பிரியமுள்ள ரஃபேலுக்கு,
நான் உன் மீது அளவில்லாத அக்கறை காட்டுகிறேன். நீயோ பாராமுகமாக இருக்கிறாய். அதனால் நான் உன்னை விட்டு விலக நேர்கிறது. இது என் குற்றமா? கண்மண் தெரியாமல் அன்பை பொழிவது தான் நான் செய்கிற தவறா? இல்லை, நான் தான் அளவுக்கு மீறி எதிர்பார்க்கிறேனோ?
அளவுக்கு மீறி ஆசைப்படுகிறேன் என்பது உண்மை என்றால், உன்னைக் காலத்திற்கும் காதலிக்க என்ன வழி? கட்டற்று காதலித்து, கையளவு அன்பை எதிர்பார்ப்பதே சிறந்த வழியா? இப்படிப்பட்ட கலவையான உணர்வுகளைக் காலத்துக்கும் தாங்கிக்கொண்டு பிரியத்தோடு இருக்க முடியுமா? அப்படிப்பட்ட ஆற்றல் அம்மாக்களுக்கும், துறவிகளுக்கும் மட்டுமே சாத்தியம். நான் அன்னையுமில்லை, அனைத்தும் துறந்த துறவியும் இல்லை. என்னால் எதிர்ப்பார்ப்பையும், பேரன்பையும் பிரித்துப் பார்க்க முடியாது.
எதிர்பார்ப்பையும், அக்கறை ததும்பும் அன்பையும் பிரித்து விட முடியுமா என்ன? இப்படிப்பட்ட அரிய நிலை குறித்து உளவியல் வல்லுனர்களும், ஞானிகளும் பேசி கேட்டிருக்கிறேன். இந்த எதிர்பார்ப்பற்ற நிலைக்கு உன்னதமான விழிப்புணர்வோ, அளவில்லாத துன்பமோ அழைத்துச் செல்லும். இன்னும் அந்த இடத்தை நான் சென்றடையவில்லை. சில நேரங்களில், எப்போதுமே அங்கே போக மாட்டேன் என்று தோன்றுகிறது.
என்னுடைய ஆன்மாவின் ஒரு பகுதி, அங்கே போகக்கூட விரும்பவில்லை. நான் என்ன நினைக்கிறேன் தெரியுமா? எதையும் எதிர்பார்க்காமல் இருப்பதற்கும், எதையாவது எதிர்பார்ப்பதற்கும் இடையே நூலிழை வேறுபாடே உள்ளது. அது சுய-மோசடிக்கும், சுய-மரியாதைக்கும் இடையே உள்ள வேறுபாடு. நாம் எல்லோரும், இரு பக்கமிருந்தும் பேரன்பும், புரிதலும் பாயும் உறவினில் திளைக்கும் பேறு பெறவேண்டியவர்கள்.
எதையாவது எதிர்பார்ப்பது இயல்பான ஒன்று. அதில் சுயமரியாதை கலந்துள்ளது. நாம் எல்லோரும், இரு பக்கமிருந்தும் பேரன்பும், புரிதலும் பாயும் உறவினில் திளைக்கும் பேறு பெறவேண்டியவர்கள்.
எதையும் எதிர்பார்க்காமல் இருப்பது மேன்மைமிக்க நிலையாக இருக்க வேண்டியதில்லை. அது காயப்படாமல் காதல் புரிய முயலும் முயற்சியாகவும் இருக்கலாம். அன்பின் நிழல் கூடப் படராத காலங்களின் கடுமை தாளாமல், அதிலிருந்து தப்ப முயல்கிறோம். அப்போது எதையும் எதிர்பார்க்காமல் இருப்பதே காதல் காலத்துக்கும் தொடர வழி என்கிற தத்துவம் மூளைச்சலவை செய்கிறது. அந்தச் சுயமோசடியில் மூழ்கி விடுகிறோம்.
அது சரியாக இருக்க வேண்டியதில்லை. ஒருவேளை, அளவு கடந்த அன்பை பொழியும் அந்த நபர் தவறானவரோடு காதல் கொண்டிருக்கலாம். தனக்கானதை கேட்டு பெறவோ, வேறொருவரை காதலிக்கவோ தைரியமில்லாமல் அங்கேயே துவண்டு நிற்கலாம். ஒரு வேளை, தன்னுடைய காதலோடு கலந்து பாயும் எதிர்பார்ப்புகளை ஏந்திக்கொள்ளும், உணர்வுகளை மதிக்கும் உன்னதமான உறவை தேடி கண்டடைவதே அவருடைய முதல் வேலையாக இருக்க வேண்டும்.
ஆனால், என்ன செய்வது? உயிர் கரையும் உறவினில் எது சரியான எதிர்பார்ப்பு என எப்படித் தெரிந்து கொள்வது? எல்லாருக்கும் பொருந்த கூடிய ‘ஒரு உறவில் எது சரியான எதிர்பார்ப்பு’ என வழிகாட்டும் கையேடு எதுவும் எழுதப்படவில்லையே?
நமக்கு நாமே எது எதிர்பார்ப்பின் எல்லை என்று முடிவு செய்துகொள்ள வேண்டும். நாம் எப்படி அன்பு செய்யப்பட வேண்டும் என நாமே அறிந்து கொள்ளவேண்டும்.
ஆனால், நமக்கானவர்கள் பிரியத்தை எப்படிப் பொழிய வேண்டும் என்று தெரிகிறதா? அப்படியே தெரிந்தாலும், அதை எப்படி நம் காதலருக்கு கடத்துவது? அப்படிப்பட்ட மொழியைக் கண்டறியாத சபிக்கப்பட்ட சமூகம் அல்லவா இது?
ரஃபேல்! எப்படி உன்னிடம் அதைச் சொல்வது? என்ன வார்த்தைகளைப் பயன்படுத்துவது? நான் “தேவை”, “ஆசை”, “வேதனை”, “தனிமை” “அச்சம்” முதலிய வார்த்தைகளை உதிர்க்கலாமா? .
உனக்கு இந்தக் கடிதத்தை அனுப்பியே ஆக
வேண்டுமா?
இதற்குப் பதிலாக, நீ என்னை எப்படிக் காதலிக்க வேண்டும் என்று ஏங்கி தவிக்கிறேனோ, அதைப் போல உன்னைக் காதலிப்பதன் மூலம் என் கண்ணீரின் துளிகள் உன்னை நனைக்குமா? நீ எனக்கானவன் என்றால், பழத்தோட்டத்தின் மரங்கள் ஒன்றுக்கு ஒன்று இடிக்காமல் கிளைகளைப் பரப்புவதைப் போல, என் பிரியத்தின் பேரொளியை நீ பருகிக்கொள்வாய் இல்லையா? உன் கிளைகள் எனக்கு வழிவிடாமல் போகும் என்றால், நாம் காவிய காதலர்கள் இல்லை. சத்தமில்லாமல் நான் அகல்வதே சரியாக இருக்கும்.
எந்தச் சுவடும் இல்லாமல் அகல்வது ஒன்றும் எனக்குப் புதிதில்லையே? கண்டுகொள்ளாத உனக்காகத் தருவதற்கு என்று என்னிடம் இருக்கும் ஒரே கண்ணியமிகுந்த செயல்பாடு அது தானே? என் இதயத்தை இருகூராகப் பிளக்கும் இக்கணங்களில் அறிவை பயன்படுத்த முயல்கிறேன். அப்போதெல்லாம், தலையெழுத்தை மாற்றவா முடியும் என்று தோன்றுகிறது. இதைக்கூட நீ காதல் மிகைத்து பொங்கி வழியும் பிதற்றல் என்று சொல்வாய். எனக்கு இது ‘எதோ ஒன்று குறைகிறது’ என்று என் இதயம் குமுறும் வழியாகவே தோன்றுகிறது.
அன்னா ❤
Labyrinths பக்கத்தில் காணப்பட்ட பிலிப் ஜானின் எழுத்தின் தமிழாக்கம் இது.