ஏன் அரசமைப்புச் சட்ட நிர்ணய சபை விவாதங்கள் இன்றும் தேவைப்படுகின்றன ? – விக்ரம் ராகவன்


மிடுக்காக ஆடை அணிந்த ஒரு ஐரோப்பியர் சென்னைப் பல்கலையின் கடற்கரையோரம் இருந்த வளாகத்துக்குள் ஆகஸ்ட் 1951-ல் நுழைந்தார். பிறப்பால் ஆஸ்திரிய-ஹங்கேரியரான சார்லஸ் ஹென்றி அலெக்சாண்ட்ரோவிஜ், லண்டனை சேர்ந்த சர்வதேச வழக்கறிஞர். சென்னைப் பல்கலையில் புதிதாகத் துவங்கப்பட்ட சர்வதேச மற்றும் அரசமைப்புச் சட்டத்துறையின் தலைவர் பொறுப்பேற்க அவர் பணி அமர்த்தப்பட்டு இருந்தார். வாட்டி வதைக்கும் வெயிலையும் தாண்டி, அயராது உழைத்த அலெக்சாண்டரோவிஜ் தன்னுடைய துறையை முன்னணி ஆய்வு மையமாக மாற்றிக் காட்டினார்.

ஆறு வருடங்கள் கழித்து அலெக்சாண்ட்ரோவிஜ் ஒரு சிறிய தனிக்கட்டுரையை ‘இந்தியாவில் ஏற்பட்ட அரசமைப்பு சட்ட வளர்ச்சிகள்’ என்ற தலைப்பில் எழுதினார். அரசமைப்பு வழக்குகள் குறித்த தீர்ப்புகளில் நீதிமன்றங்கள் இந்திய அரசமைப்பு சட்ட உருவாக்கத்தில் ஈடுபட்ட அரசமைப்பு நிர்ணய மன்ற விவாதங்களைக் கணக்கில் எடுத்துகொள்ளவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார். விலைமதிப்பில்லாத வழிகாட்டுதலை இந்த விவாதங்கள் வழங்கும் என்றும், அவற்றைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாதது பிழையாகும் என்றார். அரசமைப்புச் சட்டத்தில் காணப்படும் இடைவெளிகளை இந்த விவாதங்கள் இட்டு நிரப்பும்; சட்டமியற்றும் குழுவுக்கும் (சட்டசபை, நாடாளுமன்றம்), நீதித்துறைக்கும் இடையே உள்ள மோதலை மட்டுப்படுத்தும்; அரசைமப்பு சட்ட திருத்தங்களுக்கான தேவையைக் குறைக்கும்; மாறிவரும் காலங்களுக்கு ஏற்ப அரசமைப்புச் சட்டத்தைத் தகவமைக்கும் என்று அவர் வாதிட்டார்.

அப்பொழுது இருந்த நடைமுறையை அலெக்சாண்ட்ரோவிஜ்ஜின் சிந்தனைகள் கேள்விக்கு உள்ளாக்கின. சட்டமியற்றும் அவைகளில் நிகழ்த்தப்பட்ட உரைகளைக் கொண்டு ஒரு சட்டத்தை பொருள் கொள்வதைச் செய்ய இந்திய நீதிபதிகள் தொடர்ந்து மறுத்து வந்தார்கள். உச்ச நீதிமன்றம் இந்தக் கொள்கையை அரசமைப்பு சட்டத்துக்கே நீட்டித்தது. அரசியல் நிர்ணய சபையின் விவாதங்கள் பல்வேறு பாகங்களாக வெளிவந்தன என்றாலும் அவற்றைக் கொண்டு அரசமைப்புச் சட்டம் சார்ந்து ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்க்க உதவாது என உச்ச நீதிமன்றம் முடிவு கட்டியது. அரசமைப்புச் சட்டத்தைப் பொருள் கொள்வதில் அதில் உள்ள வார்த்தைகள், வாக்கியங்கள் மட்டுமே பயன்படும் என்பது அவர்கள் வந்தடைந்த முடிவாகும்.

12.jpg
எனினும், எல்லாரும் இந்தப் பார்வையைக் கொண்டிருக்கவில்லை. சில நீதிபதிகள் அரசமைப்புச் சட்டத்தில் எழும் குழப்பங்களைத் தீர்க்க அரசமைப்பு சட்ட நிர்ணய சபையின் பல்வேறு குழுக்களின் அறிக்கைகளைப் பயன்படுத்திக் கொண்டார்கள். அரசமைப்பு சட்ட விவாதங்கள் எவை என்பதைப் பற்றிய புரிதலை இப்படிப்பட்ட செயல்கள் விரிவுபடுத்தின. அரசமைப்பு சட்ட நிர்ணய சபை உரைகளைத் தாண்டிய கமிட்டிகளின் அறிக்கைகளையும் உள்ளடக்கியதாக அரசமைப்பு சட்ட நிர்ணய விவாதங்கள் மாறின. எனினும், அரசமைப்புச் சட்டம் சார்ந்த வழக்குகளில் இந்த அறிக்கைகள் வெகு குறைவாகவே பயன்படுத்தப்பட்டன

முக்கியத்துவம் வாய்ந்த 1973-ன் கேசவானந்த பாரதி வழக்குக்குப் பின்னர் நீதித்துறையின் போக்கில் மாற்றம் ஏற்பட்டது. வழக்கறிஞர்கள், நீதிபதிகள் அரசமைப்பு சட்ட நிர்ணய சபையின் விவாதங்களைக் கருத்தில் கொள்வதையும், மேற்கோள் காட்டுவதையும் செய்தார்கள். எனினும், இப்படிப்பட்ட மாற்றத்துக்கான முதல் வித்தான அலெக்சாண்ட்ரோவிஜ் எந்த அங்கீகாரத்தையும் அதற்காகப் பெறவில்லை. 1961 –ல் அலெக்சாண்ட்ரோவிஜ் ஆஸ்திரேலியாவுக்குச் சென்று தன்னுடைய கவனத்தை வேறு தலைப்புகள் பக்கம் திருப்பினார். அவர் இந்தியாவை விட்டு வெளியேறுவதற்குக் கொஞ்ச காலத்துக்கு முன்னால் ஒரு அமெரிக்க இளைஞர் இந்தியாவிற்கு வந்து சேர்ந்தார். அரசமைப்பு சட்ட நிர்ணய சபையின் ஆளுமைகள், அரசியல், செயல்முறைகள் ஆகியவை குறித்துக் கிரான்வில் ஆஸ்டின் என்கிற அந்த இளைஞரின் ஆய்வு கருத்தில் கொண்டது. அலெக்சாண்ட்ரோவிஜ்ஜின் சிறு நூலே அவர் முதலில் வாசித்த நூல்களில் ஒன்று. தன்னுடைய முனைவர் பட்ட ஆய்வில் பல்வேறு மேற்கோள்களை அலெக்சாண்ட்ரோவிஜ்ஜின் நூலில் இருந்து கிரான்வில் ஆஸ்டின் பயன்படுத்தியிருந்தார். அந்த முனைவர் பட்ட ஆய்வு ‘Indian Constitution: Cornerstone Of A Nation’ எனும் தலைப்பில் நூலாக வெளிவந்தது. இந்த நூல் வெளிவந்த அதே சமயத்தில் இந்திய பொது நிர்வாக மையம் இந்திய அரசமைப்பு சட்ட உருவாக்கம் குறித்த ஐந்து பாகங்களை வெளியிட்டது. இதில் கமிட்டிகளின் நடவடிக்கைகள், அறிக்கைகள், நிர்ணய சபையின் கோப்புகளின் மாதிரி வரைவுகள் ஆகியன சேர்க்கப்பட்டு இருந்தன.

8FL_AUSTIN1_jpg_2011199g.jpg
கிரான்வில் ஆஸ்டின்

இதற்குச் சில காலம் கழித்து ஆங்கிலேய அரசாங்கம், Transfer Of Power என்கிற தலைப்பில் பன்னிரண்டு பாகங்களில் அதிகார மாற்றம் குறித்த பல்வேறு கோப்புகளை வெளியிட்டது. இந்தத் தலையணை அளவுள்ள கோப்புகள் நிர்ணய சபையின் ஆரம்பகாலங்கள் குறித்துப் புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சின. எனினும், சட்டத்துறையைச் சாராதவர்கள் பெரும்பாலும் இந்தத் தொகுப்புகள் குறித்து அறிந்திருக்கவில்லை. அப்படியே தெரிந்தாலும் அந்தத் தொகுப்புகள் வாசிக்கக் கிடைப்பதில்லை. உயர்நீதிமன்றங்கள், வழக்கறிஞர் கூட்டமைப்புகள் தவிர்த்து பெரும்பாலான நூலகங்களில் முழுத் தொகுப்புகள் இருப்பதில்லை, அப்படியே இருந்தாலும் முக்கியத்துவம் வாய்ந்த தொகுப்புகள் குறிப்பிட்ட சிலரே அணுகும் வகையில் நூலகத்தின் கட்டுப்பாடுகள் இருக்கும். வரலாற்று ஆசிரியர் ராமச்சந்திர குஹா அரசமைப்பு நிர்ணய சபையின் முழு விவாதங்களையும் அமெரிக்காவின் ஸ்டாண்ட்போர்ட் பல்கலை நூலகத்திலேயே வாசிக்க முடிந்தது. எப்படிப்பட்ட புத்தகங்களையும் தேடித் தந்துவிடும் அவரின் டெல்லி புத்தகக் கடைக்காரரால் கூட இந்த விவாதங்களைக் கண்டடைய முடியவில்லை.

நான் சட்டக்கல்லூரிக்குள் நுழைந்த பொழுது அங்கு விவாதங்களின் சில பகுதிகள் மட்டுமே கிடைத்தன. அங்கு எப்படி அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது என விளக்கும் தொகுதிகளோ, அதிகார மாற்றம் குறித்த தொகுப்புகளோ கிடைக்கவில்லை. விவாதங்களின் பக்கங்களை யாரும் கிழித்துக் கொண்டு போயிருக்கவில்லை. ஏனெனில், அந்த விவாதங்களை யாரும் கண்டுகொள்ளவே இல்லை. குறிப்பாக, எங்களின் பேராசிரியர்களே அரசமைப்புச் சட்டங்களைப் புரிந்து கொள்ள இந்த விவாதங்களைச் சார்ந்திருப்பது என்பது ‘கற்காலத்து பாணி’ என நகையாடினார்கள். இந்த மனப்போக்கு சில காலத்துக்கு முன்னர்வரை பெரும்பாலும் நிலவி வந்தது.

எனினும், இப்பொழுது நிலைமை மாறி வருகிறது. நாடுமுழுக்கத் தங்களின் திட்டப்பணிகள், கட்டுரைகள் ஆகியவற்றுக்கு மாணவர்கள் இந்த விவாதங்களை நாடுகிறார்கள். சட்டக்கல்லூரிகளில் மட்டுமல்லாமல், சமூக அறிவியல் துறைகளிலும் அரசமைப்பு சட்ட நிர்ணய சபையின் விவாதங்கள் பாடமாகப் பரிந்துரைக்கப்படுகின்றன. இவை எல்லாவற்றுக்கும் மேலாக, சாதாரணக் குடிமக்கள் கூட இந்த விவாதங்களைத் தீவிரமாக வாசிப்பவர்களாக மாறி உள்ளார்கள். ஏன் இப்படி நடக்கிறது?

முன் எப்பொழுதும் இல்லாத அளவுக்கு, அரசமைப்பு சட்ட நிர்ணய சபையின் விவாதங்கள் பரவலாகக் கிடைக்கின்றன. இந்தத் தொகுப்புகள் வெகுகாலமாக அச்சில் இல்லாமல் இருந்தன. 2௦௦௦ வருடத்தில் மக்களவை இந்த விவாதங்களைத் தரமான தாளில் அச்சிட்டதோடு, முழுத் தொகுப்பையும் தன்னுடைய தளத்தில் பதிவேற்றம் செய்தது. நான்கு வருடங்கள் கழித்து மேம்படுத்தப்பட்ட தொகுப்பு வெளியிடப்பட்டது. சமீபத்தில் Centre for Law and Policy Research நிறுவனம் எளிதாகப் பயன்படுத்தகூடிய அரசமைப்பு சட்ட விவாத இணையதளம் ஒன்றை பயன்பாட்டுக்கு விட்டது.

இரண்டாவதாக, டாக்டர் அம்பேத்கர் குறித்துச் சமீப காலங்களில் எழுந்த ஆர்வமும் நிர்ணய சபையின் மீது ஈர்ப்பை கூட்டியது. எண்பதுகள் வரை அரசமைப்பு சட்ட உருவாக்கத்தில் அம்பேத்கரின் பங்களிப்புகள் பரவலாக அங்கீகரிக்கப்படவில்லை. இந்தியாவின் மகத்தான தலைவர்கள் எனும் வரையறை காந்தி, நேருவைத் தாண்டி விரிவடைந்த பொழுது அறிவிற்சிறந்த சிந்தனையாளர்கள், பொதுமக்கள் அம்பேத்கர், அரசமைப்பு சட்ட உருவாக்க செயல்முறைகள் ஆகியவற்றின் மீது மேலும் ஆர்வம் காட்டினார்கள்.

baba_2 copy_2.png

அரசமைப்பு சட்ட உருவாக்க விவாதங்களைக் கண்டும், காணாத அறிஞர்களின் போக்கில் மாற்றம் ஏற்பட்டது. தற்போது, நவீன இந்திய வரலாற்றுக்கு அரசமைப்பு சட்ட விவாதங்களின் முக்கியத்துவத்தை எண்ணற்ற வரலாற்று ஆசிரியர்கள், அரசியல் அறிஞர்கள் வலியுறுத்துகிறார்கள். ராமச்சந்திர குஹாவின் பெரும் படைப்பான, இந்தியா காந்திக்குப் பிறகு நூலில் ஒரு தனி அத்தியாயமே அரசமைப்பு சட்ட நிர்ணய சபையின் விவாதங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஷெபாலி ஜா, ரோச்சனா பாஜ்பாய். நீரஜா ஜெயல், பிரதாப் பானு மேத்தா ஆகியோர் அரசமைப்பு சட்ட நிர்ணய சபை குறித்துப் பலதரப்பட்ட செறிந்த பார்வைகளை முன்வைத்து உள்ளார்கள். இந்த அறிவுப்புல ஆர்வம் தற்போது பள்ளிக்கல்வி வரை ஊடுருவி இருக்கிறது. NCERT-ன் புதிய குடிமையியல், ஆட்சி நிர்வாகம் சார்ந்த பாடப்புத்தகங்களில் அரசமைப்பு சட்ட விவாதங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள் இடம்பெற்று உள்ளன. இவை இந்த விவாதங்களின் மீதான பொதுமக்களின் ஆர்வத்தை அதிகப்படுத்தவே செய்யும்.

இப்பொழுது இந்தக் கட்டுரையின் மையமான இந்த விவாதங்கள் ஏன் தற்போதும் தேவைப்படுகின்றன என்பதற்குத் திரும்புவோம். நம்முடைய குடியரசு எப்படி எழுந்தது என உணர்வதற்கான தகவல் கருவூலமாக இந்த விவாதங்கள் திகழ்கின்றன. இந்திய குடியரசின் பெரும்பயணம் நம் அனைவரையும் குடிமக்கள் என்று அழைத்துப் பொதுவான அரசியல் அடையாளத்தைத் தருகிறது. அந்தப் பெரும்பயணத்தின் கடந்து வந்த பாதையில் மீண்டும் நடைபோட இவை உதவுகின்றன

இந்த விவாதங்கள் நம்முடைய தேசத்தை உருவாக்கிய பெருந்தலைவர்கள் குறித்துப் பெருமளவில் தெரிந்து கொள்ள உதவுகின்றன. இந்த விவாதங்களில் கலந்து கொண்ட ஆண்களும், பெண்களும் முரண்படுகிற கருத்தாக்க நம்பிக்கைகள், அரசியல் சார்புகள் கொண்டவர்களாக இருந்தார்கள். எனினும் பிரிட்டிஷ் ஆட்சியின் இடிபாடுகளில் இருந்து ஒரு நவீன அரசமைப்புக் கொண்ட குடியரசை இவர்களே கட்டி எழுப்பினார்கள். இந்த மகத்தான பணியை மிகவும் சவாலான சூழ்நிலையில் அவர்கள் சாதித்தார்கள். டெல்லி பிரிவினைக்குப் பிறகு பற்றி எரிந்து கொண்டிருந்தது. அகதிகள் நாட்டுக்குள் வெள்ளம்போல வந்து கொண்டிருந்தார்கள். இந்தியா பாகிஸ்தானோடு போரிட்டது. காந்தி கொல்லப்பட்டார். இவை எவற்றாலும் அசராமல், அரசமைப்பு சட்ட நிர்ணய சபை தன்னுடைய கடமையை நிறைவேற்றியது.

இந்த விவாதங்கள் அடிக்கடி எழும் பல்வேறு சர்ச்சைகளைத் தீர்க்க உதவும். எடுத்துக்காட்டாக, இந்தியாவிற்கு நாடாளுமன்ற ஆட்சிமுறை தேவையா, குடியரசுத் தலைவரின் ஆட்சிமுறை தேவையா? நீதிபதிகளே நீதித்துறையின் பதவிகளை நிரப்பலாமா? முதலிய பல்வேறு விவாதங்களில் ஒரு தெளிவு பிறக்க இவை உதவும். இந்த விவாதங்கள் அரசமைப்பு சட்ட திருத்தங்கள் புலப்படுத்தாத அரசமைப்பு சட்டத்தின் அடிப்படை கூறுகளின் வடிவம், உள்ளடக்கம் ஆகியவற்றைப் புரிந்து கொள்ள உதவும்.

tryst_with_destiny.jpg

இறுதியாக, கடந்த காலத்தின் வெளிச்சத்தில் நிகழ்காலத்தின் சவால்களை எதிர்கொள்ள முடியும். அரசமைப்பு சட்ட நிர்ணய சபை எதிர்பாராத, கனவிலும் கருதாத சிக்கல்களில் ஒரு முடிவெடுக்க அவை உதவும். எடுத்துக்காட்டாக நாற்பதுகளில் சமூக வலைத்தளங்கள் என்பவை பயன்பாட்டில் இல்லை. இவற்றில் கருத்துரிமையைத் தணிக்கை செய்யலாமா என்கிற இன்றைய விவாதத்தைக் கருத்துச் சுதந்திரம் சார்ந்து அரசமைப்புச் சபை மேற்கொண்ட விவாதங்களின் வெளிச்சத்தில் அணுகலாம். அவர்கள் எல்லையில்லா உறுதியோடு கருத்துரிமைக்கு வாதிட்டது இன்றைய சட்ட, செயல்திட்ட வடிவமைப்பாளர்களுக்குப் பாடமாகும்

எந்த வரலாற்று ஆவணத்தைப் போலவும் அரசமைப்பு சட்ட நிர்ணய சபை விவாதங்களை அவற்றின் காலத்தோடு பொருத்தி கவனமாக அணுகவேண்டும். அரசமைப்பு சட்ட நிர்ணய சபை விவாதங்கள் குறித்து நான் ஆய்வு மேற்கொள்கையில் சில நடைமுறைகளைக் கையாள்கிறேன்.

முதலாவதாக அரசமைப்பு சட்ட நிர்ணய சபையினரின் சிந்தனைகளைப் புரிந்து கொள்ள விவாதங்களை மட்டும் நம்புவது சரியன்று. இந்தத் தொகுப்புகள் அரசமைப்பு சட்டத்தின் மூன்று வரைவுகளின் பொழுது நடந்த வாய்மொழி விவாதங்களின் எழுத்து வடிவமாகும். இவை சமயங்களில் குறிப்பிட்ட சில பிரச்சனைகளில் மவுனம் காப்பதையோ, அல்லது தவறாக வழிகாட்டுவதையோ செய்கின்றன. ஷ்யாம் பெனகலின் சம்விதான் தொலைக்காட்சி தொடர் காட்டுவதைப் போலப் பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகள் விவாத அவைக்கு வெளியே பேசி முடிவு செய்யப்பட்டன. அரசமைப்பு சட்ட உருவாக்கம் சார்ந்த மற்ற தொகுப்புகள், வாய்மொழி வரலாறுகள் ஆகியவற்றைச் சார்ந்து முழுமையான நிலையைப் பெற முயல வேண்டும்.

இரண்டாவதாக, இந்தியா தன்னுடைய உருவாக்கம் சார்ந்த மிகப்பெரும் கோப்புகளைக் கொண்டுள்ளது. இந்தக் கடல் போன்ற கோப்புகள் நிர்ணய சபையின் இறுதி தேர்வுகள் குறித்துப் பலதரப்பட்ட, முற்றிலும் முரண்பாடான வர்ணனைகளை வழங்கக்கூடும். அப்படிப்பட்ட சூழலிலும், முற்றிலும் மாறுபடுகிற இரண்டு வர்ணனைகளைக் கலந்துகட்டி ஒரு முடிவுக்கு நாம் வருவது கூடாது. இப்படிப்பட்ட பல்வேறு வகையான வாசிப்புகள் இந்த விவாதங்களின் ஆழம், தேவை ஆகியவற்றைக் கூட்டவே செய்கின்றன.

மூன்றாவதாகத் தேர்ந்தெடுத்த மேற்கோள்கள், சில உரைகள் ஆகியவற்றைக் கொண்டு அரசமைப்பு சட்ட நிர்ணய சபையின் ஒட்டுமொத்த நிலைப்பாட்டைக் கண்டறிவது சவாலான ஒன்று. இது குறிப்பாகச் சிக்கலான மதச்சார்பின்மை, சொத்துரிமை, மொழி சார்ந்த விவாதங்களுக்குப் பொருந்தும். எடுத்துக்காட்டாக, மதம் சார்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் விவாதத்தில் பங்குகொண்டனர். ஜேம்ஸ் சிரியங்கண்டத் புலப்படுத்துவது போல இந்த விவாதங்களில் அசரவைக்கும் பலதரப்பட்ட கருத்துக்கள் பிரவாகம் எடுத்தன.

இறுதியாக, அமெரிக்காவில் பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த அவர்களின் தேசத் தந்தைகளைக் கொண்டாடித் தீர்க்கிறார்கள். அவர்கள் ஜேம்ஸ் மாடிஸன், அலெக்சாண்டர் ஹாமில்டன், தாமஸ் ஜெப்ஃபர்சன் முதலியோர் GPS, காலங்கடந்த கருக்கலைப்புகள், வன்முறை மிகுந்த வீடியோ கேம்ஸ்கள் குறித்து என்ன சொல்லியிருப்பார்கள் என்று கவலை கொள்கிறார்கள். பழமையில் ஊறிய TEA PARTY இருநூறு வருடங்களுக்கு முன்னால் எப்படிப்பட்ட நம்பிக்கைகளோடு தேசத் தந்தைகள் சட்டத்தை வார்த்தார்களோ அப்படியே அவற்றைப் புரிந்து கொள்ள வேண்டும் என்கிற பார்வையைக் கொண்டிருக்கிறது.

மனதளவில் பரந்த சிந்தனை கொண்ட அலெக்சாண்ட்ரோவிட்ஜ் இந்த வகையான நூதனக் காட்சிகளைக் கண்டிருந்தால் அதிர்ந்திருப்பார். அவரும், அரசமைப்பு சட்ட நிர்ணய சபையின் விவாதங்களை வரலாற்றின் கண்ணாடி கொண்டு அணுகி புரிந்து கொள்ளவேண்டும் என்றார். எனினும், அவரின் மைய நோக்கம் அந்த ஆவணம் குறித்த விழிப்புணர்வை அதிகப்படுத்துவதே ஆகும். அலெக்சாண்ட்ரோவிட்ஜ் அமெரிக்காவை போலத் தன்னுடைய தேசத்தை உருவாக்கிய தலைவர்களைக் கண்மூடித்தனமாக வழிபடும் அமெரிக்க பாணியைக் கடுமையாகச் சாடியிருப்பார். இந்தியா தன்னுடைய அரசமைப்பை அதன் விவாதங்களின் வழியாக உணர எந்த பழமையில்  தோய்ந்த கட்சியும் தேவையில்லை.

– Vikram Raghavan

AAEAAQAAAAAAAAj8AAAAJGVlZjc5NWI5LTNmNzAtNDJjYi1hMzkwLTA5MDkzMGRlNDUxZA.jpg

இக்கட்டுரையின் ஆசிரியர் விக்ரம் ராகவன் சட்டத்துறை வல்லுநர். இந்திய குடியரசின் உருவாக்கம் குறித்த ஒரு புத்தகத்தை எழுதிக்கொண்டிருக்கிறார்.

தமிழில்: பூ.கொ.சரவணன்

http://www.livemint.com/Opinion/mLactWgKWt6iKosuEyBNMI/Why-do-our-constitutional-debates-matter.html

இக்கட்டுரை LIVEMINT செய்தித்தாளின் அனுமதி பெற்று மொழிபெயர்க்கப்பட்டது.

ஆணவக் கொலைகளின் காலம்


staalin.jpg

ஸ்டாலின் ராஜாங்கம் அவர்களின் எழுத்தில் ‘ஆணவக் கொலைகளின் காலம்’ நூலை வாசித்து முடித்தேன். பல்வேறு காலங்களில் எழுதப்பட்ட கட்டுரைகள் என்றாலும் ஜாதி அரசியல் எப்படிப் பண்பாட்டு, மொழி, அரசியல் தளங்களில் தன்னுடைய கொடுங்கரங்களை நீட்டி ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையைக் குலைக்கிறது என்பதை நூல் வெறுப்பின்றிப் பதிவு செய்கிறது. என்னமோ அரசியல் கட்சிகளால் தான் ஆணவ கொலைகள் நடப்பதை போன்ற தோற்றம் உண்டாக்கப்படுகிறது. ஆனால் , மக்களிடையே நீக்கமற ஜாதியுணர்வு கலந்திருக்கிறது. அது பாம்பின் நாக்கைப் போலத் தேவைப்படும் பொழுது மட்டும் வெளிப்படுகிறது என்பதைச் சுட்டிக் காட்டுகிறார்.

ஜாதி என்பது பண்பாட்டு அதிகாரத்தைத் தன்னகத்தே கொண்டு இயங்கி வரும் சூழலில், கோயில் நுழைவைத் தாண்டி கோயில் மரியாதை , தனிக்கோவில், நல்ல வீடு, வாகனங்கள் என்று பல்வேறு தளங்களில் தங்களுக்கான இடத்தைத் தலித்துகள் போராடிப் பெறுகிறார்கள். நவீன அரசியல் காரணமாக ஆட்சி நிர்வாகத்தில் கிராமங்கள் அளவில் இடம் கிடைப்பது நடக்கிறது. அங்கே அமர்ந்து விவாதித்து, பேசி, சண்டையிட்டு அரசியல் செய்கிறார்கள். தேர்தல் அரசியல் எண்ணிக்கை சார்ந்த ஒன்றாக இருப்பதால், பண்பாட்டுத் தளத்தில் ஜாதியை கையில் எடுத்துத் தேர்தலில் கொள்முதல் செய்வது தொடர்ந்து நிகழ்கிறது.

கல்வி, வேலைவாய்ப்பு, போக்குவரத்து, தொழில்நுட்பம் என்று பல்வேறு காரணங்களால் இடப்பெயர்ச்சியும், மக்கள் தொடர்பும் நிகழ்கிறது. இப்படிப்பட்ட நிலையில் ஆணும், பெண்ணும் இயல்பாகப் பழகும் வாய்ப்புகள் பெருகி காதல் அரும்புகிறது. பெண்ணுடலை சுற்றிக் கட்டமைக்கப்பட்ட ஜாதி அமைப்புப் பதற்றம் கொள்கிறது. இயல்பாகச் சமூகத்தில் நிகழும்

இவற்றையும், கல்வி, வேலைவாய்ப்புகளில் முன்னுக்கு வரும் ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்தையும் பதற்றத்தோடு அணுகுகின்றன ஆதிக்க ஜாதிகள். இந்த இயல்பான மாற்றத்தை ஆக்கப்பூர்வமாக எதிர்கொள்ளாமல் எளிமையான எதிர்த்தரப்பாகத் தலித்துகளைக் கூட்டாகக் கட்டமைத்து வன்முறையைக் கைக்கொள்கிறார்கள். தலித்துகளைக் கொல்வதும் , தலித்தோடு காதல் பூண்ட தங்கள் ஜாதி பெண்ணைக் கொல்வதையும் செய்கிறார்கள்.

மாமல்லபுரத்தில் நடந்த வன்னியர் இளைஞர் மாநாட்டில் கலப்புத் திருமணத்துக்கு எதிரான பகிரங்க எதிர்ப்பை காடுவெட்டி குரு பதிவு செய்ததன் நீட்சியாகவே தர்மபுரியில் பல நூறு குடிசைகள் எரிக்கப்பட்டதைக் காணவேண்டும் என்கிறார் ஆசிரியர். கொங்கு வெள்ளாளர் அமைப்புகள் சில ஜாதி மறுப்பு திருமணத்துக்கு எதிராக உறுதி மொழி எடுத்ததோடு நில்லாமல், கலப்புத் திருமணச் சட்டத்தை ரத்து செய்யும்படி கோரின. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அரசமைப்பு பாதுகாப்பாக இருக்கும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீக்க சொல்லி வன்னியர் அமைப்புகள், கொங்கு வேளாளர் பேரவைகள் , தேவர் அமைப்புகள் போராடுவது ஒடுக்கப்பட்ட மக்களின் சிக்கல்கள் சார்ந்த அக்கறையின்மையின் அப்பட்டமான ஆதாரம்.

அண்ணல் அம்பேத்கர் ஜாதியமைப்பு குறித்த தன்னுடைய ஆய்வில் ஜாதி முறையின் தோற்றத்துக்கும், அதன் நீடிப்புக்கான காரணமாக அக மண முறையைச் சுட்டுகிறார். ஒத்த குழுவில் ஏற்படும் ஆண் -பெண் எண்ணிக்கையை ஒட்டி பெண்களின் மீது திணிக்கப்படும் விதவைக் கோலம், உடன்கட்டை நடைமுறை, குழந்தை திருமணம், ஆண்களின் துறவு எனப் பல போக்குகளை நுண்மையாக விவரித்தார். ஜாதி அமைப்பை ஒழிக்கக் கலப்பு மணம் தான் வழி எனத் தான் நம்புவதாக அறிவித்தார்.

ஜாதி மறுப்புத் திருமணம் என்பது என்பது தமிழகத்தில் நூற்றாண்டு கண்டுவிட்ட ஒன்றாகும். முதலில் ஜாதி மறுப்புத் திருமணங்களாக ஆரம்பித்த இவை தற்போது வெறும் சடங்கு, புரோகிதர் ஒழித்த திருமணங்களாக ஜாதிக்குள் நடக்கிற அளவுக்குச் சுருங்கிவிட்டது. திராவிட இயக்கம் கலப்புத் திருமணத்தை அழுத்திப் பேசினாலும் அதன் ஆதாரவாளர்களாகத் திகழ்ந்த ஆதிக்க ஜாதியினர் அவற்றைச் சட்டை செய்யவில்லை. தங்களை ஆண்ட பரம்பரையாகக் காட்டிக் கொள்ளும் ஆதிக்க ஜாதிகள், இட ஒதுக்கீடு என்று வரும் பொழுது மட்டும் வஞ்சிக்கப்பட்ட, ஏமாற்றப்பட்டவர்களாகத் தங்களைக் காட்டிக்கொள்ளும் முரண்பாட்டைச் சுட்டிக்காட்டுகிறார் ஆசிரியர்.

தர்மபுரியில் மூன்று தலித் கிராமங்கள் எரிக்கப்பட்ட பொழுது திமுகத் திராவிடமா, தமிழனா என்று விவாதித்து அறிக்கை விட்டுவிட்டு ஒதுங்கி கொண்டது. அதிமுகவோ நிவாரண நிதியை கொடுத்துவிட்டு மவுனம் காத்துக் கொண்டது, தமிழ் அடையாளம் என்பதன் கீழ் தங்களுடைய கள வேறுபாடுகளைப் புறக்கணித்துவிட்டு ராமதாஸ், திருமாவளவன் ஆகியோர் கூடினார்கள். திரைப்படப் பெயர் மாற்றம், ஈழப் பிரச்சினை என்று இயங்கிய இவர்கள் ஜாதி ஒழிப்புக்குக் களத்தில் இறங்கி பணியாற்றவில்லை. தலித்துகளின் நியாயமான கோபங்கள் மீது எழுந்த விடுதலை சிறுத்தைகள் இயக்கம் ஆர்ப்பாட்ட அரசியலைத் தாண்டி ஜாதி அமைப்பை எதிர்கொள்வதில் சுணக்கம் கொண்டுள்ளது. தமிழால் இணைந்து போராடலாம் என்று கணக்கு போட்ட இருவரும் முகத்தில் அறையும் சிக்கலைகளைத் தொட்டு அது சார்ந்து இயங்கி இருக்கலாம். ஆகவே இதனைத் ‘தமிழ்த் தின்ற சாதி’ என்று ஸ்டாலின் ராஜாங்கம் அழைக்கிறார்.

PMK_RAMADOSS_2470c.jpg
திராவிட அடையாள அரசியலில் தலித்துகளை இணைத்துக்கொண்டு அதிகாரத்தில் அவர்களுக்கான இடத்தை மறுக்கும் அரசியலை திராவிட இயக்கங்கள் மேற்கொள்கின்றன. தலித் இயக்கங்களின் எழுச்சி திராவிட இயக்கங்களின் போதாமையால் மட்டும் எழுந்தவை அல்ல, திராவிடக் கட்சிகளின் அடையாளமும், அரசியலும் ஜாதிமயமானதாக ஆனதற்கு எதிராக எழுந்த கலகமே தலித் இயக்கங்கள். எனினும், அவை சமூக விரோத இயக்கங்கள் [போல இன்றைய அரசியல் களத்தில் ஆதிக்க ஜாதி அரசியலால் முத்திரை குத்தப்படுகிறார்கள். ராமதாஸ் என்கிற ஒற்றை அரசியல்வாதி மட்டுமே ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராகப் பேசுவதைப் போன்ற தோற்றத்தை உண்டு செய்து, பிராமணர்களை மட்டும் சாடிவிட்டுத் தலித்துகள் மீது வன்முறையை, அடக்குமுறையை ஏவும் தமிழகத்து இடைநிலை சாதிகள் குறித்து மூச்சுகூட விடாமல் இருக்கின்றன திராவிட இயக்கங்கள். ஓட்டுக்கள் போய்விடும் என்கிற வாக்குவங்கி அரசியல் இதனைச் செலுத்துகிறது.

தலித்துகளும், திராவிட இயக்கமும் கொள்வதே இயற்கை கூட்டணி என்கிறார் கி.வீரமணி. ஆனால், எம் எல்.ஏ , எம்பி ஆகிய அரசியல் பிரதிநிதித்துவம் மட்டுமல்ல, அரசு சார்ந்த திட்டங்கள். பொது ஏலம் , அரசு மூலதனம் ஆகியவை பெரும்பான்மை சாதியினருக்கு உரியதாக ஆக்கப்பட்டு விட்டதை ஆசிரியர் சுட்டிக்காட்டுகிறார். பெரியார் பிறக்காத உத்திர பிரதேசத்தில் தலித் முதல்வராக முடிகிறது, தமிழகத்தில் முடியவில்லை என்றுகூடச் சொல்ல முடியவில்லை என்று திருமாவளவன் வருத்தப்படுகிற அளவுக்குத் தமிழகத்தின் நிலை உள்ளது.

ஜாதியமைப்பு ‘அண்டாமை-காணாமை’ எனும் அளவுகோல்களைக் கடந்து நவீன அரசியலில் அதிகாரத்தைத் தொடர்ந்து தக்க வைக்கும் ஒன்றாக உள்ளது. ஆதிக்க ஜாதிகளுக்கு இருக்கும் உள்ளூர் அதிகாரம், பணபலம் ஆகியவை தேர்தலில் வாக்குகளை அள்ளித் தருகிறது. சமூக இயங்குமுறையில் ஊடுருவிவிட்ட இதனைக் குறித்துப் பேசாமல், விமர்சிக்காமல், எதிர்கொள்ளாமல் மாற்றம் என்பது சாத்தியமில்லை.

கலப்புத் திருமணங்களைத் தீவிரமாகச் சமூக, அரசியல் தளங்களில் முன்னெடுப்பது இல்லை. ஜாதி ஒழிக என்கிற கோஷங்கள் எழுகிற அதே சமயம், ஜாதி வன்முறையைத் தூக்கிப்பிடிக்கும் காரணிகளை எதிர்கொள்வது கூட்டுச் செயலாக நிகழ்வதே இல்லை. ஒடுக்கப்பட்ட சமூகத்தினராக இருபதாம் நூற்றான்டுக்கு முன்னர் வரை இருந்த நாடார்கள் கள்ளர்கள் உடன் இணைந்து கொண்டு கண்டதேவி தேரை வடம் பிடித்து இழுக்கத் தலித்துகளை அனுமதிக்காததைச் சுட்டும் ஆசிரியர் ஜாதி எப்படித் தன்னுடைய கொடுங்கரங்களைத் தலித்துகள் மீது செலுத்திக் கொண்டே இருக்கிறது என்பதைக் கவனப்படுத்துகிறார்.

ஒடுக்கப்பட்ட மக்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சி மீது நாடக காதல் புரிகிறார்கள்,வன்கொடுமை சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறார்கள், கட்டப் பஞ்சாயத்து செய்கிறார்கள் முதலிய குற்றச்சாட்டுகளை ராமதாஸ் வைக்கிறார். அன்புமணி சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த பொழுது அவரின் துறை எடுத்த கணக்கெடுப்பின் படியே இந்தியாவில் கலப்புத் திருமணங்கள் குறைவாக இருக்கும் மூன்று மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. இடப்பெயர்வு, நவீனம் ஆகியவற்றால் காதல் திருமணங்கள் பெருகியிருப்பதை வசதியாக மறைக்கும் போக்கு இது. மேலும், கட்டப்பஞ்சாயத்து என்பதை எல்லா அரசியல் கட்சிகளும் செய்கின்றன. தானும் தங்களுக்குத் தேவையானதை பெற்றுக்கொள்ளும் இடத்தை ஒடுக்கப்பட்ட மக்கள் ஒரு சில இடங்களில் பெற்றிருப்பதன் அறிகுறி அது என்கிறார் ஆசிரியர். வன்கொடுமை தடுப்புச் சட்டம் குறித்துப் பெரியளவில் அறிதல் இல்லாமலே தலித்துகள் உள்ளார்கள், மேலும், குறைந்த அளவிலேயே குற்றவாளிகள் தண்டிக்கப்படுகிறார்கள். என்றாலும், ஓரளவுக்கேனும் ஆதிக்க ஜாதியினரை அச்சுறுத்தும் சட்டமாக இது இருப்பதாலேயே அதனை நீக்க போராடுகிறார்கள் என்கிறார்.

ஆணவக் கொலைகள் எங்கள் மாநிலத்தில் நடக்கின்றன என்று இருபத்தி ஒரு மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்தது. அப்படியொன்று நடக்கவில்லை என்று சட்டசபையிலும், உச்ச நீதிமன்றத்திலும் தமிழக அரசு பிடிவாதம் பிடித்தது. ஆணவக் கொலைகளை, ஜாதி அரசியலை கண்டிக்கும் வாய்ப்பாக இருந்தும் திமுகத் தலைவர் கருணாநிதி அதைச் சட்டம், ஒழுங்கு பிரச்சினையாக மட்டுமே அறிக்கை விட்டார்.

வன்முறையை வெவ்வேறு வடிவங்களில் கைக்கொள்ளும் யுவராஜ் முதல் பல்வேறு இடைநிலை சாதியை சார்ந்தவர்கள் நாயகர்களாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கும் சூழலில் பிராமணரின் அதிகாரத்தை எதிர்த்து கிளர்ந்த திராவிட இயக்கம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியை ‘பிராமணியத்துக்குத் துணை போகும்’ என்று மட்டும் கூறிக்கொண்டு எதிர்கொள்வது தமிழகத்தின் சமூக நீதிக்கு நல்லதல்ல என்பது நூலில் அழுத்தமாகப் பதிவு செய்யப்படுகிறது.

மிக முக்கியமான நூல். அவசியம் வாங்கிப் படியுங்கள்

ஆணவக் கொலைகளின் காலம்
ஸ்டாலின் ராஜாங்கம்
காலச்சுவடு வெளியீடு
பக்கங்கள்: 190
விலை: 175

anavak-kolai-9999993-800x800.jpg

இயக்குனர் மகேந்திரனும், சினிமாவும்


சினிமாவும் நானும்’ என்கிற இயக்குனர் மகேந்திரன் அவர்களின் நூலை வாசித்து முடித்தேன். விகடனில் மாணவ நிருபராக இருந்த பொழுது அவரை நேர்முகம் செய்ய ஆசைப்பட்டேன். அலைபேசியில் அவரை அழைத்துப் பேசிய கணத்தில் அந்தக் குரலில் இருந்த தணிவும், நெருக்கமும் இந்த நூலிலும் பரவியிருக்கிறது. இத்தனை நேர்மையும், கரிசனமும் ததும்ப எழுத முடியுமா என வியக்கிற இடங்கள் நூலில் ஏராளம்.

ஏழு மாதத்தில் குறைப்பிரசவ குழந்தையாகப் பிறந்தார் மகேந்திரன். குறைப்பிரசவ குழந்தைகள் பிறந்தால் பிழைக்காது எனக்கருதி கொண்டுபோய்ப் புதைப்பதே வழக்கம். அதையே மகேந்திரனின் அப்பாயியும் செய்யச் சொல்லியிருக்கிறார். மகேந்திரனை தன்னுடைய அடிவயிற்றின் கதகதப்பில் மூன்று மாதம் தன்னுடைய பிள்ளையைப் போலக் காத்த மருத்துவர் சாரா அம்மாவால் தான் நமக்கு அவர் கிடைத்தார்.

இளம்வயதில் நோஞ்சானாக இருந்த மகேந்திரன், ‘வாத்துக்கால்’ என்று நையாண்டி செய்யப்பட்டார். கல்லூரியில் நண்பர்கள் கிண்டல் செய்வார்கள் என்று இருட்டிய பின்பு ஆடுகளத்தில் ஓடி தலைசிறந்த தடகள வீரராகப் பெயர் எடுத்தார். எம்.ஜி.ஆர். ‘நாடோடி மன்னன்’ திரைப்பட வெற்றி விழாவில் கலந்து கொள்ள மதுரைக்கு வந்திருந்தார். அவரை அப்படியே மகேந்திரனின் கல்லூரிக்கு அழைத்து வந்தார்கள்.

எம்.ஜி.ஆர் தான் பேசமாட்டேன் என்றும், மாணவர்களைப் பார்க்க வருகிறேன் என்று நிபந்தனையோடு வந்தார். மகேந்திரனுக்கு முன்னால் பேசிய மாணவர்கள் ரசிகர்களால் கூச்சலிட்டு இறக்கப்பட்டார்கள். அடுத்து மகேந்திரனின் முறை. அன்றைக்குச் சில நாட்களுக்கு முன்னர்த் தான் கல்லூரியில் வரம்புமீறி பழகியதற்காகக் காதல் ஜோடி மீது முதல்வர் நடவடிக்கை எடுத்திருந்தார். அதைக் குறிப்பிட்டு, ‘சினிமாவில் டூயட் பாடிக்கொண்டு ஊரே பார்க்கிற மாதிரி காதல் செய்கிற எம்ஜிஆரை மட்டும்தான் யாரும் கண்டுகொள்வதில்லை…’ என்கிற ரீதியில் பேச ஆரம்பிக்கக் கைதட்டல் பறந்தது. ஐந்து நிமிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்ட மகேந்திரன் தமிழ் திரைப்பட உலகின் நாடகப்போக்கை கிழித்துத் தொங்கவிட்டார். நாற்பத்தி ஐந்து நிமிடங்கள் எம்ஜிஆரையும் ரசிகர் ஆக்கி பேசி முடித்தார் அவர். அது பிற்காலத்தில் அவரைப் ‘பொன்னியின் செல்வன்’ படத்துக்குத் திரைக்கதை எழுதும் பொறுப்பை எம்ஜிஆர் வழங்கும் அளவுக்குத் தாக்கம் செலுத்திய பேச்சாக இருந்தது.

 

Image may contain: 1 person

சினிமா மோகத்தில் சிக்கிக்கொள்ளும் இளைஞர்களை நோக்கி மகேந்திரன் தோழமை நிறைந்த குரலில் மீட்க பலவற்றைப் பேசுகிறார். தன்னுடைய வீட்டுக்கதவை யாரேனும் தட்டும் பொழுது மகேந்திரனே திறப்பார். அதைக்கண்டு பலரும் அதிர்ச்சி அடைவார்கள். “என் வீட்டு கதவை நான் திறக்காமல் யார் திறக்க வேண்டும்?” எனக்கேட்கிற மகேந்திரன், ‘சினிமா ஜோடனைகளின் மீது எழுப்பப்பட்டு இருக்கிறது. சினிமா உலகம் தேவலோகமும் இல்லை, இங்கே நடிப்பவர்கள் தேவதூதர்களும் இல்லை…நம் நாட்டில் விவசாயி, அன்றாடங்காய்ச்சி எனப்பலரும் பட்டினி கிடக்கிறார்கள். அது அவர்களின் வாழ்க்கை. ஆனால், நடிகன் பட்டினி கிடந்த கதையைச் சொல்லி பின்னர் முன்னேறியதை பேசுகையில் தேவையில்லாத கவர்ச்சி ஏற்படுகிறது. பட்டினி கிடந்தாலும் பரவாயில்லை என்று சினிமாவில் ஜெயிக்க வருகிறீர்கள். விலைமதிப்பற்ற இளமை, ஆரோக்கியம் ஆகியவற்றை அடமானம் வைத்து ஜெயிக்க முடியாது. பட்டினியில் கவர்ச்சி கொள்ளாமல், அவர்களின் வெற்றிக்கான அடிப்படைகள், காரணங்கள் நாடி பயணியுங்கள்’ என்கிறார்.

திறமை, தன்னம்பிக்கை ததும்ப இதில் தான் இயங்குவேன் என்று இலக்கு வைத்துக்கொண்டு செயல்பட இளைஞர்களை அறிவுறுத்துகிறார். அதேசமயம், வாழ்க்கையில் பாதுகாப்பான வேலையில் ஈடுபட்டுக்கொண்டே தன்னுடைய கதைகளை வாழ்க்கையில் கண்டெடுத்து செதுக்க இயலும் என்று நம்பிக்கை தருகிறார். உலகத் திரைப்படங்களைப் பார்த்து பிரதி எடுக்காமல், அவற்றின் மூலம் கற்றலின் பரப்பை விரிவுபடுத்த வழிகாட்டுகிறார்.

‘சினிமாவில் பிரபலமாவதும், பெரிய ஆளாவதும் பெரிய விஷயமே. அப்படி ஆகமுடியாது போனால் ஒன்றும் குறைபாடு இல்லை. சினிமா தவிர்த்தும் வாழ்க்கை மிக உன்னதமானது, பெருமையுடையது. பிரபலமில்லாத மனிதனாக வாழ்வது ஒன்றும் குறைச்சலான காரியமில்லை. வீணாகாத வாழ்க்கை வாழ்ந்தால் போதும்.’ என்று அறிவுறுத்துகிறார்.

Image may contain: 3 people

தமிழ் சினிமாவில் பெண்களை டூயட் பாட மட்டுமே பயன்படுத்துவதைக் கவர்ச்சி என்பதைவிட அவர்களைச் சிறுமைப்படுத்தும் காரியம் என்கிறார். பெண்கள் மோசமாகத் திரையில் காட்டுவதைக் கண்டு மோசமான படம் என்று பொருமும் பெண்கள் கூட, ‘திரையில் நடிக்கும் பெண்கள் நம்மைப் போன்றவர்கள் தானே. அவர்களை இப்படிப் படத்தில் அலங்கோலமாகக் காட்டுகின்றார்களே!’ என்று யோசிப்பதில்லை எனப் பதிகிறார். பாடல் காட்சிகள் வருந்தும்படி உள்ளன. ‘இருப்பதைத் தானே காட்டுகிறோம்.’ என்பவர்களை நோக்கி காரமாக, ‘நமது வீடுகளில் படுக்கை அறைகளுக்கும், குளியல் அறைகளுக்கும் கதவுகள் எதற்கு? திறந்தே கிடக்கட்டுமே…உண்மைகளை ஏன் மறைக்க வேண்டும்?’ எனச் சொல்ல முடியுமா?’ என வினவுகிறார்.

உமா சந்திரனின் ‘முள்ளும்,மலரும்’ எனும் ஜனரஞ்சக நாவலை முழுமையாகப் படிக்காமல் தன்னுடைய மனப்போக்குக்கு ஏற்றவாறு அதை முள்ளும் மலரும் எனப் படமாக்கினார் மகேந்திரன். முள்ளும் மலரும் எதிரெதிர் பதமாகப் பயன்படுத்தப்படவில்லை. காளி எனும் முள் போன்ற கதாபாத்திரமும் மலரும் என்கிற பொருளிலேயே ‘முள்ளும், மலரும்’ எனும் தலைப்புத் தரப்பட்டது.

படத்தின் இறுதிக்காட்சியிலும், ‘உங்களை எனக்குப் பிடிக்கலை’ என்று சரத்பாபுவிடம் ரஜினி சொல்வதாக வரும் காட்சியில் ‘எப்படி இறுதிக்காட்சியில் மாறாமல் இருப்பார்?’ என்று சரத்பாபு கோபித்துக் கொண்டு நடிக்க மறுத்தார். காட்சிகளின் மூலம் படம் சொன்ன விதத்தைப் பார்த்துவிட்டு, ‘பாவி மண்ணள்ளி என் தலையில போட்டுட்டியே’ என்று தயாரிப்பாளர் வேணு செட்டியார் கதறியிருக்கிறார். ‘செந்தாழம் பூவில்’ பாட்டின் ஆரம்பகாட்சியை எடுக்கப் பணம் தர மறுத்தார் அவர். கமலின் பேருதவியால் படம் திரைக்கு வந்தது. மாபெரும் வெற்றி பெற்ற அந்தப் படத்தில் பின்னணி இசையில் பெரிய அளவில் முதல்முறையாக இளையராஜா மிரட்டினார் என்கிறார் மகேந்திரன்.

‘சிற்றன்னை’ எனும் புதுமைப்பித்தனின் கதையை உள்வாங்கி உதிரிப் பூக்கள் திரைப்படமாக எடுக்க முனைந்தார் மகேந்திரன். இறந்த பொழுது போடும் உதிரிப் பூக்கள் தலைப்பா என்று விமர்சித்தனர். தலைவிரி கோலமாக, பொட்டு அழிந்த நிலையில் நாயகி காட்சியளிக்கும் போஸ்டரை ஓட்டியதையும் கிண்டல் செய்தார்கள். புதுமைப்பித்தனை காசாக்கி விட்டார் என்கிற சர்ச்சையும் எழுந்தது. அனைத்தையும் தாண்டி ஓடியது. ரஷ்ய அரசு படத்தின் தரத்தை கேள்விப்பட்டுத் தானே வாங்கி ரஷ்யாவில் மொழிபெயர்த்து மக்களுக்குப் போட்டுக்காட்டியது.

கன்னடத்தில் ராசியில்லாத நடிகை எனச் சொல்லப்பட்ட அஸ்வினியை தன்னுடைய படத்தில் தைரியமாகப் போட்ட மகேந்திரன் சொல்கிறார், ‘படத்தின் கதையும், திரைக்கதைக்கான ட்ரீட்மென்ட்டும் தான் படத்தின் வெற்றியை தீர்மானிக்கும். இவை அல்ல.’ பூட்டாத பூட்டுக்கள் படத்தில் தேவையான நடிகர்கள் கிடைக்காமல் போனது, கைகொடுக்கும் கை படத்தில் விருப்பத்துக்கு மாறாக வைக்கப்பட்ட உச்சபட்சக் காட்சி படத்தின் தோல்விக்கு வழிவகுத்தது என்று எழுதினாலும் இந்தப் படங்களின் தோல்விக்குத் தானே காரணம் என்கிறார் மகேந்திரன்.

மகேந்திரன் சட்டம் படிக்கச் சென்னை வந்தார். ஏழு மாதத்துக்கு மேல் அத்தை அனுப்ப பணமில்லை என்று சொன்னதும் திமுகச் சார்பு இன முழக்கம் இதழில் திரை விமர்சனம் எழுத அமர்ந்தார். அப்பொழுது எம்ஜிஆர் அழகப்பா கல்லூரியில் மகேந்திரன் பேசிய பேச்சை நினைவுபடுத்தி அவரைத் திரையுலகுக்குள் அழைத்து வந்தார். என்றாலும், சீக்கிரமே இதழியல் பக்கம் சென்றார் மகேந்திரன். துக்ளக் இதழில் புலனாய்வு இதழியலில் பின்னினார். கிளைவ் விடுதியில் காவல்துறை நடத்திய அத்துமீறல் கோவையில் காவல்துறை நடத்திய துப்பாக்கி சூடு, சிதம்பரத்தில் உதயகுமார் என்கிற மாணவனின் மரணத்துக்கு அடிகோலிய காவல்துறை செயல்கள் என்று திமுக ஆட்சியின் பல்வேறு தவறுகளை வெளிச்சம் போட்டுக் காட்டினார் மகேந்திரன்.

அலுவலகத்துக்குச் சீக்கிரம்பொ வந்துவிடும்து சோ அரைமணிநேரம் தாமதமாக வந்தார். அவரைக் காண வந்த செந்தாமரை, எஸ்.ஏ.கண்ணன் மகேந்திரனை ஏற்கனவே அறிந்ததால் அவரிடம் நாடகம் கேட்டார்கள். அப்பொழுது படித்த டிட்பிட்ஸ் இதழின் தாக்கத்தில் சொன்ன கதை, விரிந்து விருட்சமாகி சிவாஜி நடிக்கும் தங்கப் பதக்கம் படமானது. சௌத்ரி என்கிற வடநாட்டு பெயரை என் சிவாஜிக்கு வைத்தார் என்று யாருமே கேட்கவில்லை.

எம்ஜிஆரின் பசியாற்றும் தன்மை, மகேந்திரனின் மகள் குணமாக மொட்டையடித்துக் கொண்ட சோவின் அன்பு, கமலின் உதவியால் இயக்குனர் ஆனது என்று பலவற்றை மகேந்திரன் பதிகிறார். சிவாஜி மிகைநடிப்பை விடுத்து வீரபாண்டியன் படத்து வசனத்தைப் பேசிக் காண்பித்து அது எடுபடாது எனப் புரிய வைத்ததைப் பதிவு செய்கிறார். தங்கப் பதக்கம் படத்தில் தான் சொன்னபடியே வசனம் குறைத்து, உணர்வால் நெகிழ வைத்த நடிகர் திலகத்தை நினைவுகூர்கிறார். குள்ளமான உருவம் கொண்ட சிவாஜி எப்படி உயரமாகத் தோன்றுகிறார் என்கிற ஐயத்தை அவரிடமே கேட்டார். ‘நான் ஹீல்ஸ் செருப்பு போடுறதில்லை. நான் பின்னங்காலை அழுத்தி உயரமாகக் காட்டிக்கலை. மனதார உணர்ந்து, வேடத்தில் கலந்து பேசுவது கதாபாத்திரத்தில் உங்களை லயிக்க வைக்கிறது. அதனால் உயரமாகத் தெரிகிறேன்.’ என்றாராம்.

சிவாஜி எத்தனையோ வேடங்களில் அர்ப்பணிப்பை செலுத்தி நடித்தார். பல்வேறு ஒப்பனைகளை அவர் மேற்கொண்டார். ஆனால், அதை அவர் பெரிதாகப் பேசியதில்லை. இன்றைய நடிகர்களோ மொட்டை போட்டேன், எடை குறைத்தேன் என்று அவற்றைப் பெரிதாகப் பேசுகிறார்கள். நடிப்புக்கு என்ன செய்தார்கள் என்பதுதான் மையகவலையாக இருக்க வேண்டும் என்கிறார் மகேந்திரன்.

சினிமா என்றால் டூயட், சண்டை என்பதைத் தாண்டி காட்சி, நடிப்பு என மாறவேண்டும் என்கிறார். பெயருக்குப் பின்னால் பட்டங்கள் போட்டுக் கொள்வதை, ‘ஆஸ்கார் வாங்கின சத்யஜித் ரே எந்தப் பட்டத்தையும் பெயருக்கு முன்னால் போட்டுக்கொள்ளவில்லை. நீங்களே மாறி மாறி டார்ச் லைட் அடிச்சுக்காதிங்க.’ என்று கடிகிறார்.

Image may contain: 2 people

தமிழ் நாயகிகள் பரங்கிமலை ஜோதி பெண்களைப் போலத் திரையில் உடல் வனப்பை காட்டி போகப் பொருளாக மாற்றப்படுவதைக் கவலையோடு குறிப்பிடுகிறார். பணம் சம்பாதிக்கக் கன்னக்கோல் வைப்பது, திருடன் ஆவது, கள்ளப்பணம் அடிப்பது என்று ஆண்கள் இறங்குகிறார்கள். பெண்களுக்குச் சந்தையில் மதிப்பு குறைவான காலமே இருப்பதால் உடலை காட்டி பொருள் ஈட்ட வைக்கப்படும் நிலையைக் கவனப்படுத்துகிறார்,

சினிமாவுக்கு விருப்பமில்லாமல் வந்த மகேந்திரன் இப்படி எழுதுகிறார் : ‘ஒரே சமயத்தில் பலரைப்பார்த்துப் பேசிக்கொண்டே கைவிரல்களைக் கண்களாகப் பாவித்து அரிவாள்மனையில் காய்கறிகளைத் துண்டுபோட்டு, எதோ ஒரு அனுமானத்தில் சமையல் பண்ணும் தாய்மார்களைப் போலத்தான் என்னுடைய போக்கும்.’ என்றுவிட்டு மேலே சொன்ன எல்லாவற்றையும் அடுக்குகிறார். கட்டாயச் சமையல் என்றாலும் சுவைக்கவே செய்கிறது.
சினிமாவும், நானும்
இயக்குனர் மகேந்திரன்
மித்ரா ஆர்ட்ஸ் அண்ட் கம்யூனிகேசன்ஸ் வெளியீடு

புகைப்படங்கள் நன்றி: இயக்குனர் மகேந்திரனின் முகநூல் பக்கம்

புனிதங்களைப் பொசுக்கியவர்: புகழ்பெற்ற அரசியல் அறிஞர் பார்வையில் பெரியார்!


பேராசிரியர் சுனில் கில்னானி இந்தியாவின் முன்னணி அரசியல் அறிஞர். அவருடைய, ‘IDEA OF INDIA’ நூல் இந்தியாவைப் புரிந்துகொள்ள மிகச்சிறந்த நூல் என்று உலகம் முழுக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. இங்கிலாந்தின் தொன்மை மிகுந்த கிங்ஸ் கல்லூரியில் பேராசிரியராக உள்ளார். அவருடைய, ‘INCARNATIONS: INDIA IN FIFTY LIVES’ நூலில்… தந்தை பெரியார் குறித்து இடம்பெற்ற ‘SNIPER OF THE SACRED COWS’ கட்டுரை ஆசிரியரின் அனுமதி பெற்று மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது: 

இந்தியாவில் வாழும் அனைத்துப் பெண்களையும் தனியாகப் பிரித்து ஒரு தேசத்தை நாம் கட்டமைப்பதாக வைத்துக்கொள்வோம். இதை, ‘இந்தியப் பெண்கள் குடியரசு’ என்போம். இந்த நாட்டில், 60 கோடி பேர் இருப்பார்கள். ஆண்களால் மோசமாக ஆளப்படும் இந்தியாவுக்கு அடுத்த, பெரிய தேசமாக அது திகழும். அந்தத் தேசத்தின் மனிதவள வளர்ச்சிக் குறியீடானது மியான்மர், ருவாண்டா முதலிய நாடுகளுக்கு இடையே மோசமான இடத்தைப் பெறும். அந்தத் தேசத்தில் பள்ளிக்குச் செல்லும் சராசரி வருடங்கள் அதிர்ச்சி தரும் அளவாக 3.2 வருடங்கள் என்கிற அளவிலேயே இருக்கும். இது, ஆப்ரிக்கத் தேசமான மொசாம்பிக்கின் மோசமான கல்விநிலையோடு போட்டியிடும் நாடாகக் காட்சியளிக்கும். தனிநபர் வருமானத்தை, விலைவாசி ஏற்றத்தை கணக்கில்கொண்டு கணக்கிட்டால்… இந்த இந்தியப் பெண்கள் நாட்டின் வருமானம், ஐவரி கோஸ்ட், பப்புவா நியூ கினியா முதலிய நாடுகளுக்கு இடையே தள்ளாடும். கடந்த 15வருடங்களில் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி மூன்று மடங்கு பெருகியும் பெண்களின் நிலை இவ்வளவு அவலத்துக்கு உரியதாக இருக்கிறது.

இந்தியப் பெண்களின் அளப்பரிய ஆற்றலை இந்த அளவுக்கு அடக்கி ஒடுக்காத நாடுகளின் எடுத்துக்காட்டுக்கு எங்கேயோ வெளிநாட்டைத் தேடவேண்டியதில்லை. வடக்கில் உள்ள மாநிலங்களைவிடத் தெற்கில் உள்ள மாநிலங்களில்… ஐ.நா சபையின் மனிதவளக் குறியீடு, பெண்களுக்கான அன்றாடச் சுதந்திரம் ஆகியவை மேம்பட்டே உள்ளன. எடுத்துக்காட்டாக, வடக்கில் பெரும்பாலான பெண்களுக்கு 18 வயதுக்குள் திருமணம் முடிக்கப்படுகிறது. தெற்கில் உள்ள சில மாநிலங்களில் 18 வயதுக்கு முன் திருமணம் செய்துவைக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை 15 சதவிகிதம் குறைவாக உள்ளது. இதைப்போலவே பெண்களின் கல்வியறிவு, வேலை செய்யும் பெண்களின் எண்ணிக்கை ஆகியவற்றில் வடக்கைவிடத் தெற்கு வெகுவாக மேம்பட்டிருப்பதைக் காணமுடியும். (வடக்கில் வேலைக்குச் செல்லும் பெண்கள் 36 சதவிகிதம், தெற்கில், கிட்டத்தட்ட 50 சதவிகிதம்.) இத்தகைய முக்கியமான பொருளாதார, சமூக வேறுபாடுகளுக்குக் காரணமாக, மையமாக அமைவது என ‘வடக்கு – தெற்கு வேறுபாடு’ என நாம் கருதலாம். இப்படிப்பட்ட வியப்பைத் தரும் வேறுபாட்டுக்குப் பின்னால்… ஆரம்பப் பள்ளிப் படிப்பைக்கூட முடிக்காத பெரியார் ஈ.வெ.ரா-வின் பங்களிப்பு மகத்தானதாக இருக்கிறது.

பெரியார், இந்தியா முழுக்கப் பார்ப்பன எதிர்ப்புச் செயல்பாட்டாளராக, பகுத்தறிவாளராக, கேட்டார் பிணிக்கும் தகைமை கொண்ட சொற்பொழிவாளராக அறியப்பட்டார். காந்தியின் காங்கிரஸ் இயக்கத்தில் இணைந்த பெரியார், பின்னர் வாழ்நாள் முழுக்கக் காந்தியை எதிர்ப்பவராக மாறினார். அடக்குமுறைகளுக்கு அஞ்சாத, பிம்பங்களை, மூடநம்பிக்கைகளை விடாமல் தகர்ப்பவராக அவர் இயங்கினார். 1920-களில் பெரியார் திராவிடச் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார். அவரின் தொண்டர்கள் ஈ.வெ.ரா-வை, ‘பெரியார்’ என அழைத்தனர். மகத்தான மனிதர் எனப் பொருள் தரும் அந்தப் பட்டம், ‘மகத்தான ஆத்மா’ எனப் பொருள் தரும், ‘மகாத்மா’ எனும் காந்தியின் பட்டத்தைத் தாக்கும் நோக்கத்தோடு, ஈ.வெ.ரா-வுக்கு வழங்கி வந்தது. எப்போதும் தேர்தல்களில் நிற்கவில்லை என்றாலும், நவீன தமிழ் அரசியலில் தன்னுடைய ஆழமான முத்திரையைப் பெரியார் பதித்திருக்கிறார். அவரின் இயக்கத்தை அடியொற்றி வந்த கட்சிகளே தமிழகத்தை அரை நூற்றாண்டு காலமாக ஆள்கின்றன. தேசிய அளவில், தமிழ் மொழியைத் தூக்கிப் பிடித்து, இந்தி திணிப்பை எதிர்த்த அவரின் அரசியலின் நீட்சியாக விடுதலைக்குப் பிந்தைய இந்தியாவின் மொழிப்பன்மையைக் காக்கும் சட்டங்கள் அமைந்தன. சாதி குறித்த அவரின் பார்வை, இந்திய விடுதலைக்குப் பிந்தைய காலத்தில் இடஒதுக்கீட்டுக்கான சட்டத் திருத்தத்துக்கு உகந்த சூழலை ஏற்படுத்திக் கொடுத்தது. தன்னுடைய சமகால அரசியல் தலைவர்களில் இருந்து வேறுபட்டு, பெண் விடுதலைக்கான குரலை ஆணாதிக்கத்தின் எந்தச் சுவடும் இல்லாமல்… அவர், கம்பீரமாக எழுப்பினார். பெண்களின் எழுச்சியை அடக்கி ஒடுக்கும் இந்தியக் குடும்பங்களின் ஆணாதிக்கப் போக்கைக் கடுமையாக அவர் சாடினார்.

பெரியார், ஆண்களின் கால்களுக்குக் கீழே கிடந்து தன்னையே தியாகம் செய்யும் பெண்களைக் கற்புக்கரசிகளாகக் கொண்டாடும் வடமொழிக் காப்பியங்களின் முட்டாள்தனத்தைச் சாடினார். பெண் கல்வி, காதல் திருமணங்கள், திருமண உறவு பொருந்தி வராவிட்டால் விவாகரத்து, பெண்களின் சொத்துரிமை எனப் பலவற்றுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்தார். எல்லாவற்றுக்கும் மேலாகப் பெண் தன்னுடைய அக வாழ்க்கை, குழந்தை பெறுதல் ஆகியவற்றில் சுயமாக இயங்க வேண்டும் என வலியுறுத்தினார். ‘ஆண்மை அழியவேண்டும்’ என முழங்கிய கட்டுரையில், இப்படி எழுதினார்: ‘எங்காவது, பூனைகளால் எலிகளுக்கு விடுதலை உண்டாகுமா; எங்காவது, நரிகளால் கோழிகளுக்கு விடுதலை உண்டாகுமா; எங்காவது, முதலாளிகளால் தொழிலாளிகளுக்கு விடுதலை உண்டாகுமா; எங்காவது, வெள்ளைக்காரர்களால் இந்தியர்களுக்குச் செல்வம் பெருகுமா; எங்காவது, பார்ப்பனர்களால் பார்ப்பனர் அல்லாதவர்களுக்குச் சமத்துவம் கிடைக்குமா என்பதை யோசித்தால்… இதன் உண்மை விளங்கும். அப்படி ஒருக்கால், ஏதாவது ஒரு சமயம்… மேற்படி விஷயங்களில் விடுதலை உண்டாகிவிட்டாலும்கூட ஆண்களால் பெண்களுக்கு விடுதலை கிடைக்கவே கிடைக்காது என்பதை மாத்திரம் உறுதியாய் நம்பலாம்’.

பெரியார் இயங்கிய பகுதியின் கலாசாரப் பின்புலம், வடக்கைவிட மேம்பட்டதாகப் பெண்கள் சார்ந்து இருந்தது. எண்ணற்ற வீர மங்கைகள், சக்திமிகுந்த பெண் தெய்வங்கள், குறைந்த இனப்பெருக்க அளவு, சில சமூகங்களில் நிலவிய குடும்பக் கட்டுப்பாட்டுக் கலாசாரம் என வடக்கைவிடச் சாதகமான சூழல் தமிழகத்தில் நிலவியது. இவை வடக்கும், தெற்குமான வேறுபாட்டில் முக்கியப் பங்காற்றின எனலாம். என்றாலும், பெரியார் என்கிற முரட்டுத்தனம் மிக்கச் சிலை உடைப்பாளரை, குத்திக் கிழிக்கும் நாவன்மை கொண்டவரை, தகிக்கும் அறிவு கொண்டவரைப் பற்றி மென்மேலும் வாசிக்கையில், என் மனதில் ஒரு கேள்வி சூழ்கிறது. இந்தியாவின் பிற பகுதிகளில் பெரியாரைப் போன்ற தலைவர்கள் எழுந்திருந்தால்… அதே நாட்டில் பெண்களின் நிலைமை இன்னமும் மேம்பட்டதாக இருந்திருக்குமே என்கிற ஆதங்கமே அது.

‘கடவுள் இல்லை… கடவுள் இல்லை…
கடவுள் இல்லவே இல்லை!
கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்…
கடவுளை பரப்பியவன் அயோக்கியன்…
கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி!’

– என்கிற வரிகளோடு தன்னுடைய சுயமரியாதை கூட்டங்களைத் தொடங்குவதைப் பெரியார் வழக்கமாகக் கொண்டிருந்தார். பெரியார் கருஞ்சட்டையில், அடங்காத வெண்தாடியோடு, தூய வெண் மண்டை சுரப்போடு காட்சியளிக்கும் காணொளியைக் காண்கிறேன். அதில், அவருக்கு அருகில்… ஒரு சிறிய நாய் அமர்ந்திருக்கிறது. பிராமணர்கள், நாயை தூய்மையற்ற ஒன்றாகக் கருதுவார்கள். அவர்களை விரட்டுவதற்காக… பெரியார், நாய் ஒன்றை அருகில் வைத்திருப்பதைப்போல எனக்குத் தோன்றுகிறது. பெரியார் எல்லையில்லாத ஆற்றலைப் பல தளங்களில் கொண்டவராகத் திகழ்ந்தார் என்றாலும், அவர் விளங்கிக்கொள்ள முடியாத, குழப்பும் மொழியில் மக்களிடம் உரையாடியவர் இல்லை. எவையெல்லாம் பகுத்தறிவுக்கு எதிரானது என அவர் நம்பிய அனைத்தையும் அவர் கடுமையாகச் சாடினார். சாதி, மதம் என எதுவும் அவரின் தாக்குதலில் இருந்து தப்பவில்லை.

பெரியார், காந்திக்குப் பிறகு 10 வருடங்கள் கழித்துப் பிறந்தார். அவர், ஆடை உற்பத்திக்கு பெயர் பெற்ற கோவை மாவட்டத்தின் ஈரோட்டில் வளர்ந்தார். அவரின் சாதி… விவசாயிகள், வியாபாரிகள் நிரம்பிய இடைநிலை சாதியாகும். செல்வவளம் மிகுந்த வியாபாரியான அப்பாவின் அரவணைப்பில் வளர்ந்த பெரியார்…. நல்ல வீடு, கூப்பிட்ட குரலுக்கு ஓடிவரும் வேலைக்காரர்கள் என்று செழிப்பான சூழலில் வளர்ந்ததால், இளம்வயதில் பெரிதாக அவமானங்களை எதிர்கொள்ளவில்லை. என்றாலும், அவர் சற்றே புரட்சிகர மனப்பான்மை கொண்டவராக அப்போதே திகழ்ந்தார்.

தனக்கு வடமொழி சொல்லித்தர அப்பாவால் நியமிக்கப்பட்ட சாதுக்கள், பிராமணக் குருக்கள் ஆகியோரை அவர் கேள்விகளால் துளைத்து எடுப்பார். பெரியாரின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் வீட்டுக்கு வருவதையே அவர்கள் நிறுத்திக்கொண்டார்கள். அவர்களின் போதனைகள் பெரியாரை ஈர்க்கவில்லை. எனினும், ஓர் இந்துவாகப் புண்ணியத்தலமாகக் கருதப்பட்ட காசிக்கு அவர் யாத்திரை போனார். 30 வயதை நோக்கி நடைபோட்டுக் கொண்டிருந்த பெரியாருக்கு தெளிவையும், திறப்பையும் தரும் காசியின் நிகழ்வுகள் அமைந்தன. அங்கு நடந்தவை குறித்து அவர் அடிக்கடி எழுதவும், பேசவும் செய்தார். தன்னுடைய தந்தை, பிராமணர்களுக்கு என்று நடத்திய பிரமாண்ட விருந்தை எதிர்த்ததால் ஏற்பட்ட பிணக்கில்… அவர் காசிக்குப் போனார். பணம் பிடுங்கும் காசியின் புரோகிதர்களின் போக்கும், பிராமணர் அல்லாதவர் மீது அவர்களுக்கு இருந்த வெறுப்பும் அவரைக் கடும் கோபத்துக்கு ஆளாக்கின. பெரியாரின் சாதியின் காரணமாகக் காசியின் எந்த மடத்திலும் அவருக்கு ஒரு வாய்ச் சோறுகூடக் கிடைக்கவில்லை. பிதிர்க்கடனுக்கு இடப்பட்ட உணவு இலைகளை வழித்துத் தின்னும் கொடிய நிலைக்கு அவர் காசியில் ஆளானார்.

அந்த அனுபவம், பரவலாக நம்பப்படுவதற்கு மாறாக… உடனே பெரியாரை மாற்றிவிடவில்லை. பிராமணர்கள் மீது தீப்பொறிபோல ஒரு தனிப்பட்ட கோபத்தை, அது பெரியாரின் மனதில் விதைத்தது. தென்னிந்தியா குறித்துச் சிறப்பான ஆய்வுகளை மேற்கொண்ட கேம்பிரிட்ஜ் பேராசிரியரான டேவிட் வாஷ்ப்ரூக் ஒன்றை கவனப்படுத்துகிறார். 1880-களில் இருந்தே சென்னையின் ஆளுமைகள்… இந்து மத நம்பிக்கைகளை நவீனம், அறிவியல் பார்வையோடு இணைக்க முடியுமா என்று தொடர்ந்து விவாதித்தனர். அன்னிபெசன்ட்டின் தியாசபிகல் இயக்கம், அதற்கான வாய்ப்பை வழங்கியது; கிறிஸ்தவ மிஷனரிக்களின் மதமாற்ற முயற்சிகளைத் தர்க்கரீதியாக அது எதிர்கொண்டது; பிராமணிய இந்து மதத்துக்கு அறிவியல் விளக்கத்தை அந்த இயக்கம் தந்தது; இது, தெற்கின் ஆதிக்க சாதி ஆட்களுக்குக் கடவுள் காட்டிய வழியாகத் தோன்றியது; தங்களுடைய சாதி, மத நம்பிக்கைகளை நவீனப்போர்வையில் மறைத்துக்கொள்ள வசதியான வாய்ப்பாக அன்னிபெசன்டின் இயக்கம் அமைந்தது. ஆதிக்கச் சாதியைச் சேராத பெரியாருக்குக் காப்பாற்றிக்கொள்ள எந்தச் சாதிப் பெருமையும் இல்லை. ஆகவே, முன்முடிவுகள் இல்லாமல் பகுத்தறிவோடு இயங்கினார். ‘எனக்குக் கடவுளோடு எந்தத் தகராறும் இல்லை. அவரை நான் நேரில் பார்த்ததுகூட இல்லை எனப் பெரியார், எள்ளல் ததும்பப் பேசுவார்’ என்கிறார் தமிழகத்தின் மிக முக்கியமான பண்பாட்டு வரலாற்று ஆசிரியரான ஆ.இரா.வேங்கடாசலபதி. பெரியாரின் வாழ்க்கை வரலாற்று நூல் ஒன்றை தற்போது சலபதி எழுதிக்கொண்டிருக்கிறார்.

பெரியார் தொடர்ந்து பகுத்தறிவோடு இயங்குவதற்கு அவரின் பொருளாதாரச் சூழலும் உதவியது. மகாவீரர், புத்தர் போலப் பெரியாரும் பிராமணியத்தைக் கடுமையாக எதிர்த்தார். அவர்களைப்போலப் பெரியாரும் செல்வவளம் மிகுந்த குடும்பத்தில் இருந்தே எழுந்தார். பெரியாரும் புத்தர், மகாவீரரைப்போல மேல் சாதி அடுக்கில் இருந்து எழுந்து மக்களைப் பிளவுபடுத்தும் இந்தியாவின் பழைமையான சாதி அமைப்பைச் சாடினார். பெரியாரைப்போலப் பிராமணர்களை, அவர் காலத்தில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த யாரேனும் சாடியிருந்தால் ஆதிக்கச் சாதியினர் கொன்றிருப்பார்கள்.

1920 – 1930-களில் பெரியார் தெருக்களில் இறங்கி, எதிர்க்குரல் எழுப்பும் தலைவராக இருக்கவில்லை; காசியில் இருந்து திரும்பியதும் விடுதலைப் போராட்ட அலையில் அவர் ஈர்க்கப்படவும் இல்லை. மாறாக, திருமணம் செய்து குடும்பஸ்தரான பெரியார், கோவைப் பகுதியில் மிகப்பெரிய வர்த்தக நிறுவனங்களில் ஒன்றாக, தன்னுடைய குடும்பத் தொழிலை… தன்னுடைய தொழில் திறமையால் மாற்றிக் காட்டினார். நிர்வாகத் திறமைக்குப் பெயர் பெற்றிருந்த பெரியார், 1918-ல் ஈரோடு மாநகராட்சியின் தலைவராகச் சிறப்பாகச் செயலாற்றினார். இந்தியாவில் சமூகரீதியாக மிகவும் முன்னேறிய பகுதிகளில் கேரளாவின் கோட்டயம் மாவட்டம் முதன்மையானதாகும். கல்வியறிவு 90 சதவிகிதத்தைத் தாண்டிய மாவட்டமாக அது உள்ளது; புகையிலை அற்ற மாவட்டமாகத் தன்னைச் சில ஆண்டுகளுக்கு முன்னால் அறிவித்துக் கொண்டது. இந்த மாவட்டத்தின் வைக்கம் எனும் நகரில், சாலைகள் சந்திக்கும் பகுதியின் மத்தியில்… மரத்தூண்களால் ஆன ஒரு சிவன் கோயில் உள்ளது. இதை நம்பூதிரி பிராமணர்கள் கட்டுப்படுத்தி வந்தார்கள். இந்தச் சாலைகளே, 40 நெருங்கிக் கொண்டிருந்த பெரியாரை அரசியலை நோக்கி செலுத்தியது.

பல நூறு ஆண்டுகளாகத் தீண்டத்தகாதோர் எனக் கருதிய மக்கள், ஒடுக்கப்பட்ட சாதியினர் ஆகியோரை மகாதேவா ஆலயத்துக்குள்ளும், அதைச் சுற்றியிருக்கும் சாலைகளிலும் நுழையவிடாமல் நம்பூதிரிகள் தடுத்தார்கள். 1920-களில், ‘எல்லாக் கோயில்களையும் அனைத்து இந்துக்களுக்கும் திறந்துவிட வேண்டும்’ என்று திருவிதாங்கூர் சமஸ்தான மன்னரிடம் ஒடுக்கப்பட்ட சாதியினர் போராடினார்கள். தங்களின் கோரிக்கை ஏற்கப்படாவிட்டால் கிறிஸ்தவ – இஸ்லாம் மதங்களுக்கு மாறிவிடுவதாக அவர்கள் அச்சுறுத்தினர். இந்தப் போராட்டங்களின் குவிமையமாக வைக்கம் ஆலயம் மாறியது. 1924-ல் இந்தப் போராட்டத்தை நோக்கி காந்தி ஈர்க்கப்பட்டார். முதன்முறையாகத் தீண்டாமைக்கு எதிரான முழுமையான பொதுக் கிளர்ச்சியைக் காந்தி வைக்கத்திலேயே தொடங்கினார்.

இதே காலத்தில் காங்கிரஸ் கட்சியில் பிராமணர் அல்லாத தலைவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவாக இருந்தது. காங்கிரஸ், பிராமணர்கள் கட்சி என்கிற வாதத்தை எதிர்கொள்ள…. பிராமணர் அல்லாத தலைவர்களை அந்தக் கட்சி தேடிக்கொண்டு இருந்தது. செல்வவளம் மிகுந்த, நம்பிக்கை, சாமர்த்தியம் கைவரப்பெற்ற பெரியாரை வைக்கம் போராட்டத்துக்கு முன்னால்… காங்கிரஸ் கட்சியில் இணைத்தார்கள் அந்தக் கட்சியின் தலைவர்கள். வைக்கம் போராட்டத்தை வழிநடத்த பிராமணர் அல்லாத ஒரு தலைவர் தேவைப்பட்டார். பெரியார், ‘வைக்கம் வீரர்’ ஆனார்.

பெரியார், தேசிய அரசியலில் நம்பிக்கையோடு களம் புகுந்தார். தன்னைப்போலவே இடைநிலை சாதியான காந்தி காங்கிரஸ் கட்சியினைக் கட்டுப்படுத்தும் பிராமணர்களை எதிர்க்கும் தன்னுடைய திட்டத்தில் கைகோப்பார் என பெரியார் நம்பினார். விடுதலையுணர்வும், சமத்துவமும் இணைந்த போராட்டமாகக் காங்கிரஸின் போராட்டம் மாறும் என்று அவர் கனவு கண்டார். பழைமை மிகுந்திருந்த கேரளா முழுக்கப் பயணம் செய்த பெரியார், ‘கோயில் தெருக்களை மட்டும் இப்போதைக்குத் திறந்தால் போதும்’ எனும் காந்தியின் கருத்தை ஏற்க மறுத்தார். போராட்டக்காரர்களின் கோரிக்கையான கோயில் கதவுகளை அனைவருக்கும் திறந்துவிட வேண்டும் என்பதை அவர் தீவிரமாக ஆதரித்தார். கோயில்களில் வழிபடுபவர்கள் மூடர்கள் என்று சொன்னாலும் அவர்களின் சமத்துவ உரிமைக்காகப் பெரியார் குரல் கொடுத்தார்.

பெரியார் சிறைப்பட்டு இருந்தபோது, நம்பூதிரிகளோடு காந்தி மென்மையாகச் சமரசம் பேசினார். ஒடுக்கப்பட்ட சாதியினர், ‘தங்களின் கர்ம வினைப் பயனை அனுபவிக்கிறார்கள். ஆகவே, அவர்களைக் கோயிலுக்குள் விட வேண்டாம்’ என்று ஒரு நம்பூதிரி சொன்னபோது, ‘கடவுளின் இடத்தை எடுத்துக்கொண்டு அவர்களுக்குத் தண்டனை தர நாம் யார்’ என காந்தி வினவினார். 1925-ல் ஒரு சமரசத்துக்குத் திருவிதாங்கூர் மகாராணி ஒப்பினார். கோயிலைச் சுற்றியிருக்கும் சில சாலைகள் ஒடுக்கப்பட்ட சாதியினருக்குத் திறக்கப்படும். அதே சமயம், கோயில் வளாகம், உட்பிரகாரம் ஆகியவற்றுக்குள் அவர்களுக்கு அனுமதி இல்லை என்பதே அது. கோயில் நுழையும் கனவு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு 1936-ல்தான் கிட்டியது.

காங்கிரஸ் கட்சிக்கு வைக்கம், சத்தியாக்கிரகம் மாதிரி போராட்டம் ஆனது. பழைமையின் கதவுகளைக் கட்டுடைத்த போராட்டம் அது எனக் காங்கிரஸ் மகிழ்ந்தது. மேல்மட்டத்தில் மக்களை மோசம் செய்யும் பணி அது என்பது பெரியாரின் கருத்து. காந்தி ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமையை விட்டுகொடுத்துவிட்டார் என பெரியார் கருதினார். அடுத்த இரண்டு வருடங்களில்… தன்னுடைய வாழ்நாள் எதிரியாக மாறப்போகும் காந்தி, காங்கிரஸ் ஆகியவற்றை விட்டு விலகினார். குடும்பப் பணத்தைக் கொண்டு சுயமரியாதை இயக்கத்தைத் திராவிட மொழிகள் பேசப்படும் தெற்குப் பகுதியில் தொடங்கினார். அவரின் கொள்கைகள், செயல்கள் பெரும்பாலும் காந்திக்கு முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது.

காந்தியும், அவரின் தொண்டர்களும் வெள்ளை உடையை அணிந்தார்கள் என்றால்… பெரியார், தன்னுடைய தொண்டர்களைக் கருஞ்சட்டை அணியச் செய்தார்; காந்தி, தன்னுடைய தொண்டர்களின் மத நம்பிக்கைகளைக் கருத்தில்கொண்டே பேசினார்; பெரியார், தன்னுடைய பேச்சை கேட்பவர்களை முட்டாள் என்று அழைத்தார்; அவர்களின் நம்பிக்கைகள், சாதிச் சடங்குகள் ஆகியவற்றை அவமானப்படுத்தினார்; அந்த மக்களின் கடவுள், சிலைகள் ஆகியவற்றைச் செருப்பால் அடிப்பதாக மிரட்டினார். காந்தி, ஒரு தேசிய இயக்கத்துக்குக் கனவு கண்டார் என்றால்… பெரியார், தனித் திராவிட நாட்டைத் தனது இலக்காகக் கொண்டார்.

சுயமாக எழும் எண்ணற்ற தலைவர்களைப்போலப் பெரியாரின் கருத்தாக்கங்களுக்கான வேர்களைத் தேடுவது வீணானது. பெரியாரின் கடிதங்கள், குறிப்புகள் ஆகியவற்றோடு பல ஆண்டுகளைச் செலவிட்ட பேராசிரியர் ஆ.இரா.வேங்கடாசலபதி, பெரியார் தன்னுடைய சொந்த கருத்துக்கள் அல்லாதவற்றைக் குறிப்புகளோடு வெளியிட்டதைக் கவனப்படுத்துகிறார். ‘பெரும்பாலான கருத்துக்கள் பெரியாரின் அசலான சிந்தனைகள்’ என்கிறார், அவர். பெண்ணுரிமையில் தீவிரத்தன்மை கொண்டவராக இருக்க… ஒரு புத்தகமே பெரியாருக்கு தூண்டுகோலாக அமைந்தது. 1927–ல் வெளிவந்த, புத்தகம் ஒன்றால் பெரியாரின் சிந்தனை செதுக்கப்பட்டது. காந்தியும், காங்கிரஸ் கட்சியும் வெறுத்த கேத்தரின் மேயோவின், ‘மாதர் இந்தியா’ நூல் அது.

அந்த நூல் எப்படி இந்திய வாழ்க்கை முறை, குறிப்பாக இந்து பாரம்பர்யம் பெண்களைச் சுரண்டுகிறது என மேயோ விளக்கினார். மேயோ, தன்னுடைய மறுப்பு எழுப்ப முடியாத வாதத்துக்கு ஆதரவாகக் குழந்தைத் திருமண எண்ணிக்கை, பாலியல் வியாதிகள், விதவைகள் நடத்தப்படும் விதம், 14 வயதுக்கு முன்னால் திருமணம் செய்வதை நியாயப்படுத்தும் பெண்ணின் பெற்றோர் எனப் பலவற்றைக் குறித்து அவர் பதிவுசெய்தார். சமூகச் சீர்திருத்தத்தைச் சில காங்கிரஸ் தலைவர்கள் வேகமாக முன்னெடுத்தபோது மெதுவாகப் பயணிக்கலாம் எனச் சில தலைவர்கள் கருதினார்கள். மேயோ, பிரிட்டிஷ் உளவுத்துறைக்கு வேலை பார்த்தார் என்று இப்போதுதான் தெரியும். பெண்களைக் கண்ணியமாகக் காக்கும் மதம் இந்து மதம் என்று காங்கிரஸ் தலைவர்கள் மேயோவின் புத்தகத்தைத் துச்சமாகக் கருதினார்கள்.

பெரியார், ‘மதர் இந்தியா’ நூலின் கருத்துகளை வேறு விதமாக அணுகினார்; பெரியார், இந்து மதத்தின் மீதான இத்தகைய தாக்குதலில் ஆனந்தமடைந்தார்; அதே சமயம், ஐரோப்பாவில் எழுந்த பெண்ணிய இயக்கங்களைக் குறித்துக் கவனமாக பெரியார் தெரிந்துகொண்டார். அதன் விளைவாக, பல்வேறு சமூகப் பிரச்னைகள் குறித்த அவரின் புரிதல் விரிவடைந்தது. 1920-களில் இருந்தே சுய மரியாதை இயக்கத்தின் பரப்புரையில் இந்தியப் பெண்களின் உரிமைகள் முக்கியமான இடத்தைப் பெற்றன. ஒளிவு மறைவில்லாத, வெற்று அலங்காரங்கள் அற்ற, கொந்தளிப்பை பெருக்கெடுக்கச் செய்யும் தன்னுடைய உரைகளாலும், ‘விடுதலை’ இதழ் எழுத்துகளாலும் பெண்ணுரிமையைப் பெரியார் உயர்த்திப் பிடித்தார்.

 

நூற்றாண்டுகளாக வழங்கிவந்த தமிழ் நாட்டுப்புறப் பாடல்களில், சமயங்களில் பெண்கள் ஆண்களின் ஏவலுக்கு இயங்கும் அடிமைகளாக, அவர்களின் குழந்தைகளை வளர்க்கும் ஆயாக்களாக மட்டும் தாங்கள் பார்க்கப்படுவதை எதிர்த்துப் பாடினார்கள். மணமான பெண்கள், கைம்பெண்கள் ஆகியோருக்குச் சொத்தில் உரிமையில்லாத கொடுமையைப் பல்வேறு பாடல்கள் பதிகின்றன. (காளைபோல மகன் ஒருத்தன் கருப்பையில பூத்திருக்கலாம்… கண்மணியே, கட்டிவெச்ச சொத்தெல்லாம் கலையாம வந்திருக்கும், மதுரை மன்றத்தில நியாயம்தானே கிடைச்சிருக்கும் கண்மணியே). இத்தகைய மோசமான அடக்குமுறைகளின் பின்னணியில் ஓரளவுக்குத் திருமணத்துக்குப் பங்கிருப்பதைப் பெரியார் கண்டார்; திருமணங்கள் பெண்களை அடிமைப்படுத்தும் அயோக்கியமான வேலையைச் செய்வதை அவர் சாடினார்; ஒரே சாதியின் மூத்தோர்களிடையே நிகழும் அன்புக்கு இடமில்லாத பண்டமாற்று என இவற்றைப் பார்த்தார். இந்தத் திருமணங்களில் பெண்களின் (பெரும்பாலும் பெண் குழந்தைகள்) கருத்து, கனவுகளுக்கு இடமில்லை.

பெரியாரின் அசரவைக்கும், போலிப் பூச்சுகள் இல்லாத மேடைப்பேச்சு அவரின் இயக்கத்தை நடுத்தர வர்க்கத்தைத் தாண்டி அடித்தட்டு மக்களிடமும் கொண்டுபோய்ச் சேர்த்தது. நடுத்தர வர்க்கம் அவரின் பகுத்தறிவுக் கொள்கைகளை எளிதில் உள்வாங்கியிருக்கும். எனினும், பெரியார் அடித்தட்டு மக்களை நோக்கி தன்னுடைய அரசியலை கவனப்படுத்தினார். தமிழகத்தில் 1928 அல்லது 1929-ல் தொடங்கி… பெரியாரின் ஆசியோடு ஊரகப் பெண்கள், ஆண்கள் செய்த கலப்புத் திருமணங்கள் பெரும்பாலும் சுயமரியாதை திருமணங்களாகின. இந்தத் திருமணங்கள் ஐயர் இல்லாமல், வடமொழி மந்திரங்கள் இல்லாமல் நடந்தேறின. பல நாட்கள் நடக்கும், அயர்ச்சியைத் தரும் பாரம்பர்ய திருமணங்களைப்போல அல்லாமல் விரைவாக, எளிமையாகப் பெரியாரின் வழிகாட்டுதலில் இந்தத் திருமணங்கள் நடைபெற்றன. தேவையில்லாமல் திருமணம் என்கிற சடங்குக்கு வாரியிறைக்கும் பணத்தைத் தம்பதிகளுக்குப் பிறக்கப்போகும் குழந்தைகளின் கல்விக்குச் செலவு செய்யலாம் என பெரியார் வலியுறுத்தினார். அதே சமயம், இந்தச் சுயமரியாதை திருமணங்கள், கணவன் – மனைவி இடையேயான கலவி என்பது வெறும் பிள்ளைப்பேறுக்காக மட்டுமே எனப் போலியாகப் பேசவில்லை.

அதிகாரப்பூர்வமாகச் சுயமரியாதை இயக்கத்துக்கு ஐந்து குறிக்கோள்கள் இருந்தன: கடவுள் ஒழிய வேண்டும்; மதம் ஒழியவேண்டும்; காந்தி ஒழியவேண்டும்; காங்கிரஸ் ஒழியவேண்டும்; பார்ப்பான் ஒழியவேண்டும். ஆணாதிக்கத்தை ஒழிப்பது இரண்டாம்பட்சமாக ஆரம்பகாலத்தில் இருந்தது. காலப்போக்கில், மணப்பெண் – மணமகன் இருவரின் சமத்துவமும் வெளிப்படையாக அங்கீகரிக்கப்பட்ட சுயமரியாதை திருமணங்கள் அந்த இயக்கத்தின் அடையாளங்கள் ஆகின. பிராமணர்கள் நடத்திய குடும்பச் சடங்குகளின் மீது கட்டமைக்கப்பட்டு இருந்த இந்து மதச் சமூகத்தின் அடித்தளத்தை இவை அசைத்துப் பார்த்தன. இந்தத் திருமணங்கள் பெரியாரின் கொள்கைகளைக் கிராமங்கள்தோறும் பரப்பின; விளக்கின. இவருடைய பகுத்தறிவு விவாதங்கள், ஆண் – பெண் இடையே ஒளிவுமறைவற்ற உரையாடல்கள் ஆகியவற்றுக்கும் உதவின.

பெரியாரின் பார்வையில் சாதியை நிலைநிறுத்தும், ஏற்பாட்டுத் திருமணங்கள் பெண்களிடையே நிலவும் பரவலான கல்வியறிவு இன்மையைப் பலப்படுத்தி, நீடிக்கச் செய்தன. அறியாத அயலாரிடம் பெண்ணைத் திருமணம் செய்துவைத்த பெரியவர்கள்… தங்களுடைய பெண் முட்டாளாக, உதவாக்கரைகளாக இருப்பதில் கவனமாக இருந்தார்கள் என்பதை பெரியார் சுட்டிக்காட்டினார். இதற்கு மாறாகப் பெண்கள் கல்வியிலும், விளையாட்டிலும் தேர்ச்சிப் பெறவேண்டும் என அவர் முழங்கினார். ‘மணப்பந்தல்களில் பெண்களை அடைக்காமல்… மைதானங்களில் அவர்களை இயங்கவிட வேண்டும்’ என்றார். பெண்கள் வளர்ந்த பின்பு, தங்களுக்குப் பிடித்தமான ஆணைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும்; அதேபோல, தாங்கள் எப்போது குழந்தை பெறவேண்டும் என்பதைத் தாங்களே முடிவு செய்ய வேண்டும் என்று பெரியார் அறைகூவல் விடுத்தார். பெரியார் விடுத்த அறைகூவல்… இன்றைக்கு இருக்கும் கருத்தடை, குடும்பக் கட்டுப்பாடு பிரசாரங்கள் போன்றது அல்ல. அவர்… பெண்கள், ஆண்களின் விடுதலை சார்ந்து பேசினார். பாலியல் வாழ்க்கை, வாழ்வின் பிற அங்கங்களில் ஆணும், பெண்ணும் தங்களுக்கான விடுதலைவெளியை கொண்டிருக்க வேண்டும் என்கிற நோக்கத்தோடு அவர் இயங்கினார்.

தமிழ்ப் பத்திரிகைகள், ஒழுக்கக்கேட்டை வளர்ப்பதற்காகப் பெரியாரைச் சாடின. பெரியார், ஒரு திருமணத்தில் பேசியபோது, அசராமல் இப்படிப் பதில் தந்தார்: ‘மனைவி, கணவனை மதிக்க வேண்டும் என்றால்… ஏன் கணவன், மனைவியை மதிக்கக் கூடாது? மனைவிதான் புகுந்த வீட்டின் உறவுகளை மதிக்க வேண்டுமென்றால்… ஏன் மனைவி வீட்டு உறவுகளை, கணவன் மதிக்கக் கூடாது? மனைவி, கணவனுக்குச் செய்வதை… கணவன், மனைவிக்குத் திருப்பிச் செய்ய முடியாது என்றால்… பெண் என்பவள் வீட்டு வேலைக்கும், உடல் சுகத்துக்கும் மட்டுமே ஆனவள் என்று ஆகவில்லையா? இப்படிப்பட்ட திருமணங்கள் நாட்டில் அரை நொடிகூட நீடித்திருக்க அனுமதிக்கக் கூடாது’.

1920-களில் சோவியத் ரஷ்யாவில் நிகழ்ந்த சமூகச் சோதனைகளில் பெரியார் ஆர்வம்கொண்டார். 1931-ல் ஐரோப்பாவுக்கு பெரியார் பயணம் செய்தார். அங்கே, ஒரு வருடகாலம் செலவழித்த பெரியார்… மைய அரசியலைவிட்டு அப்போது விலகியிருந்தார். பெரியார், பெர்லினில் உள்ள நிர்வாண கிளப்களில் ஆனந்தமாக நேரத்தைச் செலவழித்தார். தன்னுடைய அதிகாரப்பூர்வ வாழ்க்கை வரலாற்றில் அந்தப் படங்கள் இடம்பெற வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். ஆனால், அது ஏற்கப்படவில்லை. ஐரோப்பிய பயணத்துக்குப் பின்னர், பெரியார்… அறிவியல், தொழில்நுட்பம், கருத்தடை ஆகியவை இந்தியர்களின் முன்னேற்றத்துக்குத் தேவை என்கிற தன்னுடைய நிலைப்பாட்டில் மேலும் உறுதிபூண்டார்.

சோவியத் அரசின் விவாகரத்துச் சார்ந்த சட்டங்கள், குழந்தைகளுக்கு அரசு தரும் நிதியுதவி ஆகியவை எப்படிக் குடும்பத்தின் பண்பை மாற்றுகின்றன; அவை, எப்படிக் குடும்பத்தின் மீதான சார்பைக் குறைக்கின்றன என்பனவற்றைப் பற்றிக் குறிப்பாக ஆர்வம் கொண்டார். தொழிலாளர்களுக்கு நிறுவனத்தில் பங்கு தரும் திட்டங்கள், கூட்டு நிறுவனங்கள் முதலிய சோவியத் பொருளாதாரக் கருத்தாக்கங்களால் பெரியார் ஈர்க்கப்பட்டார். தன்னுடைய குடும்பத் தொழில்களில் அவற்றை அமல்படுத்தினார். தொழிலாளிகளுக்குச் சம்பளம் தருவதற்குப் பதிலாக லாபத்தில் பெரியார் பங்கு தந்தார்.

அரசியல் பதவிகளுக்கு ஆசைப்படாமல் சமூகத்தின் மனப்போக்கை மாற்றி, பொதுப் புத்தியை செழுமைப்படுத்தும் முயற்சிகளில் பெரியார் தன்னுடைய வாழ்நாள் எதிரியான காந்தியை பின்பற்றினார். 1948-ல் பெரியார், தன்னைவிட மிகவும் இளையவரான மணியம்மையைத் திருமணம் செய்துகொண்டபோது… அவரின் தொண்டர்கள் படை பெருமளவில் குறைந்தது. சில சுயமரியாதை இயக்கத்தினர், பெரியாரின் திருமணத்தைச் சுற்றி ஒரு சூழ்ச்சியைக் கட்டமைத்து, திராவிடர் கழகத்துக்கு மாற்றாக… தி.மு.க-வை ஏற்படுத்தினார்கள். பின்… அதிலிருந்து பிரிந்து, அ.தி.மு.க உருவானது. இந்த இரண்டு கட்சிகளும் அரை நூற்றாண்டு காலம் தமிழக அரசியலில் கோலோச்சுகிறது.

எனினும், பெரியார் விடுதலைக்குப் பிந்தைய இந்தியத் தேர்தல் அரசியலில் குறிப்பிடத்தகுந்த செல்வாக்கைச் செலுத்தினார். பல ஆண்டுகளுக்கு வேட்பாளர்களுக்கு நட்சத்திர பரப்புரையாளராக அவரே திகழ்ந்தார். அவரின் வெகுமக்கள் ஈர்ப்பு… அவரை, ‘கிங்மேக்கராக’ வைத்திருந்தது. ஆகவே, அரசின் மீதும், சட்ட உருவாக்கத்திலும் குறிப்பிடத்தகுந்த செல்வாக்கை அவர் எந்தப் பொறுப்புமின்றிச் செலுத்த முடிந்தது அவருக்கு ஏற்றதாக இருந்தது.
டாக்டர் அம்பேத்கரைப்போலப் பிராமணியம் மீதான தன்னுடைய விமர்சனத்தை இந்தியா முழுமைக்கும் உரியதாகப் பெரியார் முன்வைக்கவில்லை. மாறாக, அவரின் அரசியல் திராவிடப் பண்பாட்டில் ஊறியதாக இருந்தது. தமிழ்ப் பண்பாட்டில் அவரின் கருத்துக்கள் பரவ ஆரம்பித்த பின்பு… புனிதங்களைப் பொசுக்கிய பெரியாரே, புனிதப் பசுவாக மாற்றப்பட்டுவிட்டார். பெரியாரை, 20 வருடங்களுக்கு முன் ஓரங்கட்டப் பார்த்த அரசியல்வாதிகளே, அதற்குப் பின்னால்… வேறு வகையில் நடந்துகொண்டார்கள். பெரியார் 1973-ல் மரணமடைந்தார். பேராசிரியர் டேவிட் வாஷ்ப்ரூக், ‘பெரியாரின் வழித்தோன்றல்கள் என்று தங்களை அழைத்துக்கொள்ளும் அரசியல்வாதிகள் அவர் வெறுக்கக்கூடிய செயல்களையே மேற்கொள்கிறார்கள்’ என்கிறார்.

தெற்கில், பெண்களின் முன்னேற்றத்துக்காகப் பாடுபட்ட பெரியாருக்கு, அவரின் பங்களிப்பை மிஞ்சிய புகழ்மாலை சூட்டப்படுவதாக விமர்சிக்கிறார்கள், மக்களியல் அறிஞர்கள் மற்றும் அறிவியல் – மருத்துவ வரலாற்று ஆசிரியர்கள். அவர்களின் கவலை நியாயமான ஒன்றே ஆகும். தென்னிந்தியப் பெண்களின் உடல்நலம், மேம்பட்ட வாழ்க்கை ஆகியவை பெரியார் பிறப்பதற்கு முன்பே நிலவிய காரணிகளின் பங்களிப்பாலும் எழுந்தது என்பதை மறுப்பதற்கில்லை. அதேசமயம், உலகப் போர்களுக்கு இடைப்பட்ட காலத்தில்… தமிழகத்தில், பெண்கள் ஈன்றெடுத்த குழந்தைகளின் விகிதம் குறிப்பிடத்தகுந்த அளவு குறைந்திருந்ததை தரவுகள் காட்டுகின்றன. இதற்குப் பெரியாரின் களப்பணியும், குடும்பக் கட்டுப்பாடு சார்ந்த பரப்புரையும் முக்கியப் பங்காற்றின என உறுதியாகச் சொல்லலாம். வேறு எந்தப் பங்களிப்பையும் அவர் தரவில்லை என்று விமர்சகர்கள் சொன்னாலும், பெரியார் மக்களைப் புரட்சிகரமான கருத்துகளால் எதிர்கொண்டு, அவர்களின் மனப்போக்கை மாற்றினார். 50 வருடங்களாகப் பெருமளவு மக்கள் செல்வாக்கை நகர் மற்றும் கிராமப் புறங்களில் பெற்ற பெரியாரின் செயல்பாட்டுக்கும், பெண்களின் முன்னேற்றத்துக்கும் தொடர்பே இல்லை என்று வாதிடுவோருக்கு பெரியாரின் வார்த்தையிலேயே பதில் சொல்லலாம். ‘வெங்காயம்!’

தமிழகத்தில் பெண்களின் சமூக வளர்ச்சி தேக்கமடைந்துவிட்டதாகத் தெரிகிறது. அதன் மகத்தான கடந்தகாலச் சாதனைகளைத் தாண்டி தற்போது தொய்வைச் சந்தித்திருக்கிறது. காலங்காலமாக ஏழ்மையில் உழன்ற வட கிழக்கு மாநிலமான சிக்கிம், கடந்த மக்கள்தொகைக் கணக்கெடுப்பில், பெண்கள் கல்வியறிவில் தமிழகத்தைக் முந்தியிருக்கிறது. 2007 முதல் ஆண்களைவிடப் பெண்கள் அதிகளவில் பள்ளியில் சேர்க்கப்படுகிறார்கள். ஆண் – பெண் வேறுபாடு குறைவது, பள்ளிக்குச் செல்லும் ஆண் – பெண் விகிதாச்சாரம் மேம்படுவது ஆகியவற்றுக்குப் பல்வேறு காரணங்கள் உண்டு. எனினும், அவற்றில் முக்கியமானது நீடித்த, ஓய்வில்லாத, தீரா வேட்கை கொண்ட பரப்புரைகளும் ஆகும். பெண்ணுரிமைகளுக்காக இயங்குபவர்கள் தேர்தல்கள் வருகிறபோது மட்டும் உரிமை முரசம் கொட்டாமல் தொடர்ந்து பெரியார்போல மக்களிடம் பரப்புரை செய்ய வேண்டும். நீடித்த உரையாடல், பரப்புரை உடனே வெற்றியைத் தராது என்றாலும்… அது. காலப்போக்கில் இந்தியப் பெண்கள் குடியரசில் மாற்றத்தை நிச்சயம் ஏற்படுத்தும்.’’

தமிழில்: பூ.கொ.சரவணன்

(நன்றி: விகடன்)

 

தமிழகத்தில் மேடைப்பேச்சு!


அந்திமழை பதிப்பகம் வெளியிட்டுள்ள பேசித் தீர்த்த பொழுதுகள் எனும் மேடைபேச்சு பற்றிய நூலை வாசித்து முடித்தேன். தமிழகத்தின் அரசியல்,சமூக, பண்பாட்டு வரலாற்றில் நீக்கமற கலந்துவிட்டு மேடைப்பேச்சின் நெடிய வரலாற்றை நூற்றி சொச்சம் பக்கங்களில் நூல் அடக்க முயற்சித்து இருக்கிறது.

மேடைப்பேச்சின் வரலாறு என்பது மக்களை நோக்கிப் பேசுகிற பேச்சின் வரலாறு ஆகும். ‘நகுதக் கனரே நாடுமீக் கூறுநர்’ என வரும் தலையாங்கானத்து செருவென்ற பாண்டியனின் சொற்பொழிவு தமிழகத்தின் முதல் சொற்பொழிவு எனலாம். வள்ளுவரின் அவை அறிதல் கற்றறிந்த அவையில் பேசும் பேச்சைப் பற்றியே பேசுகிறது. வெகுமக்களிடம் பேசும் பேச்சானது பல காலம் தமிழ்ச்சூழலில் இல்லை. யாழ்ப்பாணம் வண்ணார்பிள்ளை கோயிலில் நூற்று எழுபது ஆண்டுகளுக்கு முன்னால் ஆறுமுக நாவலர் நிகழ்த்தியதே தமிழின் முதல் பொதுச்சொற்பொழிவு என்கிறார் அறிஞர் பெர்னார்ட் பேட். சைவ சித்தாந்த மகாசமாஜம் (பெருமன்றம்) தமிழ் பொதுச் சொற்பொழிவுக்கான அடுத்தக் கட்ட நகர்வை எடுத்து வைத்தது.


சைவ பெருமன்றங்கள் ஆரம்பித்து வைத்த தமிழ் மேடைப்பேச்சு வளர்ச்சியைச் சுதேசி இயக்கம் பரவலாக்கியது. தமிழில் மேடைப்பேச்சுக்கு ஒரு மாதிரியாகப் பிபன் சந்திர பால் சென்னை கடற்கரையில் நிகழ்த்திய உரை திகழ்ந்தது. பாலின் விவகார நுட்பமும், வாக்குத் திறமையும் பாரதியை கவர்ந்தன. வ.உ.சி, சுப்ரமணிய சிவா மேடைப்பேச்சால் விடுதலை உணர்வைப் பெருக்கினார்கள்.
மேடைப்பேச்சில் திரு.வி.க செந்தமிழிலும், மக்களின் தமிழிலும் உரையாடி மேடைத் தமிழை நோக்கி பலரை ஈர்த்தார். தமிழகம் முழுவதும் அறியப்பட்ட முதல் வெகுமக்கள் பேச்சாளராகப் பெரியாரின் நண்பரான வரதராஜுலு நாயுடு மாறினார். மதுரை தொழிலாளர் வேலை நிறுத்தத்துக்கு அவரின் பேச்சு அடித்தளமாக அமைந்தது (1918).

கல்கி பெரியாரின் சொற்பொழிவை இப்படி வியக்கிறார், “அவர் உலகானுபவம் எனும் கலாசாலையில் முற்றுணர்ந்த பேராசிரியர்..எங்கிருந்து தான் அவருக்கு இந்தப் பழமொழிகளும், உபமானங்களும், கதைகளும், கற்பனைகளும் கிடைக்கின்றனவோ. நான் அறியேன்.”

Image result for பெரியார் மேடை

சீர்காழியில் பெரியார் பேச வந்தார். கற்கள், மூட்டைகள் அவரை நோக்கி வீசப்பட்டன. “கல்லடிக்கு அஞ்சுபவர்கள் எழுந்து போங்கள். மற்றவர்கள் தலையில் துண்டை கட்டிக் கொள்ளுங்கள்.” என்றார். அவர் பேச பேச மக்கள் கூட்டம் பெருகியது. கூட்டம் முடிந்ததும் அந்நகரின் துணை நீதிபதி “உங்களை ஊர்மக்கள் ஊர்வலமாக அனுப்பி வைக்கிறோம்” எனக்கேட்ட பொழுது பெரியார் அதற்கு மறுத்தார் என்கிற செய்தியை தமிழேந்தியின் கட்டுரை சொல்கிறது.

அடுக்குமொழியில், எழுவாய், பயனிலைகளைப் புரட்டிப் போட்டு, அலங்காரங்கள் மிகுந்த அணி இலக்கணத்தோடு மேடையில் பேசும் புதிய பாணியை அண்ணா துவங்கி வைத்தார். அதேபோல அண்ணாவின் காலத்தில் ஒலிப்பெருக்கி வந்திருந்தது. உரக்கப் பேசியே தன் உயிர் நொந்ததாகத் திரு.வி.க நொந்து கொண்டார். ஜீவாவின் செவித்திறன் போனதில் கத்தி கத்தி பேசவேண்டிய சூழலுக்குப் பெரும் பங்குண்டு. இப்படிப்பட்ட நிலையில் ஒலிப்பெருக்கியை அண்ணா கச்சிதமாகப் பயன்படுத்தி மக்களை ஈர்த்தார். மேற்சொன்ன கட்டுரைகள் வரலாற்றாசிரியர் ஆ.இரா.வேங்கடாசலபதி கட்டுரையில் காணக்கிடைக்கின்றன.

Image result for அண்ணா பேச்சு

 

மேடைப்பேச்சில் தனக்கென ஒரு தனித்த பாணியைக் கலைஞர் கருணாநிதி அமைத்துக் கொண்டார். “இதயத்தைத் தந்திடு அண்ணா..” என அவர் தீட்டிய கவிதை மொழிப் பேச்சு பலரின் நாவில் நடமாடியது. பேராசிரியர் பெர்னார்ட் பேட் “நான் தமிழகத்தின் மேடைப்பேச்சுக்களில் பராசக்தி திரைப்படத்தின் மேடைப்பேச்சின் தாக்கத்தை அதிகமாகக் காண்கிறேன்.” என்கிற அளவுக்கு அவரின் தாக்கம் காலங்களைக் கடந்து பரவியது.

எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் ஒரு நீதிபதியோடு கலைஞர் மேடையேற வேண்டிய சூழல் வந்தது. நீதிபதி பேசி முடித்த பின்பு கலைஞரின் முறை, “நீதிபதிக்கு ஏதேனும் தீங்கு நேருமோ என அஞ்சுகிறேன்.” என்றார். அவர் எதுவும் தவறாகப் பேசவில்லையே எனக் கூட்டம் யோசித்தது. “நீதிபதி ஜப்பானை பாருங்கள், ஜப்பானை பாருங்கள் என்று அடிக்கடி சொன்னார். ஜப்பான் என்றால் உதயச் சூரியன் என்று அர்த்தம்.” என்றார் கலைஞர்.

எம்ஜிஆரின் பதினொரு ஆண்டுகால ஆட்சியில் தன்னுடைய கட்சியைத் தன்னுடைய நாவன்மையாலே கலைஞர் காப்பாற்றினார். எண்பத்தி ஆறில் உள்ளாட்சி தேர்தல்கள் வந்த பொழுது, “கம்சன் ஏழு குழந்தைகளைக் கொன்ற பின்பு எட்டாவது குழந்தையாகக் கண்ணன் எழுந்ததைப் போலத் திமுகத் தேர்தலில் வெல்லும்.” என உத்வேகப்படுத்தலை செய்து தேர்தலில் வெல்வதை உறுதி செய்தார். இவற்றையெல்லாம் வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் கட்டுரை பதிகிறது.

Image result for அண்ணா பேச்சு

எம்ஜிஆர் ஆட்சி கலைக்கப்பட்ட பொழுது அவர் எளிய தமிழில் இப்படி மக்களை நோக்கி பேசினார். “நான் என்ன குற்றம் செய்தேன். இன்னும் இரண்டரை ஆண்டு ஆட்சி காலம் பாக்கியிருக்கும் போது ஏன் என்னைப் பதவியில் இருந்து இறக்கினார்கள். நான் லஞ்சம் வாங்கினேனா? இல்லை. ஊழல் செய்தேனோ? இல்லை. அவர்கள் உங்கள் மீது தான் குற்றம் சாட்டுகிறார்கள். உங்களுக்கு என் மீது நம்பிக்கை இல்லாமல் தான் நாடாளுமன்றத்தில் அவர்களைத் தேர்ந்தெடுத்தீர்களாம். …நான் நிரபராதியா இல்லையா என்பது நீங்கள் வாக்களிப்பதில் இருந்து தெரிய வேண்டும்.: என்றது அவருக்கு வெற்றியை பெற்றுத் தந்தது.

வைகோவின் ஆளுமை ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் அவரைப் பெரும் பேச்சாளராக அடையாளப்படுத்தியது. உலக வரலாற்றை, புரட்சியாளர்களை மக்கள் கண்முன் நிறுத்தி மக்களை உணர்ச்சிக்கும், எழுச்சிக்கும் உள்ளாக்குவது அவரின் பாணியாக இருந்தது.

Image result for வைகோ

தமிழகத்து மேடைப்பேச்சு குறித்து விரிவாக ஆராய்ந்த பேராசிரியர் பெர்னார்ட் பேட் ஒரு முக்கியமான விஷயத்தைக் கவனப்படுத்துகிறார். தமிழகத்தின் மேடைபேச்சுச் செந்தமிழில் பெரும்பாலும் திராவிட இயக்கத்தால் வார்க்கப்பட்டது. எப்படி அமெரிக்காவின் கட்டிடங்கள் ரோம, கிரேக்க கட்டிடங்களின் மாதிரியில் உருவாக்கப்பட்டது. நாங்கள் ஆங்கிலேயரில் இருந்து மாறுபட்ட செவ்வியல் தன்மை கொண்டவர்கள் எனக் காட்டும் பாணியாக, அரசியலாக அது இருந்தது. அதுபோலச் செவ்வியல் தமிழைப் பயன்படுத்தித் தங்களுக்கான தனி நாட்டைத் திராவிட இயக்கத்தினர் கனவு கண்டார்கள். அதைப் பெர்னார்ட் பேட் திராவிட் செவ்வியல்வாதம் என்கிறார்.

தவம் போல மேடைப்பேச்சை அணுகி, ஒரு மேடையில் பேசியதை இன்னொரு மேடையில் பேசாத தமிழருவி மணியன்; அம்பேத்கரின் சிந்தனைகளை ஒடுக்கப்பட்ட மக்களிடம் கச்சிதமாகக் கொண்டு சேர்க்கும் தொல்.திருமாவளவன்; நையாண்டி மிகுந்த சோவின் பேச்சு; சங்கீதம் போல இழையும் குமரி அனந்தனின் பேச்சு என்று பலரைப்பற்றிய குறிப்புகள் நூலில் உண்டு.

திராவிட இயக்கம் மேடைப்பேச்சில் செவ்வியல்வாதத்தை முன்வைத்த காலத்தில் அதை எதிர்கொள்ளக் கிருபானந்த வாரியார், கீரன் முதலிய ஆன்மீக சொற்பொழிவாளர்கள் தமிழில் இருந்து புராண இலக்கியங்களைப் பிரபலப்படுத்தினார்கள். குன்னக்குடி அடிகளார் இதுவா, அதுவா என்கிற ரீதியிலான பட்டிமண்டபங்களை மக்களிடம் கொண்டு சேர்த்தார்.

பக்கங்கள்: 11௦
விலை: ரூபாய்.9௦

“சாதனைக்காக சாபங்களைக் கடக்கத்தான் வேண்டும்!” – ஊடகவியலாளரின் நம்பிக்கை உர


சாதனை

டகத் துறையில் சாதனை படைக்க சில சாபங்களை விதைத்திருக்கிறார், சுஹாசினி ஹைதர். இவர், புகழ்பெற்ற ஊடகவியலாளர். தற்போது, ‘தி இந்து’ ஆங்கில இதழின் அயலுறவு பிரிவின் ஆசிரியர். WORLD MEDIA ASSOCIATION-ஐச் சேர்ந்த மாணவர்களின் பட்டமளிப்பு விழாவில் அவர் ஆற்றிய உரையின் தமிழாக்கம் இது:

‘‘ஊடகத் துறை மாணவர்களுக்காக நிகழ்த்தப்பட்ட உரை என்றாலும் அனைவரும் வாசிக்க வேண்டிய ஒன்று.
ஊடகத் துறையில் பட்டம் பெறப்போகும் உங்களுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துகள். தற்போது அந்தத் துறையில் நிலைமை சரியில்லை என்பதும், அங்கே வேலை கிடைப்பது குதிரைக் கொம்பான காரியம் என்றும் பலர் சொல்லக் கேட்டிருக்கலாம். அவை, உண்மையே என நான் அழுத்திச் சொல்வேன்.

நான், 15 வருடங்களுக்கு முன்னால் ஊடகத் துறையில் நுழைவதற்காக… பல கனவுகளோடு அதில், காலடி எடுத்து வைத்தேன். அப்போதும் நிலைமை மோசமாகத்தான் இருந்தது. தொலைக்காட்சியில், வேலை கிடைப்பது கஷ்டம் என்பதைவிட… வேலை கிடைப்பது சாத்தியமே இல்லை என்கிற சூழல் நிலவியது. என்னை ஏழு நிராகரிப்பு கடிதங்கள் வரவேற்றன. ஒரு நிறுவனம், ‘அடுத்த வருஷம் பாத்துக்கலாம் மேடம்’ என்றார்கள். இன்னொரு நிறுவனமோ, ‘இனிமேல் தயவுசெய்து அழைக்காதீர்கள்’ என்று கறார் காட்டினார்கள். எல்லாம் முடிந்துபோனது எனத் தோன்றிய நேரத்தில்… இறுதியாக ஒரு முயற்சி செய்து பார்த்துவிடலாம் என ஒரு நேர்முகத் தேர்வுக்குச்  சென்றேன். அது, செய்தி நிறுவனமில்லை. ஓர் ஆவணப்பட நிறுவனத்தில், விற்பனைத் துறையில் வேலைக்கான நேர்முகம் அது. என்னுடைய சான்றிதழ்களுக்கு இந்த வேலையாவது கிடைத்துவிடாதா என ஆவலோடு நான் அங்குச் சென்றேன்.

என்னுடைய இதழியல் பட்டத்தை… நான், பாஸ்டன் பல்கலையில் பெற்றிருந்தேன். ஐ.நா-வில், நியூயார்க் நகரில் உள்ள சி.என்.என். நிறுவனத்தில் நான் பணியாற்றி இருந்தேன். சில காலம் சி.என்.என். நிறுவனத்தின் டெல்லி தயாரிப்பாளராகப் பணியாற்றிவிட்டு, பின்பு… அந்த வேலையிலிருந்து விலகினேன். இவற்றை எல்லாம் என்னை நேர்முகம் செய்த நபரிடம் பொறுமையாகச் சொன்னேன். அவற்றை, காதுகொடுத்து கேட்டுவிட்டு அவர் சன்னமான குரலில் என்னை நோக்கிச் சொன்னார், ‘நீங்கள் இந்த வேலைக்குத் தகுதியானவர் என்று நான் உங்களுக்குச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. நீங்கள் தன்னம்பிக்கையால் மிளிர்கிறீர்கள். இந்தப் பணியிலும் நீங்கள் மின்னுவீர்கள். இந்த வேலையை நேசிக்கவும் நீங்கள் பழகிக்கொள்ளலாம். நீங்கள் நெகிழ்வான தன்மை கொண்டவராக தெரிகிறீர்கள். எனினும், உங்கள் இதயத்தின் ஓர் ஓரத்தில் இந்த வேலையை உங்களுக்குக் கொடுத்ததற்காக என்னை வெறுப்பீர்கள். உங்களின் மனமெல்லாம் செய்தி ஊடகத்தின் மீதே உள்ளது. என்னை நீங்கள் வெறுப்பதை நான் விரும்பவில்லை. இந்த வேலையை உங்களுக்கு நான் தரப்போவதில்லை.’

என்னைப்போலவே நீங்களும் இப்படிப்பட்ட நிராகரிப்பைச் சந்திக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். எந்த வேலையின் மீது நம்முடைய மனம் காதல் கொண்டிருக்கிறது என உணர இப்படிப்பட்ட நிராகரிப்புகள் உதவுகின்றன. நீங்கள் விருப்பப்பட்டுச் சேரும் பணியில் அதைவிட்டு விலக 1,000 காரணங்கள் கொட்டிக் கிடக்கும். ஆனால், அதுதான் உங்களின் மனம் விரும்புகிற வேலை என்கிற ஒரே காரணம்தான், உங்களை அந்தப் பணியில் இயங்கவைக்கும்.

நான் பைத்தியக்காரி என்று நீங்கள் உள்ளுக்குள் சபிக்கக்கூடும். பட்டம் பெறுகிற நாளில் உங்களுக்கு வேலை கிடைக்காமல் போகட்டும் என்று நான் விரும்புவதாகச் சொல்வது உங்களுக்கு அதிர்ச்சி தரலாம். நான் அதற்கு மட்டும் ஆசைப்படவில்லை. ‘கேட்டேன், கேட்டேன்’ என உங்களுக்காக நான் கேட்கும் வரங்கள் சில உண்டு.

1. உங்களுக்கு மோசமான பாஸ் (Boss) கிடைக்க வேண்டும். உங்களை அழவைக்கும் ஒருவராக அவர், இருக்க வேண்டும். இது மிகக் கடுமையான பணி என்பதை நேர்மையாக ஒப்புக்கொள்ள வேண்டும். அடித்துப்பிடித்து, முந்திக்கொண்டு செய்தி சேகரிக்க வேண்டிய துறை இது. கலங்காத நெஞ்சம் கொண்டவராக நீங்கள் இருந்தாலே சாதிக்க முடியும். என்னுடைய முதல் இதழியல் பணிக்கால நினைவு என்ன தெரியுமா? நீதிமன்ற வளாகத்துக்கு வெளியே ஊடக வெள்ளத்தில் ஓர் ஏணியைவிட்டு தலைகுப்புற தள்ளப்பட்டதுதான். என்னுடைய மைக் என் கையிலிருந்து கீழே விழுந்து, நான் எழ கஷ்டப்பட்டுக்கொண்டு நின்ற கணத்தில் என் கேமராமேன் துளிகூட கருணை காட்டவில்லை. ‘சீக்கிரம் எழுந்துவந்து வேலையை முடிம்மா…’ என்று அவர் கத்தினார். அப்போதுதான் நான் ஓர் அடிப்படை பாடத்தை கற்றுக்கொண்டேன். வேலைக்களத்திலும், அலுவலகத்திலும் உங்களை வெளியே தள்ள முயல்கையில் முண்டியடித்து உங்களுக்கான இடத்துக்காக நீங்கள் போராட வேண்டும். அன்றைய பரபரப்பான நேர்முகத்தைத் தவறவிட்டதற்காக உங்களுடைய பாஸ், கண்டமேனிக்கு வசைபாடுவது நிகழ்ந்துவிடுமோ என அஞ்சாதீர்கள். அவர் திட்டுவதை செவிமடுங்கள், கழிப்பறைக்குச் சென்று சற்று அழுதுவிட்டு, முகத்தைத் துடைத்துக்கொண்டு அடுத்த போராட்டத்துக்குத் தயார் ஆகுங்கள். ‘பரவாயில்லை, அடுத்தமுறை பார்த்துக் கொள்ளலாம்…’ என்கிற பாஸ் உங்களுக்குக் கிடைத்தால்… நீங்கள் முன்னேறவே மாட்டீர்கள்.  

2. உச்சி வெயிலில் அலைந்து திரியும் அவஸ்தையான நாட்கள் நிறைய உங்களுக்கு வாய்க்கட்டும். இந்தவேளையில்… யாரோ ஒருவரின் நடைபாதையிலோ, யாரோ ஒருவரின் வீட்டு முன்னாலோ… அவர் வீட்டுக்குள் போவதற்கோ, வெளியே வருவதற்கோ காத்திருக்கும் கணங்கள் பல ஏற்படும். அப்போது வேகாத வெயிலில் நிற்க வேண்டிவரும். அப்படி நிற்கிறபோது, பல நண்பர்கள் கிடைப்பார்கள். கொளுத்தும் வெயிலில் செய்ய வேறு வேலையில்லாமல் வியர்த்துக் கொட்டிக் கொண்டிருக்கும் நிலையில், பிறருடன் பேசுவதுதானே ஒரே ஆறுதல்? சமயங்களில் அந்த நாளின் பரபரப்பான ஃப்ளாஷ் நியூஸ் வெகுநேரம் காத்துக்கொண்டு இருக்கும் நபருக்கே கிட்டும். கடந்த மாதம்  ஆங் சான் சூசியின் வீட்டுக்கு அதிகாலையிலேயே சென்று வெளியில் காத்திருந்தேன். எனக்கு ஃப்ளாஷ் நியூஸ் எதுவும் கிடைக்கவில்லை. மாறாக, வெளியே உலாவ வந்த சூசியின் நாயுடன் நட்பானேன். 

3. மோசமான பல சகாக்கள் உங்களுக்கு வாய்க்கட்டும். இது சாபம்போலத் தோன்றும், ஆனால், அப்படித்தான் மிகச்சிறந்த பல செய்திகள் எனக்குக் கிடைத்தன. அவர்களுக்குத் தரப்படும் பணியைச் சரியாகச் செய்யாமல் போய்… அது, நம் கைக்கு வரும்போது கச்சிதமாகச் செயலாற்ற வேண்டும். தட்டிக் கழிப்பதல்ல வெற்றி, தகிப்பான சூழலில் தங்கமாக ஒளிரவேண்டும். வாய்ப்புக் கிடைக்கும் கணத்தில் அடித்து விளையாடுங்கள். 

4. கணினியும், அலைபேசிகளும் வேலை செய்யாத இடங்களில் நீங்கள் பணியாற்ற நேரிட வேண்டும் என விரும்புகிறேன். ஆளரவமற்ற ஒரு கிராமத்துக்கு நீங்கள் செய்தி சேகரிக்கச் செல்லவேண்டும். டெட்லைன் கவலைகள் இல்லாமல், மணிக்கொரு முறை நிலவரத்தைத் தெரிவிக்க வேண்டிய நிலையில்லாமல், ஒரு செய்திக்காக மூன்று நாட்கள் அலைய வேண்டிய ஆனந்தத்தை நீங்கள் அனுபவிக்க வேண்டும். நான் மீனவர்களுக்கு உதவும் கணினி நிரல் ஒன்றைப்பற்றிச் செய்தி சேகரிக்க அதிகாலை மூன்று மணிக்கு கடலுக்குச் சென்றேன். மூன்று மணிநேரம் மீனவர்களுடன் உலாவி, அலைகளின் பேரொலியில் மனம் லயித்து, வலை முழுக்க மீன்களுடன் வருவதைக் காண நேரிட்ட அந்தக் கணத்தின் ஆனந்தம் சொல்லில் அடங்காதது. கோரமண்டல கடற்கரையில் தன்னந்தனியாக இயற்கையின் பிரமாண்டத்தைக் கண்ணுற்ற அந்தக் கணம் உன்மத்தம்! 

5. விசித்திரமான, அதிர்ச்சி தரும் நபர்களோடு நிறைய நேர்முகங்கள் உங்களுக்கு வாய்க்கட்டும். அரசியல் சரித்தன்மை மிக்க, கண்ணியமான, மென்மையான ஆளுமைகள் உங்களுக்கு எப்போதும் வெற்றி பெறுவதற்கான திண்மையைத் தரமாட்டார்கள். 

6. இன்னமும் அபாயகரமான என்னுடைய ஆசைகளை நீட்டிக்கொண்டே போக முடியும். எனினும், நான் அவ்வளவு மோசமானவள் இல்லை. உங்களைப் புரிந்துகொள்ளும் பெற்றோர்கள் உங்களுக்குக் கிடைக்கட்டும். என்னுடைய முதல் சம்பளம் போக்குவரத்துச் செலவுக்கே சரியாக இருந்தது. என்னுடைய இரண்டாவது சம்பளம் என்னுடைய அரை வயிற்று சாப்பாட்டுக்கே போதவில்லை. இங்கே கைநிறைய சம்பளத்தை உடனே வாரித்தர மாட்டார்கள். இங்கே வேலை செய்ய ஒரே காரணம், அதன்மீதான காதல்தான். உங்களின் பெற்றோர்கள் உங்களைப் பல வகைகளில் புரிந்துகொள்ள வேண்டும். 1996 ஜம்மு – காஷ்மீர் தேர்தல்கள் என் திருமணத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்னால் நடைபெற்றன. ‘நீ வீட்டுக்கு கல்யாணப் புடவை எடுக்க வராவிட்டால்… கல்யாணத்தை நிறுத்திவிடுவேன்’ என்று அம்மா என்னை அச்சுறுத்தினார். என்னுடைய திருமணத்துக்கு இரண்டு நாட்களுக்கு முன்னால்… என்னுடைய பாஸ், ஆப்கானில் அதிபர் நஜிபுல்லா தூக்கிலிடப்பட்ட நிலையில் அங்குச் சென்று
பணியாற்றச் சொன்னார். நான் அதை ஏற்கவில்லை. உங்களுக்கு வயதாக, வயதாக புரிந்துகொள்ளும் கணவன், மனைவி, குழந்தைகள் கிடைக்கட்டும். சுனாமி தினத்தன்று மதியம் சாப்பாட்டுக்கு வந்துவிடுவதாக குழந்தைகளிடம் சொல்லிவிட்டுச் சென்றேன். மதிய சாப்பாட்டுக்கு 14 நாட்கள் கழித்து வீட்டுக்கு வந்தேன். 

7. ஒருவேளை நீங்கள் விரும்பிய வேலை கிடைக்காமல் போனாலும், உங்களுக்குக் கிடைத்த பணியை பேரன்போடு புரிவீர்கள் என விரும்புகிறேன். ஏனெனில், உங்களின் வாழ்க்கையின் மகத்தான பாடங்கள் எதிர்பாராத தருணத்தில், எண்ணமுடியாத மனிதர்களிடம் இருந்து கிட்டும். பர்வேஸ் முஷரப் ராணுவத்தில் தன்னுடைய அன்னையின் ஆசைக்காகச் சேர்ந்தார் என்று அறிந்துகொண்டேன். ‘ஏன் அப்படி’ என அவரிடம் கேட்டேன். ‘என் அம்மாவுக்கு ராணுவச் சீருடை பிடிக்கும்’ என்றார். நரேந்திர மோடியின் அம்மா, ‘தன் மகன் திருமணம் செய்து கொள்ளாவிட்டால் அவருடன் வாழமாட்டேன்’ என்று பிடிவாதம் பிடித்தார். தன்னை மகன் பார்த்துக் கொள்ளாமல்… தான் மகனைப் பார்த்துக்கொள்ள வேண்டிய நிலைமை வேண்டாம் என அவர் கவலைப்பட்டார். ‘மன்மோகன் சிங், இறுதியாக குடும்பத்தோடு சுற்றுலா சென்று 40 வருடங்கள் ஆகிவிட்டன’ என அவரின் மனைவி தெரிவிக்கிறார். சி.என்.என் நிறுவனத்தை உருவாக்கிய டெட் டர்னர் இன்றுவரை மின்னஞ்சலைப் பயன்படுவதுவது இல்லை. அதை கச்சிதமாகக் கையாளும் காதலியை அவர் பெற்றுள்ளார். 

இதுதான் இறுதி இலக்கு என்று எதுவுமில்லை. இங்கே நிறைய பணி உயர்வுகள் கிடைக்காது. தெளிவான பாதை என்று எதுவுமில்லை; முன்மாதிரிகள் இல்லை; ஓய்வு வயது என்று ஒன்றில்லை. இவற்றை மனதில்கொண்டு ஒவ்வொரு கணத்தையும் அனுபவியுங்கள். இந்தப் பயணம் மட்டுமே உங்களுக்கானது. வாழ்த்துகள்!’’ 

போஸ் தூக்கிலிடப்பட்டாரா? நேரு தான் இதற்கு காரணமா?


போஸ் மரணத்தில் நேருவுக்கு தொடர்பு இருப்பது போன்ற கருத்தை உண்டு செய்யும் ஒரு பேட்டி இன்றைய தமிழ் இந்துவில் வந்திருக்கிறது.
https://twitter.com/PUKOSARAVANAN/status/727016224429760512

இந்தப் பேட்டிக்கு வரிக்கு வரி மறுப்பு சொல்லுகிற அளவுக்கு எக்கச்சக்க பிழைகள்.
/ ஜப்பானில் இந்திய தேசிய ராணுவத்தை நேதாஜி உருவாக்கியிருந் தார். அந்த படை பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக போரிட்டு மணிப்பூர் வரை முன்னேறி கைப்பற்றியிருந்தது. இந்த சமயத்தில்தான் ஜப்பான் மீது அமெரிக்கா அணுகுண்டு வீசியது. இதனால் போரில் இருந்து ஜப்பான் பின்வாங்கியது./ போஸ் படைகள் மகத்தான வெற்றியை நோக்கி சென்றது அமெரிக்காவின் அணுகுண்டு வீச்சால் தடைபட்டது போன்ற தோற்றம் இந்த வரியில் ஏற்படுகிறது. இந்தியாவின் மிகச்சிறந்த ராணுவ வரலாற்று ஆசிரியரான Srinath Raghavanதன்னுடைய புதிய புத்தகத்தில் ஆசியாவில் ஜப்பான் தன்னுடைய மிகப்பெரிய தோல்வியை போஸால் சந்தித்தது என்று பதிவு செய்கிறார். நேதாஜி படைகளை முன்னின்று நடத்தும் திறமையற்றவர் எனக்கருதிய ஜப்பான் களத்தில் அவரைப் போரிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டது என்பதை சுட்டிக்காட்டுகிறார் Sunil Khilnani. (http://www.bbc.co.uk/programmes/b072jfcz) மேலும் இம்பால் போர் நடைபெற்றது நாற்பத்தி நான்கில், அணுகுண்டு வீசப்பட்டது அதற்கு அடுத்த வருடம். பசும்பொன் தேவர் எப்படி இத்தனை ஆயிரம் பேரை அவ்வளவு தூரத்துக்கு பிரிட்டிஷ் கண்ணில் மண்ணைத் தூவி அனுப்பினார்? போர்க்காலத்தில் கப்பல் போக்குவரத்து தமிழகத்துக்கும், ஜப்பானுடன் போர் நடந்து கொண்டிருந்த பகுதிகளுக்கும் இல்லை என்று சுட்டிக்காட்டுகிறார் பி.ஏ.கிருஷ்ணன்

இது இருக்கட்டும். /இந்திரா காந்தி ஆட்சியின்போது நேதாஜி உயிரோடு இருக்கிறாரா என்பதைக் கண்டறிய ‘கோஸ்லா’ விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. அந்த கமிஷனில் நேருவிடம் சுருக் கெழுத்தாளராக இருந்த ஷியாம்லால் ஜெயின் அளித்த வாக்குமூலத்தில் போஸ் அவர்களை நேரு காட்டிக்கொடுக்கிற வகையில் அட்லீக்கு கடிதம் ஒன்றை டிக்டேட் செய்ய, அதை தான் அடித்ததாக ஷியாம்லால் ஜெயின் சொல்கிறார். ஆசப் அலியோடு நேரு நடுவில் ஆசப் அலியின் இல்லத்தில் பேசியதாகவும் குறிப்பிடுகிறார். காண்க:http://www.dailypioneer.com/…/nehru-termed-bose-your-war-cr…

அந்த கடிதத்தினை மோடி அரசு சமீபத்தில் வெளியிட்டுள்ளது. ஒவ்வொன்றாக எடுத்துக்கொள்வோம் கடிதம் டெல்லியில் இருந்து எழுதப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆசப் அலியின் வீட்டில் இந்தக் கடிதம் தயாரிக்கப்பட்டதாகவும் ஷியாம்லால் ஜெயின் சொல்கிறார்.

முதலில் தேதி டிசம்பர் 26, 1946 அன்று இந்தக்கடிதம் ஆசப் அலி முன்னிலையில் அடிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆசப் அலி அதற்கு முந்திய நாள் சென்னையில் காமராஜர் ராஜாஜி கோஷ்டி சிக்கலை தீர்க்கும் வேலையில் இருந்தார். கடிதம் அடிக்கப்பட்டதாக சொல்லப்படும் நாளில் அவர் மும்பையில் படேலை சந்தித்து உரையாடினார் என்கிறது இந்தியன் எக்ஸ்பிரஸ். அவர் அடுத்த நாள் தான் டெல்லிக்கு கிளம்பிச் செல்கிறார் என்பதும் செய்தித்தாள் செய்திகளின் மூலம் தெளிவாக புலப்படுகிறது. டெல்லியில் கடிதம் அடிக்கப்பட்ட நாளில் ஆசப் அலி இல்லை!

 

சரி நேரு இருந்தால் கூட போதுமே. கதையை முடித்துவிடலாம் என்று கருதினால் அதற்கும் வழியில்லை. நேரு இந்தியா முழுக்க சுற்றுப்பயணத்தில் அப்பொழுது இருந்தார். கல்கத்தா, பாட்னா என்று பயணம் மேற்கொண்டிருந்த நேரு இருபத்தி ஆறு டிசம்பர் முதல் இருபத்தி ஒன்பது டிசம்பர் வரை அலகாபாத்தில் இருந்திருக்கிறார். மதன் மோகன் மாளவியாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் அனுப்பியிருக்கிறார். மகளுடன் இணைந்து ‘DISCOVERY OF INDIA’ நூலின் பிழை திருத்தும் பணியை டிசம்பர் 29 அன்று அலகாபாத்தில் மேற்கொண்டு இருக்கிறார். ஆக, அவர் டெல்லியில் இந்தக் கடிதம் எழுதப்பட்ட்ட காலத்தில் இருக்கவில்லை.

ஆதாரங்களுக்கு காண்க:

https://raattai.wordpress.com/…/nehru-was-in-allahabad-fro…/

கோஸ்லா கமிட்டியின் முன்னால் இந்த வாக்குமூலத்தை ஷியாம்லால் ஜெயின் வழங்கியதாக சொல்லப்படுகிறது. ஆனால், கோஸ்லா கமிட்டியின் இறுதியின் அறிக்கையில் இந்தக் கடிதம் பற்றிய சிறுகுறிப்பு கூட இல்லை. இந்த வாக்குமூலம் தரப்பட்டதாக சொல்லப்படும் முதல் கதை போஸின் உறவினர் பிரதீப் போஸ் வாஜ்பேயிக்கு 1998-ல் எழுதிய கடிதத்தில் தான் முதன்முதலில் இடம்பெறுகிறது. அதை வாஜ்பேயி அவர்கள் கண்டுகொள்ளவில்லை என்பதை ஏன் என்று யோசித்துக் கொள்ளலாம்.http://www.telegraphindia.com/116…/…/nation/story_65592.jsp…

இந்த ஷியாம்லால் குறிப்பிடும் கடிதத்தில் சோவியத் ரஷ்யா வெறும் ரஷ்யா என்று தற்கால வழக்கில் இருக்கிறது. அதேபோல நேதாஜியை போர்க்குற்றவாளியாக ஆங்கிலேய அரசு அறிவிக்கவில்லை. அவரை போர்க்குற்றவாளி என்று இந்தக்கடிதம் பிழையாக குறிப்பிடுகிறது. அதேபோல எல்லா கடிதங்களிலும் இருக்கும் நேருவின் கையெழுத்து இந்தக் கடிதத்தில் இல்லை.

இதற்குப் பிறகு வாய்மொழிக் கதைகளாக வழங்கப்படும் சிலவற்றை கட்டுரை சொல்லிச்செல்கிறது. அவற்றுக்கு ஆதாரங்கள் எழுபது வருடங்களாக கிட்டவில்லையா என்ன? இறுதியாக ரஷ்யாவில் வைத்து ஸ்டாலின் போசை கொடுமைப்படுத்தினார் என்று உண்மையை மட்டுமே பேசும் சுப்ரமணிய சுவாமி சொன்னதை ஆதாரமாக சுட்டுகிறது கட்டுரை. ரஷ்யாவுக்குள் போஸ் நுழைந்திருக்கிறாரா என்று அறிய இந்திய அரசு கேட்ட கேள்விக்கு ‘அவர் இங்கே நுழையவில்லை.’ என்று சோவியத் அரசு பதில் தந்திருக்கிறது.http://www.ndtv.com/…/netajis-death-grandnephew-releases-se…

மேலும் நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சகம் போஸ் குறித்து ரஷ்ய அரசு எந்த ஆவணங்களையும் வைத்திருக்கவில்லை என்று கையை விரித்துவிட்டது.
போஸ் மரணத்தில் நேருவுக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. இந்த ஒரே ஒரு கடிதமும் போலியானது என்று வரலாற்று ஆசிரியர்கள் உறுதி செய்கிறார்கள். தரவுகளும் இது புனையப்பட்ட கடிதம் என்பதை நிறுவுகிறது. ஜப்பான் இந்த வருட இறுதியில் தன்னிடம் இருக்கும் இரண்டு கோப்புகளை வெளியிடுகிறது. மேலும் மூன்றுநாடுகளிடம் இந்திய அரசு கோப்புகளை வெளியிடச்சொல்லி கேட்டிருக்கிறது. அதுவரை போஸ் விஷயத்தில் நேரு தவறிழைக்காத மனிதர் என்று உறுதிபடச்சொல்லலாம். முக்குலத்தோர் ஓட்டுக்களை வாங்கும் முனைப்பில் இருக்கும் ஒரு சங்கத்தலைவரின் பேட்டியின் கருத்துக்களை ஒருமுறை சரிபார்த்துவிட்டு பதிப்பித்து இருக்கலாம் Tamil The Hindu

மாவோயிஸ்ட்கள் ஆதிவாசிகளின் பாதுகாவலர்கள் இல்லை!


மக்கள் சிவில் உரிமைகள் கூட்டமைப்பின் முப்பத்தி ஆறாவது ஜெயபிரகாஷ் நாராயணன் நினைவு சொற்பொழிவில் வரலாற்று ஆசிரியர் ராமச்சந்திர குஹா ‘சுதந்திர இந்தியாவில் ஆதிவாசிகளின் அவலகரமான நிலைமை’ எனும் தலைப்பில் உரையாற்றினார். அதன் எழுத்து வடிவம் இது:
 மக்கள் சிவில் உரிமைகள் கூட்டமைப்பு நடத்தும் இந்த ஜெயபிரகாஷ் நாராயணன் பேசுவதில் எனக்குப் பெருமகிழ்ச்சி. இந்த அமைப்பின் நெடிய பயணத்தில் நான் முப்பத்தி ஐந்து ஆண்டுகளாக இணைந்து பயணிக்கிறேன். சுப்பாராவ் அவர்கள் ‘நாம் குற்றவாளிகள்’ என்கிற தலைப்பில் வெளியிட்ட துண்டறிக்கை எண்பத்தி நான்கின் சீக்கிய படுகொலைகளின் பின்னால் இருந்த அநீதியை உலகுக்குப் புலப்படுத்தியது. பாகல்பூரில் இஸ்லாமிய நெசவாளர்கள் எத்தகு கொடிய வன்முறைக்குச் சக இந்துக்களால் ஆட்படுத்தப்பட்டார்கள் என்பதை நேரில் காணும் வாய்ப்பு இந்த அமைப்பாலேயே எனக்குக் கிடைத்தது. சுற்றுச்சூழல் குறித்துக் கவனம் பெரிதாக ஏற்படுவதற்கு முன்பே சுரங்கப் பணிகளால் காடுகள் எப்படிப் பாதிக்கப்படுகின்றன, காடுகள் அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால் நேரிடும் சிக்கல்கள் என்பன குறித்து விரிவான அறிக்கைகள் வெகுகாலத்துக்கு முன்னரே அவர்களால் தயாரிக்கப்பட்டுள்ளன.
Displaying IMG_0455.JPGDisplaying IMG_0455.JPG
ஜெயபிரகாஷ் நாராயணனை ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தின் மகத்தான போராளியாகப் பலருக்குத் தெரியும். அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்ட காலத்தில் அவர் நடத்திய தீரமிகுந்த இரண்டாவது விடுதலைக்கான போரும் மறக்க முடியாத ஒன்று. அவர் அதே சமயம் காஷ்மீரிகள், நாகாக்கள் ஆகியோரோடு இந்திய அரசு பேசுவதற்கான, உரையாடல் நிகழ்த்தி சமரசம் செய்து கொள்வதற்கான சூழலை உருவாக்கித் தந்தவர். அவர் காஷ்மீர் சிக்கலில் சொன்னதை நேரு, சாஸ்திரி, இந்திரா என்று யாரேனும் கேட்டிருக்கலாம். படேல் ‘மோசமான தலைவலி’ என அழைத்த காஷ்மீர் சிக்கல் பெரும் இன்னலைத் தரும் தீராத மைக்ரேன் தலைவலியாக மாறியிருக்காது. மேலும், ஜெ.பி கிராம சுயாட்சியைக் கொண்டு வரவேண்டும் என்று விடுதலைப் பெற்ற காலத்திலேயே நேருவுக்குக் கடிதம் எழுதி வலியுறுத்தினார். வெறுமனே, பிரிட்டனின் நாடாளுமன்ற, வெஸ்ட்மினிஸ்டர் பாணியிலான ஜனநாயகமே முழு ஜனநாயகம் என்பது குறைபாடுள்ள பார்வை எனச் சரியாக அவர் சுட்டிக்காட்டினார்.
ஆதிவாசிகளின் நிலைமை சுதந்திர இந்தியாவில் மிகுந்த கவலைக்கிடமான ஒன்றாக இருக்கின்றது. இந்த வரலாறு விடுதலைக்கு ஒரு வருடத்துக்கு முன்னரே துவங்கி விடுகிறது. 13/12/46 அன்று நேரு வழிநடத்திய இடைக்கால அரசு அரசமைப்பு சட்டக்குழுவின் முன்னால் ‘குறிக்கோள் தீர்மானங்கள்’ விவாதத்துக்கு வந்தன. இன்றைக்கு அடிப்படை உரிமைகள், வழிகாட்டு நடைமுறைகள் எனக் கொண்டாப்படும் யாவும் அதில் அடங்கியிருந்தன. நேரு அவற்றை அறிமுகம் செய்து பேசுகிற பொழுது,
‘சமூக, பொருளாதார, அரசியல் நீதி உறுதி செய்யப்படும். வாழ்க்கை நிலை, வாய்ப்புகள் ஆகியவற்றில் சமமான வாய்ப்புகள் வழங்கப்படும். அனைவரும் சட்டத்தின் முன்னர்ச் சமமாக நடத்தப்படுவர். கருத்துரிமை, வழிபாட்டு உரிமை, கல்வி உரிமை, ஒரு இடத்தில் கூடும் உரிமை, விரும்பும் செயலை செய்யும் உரிமை ஆகியவை சட்டம், பொது நீதிக்கு உட்பட்டு வழங்கப்படும். அதே சமயம், சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்ட, பழங்குடிய பகுதிகளைச் சேர்ந்த மக்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆகியோரின் பாதுகாப்பு விடுதலை இந்தியாவில் உறுதி செய்யப்படும்.’ என்று வாக்களித்தார்.
இந்தத் தீர்மானங்கள் குறித்துப் பழமைவாதியான புருஷோத்தமதாஸ் தாண்டன், இந்துத்வவாதியான ஜனசங்கத்தின் ஷ்யாமபிரசாத் முகர்ஜி, பட்டியல் ஜாதியினரின் தலைவரான அம்பேத்கர், எம்.ஆர்.ஜெயகர், பொதுவுடைமைவாதியான மினு மசானி, பெண்கள் இயக்கத் தலைவரான ஹன்சா மேத்தா, இடதுசாரியான சோம்நாத் லஹிரி என்று பலரும் இந்தத் தீர்மானங்களை விவாதித்தார்கள். ஒருவர் இந்தத் தீர்மானம் குறித்துப் பேச எழுந்தார்.
அவர் இந்திய ஹாக்கி அணியில் கலக்கியவரும், கிறிஸ்துவராக இருந்து பின்னர் அம்மதத்தை விட்டு வெளியேறியவரும் ஆன பழங்குடியினத் தலைவர் ஜெய்பால் சிங். அவர் பின்வருமாறு பேசினார்:
ஒரு காட்டுவாசியாக, ஆதிவாசியாக நான் இந்தத் தீர்மானத்தின் நுணுக்கங்களை நான் உணர்ந்திருப்பேன் என்று நீங்கள் எதிர்பார்த்திருப்பீர்கள். என் பகுத்தறிவு, என்னுடைய மக்களுடைய பகுத்தறிவு நாம் விடுதலைச் சாலையில் இணைந்து பயணித்துப் போரிடவேண்டும் என்று சொல்கிறது. நெடுங்காலமாக ஒரு குழு மோசமாக இந்தியாவில் நடத்தப்பெற்றது என்றால் அது நாங்கள் தான். அவமானம் தரும் வகையில் நடத்தப்பட்டும், நிராகரிக்கப்பட்டும் நாங்கள் 6,000 வருடங்கள் அடக்குமுறையில் வாழ்ந்து வருகிறோம். சிந்து சமவெளி நாகரிகத்தின் குழந்தையான நான் எங்களுக்குப் பின்னர்ச் சிந்து சமவெளிக்கு வந்து எங்களைக் காட்டுப் பகுதியை நோக்கி நீங்கள் துரத்தினீர்கள் எனச் சொல்லமுடியும்.
என் மக்களின் வரலாறு முழுக்கத் தொடர் சுரண்டல், தங்களின் இருப்பிடத்தை விட்டு ஆதிவாசிகள் அல்லாத இந்திய குடிகளால் வெளியேற்றப்படுவது ஆகியவற்றால் ஆக்கப்பட்டுள்ளது. இந்த வரலாறு நெடுக போராட்டங்கள், குழப்பங்கள் நிரம்பிக் கிடக்கின்றன. என்றாலும், பண்டித நேருவின் வார்த்தையை நான் நம்புகிறேன். நீங்கள் எல்லாரும் விடுதலை இந்தியாவின் சமமான வாய்ப்புகளை வழங்கி யாரையும் புறக்கணிக்காமல் செயல்படும் புதிய அத்தியாயத்தைப் படைக்கப்போவதாகச் சொல்லுவதை முழுமையாக நம்புகிறேன்.
இந்த உரை நிகழ்த்தப்பட்டு எழுபது வருடங்கள் ஆகிவிட்டது. ஆதிவாசிகளின் நிலைமை இந்தியாவில் எப்படியிருக்கிறது?அவர்கள் இன்னமும் சுரண்டப்படுகிறார்கள், புறக்கணிக்கப்படுகிறார்கள், தங்களின் நிலங்களை விட்டு வெளியேற்றப்படுகிறார்கள். பத்து கோடி பழங்குடியின மக்களில் 85% பேர் மத்திய இந்தியாவிலும் 15% பேர் வடகிழக்கிலும் வாழ்கிறார்கள். இவற்றில் 1.2 ஆதிவாசி என்கிற சொல் நிலத்தின் ஆதிக்குடிகள் எனப் பொருள்படும். குஜராத்தில் துவங்கி ஒரிசா வரை மத்திய இந்தியாவில் பழங்குடியினர் பெரும்பாலும் மலைப்பகுதிகளில் வசிக்கிறார்கள். இவர்களை ஆதிவாசிகள் என்று இந்த உரையாடலில் அழுத்தமாக அழைப்பேன்/ சமவெளியில் வசிக்கும் மக்களுடன் அவர்களுக்கு இணக்கமான உறவு இருந்தது. தேன், மருத்துவப் பச்சிலைகள் தந்துவிட்டு உப்பு முதலிய பிற பொருள்களைப் பெற்றுக்கொள்ளும் வகையில் அவர்களின் உறவு இருந்தது.
 ஆங்கிலேயர் காலத்தில் ஆதிவாசிகள் மீதான சுரண்டல் வேகமெடுத்தது.
தொடர்வண்டிகள் ஏற்படுத்தி ஆங்கிலேயர்கள் ஆதிவாசிகளின் நிம்மதியான வாழ்க்கையைக் குலைத்தார்கள். அவர்கள் உருவாக்கிய சாலைகள், தொடர்வண்டிகள் அதுவரை நுழைய முடியாமல் இருந்த ஆதிவாசிகள் பகுதிக்குள் வியாபாரிகள், ஒப்பந்தக்காரர்கள் நுழைந்தார்கள். அவர்களின் நிலங்கள் பிடுங்கப்பட்டன. அம்மக்கள் சுரண்டப்பட்டார்கள். இதற்கு எதிரான தீவிரமான எழுச்சிகள், ஆயுதப்போராட்டங்கள் எழுந்தன. பத்தொன்பதாம் நூற்றாண்டில் சந்தால் புரட்சியில் (1830-1850) துவங்கி பிரஸா முண்டா (1890) தலைமையிலான கலகம், ஆந்திராவில் ஆலடி சீதாராமா ராஜூ (1920) இருபதாம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு விடுதலை கிடைக்கும் வரை போராட்டங்கள் வெவ்வேறு வகையில் எழுந்தன.
விடுதலை கிடைத்த பொழுது ஆதிவாசிகளுக்கு ஒரு ‘புதிய அத்தியாயம்’ காத்திருப்பதாகச் சொல்லப்பட்டது. மக்களியல் ஆய்வாளர் அரூப் மகாராத்தா பல்வேறு தரவுகளை ஒப்பிட்டு அதிர்ச்சி தருகிறார். ஆதிவாசிகள், தலித்துகள் இருவரும் ஒப்பிடப்படுகிறார்கள். கல்வியறிவில் முறையே 23, 30 % என்கிற அளவிலும், பள்ளியை விட்டு விலகும் குழந்தைகளின் எண்ணிக்கையில் 62, 48 சதவிகிதத்திலும் 50, 40 என்கிற சதவிகிதத்தில் அவர்களின் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்களின் நிலையும் உள்ளது. இவை ஆதிவாசிகள் மிக மோசமான நிலையில் இருப்பதையும் அவர்கள் நிலை அவர்களைப் போலவே கடும் அடக்குமுறை, சுரண்டல் ஆகியவற்றுக்கு ஆளாகும் தலித்துகளை விட மோசமாக இருப்பதை வெளிப்படுத்துகிறது.
ஆதிவாசிகள் மிக மோசமான சூழலில் வாழ்கிறார்கள். அடிப்படை சமூக வசதிகளான நல்ல குடிநீர், மின்சாரம், மருத்துவ வசதி, சுத்தமான கழிப்பறைகள் கூட அவர்களுக்குப் பெரும்பாலும் கிடைப்பதில்லை. சமூகவியல் கூறுகள் நமக்குச் சொல்வது ஒன்றுதான். புதிய அத்தியாயம் எதுவும் இம்மக்களுக்கு எழுதப்படவில்லை. தலித்துகளுக்கு அடிப்படை வசதிகள் மிகவும் மோசமான அளவுக்கே கிடைக்கிறது. அதைவிட அவலமான சூழலில் ஆதிவாசிகளின் நிலைமை உள்ளது. அதே சமயத்தில் அரசின் கொள்கைகள் ஆதிவாசிகளை அடிக்கடி புலம்பெயர வைக்கிறது.
 ஆதிவாசிகள் வாழும் காடுகள் செம்மையானவை, அங்கே நெடிய நதிகள் விரிந்து ஓடுகின்றன, எண்ணற்ற தனிமங்கள் இந்தப் பகுதிகளில்
மண்ணுக்குள் புதைந்து கிடக்கின்றன. இவை மூன்றையும் சேர்த்து ‘ஆதிவாசிகளின் முப்பெரும் சாபம்’ என்று சொல்வேன். விடுதலைக்குப் பிறகு தொழில்மயமாக்கல், வளர்ச்சி ஆகியவை வேகமெடுத்தது. அப்பொழுது தொழிற்சாலைகள், அரசு சுரங்குகள், அரசு நீர்மின் திட்டங்கள் ஆகியவை இப்பகுதிகளைக் கூறுபோட்டு எழுந்தன. சமவெளி மக்களின் நல்வாழ்வுக்கு இம்மக்கள் பலிகொடுக்கப்பட்டார்கள். எத்தனை லட்சம் மக்கள் இடப்பெயர்வுக்கு உள்ளாகி இருப்பார்கள் என்பது குறித்துப் பல்வேறு கணிப்புகள் உள்ளன. அதே சமயம், 1.2 கோடி வரை மிதமான அளவீடுகளும் அதிகபட்சமாக 1.5 கோடி வரையும் இந்த எண்ணிக்கை கணக்கிடப்படுகிறது. எப்படியிருந்தாலும், மிக அதிக எண்ணிக்கையிலான ஆதிவாசிகள் தங்களின் இருப்பிடங்களை விட்டு அரசின் கொள்கைகளால் துரத்தப்படுகிறார்கள் என்பது மட்டும் உறுதி.
631b5950-0d94-411b-ab01-b363a816044a
இந்திய மக்கள் தொகையில் எட்டு சதவிகித எண்ணிக்கையில் உள்ள ஆதிவாசிகள் நாற்பது சதவிகித அளவுக்கு இடப்பெயர்வுக்கு உள்ளாகும் ஆபத்தில் இருப்பதாகச் சமூகவியல் அறிஞர் வால்டர் பெர்னாண்டஸ் கண்டறிந்து உள்ளார். அதாவது இடப்பெயர்வுக்கு உள்ளாவதற்கு ஆதிவாசிகள் அல்லாத மக்களைவிட ஐந்து மடங்கு அதிகம். இப்படிச் செய்யப்படும் இடப்பெயர்வில் ஒழுங்கான இழப்பீடோ, வசதிகளோ தரப்படுவதில்லை. இம்மக்கள் தங்களின் வாழ்க்கையை, வாழ்வாதாரத்தை, கிராமத்தை, நிலத்தை, மொழியை, நாட்டுப்புற பாடல்களை, இசையை முப்பெரும் சாபத்தால் இழந்து வெளியேற நேரிடுகிறது.
ஆங்கிலேயர்கள் காலத்தில் தொடர்வண்டிப்பாதைகள், சாலைகள் அமைப்பதற்கு ஆதிவாசிகளின் வனங்களுக்குள் அரசு நுழைய முயற்சித்த பொழுது கடும் எதிர்ப்புகள் எழுந்தன. இத்தனைக்கும் விடுதலைக்குப் பிந்தைய இந்திய அரசைப் போலப் பெரிய அணைகளையோ, கனிம வள சுரண்டலையோ ஆங்கிலேய அரசு ஆதிவாசிகளின் வாழ்விடங்களில் மேற்கொள்ளவில்லை. காடுகளின் வளங்களையே அது அள்ளிக்கொண்டு போனது.
விடுதலைக்குப் பிந்தைய முதல் பதினைந்து வருடங்களில் வளர்ச்சி திட்டங்கள்
பழங்குடியின மக்களின் வாழ்விடங்களின் வழியாக மேற்கொள்ளப்பட்ட பொழுது அம்மக்கள் போராட்டங்களை நடத்தவில்லை. புதிதாக எழுந்திருக்கும் அரசு தங்களின் வாழ்க்கையை முன்னேற்றி வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துப் போகும் என்று நம்பினார்கள். விடுதலைப் போராட்டத்தில் பங்குபெற்று சிறைக்குச் சென்று நாட்டுக்காகத் தியாகம் செய்த தலைவர்கள் நாட்டை ஆள்வது அவர்களுக்கு நம்பிக்கை தந்தது. பிறருக்கு மக்களுக்குத் தங்கள் நிலங்களைக் கொடுத்தால் தங்களின் வாழ்க்கையும் முன்னேறும் என்று உளமார அவர்கள் நம்பினார்கள். கல்வி, முன்னேற்றம், அடிப்படை வசதிகள் தங்களுக்குக் கிடைக்கும் என அவர்கள் எதிர்பார்த்தார்கள். வேலைவாய்ப்புகள், கல்லூரிகளில் இடம் ஆகியவற்றைக் கூட அவர்கள் எதிர்பார்க்கவில்லை. ஓரளவுக்குத் தன்மானம் மிகுந்த வாழ்வை அவர்கள் எதிர்நோக்கினார்கள். அந்த நம்பிக்கை பொய்க்க ஆரம்பித்த பொழுது தான் கிளர்ச்சிகள் ஏற்பட்டன.
1966-ல் பிரவீர் சந்திர பன்ஜ் தியோ தலைமையில் விடுதலை இந்தியாவின் ஆதிவாசி கிளர்ச்சி முதல்முறையாக நிகழ்த்தப்பட்டது. அரசின் வனக்கொள்கைகளுக்கு எதிராக ஆதிவாசிகளை அந்த முன்னாள் பழங்குடியின மகாராஜா அணிதிரட்டினார். போலீஸ் இரும்புக்கரம் கொண்டு அவர்களை அடக்கியது/ பிரவீர் சந்திர பன்ஜ் தியோ தன்னுடைய ஊரான ஜந்தர்பூரில் சுட்டுக்கொல்லப்பட்டார். எழுபதுகளில் நிலவுரிமை சார்ந்து பூமி சேனா, முன்னாள் பாதிரியார்கள் ஆதிவாசிகளின் நில, வன உரிமைகளைக் காக்க நடத்திய கஷ்டகாரி சங்கத்தனா இயக்கங்கள் இயங்கின. ஜார்கண்ட் இயக்கம் பழங்குடியின தலைவரான ஜெய்பால் சிங்கின் கருத்தாக்கமான தனிப் பழங்குடியின மாநிலம் என்பதை அமைக்கும் நோக்கத்தோடு எழுந்தது. மத்திய இந்தியாவின் பீகார், ஒரிசா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் இருக்கும் இருபது மாவட்டங்களை ஒன்றாக இணைத்து ஒரு மாநிலத்தை அமைக்க அவர் விரும்பினார். 56-ல் மாநில மறுசீரமைப்புக் குழுவிடம் அந்த வைத்த பொழுது அது ஏற்கப்படவில்லை. ஜெய்பால் சிங்கின் மாநிலமான பீகாரில் இருந்த பழங்குடியின மாவட்டங்கள் கனிமங்கள், வன வளங்களைக் கொடுத்தார்கள். ஆதிவாசிகள் அல்லாத பிராமணர்கள் அவர்களை ஆண்டார்கள். அவர்களின் சுரண்டலை எதிர்த்து இம்மக்கள் போராடினார்கள். அந்தப் போராட்டம் நிகழ்ந்தது. அது வன்முறையைப் பயன்படுத்தியது.
எண்பதுகளில் பெரும்பாலும் ஆதிவாசிகளை உள்ளடக்கிய நர்மதா பச்சோ அந்தோலன் இயக்கம் மேதா பட்கரால் துவங்கி மேற்கொள்ளப்படுகிறது. நர்மதா அணையின் மீது கட்டப்படும் சர்தார் சரோவர் அணைக்கு எதிராக இந்த இயக்கம் இயங்குகிறது. இந்த அணைக்கு எதிரான இயக்கம் வித்தியாசமானது. நதியின் மீது கட்டப்படும் அணையின் பயன்கள் பெரும்பாலும் குஜராத்துக்குச் செல்கிறது. ஆனால், பாதிக்கப்படும் மக்கள் மத்திய பிரதேச மாநிலத்தைப் பெரும்பாலும் சேர்ந்தவர்கள். அதிலும் அறுபது சதவிகிதத்துக்கு மேற்பட்டவர்கள் பழங்குடியினர். இந்தப் போராட்டம் இன்றுவரை தொடர்கிறது/.
இந்த அநீதிகள், இடப்பெயர்வுக்கு எதிரான போராட்டங்களை எல்லாம் விடப் பெருமளவில் நிகழும் இன்னொரு கிளர்ச்சி மாவோயிஸ்ட்கள், நக்சலைட்கள் ஆகியோரால் முன்னெடுக்கப்படுகிறது. 67-ல் மேற்குவங்கத்தின் நக்சல்பாரியில் பழங்குடியினரையும் உள்ளடக்கி எழுந்த இந்த இயக்கம் வன்முறையைத் தன்னுடைய முறையாகக் கையாண்டது. அந்த அமைப்பு தன்னுடைய போராளிகளாக ஆதிவாசிகளை மாற்றிக்கொண்டது. முதலில் மாவோயிச இயக்கங்கள் மேற்கு வங்கத்தில் கானு சன்யால், சாரு மஜூம்தார் ஆகியோரால் துவங்கப்பட்டது. ஆந்திராவில் நாகி ரெட்டியின் தலைமையில் ஸ்ரீகாகுளம், அதிலாபாத் மாவட்டங்களில் இந்தக் கிளர்ச்சி எழுந்தது. ஆரம்பத்தில் இருந்தே மாவோயிஸ்ட இயக்கம் பழங்குடியினரின் பகுதிகளில் இயங்கியது. அது அவ்வப்பொழுது எழுச்சி பெற்று மீண்டும் அடக்கப்படும். 6o களிலிருந்து தற்போது வரை பல்வேறு மத்திய இந்திய மாவட்டங்களில் இந்த இயக்கம் பழங்குடியினரை அங்கமாகக் கொண்டு இயங்குகிறது. மகாராஷ்டிராவின் கச்சிரோலி, சத்தீஸ்கரின் பஸ்தார், ஒரிசாவின் கலஹாண்டி, கோராபுட், ஜார்க்கண்டின் பெரும்பான்மை மாவட்டங்களில் இந்த இயக்கம் இயங்கி வருகிறது.
அறுபதுகளில் இருந்து சுரண்டல், இடப்பெயர்வு ஆகியவற்றுக்கு உள்ளானதற்கு எதிராகக் கிளரச்சிகளில் பல்வேறு பகுதிகளில் ஆதிவாசிகள் இயங்கி வருகிறார்கள். இவை மூன்று வகையில் நடைபெறுகின்றன. ஆதிவாசிகளின் பாரம்பரிய தலைவர்கள் பிரவீர் சந்திர பன்ஜ் தியோவைப் போன்றோர் வழிநடத்துவது நடக்கிறது. சமூகச் சேவை இயக்கங்களான கச்டகாரி சங்கத்தன், நர்மதா பச்சோ அந்தோலன் முதலிய இயக்கங்கள் அமைதிவழியில் இன்னொருபுறம் செயல்படுகின்றன. ஆயுதம் ஏந்தி மாவோயிஸ்ட்கள், நக்சலைட்கள் போராடுகிறார்கள்.
இம்மக்களைப் போலவே கொடுமையான அடக்குமுறை, சுரண்டல் ஆகியவற்றுக்கு உள்ளாக்கப்படும் ஆதிவாசிகளின் போராட்டங்கள் ஆச்சரியம் தரும் வகையில் அமைதி வழியில் நடக்கிறது. அவர்களின் நலன்களைப் பேசும் அரசியல் தலைவர்களான கன்ஷி ராம், ராம் விலாஸ் பஸ்வான் மாயாவதி முதலியோர் எழுந்தார்கள். மாயவாதி மூன்று முறை உபியின் முதல்வராக இருந்துள்ளார். அடுத்துவர இருக்கும் தேர்தலிலும் அவர் முதல்வர் ஆவார் என்கிறார்கள். பல்வேறு கூட்டணி அரசுகள், மாநில அரசுகளைத் தலைமையேற்று நடத்துவதும் தலித் தலைவர்களால் செய்யப்பட்டது.
மாயாவதி 2006-ல் நடந்த உத்திர பிரதேச சட்டசபை தேர்தலில் தனிப்பெரும் பெரும்பான்மை பெற்றார். அம்மக்கள் சட்டரீதியான வழிமுறைகளையே தங்களின் எழுச்சிக்கு பயன்படுத்துகிறார்கள். ஆதிவாசிகளைவிட ஏன் தலித்துகள் ஏன் சட்டரீதியான வழிமுறைகளைச் சிறப்பாகப் பயன்படுத்துகிறார்கள்? ஆதிவாசிகள் மாவோயிஸ்ட்கள், சமூகச் சேவை இயக்கங்களைக் கொண்டு தங்களின் எழுச்சியை மேற்கொள்ள முயல்கிறார்கள். தலித்துகள் சமயங்களில் மாவோயிஸ்ட்களுடன் இணைந்தாலும் பெரும்பாலும் அமைதி வழியில் போராடுகிறார்கள். ஏன் இந்த முரண்பாடு. பல்வேறு காரணங்கள் இருந்தாலும் நான் இரண்டு காரணங்களை முன்வைக்கிறேன். ஒன்று வரலாற்று ரீதியானது, இன்னொன்று புவியியல் சார்ந்தது.
அப்பட்டமாக, நேராகச் சொல்வது என்றால் இதற்குக் காரணம் அண்ணல் அம்பேத்கர். ஆதிவாசி அம்பேத்கர் ஒருவர் அவர்களுக்குக் கிட்டவில்லை. ஆதிவாசிகளுக்கு ஒரு தேசிய தலைவர் இன்னமும் கிடைக்கவில்லை. அவரின் காலத்தில் மகாராஷ்டிராவில் மட்டுமே தலைவராகப் பார்க்கப்பட்ட அம்பேத்கர் இந்தியாவின் தலைவராக நேசிக்கப்பட்டு, போற்றப்பட்டுக் கொண்டாடப்படுகிறார், மறுகண்டுபிடிப்புக்கு அவர் உள்ளாகி இருக்கிறார். பிற தலைவர்கள் மாநிலத்தலைவர்களாகவோ, கட்சியின் முகமாகவோ மாற்றப்பட்டுவிட்ட சூழலில் அவர் இந்தியா முழுக்க இருக்கும் தலித்துகளின் நம்பிக்கை ஒளியாக உள்ளார். சுரண்டலுக்கு, ஒடுக்குமுறைக்கு எதிரான அவரின் வெற்றிகரமான போராட்டம் அவரை முன்மாதிரியாக ஆக்கியுள்ளது. அரசமைப்புச் சட்டத்தைப் பெருமளவில் உருவாக்கிய அம்பேத்கர் கல்வி, மக்களை ஒன்று சேர்த்தல், அமைதி வழியில் கிளர்ச்சி செய்வது ஆகியவற்றின் மூலம் தன்னுடைய மக்களுக்காகப் போராடினார். அம்பேத்கர் எப்பொழுதும் அரசமைப்புச் சட்டத்தின் வழியில் இயங்கினார். சத்தியாகிரகத்தில் கூட அவர் ஈடுபட்டார். கல்வி, அமைப்புகளைக் கொண்டு இயங்க அவர் காட்டிய வழியில் தலித்துகள் இயங்குகிறார்கள். அப்படியொரு வழிகாட்டும் தலைவர் ஆதிவாசிகளுக்கு இல்லை.
மேலும், ஆதிவாசிகள் பல்வேறு மொழிகள், நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள் கொண்டவர்களாக உள்ளார்கள். அவர்களின் மீதான வன்முறைகள், சுரண்டல்கள் பல்வேறு வடிவங்களை எடுக்கின்றன. அவர்கள் அனைவரும் தங்களின் சிக்கல்கள் ஒன்றே என்று இந்திய அளவில் அணிதிரளவில்லை. அதே சமயம் ஆதிக்க ஜாதி இந்துக்களின் கொடுமைகளுக்கு ஆளாகும் தலித்துகள் இந்திய அளவில் திரண்டு போராடுவது நிகழ்கிறது.
புவியியல் ரீதியாக ஆதிவாசிகள் பீடபூமியின் பகுதிகளில் பெரும்பாலும் வசிக்கிறார்கள். ஆந்திராவில், மகாராஷ்டிராவில் 9%, தமிழகத்தில் 1% என்று இருக்கும் அவர்கள் இந்தியாவின் பழங்குடியின மாநிலம் என அறியப்படும் சத்தீஸ்கரில் கூட 30% என்கிற அளவில் தான் இருக்கிறார்கள். தலித்துகளோ இந்தியா முழுக்கப் பரவியிருக்கும் சிறுபான்மையினராக உள்ளார்கள். அவர்கள் 350 – 400 மக்களவைத் தொகுதிகள் வரை வாக்குவங்கி கொண்டவர்களாக உள்ளார்கள். தமிழகத்தில், கர்நாடகாவில், ஆந்திராவில் என்று பல்வேறு மாநிலங்களில் ஒவ்வொரு தொகுதியிலும் பத்துச் சதவிகிதம் அளவுக்கு ஓட்டுக் கொண்டிருக்கிறார்கள். பஞ்சாபில் இது இருபது சதவிகிதத்தைக் கடந்து அவர்களின் எண்ணிக்கை இருக்கிறது. ஆதிவாசிகளோ அதிகபட்சம் எழுபது தொகுதிகளில் மட்டுமே காணப்படுகிறார்கள். இவ்வாறு ஒப்பிடுவதால் தலித்துகள் கொடுமைக்கு ஆளாவதில்லை என்று நான் சொல்வதாக எண்ணிக்கொள்ளாதீர்கள். தலித்துகள் கடும் அநீதிகள், சுரண்டல்கள், அடக்குமுறைகள், மனித உரிமை மீறல்கள் ஆகியவற்றுக்கு அனுதினமும் ஆளாக்கப்படுகிறார்கள். அதே சமயம், அவர்கள் தங்களின் போராட்டத்தைத் தேர்தல் அரசியல், சட்ட ரீதியிலான வழிமுறைகளின் மூலம் மேற்கொள்கிறார்கள்.
நியாயமான, கவலையளிக்கும், நேர்மையான தங்களின் பிரச்சனைகளுக்கு அமைதி வழியில் போராடுவது., கருத்தை முன்னிறுத்துவது ஆகியவற்றைச் செய்கிறார்கள். ஆதிவாசிகள் மாவோயிஸ்ட்களுடன் இணைந்து கொண்டு வன்முறையில் ஈடுபட்டு தங்களின் உரிமைகளைப் பெற்றுவிட முடியும் என்று எண்ணுகிறார்கள்.
முஸ்லீம்கள் கடுமையான ஒடுக்குமுறைக்கு உள்ளானாலும் அவர்கள் பெரும்பாலும் ஆயுதம் ஏந்துவது கிடையாது. அவர்கள் மாநில, நாடாளுமன்ற தேர்தல்களில் முக்கியமான தேர்தல் சக்தியாக உள்ளார்கள். எனினும், ஆதிவாசிகள் இவர்கள் இருதரப்பினரையும் விடக் கடுமையான ஒடுக்குமுறை, அநீதிகளுக்கு ஆளாகிறார்கள். அதேசமயம், அவர்கள் இந்தியாவில் மிகக்குறைந்த கவனமே பெறுகிறார்கள். அவர்கள் குறித்துப் பேச வேண்டிய அரசு, அதிகாரிகள், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள். பல்கலை பேராசிரியர்கள், பத்திரிக்கையாளர்கள் பெருமளவில் அவர்களை இந்தியாவின் சமமான குடிமக்களாக ஆக்க செயல்படுவதில்லை. இஸ்லாமியர்கள், தலித்துகள் குறித்தும் பெரிதாகக் கவனம் தரப்படுவதில்லை என்பது கவலை தருவது. தலித்துகள், முஸ்லீம்கள் மத்திய அமைச்சரவையில் பாஜக அரசைத் தவிர்த்து இடம்பெறுவது நிகழ்கிறது. முக்கியமான அமைச்சரவைகள், ஜனாதிபதி பதவி முதலிய அரசமைப்புப் பதவிகள் அவர்களுக்குக் கிட்டியிருக்கிறது. அதேசமயம் எந்த ஆதிவாசியும் இப்படிப்பட்ட இடங்களைக் கூட அடையவில்லை. தலித், முஸ்லீம் சிக்கல்கள் தேசிய பிரச்சனையாகக் காணப்படுகிற பொழுது, ஆதிவாசிகள் சிக்கல் உள்ளூர் பிரச்சனையாகவே முடிக்கப்பட்டு விடுகிறது.
அரசு, ஆதிவாசிகள் அல்லாத பிற குடிமகன்கள் ஆதிவாசிகளின் நலனில், போராட்டங்களில் கவனம் செலுத்தாமல் போனதால் ஏற்பட்ட மிகப்பெரிய இடைவெளியை தங்களுடையதாக மாவோயிஸ்ட்கள் மாற்றிக்கொண்டார்கள். ஆதிவாசிகளின் பகுதியில் மாவோயிசம் செழிப்பதற்கு வரலாறு, புவியியல் ஆகியவற்றோடு வேறொரு முக்கியக் காரணமும் உள்ளது. சுதந்திர இந்தியாவின் வளர்ச்சியில், தேச கட்டமைப்பில், ஜனநாயக அமைப்பில் ஆதிவாசிகள் மிகக்குறைவாகப் பெற்று, மிகப்பெரிய அளவில் இழந்திருக்கிறார்கள். ஆகவே, அந்தக் கடும் அதிருப்தியை மாவோயிஸ்ட்கள் தங்களுடையதாக மாற்றிக்கொள்வதில் வெற்றிக் கண்டிருக்கிறார்கள். ஆதிவாசிகளின் நலன்களைக் குறித்துக் குரல் கொடுப்பதை மாவோயிஸ்ட்கள் செய்வதாகக் காட்டிக்கொள்கிறார்கள்.
மாவோயிஸ்ட்கள் புவியியல் ரீதியாக வெற்றிகரமாக இயங்குவதற்கு ஆதிவாசிகள் வசிக்கும் மலைகள், வனங்கள் உதவுகின்றன. அவர்களின் கொரில்லா போர்முறைகளுக்கு அதுவே உகந்த நிலம். திடீரென்று தோன்றி தாக்கிவிட்டு மறைந்துவிட முடியும். காவல்துறையைச் சுட்டுக் கொல்வதோ, எதிர்பாராத தருணத்தில் அரசியல் தலைவர்களை அழிப்பதோ இந்த நிலப்பரப்பில் சுலபமான ஒன்றாக இருக்கிறது. மேலும் காவல்துறை ஒரு மாநில எல்லையைக் கடந்து நகர முடியாது என்பதால் சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, ஆந்திரா என்று மாநிலம் விட்டு மாநிலம் தாவி தப்பிக்கும் போக்கும் ஆதிவாசிகளிடம் உள்ளது.
மிகக்குறைவாகப் பெற்று, அதீதமாக இழந்த பழங்குடியினர் மாவோயிஸ்ட்கள் கட்டுப்பாட்டில் உள்ளார்கள். அரசு எப்படி இவர்களை எதிர்கொள்வது. அரசமைப்புச் சட்டத்தைப் பின்பற்றுபவனான நான் மாவோயிஸ்ட்களின் வன்முறையை ஏற்க மறுக்கிறேன். ஒரு கட்சி ஆட்சி ரஷ்யா, சீனாவில் எப்படிப்பட்ட படுகொலைகள், ரத்த வெள்ளம், கொடுமை, அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்தன என்பதை உலக வரலாற்றின் மாணவனாக அறிவேன். அதனால் நான் மாவோயிஸ்ட்களை நிராகரிக்கிறேன். எப்படி ஒரு ஜனநாயக அரசு மாவோயிசத்தை எதிர்கொள்வது.
இருவழிகள் உள்ளன. காவல்துறையைக் கொண்டு இவர்களைக் கட்டுப்படுத்துவது ஒரு புறம் நிகழவேண்டும். மாவோயிஸ்ட்களைத் தனிமைப்படுத்தி, ஓரங்கட்டி, சரணடைய சொல்லவேண்டும், அவர்கள் அப்பொழுதும் வன்முறையைப் பின்பற்றுவார்கள் என்றால் அவர்களைச் சுட்டு வீழ்த்த வேண்டும். இன்னொரு புறம் வளர்ச்சியின் கனிகள் பழங்குடியின மக்களைச் சென்றடைய வேண்டும். நல்ல பள்ளிகள், மருத்துவ மையங்கள், சுகாதாரம், பொருளாதார வளர்ச்சி ஏற்பட வேண்டும். PESA எனப்படும் கிராம சுயாட்சியை இப்பகுதிகளுக்குப் பரவலாக்க வேண்டும். ஐந்தாவது பட்டியலில் கனிம வளங்களின் மூலம் கிடைக்கும் லாபத்தில் பாதியை பகிர்ந்து கொள்ள இடமிருப்பதாக ஏ.எஸ்.சர்மா எனும் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சொன்னதைப் பின்பற்ற வேண்டும்.
இவை இரண்டிலும் மத்திய அரசு தவறியிருக்கிறது. காவல்துறை செயல்பாட்டை அது அவுட் சோர்ஸிங் செய்கிறது. உங்கள் ஊரைச் சேர்ந்த மிக மோசமான உள்துறை அமைச்சர் என நான் உறுதியாகக் கருதும் ப.சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருந்த காலத்தில், சல்வா ஜூடும் எனும் அநீதி சத்தீஸ்கரில் அரங்கேற்றப்பட்டது. மாநில ஆளும் பாஜக, மத்திய காங்கிரஸ் ஆகியவை கூட்டு சேர்ந்து இதனை அரங்கேற்றின. பதினான்கு முதல் இருபத்தி ஒரு வயது பழங்குடியின இளைஞர்கள் கையில் ஆயுதங்கள் கொடுக்கப்பட்டு மாவோயிஸ்ட்கள், பழங்குடியினர் எதிர்கொள்ளப்பட்டார்கள். இடதுசாரிகள் மத்திய அரசை வெளியில் இருந்து ஆதரித்து வந்தார்கள். அவர்கள் பெரும்பாலும் வங்க, இந்து, பத்ரோலக் கட்சி போலவே நடந்து கொள்வதால் இதற்கு எதிராகப் பெரிதாக எதுவும் முயலவில்லை. இது அரசமைப்பு சட்டத்துக்கு முற்றிலும் எதிரானது. உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் தான் ஓய்வு பெறும் நாளன்று நீதிபதி ராவ் தலைமையிலான பெஞ்ச் அது சட்டத்துக்குப் புறம்பானது எனத் தீர்ப்பளித்துச் சல்வா ஜூடுமை கலைக்கும்படி சொன்னது. சத்தீஸ்கர் அரசு மத்திய அரசின் ஆசியோடு வேறு பெயர்களில் அடக்குமுறை சாம்ராஜ்யத்தைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. சட்டம், ஒழுங்கு காவல்துறையின் கையில் இல்லாமல் அது இப்படித் தவறாக அவுட் சோர்சிங் செய்யப்படுவது கவலைக்குரியது.
ஆதிவாசிகள் நம்முடைய பொருளாதார அமைப்பில் பெரும் கொடுமைக்கும், ஒடுக்குமுறைக்கும், துரத்தியடிக்கப்படுவதற்கும் உள்ளாகிறார்கள். அரசின் கட்டுப்பாட்டில் பொருளாதாரம் இருந்த பொழுது கடும் அடக்குமுறைகளுக்கு உள்ளானார்கள் என்றால், தாரளமயமாக்கல் காலத்தில் வளர்ச்சி என்கிற பெயரில் அவர்கள் அடித்து விரட்டப்படுகிறார்கள். பல்வேறு பகுதிகளில் மாவோயிஸ்ட்கள் பரவியிருக்கிறார்கள் என்றாலும், ஓடிஸா எடுத்துக்காட்டுத் தாராளமயக்காமல் என்ன செய்திருக்கிறது என்பதைத் தெளிவாக விளக்கும். பதினைந்து வருடங்களுக்கு முன்வரை அங்கே மாவோயிஸ்ட்கள் தாக்கம் இல்லை. ஆனால், ஒரிசா அரசு சுரங்க நிறுவனங்களோடு பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களைக் கையெழுத்திட்டது. பாக்சைட் முதலிய பல்வேறு தனிமங்கள் வெட்டியெடுக்கப்பட ஆதிவாசிகள் தங்களின் வாழ்விடங்களை விட்டு அதிகாரத்தைக் கொண்டு விரட்டியடிக்கப்பட்டார்கள். இப்பொழுது ஆறு மாவட்டங்கள் மாவோயிஸ்ட்கள் கட்டுப்பாட்டில் ஓடிசாவில் உள்ளன.
மாவோயிஸ்ட்களை எதிர்கொள்ள அரசு பாதுகாப்பை உறுதி செய்து, வளர்ச்சியில் ஆதிவாசிகளுக்குப் பங்கைத் தரவேண்டும். இதற்கு மாறாகக் கண்காணிக்கும், அச்சுறுத்தல் தரும் அடக்குமுறை அரசாக ஒருபுறமும், இன்னொரு புறம் உலகமயமாக்கல் காலத்தில் வளர்ச்சியின் கனிகளைச் சற்றும் ஆதிவாசிகளுக்கு வழங்கும் முயற்சிகளை மேற்கொள்ளாத புறக்கணிப்பை அரசு செய்கிறது. அரசும், குடிமக்களும் நிரப்பத் தவறிய இடத்தை மாவோயிஸ்ட்கள் பிடித்துக் கொண்டார்கள்.
அதேசமயம், ஏழைகளை விடுவிப்பவர்கள் என்றோ, பழங்குடியினரின் பாதுகாவலர்கள் என்று மாவோயிஸ்ட்கள் என எண்ணிக்கொள்ள வேண்டாம்.
ஆதிவாசிகள் தண்டகாரண்யம் பகுதியை விடுதலை பெற்ற பகுதியாக்க கனவு காண்கிறார்கள். சுக்மா, பஸ்தார் முதலிய மாவட்டங்களில் பரவியுள்ள அவர்கள் மத்தியில் உள்ள அரசை நீக்கிவிட்டுத் தாங்கள் ஆள பகல் கனவு காண்கிறார்கள். அவர்களின் போராட்டம் காடுகளில் வெற்றிகரமாக இயங்கலாம். சமவெளிக்கு வந்தால் அவர்கள் ராணுவத்தால் நசுக்கப்படுவார்கள். அதேபோலப் பழங்குடியினரிடம் கிடைக்கும் ஆதரவு விவசாயிகள், மத்தியவர்க்க மக்கள் ஆகியோரிடம் அவர்களுக்குக் கிடைக்காது. அவர்களின் சாகசம் மிகுந்த கனவு ஓரளவுக்குக் கிளர்ச்சியையும் பெருமளவில் அச்சத்தையும் ஒருங்கே எனக்குத் தருகிறது. எங்கெல்லாம் மாவோயிஸ்ட்கள் வருகிறார்களோ அங்கெல்லாம் கடும் வன்முறை நிகழ்கிறது. அரசும், அவர்களுக்கும் இடையே அப்பாவி ஆதிவாசி மக்கள் சிக்கி சீரழிகிறார்கள்.
அரசைப் போலவே சிறுவர்களை அவர்கள் தங்களின் படையில் சேர்க்கிறார்கள். மக்கள் கல்வி கற்க விரும்பாததால் பள்ளிகளைக் குண்டு வைத்து தகர்க்கிறார்கள். ஜெயபிரகாஷ் நாராயண் கனவு கண்ட கிராம சுயராஜ்யம் அவர்களின் எழுச்சிக்குத் தடை என்பதால் ஜனநாயக முறைப்படி நேர்மையாகத் தேர்ந்தெடுக்கப்படும் கிராமத்தலைவர்கள் கடத்தி கொல்லப்படுகிறார்கள். அவர்கள் அமைதிவழி அரசமைப்பு வழிமுறை, அரசு அதிகாரத்தின் அடையாளமாக, வளர்ச்சியைக் கொண்டு வருபவர்களாக இருப்பதால் கிராமத் தலைவர்களைக் கொல்கிறார்கள். தகவல் சொல்லுபவர்கள், இருபக்கமும் நிற்காமல் அமைதியாக இருக்கும் அப்பாவிகள் ஆகியோர் மாவோயிஸ்ட்களால் கொல்லப்படுவது பலபேரால் நன்றாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. எதிர்வினை ஆற்றும், ஜனநாயகம், அரசமைப்புக்கு எதிரான, வன்முறை, ரத்த வெறி மிகுந்த கருத்தாக்கம் ஒன்றே மாவோயிஸ்ட்களால் முன்னெடுக்கப்படுகிறது. எனவே. இவர்களைக் கனவு நாயகர்களாக, தன்னிகரில்லா தலைவர்களாகக் கொண்டாடுவது அபத்தமானது.
ஏன் மாவோயிசம் ஆதிவாசிப்பகுதியில் வளர்ந்துள்ளது என்பதையும், ஆதிவாசிகள் நம்முடைய ஜனநாயகத்தில் மற்ற எல்லாச் சிறுபான்மையினரை விடவும் கடும் அடக்குமுறை, அநீதிகளுக்கு உள்ளாகிறார்கள் என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும். அதேசமயம், மாவோயிஸ்ட்களை அதற்கான தீர்வு என்று எண்ணிக்கொள்ளக் கூடாது. சமூகச் சேவை இயக்கங்கள், மருத்துவர்கள். பல்வேறு அதிகாரிகள் மருத்துவ வசதிகள், கல்வி ஆகியவற்றை ஜனநாயக முறையில் பழங்குடியினருக்கு வழங்க முடியும் எனச் செய்துகாட்டியுள்ளார்கள். அதை நாம் தீவிரமாக முன்னெடுக்க வேண்டும். காங்கிரஸ் அரசு கொண்டுவந்த வன உரிமைச் சட்டம் தீரமிகுந்த பழங்குடிகள் அமைச்சரால் ஏற்பட்டது. அதை மற்ற அமைச்சர்கள் நிறைவேற்ற தயாராக இல்லை. அதே போல, இப்பொழுதைய அரசு வன உரிமைச் சட்டத்தை நீர்த்துப் போகும் செயல்களை தொடர்ந்து செய்கிறது, அனுமதிக்கிறது.
என்னுடைய உரையின் இறுதிப்பகுதிக்கு வந்துள்ள நான் ஆதிவாசிகளின் அவலகரமான நிலையை எட்டுப் புள்ளிகளில் முக்கியமாக நிகழ்வதாகக் காண்கிறேன். அது இன்னமும் அதிகமாக இருக்கும் என்பதையும் நினைவில் நிறுத்த வேண்டும்.
வளமிகுந்த வனங்கள், நெடிய நதிகள், கனிம வளங்கள் ஆகிய மூன்றும் ஒன்றாகச் சேர்ந்த பகுதிகளில் வாழும் ஆதிவாசிகள் தாராளமயமாக்கல் காலத்தில் முப்பெரும் சாபத்துக்கு உள்ளாகி விரட்டியடிக்கப்படுகிறார்கள்.
தேசிய இயக்கத் தலைவர்களான காந்தி முதலியோர் பெண்கள்., இஸ்லாமியர்கள், தலித்துகள் ஆகியோருக்காகப் பேசினாலும் ஆதிவாசிகளைக் கண்டுகொள்ளவில்லை. அண்ணல் அம்பேத்கரும் கூட ஆதிவாசிகளின் நலனில் அக்கறையில்லாதவராக, கடுமையான கருத்துக்களைக் கொண்டவராக இருந்தார். இதனால் அவர்கள் நலன் கவனம் பெறவே இல்லை.
மக்கள்தொகையில் குறிப்பிட்ட சில பகுதியில் அவர்கள் அடங்கிவிடுவதால் தேர்தல் அரசியலில் அவர்கள் கவனிக்கப்படுகிறவர்களாக இல்லை.
அவர்களுக்கு இருக்கும் இட ஒதுக்கீட்டையும் அவர்களைவிட நன்றாக ஆங்கிலம் அறிந்த வடகிழக்கு பழங்குடியினர் கைப்பற்றிக்கொள்கிறார்கள். மேலும், கிறித்துவ, இந்து., மாவோயிச மிஷனரிக்களுள் சிக்கிக்கொண்டு அவர்கள் பரிதவிக்கிறார்கள். அம்மக்களின் எண்ணற்ற தாய்மொழிகளில் பிள்ளைகள் கல்வி கற்க முடியாமல் இந்தி, ஓடியா முதலிய மொழிகளில் கல்வி கற்கும் அவலமும், தங்களின் மகத்தான கலாசார வளங்களை இழக்கும் கொடுமையும் அரங்கேறுகிறது.
ஆதிவாசிகளுக்கு உத்வேகம் தரும், அகில இந்திய அளவில் ஒன்று திரட்டும் ஒரு தலைவர் அம்பேத்கரை போலக் கிடைக்கவில்லை.
திறன், அறிவு, சுற்றுச்சூழல், பல்லுயிர் வளம் ஆகியவற்றைக் கொண்டு வளர்ச்சியை அடையும் எடுத்துக்காட்டுகள் இன்னமும் அவர்களிடையே எழும் சூழலும், வாய்ப்பும் இல்லை. தலித்துகளில் தொழில்முனைவோர் எழுவதைத் தேவேஷ் கபூர் முதலியோர் படம்பிடித்துள்ளார்கள். ஆதிவாசிகள் வளர்ச்சியின் பாதையில் எப்பொழுது செல்லமுடியும் எனத் தெரியவில்லை.
அரசு அதிகாரிகள். காவல்துறையினர், வனத்துறை அலுவலர்கள் எல்லோரும் இம்மக்களின் நியாயமான சிக்கல்கள் குறித்துப் பாராமுகம் கொண்டவர்களாகவே உள்ளார்கள்.
தங்களின் போராட்ட நெருப்பு எரிய எரிபொருளாக ஆதிவாசிகளை மாவோயிஸ்ட்கள் பயன்படுத்திக்கொள்கிறார்கள். அவர்கள் வன்முறையை அரசும் கடும் வன்முறையால் எதிர்கொள்கிறது. வளர்ச்சி என்பதை மறந்ததைப் போல அரசு நடந்து கொள்கிறது.
வரலாற்று ஆசிரியர்கள் ஜோசியர்கள் இல்லை. அதேசமயம், தற்போதைய ஆதிவாசிகளின் நிலைமை கவலைக்கிடமானதாக உள்ளது. அது வருங்காலத்தில் செம்மையுறும் என்கிற நம்பிக்கையை மட்டும் வெளிப்படுத்தி உரையை முடிக்கிறேன். நன்றி!
தமிழில்: பூ.கொ.சரவணன்

பசவர் எனும் புரட்சியாளர்!


பசவர் எனும் புரட்சியாளர்!
எளிமையான மொழியில், சிவனைப்பற்றிப் பாடும் குரலில் பசவர் கன்னட மொழியில் எழுதிய கவிதைகள் மாபெரும் சமூக எழுச்சியை உண்டு செய்தது. பல்வேறு கவிஞர்கள், எழுத்தாளர்கள் எனப் பலரும் ஏ.கே.ராமானுஜனின் பசவரின் கவிதை மொழிபெயர்ப்பில் தங்களின் மனதை பறிகொடுத்திருக்கிறார்கள். டெட் ஹூக்ஸ் எனும் கவிஞர் காற்றில் கசியும் குரலாக அவரின் வரிகள் நெகிழ்விப்பதாகச் சிலிர்த்தார்.
நதி சங்கமங்களின் தலைவனான சிவனைப் போற்றிப் பாடும் பசவர் ஒரு சமூகப் போராளியாக, சுதந்திர சிந்தனையாளராக, மத ஆசிரியராக வெளிப்படுகிறார். கிரிஷ் கர்னாட் ‘எல்லா வகையான நிலையான அமைப்புகளையும் பசவரும், அவரின் தொண்டர்களும் நிராகரித்தார்கள். தொடர்ந்து நகர்பவர்களாக, மாறுபவர்களாக, வாழ்க்கையில் தொடர்ந்து செயலாற்றுகிறவர்களாக அவர்கள் இருக்க விரும்பினார்கள். எந்த அறிவுத் திறனையும் காட்ட முயலாமல் மக்களிடம் எளிமையாக உரையாடுவது என்பதையே அவர்கள் நோக்கமாகக் கொண்டிருந்தார்கள்.’ என்கிறார்.


நதி சங்கமங்களின் இறைவனே
எதுவும் உன்னைக் காயப்படுத்தாது
நான் பாடிக்கொண்டே உன்னைக் காதலிப்பேன்
என்கிற பசவரின் வரியில் இந்த எளிமையே வெளிப்படுகிறது.
தன்னுடைய இறைவனைப் பசவர் கிருஷ்ணா மலப்ராபா எனும் சிறு நதியை சந்திக்கிறது. அங்குதான் பசவர் தன்னுடைய பாடல்களை எழுதினார். வச்சனாஸ் எனும் பாடல் வடிவத்தில் சந்தத்தோடு அவர் எழுதினார்.
மரத்தினில் மந்தியைப் போல
கிளைக்குக் கிளை தாவுகிறது
எப்படி நம்புவேன் எரியும் என் இதயத்தை?
அது என் தந்தையிடம் என்னைப் போகவிடாது
நதிசங்கமங்களின் இறைவனிடம்!

சாதியமைப்பை வச்சனாக்கள் கேள்வி கேட்டன. பல ஒடுக்கப்பட்ட ஜாதியினரும், பெண்களும் பசவரின் இயக்கத்தை முன்னெடுத்தார்கள்.

‘இரும்பை கொதிக்கவைத்தால் நீ கொல்லன்
துணித் துவைத்தால் சலவைக்காரன்
ஆடையை நெய்தால் நெசவாளர்
வேதம் படித்தால் பிராமணன்
பொய், பெரும்பொய் புனித பிறப்பு பற்றிய புரட்டுகள்
தன்னை உணர்ந்தவனே தன்னிகரில்லா மனிதன்’

மத அதிகார பீடங்களை அவரின் வழிவந்த வீரசைவர்கள் கேள்வி கேட்டார்கள். சமூகச் சாதியமைப்பு கேள்விக்கு உள்ளாக்கப்பட்டது. பெண்கள் அவர்களின் பாடல்களிலாவது குறைந்த பட்சம் ஆணுக்குச் சமமாகப் போற்றப்பட்டார்கள். பிராமணியத்தை மட்டுமல்லாமல், பானை, சீப்பு, கோப்பைகள் ஆகியவற்றில் இறைவனைக் கண்ட நாட்டார் மக்களையும் அவர் கேலிசெய்தார். பசவர் வடமொழியில் எழுதாமல் மக்களின் மொழியான கன்னடத்தில் தன்னுடைய கருத்துக்களைத் தீவிரமாகப் பரப்பினார்.

இந்தப் பக்தியெனும் கொடும்பொருளை கொண்டு செல்லாதே
அறுக்கும் ரம்பம் அது
போகிற பொழுதும்
வருகிற பொழுதும்
அறுக்கும் அது அறுக்கும்!

அவரைப் பின்பற்றியவர்கள் அவர் எந்தச் சாதியமைப்பை தீவிரமாகச் சாடினாரோ அதையே தங்களின் அடையாளமாக மாற்றிக்கொண்டார்கள். அவரின் வழிவந்தவர்களே தனிச் சாதியாக மாறினார்கள். லிங்காயத்துகள் எனப்படும் அம்மக்கள் எண்பது லட்சம் பேர் கர்நாடகத்தில் தனி ஆதிக்க ஜாதியாக உள்ளார்கள். அதைப் பசவர் இன்றிருந்தால் கடுமையாகச் சாடியிருப்பார். பசவர் அன்றிருந்த சமூக, சாதியமைப்பை கேள்விக்குள்ளாக்கும் நோக்கில் ஒரு அதீத முடிவை எடுத்தார். செருப்பு தைக்கும் வகுப்பை சேர்ந்த ஒரு இளைஞனுக்கும், பிராமணப் பெண்ணுக்கும் கலப்புத் திருமணம் செய்ய முயன்றார். மன்னன் கோபங்கொண்டு இரு குடும்பத்து ஆட்களின் கண்களைப் பிடுங்கினான். அவர்களின் உடல்கள் யானைகளால் நசுக்கப்பட்டன. கொதித்து எழுந்து வீரசைவர்கள் வன்முறையில் ஈடுபட்டார்கள். பசவர் எவ்வளவோ தடுத்தும் வன்முறையை விடவில்லை. அதற்குள் அவரின் சமூகம் சிதறி, பசவர் இறந்து போயிருந்தார். மன்னன் அதற்குப் பின்னர்க் கொலை செய்யப்பட்டான்.
ஏழ்மையாக வாழ்ந்த பசவர் செல்வமில்லாமல் இறைவனுக்கு ஆலயம் எழுப்ப முடியாத தன்னுடைய நிலையை இப்படிப் பாடுகிறார்:

செல்வர்கள் சிவனுக்கு ஆலயங்கள் அமைப்பார்கள்
ஏழை அடியவன் யான் என்ன செய்வேன்?
என் கால்களே தூண்கள்
என் உடலே ஆலயம்
என் தலையே தங்கக் கோபுரம்
நதிசங்கமங்களின் இறைவனே காதுகொடுத்து கேள்
நிலையானவை நிலைகுலைந்து போகும்
நகர்பவை என்றும் நிலைத்திருக்கும்!

இராஜராஜனும், ஜெயலலிதாவும்!


அண்டம், ஆலயம், ஆட்சி – அவன் இராஜராஜன்
இராஜராஜ சோழன் பதினோராம் நூற்றாண்டில் கட்டிய 66 அடி அற்புதம் தான் பெரிய கோவில். அந்த நூற்றாண்டில் இந்தியாவில் கட்டப்பட்ட மகத்தான கலைப்படைப்பு இது என்கிற கட்டிடவியல் பேராசிரியர் ஜார்ஜ் மிச்சேல். இந்தக் கோயிலுக்குத் தன்னுடைய பெயரை வழங்கிய ராஜராஜசோழன், அதனைத் தன்னுடைய அதிகாரத்துக்கான திறவுகோலாக மாற்றிக்கொண்டான்.


சோழர்கள் அரசியல் சூழலைப் பற்றிய வல்லுனரான பேராசிரியர் செண்பகலட்சுமி விரிவாக இதனை ‘ஆண்டவன், ஆலயம், ஆட்சி ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு’ என்கிறார்.ராஜராஜன் ஆட்சிக்கு வந்திருந்த பொழுது சோழ தேசம் சிக்கலில் சிக்கியிருந்தது. கன்னட மன்னனிடம் கண்ட தோல்வியின் காயங்கள் ஆறியிருக்கவில்லை. உள்ளூர் அரசர்கள், கிராமத்துப் பெருந்தலைகள், வியாபாரக் குழுக்கள், பிராமணர்கள், நெற்பயிர் விளைவித்த வேளாளர்கள் என்று எண்ணற்ற அதிகார மையங்கள் இருந்தன. இவை அனைத்தையும் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அவருக்குப் படையோ, சிறந்த அதிகாரக் குழுவோ இல்லை. அதனால் பெரியகோயிலை அதற்கான கருவியாக மாற்றிக்கொண்டார். இந்தக் கோயில் அவரைப் பல நாடுகளைப் பிடித்தவராக, அதே சமயம் கருணை கொண்ட பக்திமானாகப் பறைசாற்றியது.


இந்தக் கோயிலில் சிற்பம், ஓவியம், இசை, நாட்டியம் எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்க்கிற முயற்சியை ராஜராஜன் மேற்கொள்கிறார். அதே போல, இங்கே இருந்தே வரி வசூல் செய்கிற வழக்கமும் இருந்தது. கோயிலுக்கு என்று பல ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. கோயிலுக்குள்ளேயே அரசு நிர்வாகம் நடப்பதும் நிகழ்ந்தது. பல்வேறு இனக்குழுக்களைச் சேர்க்கும் வகையில் வேத வழிபாடு, தமிழ் வழிபாடான பூவைக் கொண்டு செய்யும் பூஜை, உணவு, ஆடைகள், ஆபரணங்கள் காணிக்கையாக வழங்குவது ஆகியவை உடன் சேர்க்கப்பட்டன. இவை உயிர்ப்பலி தந்த வேதகாலப் பழக்கத்தில் இருந்து மாறுபட்டது. பல்வேறு மக்களின் தெய்வங்களை ஆலயத்தில் பல்வேறு பகுதிகளில் செதுக்குவதும் திட்டமிட்டு நிகழ்ந்தேறியது. அதுவரை நான்கு வர்ணங்களுக்குள் வராதவர்களைச் சூத்திரர்கள் என்று அழைத்து அவர்களிடம் இருந்து உடல் உழைப்பை பெறுவதையும் அவர் சாதித்தார். செப்புத் திருமேனிகளின் பொற்காலமாக அவரின் காலம் இருந்தது.

 

இருநூறு கிலோ தங்கம் முதல் எண்ணற்ற செல்வங்களைக் கோயிலுக்கு வழங்கிற ராஜராஜன் அதற்கான செல்வதை வரி, போர்கள், வெளிநாட்டுப் படையெடுப்புகள் வியாபாரம் ஆகியவற்றின் மூலம் பெற்றார். அதற்கு முன் எந்த இந்திய அரசனும் செய்யாத முயற்சியான மரத்தால் ஆன படகுகளை வியாபாரத்துக்காக உருவாக்கினார். அதன் மூலம் வங்கக்கடல் சோழர்களின் ஏரியாக அவரின் காலத்தில் திகழ்ந்தது. இலங்கையை வெஞ்சினத்தோடு கொள்ளையிட்டார். சுமத்ராவின் ஸ்ரீவிஜய அரசோடு போட்டியிட்டு சீனாவுடன் வியாபாரம் செய்தார்கள். முத்து, ஆடைகள், நறுமணப் பொருள்கள் விற்றுக் கற்பூரம், உலோகங்கள், சீனப் பீங்கான் பாத்திரங்கள் பெற்றுச் சோழர்கள் திரும்பினார்கள்.
தமிழகம் இந்தியாவில் இருந்து மாறுபட்டு தனிமனித வழிபாட்டின் உச்சத்தில் உள்ளது. இங்கே அவர்களின் முதல்வர் ஜெயலலிதா சிறைத்தண்டனையை ஊழல் வழக்கில் பெற்ற பொழுது பலர் தற்கொலை செய்து கொண்டார்கள். ‘தெய்வத்தை மனிதன் தண்டிப்பதா?’ என்று கேள்வி நிரம்பிய போஸ்டர்கள் எழுந்தன. ராஜராஜ சோழன் தான் இறைவனை வழிபட்டதோடு நில்லாமல், தன்னையும் வழிபாட்டு பொருளாக மாற்றினான். அதன் எச்சமும், தொடர்ச்சியும் இன்னமும் தமிழகத்தில் இருக்கின்றதோ என்னவோ!
மூலம்: சுனில் கில்னானி
சுருக்கமான தமிழில்: பூ.கொ.சரவணன்