எல்லா எல்லைகளும் கடந்து எழுக – மகாகவி குவேம்பு


மகாகவி குவேம்பு கன்னடத்தின் பெருங்கவிஞர். அடையாளங்கள் கடந்து மானுடம் பேசியவர். அவருடைய எட்டாண்டு உழைப்பினில் எழுந்த ஶ்ரீ ராமாயணத் தரிசனம் ராமனையும் தீக்குளிக்க வைத்தது. குவேம்புவின் கண்களுக்கு ரோஜா மலர்கள் மன்மதன் முத்தமிட்டு ரதியின் இதழில் இருந்து வழிந்த குருதியாகக் காட்சியளித்தது. சொர்க்கத்தின் கதவுகள் ஹேமியின் காதலன் என்ற போதே எனக்குத் திறக்கும் எனத் தன் மனைவியின் மீதான பேரன்பு மேலிட எழுதினார். ஞானபீடம் முதலிய விருதுகளை வென்ற அவரின் ‘O nanna chetana’ கவிதை தமிழில்

என் ஆன்மாவே
எல்லா எல்லைகளும்  கடந்து எழுக!

எல்லா வடிவங்களையும் கடந்து எழுக
ஆயிரம் நாமங்களும், அடையாளங்களையும் கடந்து எழுக
என் உணர்வுகள்  இதயத்தைக் குத்திக்கிழிக்கிறது என்றாலும்
எல்லா எல்லைகளும் கடந்து எழுக

ஒரு நூறு சாதிகளின் பதர்களை ஊதி தள்ளுக

தத்துவங்களின் போதாமைகளைக் கடந்து எழுக
என் ஆன்மாவே !
தொடுவானம் தாண்டியும் எழுக
என் ஆன்மாவே
எல்லா எல்லைகளும் கடந்தெழுக
Kuppali Venkatappa Puttappa's 113th birthday

முடிவுறாத சாலையில் எங்கும் சோர்ந்து சுணங்கி உறங்காதே
கூடுகள் எழுப்பிக் கட்டுண்டு கலங்காதே
இயன்றதை அடைந்து விட்டு இன்புற்று நிற்காதே
அழியாமல் இரு
என் ஆன்மாவே
எல்லா எல்லைகளும் கடந்து எழுக

அழிவற்றது எப்போதும் அழியாது
யோகி அழிவற்றவன் ஆகிறான்
நீ அழிவற்றவன், எப்போதும் அழிவற்றிரு
அழிவற்று இரு இரு இரு இரு
என் ஆன்மாவே
எல்லா எல்லைகளும் கடந்து எழுக

தமிழில்: பூ.கொ.சரவணன்

ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம் -மானுடம் ததும்பும் உலகம்


ஜெயகாந்தனின் ‘ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம்’ எனும் மானுடம் ததும்பும், அன்பு மிகைத்த, வெறுப்புகள் அற்றதொரு உலகினில் வசித்து விட்டு வருகிறேன். நாவலில் வருகிற ஹென்றி அடையாளங்கள் அற்றவன். அல்லது இன்னமும் சரியாகச் சொல்வதென்றால் அடையாளங்களைப் பொருட்படுத்தாதவன். ‘முரண்பாடுகள் இல்லாத, மோதல்கள் இல்லாத, முணுமுணுப்புகள் இல்லாத, சண்டைகள் இல்லாத, குறைகள் இல்லாத, முறையீடுகள் இல்லாத, எதிர்பார்ப்புகள் இல்லாத, ஆக்கிரமிப்புகள் இல்லாத, அதிகாரங்கள் இல்லாத, அன்பு மட்டுமே’ தழைத்த உலகம் அது.

ஹென்றியின் பப்பாவும், அவனும் உரையாடிக்கொள்ளும் கணங்களில் வழியும் பிரியமும், வன்மங்கள் அற்ற நெருக்கமும், அவ்வப்போது இயல்பாகக் கசிந்து பெருக்கெடுக்கும் கண்ணீரும் நம் கரங்களிலும் ஒட்டிக்கொள்கிறது. ‘என் மதம் எவ்வளவு உசத்தினாலும் அதை என் பிள்ளை மேலே திணிக்கக் கூடாது’ என்கிற பப்பா ‘பிரார்த்தனை என்பது வேண்டுவது அல்ல, விரும்புவது’ என்று நெகிழவைக்கிறார். பப்பா என்கிற சபாபதி, ‘யாரும் யாரையும் அடிக்கக் கூடாது. சண்டையே வேண்டாம்.’ என்று வன்முறையற்ற ஒரு புத்துலகை விரும்புகிறார். கடுமையான அடக்குமுறையால், பூவரச மரத்தின் குச்சியால் மட்டுமே பேசும் கொடுமைக்கார தந்தைக்குள் இருக்கும் மெல்லிய மனிதத்தை நாவல் புலப்படுத்துகிற போது பால்யகால அடிகளின் நினைவுகள் எட்டிப்பார்த்தன.

இந்தக் கதையில் வரும் மனிதர்கள் சொத்துக்களை விடத் தர்மத்தை பெரிதென்று நம்புகிறார்கள். தியாகத்தைச் செய்வதில் தங்களுக்குள் போட்டி போடுகிறார்கள். அவர்கள் அறத்தின் உச்சங்களை மானுட கசடுகளிடையே வெகு இயல்பாக அடைகிறார்கள். தனக்குப் பிரியமான வேறொருவரோடு வெளியேறுகிற மனைவியைக் கொல்ல சொல்லும் கவுரவங்களை ஓரங்கட்டி வைத்துவிட்டு மனசாட்சியின் குரலுக்குச் செவிமடுக்கிறார்கள். சமயங்களில் உறவுகளின் உன்னதம் காக்க தீங்கில்லாத பொய்களைச் சொல்கிறார்கள். காயப்பட்டு நிற்கும் முன்பின் தெரியாத மனிதர்களுக்கு மனம் கரைய கண்ணீர் வடிக்கிறார்கள். சொந்த காயங்களைத் தாண்டி துரோகம் இழைத்தவர்கள் மீது நிகழ்த்தப்படும் சாதிக்கொடுமைகளுக்கு எதிராகக் கவலைப்படுகிறார்கள், அவற்றைக் கடந்து நேசிக்கக் கற்றுத்தருகிறார்கள். 

Image may contain: one or more people and text

கதையின் நாயகன் ஹென்றி கிழங்கு வைக்கிற பெண் துவங்கி, சிறுவர்கள் வரை அனைவரையும் சமமாக மதித்துக் கைகூப்பி வணக்கம் செலுத்துகிறான். அழுதும், பயந்தும் படிக்கிற கல்வி என் மகனுக்கு வேண்டாம் என்கிற பப்பாவின் பேரன்பின் நிழலில் மனிதர்களை அவர்களின் குறைகளோடு ஏற்று அன்பு செலுத்துபவனாக வளர்கிறான். தந்தையின் வேர்கள் தேடி செல்கையிலும், சக மனிதர்களின் துயர்களுக்குச் செவிமடுக்கிறான். கொள்கைகள் என்று தனக்கொன்றும் இல்லை என்று மனிதர்களின் மனதிற்கு முக்கியத்துவம் தருகிறான். அவன் கண்களுக்கு மரத்தில் குதித்தோடும் மந்திகளும், மலையின் பேரழகும், குளிக்கிற பெண்ணும் ஒரே அழகியலோடு ரசிப்பதற்கு உரியவர்கள் ஆகிறார்கள். அந்தப் பார்வையில் மனச்சாய்வுகள் இல்லை. சந்தேகங்கள் சுவடின்றி மனிதர்களை நம்புகிறான். மனதை மட்டும் ரம்மியமாகச் செலுத்தியபடி, வாழ்க்கை இழுக்கும் போக்கினால் புகார்கள் இன்றிப் பயணிக்கிறான். புதிய அனுபவங்களைக் கண்டடைகிறான். 

Image result for ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்

ஏறத்தாழ நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட இந்த நாவலில் தனிமனிதர்களின் விடுதலைக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. சமூகத்தின் கட்டுப்பாடுகள், போலித்தனங்கள், அடக்குமுறைகளில் இருந்து விலகி தங்களுக்கான வாழ்க்கையை வாழ முயல்பவர்கள் இயல்பாகக் கண்முன் நடமாடுகிறார்கள். ‘நான் திருமணங்களுக்கோ, ஆண் பெண் உறவுகளுக்கோ எதிரியில்ல…எதற்குமே எதிரியாக இருப்பது சரியல்ல… ஆனால்..ஆனால் எனக்குத் திருமணம் அவசியமில்லை என்று நான் நினைக்கிறேன். நான் திருமணம் செய்து கொள்ளமாட்டேன். எனக்குக் கூழ் மட்டும் போதும். எல்லாரும் கூழே குடிக்க வேண்டும் என்றா சொல்லுகிறேன்? நீங்கள் சொல்கிற மாதிரி இந்தக் கிராமங்களும், இங்கே வாழ்கிற மக்களும் நகர்வாழ்க்கையோடு பேதமற கலந்து போகிற நாள் வரலாம். வரட்டுமே. அதற்கு நானும் ஏன் ஆசைப்பட வேண்டும்?’ என்கிற ஹென்றியின் குரல் எல்லாக் காலத்திலும் விடுதலை நாடும் மனங்களில் ஒலிக்க வேண்டியது. மந்தைத்தனங்கள் தாண்டி மானுடம் நாடுபவர்களை வழிநடத்தக்கூடிய, மனதின் வன்மங்களை, கசடுகளைக் கரைக்கிற அற்புதத்தைப் புரியும் ஆரவாரமற்ற முக்கியமான நாவல் இது.

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்
ஜெயகாந்தன்
பக்கங்கள் 316
விலை : 325
காலச்சுவடு பதிப்பகம்

பெரியார் – நூல்கள், கட்டுரைகள், புத்தகங்கள்


 பெரியாரின் பிறந்தநாள் இன்று.
தமிழகத்தின் சமூக, அரசியல் பரப்பை மாற்றிப்போட்ட தந்தை பெரியார் எனும் பேராளுமையை புரிந்து கொள்ள, அவரின் சிந்தனைகள், செயல்பாடுகள், தாக்கம் குறித்து உணர இந்த பட்டியல் உதவும். இதில் மின்னூல்கள், ஆங்கில கட்டுரைகள், தமிழ் கட்டுரைகள், மொழிபெயர்ப்பு என அனைத்தும் அடக்கம்.

*பெரியாரைப் புரிந்துகொள்வோம்*
Image may contain: 1 person, sitting
*Understanding Periyar*

————————–

*நூல்கள்*

பெரியார் இன்றும் என்றும் – விடியல்
https://goo.gl/jrKQRT

பெரியார்: சுயமரியாதை சமதர்மம் – எஸ்.வி.ராஜதுரை & வ.கீதா – விடியல்
https://goo.gl/gKbDoS

பெரியார் – அ.மார்க்ஸ்
https://goo.gl/pGHfyU

பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள்- ஆனைமுத்து தொகுப்பு – http://dvkperiyar.com/?page_id=17544

பெரியார் மின்னூல்கள் பெருந்தொகுப்பு:http://dvkperiyar.com/?page_id=17518

இதில் சில நூல்களின் சுட்டிகள் கிடைக்கும்
https://goo.gl/KuyrRA

————————–

*எளிய அறிமுகத்திற்கு சில கட்டுரைகள்*

பெரியார் என்றொரு கலகக்காரர் – கே.ஏ. அப்பாஸ்
https://goo.gl/m1f3Ci

ஏனெனில், அவர் பெரியார்! – ப.திருமாவேலன்
https://goo.gl/x23CQ8

பெரியார் எனும் கல்வியாளர்! – பூ. மணிமாறன்
https://goo.gl/fkH6V5

பெரியார் களஞ்சியம் – https://goo.gl/JZFP6C

புனிதங்களைப் பொசுக்கியவர்: புகழ்பெற்ற அரசியல் அறிஞர் பார்வையில் பெரியார்! (Translation of Sunil Khilnani’s ‘Sniper Of Sacred Cows’)
https://goo.gl/BKDYfX

Sniper Of Sacred Cows – Sunil Khilnani
https://goo.gl/bg5zEj

‘Periyar was against Brahminism, not Brahmins’ – Gnana Rajasekharan IAS
https://goo.gl/RGdujg

Why Periyar would have led today’s ‘anti-nationals’ – Manu S Pillai
https://goo.gl/JboJq9

Ambedkar and Periyar’s intellectual comradeship – V. Geetha
https://goo.gl/3vRHRE

A Lesson from Periyar on the Tension Between Elections and Social Transformation – A.R. Venkatachalapathy
https://goo.gl/oFjgsu

Footprints Of The Original ‘Anti-Nationals’ – A.R. Venkatachalapathy
https://goo.gl/5QhTZ9

Iconoclast, Or Lost Idol? – S. Anand
https://goo.gl/rBgKN4

*Interview with S.V. Rajadurai and V. Geetha:*

Part 1: Periyar’s ideals and today’s Tamil Nadu
https://goo.gl/mKowXz

Part 2: Periyar and Dalits
https://goo.gl/r684rn

Part 3: Ambedkar and Gandhi in Periyar’s mind
https://goo.gl/QdDLKX

———————————–

*பரந்துபட்ட புரிதலுக்கு*

காந்தியின் மறைவு குறித்து பெரியார்
http://on.fb.me/1eOPGj5

பெரியார் – தமிழ் எழுத்து சீர்திருத்தம்
http://on.fb.me/19xGD97

சினிமா, நாடகம் – பெரியார்
http://on.fb.me/16sdQ3w

பெரியார் – ஜெயகாந்தன்
http://on.fb.me/1cSbvS1

Periyar on the Constitution
http://on.fb.me/19xMefv

கர்ப்பக்கிருக நுழைவுக் கிளர்ச்சி ஏன்?
http://on.fb.me/1b8vE2V

குடிஅரசு தொகுப்பு 1925- 1938
http://bit.ly/1cKzbJ4

பெரியார் களஞ்சியம் பெரியார் சிந்தனைகள்
http://bit.ly/14SBkMY

பெரியார் – போஸ்
http://on.fb.me/1ackNaq

நீதிக்கட்சி இயக்கத்தின் 1917ஆம் ஆண்டு செயல்பாடுகள்
http://on.fb.me/14n5wwe

பெரியாரின் மரண சாசனம்
http://on.fb.me/1b8vE2V

பெரியார்: கடவுள் மறுப்பு ஒரு விளக்கம்
http://on.fb.me/14IGbfx

காமராசர் – பெரியார்
http://on.fb.me/16VAq2T

பெரியார் பெயர் வந்தது எப்படி?
http://on.fb.me/1cUfzBk

பெரியார் பிற மதங்களை விமர்சிக்கவில்லையா?
http://on.fb.me/15lCcFU

புத்தர் – பெரியார்
http://on.fb.me/17TJVwL

குருகுலப் போராட்டம்
http://on.fb.me/12cB9uT

நேரு – பெரியார் கார்ட்டூன்
http://on.fb.me/17TKczA

சூத்திரர்கள்
http://on.fb.me/1eRmRm1

இலங்கை உபன்யாசம் குடி அரசு 20.11.1932
http://on.fb.me/14Y2WQX

வன்னியர் சங்க மாநாட்டில் பெரியார்
http://on.fb.me/16ZZ9TH

இந்த நாட்டில் காந்தி சிலைகள் இருப்பதே அவமானம் – பெரியார்
http://on.fb.me/16CXsx9

சாதி ஒழிப்புக்கு பெரியார் தரும் திட்டங்கள்
http://on.fb.me/1cUh9UQ

பட்டியல் சாதி – பெரியார்
http://on.fb.me/17Y5XhJ

Ambedkar’s Resignation
http://on.fb.me/16WQM9w

பெரியாரும் – மதுவிலக்கும்
http://on.fb.me/13UzJD9

கீழவெண்மணி
http://on.fb.me/1dxmUFL

முதுகுளத்தூர் கலவரம் – பெரியார்
http://on.fb.me/13UAnjT

விநாயகர்சதுர்த்தி – பெரியார்
http://on.fb.me/1atyG5m

பறைச்சி-ரவிக்கை
http://on.fb.me/15QEbaa

மகாத்மா என்கின்ற பட்டத்தை நீக்குதல்
http://on.fb.me/15odTsq

காந்தியின் கடவுள்
http://on.fb.me/18Rx5Vx

இந்திய அரசியல் சட்டத்தின் ‘முதல்’ – திருத்தம்
http://on.fb.me/18myzTN

ஜகதீச சந்திரபோஸ் காந்தியின் விரோதியா?
http://on.fb.me/18myBLl

காரைக்குடி ஜில்லா முதலாவது அரசியல் மகாநாடு
http://on.fb.me/18RxKpU

ஜெயலலிதா-புனைவில் புலப்படும் அரசியின் வாழ்க்கை!


சமகால அரசியல் கதைகள் பெரும்பாலும் புனைவு வடிவம் பெறுவதில்லை. குறிப்பாகத் தமிழகத்தில் அரசியல் தலைவர்களின் வாழ்க்கை நாவலாக அரிதிலும், அரிதாகவே வந்திருக்கின்றன. சினிமாவுக்குப் போன சித்தாளு எம்ஜிஆரை குறிப்பிடுவது என்பார்கள். வெட்டுப்புலி நாவலில் திராவிட இயக்க அரசியல் இழைந்து நகரும். சமகாலத் தலைவர்கள் குறித்த வாழ்க்கை வரலாறுகள் பெரும்பாலும் புகழ் பரணிகளாகவே அமைகின்றன. ஆங்கிலத்தில் தமிழகத்தைச் சேர்ந்த தலைவர்கள் குறித்த வாழ்க்கை வரலாறுகள் மிகச் சொற்பம். அண்ணா குறித்து ஒரு நூல், மறைமலையடிகள் குறித்து ஒரு நூல் ஆகியவை நினைவுக்கு வருகின்றன. இருவர் படத்தை எக்கச்சக்க நண்பர்கள் சிலிர்ப்போடு புகழ்வதைக் கண்டிருக்கிறேன். ஆங்கிலத்தில் ஜெயலலிதா இறந்த பின்பு வாஸந்தியின் சிறுநூல் வெளிவந்தது. அவருடைய வாழ்நாளில் நீதிமன்ற தடையை அவர் பெற்றிருந்தது நினைவிருக்கலாம்.

இந்தச் சூழலில் ஆங்கிலத்தில் ஜெயலலிதாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு அனிதா சிவக்குமரன் ‘The Queen’ என்கிற நாவலை எழுதியிருக்கிறார். ஐந்து வருடங்களுக்கு முன்னரே எழுதிய நாவலை தற்போது தான் வெளியிட்டு உள்ளார். நாவல் முழுக்க முழுக்க ஜெயலலிதாவின் வாழ்க்கையின் பிரதி என்றுவிட முடியாது.

Image result for THE QUEEN ANITA SIVAKUMARAN

கலையரசி என்கிற நாயகி தமிழ் வேர்கள் கொண்டவராகக் காட்டப்படுகிறார். அவரின் மேற்படிப்புக் கனவுகள் பொசுங்குகிற கணத்திலும், தாத்தா என்று வாட்ச்மான் நெஞ்சில் சாய்ந்து அழ மருகுகிற அன்புக்கு ஏங்கும் இளம் நடிகையாகப் பதிய வைக்கப்படுகிறார் கலையரசி. ‘பின்க்கியை தவிர எனக்குத் தோழிகள் இல்லை’ என்கிற கலையரசியின் மனக்குரல் ஜெயலலிதாவின் தனிமை மிகுந்த வாழ்க்கையை நினைவூட்டுகிறது.

முழுக்கப் பி.கே.பி என்கிற எம்.ஜி.ஆரை நினைவுபடுத்தும் கதாபாத்திரத்தின் நிழலில் வளர்கிற ஒருவராகக் கலையரசி இல்லை. அவரின் திரைப்படங்களை அவரின் முகத்துக்கு நேராக விமர்சிக்கிறார்.’வசனம் பேசியே வில்லன்களைத் திருத்துறீங்க. அவங்க உடனே திருந்தி உங்க காலில விழறாங்க. ..நீங்க ஒரு சாக்கடை பக்கமா வரீங்க. நீங்க அதில கால் வைக்கக் கூடாதுனு ஒருத்தன் நீட்டுவாக்கில விழறான். என்ன சினிமா இது?’ என்கிற கணத்தில் தனித்த ஆளுமை வெளிப்படுகிறது.

கதை நேர்க்கோட்டில் பயணிக்காமல் முன்பின்னாகப் பயணித்து வாசிப்பு விறுவிறுப்பைக் கூட்டுகிறது. புனைவு என்கிற வெளியின் சுதந்திரத்தோடு ஜெயலலிதாவின் வாழ்க்கையை மாற்றியும் கதைப்போக்கை அமைக்கிறார் அனிதா. ஆகவே, தெரிந்த கதை தானே என்கிற சலிப்போடு நூலை வாசிக்க முடியாது.

விமர்சனங்கள் பெரும்பாலும் இல்லாமல் ரத்தமும், சதையுமாகக் கலையரசியின் வாழ்க்கை கதையாக விரிந்தாலும் தருணங்களில் கூர்மையான வரிகள் கவனிக்க வைக்கின்றன. ‘இந்த ஆடம்பரமான கல்யாணத்தைப் பத்திய இந்தக் கட்டுரையை எடிட்டர் வெளியிட மாட்டார். அவர் ஒன்னும் மோசமான மனுஷனில்லை. ஆனா, அவர் அலுவலகத்தைக் கட்சி குண்டர்கள் உடைக்கிறதை விரும்ப மாட்டார். அவமதிப்பு வழக்குல உள்ள போய் மிதிபட அவர் தயாரில்லை. அவர் மனைவி முகத்தில் ஆசிட் அடிக்கிறதை அவர் எப்படித் தாங்க முடியும்?’

ஆண்களால் மட்டுமே சூழப்பட்ட அரசியலில் தனக்கு என்று ஒரு இரும்பு கூண்டை கட்டிக்கொண்ட கலையரசியின் வாழ்க்கைக்குள் வீடியோ கடை நடத்தும் செல்வி நுழைந்த பின்பு எப்படி ஊழல்மயமாகி போகிறது வாழ்க்கை என்பது எளிய, விறுவிறுப்பான நடையில் புலப்படுத்தப்படுகிறது. உதாரணத்துக்கு ஒன்று, ‘அதிகாரப்பூர்வமாக அவரின் சம்பளம் ஒரு ரூபாய் ..ஆனால், அவரால் எதையும் தனதாக்கி கொள்ள முடியும். விரலைக் கூடத் தூக்க வேண்டியதில்லை. பண மழை பொழிந்தது. ஒரு நோயுற்ற மனிதன் பல்வேறு நோய்களைச் சேர்ப்பது போல அதிகாரத்தில் இருந்தபடி அவர் சொத்துக்களைக் குவித்தார்.’

எனினும், இறுதியில் கலையரசி கைது செய்யப்பட்ட பின்பு வரும் விவரிப்பில்
கலையரசி மீது அனுதாபம் ஏற்படுகிற தொனியிலேயே ஆசிரியரின் நடை அமைகிறது. கருணாநிதியின் அரசியல் ஓரிரு கணங்களில் கூர்மையாக விமர்சிக்கப்படுகிறது. தொலைக்காட்சிகளின் மூலம் நடத்தப்படும் அரசியல், சூப்பர் ஸ்டாரின் வாய்ஸ் படலம் ஆகியவையும் உண்டு.

படிப்படியாக அரசியலின் ஆழ அகலங்கள் புரிந்து கொள்ளும் கலையரசி எப்படி அரசி ஆகிறார் என்பதைச் சில கணங்களில் இயல்பாக நாவல் புரிய வைக்கிறது. குறிப்பாக மேடைப்பேச்சில் எப்படித் தனக்கான பாணியைக் கண்டடைகிறார் என்பது கண்டிப்பாக வாசிக்க வேண்டிய பகுதி. சர்வாதிகாரியாக உருமாறும் கலையரசியின் வாழ்க்கை பக்கங்கள் 2005-யோடு முடிந்துவிடுவது வாசகருக்கு சற்று ஏமாற்றத்தை தரலாம்.

நாவலின் பெரிய பலவீனம் கோட்பாட்டுத் தளத்தில் பயணிக்க மறப்பது. ஏன் பல்லாயிரம் பேர் கடவுளாக வழிபடுகிறார்கள் என்பதை இன்னமும் செறிவாக நம்ப வைக்காமல் கடப்பது. ஜெயலலிதாவின் வாழ்க்கையின் பிரதி அல்ல இந்த நாவல். அதன் தாக்கம் வெவ்வேறு இடங்களில் உண்டு. எல்லாவற்றுக்கும் மேலாகக் கலையரசியின் ஆழ்மனப்போராட்டங்கள் இன்னமும் நெருக்கமாகப் பதியப்பட்டு இருக்கலாம். எனினும், முக்கியமான முயற்சி.

Image result for THE QUEEN ANITA SIVAKUMARAN

The Queen
Anita SIvakumaran
Juggernaut Books
பக்கங்கள்: 280
விலை: 350

‘இதற்காகத்தான் உயிர்த்திருக்கிறேன் லூசி!’ – நெகிழ்த்தும் பால் கலாநிதியின் புத்தகம் #WhenBreathBecomesAir 


ஒவ்வொரு நோயாளியின் வாழ்க்கையும், அடையாளமும் உங்கள் கைகளில் இருக்கிறது. நீங்கள் கச்சிதமானவர் என்றாலும், உலகம் அப்படி இருப்பதில்லை. அறிந்து கொள்ள வேண்டிய ரகசியம் இதுதான். நீங்கள் தோற்பீர்கள். உங்கள் கரங்களோ, கணிப்போ தவறும். இருந்தாலும் நோயாளியின் வெற்றிக்காகப் போராடுவீர்கள். எப்பொழுதும் கச்சிதத்தை அடைந்துவிட முடியாது, எனினும், ஓயாமல் கச்சிதத்தை நெருங்கும் தேடலை தொடருங்கள். – பால் கலாநிதி

 

Paul Kalanithi

 

பால் கலாநிதி அவர்களின் வாழ்க்கை நெகிழவைப்பது. தமிழ் கத்தோலிக்கக் குடும்பத்தில் பிறந்த அவர் ஸ்டான்போர்ட் பல்கலையில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்றார். யேல் பல்கலையில் மருத்துவம் பயின்ற பால் கலாநிதி சிறந்த ஆய்வுக்கான விருதை பெற்றார். ஸ்டான்போர்ட் பல்கலையில் நரம்பியல் அறுவைசிகிச்சையில் ஆய்வை மேற்கொண்டார். அங்கேயே பேராசிரியராகும் வாய்ப்பு நெருங்கி வந்த சூழலில் அவருக்கு நுரையீரல் புற்றுநோய் இருப்பதாகக் கண்டறியப்பட்டது. வாழ்வுக்கும், மரணத்துக்கும் இடையில், மூச்சுக்காற்றுப் படிப்படியாக மடிந்து, காற்றாக மாறும் தன்னுடைய உணர்வுகளை, சிந்தனைகளை ‘WHEN BREATH BECOMES AIR’ எனும் தலைப்பில் புத்தகமாக அவர் எழுதினார்.

ஒரு கணத்தில் பல வருடத்தேடல் காற்றில் கரைந்ததுபோல பால் உணர்ந்தார். முதுகுவலி பின்னி எடுத்தது. பல மணிநேரமாகத் தொடர்ந்து நின்றபடி அறுவைச்சிகிச்சை செய்ததால் இருக்குமா? சுயநினைவு இல்லாமல் மயங்கி விழுந்து கிடந்ததை எப்படிப் புரிந்து கொள்வது? எடை திடீரென்று 80 கிலோவில் இருந்து 65 கிலோவாக குறைந்துவிட்டது… இதோ முடிவுகள் வந்துவிட்டன. ‘ஆமாம்! நான் புற்றுநோயால் இறந்து கொண்டிருக்கிறேன்’ என்பது போல நுரையீரல் நிறம்மாறித் தெரிந்தது.

பால் கலாநிதியின் அப்பா கிறிஸ்துவர், அம்மா இந்து. வீட்டை மீறி காதல் திருமணம் செய்து கொண்டு தகிக்கும் பாலைவனமான அரிஸோனாவில் அற்புதமான வாழ்க்கையை நடத்தினார்கள். இருந்தாலும் அம்மாவின் வீட்டில் கோபம் தீரவில்லை. பால் கலாநிதியை அம்மாவின் அம்மா சுதீர் என்றே அழைப்பார். அம்மா, பால் கையில் பல்வேறு புத்தகங்களால் நிறைத்தார். ‘மகனே! இந்தா. இது டிக்கன்ஸ், அது மார்க் ட்வைன், அப்புறம் ஆஸ்டின், அவர் தான் ஆலன் போ…படி. தேடு. படிப்பதன் பரவசம் உணர்ந்து கொள்.’ என்று அம்மா கைபிடித்துத் திறந்துவிட்ட உலகம் அப்படியே பாலை நிறைத்துக்கொண்டது. அப்பாவை போல மருத்துவராக ஆசைப்படாமல், இலக்கிய மாணவராக ஸ்டான்போர்டில் நுழைந்தார். நபகோவ், எலியட் பொழிகின்ற வார்த்தைகளை நிறைத்துக் கொள்வதாகப்பட்டது.

ஒருநாள் அவரின் காதலி அபிகைல், ‘நீ எப்ப பாத்தாலும் மேலான கலாசாரக் குப்பைகளையே படிக்கிறே. ஏன் இந்த மட்டமான புத்தகத்தைப் படிச்சு பாக்கக் கூடாது?’ என்று கையில் Satan his psychotherapy and cure by the unfortunate எனும் டாக்டர் காஸ்லெர் எழுதிய நூலை திணித்தாள். அதை வாசிக்க, வாசிக்க மனித வாழ்க்கையின் பொருளை உணர்த்தும் இலக்கியத்தைத் தாண்டிய ஒன்று இருப்பது புலப்பட்டது. அது இலக்கியத்தை வாசிக்க வழிசெய்யும் மிஸ்டர். மூளை. ‘அன்பு நண்பனே! உன் ரகசியங்களை அறிய வருகிறேன்.’ என மனித உயிரியல் துறைப்படிப்பிலும் பால் கலாநிதி சேர்ந்தார்.

கல்லூரி காலத்தில் பல்வேறு சாகசங்கள் பால் வாழ்க்கையை நிறைத்தன. ‘கல்லூரி கஃபேவில் மங்கோலியர்களைப் போலச் சோதனை செய்தோம், பக்கிங்காம் அரண்மனையின் வாசல்கள் முன்னால் கொரில்லா உடை அணிந்து நின்றோம், இரவில் மெமோரியல் தேவாலயத்துக்குள் நடு இரவில் சுவரேறி குதித்தோம்…தேவாலயத்தில் எதிரொலிக்கும் எங்கள் குரல்களைக் கூர்ந்து கவனிப்போம்… (என்னுடைய சாகசங்களை மேலும் மேலும் சொல்லி தம்பட்டம் அடிக்க இயலவில்லை.) விர்ஜினியா வூல்ப், அபீசீனிய அரச குடும்பத்து நபர் போல மாறுவேடமணிந்துப் போர்க்கப்பலில் ஏறிய கதையைக் கேட்டது முதல் என்னுடைய சிறுபிள்ளைத்தனமான சாகசமெல்லாம் ‘ஒன்றுமே இல்லை’ என்று சலித்துவிட்டது.’

மூளை பிணைக்கும், பிரித்துப் போடும் :

நரம்பு அறிவியல் பாடத்தின் ஒரு பகுதியாக மூளைக் காயங்களுக்கு ஆளான பல்வேறு நோயாளிகளைக் கவனித்துக் கொள்ளும் இல்லத்துக்குப் பால் போனார். அங்கே பல மழலைகள் தனிமையில் வெறித்தபடி இருந்தார்கள். ‘இவர்களின் பெற்றோர் எங்கே?’, ‘இவர்களை விட்டுவிட்டுப் போய்விட்டார்கள். பாவம், அவர்களும் வேறென்ன செய்ய முடியும்.’ என்று பதில் வந்தது. ஒரு பெண்ணைப் பார்த்து, அவளின் கரங்களை மென்மையாக ஏந்திக்கொண்டு, கண்களில் கனிவு ததும்பப் பால் சிரித்தார். ‘அந்தப் பொண்ணு என்னைப் பார்த்து சிரிச்சாங்க’, ‘இருக்கலாம்’ என்று சலிப்பான பதில் வந்தது. ஒன்று மட்டும் பால் மனதில் பதிந்தது. மூளை உணர்வுகளால் பிணைக்கும், உறவுகளை உடைத்தும் போடும்.

ஆங்கிலத்தில், ‘விட்மனும், மருத்துவமயமாகும் ஆளுமையும்’ எனும் தலைப்பில் ஆய்வு செய்ய இருப்பதாகப் பால் சொன்ன பொழுது காட்டுத்தீயை கண்ட மனித குரங்குகள் போல ஆங்கிலப் பேராசிரியர்கள் விலகி நின்றார்கள். ‘உயிரியல், அறம், இலக்கியம், தத்துவம் எல்லாம் சங்கமிக்கும் இடம் எது?’ என்கிற கேள்வி குடைகையில், ‘புத்தகங்களைத் தூக்கி ஓரமாக வை. போ மருத்துவம் படி’ என்றொரு குரல் கேட்டது. மருத்துவப்படிப்பில் சேர ஒரு வருடம் உழைக்க வேண்டும், விண்ணப்பம் முடிய இன்னுமொரு ஒன்றரை வருடம் ஆகும். இது எப்படிப்பட்ட அனுபவமாக இருந்தது, ‘இலக்கியத்தை ஒதுக்கி வைக்க வேண்டும். எனினும் புத்தகங்களில் இல்லாத விடைகளைக் கண்டடைய முடியும். வேறு வகையான மகத்துவத்தை, வேதனையோடு உறவுகளைப் புடம்போடவும், மனித வாழ்க்கையின் பொருள் என்ன என்று சாவிலும், சிதைவிலும் தேட முடியும்.’ இதற்கிடையே கேம்பிரிட்ஜில், தத்துவம் படிக்கப் போன பொழுது வார்த்தைகளை விட உயிரைப் பிடித்து வைத்திருக்கும் மூச்சை தேடுவதுதான் இன்னமும் கிளர்ச்சி தருகிறது எனப் பால் உணர்ந்தார். யேல் பல்கலையில் மருத்துவப் படிப்புக்கு அழைப்பு வந்திருந்தது.

வாழ்வு-மரணம் குறித்த தேடல் தொடர்ந்தது… அங்கேதான் தன்னுடைய காதலியான லூசியைப் பால் கண்டடைந்தார். எல்லையற்ற அன்பால் நிறைத்த லூசி ஒரு நாள் எப்பொழுதோ இறந்து போன ஒரு நோயாளியின் ஈசிஜி முடிவுகளைப் பார்த்துவிட்டு, ‘எவ்வளவு வேதனை அனுபவித்து அவர் இறந்து போயிருப்பார்?’ என்று கண்ணீர் வடித்தார். நூலான்ட் எனும் பேராசிரியர், ‘How we die’ நூலில் தன்னுடைய மருத்துவக் கல்வி கால நினைவொன்றை சொல்கிறார். அதைப் பால் புத்தகத்தில் நினைவுகூர்கிறார்.

ஒருநாள் இதயம் நின்று போய் ஒரு நோயாளி இறந்து போனார். எப்படியாவது அவரைப் பிழைக்க வைத்துவிட முடியாதா என்றெண்ணிய நூலான்ட், நெஞ்சை திறந்து, இதயத்தை மீண்டும், மீண்டும் அழுத்தி ரத்தம் கொப்பளிக்க, வியர்வை துளிர்க்க, உயிர் பிழைக்க வைக்க முயன்று சோர்ந்து நின்றார். நூலான்டின் கைகளில் ரத்தமும், தோல்வியும் கலந்து ஒழுகின. இப்படிப்பட்ட வாழ்க்கைக்கும், மரணத்துக்கும் இடையிலான போர்களை அனுதினமும் மருத்துவர்கள் மேற்கொள்வதாகவே படுகிறது.

When Breath Becomes Air

முதல் முறையாக ஒரு பிரசவத்தை வெற்றிகரமாக முடித்து, ஒரு பிஞ்சை கையில் ஏந்திய கணத்தில் பால் சிலிர்த்து முடிப்பதற்குள், அதற்கு முந்தைய நாள் குறைப்பிரசவமாகப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் இறந்து விட்டன எனும் செய்தி வருகிறது. ‘ஒரு நாள் பிறக்கிறோம், ஒரு நாள் நாம் இறப்போம், அதே நாள், அதே நொடி…பிறப்பில் ஒரு கால், இறப்பில் ஒரு கால். வெளிச்சம் ஒரு நொடி ஒளிர்கிறது, அதற்குப் பிறகு இன்னொருமுறை இருள்’ எனும் சாமுவேல் பக்கெட்டின் வரிகள் பால் கலாநிதியின் காதுகளில் ஒலித்தன.

பால், நரம்பியல் அறுவைசிகிச்சை நிபுணராகப் பயிற்சி பெற்றார். மூளை அறுவை சிகிச்சை ஒரு காவிய சோகம் கொண்ட ஒன்று. பால் கலாநிதியின் விவரிப்பை பாருங்கள்: ‘இங்கே வாழ்வதா, சாவதா என்பதல்ல சிக்கல்… எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழப்போகிறீர்கள்? அது அர்த்தமுள்ள வாழ்க்கையா?   மூளை கட்டியை கரைக்க கண் பார்வையை விடத் தயாராக இருப்பீர்களா? வலிப்பை சரி செய்ய உங்கள் வலது கை இயங்காமல் போவதை தாங்கிக் கொள்வீர்களா?’. இந்தத் துறை அறம், உணர்வு, மனம், உடல் ஆகிய எல்லா மட்டங்களிலும் முழுமையைக் கோரியது. வாழ்வின் பொருள், அடையாளம், மரணம் ஆகியவை நேருக்கு, நேராக மோதிக்கொள்ளும் களமாக இது தோன்றியது. பால், இதில் தன்னைக் கரைத்துக்கொண்டார்.

ஓயாமல் இயந்திரம் போலப் பல்வேறு அறுவை சிகிச்சைகளைச் செய்து கொண்டிருந்த காலத்தில் அறுவை சிகிச்சையில் பிரமிக்க வைக்கும் வகையில் செயல்பட்டாலும் தன்னுடைய முக்கியமான கடமையில் தவறுவதாகப் பால் உணர்ந்தார். ‘ஒரு மருத்துவரின் உச்சபட்ச லட்சியம் ஒரு உயிரை காப்பது இல்லை. எல்லாரும் ஒரு நாள் இறக்கிறார்கள். மரணத்தை, நோய்மையை நோயாளியின் குடும்பம் உணரும் வகையில் வழிகாட்டுவது முக்கியம்.’ ஒரு கடுஞ்சொல்லோ, அலட்சியமோ மொத்தமாக அவர்களை உடைத்துப் போடும். கத்தியை விட, வார்த்தைகளே விடுதலைக்கான கருவி.

அதிர்ச்சிகரமான தகவல்களை வெறும் தகவல்களாகச் சொல்வதை விட மென்மையாக, படிப்படியாக, நம்பிக்கை தரும் விதமாகச் சொல்வதை மருத்துவர் செய்ய வேண்டும். அறுத்து, இணைக்கும் அறுவை சிகிச்சைக்கான பிண்டமாக நோயாளியை பார்க்காமல் மனமும், உயிரும் நிறைந்த ஒருவராகக் கனிவோடு அணுக வேண்டும். எப்படிப்பட்ட பலமிகுந்த சிகிச்சையாலும் கூடக் காக்க முடியாது என்று புறப்பட்ட நிலையில், நோயாளியின் கரங்களைப் பற்றிக்கொண்டு உரையாடலைத் தொடங்குவது எப்படிப்பட்ட கதகதப்பை தரும்? PSYCHOGENIC SYNDROME என்பது அதிர்ச்சியான தகவல்களைச் சொன்னதும் ஏற்படும் வலிப்பாகும். இது ஏற்படாமல் தடுக்க அளந்து, ‘கவனித்துப் பேசும் சொற்கள் உதவும்’ என்கிறார் பால்.

மருத்துவத்தில், கப்லான்-மேயர் வளைகோடு ஒன்று உண்டு. ஒரு நோயில் நோயாளி பிழைப்பதற்கான வாய்ப்பை சொல்லும் வளைகோடு அது. மூளை சம்பந்தப்பட்ட நோய்களில் பிழைக்க வெகு,வெகு குறைவான சாத்தியங்களே உண்டு. ‘இன்னும் ஆறே மாசம் தான். பண்றதை எல்லாம் பண்ணிக்குங்க’ என்கிற தொனி கூடவே கூடாது என்கிறார் பால். ‘சில மாதங்கள் முதல் இரண்டு வருடம் வரை நீங்கள் இருப்பீர்கள்.’ என்று பொறுமையாகச் சொல்லலாம். பொருளாதார நிபுணர் போல அடித்துப் பேசி இருக்கிற கொஞ்சநஞ்ச நம்பிக்கையையும் புதைத்து விடக்கூடாது என்கிறார். ஒரு நோயாளிக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்யும் பொழுதும், ‘அவரின் அடையாளம், விழுமியங்கள், வாழ்வின் பொருள்’ என்று பலவும் நிறைந்த மனித மனதை புரிந்து கொள்ள வேண்டும். நான் தரும் அர்ப்பணிப்பால் வரக்கூடிய வெற்றியின் விலை அதிகம், தவிர்க்க முடியாத தோல்விகள் கூடத் தாங்கிக்கொள்ள முடியாத குற்ற உணர்வைத் தந்தன’ எனப் பால் கலாநிதி எழுதுகிறார்.

மரணத்தோடு மகிழ்வாய் இருத்தல் :

36 வயது இளைஞர்களில் 0.0012 பேருக்கு மட்டுமே நுரையீரல் புற்றுநோய் ஏற்படுகிறது. பால் கலாநிதி அதில் ஒருவர் ஆனார். பல்வேறு நோயாளிகளுக்கு என்ன ஆகிறது, ஏன் உடலின் பாகங்கள் சரியாக இயங்கவில்லை என அறிய முற்பட்டது வேறு. வலியை உணர்ந்து மருத்துவராக இருப்பதில் இருந்து நோயாளியாக மாறுவது வேறு. பால், ‘என் வாழ்க்கை மருத்துவராகவும், நோயாளியாகவும் இருப்பதற்கு இடையே கிழிபட்டது. மருத்துவ அறிவியலில் மூழ்கி, இலக்கியத்தில் எனக்கான விடைகளைத் தேடி, நான் போராடினேன். என் மரணத்தை எதிர்நோக்கிய படி, என் பழைய வாழ்க்கையைத் திரும்ப எழுப்புவதா, புதிய வாழ்க்கையைக் கண்டடைவதா?’ என்று குழம்பினார்.

மனைவியாக ஆகியிருந்த லூசியிடம், ‘நமக்கு ஒரு குழந்தை இருந்தால் நன்றாக இருக்குமில்லையா?’ என்று பால் கேட்டார். ‘நீங்கள் என்னோடு இருக்கப்போகிற காலத்தில் பிறக்கிற புது மலர் இந்தத் துயரங்களில் இருந்து திசைதிருப்புவாள் என்று எதிர்பார்க்கிறீர்களா? பால் மணம் மாறாத செல்வக்குழந்தைக்குப் பிரியாவிடை கொடுப்பது வலியைத் தராதா?’ என்று லூசி கேட்டார். ‘அப்படி நடந்தால் அது மிகச்சிறந்த அனுபவமாக இருக்காதா?’ என்று பால் கலாநிதி கேட்டார். வாழ்க்கை என்பது வேதனைகளைத் தவிர்ப்பதில்லை என்று பால், லூசி முடிவு செய்தார்கள். ‘நீட்சே, டார்வின் இருவரும் ஒரு உயிரினத்தின் மகத்தான பண்பு அயராமல் முயற்சி செய்வது என்றார்கள். சுலபமாக இறப்பது சிறந்த சாவாக இருக்க வேண்டியதில்லை. நாங்கள் ஒரு குழந்தையைப் பெற்றுக்கொள்வது என முடிவு செய்தோம். மரணிப்பதற்குப் பதிலாக ஒரு வாழ்க்கையைத் தொடர முடியும்.’ என்கிறார் பால்.

மரணத்தின் விளிம்பில் நின்றபடி பால் எழுதுகிறார், ‘ஒரு மருத்துவரின் கடமை மரணத்தை வென்றெடுப்பதோ, நோயாளிகளைப் பழைய வாழ்க்கைக்குத் திருப்புவதோ இல்லை. நோயாளியை, உடைந்து போகும் அவர்களின் குடும்பத்தினரை கரங்களில் தாங்கிக்கொள்ள வேண்டும். அவர்கள் எழுந்து நின்று, வாழ்க்கையை எதிர்கொள்ளும் வரையில், தங்களின் இருப்பு குறித்து உணரும் வரை ஆதரவாக இருக்க வேண்டும்.’

பாலின் மரணம் நிகழ்ந்த பின்பு லூசி எழுதியது :

‘பால் இறந்த பின்பு இதயம் நொறுங்க நாங்கள் இருவரும் இறுதியாக இணைந்திருக்கப் போகும் படுக்கையில் ஏறினேன். இதற்கு முன்பு நாங்கள் பகிர்ந்து கொண்ட படுக்கைகள் நினைவுக்கு வந்தன. எட்டு வருடங்களுக்கு முன்னால், நாங்கள் மருத்துவ மாணவர்களாக இருந்த போது  என் தாத்தா உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த போது தேனிலவை பாதியில் விட்டுவிட்டு, அவரைக் கவனித்துக் கொள்ள வந்தோம். படுக்கையில் இருந்து அடிக்கடி எழுந்து அவருக்கு மருந்துகள் கொடுத்துக் கவனித்துக் கொண்டோம். 22 மாதங்களுக்கு முன்னால், பாலுக்குப் புற்றுநோய் இருக்கிறது என்று உறுதி செய்யப்பட்ட பொழுது தாத்தா அனுமதிக்கப்பட்டு இருந்த அதே மருத்துவமனையின் இன்னொரு மாடியில் ஒரே படுக்கையில் கதறி அழுதோம். எட்டு மாதங்களுக்கு முன்னால் செல்ல மகள் க்யாடி பிறந்த பொழுது, அவளை எங்கள் இருவரின் கரங்களில் வளைத்துக் கொண்டு இருவரும் நன்றாக, நிம்மதியாக உறங்கினோம்.

இறுதிக்கடிதமாகத் தன்னுடைய மகளுக்குப் பால் எழுதியது :

‘உன் வாழ்க்கையில் உன்னைப்பற்றி நீயே விளக்க வேண்டிய கணம் ஒன்று வரும். நீ என்னவாக எல்லாம் இருந்தாய், நீ உலகத்துக்கு எப்படிப்பட்டவளாக இருந்தாய் என்றெல்லாம் பட்டியல் போட வேண்டிய தருணம் வரும். அப்போது செத்துக் கொண்டிருந்த ஒரு மனிதனின் நாட்களை அளவில்லாத இன்பத்தால் நிறைத்தாய் என்பதை மறந்துவிடாதே என மன்றாடிக் கொள்கிறேன். நீ தந்த இன்பத்தை அதற்கு முன் நான் வாழ்க்கையில் அனுபவித்ததில்லை, நீ தந்த இன்பம் மேலும், மேலும் வேண்டும் என்கிற வேட்கையை  ஏற்படுத்தவில்லை. மனம் நிம்மதியாக, நிறைவாக இருக்கிறது. இந்த நேரத்தில், இந்தத் தருணத்தில் அது மிகப்பெரிய விஷயம்.’

நூலில் பிரியம் வழியும் தருணங்கள் உண்டு. வலி உயிரை நோக வைக்க, மூச்சு விடவே முடியாமல், மரணம் படிப்படியாக பால் கலாநிதியை வியாபிக்கிறது. அப்போது லூசி அவரை தன் நெஞ்சில் பிணைத்து ‘மூச்சு விட முடிகிறதா பால்?’ என்கிறார்.

அத்தனை பிணியிலும், பேரன்பு முட்ட  ‘இதற்காகத்தான் உயிர்த்திருக்கிறேன் லூசி’ என்கிறார் பால்!

பிரபஞ்சனின் கதை மழை


பிரபஞ்சனின் கதை மழை நூலை வாசித்து முடித்தேன். ஜூனியர் விகடனில் தொடராக வந்த கட்டுரைகளும், மேலும் சில படைப்புகளும் இணைந்த கட்டுரைத் தொகுப்பு இது. வெவ்வேறு கதைகளின் வழியாகப் பிரபஞ்சன் பல்வேறு உலகங்களுக்கும், உணர்வுகளுக்கும் நம்மை அழைத்துச் செல்கிறார்.
கதை 1
அதிகார வர்க்கத்தில் தனக்கு மேலே இருக்கும் அதிகாரிகளுக்கு அஞ்சி, அஞ்சி வாழ்ந்து முதுகு ஒடிந்து போகும் பலர் இருக்கிறார்கள். செகாவின் ‘ஒரு குமாஸ்தாவின் மரணம்’ கதை இதை அங்கதமும், வலியும் கலந்து தொட்டுச் செல்கிறது. திரையரங்கில் குமாஸ்தா தும்முகிறார். முன்னால் மேலதிகாரி இருந்து அவர் மீது தும்மல் தெறித்து விட்டதாக உணர்கிறார். திரைப்பட அரங்கு, வண்டியேறும் இடம். அதிகாரியின் வீடு என்று நாள் முழுக்க மீண்டும், மீண்டும் பார்த்துத் தெரியாமல் தும்மியதற்கு மன்னிப்புக் கோருகிறார். இறுதியில் பயத்தில் வெளிறிப் போய் இறந்து போகிறார். பலர் அனுதினமும் செத்து செத்து பிழைக்கிறார்கள். அவ்வளவு தான் வேறுபாடு.

கதை 2

‘மணியன் பிள்ளை’ எனும் திருடனின் சுயசரிதை மலையாளத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. சாமர்த்தியமான திருடனான மணியன் பிள்ளை தானே தன்னுடைய வழக்குகளை நடத்துவது வழக்கம். ஒரு சிறுமியின் வாட்சை திருடி விட்ட வழக்கில் தன்னுடைய சாமர்த்தியத்தால் தான் திருடவில்லை என நிறுவுகிறார். அந்தச் சிறுமி உடைந்து அழுகிறாள். மணியன் பிள்ளைக்கு மனம் பதைபதைக்கிறது. ஒரு கடிதத்தை அந்தச் சிறுமிக்கு எழுதுகிறார்:’மகளே உன்னை இனிமேல் நீதிமன்றத்துக்கு இழுக்கமாட்டேன். நீ அழக்கூடாது மகளே. உன்னுடைய வாட்ச் உன்னை வந்து சேரும்’ என்று மனிதத்தோடு அதை மீண்டும் ஒப்புவிக்கிறார்.Image result for மணியன் பிள்ளை

மூன்று திருடர்கள்:
சங்குத்தேவன் தர்மம் எனும் புதுமைப்பித்தன் கதையில் வரும் திருடனும் பணக்காரர்களிடம் கொள்ளையடிப்பவனாகப் பதற வைப்பவனாகத் தோன்றும் சங்குத்தேவை ஏழைப்பெண் ஒருத்தியின் திருமணத்துக்கு மரத்தில் இருந்து பணத்தைத் தூக்கிப் போடுகிறான். சங்குத்தேவன் போன்ற தர்மவான்கள் கதைகளின் மூலம் சாகாவரம் பெறுகிறார்கள். ரோல்தாலின் சிறுகதை ஒன்றில் வரும் ‘விரல் வித்தகன்’ இமைக்குக் கணத்தில் சம்பந்தப்பட்ட நபருக்கு தெரியாமலேயே அவரின் வாட்ச். பெல்ட். ஷூ லேஸ் என்று அனைத்தையும் பறிக்கிறான். அவனும் ஏழைகளிடம் திருடுவதில்லை. குதிரைப்பந்தயத்தில் யார் வெல்கிறார்களோ அவர்களிடமே கைவரிசை. அவனைக் கைது செய்யக் கிட்டத்தட்ட நெருங்கிவிட்ட போலீஸ்காரரிடம் இருந்து எப்படித் தப்பினான் என்பதைச் சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகரின் மொழிபெயர்ப்பில் தெரிந்து கொள்ளுங்கள். மூன்று வெவ்வேறு நாட்டின் கதைகளிலும் திருடர்கள் தங்களுக்கு உரிய தர்மத்தோடு இருப்பது புலப்படுகிறது.

Image may contain: sky and outdoor

வாழ்க்கை வேடிக்கையானது:

சோபி எனும் இளைஞன் கடும் பசியில் இருக்கிறான். அவனுக்கு வேலையுமில்லை. மொத்தமாகச் சிறைச்சாலை போய்விட்டால் வேளாவேளைக்குச் சாப்பாடு கிடைக்கும் எனத் திட்டம். ஒரு உணவகத்தில் சாப்பிட்டுவிட்டுப் பணம் கொடுக்காமல் இருந்தால் சிறைக்கு அனுப்புவார்கள் என்று உள்ளே நுழைகிறான். அவனின் கிழிந்த ஆடைகளைப் பார்த்து உள்ளேயே விடவில்லை. இன்னொரு உணவகத்தில் அதையே முயல்கிறான். அவனை அடித்துத் துவைக்கிறார்கள். ஒரு கடையின் கண்ணாடியை உடைக்கிறான். வந்த காவல்துறை அதிகாரியிடம், ‘நான்தான் உடைத்தேன்’ என்கிறான். கிண்டல் என்று நேசத்தோடு சிரித்துவிட்டு நகர்கிறார். ஒருவனிடம் குடையைக் களவாடுகிறான். அவனிடம், ‘குடையைத் திருடிவிட்டேன். என்னைக் காவல்நிலையம் அழைத்துப் போ’ என்கிறான். அவனோ, ‘நான் தான் குடையைத் திருடினேன். நீங்கள் தான் அந்தக் குடைக்குச் சொந்தக்காரர் போல. நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்.’ எனப் பெரிய கும்பிடு போட்டுவிட்டு நகர்கிறான்.

குடிகாரன் போல நடித்து வம்பு செய்கிறான். ‘இவர்களைக் கண்டுகொள்ளக் கூடாது. அப்படியே போய்விடுவார்கள்.’ என்று காவலர் கடக்கிறார். சர்ச் வருகிறது. குயிலோசை கேட்கிறது. கீதங்கள் இசைக்கின்றன.நிலவொளி பாய்கிறது. நாள் முழுக்க நடந்த நிகழ்வுகளும், மனிதமும், நம்பிக்கை காட்டியவர்கள் முகங்களும் அலையடிக்கின்றன. இனிமேல் உழைத்து வாழலாம் என நினைக்கிறேன். ‘ஒழுங்கா ஜெயிலுக்கு நட. இங்கே என்ன திருட வந்திருக்கியா?’ என ஒரு முரட்டுக்கரம் அவனைத் தள்ளிக்கொண்டு நடக்கிறது.

ஆண்களின் அநீதிகளுக்குப் பெண்களே முள் கிரீடங்கள் சுமக்கிறார்கள்:

மாதவியை விட்டு நீங்கிய கோவலன் பொருள் ஈட்ட மதுரை நோக்கி செல்கிறான். மாதவியின் கடிதம் வருகிறது: ‘என் பிழைப்பு அறியாது கையறு நெஞ்சம் கடியல் வேண்டும்.’ என்று மன்னிப்பு கோருகிறாள். உயர்ந்த குலத்தவள் கண்ணகி என்று போற்றுகிறாள். உள்ளே நான் உனக்கு நேர்மையாக இருந்தும் பிறப்பால் தாழ்ந்த குலத்தவள் தானே என்கிற குரல் கேட்கிறது. நீ பொய்கள் நீங்கிய ஒழுக்கவாதி என்கிறாள். கைகூப்பி வணங்குவதாகச் சொல்லிக்கொண்டு கைவாளோடு நிற்கிறாள். ‘நீயாக நாடாமல் வந்தாய். எதையோ அனுமானித்துக் கொண்டு நீங்கினாய். ஒழுக்கவாதி ‘ என்கிற எள்ளல் தொனிக்கிறது என்கிறார் பிரபஞ்சன்.

‘நடிகை’ எனும் செகாவின் கதை நெகிழ்த்துகிறது. ஒரு ஆடவன் ஒரு நடிகையிடம் உறவு கொள்ளப் போகிறான். கதவு தட்டப்படுகிறது. அவனுடைய மனைவி நிற்கிறாள். தன்னுடைய பிள்ளைகளைப் பசியால் வாடவிட்டு இருவரும் சிக்கன் சாப்பிடுவதாகச் சத்தம் போடுகிறாள். தன்னுடைய நகைகளைப் பிடுங்கி கொண்டு வந்துவிட்டதாகக் கூப்பாடு போடுகிறாள். நடிகை அணிந்திருக்கும் நகைகள் தன்னுடையது இல்லை என்றாலும் எடுத்துக் கொள்கிறாள். கண்டமேனிக்கு ஏசிவிட்டு அவள் நீங்குகிறாள். நடிகை நிற்கிறாள். மெதுவாக ஆடவனிடம் கேட்கிறாள், ‘நீ என்றைக்காவது எனக்கு எதாவது பணமோ, நகைகளோ கொடுத்திருப்பாயா?’. இவன் தலைகுனிந்து, ‘இல்லை’ என்கிறான். அவன் அப்பொழுது ஒன்று சொல்கிறான். “என் மனைவி உத்தமி. அவள் இப்படித் தெருவில் வந்து நின்று போயும், போயும் உன்னிடம் யாசகம் பெறவேண்டி வந்ததே. பாவி.’ என்றுவிட்டு நகர்கிறான்.

Image result for செகாவ்

பரிபாடலில் ஒரு காட்சி. தலைவியின் வளையலும், மாலையும் பரத்தையிடம் இருக்கிறது. தோழிகள் அவள் திருடிவந்தால் என்று எண்ணிக்கொண்டு பலவாறு ஏசுகிறார்கள். ‘வஞ்சனையும், பொய்யும் மிகுந்து இழிவாழ்வு வாழ்பவளே. பன்றிகள் வாய் வைத்து உண்ணும் தொடியே. பலர் படிந்து குளிக்கும் படித்துறையே….’ என்று பலவாறு வசைகள் நீள்கிறது. தலைவன் வருகிறான். தான் தான் அவற்றைக் கொடுத்ததாகச் சொல்கிறான். ‘நீ அணிந்திருக்கும் சிலம்பும் என்னுடையதாகும்.’ என்று பரத்தை சொல்கிறாள். தலைவன் அவன் தந்தது என்று சொன்னதும் தலைவியைத் தலைவனோடு அனுசரித்துப் போகத் தோழிகள் அறிவுறுத்துகிறார்கள். வசை நின்று போகிறது. ஆண்கள் குற்ற உணர்ச்சியைப் பெண்களுக்கே கடத்திவிடுகிறார்கள் என்று காட்டும் மூன்று இலக்கியக் காட்சிகள். இன்றும் பல இடங்களில் இவற்றை நினைவுபடுத்தும் காட்சிகள் நடந்தவண்ணம் உள்ளன.

இசையும், இலக்கியமும்:

சிதம்பர சுப்ரமணியமின் இதயநாதம் கடையில் வரும் இசையாசிரியரான கிருஷ்ணனிடம் ஒரு பெண் இசை கற்க வருகிறாள். இசை கற்கையில் தன் இதயத்தை இழக்கிறாள். இசை என்கிற தெய்வீக அனுபவத்தைப் பெறாமல் என் மீது இச்சை கொண்டாளே எனத் துணுக்குற்று இசையே கற்பிக்காமல் நாயகன் மவுனியாகிறான். தி.ஜாவின் ஒரு கதையில் வரும் இசைப்பற்றிய ஞானாம்பாளின் வரிகள் எல்லாக் கலைகளுக்கும் பொருந்தும்:
‘என் காதை ரொப்புறது தான் பாட்டு. பாட்டு என் மனசை, காதை ரொப்பணும். என் பிராணனைப் போய்க் கவ்வணும். இந்தத் தேகம், உயிர் எல்லாம் மறந்து போகணும்.”

பஷீரின் பேருலகு :

பஷீரின் தேன் மாம்பழம் கதையில் யூசுப் சித்திக் எனும் பக்கீர் வருகிறார். உயிர் போகிற அளவுக்குத் தண்ணீர் தாகம். தண்ணீர் கேட்கிறார். ஒரு இளைஞன் தண்ணீரை ஓடிப்போய்ப் பெற்று வருகிறான். அதில் பாதியை அங்கே துளிர்த்து இருந்து மாங்கன்றுக்கு ஊற்றுகிறார். மீதிப்பாதியை குடிக்கிறார். உயிர்விடுகிறார். சாவிலும் ஒப்புரவு பேணுபவர்கள் எத்தகையவர்கள்?

 

Image result for பிரபஞ்சன்

பிரபஞ்சன் ஒரு கட்டுரையில் எழுதுவது ஏன் கதைகளை வாசிக்க வேண்டும் என்பதை அழகாகக் கடத்துகிறது. அதுவே இந்த நூல் அறிமுகத்தை முடிவாகவும் இருக்கும்: ‘மயிலிறகு குட்டிப்போடாது என்று தெரிகையில் ஒரு குழந்தை தன்னுடைய குழந்தைமையை இழக்கிறது… அது குழந்தைக்கு நிச்சயம் இழப்பு தான்…. அந்த இழப்பின் இடத்தில கலைகளின் இனிமையை வைக்க வேண்டும். பாடலின் சுவையை உணர்த்த வேண்டும். கதைகளின் இன்பத்தை ஊட்ட வேண்டும். இயற்கையோடு உறவாட அவர்களுக்கு நேரத்தையும், சூழ்நிலையையும் உருவாக்கித் தரவேண்டும். ..ஆனால் , நாம் என்ன செய்கிறோம்? வீட்டுப்பாடம், டியூஷன், கல்விச்சுமை என்று குழந்தைகளின் மாலைக்காலத்தைக் களவாடுகிறோம். அமெரிக்காவை நோக்கிய ஒட்டப்பந்தயத்துக்குக் குழந்தைகளைத் தயார்படுத்துகிறோம்.’

கதை மழை
பிரபஞ்சன்
நற்றிணை பதிப்பகம்
பக்கங்கள்: 96
விலை: 80

ஷூ பாலீஷ் போடச்சொன்ன பிரபஞ்சன், ஜெயலலிதாவை போற்றிய கருணாநிதி!


கேள்விகள் என்கிற ஞாநி அவர்கள் மேற்கொண்ட நேர்காணல்களின் தொகுப்பு நூலை வாசித்து முடித்தேன். கமலில் துவங்கி அக்கினிபுத்திரன் வரை பதினாறு ஆளுமைகளின் பேட்டிகள் இதில் உண்டு. அசோகமித்திரன், சோ ஆகியோரிடம் இரு வேறு காலங்களில் எடுக்கப்பட்ட நான்கு நேர்காணல்களும் இந்நூலில் இருக்கின்றன. எண்பத்தி இரண்டில் துவங்கி இருபது வருட காலங்களில் எடுக்கப்பட்ட நேர்காணல்கள் என்பதால் பல்வேறு காலங்களைப் பதிவு செய்யும் ஆவணமாக நூல் தோன்றுகிறது.
 
பிறர் கவனிக்க வேண்டும் என்பதற்காக நாட்டியம் கற்க ஆரம்பித்த கமல், அதை பலரும் கவனிக்க மாட்டார்கள் என்று உணர்ந்ததும் இயக்குனராக முயற்சித்து பின்னர் நடிகராக தன்னுடைய பயணத்தைத் தொடர்கிறார். சினிமாவில் தொட்டு நடிக்க மாட்டேன், முத்தம் கொடுக்க மாட்டேன் என்பது தொழில் தர்மத்துக்கு எதிரானது என்று சொல்கிற கமல், தன்னுடைய உடம்பைக் காட்டி நடிப்பதை நியாயமே என்கிறார். ஒரு வகையான கவர்ச்சி ஆண், பெண் உடலின் மீது இருக்கிறது. இவற்றின் மீது நிறைய பிரமை இருக்கிறது. இவை உடைய எல்லாவற்றையும் காட்டுங்கள். ஒரு பெண்ணின் உடம்பை, முலைகளை காட்டுங்கள். அவள் நடந்து போவதை, ஏணியில் ஏறுவதை, ஆணைப் போல ஆபிஸ் போவதைக் காட்டுங்கள். அடுத்து அவளுக்கு மூளை இருப்பதை காட்டவேண்டும் என்கிறார் கமல்.
 
ஆத்திகர்கள் கடைசியாகக் கேட்பது, ‘சரி, நமக்கு மேலே ஒரு சக்தி இருக்கிறதா இல்லையா?’ என்பதுதான். நாத்திக நண்பன் சொன்னான், ‘ இருந்து விட்டுப் போகட்டும். நான் அதை பூஜை செய்து கொண்டிருக்க முடியாது. மின்சாரமும் கண்ணுக்குத் தெரியாத பெரிய சக்திதான். ஆனால், நாம் விளக்கு கம்பத்தை எல்லாம் கும்பிடுவதில்லை.’ என்று நண்பன் சொன்னதை சொல்கிறார்.
ரஜ்னி கோத்தாரி எனும் புகழ்பெற்ற அரசியல் அறிவியல் அறிஞரிடம் மேற்கொள்ளப்பட்ட நேர்காணல்
சுவையானது. காங்கிரசில் விடுதலைக்குப் பின்னர் அதிகாரத்தை கிராமப்புற பணக்காரர்களும், நடுத்தர விவசாயிகளும் பகிர்ந்து கொண்டார்கள். அது ஏழைகளுக்கான அரசில்லை என்பது உணரப்பட்ட பொழுது வெறுப்பு ஓட்டுக்களை மாற்று அணிகளுக்கு வழங்கத் துவங்கியது. ஆனால், இந்திரா ஏழைகளின் காவலராக தன்னைக் காட்டிக்கொண்டு அரசியலில் பொருளாதார பார்வையை முன்னிறுத்தினார். அவர் அதை பெரும்பாலும் ஓட்டு வாங்கும் கோஷமாக மட்டுமே மாற்றியதோடு, கட்சிக்குள் தனக்கு எதிராக இருக்கும் தலைவர்கள், குழுக்களை ஒழித்துக்கட்டினார். அதிகாரம் முழுவதும் அதிகாரிகள் வசம் போய்ச்சேர்ந்தது.
 
இந்திரா அதிகாரம் செலுத்தியவர் என்பது உண்மையில் இல்லை, அவருக்கு அதிகாரம் என்பதே இல்லாமல் போனதால் தான் தொடர்ந்து அதிகாரத்தை நிறுவ அவர் முயன்றார். குண்டுராவ்கள், அந்துலேக்கள் ஆகியோரின் ஆட்சியாகவே அவரின் ஊழல் ஆட்சி பரிணமித்தது. குண்டர்களை ஒருங்கிணைப்பதையே சஞ்சய் காந்தி செய்தார். மைய அரசியலில் ஈடுபடும் இடதுசாரிகளை இந்திரா அயலுறவு கொள்கையில் ரஷ்யாவுடன் இணைத்துக் கொண்டும், தேசிய இனங்களின் போராட்டத்தை எதிர்க்க அவர்களைத் தூண்டுவதன் மூலமும் சாதிக்கிறார் என்பதை கோத்தாரி சுட்டிக்காட்டுகிறார்.
 
மேலும், நக்சலைட் முதலிய மக்கள் பிரச்சனைகளுக்காக போராடுபவர்களுக்கு ஆதரவு குரல் கொடுப்பதை இடதுசாரிகள் செய்யவில்லை. அமைச்சராக இல்லாத எம்பிக்கள், எம்.எல்ஏக்கள் ஒன்றுக்கும் லாயக்கில்லாதவர்களாக உள்ளார்கள். சுயாட்சியை பரவலாக்க வேண்டியது தற்போதைய தேவை என்கிறார். வன்முறை என்பது வழிமுறையாக இருக்க முடியாது, அது குறிப்பிட்ட கணத்தில் பதில் வன்முறையாக எழக்கூடும் என்று தன்னுடைய கருத்தை வெளிப்படுத்துகிறார்.
 
சரத் ஜோஷி, சரண் சிங் ஆகியோர் சொன்ன விவசாய சிக்கல்கள் உண்மையில் அவர்களின் குரலை பிரதிபலிக்கவில்லை. விவசாயிகளின் ஆதரவை முழுமையாக பெறுவது அரசியல் அதிகாரத்தை பெற உதவும் என்றும் பரிந்துரைக்கிறார் கோத்தாரி. இந்து மதத்தின் காவலன் என்று சொல்லிக்கொள்ளும் ஆர்.எஸ்.எஸ். செயல்பாடு மேற்கின் சர்ச் போலவே இருக்கிறது என்று கச்சிதமாக குறிப்பிடுகிறார் கோத்தாரி. தமிழகத்தில் இந்துத்வா பல்லைக் காண்பிக்க காரணம் நடுத்தர ஜாதிகளுக்கே திராவிட இயக்கம் பயனளித்தது. அதோடு பிராமணிய எதிர்ப்பு என்பதை அதீதமாக செய்து அதை பிராமண எதிர்ப்பாக மாற்றிவிட்டார்கள்.
 
கோமல் சுவாமிநாதன் சபாக்களால் நாடகங்கள் சீரழிகின்றன என்கிற தன்னுடைய ஆனந்த விகடன் அட்டைப்பட பேட்டியால் சபாக்கள் தன்னுடைய நாடகங்களை மேடையேற்ற அனுமதி மறுத்ததை சொல்கிறார். அதேசமயம், தமிழ் அடையாளத்தில் குறைகள் இருந்தாலும் அப்படியொன்று இருப்பதை மக்களுக்கு தேவர் மகன் போன்ற முயற்சிகளின் மூலம் காட்டவேண்டும், அதை விமர்சிப்பதை செய்வது இன்னமும் சாத்தியமாகும் என்கிறார்.
 
வெறும் யாரும் வேலை தரவில்லை, தானும் வேலையை கேட்டுப் பெறும் சாமர்த்தியம் கொண்டிருக்கவில்லை என்று சொல்லும் அசோகமித்திரன், சாவி கணையாழியில் எழுதுவதை விடுத்தது தினமணிக் கதிரில் மட்டும் எழுதினால் வேலை தருவதாக சொன்னதை ஏற்க மறுத்ததை நினைவுகூர்கிறார். எழுத்தாளனின் அகங்காரம் தவிர்த்த எழுத்தே இருக்கவேண்டும், கதாபாத்திரமாக நான் வருவதற்கும், அகங்காரம் கொண்ட எழுத்தாக இருப்பதற்கும் வேறுபாடு உண்டு. க.நா.சு., தாஸ்தாவெஸ்கி முதலியோர் நான் என்பதை எழுத்தில் தவிர்த்தவர்கள். டால்ஸ்டாய், சுந்தரராமசாமி எழுத்தில் அதை தவிர்க்க முடியாதவர்கள் என்கிறார்.
கரைந்த நிழல்கள் கதையை ஐந்தாறு நாட்களில் வேறு மாதிரி நா.பாவின் அவசரத்துக்கு மாற்றி எழுதியதை நேர்மையாக ஒப்புக்கொள்கிறார்.
 
அலங்காரமான நடையை விடுத்து, இயல்பாக சார்பில்லாமல் எழுதுவதே தன்னுடைய பாணி என்கிறார் அசோகமித்திரன். புதுமைப்பித்தன், ஜெயகாந்தன் ஆகியோரின் எழுத்துக்களின் மீது கூர்மையான விமர்சனத்தை முன்வைக்கிறார். புதுமைப்பித்தனின் கிண்டல் மனிதநேயம் சார்ந்தது அல்ல. ஜெயகாந்தனிடம் பொறுமையின்மை, எல்லாவற்றையும், எல்லாவற்றைப்பற்றியும் சொல்லிவிட வேண்டும் என்கிற வேகம் இருக்கிறது. கருத்து முக்கியமாகி பாத்திர வார்ப்பு, நிகழ்ச்சி சித்தரிப்பு பின்தங்கி விடுகின்றன. அவரின் பிற்கால எழுத்துக்கள் மேலும் சிறப்புடையவையாக தனக்கு பட்டதாக அசோகமித்திரன் சொல்கிறார்.
 
சா.கந்தசாமியின் ‘தொலைந்து போனவர்கள்; உலக இலக்கியத்துக்கான நிகரான படைப்பு என்கிற அசோகமித்திரன் பிற தற்கால படைப்புகளை அப்படி ஏற்க மறுக்கிறார். காந்தி ஒரு பிற்போக்குவாதி, ஜாதியவாதி என்று சொல்பவர்கள் இருக்க அவர் எல்லோரையும் முன்னேற்ற வேண்டும் என்று எண்ணினார், அவரே தனக்குப் பிடித்த அரசியல்வாதி என்கிறார் அசோகமித்திரன். இங்கே இருக்கும் சாதிகள் எதோ ஒரு வகையில் இன்னொரு சாதிக்கு ஆதரவு தரும் என்கிறார் அசோகமித்திரன். ஒரு பிச்சைக்காரனை ஐம்பது பேர் போடா என்றாலும் ஒருவர் சோறு போடும் சிறப்பு மிகுந்தது நம்முடைய சமுதாயம் என்கிறார் அவர். இதை அவரின் நகைச்சுவை என்பதா இல்லை மனதரிசனம் என்பதா என்று தெரியவில்லை.
 
சிட்டி சுந்தரராஜன் திராவிட இயக்கம் தமிழ் வளர்ப்பில் மிக முக்கியமான பங்காற்றியதாக பதிவு செய்கிறார். அண்ணா, கலைஞர் ஆகியோர் நல்ல எழுத்துக்களை தந்தார்கள். மேலும், பராசக்தி படத்துக்குப் பிறகே தமிழில் உரையாடல் போக்கு மாறியது என்பதை செமினார் இதழில் பதிகிறார். ரா.பி.சேதுப்பிள்ளை, வையாப்புரிபிள்ளை முதலிய பிராமணர் அல்லாத சிறந்த தமிழறிஞர்களை மணிக்கொடி குழு கண்டுகொள்ளவில்லை என சிட்டி வாக்குமூலம் தருகிறார்.
 
புதுமைப்பித்தன் தழுவல் கதைகளை தன்னுடைய பெயரில் வெளியிட்டுக் கொண்டதில்லை. அப்படி வெளியிட்டது பதிப்பாளர்கள் தான் என்று நேர்மையாக சொல்கிறார். ஆனந்த விகடனில் இயங்கிய கல்கிக்கும், மணிக்கொடி குழுவினருக்கும் ஒத்துவராது என்பதை சொல்கிறார். அதனால் காந்திய வழியில் இயங்கிய மணிக்கொடி குழுவினர் தியாக பூமி படத்தை இருட்டடிப்பு செய்தார்கள். கல்கிக்கோ ஐம்பத்தி இரண்டாயிரம் பிரதிகள் ஆனந்த விகடன் விற்றாலும் ராஜாஜி முதலியவர்கள் மணிக்கொடியை படிப்பதும், தன்னுடைய பணிகள் கணக்கில் கொள்ளப்படாததும் வருத்தம் தந்தது.
 
கோவை ஞானி, அ.மார்க்ஸ் முதலியோர் தற்காலத்தில் தன்னை ஈர்த்த விமர்சகர்கள் என்று மனமார ஒப்புக்கொள்கிறார். தீவிரமாக வைதீகத்துக்கு எதிரான கருத்துக்கள் கொண்டவர் போல தோன்றும் அவர் ஆலய நுழைவை எதிர்த்த காஞ்சி சங்கராச்சாரியாரை பற்றி பரமாத்மா என்கிற நூலை ஆங்கிலத்தில் எழுதியதை குறித்து கேட்கப்படுகிறது. காந்தியிடம் முப்பதில் தான் ஒரு நிறுவனத்தின் தலைவராக எதுவும் இது சார்ந்து செய்வதற்கில்லை என்று கைவிரித்தது உண்மை என்றாலும், அவரை ஒரு புனிதராக அணுகாமல் மனிதராக இந்த நூலில் அணுகியிருப்பதாக சொல்கிறார்.
 
 
சோவின் நேர்முகம் எதற்கு இரண்டு என்று தோன்றுகிற அளவுக்கு தரமற்று இருந்தன. பெண்களுக்கு விடுதலை கிடைத்து விட்டது, அவர்களை யார் அடக்கி வைக்கிறார், ஆண்கள் சமையல் செய்வது தான் சமநீதியா, என்னை ஆணாதிக்கவாதி என்றே சொல்லிக்கொள்ளுங்கள். பெண்கள் விடுதலை பெறவேண்டும், ஆண்கள் அதை தடுக்கிறார்கள் என்பது சுத்த நான்சென்ஸ் என்று கடைந்து எடுத்த முட்டாள் போல பேசுகிறார். பாபர் மசூதி இடிப்பதைத் தூண்டிவிட்ட அத்வானியை, இந்து-முஸ்லீம் வெறுப்பை தீவிரமாக விதைத்த அவரை அவர் ரொம்ப நல்லவர், நான் சொல்லுறேன் கேட்டுக்கோங்க என்கிற பாணியில் உண்மைக்கு புறம்பாக, அயோக்கியமாக பேசுகிறார்.
சிவாஜியின் ஓவர் ஆக்டிங் கதையும், இவருக்கு தனியாக நடித்து காண்பித்ததும் இந்த நேர்முகத்தில் இருந்தே புகழ்பெற்று இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். பந்தயம் கட்டி பத்திரிக்கை ஆரம்பித்தது, அதற்கு ஆனந்த விகடன் முழு ஆதரவு தந்தது என்று பல்வேறு கதைகளை சொல்கிறார். நாடகம் நடத்தி எந்த வருமானமும் பார்த்ததில்லை என்கிறார் சோ.
 
கலைஞர் கருணாநிதி குணா மொழிசார்ந்து முதலமைச்சராக இருந்தவர்களை நிராகரிப்பதை ஏற்க முடியாது என்று மொழி வெறிக்கு எதிராக பேசுகிறார். ஜெயலலிதாவிடம் பிடித்த விஷயம் என்று கேட்கிற பொழுது எப்பொழுதும் இருக்கும் நடிப்புத் திறன் என்கிறார். தமிழ்வழியில் கல்லூரிப் படிப்பை முழுக்க நடத்த முயன்ற பொழுது மாணவர்கள் கடும் எதிர்ப்பை கிளர்ச்சியின் மூலம் ஏற்படுத்தினார்கள். காமராஜரும் அதற்கு ஆதரவு தந்தார் என்பது அதிர்ச்சிகரமான செய்தி. ஏ.எல்.முதலியார் தலைமையில் ம.பொ.சி., குன்னக்குடி அடிகளார் ஆகியோர் கொண்ட குழு மாணவர்களின் முடிவுக்கே இதனைவிட வேண்டும் என்றதில் தமிழ் வழிக்கல்விக்கு முற்றும் போடப்பட்டது.
 
பழ நெடுமாறன் அவர்கள் இந்திய தேசியத்தில் இருந்து தமிழ் தேசியம் நோக்கிப் பயணித்த கதையை சுவைபட சொல்கிறார். இந்தித் திணிப்பு காலத்துக்கு பின்னர் அவர் அரசியலில் நுழையக்கூடும் என்று பச்சையப்பாவுக்கு பதிலாக அண்ணாமலை பல்கலைக்கு அனுப்பினால் அங்கும் அரசியலே செய்ய நேர்ந்தது. காமராஜர் மாணவர்களை வழக்கில் இருந்து விடுவிக்கிறார். அவரின் ஆசியோடு கட்சியில் இணைந்தார். எம்ஜிஆர் இந்திராவுடன் சேர்ந்துகொள்ளுமாறு பழ நெடுமாறனிடம் சொன்ன பொழுது, ‘நீங்கள் ஏன் திமுகவுடன் சேரக்கூடாது?’ என்று எதிர்க்கேள்வி கேட்டிருக்கிறார்.
 
தன்னுடைய தமிழர் தேசிய இயக்கத்தின் மூலம் காவிரிக்கு நதிநீர் மன்றத்தின் மூலம் தீர்வு, பெரியார் பிரச்சனை குறித்து கவனம் ஆகியவற்றை எண்பதுகளில் ஏற்படுத்தியுள்ளார். தனி ஈழத்தை விரும்பாவிட்டாலும் ஜி.பார்த்தசாரதி அனெக்ஸ்-சி எனும் பிரிவின் மூலம் கூட்டாட்சியை கிட்டத்தட்ட கொண்டுவரும் சூழலில் பதவியை விட்டு ராஜீவால் மாற்றப்பட்டார். அதனோடு நில்லாமல் வெங்கடேஸ்வரன் பத்திரிக்கையாளர் கூட்டத்தில் வெளியுறவு செயலாளர் பதவியை விடுமாறு ராஜீவ் செய்தார்.
இதனை எல்லாம் நேர்மையாக சொல்லும் பழ நெடுமாறன், ராஜீவ் காந்தி கொலையில் புலிகளுக்கு கையில்லை என்று அடித்து பேசுகிறார். அதனோடு நில்லாமல் புலிகள் ஆட்சிப்பகுதியில் மரண தண்டனை இருப்பதை சொல்லிவிட்டு, தமிழகத்தில் தூக்கு தண்டனை இருக்கக்கூடாது என்று முரண்பாடாக பேசுகிறார். வங்கத்தில் தனிதேசம் கேட்டு ஃபசூல் என்பவரும், விடுதலைக்குப் பின்னர் சுஹ்ரவர்த்தியும் மொழி சார்ந்து தனி நாட்டை கேட்டிருக்கும் வரலாற்றை பதிவு செய்கிறார். அறுபத்தி ஆறு வயதில் இதய நோய் அறுவை சிகிச்சைக்குப் பின்னர் ராஜ்குமாரை மீட்க பல மைல்கள் நடந்தே பேச்சு வார்த்தை நடத்தியதையும் இயல்பாக சொல்கிறார். ஜனநாயகத்தின் மீதும், வன்முறையை துறந்த பாதையையுமே விரும்புவதாக சொல்கிறார்.
 
பிரபஞ்சன் அவர்கள் பதின்ம வயதில் காதல் பூண்டு ஒரு பெண்ணுக்கு கடிதம் எழுதுகிறார். அவளின் மீதான தன்னுடைய உணர்வுகளை பாதி சொல்வதற்குள் நாற்பது பக்கங்களை கடிதம் தொட்டிருக்கிறது. அப்பாவின் கையில் அது மாட்டிய பொழுது நல்லவனவற்றை பற்றி எழுது என அவர் தந்த உற்சாகம் இவரை செலுத்துகிறது., மாயகோவ்ஸ்கி போல கவிதை எழுதுவதாக தன்னை தூண்டிவிட்டவரை பற்றி நகைச்சுவையோடு பகிர்ந்து கொள்கிறார்.
 
மண்டல் கமிஷன் அமல்படுத்தப்பட்ட பொழுது, ஷூ பாலீஷ் போட்டு ஆதிக்க ஜாதியினர் அந்த இட ஒதுக்கீடு வந்தால் தாங்கள் அதைத்தான் செய்ய வேண்டும் என்று போராடிய பொழுது, ‘இதுவரை ஒரே ஜாதி ஷூவுக்கு பாலீஷ் போட்டது. இப்பொழுது நீங்கள் போட்டால் என்ன? இரண்டாயிரம் வருடங்களாக அவர்கள் செய்ததை இப்பொழுது நீங்கள் செய்தால் என்ன ஷூ பாலீஷ் ஆகாதா?’ என்று சூடாக எழுதியிருக்கிறார். பங்கரப்பா காவிரி விஷயத்தில் தமிழகத்துக்கு துரோகம் செய்த பொழுது நூறு வண்டிகளில் எல்லையை அடைந்து போராடுவோம் என்ற பொழுது ராமதாசுக்கு தான் ஆதரவு தந்ததையும், பின்னர் அவரின் ஜாதி அரசியலால் அதனை விளக்கிக்கொண்டதையும் நேர்மையோடு பதிவு செய்கிறார்.
தமிழே தெரியாமல் பாலக்காட்டு பிராமணர், சிந்தி பெண் ஆகியோருக்கு மகனாக பிறந்த தன்னுடைய கதையை அஜித் இயல்பாக சொல்கிறார். கார் ரேஸ், கார்மென்ட் தொழில் என அனைத்திலும் தோல்வி அடைந்து கடன்கள் அடைக்க சினிமாவில் கிடைத்த வேடங்களில் நடித்துக் கொண்டிருந்ததை ஒப்புக்கொள்கிறார். அப்பா நீ ஒரு எஸ்கேப்பிஸ்ட் என உசுப்பேற்றியதால் படங்களைப் பார்த்து நடிக்க தன்னால் முடிந்தது என்கிற அஜீத் தமிழ் உச்சரிப்பை பள்ளிக்காலங்களில் கற்காமல் சினிமாவுக்காக கற்று மாறியதால் ஆரம்பத்தில் சிரமப்பட்டதையும் சொல்கிறார். ரசிகர் மன்றங்கள் இருந்தாலும் ரசிகர்கள் தங்களின் குடும்பத்தை கவனிக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்.
அன்னம் வெளியீடு
பக்கங்கள்: 216

கடவுள் தொடங்கிய இடம்- அ.முத்துலிங்கத்தின் மனிதம் நிரம்பிய உலகம்


அ.முத்துலிங்கத்தின் கடவுள் தொடங்கிய இடம் நாவலை ஆனந்த விகடனில் தொடராக வந்த பொழுது வாசிக்கவில்லை. நூலாக வந்து வெகுநாட்கள் பரணிலேயே கிடந்தது. சிறுகதையில் அற்புதமான உணர்வுகளை, நிசப்தத்தைக் கடத்தியவர் நாவல் வடிவத்தில் கோட்டை விட்டிருப்பாரோ என்கிற அச்சமே காரணம்.

நிஷாந் எனும் ஈழத்தமிழ் இளைஞன் பதினொரு ஆண்டுகளைக் கடந்தபின்பு தன்னை அகதியாக ஏற்கும் ஒரு மண்ணை இறுதியாகக் கண்டறிவதே களம். ஐந்து கோடி அகதிகளின் வலியை பல்வேறு கதைகளின் மூலம் கடத்தி விடுகிறார் ஆசிரியர். சொல்லியதை விட, சொல்லாமல் விட்டு இடைவெளிகளை நம்மை நிரப்ப வைத்து ஆசிரியர் ஒரு தவிப்பான நிலையை நோக்குத் தள்ளுகிறார்.

மாஸ்கோ நகரத்தை நோக்கி இயக்கத்தில் சேர விரும்பியதால் அனுப்பப்படும் நாயகன் விமானம் கிளம்புவதற்கு முன் ஒரு பெண்ணைப் பார்க்கிறான். அவளுடைய வசீகரம், கம்பீரம் ஆகியவை பற்றி வர்ணனைகள் ஒரு காதல் அத்தியாயமோ என்று எண்ண வைக்கிறது. அந்தப் பெண்ணை அதிகாரிகள் விசாரித்து விட்டு, தூக்கிக் கொண்டு போகையில் ‘நானில்லை, நானில்லை’ என அவள் கதறும் கணத்தில் எத்தனையோ நினைவுகள் நம்மை மோதி அதிரடிக்கின்றன. முத்துலிங்கம் அவளைப் பற்றி ஒரு வரி இப்படி எழுதுகிறார், ‘அவள் கண்களில் எத்தனை நம்பிக்கை தெரிந்தது?’

இயக்கத்தில் சேர்ந்த தன்னுடைய மாணவர்களைப் பற்றிப் பேசும் ஆசிரியர் ‘மரணத்துக்கு அஞ்சாமல் இருந்துவிட்டால் பரிணாம வளர்ச்சியே இருக்காது’ அறிவுரீதியாகச் சொல்லிவிட்டு, ‘நாங்கள் சாவுலகத்துக்குப் பயணப்படவில்லை. ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்குப் பயணப்படுகிறோம். அவ்வளவுதான்’ என்கிறார் ஆழமாக.

சிங்கள பேரினவாத வன்முறையை இப்படிக் கடத்துகிறார் ஆசிரியர். ‘ரொஹான் என்கிற சிங்கள பொடியனைப் பற்றி விசாரித்ததில் அவன் பெயர் இன்னமும் பிரபலமாக இருந்தது. விசாகா பள்ளிக்கூடத்தில் படித்த பள்ளி மாணவியை இவன் பலாத்காரம் செய்த இடத்தில பிடிபட்டுவிட்டான்.’ கொள்ளையில் ஈடுபட்ட பத்மராசன் எனும் பாத்திரம், ராணுவ பாதுகாப்பு அமைச்சரைக் கொன்ற தமிழ்ப் பொடியன்கள் என்று அன்று நிலவிய சூழலின் சிக்கலை கண்முன் நிறுத்துகிறார். அந்த இளைஞர்கள் தப்பி விமானத்தில் இருக்கிறார்கள். அவர்களின் கழுத்தில் நச்சுக்குப்பி இரண்டு வருடங்களாக இருந்திருக்கிறது. ‘ஒருவன் சாவதற்கு இத்தனை வழிகள். அப்படியென்றால் வாழ்வதற்கு எத்தனை வழிகள் இருக்கும்?’ என வாழ்வின் நம்பிக்கை தொலைத்துவிட்ட எல்லாரிடமும் கேட்கிறது ஒரு குரல்.

கிரேக்க நாடகம், பாக் லண்டனின் நாவல், மைக்ரோக்ராப்டர் பறவை என்று ஆங்காங்கே கதைகளும், தகவல்களும் கதைப்போக்கை சுவைப்படுத்துகின்றன. க்யூபா போய்ச் சேர்ந்த மாஸ்டர் ஒருவர், நோபல் பரிசைப் பெற்ற, ‘கிழவனும், கடலும்’ நாவலை இங்கேயிருந்து தான் எழுதினார். அவர் உட்கார்ந்து எழுதிய வீடு கிட்டத்தில் தான் இருக்கிறது. அவர் வாழ்ந்த வீட்டை பார்க்கவேவில்லை.’ என ஏக்கம் ததும்ப எழுதுகிறார்.

ஒரு பதினேழு வயது தமிழ் இளைஞன் ஒருவன், அடுத்துக் கனடா போவது எப்படி எனத்தவித்துக் கொண்டிருக்கும் மாஸ்டரிடம் தன்னுடைய போர்டிங் அட்டையைத் தந்து ‘அண்ணை நீங்கள் தயங்காமல் ஏறிப்போங்கள்.’ என்கிறான். அதற்குப் பின் அவன் எப்படி வருவான் எனச்சொல்லும் வழி சுவையானது.
சந்திரா மாமி கணவனை இழந்து பறவைகளின் குரலைக் கேட்டு அகதி வாழ்க்கை சீக்கிரம் ஒரு புள்ளியை எட்டும் என நம்புகிறவர். விலங்குப் பண்ணையில் எலி நல்லதா, கெட்டதா எனப் புரியாமல் இரு பக்கமும் வாக்களிக்கும் நாய், பூனை போலத் தன்னுடைய வாழ்க்கையில் தவிப்பவர். சிக்கட்டி பாடுகிறது எனும் அவர் எல்லை தாண்டி தப்பித்துப் போகையில் விபத்தில் சிக்கி மரணத்தை எதிர்கொள்ளும் சூழலில், ‘லூன் நீர்ப்பறவை வலசை முடிந்து திரும்பிவிட்டது. இதுதான் நாள்’ என்கையில் எல்லாரும் பறவைகள் தானோ என்று சோகம் கம்முகிறது.

லாரா என்கிற ரஷ்ய பெண்ணிடம் பூண்ட காதல் வெகுசீக்கிரமே கைநழுவி போய்த் தற்கொலை எண்ணத்தில் நிற்கிறான் நிஷாந். அப்பொழுது கொலை செய்துவிட்டு துப்பாக்கியோடு அமர்ந்திருக்கும் ஒரு முதியவன் இப்படிக் கேட்கிறான், ‘கியெவ் நகரத்தில் அழகான ஒரு தேவாலயம் உள்ளது., அங்கே தொங்கும் சரவிளக்குகள் நான்கு டன் எடை கொண்டவை. அதன் அழகை ரசித்தாயா?’ எனக்கேட்கிறார். ‘நான் அகதி ஐயா! நாடில்லாதவன்’ என்று நிஷாந் சொல்கையில் ‘நாடில்லாதவன் காதலிக்கலாம் ரசிக்கக்கூடாதா? ரசிப்பதற்கு நாடு தேவை இல்லை. வியப்படைய அறிவு தேவையில்லை..’ என்று சாகத்துடிக்கும் எல்லாருக்கும் சேர்த்து வைத்துப் பேசுகிறார்.


நாவலின் உச்சமான பகுதியும், உணர்வுப்பூர்வமான தருணமும் அகல்யா எனும் நாயகி வரும் கணங்கள் தான். ஓரிரு அத்தியாயங்கள் மட்டுமே வரும் அவளின் ஊடாகப் பெண்ணின் ஆழமான மனத்தைக் கடத்துகிறார் முத்துலிங்கம். தன்னுடைய கணவனை விட்டு வானம்பாடி பிடிக்கும் மனிதனிடம் சென்று திரும்பும் அகவ்யா எனும் பெண் கணவனை விட்டு நீங்க முடிவு செய்கிறாள். அவளின் கதை செகாவின் எழுத்தில் வருவதை ரஷ்யப்பெண்மணி ஒருவர் சொல்கிறார்.
மிருகசிருஷம் நட்சத்திரக் கூட்டம் சாட்சியாகக் காதலை உறுதிப்படுத்தும் அகல்யா, ரோமன் எழுத்துக்கள் பதித்த கடிகாரத்தை நாயகனுடன் இணைத்து வாங்கிக் காலத்தைக் காதலோடு கடக்கிறாள்.

\ வில்லைப் பற்றுவது போல என வரும் ‘வில்லக விரலின் பொருந்தி’ என்பதைப் போலத் தன்னைப் பற்றச்சொல்கிறாள்.
அவர்களுக்கிடையே நடக்கும் கலப்பை முத்துலிங்கம் வித்தியாசமான மொழிநடையில் இயந்திரத்தனமாகத் தருவதாகத் தோன்றியது. அந்த அகல்யா அகவ்யா போல ஆகும் கணத்தில் எண்ணற்ற கதைகள் இப்படித்தானே என்று மருகத்தான் முடிகிறது. அவள் அனுப்பிவைக்கும் முன்னூறு டாலரில் ‘நான் நினைவில் வெச்சா மறக்கமாட்டேன்’ என்கிற அவளின் வரி நகைமுரணாக எதிரொலிக்கிறது.

வண்ணநிலவனின் கடல்புரத்தில் கொலை செய்தவர்கள் மீது கூட வெறுப்பு வராத வகையில் கதை அமைக்கப்பட்டிருக்கும். அதைப்போலப் புஷ்பநாதன் கொலை செய்த பொழுது அவரை வெறுக்க முடியவில்லை. அனுதாபமே ஏற்படும் வகையில் காட்சி அமைகிறது. ரஷ்ய பெண்ணுடன் சண்டையிட்டு, பயந்து ஓடிவரும் அவரை நிஷாந் காத்த பின்னர் ‘நான் வீர சைவ வேளாளர்’ என அவர் இரைவதில் தெறிக்கும் வீரம் எல்லா ஜாதிப்பெருமையையும் எள்ளி நகையாடி மிளிர்கிறது. அதே புஷ்பநாதன் ஏழாண்டு சிறைத்தண்டனை பெற்று சிறையை நோக்கிப் போகையில் நிஷாந்திடம் கிட் காட் வாங்கித் தன்னுடைய மகளுக்கு அனுப்பச்சொல்கிறார். மூன்று வயதில் பார்த்த மகளை இருபது வருடங்கள் பார்க்காமல் வலியைத் தேக்கிக்கொண்டு அவளுக்குச் சாக்லேட் வாங்கித்தரும் துடிக்கும் அந்தத் தவிப்பு பல லட்சம் அப்பாக்களுக்கும் உரியதுதானே?

மாஜிஸ்திரேட் ஒருவரின் வாயிலாக டச்சுக்காரர்கள் இலங்கையை ஆண்டு, சுரண்டிய கதை கண்முன்னால் விரிகிறது. அவரின் மூதாதையர் மயில்வாகனம் என்கிற நல்ல புரவலரை மக்களின் பசியைப் போக்கிய பொழுது சிறையில் அடைத்ததற்குப் பழிவாங்கும் வண்ணமாகத் தற்போது இரு நாடுகளில் அகதியாகப் பணித்து டச்சு அரசிடம் கில்டர் காசுகளை வசூலிக்கும் மாஜிஸ்திரேட் நிலை என்னானது என்பது நம்முடைய அனுமானத்துக்கே விடப்படுகிறது.

நிஷாந் உட்பட அகதிகள் ஒரு உணவகத்தில் உட்கார்ந்து இருக்கிற கொஞ்ச காசில் ஏதோ அருந்துகிறார்கள். கடையைத் துடைக்கும் மூதாட்டி அவர்களைச் சந்தேகத்தோடு பார்க்கிறாள். காட்டிக்கொடுத்து விடுவாரோ என்று வேகமாக விரையும் அவர்களைத் பின்தொடர்ந்து வரும் அவரின் பையில் பழங்களும், நீரும் இவர்களுக்காக இருக்கிறது. அன்னைமாரின் அடிவயிற்றில் பிள்ளைகளின் பசியைப் போக்க எரியும் தீ கண்டங்களைக் கடந்தும் ஒரே மாதிரிதான் என்பது பெல்ஜியத்தில் நிகழும் இக்காட்சியால் புலப்படுகிறது.


கனகலிங்கம் என்கிற பாத்திரப்படைப்பு சுவாரசியமானது. தங்கைக்குக் கல்வீடு கட்டித்தரவேண்டும் என்று அவர் கனடாவில் நாதஸ்வரம் ஊதப்போவதாகச் சொல்கிறார். வோட்கா அருந்தி அவர் மிகக்கடுமையான ஆம்ஸ்டர்டாமை விமானத்தில் கடக்கும் கணம் பதைபதைப்பைத் தருவது. சகுந்தலா எனும் பெண்மணி சோக உருவாகப் பிள்ளைகளைக் காணக்காத்து கிடக்கிறார். அவரைப் பத்திரமாகக் கொண்டு சேர்க்கும் பொறுப்பை ஏற்கும் நிஷாந்துடன் போகும் அவர் ஒரு கட்டத்தில் மாட்டிக்கொள்ளும் பொழுது அவனைக்காட்டிக் கொடுக்காமல் சிறைபுகும் காட்சி பெண்களின் உலகம் எவ்வளவு உணர்ச்சிகளால் ஆனது என்பதை மேலும் துலக்கமாக உணரவைக்கிறது.

சபா என்கிற சபாநாயகம் ஒரு மதிப்பெண்ணில் முதலிடத்தைத் தவறவிடவே அவரைக் கனடாவுக்கு மருத்துவராக அனுப்பி வைக்கும் தந்தையின் கனவை நிறைவேற்ற முடியாமல் போதை மருந்து கடத்த உதவி இலங்கையில் முதல் பக்கச்செய்தியாக மாறிப்போகிறார் சபா. மதிப்பெண் மட்டுமே வாழ்க்கை என நம்பிய தந்தைக்காக இங்கே வந்து இரண்டு மில்லியன் தட்டுக்களைக் கழுவி தன்னுடைய கடன்களை அடைத்ததைச் சலனமில்லாமல் சபா சொல்கிறார்.

‘அதைப் பார்த்த என் அப்பாவின் மனம் என்ன பாடுபட்டிருக்கும்? ஒரு மார்க் தவறியதால் கனடா புறப்பட்ட மகனா இவன் என எப்படியெல்லாம் தவித்திருப்பார். செய்தியை நம்பமுடியாமல் பத்திரிக்கையைக் கையில் பிடித்தபடி, குழந்தையில் என்னைக் கூப்பிடும் ‘சபுக்குட்டி, சபுக்குட்டி என்கிற பெயரை உச்சரித்துக்கொண்டு ரோட்டு ரோட்டாக அலைந்தார் என்று பின்னர்க் கேள்விப்பட்டேன். அவரைச் சமாதானம் செய்யவோ, அவரிடம் மன்னிப்பு கேட்கவோ எனக்கு வாய்ப்பே கிடைக்கவில்லை. இரண்டு மாதத்தில் அவர் இறந்துபோனார்.’ எனச் சபா அரற்றுகிற கணம் மதிப்பெண்ணில், உலகியல் வெற்றி அளவுகோல்களில் பிள்ளைகளை அளக்கும் பெற்றோர்களின் மனக்கனவுகளின் மீது தீவிரமான கேள்விகளை முன்வைக்கிறது.

கடவுள் தொடங்கிய இடம் நாவல் பல்வேறு கதைகளை வீசிக்கொண்டு நகரும் ஒரு பெரும்பயணம். மூன்று கண்டங்களின் ஊடாகப் பயணிக்கும் இந்தக்கதையில் வேறுபாடுகளைக் கடந்து மனிதர்கள், மனிதர்கள் மட்டுமே புலப்படுகிறார்கள். ஐந்து கோடி அகதிகளுக்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கும் இந்த நாவலின் மூலம் அ.முத்துலிங்கம் ஒரு மகத்தான மனிதம் ததும்பும், வெறுப்பைத் தாண்டிய நம்பிக்கையை விதைக்கும் உலகத்தைக் கண்முன் சமைக்கிறார்.

பக்கங்கள்: 270
விகடன் பிரசுரம்
விலை: 155

— with Appadurai Muttulingam.

இந்தியாவில் மொழி அரசியல் பகுதி -1


இந்தியாவில் மொழி அரசியல் பகுதி -1

`LANGUAGE AND POLITICS IN INDIA’ என்கிற ஆஷா சாரங்கி தொகுத்த நூல் மொழி அரசியல், அரசியலின் மொழி ஆகிய இரண்டைக் குறித்தும் வெவ்வேறு அறிஞர்கள் எழுதிய கட்டுரைகளைக் கொண்டுள்ளது. இந்தத் தொகுப்பில் உள்ள பல்வேறு கட்டுரைகள் தனித்தனியாக விவரிக்கப்பட வேண்டியிருப்பதால் ஆறு பாகங்களாக இந்த நூல் தொடும் பேசுபொருட்களை எழுதுகிறேன்.
மொழி அரசியல், அரசியலின் மொழி ஆகிய இரண்டையும் ஏன் அறிந்துகொள்ள வேண்டும் என்று ஆஷா சாரங்கியின் அறிமுகம் விரிவாகப் பேசுகிறது.

மொழி என்பதை வெறும் தகவல்தொடர்பு கருவி எனச் சிலர் சொன்னாலும், மொழிக்கும் சமூகத்துக்கும், வரலாற்றுக்கும், தத்துவத்துக்கும், புலனுணர்வுக்கும், மானுடவியலுக்கும் இடையே உள்ள தொடர்பை ஆராயும் பிரிவுகள் உலகெங்கும் ஏற்பட்டுள்ளன. ஷெல்டன் போலாக்,’மொழி என்பது ஒரு தேசத்தின் அடையாளமாக மாறுகிறது என்றால் அதற்கு மொழியைத் தேசத்தின் தனித்த அடையாளமாக மாற்றும் செயல்பாடும் ஒரு முக்கியக் காரணம்’ என்று கருதுகிறார். ஐரோப்பியாவில் தேசிய அரசுகள் எழுந்ததை மொழியை எப்படி அவர்கள் தேச உருவாக்கத்தின் தனித்த அடையாளமாக மாற்றினார்கள் என்று அறியாமல் உணர முடியாது. திட்டமிட்டு பல்வேறு சமூக, கலாசார, அரசியல் வேறுபாடுகளை உருவாக்க பல்வேறு மொழியியல் நடைமுறைகள் பரிந்துரைக்கப்பட்டு, கட்டாயமாக நடைமுறைப்படுத்தப்பட்டு இந்தத் தேசங்கள் கட்டமைக்கப்பட்டன.

ஹாப்ஸ்பர்க், ஓட்டோமான், பிரெஞ்சு, ஆங்கிலேய, ஸ்பானிய அரசுகள் தங்களுடைய மொழியை உலகம் முழுக்கப் பரப்பியதோடு, தங்களின் மொழியை ஒரு உடைமையாக எண்ணித் தீவிரமாகக் காத்தார்கள். எல்லா மொழிகளும் ஒரு காலனிய அரசின் மொழியாகவோ, அல்லது காலனிகளில் பரவலான மொழியாகவோ மாறுவதில்லை. ராணுவ வெற்றிகள், முதலாளித்துவ விரிவாக்கம், மதப் போர்கள், மத மாற்றங்கள், கல்வி பரவலாக்கம் முதலிய பல்வேறு கூறுகள் இதில் பங்காற்றுகின்றன.

இந்தியாவைப் பொறுத்தவரை சாதியப் பாகுபாடுகள்
மொழியின் தூய்மை, அசுத்தம், படிநிலை ஆகியவற்றைக் குறிக்கப் பயன்படுகிறது என்பதற்கு எண்ணற்ற எடுத்துக்காட்டுகள் உண்டு. சம்ஸ்கிருதம் என்பதை இரட்டை பிறப்பாளர்களே கற்க வேண்டும் என்கிற பார்வை வெகுகாலம் நிலவி வந்ததும், மைதிலி என்கிற மொழியை ஒடுக்கப்பட்ட ஜாதியினர் பரவலாகப் பேசிவந்த சூழலில் அதனை ‘சுத்தப்படுத்தி’,, வரையறுத்து பிராமணர்களின் அடையாள மொழியாக வெற்றிகரமாக மாற்றி ‘மைதிலி’ எனக் குறிப்பதே மிதிலை பகுதியை சேர்ந்த பிராமணர்களைத் தான் என்கிற சூழலை உண்டாக்கினார்கள் பிராமணர்கள்.

இந்தியாவில் எண்ணற்ற மொழிகள், வட்டார வழக்குகள், பேசு தாய்மொழிகள் ஆகியன வழங்கி வருவதால் இவை அனைத்தையும் கணக்கிடுவது என்பது முடியாத காரியம். மொழியை இனத்தோடு இணைத்து ஆங்கிலேயர் காலத்தில் கணக்கெடுப்புகள் நிகழ்த்தப்பட்டன. ஜார்ஜ் கிரியர்சன் இந்தியாவின் மொழியியல் கணக்கெடுப்பை நிகழ்த்தி இருபது வருடங்களில் இந்தியாவில் 179 மொழிகள், 544 வட்டார வழக்குகள் உள்ளதாகப் பன்னிரெண்டு பகுதி தொகுப்பில் தெரிவித்தார். அறுபத்தி ஒன்றில் வெளிவந்த கணக்கெடுப்பு 1,652 பேசு தாய்மொழிகள் இருப்பதாக அறிவித்தது. இதனை முப்பது ஆண்டுகள் கழித்து வந்த கணக்கெடுப்பு 114 மொழிகளுக்குள் பிரித்தது.

அன்விதா அப்பி நாற்பத்தி ஏழு மொழிகளை இந்தி என்கிற பெயரில் வகைப்படுத்தி இருப்பதாக அதிரவைக்கிறார். உதாரணமாக மைதிலி மொழி விடுதலைக்குப் பிந்தைய முதல் இரு கணக்கெடுப்புகளில் இந்திக்குள் அடக்கப்பட்டது. பத்தாயிரத்துக்கும் குறைவான மக்களால் பேசப்படும் மொழிகளையும் அரசு கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் விட்டது.

இந்திய மானுடவியல் ஆய்வுக் கழகம் ‘இந்திய மக்கள்’ என்கிற கணக்கெடுப்பை பெருமளவில் மேற்கொண்டு எழுநூறு மொழிகள் நான்கு இந்திய மொழிக்குடும்பங்களைச் சார்ந்திருப்பதாக அறிவித்தார்கள். இந்திய வீடுகளில் பயன்படுத்தப்படும் 325 மொழிகளில் 75 பிராதன மொழிகள் என்று அது சொன்னது. மேலும் இந்தக் கணக்கெடுப்பு இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு பல்வேறு தாய்மொழிகளைப் பிராதன மொழியோடு சேர்க்கும் வழக்கத்தைத் தொடர்ந்து செயல்படுத்துவதால் பல்வேறு தாய்மொழிகள் காணாமல் போகச் செய்யப்படுகின்றன எனக் கவலை தெரிவிக்கிறது. 1951 கணக்கெடுப்பில் இந்தி பேசுபவர்களின் எண்ணிக்கை நாற்பத்தி இரண்டு சதவிகிதமாக அவாதி, போஜ்புரி, சதீஸ்கரி, பந்தல்கண்டி, கார்வாலி, ஹராவ்தி, ஹரியான்வி, காங்ரி, குமாவ்னி, மகதி, மைதிலி, மேவாரி, பஹாரி, ராஜஸ்தானி மொழிகளை உள்ளடக்கி காட்டப்பட்டது. அடுத்த 1961 கணக்கெடுப்பில் பஞ்சாபி, உருது, இந்துஸ்தானி, மைதிலி, மகதி, போஜ்புரி ஆகிய மொழிகள் தனியாகப் பட்டியலிடப்பட்டதால் இந்தி பேசுபவர்களின் எண்ணிக்கை முப்பது சதவிகிதமாகக் குறைந்தது. கலாசார ரீதியாக ஒன்றாகும் இருக்கும் குழுக்களிடையே கூடப் பல்வேறு மொழிகள் வழங்கி வருவது ‘இந்திய மக்கள்’ திட்டத்தின் மூலம் தெளிவானது.

அனைத்திந்திய வானொலி நூற்றி நான்கு மொழிகளில் தன்னுடைய செயல்பாட்டை மேற்கொள்வது ஒருபுறம், அரசுகள் இருபத்தி இரண்டு மொழிகளில் தங்களுடைய தகவல் தொடர்பை மேற்கொள்கின்றன. ஆதிக்கம் செலுத்துகிற மொழிகளுக்கு வெவ்வேறு மொழிக்குழுவினர் மாறுவது விருப்பதாலோ, சுயமாகவோ நிகழ்வதில்லை., அரசியல் தேவைகள், சமூக மதிப்பு, அடையாளம், பாதுகாப்பு ஆகிய பல்வேறு கூறுகள் இதில் கலந்துள்ளன. இந்தியை தேசத்துக்கான மொழியாக மாற்றுகிற முயற்சி அனைத்திந்திய வானொலியில் அதைக் கட்டாயமாக்குவதன் மூலம் சாதிக்கப்பட்டது. மேலும், திட்டமிட்டு ஹிந்துஸ்தானியின் பாரசீக, அரேபிய சொல்லாக்கங்களைத் துறந்து ‘புனிதப்படுத்தப்பட்டதாக’ சொல்லப்பட்ட சம்ஸ்கிருதமயமாக்கப்பட்ட இந்தியையே வானொலி பயன்படுத்தியது.

இந்திய அரசியலமைப்புச் சபை ஆறு வாரங்களுக்கு எது இந்தியாவின் தேசிய/அதிகாரப்பூர்வ மொழியாக வேண்டும் என்று விவாதித்து வாக்களித்தது. ஒரு ஓட்டு வித்தியாசத்தில் இந்தி இந்தியாவின் அதிகாரப்பூர்வ மொழியானது. மேலும் இந்த இந்தி தேவநாகரி வரிவடிவத்தில் எழுதப்படும் என்பதோடு, பதினைந்து ஆண்டுகளுக்கு ஆங்கிலம் துணை மொழியாகத் தகவல் தொடர்புக்கும், பயன்பாட்டுக்கும் தொடரலாம் என்று முன்ஷி-அய்யங்கார் திட்டப்படி ஏற்றுக்கொள்ளப்பட்டது.

சட்டப்பிரிவுகள் 343-351 மொழிச்சிக்கலை விரிவாக
எதிர்கொள்கின்றன. ஒரு மொழியை மாநில அரசு அதிகாரப்பூர்வ மொழியாக அறிவிக்க அம்மொழி பதினைந்து சதவிகித மாநில மக்களால் குறைந்தபட்சம் பேசப்படவேண்டும் எனச் சட்டப்பிரிவு 345வரையறுப்பதைப் பயன்படுத்தி வடகிழக்கு மாநிலங்கள் ஆங்கிலத்தை அதிகாரப்பூர்வ மொழியாக அறிவித்தன. ஜனாதிபதி விரும்பினால் ஒரு மொழியை மாநில அரசு அங்கீகரிக்க வழி செய்யலாம் என்று சட்டப்பிரிவு 347 கூறுகிறது. அதே சட்டப்பிரிவு ஒரு மாநிலத்தில் எழுபது சதவிகிதத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஒரே மொழியைப் பேசினால் மட்டுமே அது ஒரு மொழி பயன்படுத்தும் மாநிலமாக அறிவிக்கப்படலாம் என்று கூறுகிறது.

மாநில அரசின் எல்லைக்குள் பயன்படுத்தப்படும் எந்த மொழியிலும், இந்தியாவில் பேசப்படும் எந்த மொழியிலும் தன்னுடைய விண்ணப்பத்தை ஒரு குடிமகன் சமர்ப்பிக்கலாம் என்று சட்டப்பிரிவு 350 கூறுகிறது. மொழிச்சிறுபான்மையினரின் உரிமைகளைக் காக்க 350(A), 350 (B), 29(1), 30, 347, 350 சட்டப்பிரிவுகள் உருவாக்கப்பட்டன.

எட்டாவது பட்டியலில் ஆங்கிலத்தை 1959-ல் சேர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட பொழுது அது இந்திய மொழியில்லை என்று அது தடுக்கப்பட்டது. இந்தப் பட்டியல் என்ன அடிப்படைகளைக் கொண்டு மொழிகளை உள்ளடக்கியுள்ளது என்பதில் தெளிவில்லை. ஒரு பகுதியில் பயன்படுத்தப்படும் தனித்துவம், எண்ணிக்கை அளவிலான பெரும்பான்மை, வளம்மிகுந்த கடந்தகாலப் பண்பாட்டு வரலாறு,
திருந்திய மொழி ஆகியன கூறுகள் என்று கொண்டால் நம்மால் முறையே ராஜஸ்தானி, பிரஜ், போஜ்புரி ஆகிய மொழிகள் இப்பட்டியலில் இடம் பெறாததையோ, சிந்தி, கொங்கணி, சம்ஸ்கிருதம் ஆகியன இப்பட்டியலில் இடம்பிடிப்பதையோ விளக்க முடியாது.

பத்தாயிரத்துக்கும் குறைவான மக்களால் பேசப்படும் பழங்குடியின மொழிகளைப் பற்றித் தெளிவாக அரிய எமானோ சொல்வதைப் போல அவர்களின் இனக்குழு வரலாறு, ஜாதி, பழங்குடியினம் ஆகியவற்றுக்கு இடையே உள்ள உறவு ஆகியவற்றை உணரவேண்டும். ஜார்கண்ட், நாகா, மிசோ, காசி இயக்கங்கள் தங்களுடைய இன அடையாளத்தைத் தீவிரமாக மொழியைக்கொண்டே கட்டமைக்கின்றன. பில், புயான், பூமிஜ், முரியா, கோண்டு, மல்பஹரியா, லோதா முதலிய பழங்குடியினர் தங்களின் மொழியை ஒன்று இழந்தோ, அல்லது வேறு மொழிக்கு மாறும் அழுத்தத்துக்கு உள்ளாகியுள்ளனர். குவி எனும் திராவிட மொழி பேசும் மத்திய பிரதேசம், ஒரிசா, மேற்கு வங்கத்தில் பரவியுள்ள மக்கள் அந்தந்த பகுதியின் ஆதிக்க மொழிக்கு நகர்ந்துள்ளனர்.

வரிவடிவத்தில் கூட எண்ணற்ற சிக்கல்கள், போரட்டங்கள் நிகழ்ந்துள்ளன. போடோ மொழியினர் வங்காளி, அசாமி மொழிகளின் வரிவடிவத்தை முதலில் பயன்படுத்தினார்கள். அசாமியர்கள் போராட்டம் நிகழ்த்தி தங்களை முன்னிறுத்திக் கொள்ள முயன்ற பொழுது அசாமிய ஆதிக்கத்துக்கு எதிராக அந்த வரிவடிவத்தைப் போடோக்கள் துறந்தார்கள். ரோமானிய வரிவடிவத்துக்கு அவர்கள் மாற முயன்றதை அசாமியர்கள் கடுமையாக எதிர்க்க, மத்திய அரசின் தலையீட்டில் அவர்கள் தேவநாகரி மொழிக்கு மாறினார்கள். கொங்கணி, சந்தாலி மொழிகள் ஐந்து வரிவடிவங்களில் எழுதப்படுகின்றன, சௌராஷ்டிரா, படகா ஆகிய மொழிகள் தமிழ் வரிவடிவத்தில் எழுதப்படலாமா என்கிற விவாதமும் உள்ளது.

இந்திய அரசின் மும்மொழிக்கொள்கையும் குறிப்பிட்ட மொழிகள் வளர்வதற்கு மட்டுமே வழிவகைச் செய்கிறது. இந்தி மொழி பிராதனமாக வழங்கும் பகுதிகளில் ஆங்கிலம், இந்தி ஆகியவற்றொரு ஒரு தென்னிந்திய மொழி கற்பது கட்டாயமாக உள்ளது. பிற பகுதிகளில் இந்தி, அவரவரின் தாய்மொழி எட்டாவது பட்டியலில் உள்ள மொழியாக இருந்தால் அதைக்கற்பது, ஆங்கிலம் என்று பட்டியல் சற்றே மாறுபடும். இந்தப் பட்டியலுக்குள் வராமல் நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகள் இந்தியாவில் உள்ளன. அவற்றைப் பேசும் மொழிச்சிறுபான்மையினர் சமயங்களில் ஒரு லட்சம் பேருக்கு மேல் ஒவ்வொரு மொழிக்கும் உள்ளார்கள். அன்விதா அப்பி எனும் மொழியியல் அறிஞர் இந்திய அரசு இந்த மொழிகளையும் கற்க நான்கு மொழிக்கொள்கையைக் கொண்டுவர வேண்டும் என்று சொல்கிறார்.

ஜாதி, மொழிகளுக்கிடையே தொடர்பும் சிக்கலானது. பல்வேறு தனித்த எழுத்துக்கள் தலித்துகளின் பக்கமிருந்து பல்வேறு மொழிகளில் எழுவது ஒருபுறம் என்றால், தலித்துகளில் பலர் ஆங்கிலத்தை அடக்குமுறையில் இருந்து விடுபடும் மொழியாகவும், வாழ்க்கையில் முன்னேறும் வழியாகவும் காண்கிறார்கள்.

டி.கே.ஓமென் தன்னுடைய, ‘தேசம், மக்கள் சமுதாய, சமூக இயக்கங்கள்’ நூலில் பல்வேறு தேசக்குழுக்களை உள்ளடக்கிய இந்தியாவில் கலாசார மறுமலர்ச்சிக்கு மொழியை உகந்த அடிப்படை என்கிறார். மேலும், தமிழோடு திராவிட இந்து மதத்தை, சம்ஸ்கிருதத்தோடு வடக்கின் இந்து மதத்தை, பஞ்சாபிய மொழியோடு சீக்கிய மதத்தை, உருதுவோடு இஸ்லாமிய மதத்தை, பாலியோடு புத்த மதத்தை, ஆங்கிலத்தோடு கிறிஸ்துவ மதத்தைத் தொடர்புபடுத்தி ஒற்றைப்படையாகக் காண்பது தவறாகும்.இந்தியா மாதிரியான வண்ணமயமான, வேற்றுமை மிகுந்த சமூகங்கள் மிக்க நாட்டில் இப்படி ஒரு மதத்தை ஒரு மொழியோடு அடையாளப்படுத்துவது சமூக உறவுகள், அடையாளங்கள் ஆகியவற்றின் பன்முகத்தன்மையை மறுதலிக்கும் செயல்பாடாகும். மொழி அரசியலும், அரசியலின் மொழியும் ஒன்றுக்கொன்று நெருங்கி பிணைந்த ஒன்றாகும். ஆங்கிலம், இந்தியாவை இந்தியாவின் இணைப்பு மொழியாக ஆக்குவதைச் சார்ந்து எண்ணற்ற வன்முறை சம்பவங்கள், போராட்டங்கள், கலவரங்கள் இந்தியாவில் ஏற்பட்டுள்ள சூழலில் இந்தச் சிக்கலான பரப்பைப் பற்றி விரிவாக அடுத்தடுத்த கட்டுரைகளில் காண்போம்.

குறத்தி முடுக்கு – மௌனத்தின் பேரொலி!


ஜி.நாகராஜனின் குறத்தி முடுக்கின் தெருக்களில் ஒருமுறை நின்றதற்கே மனது பதைக்கிறது. மனிதன் ஒரு மகத்தான சல்லிப்பயல் என்று குறிப்பிடும் ஆசிரியரின் இந்த நாவல் விலைமகளிர் வசிக்கும் பகுதியாக நெல்லையில் வள்ளி குறத்தி முடுக்கு எனும் கற்பனை இடத்தை ஆக்குகிறார்.

தங்கம், மரகதம், செண்பகம், தேவயானை, பெயரே இறுதிவரை சொல்லப்படாத நாயகனான பத்திரிக்கையாளன் என்று இவர்களைக் கொண்டு மனித மனதின் வெவ்வேறு தளங்கள், ஆசைகள், வலிகள், கனவுகளைத் தொட்டுக் காண்பிக்கிறார். நாயகன் தங்கத்திடம் முதல்முறை இன்பம் துய்க்க போகையில் அவள் வெகு வாஞ்சையோடு நடந்து கொள்ள அது மேலும் பணம் பிடுங்கவோ என்று அவன் மனம் அலைபாய்கிறது. அவனை அவள் வருடும் பொழுது அவனின் கையோ பேன்டில் பர்ஸ் பத்திரமாக இருக்கிறதா என்று உறுதி செய்து கொள்கிறது.
இந்தக் கதையில் வரும் விலைமகளிர் மனதில் அத்தனை ஆழமானவர்களாக இருக்கிறார்கள்.

செண்பகம் தனக்கொரு மகள் வேண்டும் என்று கருவை சுமக்கிறாள். ஐந்து நிமிடத்தில் இச்சை தீர்க்கும் ஒரு மிருகத்திடம் அவளின் கெஞ்சலும், கனவும் என்னானது என்பதை மெல்லிய வார்த்தைகளால் மனத்தைக் கீறுகிற வகையில் ஆசிரியர் படைத்துவிடுகிறார். ‘அவன் முகத்தில் பிரசவ வேதனை தாண்டவமாடியது’ என்கிற வரியில் தான் எத்தனை முரண்?

தங்கத்திடம் ஆசை கொண்டு அதைக் காதல் என்று அடையாளப்படுத்திக் கொள்கிறான் நாயகன். அவளுக்கு ஏற்கனவே நடராஜன் என்பவனுடன் திருமணம் ஆகியிருந்ததையும், அவன் பல்வேறு ஏமாற்று வேலைகள் செய்து பிழைத்ததையும் சொல்லும் தங்கத்தை அவ்வப்பொழுது அவன் சந்திக்கிறான். நாயகன் போலீசில் மாட்டிக் கொண்ட அவளைக் காப்பாற்ற அவள் சொன்னபடியே தான் தங்கத்தைத் திருமணம் செய்துகொள்ள உள்ளவன் என்று சாட்சி சொல்கிறான். அதற்குப் பிறகு தங்கம் திருமணம் செய்ய மறுக்கிறாள்.

திடீரென்று காணாமல் போகும் தங்கத்தை வேறொரு ஊரில் குழாயடியில் தண்ணீர் தூக்கியபடி கண்டெடுக்கும் நாயகனும், அவளும் மேற்கொள்ளும் உரையாடலில் எந்தப் பெருத்த ஆரவாரமோ, உணர்ச்சிக் கொந்தளிப்போ வெளிப்படையாக இல்லை என்றாலும் அடுத்தடுத்த பக்கங்களில் நமக்குத் தரப்படும் அதிர்ச்சியும், நிராசையோடு கூடிய மனதுக்கு இனியவனுடனான வாழ்க்கையின் கனவுகளுமாகத் தங்கம் அவலத்தின் உச்ச நாயகியாக முழுமை பெறுகிறாள்.
சாவதற்கு முயன்று அதற்கு வழியில்லாமல் கீழே விழுந்து அடிபடும் தேவயானையின் கதையோடு முடியும் நாவலில் சமூகத்தால் அணு அணுவாக அழிக்கப்படும் பெருவலியின் மவுன ஓலம் ஒலிக்கிறது. வள்ளி குறத்தி முடுக்கில் உண்மையான தேவயானைகளா வந்து சிக்குவார்கள்? என்று நாகராஜன் கேட்கும் கேள்வி நம் சமூகத்தின் மனவெளியில் சலனம் ஏற்படுத்திக்கொண்டே இருக்கும்.
காலச்சுவடு கிளாசிக் வெளியீடு

விலை: 100
பக்கங்கள்: 80