அம்பேத்கரின் கீதை
பேராசிரியர் மீரா நந்தா எழுதிய ‘அம்பேத்கரின் கீதை’ எனும் கட்டுரையின் சாரம் இங்கே தரப்படுகிறது. கீதை, பிராமணிய தத்துவ மரபுகள் குறித்து ஆழமான பார்வைகளை மீரா நந்தா முன்வைக்கிறார். நான் அம்பேத்கர் கீதையை அணுகிய விதத்தை மையப்படுத்தும் பகுதிகளை மைய இழையாகக் கொண்டு இந்த அறிமுகத்தை எழுதுகிறேன். முழுமையான கட்டுரையை வேண்டுபவர்கள் தொடர்பு கொள்ளலாம்:
பிரதமர் மோடி உலகத் தலைவர்களுக்குப் பகவத் கீதையைப் பரிசளிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அப்போதைய அயலுறவுத் துறை அமைச்சரான சுஷ்மா சுவராஜ் இந்தியாவின் அடையாளமாக அப்புனித நூல் உயர்ந்து விட்டதைக் காட்டுகிறது என்கிற ரீதியில் பேசினார் . வெவ்வேறு மத மற்றும் அரசியல் தலைவர்கள் இந்தியாவின் தேசிய நூலாக (ராஷ்ட்ரிய கிரந்தமாக) பகவத் கீதையை அறிவிக்க வேண்டும் என்று கோரினார்கள். கீதையை அரசு நடத்தும் பள்ளிகளில் பாட நூலாக வைக்க வேண்டுமென்றும் குரல்கள் எழுகின்றன. இந்தியா மதச்சார்பற்ற நாடு அல்லவா என்கிற எதிர்ப்புகளைச் சமாளிக்க, இஸ்லாமியர்கள்,கிறிஸ்துவர்கள், இறை மறுப்பாளர்கள் ஆகியோரும் பின்பற்றக் கூடிய தத்துவ வெளிச்சங்கள், மானுட விழுமியங்கள் அந்நூலில் உண்டு என்றும் இந்துத்துவத் தலைவர்கள் பேசுகிறார்கள்.
இளவயதினருக்கு அறநெறியை போதிக்கக் கீதை உகந்த நூலா? இந்தியா அதிகாரப்பூர்வமாகப் பின்பற்றும் அரசியலமைப்பு சட்டத்தின் சுதந்திரவாத, ஜனநாயக பண்புகள் இதில் இருக்கிறதா? இந்தியாவிற்கு இந்திய அரசியலமைப்புச் சட்டம், பகவத் கீதை என்று இரு தேசிய நூல்கள் இருக்க முடியுமா? இந்தக் குழப்பத்தில் இருந்து தெளிவு பெற அம்பேத்கரை விட ஆகச்சிறந்த வழிகாட்டி யார் உள்ளார்? இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை ஆக்கிய வரைவுக் குழுவின் தலைவராக மட்டுமல்லாமல், இந்து மதத்தை உதறித்தள்ளிய ‘தீண்டப்படாதவர்’ என்கிற வகையில் அம்பேத்கரின் கீதை குறித்த பார்வை முக்கியமானது.
எப்படி அமெரிக்காவின் சுதந்திர பிரகடனத்தை எழுதிய தாமஸ் ஜெபர்சன் பைபிளில் உள்ள நம்ப முடியாத அற்புதங்களை எல்லாம் வெட்டித் தள்ளினாரோ அதே போல அண்ணல் அம்பேத்கர் கீதையை எப்படி அணுகினார் என்று அறிந்து கொள்வது அவசியமாகிறது. அண்ணல் அம்பேத்கர் புத்தர், ஜான் டூயி ஆகியோரை நேசித்தார். அயராமல் சாதியை அழித்தொழிக்கத் தன்னை ஒப்புக்கொடுத்து கொண்டவர். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றியவர்களுள் ஒருவர். இத்தகைய மாண்புமிக்க அம்பேத்கர் கீதையை எப்படிப் பகுப்பாய்வு செய்திருப்பார். அம்பேத்கரின் கீதை எப்படி இருக்கும்?
அம்பேத்கர் கீதையைப் பற்றித் தனியாக எந்த நூலையும் எழுதவில்லை. திலகர், அரவிந்தர், காந்தி உள்ளிட்ட எண்ணற்ற தலைவர்கள் கீதைக்கு உரை எழுதினாலும் அம்பேத்கர் அப்படிப்பட்ட முயற்சியில் ஈடுபடவில்லை. அவர் கீதை குறித்து என்ன எண்ணினார் என்பதைப்பற்றி ஆங்காங்கே காணக் கிடைக்கிறது. மேலும், மதங்கள் கண்மூடித்தனமாக நம்பச்சொல்பவை எப்படிச் சமூகத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது என்பதைக் குறித்து அவர் ஆழமாகச் சிந்தித்தார். இவற்றைப் பகுத்தறிவை கொண்டு கூராய்வு செய்ய வேண்டும் என்கிற அம்பேத்கரின் அணுகுமுறை எந்தப் புனித நூலையும் காண்பதற்கான தெளிவான கண்ணாடி.
அம்பேத்கரின் தேடலை ஒரே வார்த்தையில் சொல்லி விடலாம் – நீதி. எல்லாவகையான இறை அடிப்படையிலான அதிகாரமுறைகளும் கேள்விக்கு உட்படுத்தப்பட்டு, நீதி எனும் உரைகல்லில் அவற்றை உரசிப்பார்க்க வேண்டும் என்று அம்பேத்கர் கருதினார். அவரின் ‘இந்து மதத்தின் தத்துவ’த்தில் தெளிவுபடுத்துவதைப் போல , இந்த நவீன உலகத்தில் எந்த மதத்தின் அறம் , நியாயம் குறித்த விழுமியங்களை நீதியின் தராசில் நிறுத்திப் பார்க்க வேண்டும். அம்பேத்கரை பொறுத்தவரை நீதி என்பதற்குள் சுதந்திரம், சகோதரத்துவம், சமத்துவம் பிணைந்திருக்கிறது. ‘ஒரு தனிமனிதனுக்கு நீதி வழங்காத ஒன்று சமூகத்திற்குப் பயன்மிக்கதாக இருக்க முடியாது ’ என்கிற அவரின் நீதி குறித்த அளவுகோல், சமூக இணக்கத்தைக் காப்பாற்றுவதால் வர்ணாசிரம முறை தேவை என்கிற பலரின் பார்வையைத் தூக்கி தூர எறிகிறது. அம்பேத்கரின் அறிவு வெளிச்சத்தில் கீதையை அணுகுவது அவசியமாகிறது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட ஒரு நூலை நவீன காலத்தின் அளவுகோல்களைக் கொண்டு அளவிடுவது அநியாயமாகத் தோன்றலாம். இந்தக் காலத்திற்கும் பொருந்தும் கருத்துகள் அதில் இருப்பதால் அதனைப் பாட நூலாகப் படிக்கலாம் என்கிற பார்வையை வேறெப்படி எதிர்கொள்ள முடியும்? கீதையில் சோசியலிசம், முதலாளித்துவ மேலாண்மை, அகிம்சை, அணு குண்டு என்று எல்லாமும் பொதிந்து இருக்கிறது என்றெல்லாம் கீதையின் மீது ஏற்றப்பட்டிருப்பவற்றைப் படிப்படியாகத் தோலுரிக்க இந்த அணுகுமுறை உதவும். இந்து மத நூல்களுக்கும், சாதிக்கும் தொடர்பே இல்லை என்று அமெரிக்கப் பாட நூல்களை மாற்றி எழுதும் முயற்சிகள் நடந்து கொண்டிருக்கும் காலத்தில் இத்தகைய கூர்மையான தேடல் தவிர்க்க முடியாத ஒன்று.
‘சாதியை அழித்தொழிக்கும் வழி’ நூலில் நால்வர்ண முறையானது பிளாட்டோவின் கருத்தாக்கத்துக்கு வெகு நெருக்கமானதாக இருக்கிறது என்று அம்பேத்கர் குறிப்பிடுகிறார்:
‘பிளாட்டோவை பொறுத்தவரை இயற்கையாகவே மனிதர்கள் மூன்று வகுப்புகளில் அடங்குவர். சில தனிநபர்களை வெறும் வெட்கைகளே செலுத்தியதாகப் பிளாட்டோ கருதினார். அவர்கள் உழைக்கும், வர்த்தம் செய்யும் வர்க்கங்கள் என்று வகைப்படுத்தினார். பிறர்…தீரமிகுந்தவர்களாகத் திகழ்ந்தார்கள். அவர்களே போர்களில் இருந்து காப்பவர்களாக, நாட்டில் அமைதியை நிலைநாட்டுபவர்களாகப் பிளாட்டோ அடையாளப்படுத்தினார். உலகத்து விஷயங்களுக்குப் பின்னுள்ள அடிப்படைக் காரணங்களை உள்வாங்கிக் கொள்ளும் வேறு சிலருக்கு இருந்தது. இவர்களை மக்களுக்கு நீதிபரிபாலனம் புரிகிறவர்கள் என்று பிளாட்டோ அறிவித்தார்.’
இயற்கையாகவே என்கிற பதம் கருத்தில் நிறுத்த வேண்டிய குறிச்சொல். சிந்தனையாளர் கண்டோர்செட் வார்த்தைகளில் சொல்வது என்றால், கீதையும், பிளாட்டோவும், ‘அரசியல் ஏற்றத்தாழ்வு எனும் குற்றத்தை புரிகையில் இயற்கையைத் தங்களுடைய கூட்டாளி ஆக்கிக்கொள்கிறார்கள்.’ இந்த ஏற்றத்தாழ்வுகளை இயற்கையானவை என்று நிறுவ பிளாட்டோவும், பகவான் கிருஷ்ணனும் “கண்ணியமான பொய்” ஒன்று அவிழ்த்து விடுகிறார்கள். பிளாட்டோ உலோகங்களைக் கொண்டு கதை அளக்கிறார். கிருஷ்ணர் குணம், கர்மா, மறுபிறப்பு கருதுகோளுக்குத் தன்னுடைய ஆசிகளை வழங்குகிறார். அதென்ன பிளாட்டோவின் பொய்?
சாக்ரடீஸ் மனித ஆன்மா மூன்று பகுதிகளைக் கொண்டது என்றார். உணவுக்கும், காமத்துக்கும் அலைந்து திரியும் கீழான வேட்கைகள் கொண்டு திரியும் பகுதி ஒன்று என்றால் மதிப்பும், அதிகாரமும் நாடும் பகுதி மற்றொன்று. இவற்றுக்கு அடுத்தபடியாக அறிவை நாடும் ‘தத்துவ அரசர்கள்’ மூன்றாவது பகுதி. வேட்கை மிக்கவர்கள் மன்னர்கள் ஆகிவிடக் கூடாது என்பதற்காகக் கல்வியறிவு பிறப்போடு தொடர்புடைய ஒன்று எனச் சாக்ரடீஸ் வரையறுக்கிறார். இதனை எப்படி உழைப்பவர்களை நம்ப வைப்பது? அவர்கள் தங்கள் வகுப்புகளைத் தாண்டி வேறெங்கும் திருமண உறவு கொள்ளாமல் எப்படித் தடுப்பது. பிளாட்டோ தன்னுடைய ‘கண்ணியமான பொய்யை’ இங்குத் தான் சொல்கிறார். இறைவன் எல்லாப் பிள்ளைகளையும் ஒரே மண்ணில் இருந்தே படைத்தார். என்ன சிலரை தங்கத்தைக் கலந்தும், சிலரை இரும்பு, சிலரை பித்தளை கலந்தும் படைத்து விட்டார். ஒவ்வொருவரும் இறைவனின் படைப்பு என்றாலும், பரிசுத்தமான உலோகங்களினால் ஆனவர்கள் உயர்குடியில் பிறப்பார்கள், அவர்களே ஆளவேண்டும் என்றது அந்தப் பொய். கடவுள், உங்கள் வாழ்க்கை நிலைக்கு நீங்கள் எப்படிப்பட்ட பண்பு கொண்டவராக இருக்க வேண்டும் என்று படைத்தாரோ அப்படி மட்டும்தான் இருக்க இயலும்.
அப்படியே பிளாட்டோவின் மூன்று உலோகங்கள் கதைக்குப் பதிலாகக் கீதையின் மூன்று குணங்கள் என்பதைப் போடுங்கள். இறைவன் உலோகத்தைக் கலக்கிற கதைக்குப் பதிலாகக் கர்மா, மறுபிறப்பு எனும் ‘இயற்கையான’ நிகழ்வுகளை நிரப்பிக் கொள்ளுங்கள். இது தான் கீதை கட்டவிழ்த்து விடும் ‘கண்ணியமான பொய்’. தன்னுடைய பொய்யை யாராவது நம்புவார்களா என்று பிளாட்டோ வெளிப்படையாகக் கவலைப்பட்டார். பகவத் கீதையைக் கிருஷ்ணர் தானே படைத்ததாக அறிவிக்கிறார். பிளாட்டோவின் சிந்தனை செயல்பாட்டிற்கு வரவில்லை, ஆனால், கீதையின் சாரம் இன்றும் பொதுப் புத்தியில் ஆழமாக வேரூன்றி இருக்கிறது.
அம்பேத்கரின் நிறைவடையாத ‘புரட்சி மற்றும் எதிர்ப்புரட்சி’யில் ‘கீதை ஒரு மத நூல் அல்ல. அது தத்துவ விசாரணையிலும் ஈடுபடவில்லை. மதத்தின் கண்மூடித்தனமான நம்பிக்கைகளைத் தத்துவ அடிப்படைகளைக் கொண்டு நியாயப்படுத்தவே அது முயல்கிறது’ என்கிறார். நால்வர்ண படிநிலை என்கிற அடக்குமுறை அடுக்குநிலையை மூன்று குணங்கள் என்கிற தத்துவ அடிப்படைகளைக் கொண்டு காப்பாற்ற முயல்வது அம்பேத்கரை கவலை கொள்ள வைத்தது.
கீதை ஒரு வர்ணத்தில் பிறந்தவர் தனக்கு விதிக்கப்பட்ட தொழிலை செய்வதற்கு எந்த நியாயமும் இல்லை என்றாலும் அதனைச் செய்தே ஆகவேண்டும் என்கிறது. பிறரின் தொழிலை புரிய முயல்வதைவிட அதுவே மேம்பட்டது என்கிறது. எவ்வளவு மோசமான தொழிலாக இருந்தாலும் தன்னுடைய பிறப்பிற்கு விதிக்கப்பட்ட தொழிலை ஒருவர் செய்வதால் எந்தப் பாவமும் அவரை அண்டுவதில்லை என்கிறது கீதை. உயரிய குணங்களைப் பிராமணர்களுக்கு என்றும், அஞ்சாமல் போரிடும் பண்பு சத்திரியர்களுக்கு உரியது என்றும் கூறிவிட்டு, வர்த்தகத்தில் ஈடுபடுவது வைசியர்களின் பணி, எல்லாருக்கும் ஊழியம் செய்வது சூத்திரர்களின் அடிப்படை பண்பு என்று சொல்லிச் செல்கிறது.
அம்பேத்கர் தன்னுடைய ‘இந்து மதத்தின் தத்துவ’ த்தில் மனுஸ்மிருதியை யாரும் படிப்பதில்லை, அதை யாரும் தூக்கிப்பிடிப்பதில்லை என்று கருதுபவர்களுக்கு ஒன்றை நினைவுபடுத்துகிறார். அனைவரும் படித்து, பின்பற்றும் பகவத் கீதை ‘மனுஸ்மிருதியின் மறுவடிவம்’ மட்டுமே. வேதம், மனுஸ்மிருதி, கீதை மூன்றும் ஒரே மாதிரி நெய்யப்பட்டு இருக்கிறது. அவற்றை ஒரே இழை இணைப்பதோடு, அவை ஒரே துணியைக் கொண்டு நெய்யப்பட்டிருக்கின்றன என்கிறார் அம்பேத்கர்.
உன் வர்ணத்துக்கு விதிக்கப்பட்ட செயலானது நியாயமற்றது என்றாலும் அதனைச் செய்தே ஆகவேண்டும் என்கிற கீதையின் கருத்து அப்படியே மனுஸ்மிருதியிலும் காணப்படுகிறது. ஒன்று இன்னொன்றை சார்ந்தே வாழ்கிறது என்கிற அளவுக்கு அவற்றின் கருத்துகள் தொடர்புடையவையாக உள்ளன. கீதையின் ‘கண்ணியமான பொய்யை’ நோக்கி தன்னுடைய கவனத்தைத் திருப்புகிறார் அம்பேத்கர். துளி கூட நியாயமற்ற ஒரு செயலை தன்னுடைய வர்ணத்திற்கு விதிக்கப்பட்ட ஒன்று என்பதற்காக ஒருவன் செய்தால் மட்டுமே அவன் மோட்சம் அடைவான் என்று ஏன் கீதை சொல்கிறது என்று கேள்வி எழுப்புகிறார். ஒருவன் தன்னைக் கிருஷ்ணரின் மீதான பக்தியில் தோய்த்துக் கொண்டால் அவனுக்கு மோட்சம் கிட்டாது. இத்தனைக்கும் ‘எல்லா உயிர்களும் நானே, அன்பில் திளைத்த பக்தியோடு என்னோடு கலப்பவர்களில் நானும், என்னில் அவர்களும் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள்’ என்று கண்ணன் கீதையில் சொல்கிறாரே? பின் ஏன் கிருஷ்ணர் ‘ஒரு சூத்திரன் எவ்வளவு சிறந்தவனாக இருந்தாலும், தன்னுடைய வர்ணாசிரம கடமையை மீறி, உயர் வர்ணத்தினருக்கு அடிமை வேலைகளைச் செய்து வரத் தவறினால் அவனுக்கு மோட்சம் இல்லை” என்கிறார்? என்று ‘கிருஷ்ணனும், கீதையும்’ என்கிற தன்னுடைய படைப்பில் அம்பேத்கர் கேட்கிறார்.
‘நானே நான்கு வர்ணங்களையும் குணம், கர்மாவோடு படைத்தேன். நானே அவற்றைக் கொண்டு செயல் நிகழ்த்துபவன். எனினும்,மாற்றமில்லாத நான் எதையும் செய்யாமல் வாளாயிருக்கிறேன். ‘ என்று கீதையில் கிருஷ்ணன் சொல்கிறார். கீதையைத் தாங்கிப் பிடிப்பவர்கள் இந்தக் குணம் என்பதைப் பண்புநலன்கள் என்றும், கர்மா என்பதை உங்கள் செயல்கள் என்றும் திரித்துப் பொருள் கொண்டார்கள். கீதையிலோ பிற புனித நூல்களிலோ சாதி என்கிற சொல்லே காணப்படவில்லை, வர்ணம் மட்டும் இருப்பதால் காந்தி முதலியோர் ‘சாதிக்கும் இந்து மதத்துக்கும் தொடர்பில்லை’ என்று ஒரே போடாகப் போட்டார்கள். ஒரு காலத்தில் எல்லா வர்ணங்களும் நன்மை பயப்பதாக, நியாயமானதாக, சமமிக்கதாக இருந்தது, அப்படி விதிக்கப்பட்டவற்றை உளமார செய்வது இறைவன் முன்பு சம மதிப்பை வழங்கும். ஒரு காலத்தில் மனிதர்களிடையேயும் அவை அனைத்தும் சமமாக மதிக்கப்பட்டன என்றெல்லாம் காந்தி கருதினார்.
அதாவது, கீதையை ஒழுங்காகப் படித்தால் யாரும் பிறப்பால் பிராமணர், சூத்திரர் கிடையாது,. அவர்களின் குணங்களும், செயல்களுமே அவர்களை வெவ்வேறு வர்ணங்களைச் சேர்ந்தவர்களாக அடையாளப்படுத்தின. உண்மையான வர்ணாசிரம முறையில் எல்லா வர்ணங்களும் சமமான மதிப்பும், இடமும் பெற்றிருந்தன என்றும் இவர்கள் முன்னுக்குப்பின் முரணாகப் பேசுகிறார்கள். இன்னமும் எளிமையாகச் சொல்வது என்றால், கீதையில் தகுதியின் அடிப்படையிலேயே வர்ணங்கள் அமைக்கப்பட்டன. காலப்போக்கில் அவை இஸ்லாமியர்கள், பௌத்தர்கள், ஆங்கிலேயர்கள், மேற்கத்திய நவீனத்துவத்தைப் பின்பற்றியவர்கள் செய்த குழப்பங்களால் தான் இன்றைக்கு இப்படிப்பட்ட நிலை ஏற்பட்டிருக்கிறது என்றும் சொல்கிறார்கள்.
இவையெல்லாம் கீதையை ஒழுங்காகப் படிக்காமல், அல்லது வசதிக்கு ஏற்ப பொருள் கொள்வதால் நிகழ்கிற குழப்பங்கள் அன்றி வேறொன்றுமில்லை. கீதை மீண்டும், மீண்டும் ஆன்மாவை தவிர மற்ற அனைத்தும் மூன்று குணங்களால் ஆனது என்று வலியுறுத்துகிறது. குணங்களே எல்லா வேலையையும் செய்யும், மனிதன் அதன்முன்பு சக்தியற்றவன் என்றே கீதை கற்பிக்கிறது. அர்ஜுனனின் குணம் அவனைப் போரிட வைக்கும் என்று அது அறிவிக்கிறது.
கீதையின் இறுதி அத்தியாயத்தில் மூன்று குணங்கள் எல்லா மனிதர்களிடம் காணப்பட்டாலும் குறிப்பிட்ட குணம் அதீதமாகக் காணப்படுவதைக் கொண்டு மனிதர்களைக் கிருஷ்ணன் வகைப்படுத்துகிறார். உயர்ந்த சத்வ குணம் கொண்ட பிராமணர்கள் அறிவை நாடி இயங்குவர், ரஜோகுணம் கொண்டவர்கள் அதிகார வேட்கைமிக்கச் சத்திரியர்கள், தாமச குணங்கள் ஓரளவிற்கு இருப்பவர்கள் இழிவான தொழில்களைச் செய்யும் நிலைக்கு உழைப்பவர்களைத் தள்ளுகிறது, தாமச குணம் மிகுந்தவர்கள் மேற்சொன்ன மூன்று வர்ணங்களுக்குச் சேவையாற்றிய காலந்தள்ள வேண்டிய சூத்திரர்கள் என்கிறது.
எந்தக் குணம் அதீதமாக இருக்கிறதோ அதுவும் கர்மாவோடு கட்டப்பட்ட ஒன்று என்கிறது கீதை. எங்கே பிறக்க வேண்டும், என்ன வர்ணத்தில் பிறக்க வேண்டும் என்பதெல்லாம் இறைவன் தீர்மானித்தது அதனை மாற்ற இறைபக்தியை நாடுவது என்றெல்லாம் முயற்சிக்கலாம். ஆனால், பலனை எதிர்பார்க்கக் கூடாது. உங்களுடைய சத்வ குணத்தை அதிகரிக்க முயற்சி செய்யலாம், அடுத்தடுத்த பிறப்புகளுக்குக் காத்திருந்து மோட்சம் நோக்கிய பாதையை நீங்கள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். பிளாட்டோ சொன்னதிலாவது கடவுள் தான் யார் தங்கம், இரும்பு என்பதைத் தீர்மானிக்கிறார். இங்கே ஒரு வர்ணத்தில் பிறப்பது உன்னுடைய தலையெழுத்து. அதற்கு உன்னுடைய கடந்த காலக் கர்மாவே காரணம் என்று கீதை கூடுதலாகக் கதை அளந்தது. கர்மாப்படியே வெவ்வேறு வர்ணங்களில் இறைவனின் ஆதரவோடு பிறக்கிறோம் என்பது இந்திய பொதுப் புத்தியில் பதிந்திருந்திருக்கிறது. என்றாலும், காந்தி முதலிய இந்து மதச் சிந்தனையாளர்கள் அப்பட்டமாகப் பிறப்பின் அடிப்படையிலான வர்ணாசிரமத்தை கட்டிக் காக்கும் கீதையின் குரலை வேறு வகைகளில் பொருள் கொண்டு பூசி மெழுகுகிறார்கள்.
சாதி என்பது இந்து மதத்தின் அடிப்படை கிடையாது. அத்தகைய பாகுபாடு எதுவும் அதில் கிடையாது, எல்லாரின் உள்ளேயும் இறைத்தன்மை பொதிந்திருக்கிறது என்பவர்களுக்கு அம்பேத்கரின் எளிமையான பதில் ஒன்று ‘சாதியை அழித்தொழிக்கும் வழியில்’ கிடைக்கிறது:
‘இத்தகைய சச்சரவுகளில் சரண் புகுந்து கொள்வதில் எப்பயனும் இல்லை. மக்கள் எதை நம்ப வேண்டும் என்று சொல்லித் தரப்பட்டு இருக்கிறதோ அப்படியெல்லாம் சாஸ்திரங்கள் சொல்லவில்லை என்பதால் எந்தப் பயனும் இல்லை…மக்கள் எப்படிச் சாஸ்திரங்களைப் புரிந்து கொள்கிறார்கள் என்பதே முக்கியமானது…. நாம் சாஸ்திரங்களைப் புறந்தள்ளுவதோடு மட்டுமல்லாமல், அவற்றின் அதிகாரத்தையும் மறுதலிக்க வேண்டும்.’ என்று அறிவிக்கிறார்.
கீதை தகுதிக்கும், செயல்களுக்குமே மரியாதை செலுத்தச் சொல்கிறது என்று மட்டும் பேசிக்கொண்டிருக்காமல், கடந்த பிறப்புகளின் கர்மவினைகள் அடுத்தடுத்த பிறப்புகளுக்கும் தொடர்கிறது என்று சாதாரண இந்துக்கள் நம்புவதை நேருக்கு நேர் எதிர்கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட நயவஞ்சகமும், கொடூரமும் மிக்கப் பாகுபாடுகள், அடுக்குநிலைக்கான அதிகாரத்தை வழங்கும் மெய்யியலையே மறுதலிக்க வேண்டும்.
அம்பேத்கர் ‘சாதியை அழித்தொழிக்கும் வழி’யில் ‘பகுத்தறிவும், அறநெறியும் ஒரு சீர்திருத்தவாதியின் அம்பறாத்தூணியில் உள்ள ஆகச்சிறந்த ஆயுதங்கள். இவற்றை அவன் எடுக்க விடாமல் தடுப்பது என்பது அவனைச் செயல்படவிடாமல் கட்டிப்போடுவதே ஆகும்.’ தன்னுடைய வாழ்நாள் முழுக்கச் சாதியை நியாயப்படுத்தும் தங்களுடைய நம்பிக்கைகளைக் கேள்வி கேட்குமாறு அம்பேத்கர் அயராது வலியுறுத்தினார். அவற்றுக்கு அடிப்படையாக அமைந்தவற்றை நிராகரித்துவிட்டு, தங்களுடைய நம்பிக்கைகளுக்கு எதிராக இயங்கும்படி அறைகூவல் விடுத்தார்.
அம்பேத்கர் தன்னுடைய பெரும் உழைப்பின் மூலம், இந்து மதத்தின் அதிகாரப்பூர்வ புனித நூல்கள் கேள்வி கேட்பதை பெரும் குற்றமாக ஆக்கி வைத்திருப்பதைக் கவனப்படுத்துகிறார். அவருடைய ‘சாதியை அழித்தொழிக்கும் வழி’ நூலில் ‘மனுஸ்மிருதி மூன்றைக் கொண்டு மட்டுமே சமூகத்தில் நிலவிவரும் நம்பிக்கைகளைச் சீர்தூக்கி பார்க்க அனுமதிக்கிறது. அவற்றைக் கொண்டு மட்டுமே நடைமுறைகளையும் ஆராய வேண்டும் என்று மனுநூல் சொல்கிறது. அவை முறையே சுருதி (வேதத்தில் தென்படுவது), ஸ்மிருதி (நினைவுகளால் கடத்தப்படும் மரபு), காலங்காலமாக எது நன்னடத்தை என்று சமூகத்தால் கருதப்பட்டுக் கடத்தப்படுவது. தர்க்கம், கேள்விகளால் நம்பிக்கைகள், நடைமுறைகளை எதிர்கொள்பவர்கள் ‘நாத்திகர்கள்’ என்று முத்திரை குத்தப்பட்டு ஒதுக்கி வைக்கப்படுவார்கள்.’ என்பதை அடுக்கிச் செல்கிறார்
மனு எழுதிக்கொடுத்ததைக் கீதை அப்படியே ஒப்பிக்கிறது. சந்தேகப்படுபவர்கள் அசுர வயிற்றில் பிறப்பார்கள் என்று அது எச்சரிக்கிறது. கீதையின் பதினாறாவது அத்தியாயத்தில் கண்ணன் சொல்வதைப் பாருங்கள். தன்னை நம்பாதவர்களைப் பேராசை பிடித்தவர்கள், கபடதாரிகள், எதற்கும் லாயக்கற்றவர்கள் என்றெல்லாம் முத்திரை குத்துகிறார். இது பண்டைய காலத்தின் லோகயாதவாதிகள் உள்ளிட்ட நாத்திகர்களைக் குறிக்கப் பயன்படும் அதே சொற்கள். இவர்கள் அசுர வயிற்றில் பிறப்பதோடு, இழிந்த இடத்தையே சென்று சேர்வார்கள் என்று கீதை சொல்கிறது. இதில் இருந்து தப்பிக்க ‘நூல்களே (சாஸ்திரங்கள்) எது சரி, தவறு என உனக்கு வழிகாட்டட்டும். அந்த நூல்கள் நீ எதைச் செய்ய வேண்டும் என்று வகுத்தளித்து இருக்கிறதோ அந்தத் தொழில்களை நெறிபிறழாமல் நீ செய்ய வேண்டும்’ என்று வழிகாட்டுகிறது கீதை.
அம்பேத்கர் ‘மனுஸ்ம்ருதியின் மறுவடிவம்’ என்று கீதையை விளிப்பது எவ்வளவு கச்சிதமானது என்பதை மேற்சொன்னவை தெளிவுபடுத்துகிறது. கேள்விகள் கேட்பவர்களைக் கண்டிக்கிற வகையில் மனுவின் குரலை மட்டும் கீதை எதிரொலிக்கவில்லை. கூடுதலாக, அது பகுத்தறிவாளர்கள், லோகாயதாவதிகளை நாத்திகர்கள், ராட்சதர்கள் என்று அழைக்கும் ராமாயண, மகாபாரத மொழியையும் கொண்டிருக்கிறது. ராமாயணத்தில் ஜாபாலியும், மகாபாரதத்தில் சார்வாகனும் அதிகாரபீடங்களை நோக்கி கேள்விக்கணைகளைத் தொடுக்கிறார்கள். அதனால் அவர்கள் வெறுத்து ஒதுக்கப்பட்டு, கொலை செய்யப்படுகிறார்கள்.
கிருஷ்ணனும், மனுவும் இன்னொரு பாடம் எடுக்கிறார்கள். இது கயமையின் உச்சம் என்று அம்பேத்கர் எண்ணினார். இருவருமே அறிவையும், ஞானத்தையும் பகிர்ந்து கொள்ளக்கூடாது என்கிறார்கள். பலனை எதிர்பாராமல் கடமையைச் செய்யும் கர்மத்தை பற்றி அர்ஜூனனுக்குப் போதித்த பின்பு, பலனை எதிர்பார்த்து உழைப்பவர்களுக்கு இந்த அறிவைப் பகிர்ந்து கொள்ளக்கூடாது என்று எச்சரிக்கிறார் கிருஷ்ணர். மனு இன்னமும் அப்பட்டமாக, பல முறை வேதம் பயின்றவர்கள் அதனைப் பிறருக்குக் கற்றுத்தரக்கூடாது என்று தடை விதிக்கிறான்.
ஏன் இத்தகைய தடை ? அம்பேத்கர், ‘கிருஷ்ணனும், கீதையும்’ எனும் தன்னுடைய எழுத்தில், எதிர்-பரப்புரை எதுவும் நிகழாமல் தடுக்கவே இந்தத் தடை என்கிறார். இந்தச் சடங்குகள், விதிகளுக்கு எதிரான கிளர்ச்சி நிகழாமல் தடுக்கவே இந்த ஏற்பாடு. ஆனால், இவற்றின் ‘அறிவு வெளிச்சத்தை’ பகிர்ந்து கொள்ள மறுக்கும் மனப்பான்மையைக் கண்டு பொங்கி எழுகிறார். இந்து சமூக அமைப்பின் பெருங்குற்றத்தை இப்படித் தோலுரிக்கிறார், ‘வேறெந்த சமூகமும் தன்னுடைய பெரும்பான்மை மக்கள் மத நூல்களைப் படிக்கக் கூடாது என்று தடை விதிக்கும் குற்றத்தை புரியவில்லை. வேறெந்த சமூகமும் தன்னுடைய பெரும்பான்மை மக்கள் கல்வி கற்பதை தடுக்கும் குற்றத்தில் ஈடுபடவில்லை. கடைக்கோடி மனிதன் கல்வி கற்க முயல்வதை வேறெந்த சமூகமும் தண்டனைக்குரிய குற்றம் என்று அறிவிக்கவில்லை..’ .
அரசியலமைப்பை ஆக்கிய அம்பேத்கர் ‘ மக்களின் மனங்கள் இதயங்களில் புரட்சி வராமல் சுதந்திரவாத,ஜனநாயகத் தன்மை கொண்ட அரசியலமைப்பு சட்டமானது ‘சாணக் குவியல்களின் மீது கோபுரங்களைக் கட்டுவதைப் போல’ என்று தெளிவாக அறிந்திருந்தார். ஜான் டூயின் மாணவரான அம்பேத்கர் சமூகப் புரட்சியை வென்றெடுக்க, ‘எந்த நம்பிக்கையையும் அதனை ஆதரிக்கும் அடிப்படைகளையும் முனைப்பாக, இடையறாது, கவனமாகக் கேள்விக்கு உட்படுத்திச் சிந்திப்பது’ முதன்மையானது என்று கருதினார்.
முடிவாக அம்பேத்கரின் கீதை எப்படிப்பட்டதாக இருந்திருக்கும். கீதையின் ஆன்மாவான சதுர்வர்ணம் நீதியுணர்வு மிக்கதா என்கிற சோதனையில் தேறாது. அதன் தத்துவ அடிப்படைகளான குணமும், கர்மாவும் அம்பேத்கரின் பகுத்தறிவு சோதனையில் தோற்றுப்போகும். அதிகபட்சமாக, கிருஷ்ணனின் கீதா உபதேசத்தில் காணப்படும் பௌத்த பண்புகளான நிர்வாணம்,மைத்ரி (அன்பின் வழிப்பட்ட இரக்கம்) ஆகியவற்றை மட்டும் ஏற்றுகொண்டிருப்பார். அதனையும் கூட நீதி, பகுத்தறிவு ஆகியவற்றில் நிறுத்தி பார்த்தே அம்பேத்கர் ஏற்றிருப்பார். இந்த அணுகுமுறையே அவரின் புத்தரும், தம்மமும் படைப்பில் காணப்படுகிறது. பிராமணர்களின் ஆதிக்கத்திற்குச் சவால்விட்ட பௌத்தத்துக்கு எதிரான எதிர்-புரட்சிகளை அணிதிரட்டிய ஒன்றாகக் கீதையை அம்பேத்கர் கருதினார். இப்போது கீதையை தேசிய நூலாக்க முயல்வது, அம்பேத்கரின் நீதி, பகுத்தறிவு மிக்க அரசியலமைப்புச் சட்டம் மேல் சாதி இந்து மேலாதிக்கத்துக்கு விடும் சவாலை எதிர்கொள்ளும் நம் கால எதிர்-புரட்சி என்று கருத வேண்டியிருக்கிறது.
தமிழில் : பூ.கொ.சரவணன்