேத்கர் திறந்தார். அம்பேத்கர் வழக்கறிஞராக நீதிமன்றங்களில் செயல்பட்ட விதத்தால் இருமுறை பம்பாய் உயர்நீதிமன்ற நீதிபதியாகும் வாய்ப்புகள் வந்தன. அவற்றை அம்பேத்கர் ஏற்கவில்லை. இத்தனைக்கும் அவரின் பொருளாதார நிலைமை சொல்லிக்கொள்ளும்படி இருக்கவில்லை. காந்தி, ஜின்னா, நேருவைப் போல அவருடைய சட்டப்படிப்பிற்கு அவருடைய குடும்பம் செலவு செய்யக்கூடிய நிலையில் இருக்கவில்லை. தானே பொருளீட்டி அதன்மூலம் அவர் வழக்கறிஞர் ஆனார்.

இந்தியாவில் சமூக, அரசியல் தளங்களில் சுதந்திரமாகச் செயல்பட வழக்கறிஞர் தொழிலே உதவுகிறது என்பது அம்பேத்கரின் பார்வை. இதனால் தான் தன்னுடைய விடுதலை உணர்ச்சியை நீதிபதி பதவி மழுங்கடித்துவிடும் என்று கருதி ஹைதராபாத் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகும் வாய்ப்பை ஏறெடுத்தும் அவர் பார்க்கவில்லை.

சட்டம் படிப்பது சவாலாக இருந்தது ஒருபுறம் என்றால், வழக்கறிஞராகக் கோலோச்ச குடும்ப, சமூகத் தொடர்புகள் தேவைப்பட்டன. காந்திக்கு அவருடைய சமூக உறவுகள் வழக்கறிஞர் தொழிலில் கால் ஊன்ற உதவின. மோதிலால் நேரு தன்னுடைய அண்ணனின் வழக்கறிஞர் தொழிலில் இணைந்து கொண்டார். அம்பேத்கருக்கு இப்படிப்பட்ட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. வாதியாக இருப்பதே வருமானம் அதிகமாகத் தரும் என்கிற சூழலில் தொடர்புகள் இல்லாததால் பிரதிவாதியின் வழக்கறிஞராக இருக்கிற முடிவையே அம்பேத்கர் எடுத்தார்.

அவரின் சட்டப் பயிற்சிக்கான முக்கியமான காரணம் அது சமூகச் சேவையில் ஈடுபடத் தடையாகாது என்பதோடு, பிற பணிகளில் ஈடுபடப் போதுமான நேரத்தை வழங்கும் என்பதும் காரணமாக இருந்தது. அம்பேத்கர் எந்தளவிற்குப் போராட வேண்டியிருந்தது என்பதை ஜனவரி 9, 1929-ல் வெளிவந்த டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்திக்குறிப்பு வெளிப்படுத்துகிறது. ஜின்னா 2.5 லட்சம் மதிப்புள்ள திவால் நோட்டீஸ் வழக்கில் ஆஜரானார். அம்பேத்கரோ 24 ரூபாயை தராமல் ஏமாற்றியதாகக் குற்றம் சாட்டப்பட்ட இஸ்லாமியர் ஒருவருக்காக வாதாடினார். அம்பேத்கர் அரசியல் களத்திலும் இயங்குகிற ஒருவராக இருந்ததோடு, வழக்கறிஞர் தொழிலை வருமானம் ஈட்டுகிற மூலமாக அவர் பார்க்காதது குறிப்பிடத்தக்கது. இதன் விளைவாக, அம்பேத்கர் சமூக உரிமைகளுக்காக நீதிமன்றங்களில் வாதாடிய முன்னோடியாகத் திகழ்கிறார். அந்த நினைவு கூர்ந்தே ஆகவேண்டிய பயணத்தில் நடைபோடுவோம்.

அம்பேத்கர் பங்குபெற்ற பெரிய குற்றவியல் வழக்கு என்றால் பிலிப் ஸ்ப்ராட் எனும் கம்யூனிச தலைவர் மீது பிரிட்டிஷ் அரசாங்கம் தொடுத்த தேசத்துரோக வழக்கை சொல்லலாம். இந்த வழக்கில் அம்பேத்கர் ஜுனியராகப் பங்குகொண்டார். ஸ்ப்ராட் ‘இந்தியாவும், சீனாவும்’ என்கிற படைப்பில் ஆங்கிலேயே ஏகாதிபத்தியத்திற்கு எதிராகச் சீனர்களைப் போல ஆயுதமேந்தி இந்தியர்கள் போராட வேண்டும் என்று அறைகூவல் விடுத்து இருந்தார். திலகர், அன்னி பெசன்ட் முதலியோரின் மீது கடந்த காலத்தில் தொடுக்கப்பட்ட தேசத்துரோக வழக்குகளை மேற்கோள் காட்டி அரசாங்கத்திற்கு எதிரான வெறுப்பை வளர்க்கவில்லை, ஏகாதிபத்தியத்திற்கு எதிராக மட்டுமே அவர் எழுதினார் என்கிற வாதம் முன்வைக்கப்பட்டது.

தன்னை ஐரோப்பியர்கள் இருக்கும் ஜுரி முன்பு நிறுத்த வேண்டாம் என்று ஸ்ப்ராட் வாதிட்டார். அம்பேத்கர், ஜின்னா உள்ளிட்டோரின் உழைப்பால் அவர் விடுதலையானார். தேசியவாதிகளைக் கடுமையாக விமர்சித்த ஸ்ப்ராட்டின் விடுதலையைக் கொண்டாடிய விழாவிற்குத் தலைமை தாங்கியவர் சரோஜினி நாயுடு. இடதுசாரிகளோடு பல வேளைகளில் முரண்பட்ட அம்பேத்கரும், தேசியவாதியான சரோஜினி நாயுடுவும் தேசியவாதிகளைக் குத்திக் கிழித்த இடதுசாரியான ஸ்ப்ராட்டிற்கு ஆதரவாக ஏன் அப்படி நடந்து கொண்டார்கள்? அரசாங்கத்தை விமர்சிப்பதற்கான எதிராளியின் உரிமையைக் காப்பதன் அவசியத்தை அவர்கள் உணர்ந்திருந்தார்கள்.

அம்பேத்கர் இடதுசாரிகளை அவர்களிடையே நிலவும் உயர்சாதி ஆதிக்கம், வன்முறை ஆதரவு ஆகியவற்றுக்காக விமர்சித்தாலும் தொழிலாளர் யூனியன்களோடு பல்வேறு தருணங்களில் இணைந்து இயங்கினார். தொழிலாளர் தலைவர்கள்,தொண்டர்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்குகளில் அம்பேத்கர் முதல் ஆளாக நின்று வாதாடினார். V.B. கர்னிக் , மணிபென் கரா, B.T.ரணதிவே, அப்துல் மஜித் முதலிய கம்யூனிச தலைவர்கள் ஆலைத் தொழிலாளர்களைப் போராட்டம் செய்யத் தூண்டிவிட்டதாகவும், அது சமூகத்திற்குக் கேடாக முடிந்ததாகவும் வழக்குப் பிரிட்டிஷ் அரசால் தொடரப்பட்டு இருந்தது.

அம்பேத்கர் வழக்கில் கம்யூனிச தோழர்களுக்காக வாதாடினார். குறுக்கு விசாரணையின் உச்சம் என்கிற அளவுக்கு அரசுத்தரப்பை தன்னுடைய கூர்மையான கேள்விகளால் அண்ணல் துளைத்து எடுத்தார். மிகவும் மெனக்கெட்டு அரசு தயாரித்து இருந்த சாட்சிகள் அம்பேத்கரின் வினாக்கள், துல்லியமான தாக்குதல்கள் முன்பு சரிந்து விழுந்தன. இந்தப் போராட்டங்கள் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தின என்கிற முதலாளிகளின் வாதத்தை அவர்களின் வாயாலேயே பொய்யென்று அம்பேத்கர் நிறுவிய மேதைமையைப் பத்திரிகைகள் சிலாகித்து எழுதின.

இதோடு நில்லாமல், சத்தியாகிரகிகளுக்காகவும் அம்பேத்கர் வாதாடி வென்றார். சிர்னார் வனப்பகுதியில் சத்தியாகிரகிகள் போராட திரண்டார்கள். காவல்துறை கண்மூடித்தனமாகத் துப்பாக்கி சூட்டை நடத்தியது. இதனை அடுத்து மூண்ட கலவரத்தில் நான்கு அரசு அதிகாரிகள் கொல்லப்பட்டார்கள். நாற்பத்தி ஏழு பேர் மீது கொள்ளை, கொலை, சட்டத்துக்குப் புறம்பாகக் கூடியது என்று பல்வேறு குற்றச்சாட்டுகளைப் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் படித்தது. அம்பேத்கர் அரசுத்தரப்பை கதிகலங்க வைத்தார் என்றால் மிகையில்லை. அரசாங்கத்தின் அடக்குமுறையை அம்பலப்படுத்தினார். காவல்துறையின் வன்முறையை ஆதாரங்களோடு நிறுவினார். ஆயிரக்கணக்கான பேர் சேர்ந்து தீட்டிய சதித்திட்டம் என்கிற அரசாங்க வாதம் எவ்வளவு நகைப்புக்குரிய ஒன்று என்பதைத் தன்னுடைய வாதத்திறமையால் நிறுவினார். அரசியல்ரீதியாக முரண்பட்ட இருதரப்பின் சமூக உரிமைகளுக்காகச் சளைக்காமல் அவர் சமராடினார் என்பதே நெகிழ வைக்கிறது.

கேசவ் ஜெத்தே என்பவர் பிராமணிய அடிமைச்சிந்தனைகளைத் தூக்கிப்பிடித்த திலகர், சிபுலுங்கர் முதலிய தலைவர்களை “Deshache Dushman” நூலில் தேசத்தின் எதிரிகள், கழுதைகளின் பிள்ளைகள் என்றெல்லாம் தாக்கி எழுதினார். இந்நூல் தடை செய்யப்பட்டதோடு, ஒரு பிராமணர் அவதூறு வழக்கினை தொடர்ந்தார். இந்த வழக்கில் ஆஜரான அம்பேத்கர் அவதூறு வழக்கை இறுக்கமாகப் பொருள் கொள்ள வேண்டும் என்று வாதிட்டார். அவதூறு செய்யப்பட்டதாகச் சொல்லப்படும் திலகர் உள்ளிட்ட யாரும் உயிரோடு இல்லை. மேலும், அவதூறு செய்யப்பட்டவர்களோ அவர்களோடு தொடர்புடையவர்கள் மட்டுமே வழக்கைத் தொடர முடியும் என்பதால் இந்த வழக்கில் தண்டனை வழங்க முடியாது என்று சாமர்த்தியமாக வாதிட்டார். வழக்கு பிசுபிசுத்துப் போனது.

மகளிர் நலம், முன்னேற்றம் சார்ந்து இயங்கிய கார்வே மீது ஆபாசத்தைப் பரப்பியதாக வழக்குப் போடப்பட்டது. காரணம் இதுதான் : அவர் குடும்பக் கட்டுப்பாடு, பாலியல் நலம் குறித்த பரப்புரை நூல்களைப் பதிப்பித்தார். இந்த வழக்கில் அம்பேத்கர் மீண்டும் காலனிய சட்டத்தை இறுக்கமாகவே பொருள்கொள்ள வேண்டும் என்கிற வாதத்தை முன்வைத்தார். ஆபாச எழுத்து என்பது மலினமானவர்களின் மனதை களங்கப்படுத்தக்கூடிய படைப்பையே குறிக்கும். இந்த நூல் பொதுப் புழக்கதிற்கான ஒன்று கிடையாது. ஆகவே,. இது ஆபாசம் இல்லை என்று அம்பேத்கர் வாதாடினார். நீதிமன்றம் அதனை ஏற்க மறுத்தது. இந்த வழக்கிற்குப் பின் குடும்பக் கட்டுப்பாட்டைச் செயல்படுத்த வேண்டும் என்றொரு மசோதாவை அம்பேத்கரின் கட்சி பம்பாய் சட்டமன்றத்தில் முன்மொழிந்தது.

பேராசிரியர் அனுபமா ராவ் பார்வையில் அம்பேத்கர் சமூக உரிமைகளைக் குறித்த நவீன கருத்தாக்கத்தை நீதிமன்றங்களில் முன்னெடுத்து அதன்மூலம் மதத்தை ஜனநாயகப்படுத்த முயன்றதோடு, பழமைவாதம், அடையாளத்தில் ஊறிப்போயிருந்த காலனிய ஆட்சிக்கும் சவால் விட்டார். சௌதார் குளத்தைத் தலித்துகள் பயன்படுத்த சட்டப்போராட்டத்தை முன்னெடுத்த போது அது பொதுச்சொத்து என்பதை முதலில் நிறுவினார். அதன்பின்னர், இஸ்லாமிய கசாப்புக் கடைக்காரர் அக்குளத்தைக் காலங்காலமாகப் பயன்படுத்தி வருவதை ஆதாரத்தோடு நிறுவினார். இதன்மூலம், மாமிசம் உண்பவர்கள் அசுத்தமானவர்கள் அதனால் அனுமதிக்கவில்லை என்கிற உயர்சாதியினரின் ‘தூய்மைவாத’த்தை அம்பேத்கர் தவிடுபொடியாக்கினார். பொதுச் சொத்து என்கிற வாதத்தின் மூலம் தலித்துகளுக்கும் சட்ட உரிமை உண்டு என்பதை நீதிமன்றம் தீர்ப்பாக எழுத அம்பேத்கர் அவ்வழக்கில் அடிகோலினார்.

தனிமனித உரிமைகளைப் பெரும்பான்மையின் ஆதிக்க மனப்பான்மையிடமிருந்து காக்க வேண்டும் என்கிற எண்ணத்தோடு காங்கிரஸ் அரசு பம்பாயில் முப்பதுகளில் கொண்டு வந்திருந்த மதுவிலக்குச் சட்டத்திற்கு எதிராகப் போராடினார். ஒரு கிறிஸ்துவரை மது புட்டியோடு பிடித்துச் சிறையில் தள்ளிய வழக்கில் அச்சட்டமே திரும்பப் பெறப்பட்ட பிறகும் வழக்கு தொடுத்து தனி மனிதர்களைத் தொல்லைப்படுத்துகிற அநீதியை தோலுரித்துக் காட்டினார். பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்கள் சுதந்திரமான போக்குக் கொண்டவர்கள் என்கிற பார்வையோடு விடுதலைக்கு முன்பே நீதிமன்றத்தில் அண்ணல் வாதாடினார் என்பது பிரமிக்க வைக்கிறது.

அம்பேத்கர் ஏழை, எளியவர்களுக்காகத் தொடர்ந்து வழக்கறிஞராகப் பணியாற்றினார். கட்டணமே வாங்கிக்கொள்ளாமல் பல ஒடுக்கப்பட்ட மக்களின் நியாயத்தை நீதிமன்றங்களில் எதிரொலித்தார். தொழிலாளர்களுக்கு இழப்பீடு பெற்றுத் தருவதற்காகப் பல வழக்குகளில் அவர் நீதிமன்ற படியேறினார். ரயில்வே தொழிலாளர்களின் உரிமைகளுக்காகச் சட்டப்போராட்டங்களை நிகழ்த்தினார். பல்வேறு தூக்குத் தண்டனை கைதிகளின் வழக்குகளில் தானே முன்வந்து வாதாடினார். இவர்களில் பெரும்பான்மையானோர் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்கள். தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டால் அவ்வழக்குகள் நேரடியாக உயர்நீதிமன்றம் வரை போகும் என்றாலும் வாதாட வழக்கறிஞர்கள் இல்லாமல் திணறுவார்கள். அவர்களைக் காக்கும் மீட்பராக அம்பேத்கர் தானே முன்வந்து வழக்குகளை எடுத்து நடத்தினார்.

மிகச் சொற்பமான கட்டணமோ, அல்லது இலவசமாகவோ வழக்குகளை எளியவர்களுக்காக அம்பேத்கர் தொடர்ந்து நடத்தினார். அவரைப் பார்க்க வரும் ஏழை, எளியவர்களுக்குத் தன்னுடைய அறையில் தங்க வைத்து, உணவளித்து அரவணைக்கும் பெருமனதும் அண்ணலுக்கு இருந்தது. அவரின் இத்தகைய அறவுணர்வும், தயாள மனமும் துலா பீமாண்ணா வாக் பனவாலையே மற்றும் வக்கீல் டாக்டர் ஜலி முதலிய மராத்திய நாட்டுப்புற பாடல்களில் இன்றும் போற்றப்படுகின்றன. ‘ஏழைகளின் வக்கீல்’ என்று அம்பேத்கர் நினைவுகூரப்படுகிறார்.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் போராட்டக்காரர்கள், எளிய மக்களைக் காக்கும் பொருட்டுச் சட்டங்களை இறுக்கமாகப் பொருள் கொள்ள வேண்டும் என்று வாதிட்டார் அம்பேத்கர். விடுதலைக்குப் பிறகு அரசியலமைப்புச் சட்டத்தை விரித்துப் பொருள் கொண்டு மக்களின் சுதந்திரம், சமத்துவத்தைக் காக்க வேண்டும் என்று வாதிட்டார். காமேஷ்வர் சிங் வழக்கில் ‘அரசியலமைப்பின் ஆன்மாவை’ காக்கும் வகையில் சட்டத்தினைப் பொருள் கொள்ள வேண்டும் என்று அம்பேத்கர் கருத்துரைத்தார். இக்கருத்தினை வந்தடைய நீதிமன்றங்களுக்கு இருபது ஆண்டுகளுக்கு மேலானது.

அம்பேத்கரின் வழக்கறிஞர் பரிமாணம் ஏன் இருட்டிலேயே இருந்தது அல்லது ஏன் மறக்கப்பட்டது என்பது சிந்தனைக்குரியது. அம்பேத்கர் பம்பாய் சட்டக்கல்லூரியில் பேராசிரியராக, முதல்வராகப் பணியாற்றினார். சித்தாத் கல்லூரியை நிறுவி பல முதல் தலைமுறை தலித் வழக்கறிஞர்களை உருவாக்கினார். சமூக, அரசியல் நீதியில் தண்ணி தோய்த்துக் கொண்ட ஒரு வழக்கறிஞர் அர்ப்பணிப்புணர்வோடு சமூக நீதி நாடி இயங்குவது சட்ட அறிவின் பரப்பினை விரிவாக்கிக் கொண்டே போகும் என்பதற்கு அம்பேத்கரின் வாழ்வு உன்னதமான எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது என்று ரோகித் தே தன்னுடைய ஆய்வுக்கட்டுரையை முடிக்கிறார். வழக்கறிஞர் அம்பேத்கரினை தொடர்ந்து நினைவுக்கூர்வோமாக.

முழு கட்டுரை இங்கே: https://www.academia.edu/34592004/Lawyering_as_Politics_The_Legal_Practice_of_Dr._Ambedkar_Bar-at-Law

கட்டுரையாசிரியர்: ரோஹித் தே.

கட்டுரைச் சுருக்கம் தமிழில் : பூ.கொ.சரவணன்

அம்பேத்கரின் கீதை


அம்பேத்கரின் கீதை

பேராசிரியர் மீரா நந்தா எழுதிய ‘அம்பேத்கரின் கீதை’ எனும் கட்டுரையின் சாரம் இங்கே தரப்படுகிறது. கீதை, பிராமணிய தத்துவ மரபுகள் குறித்து ஆழமான பார்வைகளை மீரா நந்தா முன்வைக்கிறார். நான் அம்பேத்கர் கீதையை அணுகிய விதத்தை மையப்படுத்தும் பகுதிகளை மைய இழையாகக் கொண்டு இந்த அறிமுகத்தை எழுதுகிறேன். முழுமையான கட்டுரையை வேண்டுபவர்கள் தொடர்பு கொள்ளலாம்:

பிரதமர் மோடி உலகத் தலைவர்களுக்குப் பகவத் கீதையைப் பரிசளிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அப்போதைய அயலுறவுத் துறை அமைச்சரான சுஷ்மா சுவராஜ் இந்தியாவின் அடையாளமாக அப்புனித நூல் உயர்ந்து விட்டதைக் காட்டுகிறது என்கிற ரீதியில் பேசினார் . வெவ்வேறு மத மற்றும் அரசியல் தலைவர்கள் இந்தியாவின் தேசிய நூலாக (ராஷ்ட்ரிய கிரந்தமாக) பகவத் கீதையை அறிவிக்க வேண்டும் என்று கோரினார்கள். கீதையை அரசு நடத்தும் பள்ளிகளில் பாட நூலாக வைக்க வேண்டுமென்றும் குரல்கள் எழுகின்றன. இந்தியா மதச்சார்பற்ற நாடு அல்லவா என்கிற எதிர்ப்புகளைச் சமாளிக்க, இஸ்லாமியர்கள்,கிறிஸ்துவர்கள், இறை மறுப்பாளர்கள் ஆகியோரும் பின்பற்றக் கூடிய தத்துவ வெளிச்சங்கள், மானுட விழுமியங்கள் அந்நூலில் உண்டு என்றும் இந்துத்துவத் தலைவர்கள் பேசுகிறார்கள்.

இளவயதினருக்கு அறநெறியை போதிக்கக் கீதை உகந்த நூலா? இந்தியா அதிகாரப்பூர்வமாகப் பின்பற்றும் அரசியலமைப்பு சட்டத்தின் சுதந்திரவாத, ஜனநாயக பண்புகள் இதில் இருக்கிறதா? இந்தியாவிற்கு இந்திய அரசியலமைப்புச் சட்டம், பகவத் கீதை என்று இரு தேசிய நூல்கள் இருக்க முடியுமா? இந்தக் குழப்பத்தில் இருந்து தெளிவு பெற அம்பேத்கரை விட ஆகச்சிறந்த வழிகாட்டி யார் உள்ளார்? இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை ஆக்கிய வரைவுக் குழுவின் தலைவராக மட்டுமல்லாமல், இந்து மதத்தை உதறித்தள்ளிய ‘தீண்டப்படாதவர்’ என்கிற வகையில் அம்பேத்கரின் கீதை குறித்த பார்வை முக்கியமானது.

எப்படி அமெரிக்காவின் சுதந்திர பிரகடனத்தை எழுதிய தாமஸ் ஜெபர்சன் பைபிளில் உள்ள நம்ப முடியாத அற்புதங்களை எல்லாம் வெட்டித் தள்ளினாரோ அதே போல அண்ணல் அம்பேத்கர் கீதையை எப்படி அணுகினார் என்று அறிந்து கொள்வது அவசியமாகிறது. அண்ணல் அம்பேத்கர் புத்தர், ஜான் டூயி ஆகியோரை நேசித்தார். அயராமல் சாதியை அழித்தொழிக்கத் தன்னை ஒப்புக்கொடுத்து கொண்டவர். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றியவர்களுள் ஒருவர். இத்தகைய மாண்புமிக்க அம்பேத்கர் கீதையை எப்படிப் பகுப்பாய்வு செய்திருப்பார். அம்பேத்கரின் கீதை எப்படி இருக்கும்?

அம்பேத்கர் கீதையைப் பற்றித் தனியாக எந்த நூலையும் எழுதவில்லை. திலகர், அரவிந்தர், காந்தி உள்ளிட்ட எண்ணற்ற தலைவர்கள் கீதைக்கு உரை எழுதினாலும் அம்பேத்கர் அப்படிப்பட்ட முயற்சியில் ஈடுபடவில்லை. அவர் கீதை குறித்து என்ன எண்ணினார் என்பதைப்பற்றி ஆங்காங்கே காணக் கிடைக்கிறது. மேலும், மதங்கள் கண்மூடித்தனமாக நம்பச்சொல்பவை எப்படிச் சமூகத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது என்பதைக் குறித்து அவர் ஆழமாகச் சிந்தித்தார். இவற்றைப் பகுத்தறிவை கொண்டு கூராய்வு செய்ய வேண்டும் என்கிற அம்பேத்கரின் அணுகுமுறை எந்தப் புனித நூலையும் காண்பதற்கான தெளிவான கண்ணாடி.

அம்பேத்கரின் தேடலை ஒரே வார்த்தையில் சொல்லி விடலாம் – நீதி. எல்லாவகையான இறை அடிப்படையிலான அதிகாரமுறைகளும் கேள்விக்கு உட்படுத்தப்பட்டு, நீதி எனும் உரைகல்லில் அவற்றை உரசிப்பார்க்க வேண்டும் என்று அம்பேத்கர் கருதினார். அவரின் ‘இந்து மதத்தின் தத்துவ’த்தில் தெளிவுபடுத்துவதைப் போல , இந்த நவீன உலகத்தில் எந்த மதத்தின் அறம் , நியாயம் குறித்த விழுமியங்களை நீதியின் தராசில் நிறுத்திப் பார்க்க வேண்டும். அம்பேத்கரை பொறுத்தவரை நீதி என்பதற்குள் சுதந்திரம், சகோதரத்துவம், சமத்துவம் பிணைந்திருக்கிறது. ‘ஒரு தனிமனிதனுக்கு நீதி வழங்காத ஒன்று சமூகத்திற்குப் பயன்மிக்கதாக இருக்க முடியாது ’ என்கிற அவரின் நீதி குறித்த அளவுகோல், சமூக இணக்கத்தைக் காப்பாற்றுவதால் வர்ணாசிரம முறை தேவை என்கிற பலரின் பார்வையைத் தூக்கி தூர எறிகிறது. அம்பேத்கரின் அறிவு வெளிச்சத்தில் கீதையை அணுகுவது அவசியமாகிறது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட ஒரு நூலை நவீன காலத்தின் அளவுகோல்களைக் கொண்டு அளவிடுவது அநியாயமாகத் தோன்றலாம். இந்தக் காலத்திற்கும் பொருந்தும் கருத்துகள் அதில் இருப்பதால் அதனைப் பாட நூலாகப் படிக்கலாம் என்கிற பார்வையை வேறெப்படி எதிர்கொள்ள முடியும்? கீதையில் சோசியலிசம், முதலாளித்துவ மேலாண்மை, அகிம்சை, அணு குண்டு என்று எல்லாமும் பொதிந்து இருக்கிறது என்றெல்லாம் கீதையின் மீது ஏற்றப்பட்டிருப்பவற்றைப் படிப்படியாகத் தோலுரிக்க இந்த அணுகுமுறை உதவும். இந்து மத நூல்களுக்கும், சாதிக்கும் தொடர்பே இல்லை என்று அமெரிக்கப் பாட நூல்களை மாற்றி எழுதும் முயற்சிகள் நடந்து கொண்டிருக்கும் காலத்தில் இத்தகைய கூர்மையான தேடல் தவிர்க்க முடியாத ஒன்று.

‘சாதியை அழித்தொழிக்கும் வழி’ நூலில் நால்வர்ண முறையானது பிளாட்டோவின் கருத்தாக்கத்துக்கு வெகு நெருக்கமானதாக இருக்கிறது என்று அம்பேத்கர் குறிப்பிடுகிறார்:

‘பிளாட்டோவை பொறுத்தவரை இயற்கையாகவே மனிதர்கள் மூன்று வகுப்புகளில் அடங்குவர். சில தனிநபர்களை வெறும் வெட்கைகளே செலுத்தியதாகப் பிளாட்டோ கருதினார். அவர்கள் உழைக்கும், வர்த்தம் செய்யும் வர்க்கங்கள் என்று வகைப்படுத்தினார். பிறர்…தீரமிகுந்தவர்களாகத் திகழ்ந்தார்கள். அவர்களே போர்களில் இருந்து காப்பவர்களாக, நாட்டில் அமைதியை நிலைநாட்டுபவர்களாகப் பிளாட்டோ அடையாளப்படுத்தினார். உலகத்து விஷயங்களுக்குப் பின்னுள்ள அடிப்படைக் காரணங்களை உள்வாங்கிக் கொள்ளும் வேறு சிலருக்கு இருந்தது. இவர்களை மக்களுக்கு நீதிபரிபாலனம் புரிகிறவர்கள் என்று பிளாட்டோ அறிவித்தார்.’

இயற்கையாகவே என்கிற பதம் கருத்தில் நிறுத்த வேண்டிய குறிச்சொல். சிந்தனையாளர் கண்டோர்செட் வார்த்தைகளில் சொல்வது என்றால், கீதையும், பிளாட்டோவும், ‘அரசியல் ஏற்றத்தாழ்வு எனும் குற்றத்தை புரிகையில் இயற்கையைத் தங்களுடைய கூட்டாளி ஆக்கிக்கொள்கிறார்கள்.’ இந்த ஏற்றத்தாழ்வுகளை இயற்கையானவை என்று நிறுவ பிளாட்டோவும், பகவான் கிருஷ்ணனும் “கண்ணியமான பொய்” ஒன்று அவிழ்த்து விடுகிறார்கள். பிளாட்டோ உலோகங்களைக் கொண்டு கதை அளக்கிறார். கிருஷ்ணர் குணம், கர்மா, மறுபிறப்பு கருதுகோளுக்குத் தன்னுடைய ஆசிகளை வழங்குகிறார். அதென்ன பிளாட்டோவின் பொய்?

சாக்ரடீஸ் மனித ஆன்மா மூன்று பகுதிகளைக் கொண்டது என்றார். உணவுக்கும், காமத்துக்கும் அலைந்து திரியும் கீழான வேட்கைகள் கொண்டு திரியும் பகுதி ஒன்று என்றால் மதிப்பும், அதிகாரமும் நாடும் பகுதி மற்றொன்று. இவற்றுக்கு அடுத்தபடியாக அறிவை நாடும் ‘தத்துவ அரசர்கள்’ மூன்றாவது பகுதி. வேட்கை மிக்கவர்கள் மன்னர்கள் ஆகிவிடக் கூடாது என்பதற்காகக் கல்வியறிவு பிறப்போடு தொடர்புடைய ஒன்று எனச் சாக்ரடீஸ் வரையறுக்கிறார். இதனை எப்படி உழைப்பவர்களை நம்ப வைப்பது? அவர்கள் தங்கள் வகுப்புகளைத் தாண்டி வேறெங்கும் திருமண உறவு கொள்ளாமல் எப்படித் தடுப்பது. பிளாட்டோ தன்னுடைய ‘கண்ணியமான பொய்யை’ இங்குத் தான் சொல்கிறார். இறைவன் எல்லாப் பிள்ளைகளையும் ஒரே மண்ணில் இருந்தே படைத்தார். என்ன சிலரை தங்கத்தைக் கலந்தும், சிலரை இரும்பு, சிலரை பித்தளை கலந்தும் படைத்து விட்டார். ஒவ்வொருவரும் இறைவனின் படைப்பு என்றாலும், பரிசுத்தமான உலோகங்களினால் ஆனவர்கள் உயர்குடியில் பிறப்பார்கள், அவர்களே ஆளவேண்டும் என்றது அந்தப் பொய். கடவுள், உங்கள் வாழ்க்கை நிலைக்கு நீங்கள் எப்படிப்பட்ட பண்பு கொண்டவராக இருக்க வேண்டும் என்று படைத்தாரோ அப்படி மட்டும்தான் இருக்க இயலும்.

அப்படியே பிளாட்டோவின் மூன்று உலோகங்கள் கதைக்குப் பதிலாகக் கீதையின் மூன்று குணங்கள் என்பதைப் போடுங்கள். இறைவன் உலோகத்தைக் கலக்கிற கதைக்குப் பதிலாகக் கர்மா, மறுபிறப்பு எனும் ‘இயற்கையான’ நிகழ்வுகளை நிரப்பிக் கொள்ளுங்கள். இது தான் கீதை கட்டவிழ்த்து விடும் ‘கண்ணியமான பொய்’. தன்னுடைய பொய்யை யாராவது நம்புவார்களா என்று பிளாட்டோ வெளிப்படையாகக் கவலைப்பட்டார். பகவத் கீதையைக் கிருஷ்ணர் தானே படைத்ததாக அறிவிக்கிறார். பிளாட்டோவின் சிந்தனை செயல்பாட்டிற்கு வரவில்லை, ஆனால், கீதையின் சாரம் இன்றும் பொதுப் புத்தியில் ஆழமாக வேரூன்றி இருக்கிறது.

அம்பேத்கரின் நிறைவடையாத ‘புரட்சி மற்றும் எதிர்ப்புரட்சி’யில் ‘கீதை ஒரு மத நூல் அல்ல. அது தத்துவ விசாரணையிலும் ஈடுபடவில்லை. மதத்தின் கண்மூடித்தனமான நம்பிக்கைகளைத் தத்துவ அடிப்படைகளைக் கொண்டு நியாயப்படுத்தவே அது முயல்கிறது’ என்கிறார். நால்வர்ண படிநிலை என்கிற அடக்குமுறை அடுக்குநிலையை மூன்று குணங்கள் என்கிற தத்துவ அடிப்படைகளைக் கொண்டு காப்பாற்ற முயல்வது அம்பேத்கரை கவலை கொள்ள வைத்தது.

கீதை ஒரு வர்ணத்தில் பிறந்தவர் தனக்கு விதிக்கப்பட்ட தொழிலை செய்வதற்கு எந்த நியாயமும் இல்லை என்றாலும் அதனைச் செய்தே ஆகவேண்டும் என்கிறது. பிறரின் தொழிலை புரிய முயல்வதைவிட அதுவே மேம்பட்டது என்கிறது. எவ்வளவு மோசமான தொழிலாக இருந்தாலும் தன்னுடைய பிறப்பிற்கு விதிக்கப்பட்ட தொழிலை ஒருவர் செய்வதால் எந்தப் பாவமும் அவரை அண்டுவதில்லை என்கிறது கீதை. உயரிய குணங்களைப் பிராமணர்களுக்கு என்றும், அஞ்சாமல் போரிடும் பண்பு சத்திரியர்களுக்கு உரியது என்றும் கூறிவிட்டு, வர்த்தகத்தில் ஈடுபடுவது வைசியர்களின் பணி, எல்லாருக்கும் ஊழியம் செய்வது சூத்திரர்களின் அடிப்படை பண்பு என்று சொல்லிச் செல்கிறது.

அம்பேத்கர் தன்னுடைய ‘இந்து மதத்தின் தத்துவ’ த்தில் மனுஸ்மிருதியை யாரும் படிப்பதில்லை, அதை யாரும் தூக்கிப்பிடிப்பதில்லை என்று கருதுபவர்களுக்கு ஒன்றை நினைவுபடுத்துகிறார். அனைவரும் படித்து, பின்பற்றும் பகவத் கீதை ‘மனுஸ்மிருதியின் மறுவடிவம்’ மட்டுமே. வேதம், மனுஸ்மிருதி, கீதை மூன்றும் ஒரே மாதிரி நெய்யப்பட்டு இருக்கிறது. அவற்றை ஒரே இழை இணைப்பதோடு, அவை ஒரே துணியைக் கொண்டு நெய்யப்பட்டிருக்கின்றன என்கிறார் அம்பேத்கர்.

உன் வர்ணத்துக்கு விதிக்கப்பட்ட செயலானது நியாயமற்றது என்றாலும் அதனைச் செய்தே ஆகவேண்டும் என்கிற கீதையின் கருத்து அப்படியே மனுஸ்மிருதியிலும் காணப்படுகிறது. ஒன்று இன்னொன்றை சார்ந்தே வாழ்கிறது என்கிற அளவுக்கு அவற்றின் கருத்துகள் தொடர்புடையவையாக உள்ளன. கீதையின் ‘கண்ணியமான பொய்யை’ நோக்கி தன்னுடைய கவனத்தைத் திருப்புகிறார் அம்பேத்கர். துளி கூட நியாயமற்ற ஒரு செயலை தன்னுடைய வர்ணத்திற்கு விதிக்கப்பட்ட ஒன்று என்பதற்காக ஒருவன் செய்தால் மட்டுமே அவன் மோட்சம் அடைவான் என்று ஏன் கீதை சொல்கிறது என்று கேள்வி எழுப்புகிறார். ஒருவன் தன்னைக் கிருஷ்ணரின் மீதான பக்தியில் தோய்த்துக் கொண்டால் அவனுக்கு மோட்சம் கிட்டாது. இத்தனைக்கும் ‘எல்லா உயிர்களும் நானே, அன்பில் திளைத்த பக்தியோடு என்னோடு கலப்பவர்களில் நானும், என்னில் அவர்களும் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள்’ என்று கண்ணன் கீதையில் சொல்கிறாரே? பின் ஏன் கிருஷ்ணர் ‘ஒரு சூத்திரன் எவ்வளவு சிறந்தவனாக இருந்தாலும், தன்னுடைய வர்ணாசிரம கடமையை மீறி, உயர் வர்ணத்தினருக்கு அடிமை வேலைகளைச் செய்து வரத் தவறினால் அவனுக்கு மோட்சம் இல்லை” என்கிறார்? என்று ‘கிருஷ்ணனும், கீதையும்’ என்கிற தன்னுடைய படைப்பில் அம்பேத்கர் கேட்கிறார்.

‘நானே நான்கு வர்ணங்களையும் குணம், கர்மாவோடு படைத்தேன். நானே அவற்றைக் கொண்டு செயல் நிகழ்த்துபவன். எனினும்,மாற்றமில்லாத நான் எதையும் செய்யாமல் வாளாயிருக்கிறேன். ‘ என்று கீதையில் கிருஷ்ணன் சொல்கிறார். கீதையைத் தாங்கிப் பிடிப்பவர்கள் இந்தக் குணம் என்பதைப் பண்புநலன்கள் என்றும், கர்மா என்பதை உங்கள் செயல்கள் என்றும் திரித்துப் பொருள் கொண்டார்கள். கீதையிலோ பிற புனித நூல்களிலோ சாதி என்கிற சொல்லே காணப்படவில்லை, வர்ணம் மட்டும் இருப்பதால் காந்தி முதலியோர் ‘சாதிக்கும் இந்து மதத்துக்கும் தொடர்பில்லை’ என்று ஒரே போடாகப் போட்டார்கள். ஒரு காலத்தில் எல்லா வர்ணங்களும் நன்மை பயப்பதாக, நியாயமானதாக, சமமிக்கதாக இருந்தது, அப்படி விதிக்கப்பட்டவற்றை உளமார செய்வது இறைவன் முன்பு சம மதிப்பை வழங்கும். ஒரு காலத்தில் மனிதர்களிடையேயும் அவை அனைத்தும் சமமாக மதிக்கப்பட்டன என்றெல்லாம் காந்தி கருதினார்.

அதாவது, கீதையை ஒழுங்காகப் படித்தால் யாரும் பிறப்பால் பிராமணர், சூத்திரர் கிடையாது,. அவர்களின் குணங்களும், செயல்களுமே அவர்களை வெவ்வேறு வர்ணங்களைச் சேர்ந்தவர்களாக அடையாளப்படுத்தின. உண்மையான வர்ணாசிரம முறையில் எல்லா வர்ணங்களும் சமமான மதிப்பும், இடமும் பெற்றிருந்தன என்றும் இவர்கள் முன்னுக்குப்பின் முரணாகப் பேசுகிறார்கள். இன்னமும் எளிமையாகச் சொல்வது என்றால், கீதையில் தகுதியின் அடிப்படையிலேயே வர்ணங்கள் அமைக்கப்பட்டன. காலப்போக்கில் அவை இஸ்லாமியர்கள், பௌத்தர்கள், ஆங்கிலேயர்கள், மேற்கத்திய நவீனத்துவத்தைப் பின்பற்றியவர்கள் செய்த குழப்பங்களால் தான் இன்றைக்கு இப்படிப்பட்ட நிலை ஏற்பட்டிருக்கிறது என்றும் சொல்கிறார்கள்.

இவையெல்லாம் கீதையை ஒழுங்காகப் படிக்காமல், அல்லது வசதிக்கு ஏற்ப பொருள் கொள்வதால் நிகழ்கிற குழப்பங்கள் அன்றி வேறொன்றுமில்லை. கீதை மீண்டும், மீண்டும் ஆன்மாவை தவிர மற்ற அனைத்தும் மூன்று குணங்களால் ஆனது என்று வலியுறுத்துகிறது. குணங்களே எல்லா வேலையையும் செய்யும், மனிதன் அதன்முன்பு சக்தியற்றவன் என்றே கீதை கற்பிக்கிறது. அர்ஜுனனின் குணம் அவனைப் போரிட வைக்கும் என்று அது அறிவிக்கிறது.

கீதையின் இறுதி அத்தியாயத்தில் மூன்று குணங்கள் எல்லா மனிதர்களிடம் காணப்பட்டாலும் குறிப்பிட்ட குணம் அதீதமாகக் காணப்படுவதைக் கொண்டு மனிதர்களைக் கிருஷ்ணன் வகைப்படுத்துகிறார். உயர்ந்த சத்வ குணம் கொண்ட பிராமணர்கள் அறிவை நாடி இயங்குவர், ரஜோகுணம் கொண்டவர்கள் அதிகார வேட்கைமிக்கச் சத்திரியர்கள், தாமச குணங்கள் ஓரளவிற்கு இருப்பவர்கள் இழிவான தொழில்களைச் செய்யும் நிலைக்கு உழைப்பவர்களைத் தள்ளுகிறது, தாமச குணம் மிகுந்தவர்கள் மேற்சொன்ன மூன்று வர்ணங்களுக்குச் சேவையாற்றிய காலந்தள்ள வேண்டிய சூத்திரர்கள் என்கிறது.

எந்தக் குணம் அதீதமாக இருக்கிறதோ அதுவும் கர்மாவோடு கட்டப்பட்ட ஒன்று என்கிறது கீதை. எங்கே பிறக்க வேண்டும், என்ன வர்ணத்தில் பிறக்க வேண்டும் என்பதெல்லாம் இறைவன் தீர்மானித்தது அதனை மாற்ற இறைபக்தியை நாடுவது என்றெல்லாம் முயற்சிக்கலாம். ஆனால், பலனை எதிர்பார்க்கக் கூடாது. உங்களுடைய சத்வ குணத்தை அதிகரிக்க முயற்சி செய்யலாம், அடுத்தடுத்த பிறப்புகளுக்குக் காத்திருந்து மோட்சம் நோக்கிய பாதையை நீங்கள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். பிளாட்டோ சொன்னதிலாவது கடவுள் தான் யார் தங்கம், இரும்பு என்பதைத் தீர்மானிக்கிறார். இங்கே ஒரு வர்ணத்தில் பிறப்பது உன்னுடைய தலையெழுத்து. அதற்கு உன்னுடைய கடந்த காலக் கர்மாவே காரணம் என்று கீதை கூடுதலாகக் கதை அளந்தது. கர்மாப்படியே வெவ்வேறு வர்ணங்களில் இறைவனின் ஆதரவோடு பிறக்கிறோம் என்பது இந்திய பொதுப் புத்தியில் பதிந்திருந்திருக்கிறது. என்றாலும், காந்தி முதலிய இந்து மதச் சிந்தனையாளர்கள் அப்பட்டமாகப் பிறப்பின் அடிப்படையிலான வர்ணாசிரமத்தை கட்டிக் காக்கும் கீதையின் குரலை வேறு வகைகளில் பொருள் கொண்டு பூசி மெழுகுகிறார்கள்.

சாதி என்பது இந்து மதத்தின் அடிப்படை கிடையாது. அத்தகைய பாகுபாடு எதுவும் அதில் கிடையாது, எல்லாரின் உள்ளேயும் இறைத்தன்மை பொதிந்திருக்கிறது என்பவர்களுக்கு அம்பேத்கரின் எளிமையான பதில் ஒன்று ‘சாதியை அழித்தொழிக்கும் வழியில்’ கிடைக்கிறது:

‘இத்தகைய சச்சரவுகளில் சரண் புகுந்து கொள்வதில் எப்பயனும் இல்லை. மக்கள் எதை நம்ப வேண்டும் என்று சொல்லித் தரப்பட்டு இருக்கிறதோ அப்படியெல்லாம் சாஸ்திரங்கள் சொல்லவில்லை என்பதால் எந்தப் பயனும் இல்லை…மக்கள் எப்படிச் சாஸ்திரங்களைப் புரிந்து கொள்கிறார்கள் என்பதே முக்கியமானது…. நாம் சாஸ்திரங்களைப் புறந்தள்ளுவதோடு மட்டுமல்லாமல், அவற்றின் அதிகாரத்தையும் மறுதலிக்க வேண்டும்.’ என்று அறிவிக்கிறார்.

கீதை தகுதிக்கும், செயல்களுக்குமே மரியாதை செலுத்தச் சொல்கிறது என்று மட்டும் பேசிக்கொண்டிருக்காமல், கடந்த பிறப்புகளின் கர்மவினைகள் அடுத்தடுத்த பிறப்புகளுக்கும் தொடர்கிறது என்று சாதாரண இந்துக்கள் நம்புவதை நேருக்கு நேர் எதிர்கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட நயவஞ்சகமும், கொடூரமும் மிக்கப் பாகுபாடுகள், அடுக்குநிலைக்கான அதிகாரத்தை வழங்கும் மெய்யியலையே மறுதலிக்க வேண்டும்.

அம்பேத்கர் ‘சாதியை அழித்தொழிக்கும் வழி’யில் ‘பகுத்தறிவும், அறநெறியும் ஒரு சீர்திருத்தவாதியின் அம்பறாத்தூணியில் உள்ள ஆகச்சிறந்த ஆயுதங்கள். இவற்றை அவன் எடுக்க விடாமல் தடுப்பது என்பது அவனைச் செயல்படவிடாமல் கட்டிப்போடுவதே ஆகும்.’ தன்னுடைய வாழ்நாள் முழுக்கச் சாதியை நியாயப்படுத்தும் தங்களுடைய நம்பிக்கைகளைக் கேள்வி கேட்குமாறு அம்பேத்கர் அயராது வலியுறுத்தினார். அவற்றுக்கு அடிப்படையாக அமைந்தவற்றை நிராகரித்துவிட்டு, தங்களுடைய நம்பிக்கைகளுக்கு எதிராக இயங்கும்படி அறைகூவல் விடுத்தார்.

அம்பேத்கர் தன்னுடைய பெரும் உழைப்பின் மூலம், இந்து மதத்தின் அதிகாரப்பூர்வ புனித நூல்கள் கேள்வி கேட்பதை பெரும் குற்றமாக ஆக்கி வைத்திருப்பதைக் கவனப்படுத்துகிறார். அவருடைய ‘சாதியை அழித்தொழிக்கும் வழி’ நூலில் ‘மனுஸ்மிருதி மூன்றைக் கொண்டு மட்டுமே சமூகத்தில் நிலவிவரும் நம்பிக்கைகளைச் சீர்தூக்கி பார்க்க அனுமதிக்கிறது. அவற்றைக் கொண்டு மட்டுமே நடைமுறைகளையும் ஆராய வேண்டும் என்று மனுநூல் சொல்கிறது. அவை முறையே சுருதி (வேதத்தில் தென்படுவது), ஸ்மிருதி (நினைவுகளால் கடத்தப்படும் மரபு), காலங்காலமாக எது நன்னடத்தை என்று சமூகத்தால் கருதப்பட்டுக் கடத்தப்படுவது. தர்க்கம், கேள்விகளால் நம்பிக்கைகள், நடைமுறைகளை எதிர்கொள்பவர்கள் ‘நாத்திகர்கள்’ என்று முத்திரை குத்தப்பட்டு ஒதுக்கி வைக்கப்படுவார்கள்.’ என்பதை அடுக்கிச் செல்கிறார்

மனு எழுதிக்கொடுத்ததைக் கீதை அப்படியே ஒப்பிக்கிறது. சந்தேகப்படுபவர்கள் அசுர வயிற்றில் பிறப்பார்கள் என்று அது எச்சரிக்கிறது. கீதையின் பதினாறாவது அத்தியாயத்தில் கண்ணன் சொல்வதைப் பாருங்கள். தன்னை நம்பாதவர்களைப் பேராசை பிடித்தவர்கள், கபடதாரிகள், எதற்கும் லாயக்கற்றவர்கள் என்றெல்லாம் முத்திரை குத்துகிறார். இது பண்டைய காலத்தின் லோகயாதவாதிகள் உள்ளிட்ட நாத்திகர்களைக் குறிக்கப் பயன்படும் அதே சொற்கள். இவர்கள் அசுர வயிற்றில் பிறப்பதோடு, இழிந்த இடத்தையே சென்று சேர்வார்கள் என்று கீதை சொல்கிறது. இதில் இருந்து தப்பிக்க ‘நூல்களே (சாஸ்திரங்கள்) எது சரி, தவறு என உனக்கு வழிகாட்டட்டும். அந்த நூல்கள் நீ எதைச் செய்ய வேண்டும் என்று வகுத்தளித்து இருக்கிறதோ அந்தத் தொழில்களை நெறிபிறழாமல் நீ செய்ய வேண்டும்’ என்று வழிகாட்டுகிறது கீதை.

அம்பேத்கர் ‘மனுஸ்ம்ருதியின் மறுவடிவம்’ என்று கீதையை விளிப்பது எவ்வளவு கச்சிதமானது என்பதை மேற்சொன்னவை தெளிவுபடுத்துகிறது. கேள்விகள் கேட்பவர்களைக் கண்டிக்கிற வகையில் மனுவின் குரலை மட்டும் கீதை எதிரொலிக்கவில்லை. கூடுதலாக, அது பகுத்தறிவாளர்கள், லோகாயதாவதிகளை நாத்திகர்கள், ராட்சதர்கள் என்று அழைக்கும் ராமாயண, மகாபாரத மொழியையும் கொண்டிருக்கிறது. ராமாயணத்தில் ஜாபாலியும், மகாபாரதத்தில் சார்வாகனும் அதிகாரபீடங்களை நோக்கி கேள்விக்கணைகளைத் தொடுக்கிறார்கள். அதனால் அவர்கள் வெறுத்து ஒதுக்கப்பட்டு, கொலை செய்யப்படுகிறார்கள்.

கிருஷ்ணனும், மனுவும் இன்னொரு பாடம் எடுக்கிறார்கள். இது கயமையின் உச்சம் என்று அம்பேத்கர் எண்ணினார். இருவருமே அறிவையும், ஞானத்தையும் பகிர்ந்து கொள்ளக்கூடாது என்கிறார்கள். பலனை எதிர்பாராமல் கடமையைச் செய்யும் கர்மத்தை பற்றி அர்ஜூனனுக்குப் போதித்த பின்பு, பலனை எதிர்பார்த்து உழைப்பவர்களுக்கு இந்த அறிவைப் பகிர்ந்து கொள்ளக்கூடாது என்று எச்சரிக்கிறார் கிருஷ்ணர். மனு இன்னமும் அப்பட்டமாக, பல முறை வேதம் பயின்றவர்கள் அதனைப் பிறருக்குக் கற்றுத்தரக்கூடாது என்று தடை விதிக்கிறான்.

ஏன் இத்தகைய தடை ? அம்பேத்கர், ‘கிருஷ்ணனும், கீதையும்’ எனும் தன்னுடைய எழுத்தில், எதிர்-பரப்புரை எதுவும் நிகழாமல் தடுக்கவே இந்தத் தடை என்கிறார். இந்தச் சடங்குகள், விதிகளுக்கு எதிரான கிளர்ச்சி நிகழாமல் தடுக்கவே இந்த ஏற்பாடு. ஆனால், இவற்றின் ‘அறிவு வெளிச்சத்தை’ பகிர்ந்து கொள்ள மறுக்கும் மனப்பான்மையைக் கண்டு பொங்கி எழுகிறார். இந்து சமூக அமைப்பின் பெருங்குற்றத்தை இப்படித் தோலுரிக்கிறார், ‘வேறெந்த சமூகமும் தன்னுடைய பெரும்பான்மை மக்கள் மத நூல்களைப் படிக்கக் கூடாது என்று தடை விதிக்கும் குற்றத்தை புரியவில்லை. வேறெந்த சமூகமும் தன்னுடைய பெரும்பான்மை மக்கள் கல்வி கற்பதை தடுக்கும் குற்றத்தில் ஈடுபடவில்லை. கடைக்கோடி மனிதன் கல்வி கற்க முயல்வதை வேறெந்த சமூகமும் தண்டனைக்குரிய குற்றம் என்று அறிவிக்கவில்லை..’ .

அரசியலமைப்பை ஆக்கிய அம்பேத்கர் ‘ மக்களின் மனங்கள் இதயங்களில் புரட்சி வராமல் சுதந்திரவாத,ஜனநாயகத் தன்மை கொண்ட அரசியலமைப்பு சட்டமானது ‘சாணக் குவியல்களின் மீது கோபுரங்களைக் கட்டுவதைப் போல’ என்று தெளிவாக அறிந்திருந்தார். ஜான் டூயின் மாணவரான அம்பேத்கர் சமூகப் புரட்சியை வென்றெடுக்க, ‘எந்த நம்பிக்கையையும் அதனை ஆதரிக்கும் அடிப்படைகளையும் முனைப்பாக, இடையறாது, கவனமாகக் கேள்விக்கு உட்படுத்திச் சிந்திப்பது’ முதன்மையானது என்று கருதினார்.

முடிவாக அம்பேத்கரின் கீதை எப்படிப்பட்டதாக இருந்திருக்கும். கீதையின் ஆன்மாவான சதுர்வர்ணம் நீதியுணர்வு மிக்கதா என்கிற சோதனையில் தேறாது. அதன் தத்துவ அடிப்படைகளான குணமும், கர்மாவும் அம்பேத்கரின் பகுத்தறிவு சோதனையில் தோற்றுப்போகும். அதிகபட்சமாக, கிருஷ்ணனின் கீதா உபதேசத்தில் காணப்படும் பௌத்த பண்புகளான நிர்வாணம்,மைத்ரி (அன்பின் வழிப்பட்ட இரக்கம்) ஆகியவற்றை மட்டும் ஏற்றுகொண்டிருப்பார். அதனையும் கூட நீதி, பகுத்தறிவு ஆகியவற்றில் நிறுத்தி பார்த்தே அம்பேத்கர் ஏற்றிருப்பார். இந்த அணுகுமுறையே அவரின் புத்தரும், தம்மமும் படைப்பில் காணப்படுகிறது. பிராமணர்களின் ஆதிக்கத்திற்குச் சவால்விட்ட பௌத்தத்துக்கு எதிரான எதிர்-புரட்சிகளை அணிதிரட்டிய ஒன்றாகக் கீதையை அம்பேத்கர் கருதினார். இப்போது கீதையை தேசிய நூலாக்க முயல்வது, அம்பேத்கரின் நீதி, பகுத்தறிவு மிக்க அரசியலமைப்புச் சட்டம் மேல் சாதி இந்து மேலாதிக்கத்துக்கு விடும் சவாலை எதிர்கொள்ளும் நம் கால எதிர்-புரட்சி என்று கருத வேண்டியிருக்கிறது.

தமிழில் : பூ.கொ.சரவணன்

அம்பேத்கர் – கடவுள்களை அழித்து ஒழித்தவர் – 5


அம்பேத்கர்-கடவுள்களை அழித்து ஒழித்தவர் – 5 – பேராசிரியர். பிரதாப் பானு மேத்தா

விடுதலை, சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய மூன்றையும் புரட்சிகரமாக அம்பேத்கர் பற்றிக்கொள்கிறார். அதனாலேயே, அம்பேத்கர்
நம் காலத்தின் பெரும் போராட்டங்களில் ஒன்றான ‘ஜனநாயகத்தின் பண்பு என்ன?’ என்பதன் மைய ஆளுமையாகத் திகழ்கிறார். அரசமைப்புச் சட்டத்தை உருவாக்குவதில் அம்பேத்கர் அறிவார்ந்த பங்களிப்பை வழங்கினார். அதுவே
அரசமைப்பு சட்டத்தின் போதாமைகள் குறித்து அம்பேத்கர் கொண்டிருந்த தெளிவான பார்வையை நாம் கண்டுகொள்ளாமல் போகக் காரணமாக இருக்கக் கூடாது. முனைவர் ஐஸ்வரி குமார் தனது மிக முக்கியமான புத்தகமான Radical Equality: Ambedkar, Gandhi and the Risk of Democracy (Stanford University Press)-ல் புலப்படுத்துவதைப் போல அம்பேத்கர் பல வகைகளில் புரட்சிகரமானவர். அவர் ஏன் புரட்சிகரமானவர்? ஜனநாயகம் குறித்து உணர்ச்சிவசப்படாத, தயவு தாட்சண்யமில்லாத பார்வையை அவர் கொண்டிருந்தார். சிந்தனையாளர் க்ராட்வேயின் ‘அரசமைப்பு அறநெறி’ என்கிற கோட்பாட்டைத் தனதாக்கி கொண்டே ஒரே இந்திய சிந்தனையாளர் அண்ணல் அம்பேத்கர் மட்டுமே. அந்தக் கோட்பாட்டின்படி அரசாங்கம் என்பது அறத்தின் அடிப்படையிலான சுயகட்டுப்பாடு, வெவ்வேறு கருத்துகளுக்கு மரியாதை தருவது, கட்டற்ற உரையாடல் ஆகியவற்றைக் கூறுகளாகக் தன்னுடைய கூறுகளாகக் கொண்டது. எனினும், அரசமைப்பு அறமானது ஜனநாயகப்பண்புகள் அற்ற ஆழமான நிலத்தின் மேற்பகுதி மண் மட்டும் செழிப்பாக இருப்பதைப் போன்றதே ஆகும் என்று அம்பேத்கர் தெளிவாகக் குறிப்பிட்டார்.

p19.gif
அரசமைப்பு சட்ட அடிப்படையிலான அரசை பேணுவது மட்டுமே ‘மக்களின் சுயாட்சிக்கு ஈடாக முடியாது.’ என்பதையும் கவனப்படுத்தினார். எனினும், அரசமைப்பு அறத்திற்கு இரண்டு முக்கியமான போதாமைகள் உண்டு என்று தீர்க்கதரிசியாக அவர் எச்சரித்தார். அரசமைப்புச் சட்டத்தை ஆட்சிமுறையும் ஒத்திருக்க வேண்டும். இதனால் தான், சட்ட அறிஞர் மாதவ் கோஸ்லா வாதிடுவதைப் போல, இந்தியாவில் ஆட்சிமுறையை அரசமைப்பு சட்டத்தின் வரையறைகளுக்குள் அமைப்பதற்கு ஆழமான அழுத்தம் தரப்படுகிறது. எழுபது வருடங்கள் கடந்த பின்னர், இப்பொழுது நம் முன் நின்று கொண்டு நம்மைக் கடுமையாகச் சாடுவதைப் போல இருக்கிறது அம்பேத்கரின் இந்த வாசகங்கள்: ‘அரசமைப்பு சட்டத்தின் வடிவத்தைத் துளிகூட மாற்றாமல், ஆட்சிமுறையின் வடிவத்தை மட்டும் மாற்றுவதன் மூலம் அரசமைப்பு சட்டத்தின் ஆன்மாவில் இருந்து முற்றிலும் வேறுபட்ட, ஒவ்வாத ஆட்சிமுறையைத் தர முடியும். அதன் மூலம் அரசமைப்பு சட்டத்தின் ஆன்மாவை சீர்குலைக்க முடியும். ‘

அதே போல மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மக்களுக்கான பொறுப்புமிகுந்த அரசாக இருக்க வேண்டியதில்லை. அவர், ‘காந்தியும், காங்கிரசும் தீண்டப்படாத மக்களுக்குச் செய்தது என்ன?’ நூலில் எழுதுவதைப் போல, ‘வயது வந்த அனைவருக்குமான வாக்குரிமை மட்டுமே மக்களுக்கான, மக்களாலான அரசை கொண்டு வந்துவிட முடியாது.’ எல்லாவற்றுக்கும் அமலாக, ஜனநாயகத்தின் மிக முக்கியமான முரண்பாட்டை அவர் உணர்ந்திருந்தார்: ஆழமான சமூக, பொருளாதாரச் சமத்துவமின்மைகளுக்கு இடையே ஜனநாயக சமத்துவத்தை ஏற்படுத்த முயல்வது. இப்படிப்பட்டமுரண்பாடுகளின் போரை வெகுகாலத்துக்கு எந்த ஜனநாயகமும் தாங்க முடியாது.

ஜனநாயகத்தைப் பற்றிய கூர்மையான விமர்சனத்தை வைத்த வகையில் மரபார்ந்த தாராளவாதிகளில் இருந்து மாறுபட்டவராக அம்பேத்கர் திகழ்கிறார். அம்பேத்கரை புரட்சிகரமான போக்குக் கொண்டு குடியரசாளர் என்று கருதுவதற்கு ஏற்றாற்போல அவர் சகோதரத்துவத்தில் நம்பிக்கை கொண்டிருந்தார், பொருளாதார ஏற்றத்தாழ்வும், உண்மையான ஜனநாயகமும் ஒன்றாக இயங்க முடியுமா என்கிற ஐயப்பாடு உடையவராக அவர் இருந்தார். தனக்குத் தானே விதித்துக் கொண்ட கட்டுப்பாட்டைத் தவிர்த்துக் குடியரசில் வேறு எதற்கும் அதிகாரம் செலுத்த இடமில்லை என்று அவர் குடியரசாளர் போல எண்ணினார். எனினும், இப்படிப்பட்ட பண்புகளால் அவரைக் குடியரசு முறையை முற்றாக ஏற்றுக்கொண்டவர் என்று எண்ணக்கூடாது. இதற்கு மூன்று முக்கியக் காரணங்கள்.

முதலாவதாக, மக்களின் அரசாள்வதற்கான தலைமை உரிமையான, ‘இறையாண்மை’ ஒற்றைப்படையானது என்பதை அவர் ஆழமாகச் சந்தேகித்தார். இதனாலேயே பல்வேறு வகைகளில் நாட்டின் ஆட்சிமுறையைக் கட்டுப்பாட்டில், பொறுப்பான செயல்பாட்டில் வைக்கும் தடுப்புகள், ஜனநாயகத்தின் சமநிலையை உறுதி செய்யும் அமைப்புகள் ஆகியவை தேவை என்கிற தாராளவாத பார்வை கொண்டவராக அவர் இருந்தார். அம்பேத்கரை பொறுத்தவரை இறையாண்மை என்பது ஒற்றைப்படையானது இல்லை. அதை யாரோ ஒருவர் மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்தி விட முடியாது. இந்தியாவின் சமூகச் சூழ்நிலை சீர்கேடுகளால் நிறைந்திருந்ததால், விழுமியங்களால் சமூக இணக்கத்தைச் சாதிப்பதை விட அரசைக்கொண்டு சமூக ஒழுங்கை உறுதி செய்ய முடியும் என்று அவர் நம்பினார். அதிகார பரவலாக்கல், பிரதேசவாதம் ஆகியவை குறித்த அவரின் ஓயாத விமர்சனம் இப்படிப்பட்ட முயற்சிகள் உள்ளூர் சர்வாதிகாரத்துக்கு வழிவகுத்து விடும் என்கிற ஐயப்பாட்டின் அடிப்படையில் ஓரளவுக்கு அமைந்திருந்தது. அதேசமயம் , அரசு சமூகத்தைப் புணரமைக்கும் என்பதில் அவர் நம்பிக்கை கொண்டிருந்தார். அதேசமயம், அம்பேத்கர் அனைவரும் சகோதரர்களாகக் கூடி வாழும் சகோதரத்துவத்துக்கு ஏங்கினாலும், பெரும்பாலான குடியரசாளர்கள் கொண்டிருந்த ‘சகோதரத்துவம் என்பது ஒற்றுமையில் களிப்புக் கொள்வது.’ என்பதை அவர் ஏற்கவில்லை. அம்பேத்கர் தனி மனிதனின் தனித்துவதில் நம்பிக்கை கொண்டவர் என்பதால், அவர் கருத்தியல் ரீதியாக ஒற்றுமையைக் கோரிய குடியரசியலை முழுமையாக ஏற்கவில்லை. அவரின் செறிந்த, தன்னிகரில்லாத பகுத்தறிவு அவரைக் குடியரசியலை விட்டு சற்றுத் தள்ளியே இருக்க வைத்தது.

சமூகநீதி என்பது தலித்துகளை அதிகாரப்படுத்தலில் இருக்கிறது என்பதையும், அப்படிப்பட்ட அதிகாரப்படுத்தலுக்கு எல்லா வகையான அதிகாரங்களிலும் தலித்துகளுக்குப் பங்கு வேண்டும் என்பதிலும் அம்பேத்கர் சந்தேகத்துக்கு இடமில்லாமல் தெளிவாக இருந்தார். மற்ற அமைப்பு முறைகள் பொருளாதார வளம், ஆயுதம், கல்வி ஆகிய பரிமாணங்களில் ஒன்று, இரண்டு பரிமாணங்களில் தான் விலக்குதலை மேற்கொண்டன. ஆனால், ஜாதி அமைப்பில் மட்டும் தான் தலித்துகளைப் பொருளாதாரப் பலம், ராணுவம், கல்வி ஆகிய அனைத்து தளங்களிலும் ஒதுக்கி வைப்பது ஒரே சமயத்தில் நடைபெற்றது. அதனால் அது மிகக்கொடுமையான அடக்குமுறையாக இருந்தது.

ambedkarcu2.gif
அம்பேத்கர் கல்வியை மட்டுமே அதிகாரத்துக்கான திறப்பாகக் காணவில்லை. மஹர் ராணுவப்பிரிவை உருவாக்கி, விரிவுபடுத்தினார். பொருளாதார வளத்திலும் தலித்துகளுக்குப் பங்கு கிடைப்பதற்கான வெளிகளை அவர் கட்டமைக்க முயன்றார். இவையெல்லாம் வெறும் விபத்துக்கள் அல்ல. இவை அனைத்துக்கும் மேலாக, இவற்றை அடைய அரசு அதிகாரத்தில் பங்கு வேண்டும். தலித்துகளுக்குச் சட்டமியற்றும் சபைகளில் நியாயமான இடத்தைப் பெறுவதற்கான அவரின் வாழ்நாள் போராட்டத்தின் பின்னால் இந்தப் புரிதல் இருந்தது. திறமையானவர்கள், தகுதியானவர்கள் என்கிற கருத்தாக்கம் உண்மையில் பரம்பரை, பரம்பரையாகப் பெறப்பட்ட வாய்ப்புகளின் மீது எழுப்பப்பட்ட ஒன்று என்று முதன்முதலில் அப்பட்டமாக அம்பலப்படுத்தியவர்களில் அம்பேத்கரும் ஒருவர். திறமை என்பது தானே வருவதில்லை, அதற்குப் பின்னால் பல்வேறு காரணிகள், வாய்ப்புகள் இருக்கின்றன என்பதை இத்தனை காலம் கழித்தும் அழுத்தி சொல்ல வேண்டிய நிலைமை இருப்பது அவரின் கொள்கைகளில் இருந்து நாம் எவ்வளவு தூரம் தள்ளியிருக்கிறோம் என்பதற்குச் சாட்சியாகும்.

எனினும், இட ஒதுக்கீடு உருவாக்கத்தில் ஓரளவுக்கு முரண் உள்ளது. அம்பேத்கர் தன்னுடைய வாழ்நாள் முழுக்கத் தலித் அனுபவம் தனித்துவமானது என்று ஓயாமல் அழுத்தி சொல்லிக்கொண்டே இருந்தார். இப்படிப்பட்ட ‘தலித்துகள் தனித்துவமானவர்கள்’ என்கிற அவரின் ஓயாத குரல் மற்றவர்கள்
அவரோடு இணைந்து கூட்டணி அமைக்க முடியாமல் தடுத்தது என்று அவரின் செயல்முறைகளை விமர்சிப்பவர்கள் சுட்டிக்காட்டுவார்கள். தலித்துகள் தனித்துவமானவர்கள் என அழுத்தி சொன்னதன் மையத்தில் அவர்களை ஒடுக்கும் அனுபவத்தின் வலி நிறைந்திருந்தது. இதனால் தான் தலித்துகள் சிறுபான்மையினர் என்கிற தனி அடையாளத்தைப் பிறர் ஏற்க வேண்டும் என்று அம்பேத்கர் போராடினார். இட ஒதுக்கீடுகள் எப்படி மாறின என்பதைக் காண்கிற பொழுது அம்பேத்கரின் இந்தச் சிந்தனைகளின் அடிப்படைகள் ஓரளவுக்கு மழுங்கடிக்கப்பட்டு விட்டன என்பது பெரிய முரண்களில் ஒன்று.

தலித்துகளுக்கான இட ஒதுக்கீடு பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கும் நீட்டிக்கப்பட்டது இரு விஷயங்களைச் செய்தது. ‘சாதி போர்களில்’ தலித்துகளின் தனித்த வரலாற்றை அது இருட்டடிப்பு செய்தது; அவர்களின் வரலாறை மற்றவர்கள் தங்களுடையதாகக் கையகப்படுத்திக் கொண்டார்கள். இந்தக் கையகப்படுதலை அவர்களைப் பல சமயங்களில் நேரடியாக ஒடுக்கும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரே அடிக்கடி மேற்கொண்டார்கள். அதிகார பகிர்வு என்பதன் சொல்லாடல் பலருக்கும் உரியதாக ஆக்கப்பட்டதன் மூலம் தலித்துகளுக்கு எதிராக நிகழ்த்தப்படும் ஒடுக்குமுறைகள் அனைவருக்கும் உரியதாக, ஏன் புலப்படாத ஒன்றாக மாற்றப்பட்டு விட்டது. அம்பேத்கர் ஒரு புதிய அறத்தின் அடிப்படையிலான உறவினை அதிகாரத்திற்கான நேரடிப் போராட்டமாக, எதிர்வினைகளாலான எதிர்ப்பரசியலாக மாற்ற முயன்ற நம்பிக்கை மிகுந்த முன்னெடுப்பை இது காணடித்து விட்டது. அதே வேளையில், இட ஒதுக்கீடுகளுக்கான அரசியல் அடிப்படையை அது மாற்றியமைத்து உள்ளது. தலித்துகள், பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் இடையே உள்ளே பெரும்பான்மை கூட்டணி இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்தி உள்ளது. இடஒதுக்கீட்டுக்கு அரசியல் திடத்தன்மையை அது வழங்குகிறது. அதே சமயம், தலித்துகளின் அவலமிகுந்த நிலைமையின் தனித்த அறக்குரலை அது கேட்காமல் செய்துவிட்டது.

ambedkar_statue_0.jpg
அம்பேத்கர் தொடர்ந்து நம்மை அசைத்து பார்ப்பவராக இருக்கிறார். அவர் எல்லா வகையான அரசியல்கள் அவற்றோடு தொடர்புடைய பிரமைகள்
கேள்விக்கு உட்படுத்துகிறார். அம்பேத்கர் பாரம்பரியம், அதிகாரம், இந்து மதம், ஜனநாயகம். எல்லாவற்றுக்கும் மேலாக மெய்யியியல் என்கிற பெயரில் நிகழ்த்தப்படும் நேர்மையற்ற, அபத்தமான சொற்பொழிவுகள் ஆகியவை குறித்த நம்முடைய பிரமைகளைக் கடுமையாகக் கேள்விக்கு உட்படுத்துகிறார். இப்பொழுது இருக்கும் சூழலில், தேசபக்தியை நீதியை விட முக்கியத்துவப்படுத்துவது குறித்த அவரின் அவநம்பிக்கை மிகுந்த குரலுக்குச் செவிமடுத்து அவசியமாகிறது. ‘தேசியம் என்பது ஒன்றும் புனிதமானது அல்ல. அது கேள்விகளுக்கு அப்பாற்பட்ட கொள்கையும் அல்ல. ஆகவே, மற்ற எதைவிடவும் அதிமுக்கியமான ஒன்றாக தேசியத்தை மட்டும் தேர்ந்தெடுத்து கட்டாயப்படுத்தி ஏற்க வைப்பது ஏற்புடைய ஒன்று அல்ல.’

அவரின் சிந்தனைகளின் மையத்தில் பெரும் சோகத்தை ஊற்றெடுக்க வைக்கும் ஒரு கேள்வி எழுகிறது: மற்ற எவரைவிடவும் மனிதர்களின் கயமைகளை, அடக்குமுறைகளை அனுபவித்த ஒருவர் எப்படி நம்பிக்கையைக் கைவிடாதவராக இருந்தார்? எந்தப் புற ஊன்றுகோல்களையும் அவர் நம்பவில்லை, வரலாற்றின் இயங்கியலிலோ, மெய்யியலின் நிம்மதியிலோ, மதத்தின் ஆறுதல்களிலோ, போலி அறிவியலின் நிச்சயத் தன்மைகளிலோ அவர் பல நூறு ஆண்டுகாலத் துயரங்களில் இருந்து தப்பிக்கும் நம்பிக்கை இருப்பதாக நம்பாதது அவரின் அழியா தீரத்துக்குச் சான்றாகும். ஒரு பண்பில் அவர் காந்தியைப் போலவே தோன்றுகிறார்: நம்முடைய மனசாட்சியின் அறிவார்ந்த குரலை விடச் சமூகச் செயல்பாட்டிற்குச் சிறந்த அடித்தளம் எதுவும் இல்லை.

அவரின் கூர்மையான இன்னுமொரு கட்டுரையான ‘ரானடே, காந்தி, ஜின்னாவில்’ அவர் இப்படி அழுத்தமாக எழுதினார்:

உரிமைகள் சட்டங்களால் பாதுகாக்கப்படுவது இல்லை, அது சமுதாயத்தின் சமூக மனசாட்சி, அற மனசாட்சி ஆகியவற்றின் மூலமே காக்கப்படுகிறது என்று அனுபவம் நிரூபிக்கிறது. சட்டம் எந்த உரிமைகளைக் காக்க சட்டம் இயற்றப்படுகிறதோ,
அவற்றைச் சமூக மனசாட்சி அங்கீகரிக்கத் தயாராக இருந்தால் உரிமைகள் பாதுகாப்பாக, பத்திரமாக இருக்கும். அடிப்படை உரிமைகளைச் சமூகம் எதிர்க்கும் என்றால் எந்தச் சட்டமும், நாடாளுமன்றமும், நீதித்துறையும் உண்மையில் அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்த முடியாது. அமெரிக்காவில் நீக்ரோக்களுக்கும், ஜெர்மனியில் யூதர்களுக்கும், இந்தியாவில் தீண்டபப்டாத மக்களுக்கும் அடிப்படை உரிமைகளால் என்ன பயன்? பர்க் சொல்வதைப்போலப் பெரும் கூட்டத்தைத் தண்டிக்க எந்த முறையும் கண்டுபிடிக்கப்படவில்லை. சட்டமானது ஒரு தனித்த, ஒற்றை அடங்கமறுக்கிற குற்றவாளியை தண்டிக்க இயலும். சட்டத்தை ஏற்க மறுக்கிற பெரும் கூட்டத்தைச் சட்டம் ஒன்றும் செய்ய முடியாது.

கோல்ரிட்ஜ் குறிப்பிடும் சமூக மனசாட்சி தான் ஆன்மாவின் அமைதியான, களங்கப்படுத்த முடியாத நெறியாளர். அந்தச் சமூக மனசாட்சி தான் , “அடிப்படை உரிமைகள், பிற உரிமைகளின் பாதுகாவலன், அது இல்லாமல் மற்ற எல்லா அதிகாரங்களும் கடும் எதிர்ப்பையே சந்திக்கும்.”இது பெரும் நம்பிக்கை தருகிற அல்லது பெருமளவில் அவநம்பிக்கை தரும் சிந்தனையாக உங்களின் பார்வைக்கு ஏற்ப அமையும். நம்முடைய மனசாட்சியைத் தவிர வேறு எந்தத் தீர்வுகளும் இல்லை என்பது நம்மை எதிர்ப்பேச்சு பேச முடியாதவர்களாக மாற்றும், குறிப்பாக, அம்பேத்கருக்கு போலியான நம்பிக்கைகளால் மனசாட்சி பல சமயங்களில் மரித்துப் போகிறது என்பது புரிந்திருந்தது. அம்பேத்கருக்கு பெரும் அரசியல் செல்வாக்கு அவர் காலத்தில் இல்லை. அரசியல் வெற்றியின் மரபார்ந்த அளவுகோல்களின்படி அவர் அரசியலில் பெரும் தாக்கத்தை உண்டு செய்தவர் இல்லை. “நான் உருகாத பாறை போன்றவன். பாய்ந்து வரும் நதிகளின் போக்கை திசைதிருப்பும் வல்லமை மிக்கவன்.” என்று அம்பேத்கர் தன்னைப்பற்றி ஒரு சமயம் எழுதினார். நிச்சயமாக ஒட்டுமொத்த பண்பாட்டின் பயணத்தை நீதி நோக்கி அவர் திசை திருப்பினார். அதனால் ஏற்பட்ட போராட்டங்கள், அதிர்வுகள் இன்னமும் முழுமையாக உணரப்படவில்லை. அவை விடுதலைக்கான போராட்டங்களால், வன்முறை மிகுந்த எதிர்ப்புகளோடு இந்திய சமூகத்தில் வெளிப்பட்டுக் கொண்டு இருக்கிறது. அண்ணல் அம்பேத்கர் அனைவருக்குமான சிந்தனையாளர் இல்லை. அவரை நம்முடையவர் என்று உரிமை கொண்டாட நாம் போதுமானதை செய்யவில்லை. ஒரு வகையில் நம் அனைவருக்குமான சிந்தனையாளர் அவர்- நம் அனைவரையும் நிரந்தரமாக எச்சரிக்கும் எம்மான் அவர்.

(முடிந்தது)

தமிழில்: பூ கொ சரவணன்

அம்பேத்கர் – கடவுள்களை அழித்து ஒழித்தவர் – 4


அம்பேத்கர்-கடவுள்களை அழித்து ஒழித்தவர் – 4 – பேராசிரியர். பிரதாப் பானு மேத்தா

இப்படிப்பட்ட அம்பேத்கரின் அறிவு புகட்டலுக்குப் பின்னால் எப்படிப்பட்ட அறிவு சார்ந்த வாழ்க்கையை ஒரு தேசம் கட்டமைக்கும்? எந்த வகையான மீட்டெடுப்பு, நீதி நோக்கிய செயல்திட்டத்துக்கும் மையம் பிராமணியத்தை அழித்தொழிப்பதே என்பதில் அம்பேத்கர் மிகத்தெளிவாக இருந்தார். அம்பேத்கர் புத்த மதத்துக்கு மாறினாலும், மரபு என்பது என்ன என்கிற கேள்வி மனவேதனை தருகிற ஒன்றாகவே இன்றுவரை இருக்கிறது. ஒரு வகையில் அம்பேத்கரை புரிந்து கொள்ள அவர் ‘காந்தியும், காங்கிரசும் தீண்டப்படாதோருக்கு செய்தது என்ன?’ நூலில் செய்திருக்கும் உணர்ச்சி ததும்பும், நெகிழவைக்கும் சமர்ப்பணத்தைக் காண வேண்டும். உணர்ச்சிவசப்படாதவராக எப்பொழுதும் தன்னுடைய எழுத்துக்களில் வெளிப்படும் அம்பேத்கர் இந்தக் கணத்தில் உணர்ச்சிமயமாகிறார். தன்னுடைய குழந்தைகளின் மரணத்தைப் பற்றி எழுதுகையில் உணர்ச்சிகள் மிகுந்தவராக அம்பேத்கர் வெளிப்படுகிறார். ‘நம் குழந்தைகளின் மரணத்தோடு நம் வாழ்க்கையின் சாரமும், சுவையும் முடிந்து போகிறது’ விவிலியம் சொல்வதைப் போல,’“பூமிக்கு நீங்கள் உப்பாக இருக்கிறீர்கள். தன் சுவையை உப்பு இழந்தால் மீண்டும் அதை உப்பாக மாற்றவோ, வேறு எதற்கும் பயன்படுத்தவோ முடியாது. அது தெருவில் எறியப்பட்டு மக்களால் மிதிக்கப்படும்.”‘. என்று குழந்தைகளின் மரணத்தின் பொழுது எழுதுகிறார். தன்னுடைய நூலை ‘F’ என்று அவர் விளிக்கும் நபருக்கு சமர்ப்பிக்கிறார். அந்தச் சமர்ப்பணம் விவிலியத்தின் ரூத் புத்தகத்தில் ரூத்தும், நகோமியும் மேற்கொள்ளும் உரையாடலுடன் துவங்குகிறது. அந்தச் சமர்ப்பணம் ‘நீர் மரிக்கும் இடத்திலேயே நானும் மரிப்பேன். அதே இடத்தில்தான் நான் அடக்கம் பண்ணப்பட வேண்டும். நான் இந்த வாக்குறுதியைக் காப்பாற்றாவிட்டால் என்னைத் தண்டிக்கும்படி கர்த்தரிடம் கேட்டுக்கொள்வேன்: மரணம் ஒன்றுதான் நம்மைப் பிரிக்கும்’ எனும் வாசகத்துடன் முடிகிறது. அதற்குப்பின்னர் அம்பேத்கர் எழுதுகிற பத்தியை முழுமையை மேற்கோள் காட்டுவது சரியாக இருக்கும்:

நாம் இருவரும் இணைந்து விவிலியத்தை வாசிக்கும் போது , இந்தப் பத்தியின் இனிமை, சோகரசம் ஆகியவற்றால் நாம் உருகுவோம். நாம் இருவரும் ரூத்தின் ‘உம் ஜனங்களே என் ஜனங்கள். உம்முடைய தேவனே என் தேவன்.’ எனும் கூற்றைப் பற்றி நாம் விவாதித்துக் கொண்டோம். அப்போது நாம் இருவரும் அதன் சாரம் எது என்பதில் முரண்பட்டது இன்னமும் எனக்குப் பசுமையாக நினைவில் இருக்கிறது. ஒரு முழுமையான மனைவிக்குப் பொருத்தமான உண்மையான உணர்வுகளை அது வெளிப்படுத்துகிறது என்று நீ வலியுறுத்தினாய். அந்தப் பத்தியானது உண்மையில் சமூகவியல் மதிப்பு கொண்டுள்ளது எனவும், அதன் உண்மையான அர்த்தம் பேராசிரியர் ஸ்மித் வாதிடுவதைப் போல நவீன சமூகத்தைப் பழங்காலச் சமூகத்திடம் இருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது என்கிற கருத்தை நான் முன்வைத்தேன். ரூத்தின் கூற்றான, ‘பழங்காலச் சமூகமானது தன்னுடைய மேலாதிக்கம் மிகுந்த பண்புநலனான மனிதனும், இறைவனும் இணைந்தவர்கள் என்பதாக அறியப்பட்டது, திகழ்ந்தது. நவீனகாலச் சமூகமோ மனிதர்களின் சமூகமாக மட்டும் உள்ளது. (மனிதர் என்பதில் பெண்களையும் இணைத்தே நான் பேசுகிறேன் என்று நீ உணர்வாய் எனப் பிரார்த்திக்கிறேன்.) என்னுடைய கருத்து உனக்கு ஏற்புடையதாக இருக்கவில்லை. எனினும், இந்தத் தலைப்பினில் நான் ஒரு நூலை ந எழுத வேண்டும் என்று நீ ஆர்வத்தோடு உற்சாகப்படுத்தினாய். நான் நிச்சயம் எழுதுவதாக வாக்களித்தேன். ஒரு கீழை தேசத்தைச் சேர்ந்தவனாக என் சமூகம் இன்னமும் பழங்காலச் சமூகமாகவே உள்ளது, இதில் மனிதர்களைப் பற்றிய அக்கறையை விடக் கடவுள்கள் பற்றிய கவலையே முக்கியமாக உள்ளது. இப்பொழுதைய சூழலில் அந்த உரையாடலின் மிக முக்கியமான நினைவாக உனக்கு அளித்த வாக்குறுதியே கண்முன் நிற்கிறது. அந்தப் புத்தகத்தை எழுதினால் அதை உனக்குச் சமர்ப்பிப்பதாக வாக்குறுதி தந்திருந்தேன். பேராசிரியர் ஸ்மித்தின் விளக்கம் எனக்குப் புதிய திறப்புகளைத் தந்தது, அந்த நூலை எப்படியேனும் எழுதிவிட வேண்டும் என்று நான் அளவில்லாத நம்பிக்கை கொண்டிருந்தேன். அந்த ஆய்வுப்பொருளில் இப்பொழுது ஒரு புத்தகம் எழுதுவதற்கான வாய்ப்புகள் வெகு குறைவு. அரசியலின் சுழலில் மாற்றிக்கொண்ட என்னால் இலக்கியத் தேடல்களை மேற்கொள்ள முடியாது என நீ அறிவாய். இந்தச் சுழலை விட்டு எப்பொழுது நான் வெளியேறுவேன் என்று எனக்குத் தெரியவில்லை. உலகப்போர் துவங்கியதில் இருந்தே உனக்குத் தந்த வாக்கை காப்பாற்ற முடியவில்லையே என்கிற நினைவு என்னைத் தொடர்ந்து வாட்டி வதைத்தது. இந்தப் போரில் நீ இறந்து போகலாம் என்கிற நினைப்பே என்னை அதற்கு இணையாக உருக்குலைத்தது. மரணத்தின் பிடியிலிருந்து நீ தப்பி விட்டாய். இதோ உனக்கு அர்ப்பணிக்க ஒரு புத்தகம். இந்த இரு நிகழ்வுகளும் சங்கமிப்பதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. அந்த நூலை எழுத வேண்டும் என்கிற திட்டத்தைக் காலத்துக்கும் தள்ளிப்போடுவதை விட நான் வெற்றிகரமாக எழுதி முடித்த புத்தகத்தை உனக்குச் சமர்ப்பிப்பதன் மூலம் என் வாக்கை நான் காப்பாற்றி விட்டேன். இந்தப் புத்தகத்தின் ஆய்வுப்பொருள் வேறு என்றாலும் இது அதற்கு மகத்தான மாற்று தான். இந்தச் சமர்ப்பணத்தை நீ ஏற்றுக்கொள்வாயா?’

இந்தச் சமர்ப்பணத்தில் தாங்கமுடியாத அளவு கனிவும், பொறுப்புணர்ச்சியும் நிறைந்து நமக்குள் ஆழமான ஆர்வத்தை ஏற்படுத்துகிறது. அம்பேத்கரை எப்படி நாம் கண்டுகொள்ளாமல் இருக்கிறோம் என்பதற்கு ‘F’ என்று அம்பேத்கர் குறிக்கும் நபர் குறித்து நமக்குக் கிட்டத்தட்ட ஒன்றுமே தெரியாது என்பது சாட்சியாக நிற்கிறது. அந்தப் பெண்ணை அம்பேத்கர் குறித்த தனஞ்செய் கீரின் நூல் அம்பேத்கரின் ‘விவிலிய ஆசிரியை’ என்று விவரிக்கிறது. எனினும், இன்னும் தத்துவார்த்தமாகப் பார்த்தால் அம்பேத்கர் தன்னுடைய தர்க்கத்தின் அம்புகளைத் தொடுக்கிறார். நவீன உலகுக்கும், பழங்காலத்து உலகுக்கும் இடையே உள்ளே பெரும் வேறுபாடாக மனிதனை மையப்படுத்தல் இருக்கிறது. நம்மை அப்படியே உறையவைக்கும் வாக்கியமாக, ‘என் சமூகம் இன்னமும் பழங்காலச் சமூகமாகவே உள்ளது, இதில் மனிதர்களைப் பற்றிய அக்கறையை விடக் கடவுள்கள் பற்றிய கவலையே முக்கியமாக உள்ளது.’ உள்ளது. அது ஆறாத துன்பத்தோடு அவரின் நிலையை வெளிப்படுத்துகிறது. மனிதனை விட வேறொன்று மேலானது என்பது மனிதத்துக்கான சாவுமணி. இந்த அவலமான நிலையை நாம் வென்றெடுக்க வேண்டும். அண்ணல் அம்பேத்கர் எல்லாக் கடவுள்களையும் அழித்து ஒழிக்கக் களம் கண்டார்.

gadhi_ambedkar_20120820.jpg
அம்பேத்கர் புத்த மதத்தைத் தழுவியதை இந்தப் பின்னணியிலேயே காண வேண்டும். மனிதத்தை உண்மைக்கான தேடலின் மையமாக, அளவுகோலாக மாற்றும் அவரின் தேடல் தீவிரமாகத் தொடர்ந்துகொண்டே இருந்தது. கடவுளை அழித்து ஒழிப்பதோடு மட்டுமல்லாமல், கண்ணுக்கு புலப்படாதவற்றைத் தேடிச்செல்லும் எல்லா வகையான தேடலையும் மாய்த்துவிட முயலும் அளவுக்கு அந்தத் தேடல் தீவிரமானதாக இருந்தது. அம்பேத்கரின் பல்வேறு தேவைகளுக்குப் புத்த மதம் பயன்பட்டது.எந்த அறரீதியான, வரலாற்று ரீதியான மோதலை சுற்றி இந்திய வரலாறு கட்டமைக்கப்பட்டது அதன்மைய அச்சாகப் புத்த மதம் இருந்தது. Iபுத்தம் பிராமணியத்தின் கயமைகளைத் தோலுரித்துக் காண்பித்த மாற்று மரபாக இருந்தது. அது பிராமணியத்தால் அடக்கப்பட்டது. சமூக எதிர்ப்பின் ஒரு நடைமுறை செயல்பாடாகப் புத்த மதத்துக்கு மாறுவது அமைந்தது. புத்த மதத்தில் விடுதலை,சமத்துவம், சமூக இணக்கம் ஆகியவற்றை ஒன்றைந்து ஒரு புரட்சிகரமான சமூக அறமாக அதை மறு உருவாக்கம் செய்ய முனைந்தார். புத்த சங்கத்தில் இணக்கமாகக் கூட்டுறவோடு பல்வேறு மக்கள் ஒன்றிணைந்து இயங்கினார்கள். அதனால் புத்த மதத்தின் சங்கம் ஜனநாயக அமைப்புக்கான மாதிரியாகத் தோன்றியது. அறிஞர்கள் அம்பேத்கர் புத்த மதத்தைக் காரணக் காரியங்கள், கர்மா, சுயம் ஆகிய மெய்யியல் சார்ந்த கேள்விகள் அற்றதாகக் கட்டமைக்க முயன்றார் என்கிறார்கள். அம்பேத்கரின் புத்த மதம் சார்ந்த அணுகுமுறைக்கும், பிறரின் அணுகுமுறைக்கும் இருந்த மலையளவு வேறுபாட்டை உணர்ந்து கொள்ளப் பொதுவுடைமைத் தலைவரான ஆச்சார்ய நரேந்திர தேவ் ஐநூறு பக்கங்களில் எழுதிய மகத்தான நூலான ‘பவுத்ததர்ம இதிஹாஸ்’ நூலை அதே காலத்தில் எழுதப்பட்ட அம்பேத்கரின் ‘புத்தரும், தம்மமும்’ நூலோடு ஒப்பிட்டு பார்த்தால் போதுமானது. புத்த மதத்தின் மெய்யியல் சார்ந்த கேள்விகளில் அம்பேத்கருக்கு சற்றும் ஆர்வமில்லை. இன்னொரு புறம், நரேந்திர தேவ் பொதுவுடைமை சித்தாந்த பார்வை கொண்டவர் என்றாலும் புத்த மதத்தின் சமூக அறத்தேவையை அவர் சற்றும் கருத்தில் கொள்ளவில்லை. இந்த இரு வேறு நூல்களை எதிர்கொண்டு ஆய்கையில் இந்தியாவின் அறிவுலகத் துன்பியலை அது புரிய வைக்கிறது. மெய்யியல் சமூக அறம் இல்லாமல் இருக்கிறது; சமூக அறம் மெய்யியலை பெரும் ஐயத்தோடு அணுகுகிறது. இருதரப்பும் எப்பொழுதும் உரையாடல் மேற்கொள்ளவே முடியாது என்றாகி விட்டது. இந்தியாவின் ஞான மரபின் தீர்க்க முடியாத உள்முரண்பாட்டின் அடையாளமாக மெய்யியலின் பக்தியானது, ஆழமான சந்தேகம் மிகுந்த தேடலோடு பின்னிப்பிணைந்து உள்ளது. ஒருவர் சமூக அறத்தை கைக்கொள்ளவோ , அல்லது போலியான மெய்யியலுக்கு அடிமைப்பட்டோ இருக்க முடியும். இரண்டையும் ஒருங்கே உடையவராக இருக்க முடியாது என்று புத்த மதத்துக்கு மாறியதன் மூலம் அம்பேத்கர் அறிவித்தார். மதமாற்றம் மனிதத்தை மீட்கும் பெருஞ்செயலாகும்.

அம்பேத்கர் பெரும்பாலும் புத்த மதத்தைச் சமூக அறமாகவே கண்டார். புத்த சங்கங்களின் அமைப்புமுறையோடு அவர் தன்னுடைய கொள்கையான சகோதரத்துவதைக் கொண்டு போய் இணைத்தார். இது வெறும் விபத்தில்லை. புத்தர் பிராமணியத்தின் சடங்குகளை நிர்மூலம் ஆக்கினார், அம்பேத்கர் புத்த மதத்தை மெய்யியலின் எந்தத் தடயமும் இல்லாத ஒன்றாக மாற்ற முயன்றார். மெய்யியல் சார்ந்த தேடல்களில் மனிதன் எதோ ஒரு பெரிய ஆற்றலின் விளைவாக, நுண்பொருளை தேடுபவனாக மாறிவிடுவதைத் தவிர்க்க அம்பேத்கர் முனைந்தார். அவர் மீண்டும், மீண்டும் மந்திர தாயத்தைப் போலத் தன்னுடைய வழிகாட்டும் ஒளிவிளக்காகச் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை வலியுறுத்துவது ஆச்சரியமில்லை. அவர் இன்னமும் குறிப்பாகச் சகோதரத்துவதை உண்மையோடு ஒப்பிட்டார். ‘உண்மையும் சகோதரத்துவமும் ஒன்றே’ என்றார். எல்லாவகையான தேடல்களுக்கும் ஒரு மையப்புள்ளி உண்டு அது சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம். இந்த மதத்தை மட்டுமே அம்பேத்கர் ஏற்றுக்கொள்வார்.

(தொடரும்)

தமிழில்: பூ கொ சரவணன்

அம்பேத்கர் – கடவுள்களை அழித்து ஒழித்தவர் – 3


பேராசிரியர் பிரதாப் பானு மேத்தா இந்தியாவின் முதன்மையான அரசியல் அறிவியல் அறிஞர்களில் ஒருவர். ப்ரின்ஸ்டனில் முனைவர் பட்டம் பெற்ற அவர் ஹார்வர்ட், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகங்களில் பேராசிரியராக பணியாற்றினார். தற்போது Centre For Policy Research மையத்தின் தலைவராக உள்ளார். ஆழமான பார்வைகளுக்கும், கூர்மையான கருத்துக்களுக்கும் பெயர் பெற்ற அவரின் ‘Ambedkar-Slayer of All Gods’ கட்டுரையின் 3)வது பகுதி இது:

18056994_1476284712402600_519730714716659236_n.jpg
அம்பேத்கர் நமக்கு இன்னமும் ஆழமான சங்கடத்தைத் தந்துகொண்டிருக்கிறார். அதற்கான காரணம் தற்காலத்தில் இந்தியாவின் ஆன்மாவுக்கான போராட்டத்ன் மையமாகத் திகழும் அம்பேத்கரின் சில கருத்துக்கள் ஆகும். ஒன்று இந்து சமூகம் என்பதன் கட்டமைப்பின் மையமாக வன்முறையே உள்ளது என்பது ஆகும். வன்முறை என்பது வழக்கத்துக்கு மாறாக நிகழ்கிற ஒன்றல்ல. இந்து சமூகத்தின் மேற்புறத்தில் மிதக்கும் குப்பைக் கூளமல்ல வன்முறை. அந்தக் குப்பையைச் சுத்தப்படுத்தினால் இந்து சமூகத்தின் தெளிவான, சுத்தமான நீர்நிலை தென்படும் என்பது புரட்டு. வன்முறையே இந்து சமூகத்தின் அடையாளம், அதன் இயங்குசக்தி. அம்பேத்கரை பொறுத்தவரை நீதியை அடைய இந்து மதத்தின் மீது கிட்டத்தட்ட ஒரு போரை அறிவிப்பதே வழி என்று அவர் கருதியதைப் பூசிமெழுக முடியாது. காந்திக்கு எழுதிய பதிலில் அம்பேத்கர் இப்படி எழுதினார்: ‘ நான் மகாத்மாவிடம் உறுதியாக ஒன்றை சொல்ல விரும்புகிறேன். இந்துக்கள், இந்து மதம் மீது நான் அருவருப்பு, அவமதிப்பு மிகுந்த உணர்வுகளை வெளிப்படுத்துவது அவர்களின் தோல்வியால் மட்டும் அல்ல. இந்துக்கள், இந்து மதம் மீது நான் அருவருப்புக் கொள்ளக் காரணம் அவர்கள் தவறான லட்சியங்களைக் கொண்டவர்களாக, மோசமான சமூக வாழ்வை மேற்கொள்வதாக உளமார உணர்ந்துகொண்டேன். இந்து மதம், இந்துக்களுடனான எனது பிரச்சினை என்பதுஅவர்களின் சமூக நடத்தையில் உள்ள குறைபாடுகள் பற்றியதல்ல. அது மேலும் அடிப்படையானது. அது இந்துக்கள், இந்து மதத்தின் ஆதர்சங்களைப் பற்றியது.’

இப்படிப்பட்ட திட்டவட்டமான அறிவிப்பு அம்பேத்கரைத் தற்காலப் போராட்டங்கள் பலவற்றுக்கும் மிகவும் மையமாக ஆக்குகிறது. நீதியை வென்று எடுப்பதற்கான இயக்கம் என்பது ஒரு பாரம்பரியத்தைச் சீர்திருத்துவதும் அதன் ஆதர்சங்களுக்கு நேர்மையாக அதனை நடந்துகொள்ள வைப்பதும் அல்ல. நீதியை அடைவதற்கு ஒரு பாரம்பரியத்தை ஒட்டுமொத்தமாக அழித்தொழிக்க வேண்டியிருக்கிறது. இந்திய கல்விக்கூடங்களில் ஒரு புதிய தலித் விழிப்புணர்வு ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது. இது சமகால இந்தியாவின் மிகப்பெரிய கலாச்சாரப் பிளவாக இருக்கப் போகிறது என்று கருதுகிறேன். அம்பேத்கர்-பெரியார் செயல்பாட்டாளர்களுக்கும்,ABVP -க்கும் இடையே உருவாகியிருக்கும் மோதலானது அடிநாதமாக ஓடிக்கொண்டிருக்கும் பிரச்சினையின் சிறு அறிகுறி மட்டுமே. அடையாள அரசியல் சார்ந்து ஏன் கல்விக்கூடங்களில் மாணவர் அரசியல் தீவிரமடைகிறது என்பதை இந்தப் பின்னணியில் புரிந்துகொள்ள வேண்டும். அம்பேத்கர் தன்னுடைய விமர்சனத்தில் தாக்க முனைந்தது உலகத்திலேயே மிகவும் ஆச்சரியப்படுத்துவதும், சிறைப்படுத்துவதுமான தத்துவ அமைப்பான பிராமணியமே ஆகும். பிராமணியம் அல்லாத இந்து கருத்தியல் முறைகளையும் அது பெரும் தீமையாய்ப் பற்றிக்கொண்டதால் பிராமணியத்தை அக்குவேறு ஆணிவேராகக் கழற்றி எறியாமல் நீதி என்பது சாத்தியமில்லாத ஒன்றாக இந்து மதம் இருக்கிறது.

main-qimg-377022f438193bb396dabe5a16298cee-c.jpg

அம்பேத்கரின் பெரும்பாலான படைப்புகளை மீண்டும் வாசிக்கையில் மிக முக்கியமான தேடல் ஒன்று புலப்படுகிறது: அது சாதி என்கிற கொடூரமான ஒடுக்குமுறை அமைப்பை எது உற்பத்தி செய்தது என்பதைப் புரிந்து கொள்ளும் ஓயாத முயற்சி. அம்பேத்கரின் பெரும்பாலான ஆய்வுக்கட்டுரைகள் அவற்றின் சமூகவியல் ஆழம், வரலாற்று கூர்மையால் அசரடிக்கின்றன. ஆரியர் படையெடுப்பால் அடிமைப்படுத்துதல் ஏற்பட்டது எனும் கோட்பாட்டை அவர் நிராகரித்தார். சாதி அமைப்பு குறித்து இனத்தை அடிப்படையாகக் கொண்டு தரப்பட்ட எல்லா வகையான விளக்கங்களையும் அவர் நிராகரித்தார். சாதி என்பது தொழில்கள் சார்ந்து எழுந்தது என்பது போன்ற விளக்கங்களை அவர் கடுமையாகச் சாடினார். சாதி என்பது தொழில்கள் அடிப்படையிலான அமைப்புமுறை அல்ல, அது தொழிலாளர்களை அடுக்குமுறையில் வைத்து அடிமைப்படுத்தும் முறையாக இயங்கியது என்பதே இந்தக் கடுமைக்குக் காரணம். அம்பேத்கர் எனும் வரலாற்றாளர், இந்தியவியல் அறிஞரின் பலங்களுக்குள் போவது இந்தக் கட்டுரையின் இலக்கு அல்ல. அர்விந்த் ஷர்மாவின் ‘BR Ambedkar, on the Aryan invasion and the Emergence of the Caste System in India’ எனும் கட்டுரையின் கருத்துக்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை.

அம்பேத்கரின் ஆய்வுகளின் மூலம் இரு முக்கியமான கூறுகள் தெரிய வருகிறது. சாதி அமைப்பின் வினோதமான தன்மையைப் பொருளியல், தொழில்முறை சார்ந்த விளக்கங்களால் விளக்க முடியாது. சாதியமைப்பின் அடிப்படை பிராமணர்களால் அதிகாரத்தின் செயல்பாடாகத் திணிக்கப்பட்ட கொடூரமான தொடர் பிரதிநிதித்துவப்படுத்தல்களால் ஆனது. தீண்டப்படாத மக்களின் முன்னேற்றத்துக்கான வழிகளான அதிகாரம், பொருளாதார வளம், கல்வி ஆகிய மூன்றும் அவர்களுக்கு மறுக்கப்பட்டதன் மூலம் சாதியமைப்பு தொடர்ந்து உயிர்த்திருக்கிறது. சாதி அடுக்குமுறையில் உள்ள ஒவ்வொரு பிரிவினரும் தனக்குக் கீழுள்ள இன்னொரு பிரிவினரை ஒடுக்குவதன் மூலம் இன்பம் காணும் கொடூரமான அமைப்பு முறையாக அது திகழ்கிறது. சாதியமைப்பு நிரந்தரமான பாகுபாட்டில் களிப்புக் கொள்கிறது. இதனால் தான் பிராமணியம் மீதான அறச்சீற்றம் அம்பேத்கரிடமிருந்து வெளிப்படுகிறது. எந்த வகையிலும் பிராமணியம் உருவாக்கிய அடுக்குமுறைக்கு நியாயம் கற்பிக்க முடியாது. அதிகாரத்தைத் தெளிவாக, எளிமையாகத் திணிக்கும் முறை அது. இந்த அதிகாரம் ஒரு குறிப்பிட்ட கருத்தாக்கத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது, இந்த ஒட்டுமொத்த கருத்தாக்கத்தை அடித்து நொறுக்கினால் மட்டுமே விடுதலை சாத்தியம்.

இதை நேருக்கு நேராக எதிர்கொள்வது இங்கே நிகழ்வதில்லை. இந்து மதத்தின் சாதி சார்ந்த எல்லா உரையாடல்களிலும் ஒரு வகையான மன்னிப்பு கோரும் தொனியோடு, ‘சாதி ஒரு காலத்தில் தொழில் சார்ந்து இருந்தது’ என்பார்கள். சாதி என்னவோ நியாயமான லட்சியத்தைக் கொண்டிருந்ததைப் போல, ‘சாதியின் இலட்சியங்களோடு அதன் சமூக யதார்த்தம் ஒத்துப்போகவில்லை’ என்று சப்பைக்கட்டு காட்டுவார்கள். சாதி என்பது நியாயப்படுத்த கூடிய கருத்தாக்கம் என்கிற ரீதியில் அவர்களின் உரையாடல் அமையும்.சாதி அமைப்பின் அருவருப்பு ஊட்டுகிற செயல்பாட்டை, ‘சாதி அமைப்பில் பொதுவாக நெகிழ்வுத்தன்மையும், இயக்கமும் இருந்தது’ என்று சொல்லி சீர்கட்ட முயல்வார்கள். ‘சாதி பண்புகளின் அடிப்படையிலானது, பிறப்பின் அடிப்படையிலானது இல்லை.’என்பர். இறுதியாக, சாதியை ஓரளவுக்கு நியாயப்படுத்துவது கூட மிக மோசமான ஒரு சமூக அமைப்பின் கொடூரத்தை உணரவிடாமல் தடுக்க முயலும் கபடநாடகமே ஆகும்.

இன்னமும் மோசமாகச் சாதியமைப்பை நியாயப்படுத்துபவர்கள் இந்து மதம் சமத்துவத்தை உறுதி செய்கிறது என்பர். மெய்யியல் கருத்தாக்கமான இந்தச் சமத்துவம் எப்பொழுதும் தன்னை ஒடுக்குமுறை நிறைந்த சமூக அமைப்போடு சாமர்த்தியமாக இணைத்துக் கொள்ளும். அம்பேத்கரை பொறுத்தவரை வர்ணாசிரமத்துக்கான அடிப்படையை வழங்கும் புருஷ சுக்தா பிற்காலத்தில் வேதத்தில் சேர்க்கப்பட்டது. எனினும், இப்படிப்பட்ட மெய்யியல் பகுப்புகளில் சமூகப் படிநிலை பின்னிப்பிணைந்தே இருக்கும். எவ்வளவு தான் வேதங்கள், கீதை முதலியவற்றை உருவகக் கதைகளாக மாற்றிப் பேசினாலும், இவை சமூகத்தின் சாதி அடுக்குக்குச் சேவகம் செய்வதையே பண்பாகக் கொண்டிருந்தன. இவை இரண்டையும் பிரித்துப் பார்க்க முயல்வது தவறான நம்பிக்கையின் அடிப்படையிலானது. இந்து மதத்துடன் அம்பேத்கர் மேற்கொண்ட உரையாடல் ஒரு சமூக அமைப்பு குறித்த விமர்சனம் மட்டுமல்ல, சாதி அமைப்பு எந்த அறிவுத்தளத்தின் மீது எழுப்பப்பட்டு உள்ளதோ அதை முழுவதும் நிர்மூலமாக்க முயலும் விமர்சனம் ஆகும்.

A42-14238.jpg
இந்தியாவின் ஞான மரபின் இருப்புக்கான பேராபத்து மேற்கின் அங்கீகார மறுப்பில் இல்லை. அதற்கு மாறாகச் சமூகத்தில் நிலவும் பாகுபாடு சார்ந்த கொந்தளிப்புகளில் உள்ளது. ஒரு ஞான மரபின் மையம் அடக்குமுறை, அடுக்குநிலை, பிளவுபட்ட சமூக அமைப்பால் கட்டமைக்கப்பட்டு இருக்கும் பொழுது எந்த முகத்தோடு, எந்த நன்னம்பிக்கையோடு அதனை நியாயப்படுத்துவீர்கள்? ஒரு மரபின் அறிவார்ந்த புரட்சிக்கருத்துக்கள் கூட இறுதியில் பழமைவாதத்தையே வெவ்வேறு வடிவங்களில் காக்கும் பொழுது அதை எப்படி ஒருவர் புரிந்து கொள்வது?

ஆன்மீகத்துக்கும், சமூகத்துக்கு இடையே உள்ள உறவு சார்ந்த அறிவுப்பூர்வமான விவாதத்தைச் செய்ய இது இடமில்லை. சமூகத்தை ஒட்டி மட்டும் தத்துவத்தைக் காணும் அம்பேத்கரின் வாசிப்பை நிச்சயம் விமர்சிக்கலாம். பண்டைய ஞானக் கட்டமைப்பின் அதிகாரம், அடுக்குமுறை ஆகியவை குறித்து யாரேனும் வெளிச்சத்தைப் பாய்ச்சினால் அவரைச் சந்தேகக் கண்ணோடு பார்ப்பது பொதுப்போக்கு. இதில் இருந்தே எவ்வளவு உணர்ச்சிவயப்படுபவர்களாக இருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாம். சமீபத்தில் இந்துத்வா இந்தியவியல் அறிஞர் ஷெல்டன் பொல்லாக்கை கடுமையாகச் சாடியது. அதற்குக் காரணம் அவர் மேற்கை சேர்ந்தவர் என்பதல்ல. ஷெல்டன் பொல்லாக் பண்டைய மரபுக்கும் , அதிகாரத்தின் அமைப்புகளுக்கும் இடையே உள்ள தொடர்பை அவர் இணைத்து வாசிக்கிறார் என்பதில் இருந்தே இந்தக் கடுமையான என்பதில் இருந்தே எழுந்தது. அதிகாரத்தை மரபைத் தீர்மானிக்கும் அளவுகோலாக மாற்றியது அம்பேத்கரின் மகத்தான சாதனை. அம்பேத்கர் எங்களுக்கு உரியவர் என்கிற போட்டியானது இந்து மதத்தை அவர் ஆட்படுத்திய அதிகாரத்தின் அறக் களங்கத்தில் இருந்து காப்பாற்றும் ஒரு முயற்சியே ஆகும். இந்த வகையில், இந்திய பண்பாட்டின் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களில் அம்பேத்கரின் விமர்சனமே மிகப் புரட்சிகரமானது.

அம்பேத்கர் நம்மை மேலும் மேலும் அதிர்ச்சியடைக்க வைக்கும் வகையில் இந்து அடையாளத்தின் அற, உளவியல் கூறுகளைத் தன்னுடைய விமர்சனங்களால் தோண்டி எடுக்கிறார். இந்து அடையாளத்தைக் கட்டமைப்பதில் பங்கு வகிக்கும் பல்வேறு அடுக்கு வன்முறை, எதிர்ப்பு ஆகியவற்றைத் தோலுரித்துக் காட்டுகிறார். அவரே சாதி அமைப்போடு தொடர்புடைய பாலின வன்முறை, மதவாதம் ஆகியவற்றைக் கேள்வி கேட்ட முதன்மையான சிந்தனையாளர். அவரின் ஆரம்பக் காலக் கட்டுரைகளில் அக மண முறையானது சாதியமைப்புக்கு மையம் மட்டுமல்ல. அதுவே பெண்களை, கைம்பெண்களை, மணமாகாத பெண் குழந்தைகளைக் கட்டுப்படுத்தி அதன்மூலம் சாதி அடையாளத்தைக் காக்க முயல்கிறது என அம்பேத்கர் வெளிப்படுத்தினார். அவர் எழுதுவதைப் போல, சாதியின் பிரச்சனை, ‘கூடுதலான ஆண்கள் கூட்டல் கூடுதலான பெண்கள்’ ஆகும். இந்த வகையில் பெண்களைக் கட்டுப்படுத்துவது சாதியின் மையமானது. அவரின் கருணையற்ற வாள் வீச்சாக மதவாதம் என்பது இந்து அடையாளத்தை உருவாக்குவதற்கான ஒரு வழிமுறையாகும் என்கிற வாதம் அமைந்தது. அவர் அதிர்ச்சி தரும் ஒரு உண்மையைப் புலப்படுத்துகிறார். ஒரு சாதியினர் மற்றொரு சாதியினரோடு இணைத்துத் தன்னை உணர்வதில்லை. ஒரு இந்து-முஸ்லீம் கலவரம் வரும் பொழுது தான் அவர்கள் ஒன்றாக உணர்கிறார்கள். தங்களுடைய உள்ளார்ந்த பாகுபாட்டைத் தாண்டி தங்களுடைய அடையாளத்தை நிலைப்படுத்த இந்துக்களுக்கு ஒரு எதிரி தேவைப்படுகிறார்.

இந்திய மரபின் மையமாக அகிம்சையை நிறுத்துவது நம்முடைய வன்முறையற்ற வரலாற்றின் விவரிப்பு அல்ல. அதற்கு மாறாக, வன்முறையே வரலாற்றின் மையமாக இருந்துள்ளது என்பதற்கான சாட்சி அது. சமூகவியல் அறிஞர் ஆர்லாண்டோ பாட்டர்சன் பண்டைய கிரேக்கத்தில் விடுதலை சார்ந்த முறையான உரையாடல் ஏற்படக் காரணம் என்று அந்தச் சமூகம் அடிமைமுறையால் கட்டமைக்கப்பட்டு இருந்ததைக் காரணம் காட்டுகிறார். விடுதலை போற்றப்பட்டதன் காரணம் சமூகத்தில் நிலவிய அடிமைத்தனத்தை மறுதலிக்கும் முயற்சியே ஆகும். சமூகத்தில் வன்முறை உள்ளார்ந்து நிறைந்திருந்ததன் அடையாளமே அகிம்சை சார்ந்த உரையாடல் காட்டுகிறது. பிராமணியம் புத்த மதத்தின் வன்முறை சார்ந்த விமர்சனத்தை உள்வாங்கியது என்றாலும் அதற்கு ஒரு அடையாளம் தேவைப்பட்டது. அம்பேத்கர் தீண்டாமையை மாட்டுக்கறியோடு தொடர்பு படுத்தினார். ஆதிக்க ஜாதியினர் தீண்டப்படாதோரிடம் வெளிப்படுத்தும் வினோதமான அருவருப்பை அவர்கள் மாட்டு இறைச்சி உண்பதன் மூலமே விளக்க முடியும். தீண்டப்படாதோர் மீது அவர்களுக்கு இருந்த ஆழ்ந்த வெறுப்பை விளக்க அம்பேத்கர் முயன்றார். அது வெறுமனே சமத்துவமின்மை, அடக்குமுறையோடு உள்ள உறவு அல்ல. அது தூய்மைவாதத்தைக் கைப்பற்றும் பணிக்கு உதவியது. இந்த வரலாறு தெரியாதவர்கள் தான் கல்விக்கூடங்களில் மாட்டு இறைச்சி சார்ந்து நிகழும் போராட்டங்களைப் புரிந்து கொள்ளத் தவறுவர்.

p19.gif

சுருக்கமாக, அம்பேத்கரின் செயல்பாடு எந்த ஒரு பண்பாட்டையும் பெரிய அளவில், மிகவும் தீரத்தோடு அறிவார்ந்த முறையில் தோலுரித்த முன்மாதிரி இல்லாத செயல்பாடு ஆகும். விழுமியங்களை மறுவாசிப்புச் செய்து அவற்றின் உண்மையான நோக்கங்களை அவர் புலப்படுத்தினார். அறம் என்றதற்குப் பின்னிருந்த அடக்குமுறைகளை அவர் கண்டெடுத்தார். அகிம்சையைக் கொண்டாடியதற்குப் பின்னால் பெரும் இம்சை இருந்ததாக அவர் சொன்னார். சடங்குகளுக்குப் பின்னால் பல்வேறு தடைகள் அடங்கியிருந்தன. அவற்றின் மூலம் யாரும் அதுவரை கண்டிராத மனித ஆளுமையின் மீதான மிக மோசமான சிதைப்பு மேற்கொள்ளப்பட்டது. பிரபஞ்ச அமைப்பு என்பது ஒன்று போன்ற நீண்ட பிரசாங்கங்களுக்குப் பின்னால் சமூகத்தின் ஆழமான பாகுபாடுகள் இருந்தன. பசுவின் மீது இருக்கும் அக்கறைக்குப் பின்னால் மாட்டு இறைச்சி உண்பவர்கள் மீதான ஆழமான வெறுப்பு ஒளிந்திருக்கிறது. பசுவிடம் காட்டப்படும் மிக மென்மையான போக்கு என்பது மற்றவர்களின் மீதான சித்திரவதையின் சுத்திகரிக்கப்பட்ட வடிவமே ஆகும். மனித உயிர்கள் பற்றி இரக்கமற்றவர்களாகப் பசுப் பாதுக்காப்பாளர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று எப்பொழுதேனும் ஆச்சரியப்பட்டிருப்பீர்கள் என்றால் அம்பேத்கரை வாசியுங்கள். அவரின் விமர்சனம் உங்களைக் கொட்டும். நம்முடைய கொள்கையில் இருந்து திசைமாறிவிட்டோம் என்று அவர் வாதிடவில்லை. இந்தக் கொள்கைகளுக்குப் பின்னால் வன்முறையும், சித்திரவதை செய்யும் பண்பும் நிறைந்து இருப்பதாக அதிரவைக்கிறார். இந்தியாவில் பிராமணியத்தின் ஆதிக்கத்தால் வால்டேர் போன்ற ஒரு சுதந்திரமான சிந்தனையாளரும் எழவில்லை என்று அவர் சாடினார். இருக்கிற சமூக அமைப்புக்குள் வேலை பார்க்கும் அரைகுறை சீர்திருத்தவாதிகளே நமக்கு வாய்த்தனர். யாருமே சாதியமைப்பின் அடிப்படையையே தீரத்தோடு கேள்விக்கு ஆட்படுத்தவில்லை.

அம்பேத்கரை தீவிரமாகக் கவனத்தில் எடுத்துக்கொள்வது அவரின் விமர்சனத்தைத் தீவிரமாகக் கவனத்தில் கொள்வதாகும். அம்பேத்கரை நோக்கிய எதிர்வினைகள் எதிர்ப்பாக இருந்தன: அரசமைப்பு சட்ட வரைவில் அவரை இணைத்துக்கொண்டதை தவிர்த்து அவரைத் திட்டமிட்டு ஓரம்கட்டவே முயன்றார்கள். அதற்கு அடுத்தக் கட்டம் தற்காப்புத் தொனியில் பேசுவது. நாம் தலித் உடல்களின் மீது நிகழ்த்தப்படும் வன்முறையை எவ்வளவு கீழ்மையாக வேண்டுமானாலும் நடந்து கொண்டு மறுதலிப்போம். அவர்கள் முன்னேறுவதற்கான வாய்ப்புகளை மறுப்போம். தற்காப்பு அரசியல் இனிமேலும் ஈடுபடுவது இல்லை என்கிற பொழுது அவரைக் கையகப்படுத்த முயல்வது. இந்து மதம் பற்றிய அவருடைய விமர்சனங்களை உள்வாங்கிக் கொண்டே ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் அம்பேத்கரின் பெயரை உச்சரிக்கிறார்கள் என்பதைக் கற்பனைக்குக் கூட நம்பும்படியாக இல்லை. அவரின் இந்து மதத்தின் புதிர்கள் நூல் தடை செய்யப்பட்டது. நம் அனைவர்க்கும் அம்பேத்கர் உரியவர் என்று நாடகம் நிகழ்த்துவதன் மூலம் நம்மைப்பற்றி அம்பேத்கர் சொல்லும் கடுமையான உண்மைகளை வசப்படுத்தவோ, மூடி மறைக்கவோ முயல்கிறோம். இந்து மதத்தை ஆதரிப்பவர்கள் அம்பேத்கரின் விமர்சனங்களில் உள்ள உண்மையை ஒப்புக்கொண்டு விடலாம். அது உண்மையில் நன்னம்பிக்கை அடிப்படையிலான செயலாக இருக்கும். தேசிய இயக்கம் தான் மரபை வெறுக்காமல் மரபைக் கடக்க முயன்ற போராட்டங்கள் மிகுந்த அறிவார்ந்த கடைசிச் செயல்திட்டமாகும். மரபை சீர்திருத்தி அதைப் பாதுகாக்க முடியும் என்று எண்ணினார்கள். அம்பேத்கர் இந்தச் செயல்திட்டத்திற்குள் வலிமைமிகுந்த தாக்குதலை மேற்கொண்டார்: ‘மதத்தை ஒழிப்பது அடிமை முறையை ஒழிப்பதற்கு அவசியமாகும்.மதத்தை மரபைப் பாதுகாப்பதன் மூலம் சீர்திருத்த முயலாதீர்கள்; அதனை அழிப்பதன் மூலம் விடுதலையைப் பெறலாம்.

(தொடரும்)

அம்பேத்கர் – கடவுள்களை அழித்து ஒழித்தவர் – 2


பேராசிரியர் பிரதாப் பானு மேத்தா இந்தியாவின் முதன்மையான அரசியல் அறிவியல் அறிஞர்களில் ஒருவர். ப்ரின்ஸ்டனில் முனைவர் பட்டம் பெற்ற அவர் ஹார்வர்ட், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகங்களில் பேராசிரியராக பணியாற்றினார். தற்போது Centre For Policy Research மையத்தின் தலைவராக உள்ளார். ஆழமான பார்வைகளுக்கும், கூர்மையான கருத்துக்களுக்கும் பெயர் பெற்ற அவரின் ‘Ambedkar-Slayer of All Gods’ கட்டுரையின் இரண்டாவது பகுதி இது:

அம்பேத்கர் – கடவுள்களை அழித்து ஒழித்தவர் – 1
அம்பேத்கர் பல்வேறு தளங்களில் உங்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துகிறார். அதிரவைக்கிறார். அவர் தலைமுறையின் எல்லாத் தலைவர்களில் அம்பேத்கருக்கு இருந்த தெளிவு ஒப்புமை இல்லாத புத்துணர்வோடு திகழ்கிறது. தரவுகள், தர்க்கம் ஆகியவற்றை அடுக்குவதில் மதிநுட்பம் மிகுந்தவராக, ஈடிணை இல்லாதவராக அவர் திகழ்கிறார். நேருவை போல அவர் தன்னுடைய வாதங்களில் எப்போதும் உணர்ச்சிவசப்படுபவராக இல்லை. அவரின் முனைவர் பட்ட ஆய்வுகளிலும் இது புலப்படுகிறது. அசரவைக்கும் அளவுக்குப் பொருளாதார ஆய்வுகள் மேற்கொண்ட அவர், சட்டம் ஆக்குபவராகப் பம்பாய் சட்டசபையிலும், அரசியல் நிர்ணய சபையிலும் செயல்பட்ட அம்பேத்கர் அங்கேயும் இப்படிப்பட்ட பிரமிக்க வைக்கும் அறிவுபூர்வமான வாதங்களை முன்வைத்தார். அவரின் புலமை, பேரறிவு, அடுக்கும் மேற்கோள்கள் ஒப்பிட முடியாதவை. அவரின் ஓயாத தர்க்கம், முழுமையான தெளிவுக்கு ‘Thoughts on Pakistan’ நூலை வாசித்துப் பாருங்கள். இன்று வரை பாகிஸ்தான் குறித்த மிக மிகத் தெளிவான, சமரசங்கள் செய்து கொள்ளாத பார்வையை அந்நூல் வாரி வழங்குகிறது. இந்த நூலின் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளை, தங்களுக்கு வசதியாக உள்ளவற்றை மட்டும் இந்துத்துவர்கள், பாகிஸ்தான் ஆதரவாளர்கள் மேற்கோள் காட்டுவது வழக்கமாக உள்ளது. எனினும், அந்நூல் இரு தரப்பின் தர்க்கத்திலும் உள்ள கோளாறுகள், அபத்தங்களை அம்பலப்படுத்துகிறது. நம்முடைய போலித்தனங்களை அம்பேத்கர் தொடர்ந்து புலப்படுத்திக் கொண்டே இருப்பதால் அவர் அசௌகரியம் ஏற்படுத்துபவராக உள்ளார். அவர் எப்போதும் அநீதியின் உண்மை முகத்தை நமக்கு நினைவுறுத்தியபடியே இருந்தார் என்ற மேலோட்டமான அர்த்தத்தில் நான் சொல்லவில்லை. நாம் பின்பற்றும் எந்தச் சித்தாந்தத்தையும் எடுத்துக்கொண்டு, அதனை எப்படி நாம் முழுமையாகப் பின்பற்றுவதில்லை என்று புலப்படுத்தி நம்மைச் சங்கடப்பட வைக்கிறார் என்பதே நான் சொல்வதன் அர்த்தம்.

Ambedkar-and-his-followers-saw-Gandhi-as-their-Enemy.jpg

> அம்பேத்கர் காந்தி மீது வைக்கும் மிக முக்கியமான குற்றச்சாட்டு அவர் தலித்துகளுக்கு நியாயம் செய்யத் தவறிவிட்டார் என்பது மட்டுமல்ல. அம்பேத்கரின் பார்வையில் தலித்துகளின் கோரிக்கைகளை மழுங்கடிக்கும் அறமற்ற செயல்களுக்குத் துணை போகும் கருவியாக அகிம்சையைக் காந்தி பயன்படுத்தினார். ஆழமாக நோக்கினால் அகிம்சையின் கொள்கைக்குக் காந்தி நியாயம் செய்யத் தவறிவிட்டார். காந்தியின் செயல்பாட்டு முறைகளின் மையமாக நம்பமுடியாத உளவியல் ரீதியான கட்டாயப்படுத்தல் இருந்தது. இந்தக் கட்டாயப்படுத்துதல் என்பது கணிசமாக உள்முகம்நோக்கி, ஒருவரின் ஆன்மாவை நோக்கித் திருப்பப்படுவது என்று சொல்லும் அதீத தைரியமும் காந்திக்கு இருந்தது. இந்தக் குற்றச்சாட்டில் கொஞ்சம் உண்மை உண்டு என்று காந்தி நிச்சயம் ஒத்துக்கொண்டிருப்பார். அரசமைப்புக் கலாச்சாரத்தில் சத்தியாகிரகம் என்பது ஒருவர் தான் உண்மை என்று நம்புவதன் மீது சுயமோகம் கொண்டு, சமூகத்தின் பல்வேறு கருத்துநிலைகளை அங்கீகரிக்க மறுக்கும் வன்முறை என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய குற்றச்சாட்டாகும். அநீதி ஏற்படும்போது அரசமைப்பு சட்ட முறைகளில் நம்பிக்கை கொண்டு செயல்பட வேண்டும் என்கிற அம்பேத்கரின் எண்ணம், காந்தியின் அகிம்சை என்ற கருத்தாக்கத்துக்கு இணையாகப் புரட்சிகரமாகக் கருதப்பட வேண்டியது. மிக ஆழமான அடக்குமுறையைத் துப்புரவாகத் துடைத்து எறியும் வன்முறையின் மூலம் எதிர்கொள்ளலாம் என்று அறைகூவல் விடுக்காமல் இருப்பதற்குச் செறிவான, வேறு வகையான தைரியம் தேவைப்படுகிறது. பல்வேறு வகைகளில், காந்தியை விட இந்தியாவை அதிகமாக அகிம்சையோடு பிணைத்தவர் அண்ணல் அம்பேத்கரே ஆவார். தலித்துகளை அரசமைப்புச் சட்ட முறைகளின் படி இயங்க வேண்டும் என்று ஒப்புவித்ததன் மூலம் அவர் அதை நிகழ்த்தினார். இது தங்களின் கைகளைக் கட்டிப்போட்டிருப்பதாகச் சில தலித் புரட்சியாளர்கள் முணுமுணுக்கிற அளவுக்குத் தாக்கம் செலுத்தியுள்ளது.

நேருவின் மீது மிகக் கடுமையான குற்றச்சாட்டை அம்பேத்கர் முன்வைக்கிறார். அவரின் ‘கண்டடைந்த இந்தியா’ நூலில் அநீதியின் மீது ஒரு வகையான திரை சத்தமில்லாமல் போர்த்தப்படுவதாக அம்பேத்கர் சுட்டிக்காட்டுகிறார். பிராமணியத்தைத் தூக்கிப் பிடிப்பவராக நேரு திகழ்ந்தார் என்று அம்பேத்கர் அடிக்கடி குற்றஞ்சாட்டுகிறார்.

சமூகத்தின் மீது பொருளாதார வளம் எப்படிப்பட்ட ஆழமான மாற்றங்களை உருவாக்கும் தாக்கங்களைச் செலுத்தும் என்பதை உணர்ந்த வெகு சில தலைவர்களில் ஒருவராக அம்பேத்கர் திகழ்ந்தார். துறவு என்பது ஆதிக்கச் சாதியினருக்கு அர்த்தமுள்ள செயல்பாடாக இருந்தாலும், எதுவுமே இல்லாமல் அல்லலுற்று வாழும் ஒடுக்கப்பட்ட மக்களை அப்படித் துறவு உணர்வோடு செயல்படச் சொல்வது மிக மோசமான நையாண்டி என்று கருதியதால்தான் அம்பேத்கரால் அப்படி இருக்க முடிந்தது. இந்தியாவை நவீனமயப்படுத்த முயன்ற அனைவரும் கருத்தில் கொள்ளத் தவறிய பொருளாதார வளம் பற்றிய மிக முக்கியமான, தனித்த அம்பேத்கரின் சமூகவியல் பார்வையாலே இது சாத்தியமானது.

18011024_1475411165823288_6580252952729044213_n.jpg
அம்பேத்கரின் மிக முக்கியமான கட்டுரைகளில் ஒன்று, பெர்ட்ரண்ட் ரஸ்ஸலின் Reconstruction of Society கட்டுரையை அவர் விமர்சித்து எழுதிய மறுப்புக்கு கட்டுரை. நிலச்சுவான்தார் குடும்பத்தில் இருந்து வந்த ரஸ்ஸல் பணத்தின் மீதான மோகத்தை, சலிப்பூட்டும் விதத்தில் விமர்சிப்பதை அம்பேத்கர் கடிந்துகொண்டார்.. “ரஸ்ஸல் ‘பணத்தின் மீதான மோகத்தின் தீமைகள்’ என்று காலங்காலமாகச் சொல்லப்பட்டதைத் திரும்பிச் சொன்னதன் மூலம் தன்னுடைய தரப்பின் வரலாற்று மதிப்புக்கு எந்த விதமான தத்துவார்த்தரீதியிலான அழுத்தத்தையும் கூட்டவில்லை… பணத்தின் தேவையைக் கருத்தில் கொண்டு ஆய்வு செய்யாமல் பணத்தின் மீதான மோகத்தை ரஸ்ஸல் விமர்சிப்பதால் இந்தத் தவறான கருத்தாக்கம் ஏற்பட்டுள்ளது. தெளிவான அறிவு கொண்டவர், மனத்தளவில் பணத்தின் மீது மோகம் கொள்ள மாட்டார் என்று வாதிடலாம். பணத்தின் மீதான காதல் ஏதோ ஒன்றுக்கான ஆசையிலிருந்தே கிளைக்கிறது …அந்த ஆசைப்படும் பொருளுக்கான தேவையைப் பொறுத்தே பணத்தின் மீதான மோகம் நன்மையைத் தருமா, அவமானத்தைத் தருமா என்பதைச் சொல்ல முடியும்…பணத்திற்கான மோகத்தின் மூலம் ஏற்படும் தேடல் கூடப் பல்வேறு வகையான குணங்களை ஏற்படுத்தக்கூடும்.’ என்று அவர் எழுதினார். பணத்துக்கும் பல்வேறு வகை, குணங்களுக்கும் இடையிலான கூட்டணி உள்ளது, அப்படிக் கூட்டணி இல்லாததால் பல விஷயங்கள் இல்லாமல் போய் முற்றிலும் ஒரே மாதிரியாக இருப்பது நிகழ்கிறது என்பது அம்பேத்கரின் வாதம். இந்த வாதம் ஆழமில்லாத அறவியல்வாதமானது பேராசை குறித்து மேற்கொள்ளும் ஆய்வுகளை விட ஏற்புடையதாக உள்ளது. ஆகவேதான் அம்பேத்கர் நம்மைச் சங்கடப்படுத்துகிறார். காந்தியை விட அரசியலமைப்புச் சட்ட தர்க்கத்தை அகிம்சையோடு அம்பேத்கர் சிறப்பாக இணைக்கிறார், நவீனத்துவத்தைப் பன்மைத்தன்மையோடு உள்ள தொடர்போடு நேருவை விடச் சிறப்பாக ஒருங்கிணைக்கிறார் ; அவரின் வரலாற்றுப் பிரக்ஞையை இருள் அடர்ந்த, தீமை மிகுந்த வெளிகளை ஆய்வுசெய்வது நோக்கி யாரைக் காட்டிலும் தீவிரமாக அவர் செலுத்துகிறார் இப்படி ஆய்வு செய்ததன் மூலம் நம் நம்பிக்கைகளுக்கு ஏற்ப நாம் கொண்டிருந்த சார்புகளின் போதாமைகளை அவர் அம்பலப்படுத்தினார்.

(தொடரும்)