உருவாகிறது அயலுறவுக் கொள்கை!
ஆங்கிலேய அரசு இந்தியாவைக் காலனி ஆதிக்கத்தில் சுரண்டியது என்பது ஒருபுறம், இன்னொரு புறம் அது எடுத்த முடிவுகள், செய்த போர்கள், உடன்படிக்கைகள் இந்தியாவின் அயலுறவில் இன்னமும் தாக்கத்தை உண்டு செய்கின்றது. பிரிட்டன் அரசு சீனாவுடன் சமரச போக்கையும், இந்தியாவில் இருந்த ஆங்கிலேய ஆட்சி சலுகைகளைப் பெறவேண்டும் என்று எண்ணியது. இந்த இரண்டு மாறுபட்ட போக்குகள் சீனாவுடனான உறவை குழம்பிய நிலையிலேயே வைத்துக் கொண்டது. திபெத், அக்சாய் சின் ஆகியவற்றுக்கான எல்லைகளை வலிமைமிகுந்த காலனிய சக்தியாக மக்மோகன் கோடு, ஜான்சன் கோடு ஆகியவற்றின் மூலம் வகுத்தார்கள். அதனை சீனா ஏற்க மறுத்து இந்தியாவைப் போர்க்களத்தில் எதிர்கொண்டது. இன்னமும் அந்த எல்லைச் சிக்கல் தீராமலே இருக்கிறது.
பிரிட்டன் சுற்றி இருக்கும் மற்ற வலிமை வாய்ந்த தேசங்களின் தாக்குதலில் இருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ளத் தடுப்புத் தேசங்களை உருவாக்கியது. இந்திய துணைக் கண்டத்தில் இரான், ஆப்கன், திபெத்தை வெளிவட்டத்திலும், பூட்டான், நேபாளம், சிக்கிம் ஆகியவற்றை உள்வட்டத்திலும் உருவாக்கி தன்னைத் தற்காத்துக் கொள்ள முயன்றது. இந்தியா பிரிட்டனின் ஆதிக்கத்தை இன்னமும் சத்தமில்லாமல் தொடர முயல்வதாகக் கருதுவதற்கு இடமளிக்கும் செயல்பாடுகள் இந்தியாவால் அவ்வப்பொழுது மேற்கொள்ளப்படுகின்றன.
இந்தியாவில் வெளியுறவுத்துறை பற்றிய சிந்தனை விடுதலைக்கு முந்தைய காலத்திலேயே தலைவர்களிடையே நிலவி வந்திருக்கிறது. கேசவ சந்திர சென், தயானந்தர், தாதாபாய் நவ்ரோஜி, ஜி.வி.ஜோஷி, பெரோஸ்ஷா மேத்தா, தின்ஷா வாச்சா, கோகலே என்று பலரும் பல்வேறு வகைகளில் இந்தியாவின் அயலுறவு கொள்கை எப்படி அமையவேண்டும் என்று தங்களின் சிந்தனை, கருத்துக்களை முன்வைத்தார்கள். காந்தி, நேரு அதை மேன்மேலும் செம்மைப்படுத்தினார்கள். அதில் தேசப்பெருமிதம் வந்துவிடாமல் தடுக்கும் வகையில் தாகூரின் தேசபக்தி குறித்த கூர்மையான விமர்சனங்கள் அமைந்தன.
இந்தியாவுக்கு விடுதலை கிடைத்த பின்பு அயலுறவு துறை அமைச்சராகத் தான் உயிருடன் இருந்த காலம்வரை நேருவே இருந்தார். வெளிநாட்டு தூதுவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டியவர்களைத் தானே நேர்முகம் செய்வதை நேரு வழக்கமாக வைத்திருந்தார். ஆசியாவின் மகத்தான சக்தியாக இந்தியா மாறவேண்டும் என்கிற கனவு அவரிடம் இருந்தது. கிரிஜா சங்கர் பாஜ்பாய் எனும் முதல் வெளியுறவுத் துறை செயலாளர் அப்பணியில் தானும் தீவிரமாக ஈடுபட்டார்.
நேரு முதல் நேற்று வரை இந்தியாவின் அயலுறவுக் கொள்கை:
இந்தியாவின் அயலுறவுக் கொள்கையைச் செதுக்கியவர் என்கிற முறையில் நேருவை அணுகுவதில் எண்ணற்ற பார்வைகள் காணப்படுகின்றன. நேரு உலக அமைதி, ஆயுத ஒழிப்பு என்று இயங்கி தேசநலனை கோட்டை விட்டார் என்கிறது ஒரு தரப்பு. நேரு அணிசேராக் கொள்கையின் மூலம் ஒரு கனவுலகில் வாழ்ந்தார் என்பது இன்னொரு கருத்து. அணிசேராக்கொள்கை என்கிற போர்வையில் இந்தியாவுக்கு எது தேவையோ அதைச் சாதிக்கும் சாதுரியமே நேருவிடம் இருந்தது என்பது இன்னுமொரு வாதம். நேரு கனவுக்காரராக இருந்தாலும் அவர் நாட்டின் நிலவரத்தால் சாமர்த்தியமான செயல்பாடுகளை மேற்கொண்டார் என்பது ஒரு தரப்பு. உலகம் முழுக்க ஆயுதப்போர்களைத் தவிர்க்க வேண்டும் எனக் குரல் கொடுத்த நேரு, கோவாவை ஆயுதங்களின் மூலம் கைப்பற்றிக்கொண்டார். ஒருபுறம் அணு ஆயுத ஒழிப்புக்கு குரல் கொடுத்துக் கொண்டே இந்தியா அணுகுண்டு தயாரிப்பதற்கான அடிப்படை அவரால் இடப்பட்டது.
ஐநா சபையில் இந்தோனேசியா மீது ஹாலந்து போர் தொடுப்பதைத் தடுக்கும் செயலை அவர் செய்தார். காங்கோவில் அமைதியை நிலைநாட்டவும் அவர் உதவினார். ஐநா பாதுகாப்பு கவுன்சிலுக்குக் காஷ்மீர் சிக்கலை ஐநா நியாயமாக நடந்துகொள்ளும் என்று எண்ணி கொண்டு சென்றார். ஐநா அவரின் வரிகளிலேயே கவலைதரும் வகையிலும், மன உளைச்சல் தரும் வகையிலும் பொறுப்பற்று நடந்து கொண்டது. எனினும், ஐநாவுடன் நல்லுறவை அவர் தொடர்ந்து பேணினார். அதேசமயம் இரு தரப்பையும் கண்டித்த ஐநாவிடம் மீண்டும் காஷ்மீர் சிக்கலை கொண்டு போகக்கூடாது என்பதில் அவர் தெளிவாக இருந்தார்.
நேரு இரண்டு வல்லரசுகளின் அதிகாரப் போட்டியில் சிக்கிக்கொள்ளக் கூடாது என்பதால் நேரு அணிசேராக் கொள்கையைக் கையிலெடுத்தார். ஒரு பக்கம் ரஷ்யாவுடனும், இன்னொரு பக்கம் பிற வலிமைமிகுந்த ஐரோப்பிய தேசங்களுடனும் வர்த்தக ஒப்பந்தங்கள் செய்துகொண்டார். கொரியப் போரில் எந்தப் பக்கமும் அணிசேராமல் நடுநிலையாக நடந்து கொண்டது அவருக்கு நற்பெயரை தந்தது. ஆனால், சீனப் போர் இந்தியாவின் அணிசேராக் கொள்கையை மொத்தமாகத் தகர்த்தது. அமெரிக்காவிடமும், இன்னபிற நாடுகளிடமும் ஆயுதங்கள் பெற்று இந்தியா தன்னைத் தற்காத்துக் கொள்ள வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டது. ஆயுத ஒழிப்பில் பரவலாக நேரு இயங்கினாலும் வளர்ந்த நாடுகள் அதற்குப் போதுமான ஆதரவு தராதது சீனாவின் அணு ஆயுத முன்னெடுப்புகள் இந்தியாவையும் அதனை நோக்கி செலுத்தியது.
இந்திராவின் இரும்புக்கரம்:
இந்திரா காந்தி சாதுரியமான, ராஜதந்திரம் மிக்க அயலுறவுக் கொள்கையைக் கொண்டவர் என்று கருதப்படுகிறது. இந்தியாவின் பிரபலமான பிரதமர்கள் பட்டியலில் அவரின் பெயர் முன்னணியில் இருக்கின்றது. இந்திரா பிரதமராக ஆகியிருந்த பொழுது அமெரிக்க-ரஷ்ய மோதல் குறைந்து இருந்தது. பாகிஸ்தானுக்கு இரண்டு நாடுகளும் ஆயுத உதவிகளை இந்திய-பாகிஸ்தான் போருக்கு பின்னர் வழங்கிக் கொண்டிருந்தன. சோவியத் ரஷ்யா சாஸ்திரி வென்று காட்டிய போரில் இந்தியா எதையும் சாதித்துவிடாமல் பார்த்துக் கொண்டது. இந்திரா ரஷ்யாவும் சீனாவும் மோதிக்கொண்ட பொழுது அமைதி காத்து தன்னுடைய பாதையைப் புலப்படுத்தினார். ரஷ்யா மீண்டும் வழிக்கு வந்தது.
வாஷிங்க்டன் பயணம் சென்று விவசாயத் தொழில்நுட்பம், விதைகள் ஆகியவற்றைப் பெற்றுக்கொண்டு வந்த இந்திரா வியட்நாம் போரில் அமெரிக்காவின் போக்கை கண்டிப்பதையும் செய்தார். ரஷ்ய தலைவர் கோசிஜின் பாகிஸ்தான் போய்விட்டு வந்த பின்பு சீனாவுடன் போரில் ஈடுபட்டு மூக்குடைப்பட்ட பொழுது இந்தியா அமைதி காத்தது. அப்பொழுது இந்தியாவின் பாதுகாப்புக்கு நாங்கள் உத்தரவாதம் என்று சொன்ன ஒப்பந்தத்தை இரண்டு வருடங்கள் கழித்துப் பாகிஸ்தானுடன் போர் என்கிற சூழலிலேயே இந்திரா காந்தி ஏற்றுக்கொண்டார். கிழக்குப் பாகிஸ்தானை படுகொலை பூமியாக மாற்றிக்கொண்டிருந்த பாகிஸ்தானின் ராணுவத்தின் செயல்களை நிக்ஸன்-கிஸ்ஸிங்கர் ஆகியோர் ஆதரித்தார்கள். கிழக்குப் பாகிஸ்தான் அகதிகளின் எண்ணிக்கை இந்தியாவில் பெருகிக்கொண்டு போனது.
இந்திரா கோடிக்கணக்கில் பாகிஸ்தானிய ராணுவத்தால் இந்தியாவுக்குள் தஞ்சம் புகுந்திருந்த மக்களை மனிதாபிமானத்தோடு உலகம் அணுக வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். பாகிஸ்தானுக்கு அழுத்தம் தரவேண்டும் என்று அவர் வேண்டிககொண்டது உலகின் காதுகளில் விழவில்லை. உலகம் முழுக்கப் பயணம் செய்து அகதிகளுக்காக ஆதரவு திரட்டினார் இந்திரா. ஒரு தற்காலிக அரசை மேற்கு வங்கத்தில் அவாமி லீக் தலைமையில் அமைத்தார். பாகிஸ்தான் இந்திய நிலைகளின் மீது தாக்குதல் நிகழ்த்தியதும் போரை கச்சிதமாக நிகழ்த்தி, வெற்றி பெற்ற உடனே போரை நிறுத்திக்கொண்டார். பூட்டோவிடம் கடுமையான நிபந்தனைகள் வைக்காமல் வாய்மொழி உத்தரவாதத்தைக் காஷ்மீர் சிக்கலில் பெற்றுக்கொண்டார். கடுமையாக நடந்து கொண்டால் பாகிஸ்தானில் பூட்டோவால் ஆட்சி செய்ய முடியாது என்று உணர்ந்திருந்தார் இந்திரா. இதைப் பெருந்தன்மை என்று எண்ணாமல் இந்தியாவின் பலவீனம் என்று பாகிஸ்தான் தொடர்ந்து கருதிக்கொள்கிறது.
இந்தப் போருக்கு பின்னர் இந்தியா தரவேண்டிய உணவுக்கான பல மில்லியன் டாலர் கடனை அமெரிக்கா தள்ளுபடி செய்தது. இலங்கையில் இடதுசாரிகள் நிகழ்த்த முயன்று ஆயுத கிளர்ச்சியை முடிவுக்குக் கொண்டுவர இந்திரா உதவினார். ஜி.பி.பார்த்தசாரதியை இலங்கை அரசு, ஈழத் தமிழர்கள் ஆகியோரிடையே உடன்படிக்கை கொண்டுவர அனுப்பினார். அதேசமயம் தமிழ் குழுக்களுக்குத் தமிழகத்தில் நிகழ்ந்த ஆயுத பயிற்சியை அவர் அமைதியாக வேடிக்கை பார்த்தார். இந்தியாவின் பாதுகாப்பில் இருந்த சிக்கிம் கைநழுவிப் போவதற்கான அறிகுறிகள் தெரிந்ததும் அதனைக் கைப்பற்றிக் கொண்டார். இந்தியாவைத் தெற்காசியாவில் பலமிகுந்த சக்தியாக இந்திரா முன்னிறுத்தினாலும் தெற்காசிய ஒற்றுமை என்பது சாத்தியமில்லாமல் போனது. அதற்குக் காரணங்கள் பல.
இந்தியா சிறு தேசங்கள் இந்தியாவின் ஆயுதக் குழுக்களுக்கு உதவும் என்று அஞ்சினார். அவையோ இந்திரா சிக்கிம் முதலிய பகுதிகளைக் கைப்பற்றியதால் தங்களின் பகுதிகளையும் கைப்பற்றக்கூடும் என்று அஞ்சி அமெரிக்கா, சீனா ஆகியவற்றிடம் சரண் புகுந்தார்கள். ஒரு ஒருங்கிணைந்த செயல்திட்டம் இந்திராவுக்கு இல்லை. தனித்தனி சிக்கல்களுக்கு எதிர்வினை ஆற்றுவதே வழக்கமாக இருந்தது. ஆப்கானிய போரில் சோவியத் ரஷ்யா இங்கே நுழைந்ததும், அதைச் சாக்காகச் சொல்லி அமெரிக்காவும் பாரசீக வளைகுடாவில் கால் பதித்தது. பாகிஸ்தானுக்கு எண்ணற்ற பொருள், ஆயுத உதவியும் செய்தது. இன்னொன்று, இந்தியா பொருளாதாரத்தில் தெற்காசியாவை கட்டமைக்கிற அளவுக்கு வலிமை மிகுந்ததாக இருக்கவில்லை இரான், இராக் முதலிய நாடுகளோடும், சவுதியோடும் இந்திரா நல்லுறவை பேணினார்.
அதேசமயம் அனைத்தையும் மையப்படுத்திய அவர் தனக்குப் பின்னர் வலிமையான அயலுறவுக் கொள்கையை எடுத்துச் செல்லும் அமைப்புகள், தலைவர்கள், கட்டுமானம் ஆகியவற்றை உருவாக்கத் தவறிவிட்டார். ஆசியானை அமெரிக்காவின் கைப்பாவை என்று எண்ணி அதில் உறுப்பினராகாமல் தவறு செய்தார். அமைதி செயல்பாடுகளுக்காக அணுகுண்டு வெடிப்பு என்று வெடித்துவிட்டுத் தன்னை அணு ஆயுத நாடாக அறிவிக்காமல் போய் NSG அமைப்பு உருவாக்கத்தால் அணு சக்தியில் பெரிய வளர்ச்சியை அடுத்த முப்பது வருடங்களுக்கு ஏற்படாமல் தடுக்கத் தெரியாமல் காரணமாகி விட்டார். உள்நாட்டுச் சிக்கல்களைக் கடைசி முறை ஆட்சிக்கு வந்த பொழுது இந்திரா ஒழுங்காகக் கையாளாமல் போய்ப் பாகிஸ்தானின் ஆசீர்வாதத்தில் காஷ்மீர், பஞ்சாப் ரத்த பூமியாக மாறியது. என்றாலும், இந்திரா இந்திய வெளியுறவுத் துறையை அடித்து விளையாடும் போக்கிற்கு நகர்த்தினார்.
இந்தியாவின் அயலுறவுக் கொள்கையில் தைரியமிகுந்த முன்னெடுப்புகள் நரசிம்ம ராவ் காலத்தில் மேற்கொள்ளப்பட்டன என்றாலும் அதற்கான ஆழமான அச்சாரம் ராஜீவ் காந்தியின் காலத்தில் போடப்பட்டது. சோவியத் ரஷ்யாவின் இந்திய ஆதரவு போக்குக் கோர்பசேவ் வந்த பிறகு மாறுவதை உணர்ந்தார் ராஜீவ். அமெரிக்காவை நோக்கி நேசக்கரம் நீட்டியதோடு, சீனாவுடன் பலகாலமாகக் கசந்திருந்த உறவை புதுப்பிக்க முயற்சித்தார். அமெரிக்கக் காங்கிரசில் பாகிஸ்தானுக்குத் தரப்படும் உதவியை மறைமுகமாகக் கண்டித்தார். இஸ்ரேல் அணியை இந்தியாவில் டேவிஸ் கப் போட்டியில் ஆட அனுமதித்தார்.
சும்டோரங் சூ பள்ளத்தாக்கில் சீனப் படைகள் இருப்பதைக் கண்ட இந்திய ராணுவம் தன்னுடைய படைகளைப் பெருமளவில் குவித்தது. அதற்குப் பெரிய அளவில் எந்த எதிர்வினையும் சீனா ஆற்றவில்லை என்பதைக் கண்ட இந்திய அரசு அருணாசல பிரதேசத்துக்குத் தனி மாநில அந்தஸ்தை வழங்கியது. அதற்குப் பிறகு சீனா பிரீமியரை சந்தித்துப் பேச்சுவார்த்தைகள் நிகழ்த்தி ஒரு புதிய துவக்கத்தை ஆரம்பித்து வைத்தார். மாலத்தீவில் அப்துல் கயூம் அரசுக்கு எதிராக எண்பது தமிழ் போராளிகள் ஆட்சியைக் கைப்பற்ற முனைந்த பொழுது இந்திய அரசு உதவி நிலையைச் சீர்செய்தது. இலங்கையில் ஜெயவர்த்தனேவின் சூழ்ச்சியில் சிக்கிக்கொண்டு அமைதியைக் கொண்டு வருவதற்காக என்கிற பெயரில் இலங்கைக்கு அனுப்பப்பட்ட இந்திய அமைதிப் படையின் செயல்பாடுகள் ராஜீவின் மரணத்தில் போய் நின்றது.
இந்தியா தாரளமயமாக்கலுக்குப் பிறகு பல்வேறு புதிய முன்னெடுப்புகளை இந்திரா, ராஜீவ் போட்ட அடித்தளத்தில் முன்னெடுத்தன. அமெரிக்காவுடன் உறவு படிப்படியாகப் புதுப்பிக்கப்பட்டு அணுகுண்டு வெடிப்புக்கு பின்னர் ஏற்படுத்தப்பட்ட அணு ஆயுத ஒடுக்குமுறையை விட்டுப் புஷ் காலத்தில் மன்மோகன் சிங்கின் முயற்சியால் வெளிவர முடிந்தது. இஸ்ரேல், அரேபிய நாடுகளிடையே சுமுகமான உறவு நிலவிய சூழலை பயன்படுத்திக் கொண்டு இந்தியா தன்னுடைய உறவை முழுமையாக நரசிம்ம ராவ் காலத்தில் புதுப்பித்துக் கொண்டது. கிழக்காசியாவுடன் வர்த்தகத்தைப் பலமடங்கு பெருக்குவதை ஆசியானுடன் இணைந்து செயலாற்றுவதன் மூலம் சாதித்தது. பூட்டானுடன் விடுதலைக்குப் பிந்தைய காலத்தில் போடப்பட்ட பாரபட்சமான ஒப்பந்தத்தை மறு ஆய்வு செய்து சரி செய்துகொண்டது. நேபாளத்துக்கும் அப்படியொரு உறுதி தரப்பட்டது. வங்கதேசத்துடன் நில எல்லை ஒப்பந்தம் கையெழுத்தானது. இலங்கையின் உள்விவகாரங்களில் மாறி மாறி போக்குகளை மாற்றுவதும் நிகழ்ந்தது. தெற்காசிய கட்டற்ற வியாபார ஒப்பந்தம் வாஜ்பேயி காலத்தில் கொண்டு வரப்பட்டது. மன்மோகன் சிங் இறக்குமதி வரிகளைப் பெருமளவில் தெற்காசிய நாடுகளுக்குத் தன்னிச்சையாகக் குறைத்தார்.
இந்தியா மனித உரிமைக்கு வெளிநாடுகளின் அழுத்தத்துக்குப் பிறகு அதிக முக்கியத்துவம் தர ஆரம்பித்துள்ளது., இந்தியா நேருவின் காலத்தில் அணிசேராக்கொள்கையை முன்னெடுத்தாலும் அது மேற்கின் எதிர்ப்பாக எப்பொழுதும் மாறவில்லை. இந்தியாவின் அயலுறவுக் கொள்கை புதுப்புது உயரங்களைத் தொட்டுக்கொண்டே இருக்கிறது. இந்தியா மாபெரும் சக்தியாக மாற முயல்வதைவிட அது சுனில் கில்னானியின் வரிகளில் ‘இணைக்கும் அல்லது கூட்டமைக்கும் சக்தியாக’ மாறுவது சிறப்பான ஒன்றாக இருக்கும்.