பாகிஸ்தானை புரிந்து கொள்வது எப்படி?


The People Next Door: The Curious History of India-Pakistan Relations நூலை வாசித்து முடித்தேன். இந்திய அயலுறவுத்துறையில் பெரும்பாலான காலத்தை பாகிஸ்தான்ப சார்ந்தே பணியாற்றி உள்ள டி.சி.ஏ. இராகவனின் எழுத்தில் வந்துள்ள இந்த நூல் இந்திய பாகிஸ்தான் உறவுகள் குறித்துப் பேசுகிறது. பாகிஸ்தானில் பணியாற்றிய அனுபவம் உள்ள ஆசிரியரின் நினைவலைகள் இல்லை இந்த நூல். தீவிரமான ஆய்வுப்பார்வை கொண்டு இந்திய-பாகிஸ்தான் உறவை அணுகுகிற நூலும் அல்ல. அதே சமயத்தில், தெரிந்தவற்றை இந்தியாவின் பார்வையில் இருந்து அடுக்குகிற முயற்சியும் இல்லை. ஓரளவிற்குப் பரிச்சயமான இந்திய-பாகிஸ்தான் சிக்கல்களான காஷ்மீர், அணு ஆயுத போட்டி குறித்து ஆழமாகப் பேசப்போவதில்லை என்று நூலின் ஆரம்பத்திலேயே இராகவன் சொல்லிவிடுகிறார். அதேசமயம், சலிப்பைத்தரும் ஒரு நூலையும் அவர் எழுதிவிடவில்லை. சுவையான மனிதர்கள், விறுவிறுப்பான நிகழ்வுகள், பிரிவினை, போர், சதிகள், நம்பிக்கை மிகுந்த கை குலுக்கல்கள், அவநம்பிக்கை என்று பல்வேறு வகையான அனுபவங்கள், கதைகள் நூல் முழுக்கக் கொட்டிக் கிடக்கின்றன.

 

Broadcast4

 

இந்தியா மீதான பாகிஸ்தானின் ஆரம்பக் கால அவநம்பிக்கைக்குக் காஷ்மீர் மட்டும் காரணமில்லை, நதி நீர் பகிர்வு, பாகிஸ்தானிடம் தனிநாடு கேட்ட பலுசிஸ்தான் போராளிகள் நேருவை தொடர்பு கொண்டது, ஜின்னாவின் மரணத்திற்குப் பிறகு ஹைதரபாத்தை கைப்பற்றியது என்று நீள்கின்றன காரணங்கள். பிரிவினையால் எதிரெதிர் முனையில் நிற்க நேர்ந்த உறவுகளின் கதைகள் கண்ணீரையும், ஆச்சரியத்தையும் இணைந்தே தருகின்றன. இந்தியா வந்து தன்னுடைய பிரியத்துக்குரிய பெண்ணைக் கண்டு கண்ணீர் வடித்துச் சென்ற பாகிஸ்தான் பிரதமர், பரம வைரி என எண்ணப்பட்ட வாஜ்பேயி தன் கவித்திறனால் பாகிஸ்தானியர்களைக் கொள்ளை கொண்டது, தன்னால் சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தில் இறந்து போன குஜராத் முதல்வர் பல்வந்த் ராய் மேத்தாயின் மனைவியின் மரணத்துக்கு முப்பதாண்டுகள் கழித்து மன்னிப்பு கேட்டுக் கடிதம் எழுதிய பாகிஸ்தான் வீரர் என நீளும் பக்கங்கள் மறக்க முடியாத வாசிப்பை பரிசளிக்கின்றன.

கேத்தரின் மேயோ ‘மதர் இந்தியா’ என இந்தியாவைக் கடுமையாக விமர்சித்து எழுதிய நூலுக்கு எதிர்வினையாற்றி அமெரிக்காவை கடுமையாக விமர்சித்து நூல் எழுதிய கௌபா, பின்னர் இஸ்லாமியராக மாறி இந்தியாவில் முஸ்லீம்கள் நிலை என நூல் எழுதிய கதை சுவையான ஒரு நாவலுக்கு உரிய பெருங்கதை. பாகிஸ்தான் என்கிற சொல்லை உருவாக்கிய ரஹ்மத் அலி ஜின்னாவை எதிர்த்து பேசியதற்காக நாட்டை விட்டு துரத்தப்பட்டு அகதியாக இறந்த கதை வரலாற்று வலி.

 

 

இந்திரா காந்தியும், வாஜ்பேயியும் அவசரநிலைக்குப் பிந்தைய ஜனதா அரசின் காலத்தில் கவிஞர் முகமது இக்பாலுக்காக நிகழ்த்தப்பட்ட டெல்லி நிகழ்வில் கலந்து கொள்கிறார்கள். இக்பாலின் வாரிசு இந்திராவை பாகிஸ்தானுக்கு அழைக்கிறார். அப்போது ஜனதா அரசு இந்திராவை பல்வேறு வழக்குகளில் வறுத்துக் கொண்டிருந்த சமயம். அயலுறவு அமைச்சரான வாஜ்பேயியை சுட்டிக்காட்டி, ‘அவரை முதலில் என்னுடைய பாஸ்போர்ட்டை தர சொல்லுங்கள்’ என்று சிரித்தாராம் இந்திரா. நூலில் பல்வேறு சுவையான முரண்பாடுகள் வந்து செல்கின்றன. பாகிஸ்தானின் மிக உயரிய விருது மொரார்ஜி தேசாய்க்கு வழங்கப்பட்ட பிறகு அதைப் பெற்றுக்கொள்ள அனுப்பப்பட்டவர் யார் தெரியுமா? சுப்ரமணிய சாமி! இந்தியா மனித உரிமை மீறல்களில் ஈடுபடுகிறது என்று பாகிஸ்தான் சர்வதேச அளவில் குற்றச்சாட்டை எழுப்பிய போது பிரதமர் நரசிம்ம ராவ் அதை எதிர்கொள்ள அனுப்பி வைத்த குழுவின் உறுப்பினர்கள் யார் தெரியுமா? வாஜ்பேயி, காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஷேக் அப்துல்லா. அங்கே இந்தியாவின் வெற்றியை உறுதி செய்துவிட்டு திரும்பிய பின்பு வாஜ்பேயி காஷ்மீர் மக்களின் மனித உரிமைகளைப் பேணுவதில் நாம் தீவிரமாகச் செயல்பட வேண்டும் என்று பேசினார்.

Image result for vajpayee indira morarji

பாகிஸ்தானை மண்டியிட வைக்கும்  வாய்ப்பு கிடைத்தும் பூட்டோவை இந்திரா திரும்பி அனுப்பி வைத்தது ஏன், பூட்டோவின் தூக்கு தண்டனையின் போது பிரதமர் மொரார்ஜி தேசாய் மௌனம் சாதித்தது எதனால், ஹாஜி பிர் தடத்தைப் பாகிஸ்தானுக்குக் கொடுத்த அதிர்ச்சியால் சாஸ்திரி இறந்தாரா என்று பல்வேறு கேள்விகள் நூலை படிக்கையில் எழாமல் இல்லை.

 

இந்திய அயலுறவு கொள்கையில் இருக்கும் தொடர்ச்சி பல்வேறு நிகழ்வுகளின் மூலம் வெளிச்சமிட்டுக் காட்டப்படுகின்றன. சிந்து நதி உடன்படிக்கையை ரத்து செய்யலாமா என வாஜ்பேயி அரசு யோசித்த போது, அவரே இந்திரா அரசு சிந்து நதி சார்ந்து தயாரித்த ஒப்பந்தத்தை நிறைவேற்றியதை முன்னாள் அயலுறவு செயலாளர் நினைவுபடுத்துகிறார். இந்தியா ஒப்பந்தத்தை ஒருதரப்பாக மீறினால், சீனாவும் கழுத்தை நெரிக்கும் என்கிற எச்சரிக்கையும் இணைந்து பரிமாறப்படுகிறது. வாஜ்பேயி அந்த நேரத்து வெப்பத்தில் நீண்டகால நலனை பலிகொடுக்காமல் பார்த்துக்கொண்டார். வாஜ்பேயி மேற்கொண்ட நல்லெண்ண நடவடிக்கைகள் மன்மோகன் காலத்திலும் தொடரப்பட்டதும் கவனப்படுத்தப்படுகின்றன.

 

 

இந்நூல் இந்திய-பாகிஸ்தான் சிக்கல்களுக்குத் தீர்வை முன்வைக்கவில்லை. சிக்கல்களின் ஆணிவேரை தேடியும் பயணிக்கவில்லை. காலமுறைப்படி இந்தப் பக்கத்து வீட்டு பங்காளியுடனான உறவின் கசப்புகள், கனிவான கணங்களைக் காட்சிப்படுத்துகிறது. இந்த நூலின் இறுதியில் ஆசிரியர் எழுதுவதைப் போல, ‘ஒரு நாட்டின் மீது இன்னொரு நாட்டிற்கு உள்ள நல்லெண்ணம், வெறுப்பு இரண்டையுமே குறைத்து மதிப்பிட முடியாது. காலம் காலமாக
அயலுறவு கொள்கையில் கழுகை போலக் குத்திக் கிழிக்க வேண்டும் என்பவர்கள் ஆகட்டும், புறா போல அமைதி பேண வேண்டும் என்பவர்கள் ஆகட்டும் இருதரப்பும் அவ்வப்போது முக்கியத்துவத்தை இழப்பார்கள். எதோ ஒரு கட்டத்தில், ஒரு காலத்தில் அவர்கள் தரப்பே சரி என நிரூபிக்கும் கணத்தைப் பெற்றுவிட்டுக் குதூகலிக்கையில் அதற்குள் அவர்கள் பார்வை தவறென நிரூபிக்கும் கணங்கள் வந்து சேரும்.’

Image result for pakistan india relations

போர், போர் எனக் குதிப்பவர்களும், பாகிஸ்தான் பார்வையைப் புரிந்து கொள்ள விரும்புவர்களும், நெருங்கியும்-நெருக்கியும் நகரும் இந்த உறவின் ஆழ அகலங்களை அறிய முனைபவர்களும் வாசிக்க வேண்டிய நூல். காந்தி ஐம்பத்தி ஐந்து கோடி தரச்சொல்லி தான் உண்ணாவிரதம் இருந்தார் என்கிற பிழையான புரிதலோடு ஆசிரியர் ஆரம்பப் பக்கங்களில் பதிவு செய்கிறார். ராஜீவ் காலம் வரை சுவையாக நகரும் நூல் அதற்குபிறகு வரிசைமுறைப்படி நிகழ்வுகளைச் சொல்வதோடு நின்றுகொள்வது பெரிய குறை. செறிவான, சுவையான நூல்.

 

 

 

 

 

கருப்பு வெள்ளை புகைப்படங்கள் காட்டும் வரலாறு!


ரகு ராய் இந்தியாவின் முக்கியமான புகைப்படக் கலைஞர்களில் ஒருவர். அறுபதுகளில் பொறியியல் வல்லுனராக வேலை பார்க்கும் வாய்ப்பை உதறிவிட்டுப் புகைப்படக் கலைஞராக வாழ்பவர். அவரின் லென்ஸ் வழியாக விடுதலைக்குப் பிந்தைய இந்தியாவைப் பார்க்கிற அனுபவம் எப்படிப்பட்டதாக இருக்கும்? அரிய ஆவணமாக அவரின் புகைப்படங்கள் திகழ்ந்திருப்பதை ‘Picturing Time’ நூல் புலப்படுத்துகிறது. ஒரு நெகிழ்வான பயணத்தின் சில கணங்கள் இங்கே

Image result for raghu rai PICTURING TIME

நூலின் உள் முகப்பில் ஒரு மணல் புயல் வீசுகிற புகைப்படம் இருக்கிறது. ராஜஸ்தானில் நலத்திட்டங்களுக்கு எக்கச்சக்க நிதியை மத்திய அரசு ஒதுக்குகிறது. மாநில முதல்வர் வாரி சுருட்டுகிறார். என்ன ஆனது என்று களத்துக்கே சென்று விசாரிக்க இந்திரா காந்தி ராஜஸ்தான் வருகிறார். ஜனாதிபதி ஜெயில் சிங் இறந்து விட்டார் என்கிற செய்தி வருகிறது. இந்திராவின் ஹெலிகாப்டர் கிளம்புகிறது. அப்பொழுது எழும் மணல் புயல் மக்களின் கண்களில் தூவப்படுகிறது. காலங்களைக் கடந்தும் புகைப்படம் அரசியல், ஊழல், மக்கள் இடையே உள்ள உறவை பறைசாற்றுகிறது இல்லையா?

 

Image result for RAJASTHAN RAGHU RAI SAND STORM

ஒரு போர் எளிய மக்களை என்னவெல்லாம் செய்கிறது? இந்த வங்கப்போரின் ஒற்றைப் புகைப்படும் கலங்கடிக்கும்

இந்திராவை ‘ஊமை பொம்மை’ என்று ஆரம்பத்தில் கருதியவர்கள் எல்லாம் அசந்து போகும் அளவுக்கு அசுரப் பாய்ச்சல் காட்டினார். எவ்வளவோ பத்திகள் சொல்ல முடியாத அவரின் ஆதிக்கத்தை இந்தப் புகைப்படம் சொல்லிவிடுகிறது.

இந்திராவின் ஆட்சியை எதிர்த்து முழங்கிய ஜெயபிரகாஷ் நாராயண் மீது பாயும் லத்தியை ரகு ராயின் கேமிரா உறைய வைத்த பொழுது

அவசர நிலைக்குப் பிந்தைய தேர்தல் முடிவுகளுக்கு முந்தைய தினம்
எடுக்கப்பட்ட படம். சஞ்சய்யின் கட்டாயக் குடும்பக் கட்டுப்பாட்டு திட்டத்தின் வாசகமான, ‘நாம் இருவர், நமக்கு இருவர்’ சுவரில் எழுதப்பட்டு இருக்கிறது. இந்திராவின் சுவரொட்டியை குப்பை அள்ளுபவர் அள்ளிக்கொண்டு போகிறார். ஒரு தலைவியின் வீழ்ச்சியின் ஆவணம் அது


இந்தியாவின் முதலாவது ஐந்து நட்சத்திர பீல்டு மார்ஷலாக மானெக்ஷா உயர்த்தப்படும் கணத்தில் ஜனாதிபதி மீசையை முறுக்கி விளையாடுகிறார்

Sam Manekshaw, 1973: President V.V. Giri is appointing the general to the five-star rank of field marshal; the first army chief to receive that title. It looks, of course, as if he is twirling the famous moustache.
அன்னை தெரசாவின் சேவை மிகுந்த, எளியவருக்கு இரங்கும் வாழ்க்கையைக் கடத்தும் புகைப்படம்

Image result for mother teresa raghu rai
நம்முடைய பாரம்பரிய சின்னங்களை எப்படிச் சிதைக்கிறோம் என்பதை உத்திர பிரதேசத்தின் இமாம்பராவை கொண்டு கவனப்படுத்துகிறார் ரகு ராய்

போபால் விஷ வாயு விபத்தை ரகு ராயின் புகைப்படங்கள் அதன் வலி, இழப்பு, கண்ணீர், அநீதி, கொடூரம் ஆகியவற்றோடு உலகத்தின் முன் நிறுத்தின. குறிப்பாக இந்தக் குழந்தையின் புகைப்படம் போபால் அநீதியின் கருப்பு-வெள்ளை சாட்சியாக இன்னமும் இருக்கிறது

Image result for bhopal raghu rai

 

Image result for RAJASTHAN RAGHU RAI thiruvalluvar
பாபர் மசூதி இடிப்புக்கு முந்தைய தினம் அயோத்தி எத்தகைய அமைதி பூமியாக இருந்தது என்கிற காட்சி மதவாதம் எப்படிக் குலைத்துப் போடுகிறது என வலியை தருகிறது

Image result for ayodhya raghu rai

 

காங்கிரஸ் குறித்த மிகக்கூர்மையான அங்கதம் இந்த புகைப்படத்தில் இருக்கிறது

புகைப்படங்கள் காப்புரிமை: ரகு ராய்

ALEPH PUBLICATIONS

RAGHU RAI

PICTURING TIME

விலை: 1500 ரூபாய்

பக்கங்கள்: 192

வங்கதேசம் உருவான சர்வதேச வரலாறு


 

1971 A GLOBAL HISTORY OF CREATION OF BANGLADESH நூல் அறிமுகம். பாகம் 1:

போர்கள் இல்லாத உலகம் வேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். ஆனால், போர்கள் நடந்து முடிந்த பின்னால் மாபெரும் வெற்றி என்றோ, பெருந்தோல்வி என்றோ கதைகள் எழுதப்படுகின்றன. சிலரை நாயகனாக, சிலரை வில்லனாக ஆக்கும் கருப்பு, வெள்ளை கதைகள் தான் போர்கள் சார்ந்து பெரும்பாலும் உலவி வருகிறது. வரலாறு ஆனால் அத்தனை எளியது இல்லை. ‘போர்களைப் புரிந்து கொள்வோம்.’ என்கிறார் ராணுவ வரலாற்று ஆசிரியர் ஸ்ரீநாத் ராகவன்.

 

Image result for 1971 war a global history

 

இந்தியாவின் முன்னணி ராணுவ வரலாற்று ஆசிரியரான அவர் இரண்டாம் உலகப்போரில் இந்தியாவின் பங்களிப்பு, 1971 போர் குறித்த சர்வதேச வரலாறு, நேரு காலத்தில் போரும், அமைதியும் என்று வெவ்வேறு தலைப்புகளில் மிக முக்கியமான நூல்களை எழுதியிருக்கிறார். அவரின் 1971 இந்தியா-பாகிஸ்தான் போர் குறித்த நூலை வாசித்து முடித்தேன்.

நூல் லால் பகதூர் சாஸ்திரியின் மரணத்தில் துவங்குகிறது. இந்தியாவுடன் ஏற்பட்ட எல்லை பிரச்சனையைப் போரில் கொண்டு போய்ப் பாகிஸ்தான் நிறுத்தியது. அந்தப் போரை சோவியத் ரஷ்யா சமாதானம் செய்து வைத்து முடித்த ஆறே வருடத்தில் ஏன் இன்னொரு போர் ஏற்பட்டது? மேற்கு, கிழக்கு என்று பாகிஸ்தான் இரு பகுதிகளாகப் பிரிந்து கிடந்தது. இந்தியா நடுவில் இருக்க, மனதளவிலும், நாடு என்கிற உணர்விலும் வேறுபடும் பல்வேறு தருணங்கள் இரு பகுதிகளுக்கு இடையே நடந்தன.

ஜின்னா 1948 ஆம் வருடம் பாகிஸ்தானின் அதிகாரப்பூர்வ மொழியாக உருது மட்டுமே இருக்கும் என்றார். 1956-ல் பாகிஸ்தானின் பிரதமரும், வங்காளி மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட குவாஜா நஜிமுதீன் உருது மொழி மட்டுமே அதிகாரப் பூர்வ மொழி என்று அறிவிக்க வங்கதேச மாணவர்கள் போராட்டங்களில் குதித்தார்கள். ரத்த வெள்ளம் ஓடியதற்குப் பின்பு வங்கமொழியும் தேசிய மொழியானது. கிழக்கு பாகிஸ்தானின் சணல் ஏற்றுமதியில் கிடைத்த வருமானம் மேற்கு பாகிஸ்தானை வளப்படுத்தப் பயன்படுத்தப்பட்டது. 1954-1960 காலத்தில் மேற்கின் வளர்ச்சி 3.2% லிருந்து 7.2% ஆக உயர்ந்தது. கிழக்கு பகுதியின் வளர்ச்சி 1.7% லிருந்து 5.2% என்கிற அளவுக்கே உயர்ந்தது. பல்வேறு சலுகைகள் மேற்கு பகுதிக்கே வாரி இறைக்கப்பட்டன. அதிகாரம் பெரும்பாலும் மேற்கு பாகிஸ்தான் வசமே இருந்தது.

வங்கதேசம் என்கிற நாடு உருவாக இந்த மாற்றாந்தாய் மனோபாவமே காரணம் என்று சொல்லப்பட்டாலும் வங்கதேச உருவாக்க வரலாறு என்பது ஸ்ரீநாத் ராகவனின் பார்வையில், ‘சந்தர்ப்பம், தற்செயல், தேர்வு, வாய்ப்பு’ ஆகியவை ஒருங்கே கைகூடி வந்ததால் உண்டான ஒன்று. பாகிஸ்தானை அறுபதுகளில் அயூப் கான் ஆண்டுக் கொண்டிருந்தார். பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டாலும் ராணுவ ஆட்சிக்கு எதிராக மாணவர்கள் வீதிக்கு வந்து போராடினார்கள். மாணவர்களுக்குப் பல்கலையில் கல்வி புதிய விழிப்புணர்வை தந்தது. ஒரு முறை தேர்வில் தவறினால் ஒரே முறை மட்டுமே மீண்டும் தேர்வு எழுத அனுமதி முதலிய விதிகள் கடும் அதிருப்தியை உண்டு செய்தன. 86.5 லட்சமாக இருந்த வறியவர்கள் எண்ணிக்கை 93.3 லட்சமாக உயர்ந்து நின்றது. தலைமை பொருளாதார அறிஞரின் வார்த்தைகளில், நாட்டின் 66% தொழில்வளம், 87% வங்கி, காப்பீட்டு வளங்கள் 22 குடும்பங்களிடம் குவிந்து கிடந்தன.

ஒரு சிறு பொறி தான். பல்வேறு இளைஞர்கள் வீதிக்கு வந்து போராடினார்கள். நாடே ரணகளம் ஆனது. எதிர்ப்பின் வெம்மை தாங்காமல் அயூப் கான் விலகி யாஹ்யா கான் எனும் ராணுவத் தளபதிக்கு வழிவிட்டார். ஜனநாயகம், புது அரசமைப்புச் சட்டம் வரும்வரை மட்டுமே தான் பதவியில் இருப்பேன் என்று யாஹ்யா கான் வாக்குத் தந்தார். தேர்தல் வந்தது.

Image result for yahya bhutto

கிழக்குப் பாகிஸ்தானில் அவாமி முஸ்லீம் லீகின் தலைவர் முஜிபுர் ரஹ்மான் ஆறு அம்சத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று போர்க்குரல் கொடுத்தார். உண்மையான கூட்டாட்சி வேண்டும், ராணுவம், வெளியுறவு ஆகியவை மட்டுமே மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வரும், இரு தனித்தனி நாணயங்கள், தனி நிதிக் கொள்கைகள், தனி அயல்நாட்டுப் பரிவர்த்தனைகள் நிகழ அனுமதி வேண்டும். கிழக்கு பாகிஸ்தானுக்குத் தனிப்படையை வைத்துக்கொள்ள அங்கீகாரம் வேண்டும் என 1966-ல் கொடுத்த கோஷங்களை மீண்டும் எழுப்பினார். கிழக்குப் பாகிஸ்தான் மக்கள் அவர் பின்னால் அணிவகுத்தார்கள். மேற்கு பாகிஸ்தானில் பூட்டோ களத்தில் இருந்தார்.

தேர்தல் முடிவுகள் வந்தன. யாரும் எதிர்பாராத வகையில் முஜிபுர் ரஹ்மானின் கட்சி கிழக்குப் பாகிஸ்தானில் 160/162 என்று வென்று இருந்தது. மேற்கு பாகிஸ்தானில் 81/138 என்கிற அளவிலேயே பூட்டோ கட்சி வென்றது. ஆட்சி அமைக்க முஜிபுர் உரிமை கோரினார். பூட்டோவுடன் இணைந்து ஆட்சி அமையுங்கள் என்று யாஹ்யா கான் அடம்பிடித்தார். சிந்தும், பஞ்சாபும் தங்களுடைய ஆதிக்கத்தை இழந்துவிடும், ஆகவே, முஜிபுரின் கட்சி தனித்து ஆட்சி அமைக்கக் கூடாது என்று பூட்டோ கிளம்பினார். அரசமைப்புச் சட்டத்தை உருவாக்க தேசிய கவுன்சிலின் கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும் என்று முஜிபுர் கோரினார். இவர்களுக்கு அதிகாரத்தைத் தரவேண்டுமா எனக் கடுப்பாக யாஹ்யா கான் பார்த்தார். ராணுவச் சட்டத்தை அமல்படுத்தினார்.

ஆறு அம்ச திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று முஜிபுர் உறுதியாக இருந்தார். தேசிய கவுன்சிலை காலவரையறை இல்லாமல் ஒத்தி வைத்தார் யாஹ்யா. ஒரு பக்கம் பேச்சுவார்த்தை நடத்துவது போலப் பாவனைச் செய்துகொண்டே, படைகளை ஆசீர்வதித்துக் கிழக்கு பாகிஸ்தானுக்கு அனுப்பி வைத்தார்கள். அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டது. பிணங்கள் விழுந்தன. மொத்தமாக அப்பகுதியின் அமைதி குலைந்து போனது. அப்பகுதி மாணவர்கள் அமர் சோனா பங்களா (என் இனிய பொன் வங்கமே) எனும் தாகூரின் பாடலை தேசிய கீதம் என அறிவித்தார்கள். தனி நாடு என முழங்கினார்கள்.

முஜிபுர் தனி நாடு என்று எங்கேயும் உச்சரிக்கவில்லை. ராணுவச்சட்டத்தை நீக்கிவிட்டு, படைகளைத் திரும்பப் பெறுங்கள். ராணுவம் நடத்திய துப்பாக்கி சூடுகள் மீது விசாரணை, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளிடம் அதிகாரத்தைக் கைமாற்றுவது ஆகிய கோரிக்கைகளை மட்டுமே அவர் வைத்தார். அது நிச்சயம் முடியாது என்று யாஹ்யா-பூட்டோ செயல்களால் சொன்னார்கள். ராணுவத்துக்கு இறங்கி ஆடுங்கள் என்று உத்தரவு தந்தார் யாஹ்யா. முஜிபுர் கைது செய்யப்பட்டார். படுகொலைகள், பாலியல் வன்முறைகள் அரங்கேற ஆரம்பித்தன.

பரவலாக இந்தியாவில் சொல்லப்படும் கதை, இந்திரா வங்கதேசத்தைக் கச்சிதமாகத் திட்டமிட்டு சாதித்தார் என்பதே ஆகும். ஆனால், வரலாறு வேறு வகையாக இருக்கிறது. இந்திரா பாகிஸ்தானில் பிரச்சனை ஆரம்பித்த பொழுது, தன்னுடைய கட்சியில் ஏற்பட்ட பிளவை சமாளிக்கப் போரடிக் கொண்டு இருந்தார். ‘வறுமையே வெளியேறு’ என்கிற கோஷத்தோடு அவர் மீண்டும் மிருக பலத்தோடு ஆட்சிக்கு வந்திருந்தார்.

வங்கதேசம் என்கிற நாடு உருவாக வேண்டாம் என்பதே முதலில் இந்தியாவின் கருத்தாக இருந்தது. தனியாக உருவாகும் வங்கதேசம் அப்படியே மேற்கு வங்காளத்தையும் சேர்த்துக்கொண்டால் என்னாவது என்பது முதல் கவலை. அடுத்து அசாம் வேறு கிளம்பலாம் என்பது அடுத்தக் கவலை. காஷ்மீர் உள்நாட்டு சிக்கல் என்று தொடர்ந்து அழுத்திச் சொல்லிவிட்டு, இப்பொழுது பாகிஸ்தானின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவது எப்படி என்பது அடுத்தத் தலைவலி. நைஜீரியாவின் BIAFRA எனும் பிரிவினை இயக்கம் நடைபெற்ற பொழுது அரங்கேறிய இனப்படுகொலைகளை ஐநா கண்டுகொள்ளவில்லை.ஆகவே, தனி நாட்டை எல்லாம் எதற்கு உருவாக்கி தலைவலியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றே இந்தியா நினைத்தது.

மேலும், இந்திய ராணுவத் தளபதி மானெக்ஷாவின் கூற்றுப்படி, ‘ஏதேனும் செய்யுங்கள் தளபதி. உடனே போர் தொடுங்கள். போர் ஆரம்பித்தாலும் கவலையில்லை.’ என்று இந்திரா கெஞ்சிக்கேட்டும் அவர் போகவில்லை. ஆனால், இது உண்மையில்லை என்று ஆவணங்கள் நிரூபிக்கின்றன. பாகிஸ்தான் ராணுவம் நவீனமயமாகி இருந்தது. 90-120 நாட்கள் இந்தியாவுடன் போர் செய்யும் அளவுக்கு அதனிடம் வலிமை இருப்பதாக இந்திராவிடம் அறிக்கை தரப்பட்டு இருந்தது. ‘ஆயுதங்களைக் குவித்துக்கொண்டு போரில் பருவமழைக்குப் பின்னர் இறங்கலாம். அப்பொழுது பனிக்காலம் என்பதால் இமயமலையைக் கடந்து சீனா வர முடியாது.’ முதலிய வாதங்களை மானெக்ஷா வைத்தததால் இந்திரா பின்வாங்கினார் என்று ராணுவத் தளபதி சொன்னாலும், இந்திராவோ, அரசின் அதிகார மையங்களோ போரில் குதிப்பதை பற்றி அப்பொழுது யோசிக்கவே இல்லை என்பதே உண்மை.

ஒரு நாளைக்கு ஒரு லட்சம் அகதிகள் என்கிற எண்ணிக்கையில் பல லட்சம் மக்கள் இந்தியாவிற்கு இனப்படுகொலையால் தஞ்சம் புகுந்தார்கள். அதிலும் இந்துக்களைக் குறிவைத்து தாக்குவது தொடர்ந்தது. வந்த அகதிகளில் 80% இந்துக்கள் என்பது இதனைத் தெளிவுபடுத்தும். ஆனால், இதை இப்பொழுது வெளிப்படுத்தினால் இதை ‘இந்து-முஸ்லீம்’ பிரச்சனையாகப் பாகிஸ்தான் மாற்றும் என்று இந்திரா உணர்ந்திருந்தார். வாஜ்பேயியை அழைத்து, இதை அரசியலாக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். IDSA அமைப்பின் தலைவராக இருந்த சுப்பிரமணியம் உடனே இறங்கி அடித்தால், வெற்றி பெற்றுவிடலாம். ஒரு தனி நாட்டை உருவாக்கிவிடலாம் என்று அறிவுரை சொன்னார். யாரும் கேட்பதாக இல்லை.

இதற்குச் சற்று முன்பு தான் ரஷ்யா-சீனா உறவு உருக்குலைந்து இருந்தது. செக்கோஸ்லோவாக்கியாவில் ராணுவத்தைக் கொண்டு அரசை அடித்துத் துவம்சம் செய்த கையோடு சோவியத் ரஷ்யா ‘பிரெஷ்னேவ் சாசனம்’ என்று ஒன்றை அறிவித்தது. உலகில் எங்கெல்லாம் சோசியலிசம் சரியாக அமல்படுத்தப்படவில்லையோ அங்கெல்லாம் வந்து சரி செய்யும் பொறுப்பு எங்களுக்கு உண்டு. சீனாவுக்கு வியர்த்தது. உசுரி நதிக்கரையில் இருபடைகளும் மோதிக்கொண்டன. பலத்த சேதத்தை இரு தரப்பும் சந்தித்தன. மீண்டும் சில மோதல்கள். உறவு முறிந்து போனது.

அமெரிக்கப் பாதுகாப்பு ஆலோசகர் கிஸ்ஸிங்கர் அகமகிழ்ந்து போனார். யாஹ்யா கானை அழைத்துச் சீனாவுடன் உறவு ஏற்படுத்த உதவுமாறு கேட்டார். தூதுவராக யாஹ்யா சென்று /வந்தார். சீனா பொறுமையாகவே அடியெடுத்து வைத்தது. இன்னொருபுறம் அமெரிக்க அதிபர் நிக்ஸன் இந்தியாவிற்குப் பயணம் வந்து போனார். ‘செவ்வாய் கிரகத்துக்குச் சேர்ந்து போவோம்.’என்றெல்லாம் உற்சாகம் பொங்க பேசினார். ஆனால், 1965 போருக்குப் பின்னால் இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கு ஆயுத விநியோகம் கிடையாது என்கிற விதியை தற்காலிகமாகப் பாகிஸ்தானுக்கு மட்டும் தளர்த்தினார். சீனா லட்சியம்.

கிழக்குப் பாகிஸ்தானில் நிலைமை மோசமாகி இருந்தது. சட்டத்தைத் தூக்கிப்பிடித்து, மாகாண சுயாட்சியைத் தரவேண்டும் என்று முஜிபுர் தரப்புக் கேட்டாலும், மூன்றே கட்சிகள் தான் இனி இருக்கும். அவாமி லீக் தடைசெய்யப்பட்டது. முஜிபுர் பொதுவாழ்வில் ஈடுபட வாழ்நாள் தடை என்று அறிவித்தார் யாஹ்யா. அரசமைப்புச் சட்டத்தை உருவாக்க என்று தானே ஒரு குழுவை வேறு நியமித்தார். கண் துடைப்பு என்று கிழக்குப் பாகிஸ்தான் மக்களுக்குத் தெரியும். ராணுவ டாங்கிகள் வெறியாட்டம் ஆடிக்கொண்டு இருந்தன.

ரஷ்யா-இந்தியா போட்டுக்கொண்ட இருபது ஆண்டுகால நட்புணர்வு, ஒத்துழைப்பு ஒப்பந்தம் தான் அமெரிக்கா-சீனாவை இந்தியா-பாகிஸ்தான் போரில் ஈடுபடாமல் தடுத்தது என்பது பரவலாகச் சொல்லப்படுவது. உண்மையில் நடந்தது இன்னும் சிக்கலானது. சோவியத் ரஷ்யா ஒரு தனி நாடு உருவாவதை விரும்பவில்லை. சீனாவின் ஆதிக்கத்தை அது அதிகப்படுத்தும் என்பது ஒரு கவலை. இரண்டாவது நீர்த்துப்போன பூர்ஷ்வாக்கள் என்றே வங்கதேசம் நாடி போராடியவர்களை அவர்கள் நம்பினார்கள். இவை அனைத்துக்கும் மேலாக அமெரிக்கா-ரஷ்யா இருவரும் இந்தச் சிக்கலை அணுகியதில் ஒரு முக்கிய வேறுபாடு இருந்தது. அமெரிக்கா இதைப் பனிப்போரின் நீட்சியாகக் கண்டது. ரஷ்யாவோ அகதிகள் சிக்கல் தனி, பாகிஸ்தானின் அரசியல் சிக்கல் தனி என்று பிரித்துப் பார்த்தது.

இந்தியாவுடன் அந்த ஒப்பந்தத்தைப் போட்டுக்கொள்ளலாம் என்று வெகுகாலமாக ரஷ்யா கேட்டது. எனினும், உள்நாட்டில் நிலைமை தனக்குச் சாதகமாக இல்லாத சூழலில் அதனை அப்பொழுதைக்குச் செய்ய இந்திரா மறுத்தார். கிஸ்ஸிங்கர், ‘இந்தியா பாகிஸ்தான் மீது பாய்ந்தால் சீனா அதன் உதவிக்கு வரும்.’ என்று இந்திய தூதுவர் L.K.ஜாவை எச்சரித்தார். அவ்வளவு தான். வெகுகாலமாக இழுத்தடித்து ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்து போட்டது.

 

Image result for indira mujib bhutto

பாகிஸ்தானில் பத்திரிக்கையாளராக இருந்த அந்தோணி மாஸிகரென்ஸ் கிழக்கு பாகிஸ்தானுக்குச் சென்று பார்த்த பொழுது பத்து நாட்களில் எப்படிப்பட்ட இனப்படுகொலை நடக்கிறது என உணர்ந்து /கொண்டார். தன்னுடைய நாட்டை விட்டு குடும்பத்தோடு வெளியேறினார். லண்டனின் ‘சண்டே டைம்ஸ்’ இதழில் இனப்படுகொலை என்கிற தலைப்பில் 5000 வார்த்தைகளில் அவர் எழுதிய கட்டுரை பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இங்கிலாந்து, பிரான்ஸ், மேற்கு ஜெர்மனி ஆகிய நாடுகளில் அம்மக்களுக்கு அனுதாபம் பெருகியது.

Image result for 1971 war
மோசமான பொருளாதாரச் சிக்கலில் பாகிஸ்தான் சிக்கியிருந்தது. தரவேண்டிய கடன்கள் கழுத்தை நெரித்தன. பொன்முட்டை கிழக்குப் பாகிஸ்தான் சிக்கி சின்னாபின்னமாகி கொண்டிருந்தது. உலகம் முழுக்க இருந்த வங்காளிகளைப் பணம் அனுப்ப வேண்டாம் என்று போராளிகள் கேட்டுக்கொண்டது வேறு பெரிய சேதத்தை உண்டு செய்தது. அமெரிக்கா நான் இருக்கிறேன் என்று நிதியுதவி செய்தது. சீனா மசிந்து கொடுத்து விடாதா என்று ஓரமாக வேறு கவனித்துக் கொண்டிருந்தது. சீனா என்ன தான் நினைத்துக் கொண்டிருந்தது?

சீனப்போருக்கு பின்னரும் இந்திய-சீன உறவினில் சிக்கல்கள் தொடர்ந்தன. எல்லையில் சமயங்களில் மோதிக்கொண்டன. சீனா உறவை சீர் செய்யலாம் என முயன்ற பொழுது இந்திரா அதற்கு ஒப்பவில்லை. இன்னமும் சீன வெறுப்பு உச்சத்தில் உள்ளது என உணர்ந்திருந்தார். எனினும் தொடர்ந்து சீனாவுடன் இந்தியா தொடர்பில் இருந்தது. சீனா பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருந்த காஷ்மீரின் கில்கிட் பகுதியில் சாலையை அமைத்த பொழுதும் இந்தியா பெரிதாக எதிர்க்கவில்லை.

சீனா பற்றியெரிந்த கிழக்குப் பாகிஸ்தான் சிக்கலில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளவில்லை. காரணங்கள் பல. ரஷ்யாவை போலவே சீனாவும் வங்கப்போராளிகளைப் பூர்ஷ்வாக்கள் என எண்ணியது. சீன பாகிஸ்தான் உறவின் முதல் விதையைப் போட்டது சுஹ்ரவர்த்தி எனும் கிழக்குப் பாகிஸ்தானைச் சேர்ந்த பிரதமர். அப்பகுதியில் பலர் சீன அனுதாபிகளாக இருந்தார்கள். மேலும் 2 சீன ஆதரவு கட்சிகள் கிழக்குப் பாகிஸ்தானில் செயல்பட்டன. உள்நாட்டுப்போர் தன் ஆதரவாளர்களை அழித்து ஒழிப்பதையும் சீனா கண்டது. சீனா நேரடியாகக் களத்தில் இறங்கவோ, பெரிதாகவோ மிரட்டவில்லை. காரணம் மாவோ!

கலாச்சாரப் புரட்சியின் என்கிற பெயரில் பல லட்சம் சீனர்கள் இறக்க காரணமானார் மாவோ. கட்சி, அரசு ஆகியவற்றுக்கு எதிராக ராணுவத்தைக் களமிறக்கியதன் மூலம் ராணுவம் நாட்டில் முதன்மையானது என்கிற நிலையை உண்டாக்கினார். அவருக்கு அடுத்து ஆட்சிக்கு வரவிருப்பது லின் பியாவோ எனும் ராணுவ தளபதி எனக் கருதப்பட்டது. மாவோவிற்கு அரிப்பெடுத்தது. தன் நாற்காலி ஆட்டம் காண்பதாக உணர்ந்தார். லின் பியாவோவை எப்படியேனும் ஒழித்துக்கட்ட வேண்டும் என்று காய்கள் நகர்த்தினார். அவரோ அசராமல் அரசுக்கு நேர்மையாக இருப்பதாகக் காட்டிக்கொண்டார். அவரின் மகன் அவசரப்பட்டு ஒரு கிளர்ச்சியை நடத்த முயன்றார். மாவோ அனைவரையும் ஒழித்துக்கட்ட கிளம்பினார். லின் பியாவோ தப்பித்து ஓட வேண்டியதாயிற்று. ராணுவத்தின் பெருந்தலைகள ஒழித்துக் கட்டிவிட்டு பெருமூச்சு விட்டார் மாவோ. அதே காலத்தில் தான் பாகிஸ்தான் உள்நாட்டுப்போரில் தள்ளாடிக்கொண்டு இருந்தது.

 

Image result for srinath raghavan bangladesh

இந்தியா கொரில்லா போர் முறையைப் போராளிகளுக்கு அளித்துக் கொண்டிருந்தது. முக்தி பாஹினி, முஜிப் வாஹினி என இடதுசாரிகளைக் கொண்ட படை எனப் பிரிந்து கிடந்த பல்வேறு குழுக்களுக்குப் பயிற்சி அளித்தது. எனினும் அது போதுமானதாக இல்லை. ஒரு கோடிக்கும் மேல் அகதிகள் இந்தியாவிற்குள் தஞ்சம் புகுந்திருந்தார்கள். எவ்வளவு தான் தாங்குவது? என இந்தியா உலக நாடுகளிடம் கேட்டது. ஐநா சில எச்சரிக்கை, கொஞ்சம் களப்பணி என்பதோடு நின்று கொண்டது. இரு வல்லரசுகளும் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தன.

இந்தியா தன்னுடைய வீரர்களைச் சத்தமே இல்லாமல் போராளிகள் இடையே கலந்து மறைமுகப் போரை நடத்திக்கொண்டு இருந்தது. பாகிஸ்தான் மேற்கு பக்கமிருந்து இந்தியாவைத் தாக்கியது. ஒரு பெண் ஆளும் தேசம் தானே எனக் கொக்கரித்தார்கள். ‘CRUSH INDIA’எனக் கார்களில் அணிந்து கொண்டு திரிந்தார்கள். ஒரு முஸ்லீம் பத்து இந்தியர்களுக்குச் சமம் என நம்பினார்கள்.

போர் துவங்கியது என இந்தியா அறிவித்தது. மேற்கு எல்லையைக் காத்துக்கொண்டு கிழக்கில் படைகள் முன்னேறின.சிட்டகாங், குல்னா முதலிய துறைமுகங்களைக் கைப்பற்றுவது; முக்கிய நதி வழித்தடங்கள், விமானத் தளங்கள் ஆகியவற்றைக் கைப்பற்றுவது; நெல்லிக்காய் மூட்டையைக் கலைப்பது போலப் பாகிஸ்தான் வீரர்களைப் பிரித்து நசுக்குவது எனத் திட்டம் வகுக்கப்பட்டது. எனினும் டாக்காவை கைப்பற்றும் திட்டமில்லை. பத்மா, ஜமுனா, மேக்னா என ஏதேனும் ஒரு நதியை கடந்தாக வேண்டிய பெரும் சவால் இருந்தது. முடிந்தவரை பகுதிகளைக் கைப்பற்றி அங்கே தற்காலிக அரசை கொண்டுவருவது என்பதே இந்தியாவின் திட்டமாக இருந்தது. எனினும் ஒரு வித்தியாசமான வெற்றிக் காத்திருந்தது.

ஐநா பாதுகாப்புக் கவுன்சிலில் அமெரிக்கா, இந்தியா பாகிஸ்தான் போரை நிறுத்த வேண்டும்; தங்களின் பகுதிகளுக்குத் திரும்ப வேண்டும்; அரசியல் தீர்வு நோக்கி நகர வேண்டும் எனத் தீர்மானம் கொண்டு வந்தது. சாரம் இந்தியாவிற்கு இதிலென்ன வேலை. ரஷ்யா வீட்டோ மூலம் தடுத்தது. பொதுச் சபையில் 104-11 எனத் தீர்மானம் நிறைவேறி இந்தியா அழுத்தத்துக்கு ஆளானது.

அமெரிக்கா கொதித்தது. சீனா களமிறங்க வேண்டும் எனத் தூண்டி விட்டார்கள். வாயை மட்டும் மென்றது சீனா. ஆயுதங்களை அமெரிக்கா நேரடியாகக் கொடுக்கத் தடையிருந்தபடியால் ஈரான் ஜோர்டான் மூலம் முயன்றது. ரஷ்யாவுக்குப் பயந்து கொண்டு ஈரான் நேரடியாக ஆயுதங்கள் அனுப்ப மறுத்தது.

‘சீக்கிரம் முடித்துத் தொலையுங்கள்’ என இந்தியாவிடம் சோவியத் ரஷ்யா சொன்னது. அமெரிக்கா தன்னுடைய மிகப்பெரிய விமானம் தாங்கி கப்பலை இந்தியப்பெருங்கடல் பகுதிக்கு அனுப்பியது. இந்தியப்படைகளுக்கு உத்வேகம் தரும் வகையில் ஒன்று நடந்தது.

 

Image result for 1971 war

கிழக்குப் பாகிஸ்தானில் போராடிக் கொண்டிருந்த பாகிஸ்தான் படைகளின் மேஜர் ஜெனரல் ராவ் ஃபர்மான் அலி கான் ஒரு கோரிக்கை கடிதம் எழுதினார். உடனே போர் நிறுத்தம், 72 மணிநேர பரஸ்பர அமைதி, ராணுவ வீரர்கள், மக்கள் ஆகியோரை அவரவரின் பகுதிகளுக்கு அனுப்ப அனுமதிப்பது, பாகிஸ்தான் வீரர்களுக்கு எதிராக எந்தத் தண்டனையும் அளிக்கப்படக்கூடாது என நீண்ட அதன் செய்தி- ‘தோல்வியின் விளிம்பில் பாகிஸ்தான்!’. யாஹ்யா கான் அதைக் கிழித்துப் போட்டாலும் வீடு கலகலத்து விட்டது.

டாக்கா நோக்கி இந்தியப்படைகள் விரைந்தன. போலந்து போரை நிறுத்தவும் எனத் தீர்மானம் கொண்டு வந்தது. சோவியத் ரஷ்யாவின் நட்பு நாடு அது. செய்தி இந்தியா முடித்துக் கொள்ளவும் என்பதே அது. பிரிட்டன் பிரான்ஸ் என இந்திய ஆதரவுப்போக்கு நாடுகளும் தீர்மானம் கொண்டு வந்தன. போலந்து தீர்மானத்தில் முஜிபுர் ரஹ்மான் உடன் தான் பேச்சுவார்த்தை எனும் அறிவுறுத்தல் வரைவில் இருந்தாலும் இறுதி வடிவில் இல்லாமல் போயிருந்தது. இந்தியாவிற்கு வேலையில்லை, வங்கதேசம் கனவு என்பது செய்தி.

 

Image result for indira mujib bhutto

போலந்து தீர்மானத்தை ஏற்கவும் என யாஹ்யா ஐநாவில் இருந்த பூட்டோவுக்குத் தொலைபேசியில் உத்தரவிட்டார். ‘ஹலோ என்ன கேக்கலையே’ என மழுப்பினார் பூட்டோ. ‘தெளிவாகக் கேட்கிறது’ என்ற ஆபரேட்டரை வாயை மூடும்படி பூட்டோ சொன்னார். போலந்து தீர்மானத்தைக் கிழித்துப் போட்டார். 93000 பாகிஸ்தான் படைவீரர்கள் இந்தியாவிடம் சரணடைந்தனர். பூட்டோவுக்கு ராணுவம் வலுவிழந்து தான் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்கான காய் நகர்த்தலை முடித்த திருப்தி. வங்கதேசம் உருவானது.

அமெரிக்கா இந்தியாவிடம் சீனா உதவிக்கு வரும் எனப் பொய் சொல்லாமல் போயிருந்தால் இந்தியா ரஷ்யாவோடு ஒப்பந்தம் செய்திருக்காது. சீனாவின் உள்நாட்டுக் குழப்பம் தடுத்திருக்காவிட்டால், அமெரிக்கா பாகிஸ்தானை திவாலாகாமல் காத்திருக்காவிட்டால், போலந்து தீர்மானத்தைப் பூட்டோ கிழிக்காமல் இருந்திருந்தால் வங்கதேசம் உருவாகியிருக்காது.

ஊழல், செயல்திறமின்மை முஜிபுர் ரஹ்மான் ஆட்சியில் மிகுந்து போராட்டங்கள் வெடித்தன. அவசரநிலையைக் கொண்டு வந்தார். குடும்பத்தோடு ராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்தியா சுப்ரமணியம் சொன்னதைப்போல முதலிலேயே போரில் அடித்து ஆடியிருந்தால் பல லட்சம் மக்கள் இறந்திருக்க மாட்டார்கள். ராணுவம், அரசியல்வாதிகள், இடதுசாரிகள், கட்சிகள் இடையே அவநம்பிக்கை மிகுந்திருக்காது. நாடு விடுதலைக்குப் பின்பு அப்படி அவலங்களைச் சந்திருக்காது. வங்கதேச உருவாக்கம் இந்திராவின் மகத்தான ராணுவ வெற்றி, மிக மோசமான ராஜதந்திர தோல்வி.

 

Image result for srinath raghavan

 


1971 A GLOBAL HISTORY OF CREATION OF BANGLADESH
ஶ்ரீநாத் ராகவன்
பக்கங்கள் 358
விலை 599
PERMANENT BLACK

இந்தியாவும், உலகமும் -3


தேசப்பாதுகாப்பு முதல் வெளிநாடு வாழ் இந்தியர்கள் வரை:

இந்தியாவின் தேசப்பாதுகாப்புக்குப் பாகிஸ்தான், சீனா மிகப்பெரிய சவாலாக உள்ளன. பாகிஸ்தானுடன் எண்ணற்ற போர்கள் நடைபெற்று இருந்தாலும் இரு நாடுகளும் அணு ஆயுதங்களைத் தற்போது கொண்டிருப்பதால் முழுப்போருக்கான வாய்ப்புகள் இல்லையென்று இரு தேசங்களும் உணர்ந்திருக்கின்றன. அதேசமயம், பாகிஸ்தான் மறைமுகப் போர்களில் ஈடுபட்டு இந்தியாவை வீழ்த்த எண்ணுகிறது. இருமுறை இந்தியாவைப் போரை நோக்கி பாகிஸ்தான் தூண்டியும் இந்தியா சாதுரியமாக அமைதியாக நடந்து கொண்டது. சீனா அக்சாய் சின்னை பிடித்துக் கொண்டதோடு, பாகிஸ்தானுக்கு ஆயுத உதவிகள் செய்கிறது. திபெத் தலைவர் தலாய் லாமாவை இந்தியாவில் வைத்திருப்பது அதனை இன்னமும் உறுத்துகிறது. அதனோடு நில்லாமல், டப்சங் பள்ளத்தாக்கில் எல்லைகோட்டை தாண்டி 19 கிலோமீட்டர் அளவுக்கு அவர்களின் வீரர்கள் கேம்ப் அடித்துத் தங்கினார்கள். மூன்று வாரம் நடந்த தொடர் பேச்சுவார்த்தைக்குப் பின்னரே 2013-ல் அப்படைகள் விலகின. இந்தியா அதற்குப் பிறகு மலைப்பகுதியில் போரிட கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் கொண்ட படையை உருவாக்க அனுமதி அளித்தது.

depsang

இந்திய முஜாகிதீன் முதலிய அமைப்புகள் இந்தியாவில் சிறுபான்மையினருக்கு நிகழும் மோசமான நிகழ்வுகளைப் பயன்படுத்திக்கொண்டு வேரூன்ற பார்க்கிறார்கள். எனினும், இந்தியா ஒரு பக்கம் ஆயுதங்களாலும், இன்னொரு பக்கம் மக்களின் சிக்கல்களைக் கவனத்தில் கொண்டு செயல்படுவதன் மூலமும் எதிர்கொண்டிருக்கிறார்கள். பஞ்சாப் சிக்கலில் கடுமையான தீவிரவாத ஒடுக்குமுறை நடவடிக்கைகளின் மூலமே இந்தியா அமைதியைக் கொண்டுவந்தது. காஷ்மீர் சிக்கல் இன்னமும் உறுத்தலான ஒன்றாக இருக்கிறது என்றாலும், காஷ்மீரில் கூட்டாட்சி முறை வருங்காலத்தில் பெருமளவில் அமைதியைக் கொண்டுவரும் வாய்ப்புகள் உள்ளன என்கிறார் சுமித் கங்குலி. அமெரிக்காவுடன் தொடர்ந்து ஆயுத இறக்குமதியில் பங்கு பெற்றாலும், ரஷ்யாவுடனும் இந்தியா தன்னுடைய பாதுகாப்புக்கான ஆயுத இறக்குமதியில் பெருமளவில் ஈடுபடுவதைத் தொடரவே செய்கிறது.

இந்தியா வளர்ச்சிப்பாதையில் பயணித்துக் கொண்டிருக்கையில் அதற்குப் பெட்ரோல், நிலக்கரி, இயற்கை எரிவாயு முதலிய எரிபொருள்கள் பெருமளவில் தேவைப்படுகிறது. இந்தியாவின் வளங்கள் பெரும்பாலும் காடுகளிலும், பழங்குடியினர் அதிகமுள்ள பகுதிகளிலும் இருப்பதால் அவற்றை முழுமையாக வெட்டியெடுக்க முடியாத நிலை உள்ளது. உலகம் முழுக்க அதனால் தனக்கான வாய்ப்புகளை இந்தியா கவனத்தில் கொள்கிறது. ஆப்ரிக்கா, ஆர்டிக், தெற்கு சீனக்கடல் என்று இந்த எல்லைகள் விரிகின்றன. விதேசி இந்திய எண்ணெய் கழகம் இப்படிப்பட்ட முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. என்றாலும், சீனாவை முந்திக் கொண்டு செல்வது எனபது பெரும்பாலும் சவாலான ஒன்றாகவே இருக்கின்றது.

எண்ணெய் பெற ஒப்பந்தங்களை இராக், நைஜீரியா, சவூதி, வெனிசுலா உடனும், இயற்கை எரிவாயுவுக்குக் கத்தார், ஆஸ்திரேலியாவுடனும். மொசாம்பிக், டான்சானியா, துர்க்மேனிஸ்தான் ஆகியவற்றுடன் பைப் வழி எரிவாயுவுக்கும் ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. ஆர்டிக் கவுன்சிலில் சீனாவுடன் இந்தியாவும் பார்வையாளர் இடத்தைப் பெற்றுள்ளது. அங்கே எண்ணற்ற வளங்கள் கடலுக்கு அடியில் உள்ளது என்பதே இவற்றின் கவனத்துக்கு முக்கியக் காரணம். இந்தியா வளங்களைப் பெற வேகமாக இயங்கினாலும்,வெவ்வேறு நாடுகளின் சிக்கல்களில் புதைந்து விடாமலும், நிலையான வளர்ச்சியை, சுற்றுச்சூழல் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு இயங்கவேண்டியது அவசியமாகிறது.

ஜோசப் நை ‘யார் அதிகப் பலமிகுந்தவர் என்பது வெற்றியை தீர்மானிப்பதில்லை, யார் நம்பக்கூடிய கதையைச் சொல்லும் திறனைப் பெற்றிருக்கிறாரோ அவரே வெல்கிறார்.’ என்கிறார். இந்தியா பணம், ஆயுதங்கள் மூலம் பிற நாடுகளைத் தன் பேச்சை கேட்க வைப்பது ஒரு புறமென்றால், மென் ஆற்றல் எனப்படும் வகையில் செயல்படுவதும் முக்கியமாகிறது. புத்த மதத்தின் வேர்களை உலகுக்குக் கொண்டு செல்வதன் மூலம் வர்த்தகத்தை அதிகப்படுத்துவது, யோகாவை முன்னிறுத்துவதும் உதவுகிறது. PUBLIC DIPLOMACY DIVISION என்கிற தனிப்பிரிவு துவங்கப்பட்டு அது இந்தியாவின் கலாசாரம், பண்பாடு பற்றி 162 நாடுகளில் 17 மொழிகளில் தகவல்களைக் கொண்டு சேர்க்கிறது. பல்வேறு ஊடகங்களின் மூலமும் தன்னுடைய செயல்பாட்டை விரிவுபடுத்துகிறது. மேலும், டெலிமெடிசின் முதலிய முன்னெடுப்புகளும் உதவுகின்றன. பிரவசிய பாரதிய திவாஸ் நிகழ்வுகளும் அயல்நாட்டு வாழ் இந்தியர்களை இந்தியாவுடன் நெருக்கமாக ஆக்குகிறது. இன்னமும் இந்தியா போகவேண்டிய தூரம் நிச்சயம் நெடிது.

அரசியல் எந்தளவுக்கு இந்திய அயலுறவுக் கொள்கையைப் பாதிக்கிறது என்பது ஆச்சரியமான ஒரு தலைப்பாகும். பெருமளவில் இந்திய அரசியல் அதனைப் பாதிக்கவில்லை என்பதே உண்மை. வங்கதேச உருவாக்கத்துக்கு முன்னர் நிகழ்ந்த போர், கார்கில் போர் முதலியவற்றைத் தவிர்த்து தேசிய அரசியலில் தாக்கம் செலுத்தியவை என்று சுட்ட பெரிதாக எதுவுமில்லை. திமுக, அதிமுகவின் அழுத்தங்கள் ஈழத் தமிழர் சிக்கலை மத்திய அரசு வெவ்வேறு வகைகளில் கையாள செய்திருக்கிறது. அதே சமயம், பாகிஸ்தான், சீனா ஆகியன இந்தியாவின் காலடியில் தடம் பதிக்கக் கங்கணம் கட்டிக் கொண்டிருப்பதால் இலங்கையைப் பெருமளவில் மிரட்டுகிற சூழல் இந்தியாவிற்குச் சாத்தியமில்லை. திரிணமுல் காங்கிரஸ் நில மறுவரையறை ஒப்பந்தத்தை இந்தியா வந்கதேசத்தோடு மேற்கொள்ளாமல் வெகுகாலம் தடுத்தது. தற்போது தீஸ்தா நீர் உடன்படிக்கையை எதிர்க்கிறது. அசாமில் வங்கதேசத்து மக்கள் சட்டத்துக்குப் புறம்பாகக் குடியேறியது ஒரு  தேர்தலில் எதிரொலித்தது. இவை போன்ற ஒன்றிரண்டு எடுத்துக்காட்டுகளைத் தவிர்த்து அயலுறவுக் கொள்கை 900 அதிகாரிகளைக் கொண்ட அயலுறவு பிரிவால் முடிவு செய்யப்படுகின்றது.

இந்திய நாடாளுமன்றம் நேரடியாக இந்தியாவின் வெளியுறவுத் துறை கொள்கையில் கட்டுபாட்டைச் செலுத்த முடியாது என்றாலும் அது அவ்வப்பொழுது தன்னுடைய பலத்தைக் காட்டியே வந்துள்ளது. காஷ்மீர் சிக்கலில்,. சீனச் சிக்கலில் எந்த வகையான சமரசத்துக்கோ இடம் கொடுக்கவே முடியாத அளவுக்கு அவையின் அழுத்தம் இருந்து வந்துள்ளது. அமெரிக்கா, ரஷ்யா இருபுறமும் சாயாமல் இந்தியா நேரு காலத்தில் நிற்க ஜனசங்கம், கம்யூனிஸ்ட்கட்சிகளின் விமர்சனங்கள் தடுத்தன. பாகிஸ்தானுடன் பெருபாரி பகுதியை தருவதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. அதோடு நில்லாமல் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பெறவேண்டும் என்று அறிவுறுத்தியது. அது நிறைவேற ஐம்பது ஆண்டுகாலம் ஆகிற்று.    இன்னமும் பல்வேறு தலைப்புகளில் நூல் விரிகிறது. ஆர்வமுள்ளவர்கள் வாங்கி வாசிக்கவும்!

கன்னையா குமாரின் தேசத்துரோக பேச்சு!


வகர்லால் நேரு பல்கலையின் மாணவர் கூட்டமைப்பின் தலைவர் கன்னையா குமார், கடந்த வியாழனன்று அப்பல்கலையில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். அடுத்த நாள் இந்தியாவுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பப்பட்ட கூட்டத்தில் கலந்து கொண்டதற்காக பிரிவினைக் குற்றத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டார்.

வியாழன்று அவர் நிகழ்த்திய உரையின் மொழியாக்கம் இது…

“காவிகள்தான் இந்தியாவின் தேசியக்கொடியை எரித்தவர்கள். ஆங்கிலேயரிடம் மன்னிப்புக் கேட்ட சாவர்க்கரின் சீடர்கள் அவர்கள். ஹரியானாவில் கட்டார் தலைமையிலான பாஜக அரசு பகத் சிங் பெயரைத் தாங்கியிருந்த விமான நிலையத்திற்கு ஒரு சங்பரிவாரைச் சேர்ந்த நபரின் பெயரை சூட்டியுள்ளது.

எங்களுக்குத் தேசபக்தி சான்றிதழை ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் தர வேண்டியதில்லை என்றே சொல்லுகிறேன். இவர்கள் நம்மைத் தேசியவாதிகள் என்று அங்கீகரிக்கத் தேவையில்லை. நாம் இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள். இந்தத் தேசத்தை மனதார நேசிக்கிறோம். இந்த நாட்டின் எண்பது சதவிகித ஏழைகளுக்காக நாம் போராடுகிறோம். இதுவே எங்களைப் பொறுத்தவரை தேசத்தை வழிபடுவது ஆகும்.

நாங்கள் அண்ணல் அம்பேத்கர் மீது முழுப் பற்று வைத்திருக்கிறோம். எங்களுக்கு அரசமைப்புச் சட்டத்தின் மீது அளவில்லாத நம்பிக்கையுள்ளது. இதை நாங்கள் சொல்வதன் அர்த்தம் அரசமைப்பை யார் எதிர்த்தாலும், அது சங்பரிவார்களாக இருந்தாலும் நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம். எங்களுக்கு இந்தியாவின் அரசமைப்புச்சட்டத்தில் மட்டுமே நம்பிக்கையுள்ளது. டெல்லியில் உள்ள ஆர்.எஸ்.எஸ்.தலைமையகமான ஜந்தேவாலனிலும், நாக்பூரிலும் சொல்லித்தரப்படும் மனுவின் சட்டத்தின் மீது எங்களுக்குத் துளியும் மதிப்பில்லை. இந்த தேசத்தின் சாதியமைப்பின் மீது எங்களுக்கு எந்தப் பற்றுமில்லை.

சாதியமைப்பால் ஏற்பட்ட கடும் அநீதியை சீர்செய்வதற்கான நிவாரண நடவடிக்கைகள் குறித்து அரசமைப்பு சட்டமும், அண்ணல் அம்பேத்கரும் பேசுகிறார்கள். அதே அண்ணல் அம்பேத்கர் தூக்கு தண்டனையை நீக்க குரல் கொடுக்கிறார். அவரே கருத்துரிமை குறித்தும் பேசுகிறார். நம்முடைய அரசமைப்புச் சட்டத்தை, நம்முடைய உரிமையை உயர்த்திப்பிடிக்க நாம் விரும்புகிறோம். நமக்கு எதிராகத் தங்களின் ஊடக நண்பர்களோடு இணைந்துகொண்டு ABVP பொய் பிரச்சாரத்தை நிகழ்த்தி வருகிறது.

நாம் கல்வி உதவித் தொகைக்காகப் போராடுவோம் என்று ABVP சொல்கிறது. ஸ்ம்ருதி இரானி கல்வி உதவித்தொகையை நிறுத்துவார். இவர்கள் போராடுவதாகச் சொல்வார்கள். நல்ல வேடிக்கை. இந்த அரசு உயர்கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை 17 சதவிகிதம் குறைத்துள்ளது.

நமக்கு விடுதிகள் கடந்த நான்கு வருடங்களாகக் கட்டப்படவில்லை. WIFI இணைப்பு தரப்படவில்லை. BHEL நிறுவனம் நம்முடைய பயணத்துக்குப் பரிசளித்த பேருந்துக்குப் பெட்ரோல் போட கூடப் பல்கலை நிர்வாகத்திடம் காசில்லை. சினிமா சூப்பர் ஸ்டார் போல,  ‘நாங்கள் விடுதிகளைக் கட்டிக் கொடுப்போம், WIFI இணைப்புத் தருவோம், உதவித்தொகை கிடைப்பதை உறுதி செய்வோம்’ என்று ABVP-யினர் வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறார்கள்.

இவர்களின் உண்மையான சொரூபம்,  நாட்டின் அடிப்படை பிரச்னைகளைப் பற்றி விவாதிக்க அழைத்தால் அம்பலமாகி விடும். நாம் JNU மாணவர்களாகப் பெண்கள், தலித்துகள், பழங்குடியினர், சிறுபான்மையினர் ஆகியோரின் உரிமைகள் சார்ந்த பிரச்னைகளை எழுப்புகிறோம் என்பதைப் பெருமையோடு பதிவு செய்கிறேன். ஆகவேதான் அவர்களின் சுப்ரமணிய சாமி, இங்கே ஜிஹாதிகள் வாழ்வதாக, நாம் வன்முறையைப் பரப்புவதாகச் சொல்கிறார்.

JNU வின் சார்பாக நான் ஆர்.எஸ்.எஸ்.அமைப்பைச் சேர்ந்தவர்களை நோக்கி சவால் விடுகிறேன். வன்முறையைப் பற்றி நேருக்கு நேர் விவாதம் புரிவோம். வெறிபிடித்த ABVP கோஷங்கள் குறித்துக் கேள்விகள் கேட்போம். ரத்தத்தில் திலகமிட வேண்டும் என்றும், துப்பாக்கிக் குண்டுகளில் ஆரத்தி எடுப்போம் என்றும் ஏன் கோஷம் போடுகிறார்கள் என்று அவர்கள் பதில் சொல்லவேண்டும். யாருடைய ரத்தம் சிந்த அவர்கள் விரும்புகிறார்கள்? ஆங்கிலேயரோடு கைகோர்த்துக் கொண்டு விடுதலைப் போராட்ட வீரர்களைச் சுட்டார்கள், ஏழைகள் பசிக்கு சோறு கேட்ட பொழுது அவர்களைத் துப்பாக்கி குண்டுகளால் மவுனமாக்கினார்கள். பசியுற்ற்வர்கள் உரிமைகளைக் கேட்ட பொழுது ஆயுதங்களால் அவர்களை அமைதிப்படுத்த முயன்றார்கள். முஸ்லீம்கள் மீது அவர்கள் குண்டுகள் பாய்ந்தன. பெண்கள் சம உரிமை கேட்ட பொழுது துப்பாக்கிக் குண்டுகளால் சல்லடையாக்கினார்கள்.

ஐந்து விரல்களும் ஒன்றாக இருக்க முடியாது என்கிறார்கள். சீதையைப் பின்பற்றிப் பெண்கள் அக்னி பரீட்சை மேற்கொள்ள வேண்டும் என்று சொல்கிறார்கள். இந்த நாட்டின் ஜனநாயகம் எல்லாருக்கும் சம உரிமைகள் தருகிறது. மாணவன், தொழிலாளி, ஏழை. பணக்காரன், அம்பானி, அதானி எல்லாரும் சம உரிமை கொண்டவர்களே!. ‘பெண்களுக்குச் சமஉரிமை வேண்டும்’ என நாங்கள் குரல் கொடுத்தால், இந்திய கலாசாரத்தைச் சீரழிப்பதாகக் குற்றஞ்சாட்டுகிறார்கள்

நாம் சுரண்டலின் கலாசாரத்தை, சாதியின் கலாசாரத்தை, மனுநீதி, பிராமணியம் ஆகியவற்றின் கலாசாரத்தை அழித்தொழிக்க விழைகிறோம். எது கலாசாரம் என்பது இன்னமும் உறுதியாக வரையறுக்கப்படவில்லை. மக்கள் ஜனநாயகத்தைப் பற்றிப் பேசினால், அவர்களுக்குக் கோபம் வருகிறது. அண்ணல் அம்பேத்கர், காரல் மார்க்ஸ் என இருவரையும் வணங்கி, அவர்களைப் பற்றிப் பேசுவது அவர்களை உசுப்பேற்றுகிறது. மக்கள் அஸ்பஹூல்லா கான் எனும் தீரமிகுந்த விடுதலைப் போராட்ட வீரரைப் பற்றிப் பேசினால் கொதிக்கிறார்கள். இவற்றைப் பொறுக்கமுடியாமல் சதி செய்கிறார்கள். அவர்கள் ஆங்கிலேயருக்குச் சேவகம் புரிந்த கீழானவர்கள். என் மீது அவதூறு வழக்கு பதியும்படி அவர்களுக்குச் சவால் விடுகிறேன். நாட்டை அடிமைப்படுத்திக் கொடுமை செய்த ஆங்கிலேயருடன் கூட்டுச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ்., வரலாற்றை வசதியாக மறந்துவிட்டு, இப்பொழுது தேசபக்தி சான்றிதழ் விநியோகத்தில் ஈடுபடுகிறார்கள்.

என்னுடைய அலைபேசியை நீங்கள் பாருங்கள். என் தாய், தங்கையைப் பற்றி நாக்கூசும் வசைகளை வீசுகிறார்கள். எந்தப் பாரதத்தாயை பற்றி அவர்கள் பேசுகிறார்கள். அதில் என்னுடைய தாய்க்கு இடமில்லை என்றால் உங்களின் பாரத மாதா பற்றிய கருத்தாக்கம் எனக்கு ஏற்புடையது இல்லை.

அங்கன்வாடியில் மாதம் மூவாயிரம் சம்பளத்துக்கு வேலை பார்த்து என்னுடைய குடும்பத்தைக் காப்பாற்றும் என்னுடைய அம்மாவை இவர்கள் வசைபாடுகிறார்கள். ஏழைகளின் தாய்களை, தலித் விவசாயிகளைப் பாரதத் தாயின் அங்கமாகப் பார்க்காததை நினைத்து அவமானப்படுகிறேன். நான் இந்தத் தேசத்தின் தந்தைமாரை, தாய்மார்களை, சகோதரிகளை, ஏழை விவசாயிகளை, தலித்துகளை, பழங்குடியினரை, தொழிலாளிகளைப் போற்றுவேன். அவர்களுக்குத் தைரியம் இருந்தால் ‘இன்குலாப் ஜிந்தாபாத்’ என்றோ, ‘பகத் சிங் ஜிந்தாபாத்’, ‘சுகதேவ் ஜிந்தாபாத்’, ‘அஸ்பஹூல்லா கான் ஜிந்தாபாத்’ ‘பாபாசாகேப் அம்பேத்கர் ஜிந்தாபாத்’ என்றோ முழங்க முடியுமா? என்று சவால் விடுகிறேன்.

அண்ணல் அம்பேத்கரின் 125-வது பிறந்த நாளை விமர்சையாகக் கொண்டாடும் நாடகத்தை அவர்கள் அரங்கேற்றுகிறார்கள். அவர்களுக்கு வீரம் இருந்தால்,  அம்பேத்கர் எழுப்பிய கேள்விகளை அவர்களும் எழுப்ப வேண்டும். இந்தியாவின் மிகப்பெரிய சிக்கல்களில் ஜாதி முக்கியமானது. ஜாதி அமைப்பைப் பற்றிப் பேசுங்கள், ஒவ்வொரு துறையிலும், தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு வேண்டும் என்று பேசுங்கள். இந்தக் கேள்விகளை நீங்கள் எழுப்பினால் உங்களுக்கு இந்தத் தேசத்தின் மீது பக்தி இருக்கிறது என நான் நம்புகிறேன். இந்தத் தேசம் அப்பொழுதும் எப்பொழுதும் உங்களுடையதாக ஆகாது. ஒரு தேசம் அதன் மக்களால் ஆனது, உங்களின் தேசத்தில் ஏழைகள், பசித்த மக்கள் ஆகியோருக்கு இடமில்லை. அப்படிப்பட்ட ஒன்று தேசமே இல்லை.

நேற்று ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் மிக மோசமான காலத்தில் இருக்கிறோம் என்றேன். பாசிசம் நாட்டைப் பிடித்துக் கொண்டே வருகிறது. ஊடகமும் அதிலிருந்து தப்பிக்கப் போவதில்லை. ஊடகம் எப்படிப் பேசவேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் இருந்து கதைகள் அனுப்படுகின்றன. காங்கிரஸ் எமெர்ஜென்சி காலத்தில் செய்த அதே வேலையை இப்பொழுது இவர்கள் செய்கிறார்கள்.

சில ஊடக நண்பர்கள் நம்முடைய பல்கலைக் கழகம் மக்களின் வரிப்பணத்தில், மானியத்தில் இயங்குவதைச் சுட்டிக் காட்டினார்கள். அது உண்மையே. நான் ஒரே ஒரு கேள்வியை எழுப்ப விரும்புகிறேன்: ‘எதற்காகப் பல்கலைக் கழகங்கள்?’ ஒரு சமூகத்தின் கூட்டு மனசாட்சியைத் தயவு தாட்சண்யமில்லாமல் பகுப்பாய்வு செய்யப் பல்கலைக்கழகங்கள் அவசியமானவை. தங்களின் கடமையிலிருந்து பல்கலைகள் தவறினால் ஒரு தேசம் உயிர்த்திருக்காது. ஒரு தேசம் ஏழைகளுக்காக இயங்கவில்லை என்றால் அது பணக்காரர்களின் சுரண்டல், கொள்ளைக்கான வேட்டைக்காடாக மாறிவிடும்.

மக்களின் கலாச்சாரம், நம்பிக்கைகள், உரிமைகள் ஆகியவற்றை உள்வாங்காமல் ஒரு தேசம் உருவாக முடியாது. நாம் பகத் சிங்கின், அண்ணல் அம்பேத்கரின் கனவுகளுக்கு ஆதரவாக, உறுதியாக நிற்கிறோம். சம உரிமைக்காக, அனைவரும் தன்மானத்தோடு வாழ்வதற்கு ஆதரவாக நாம் நிற்கிறோம். இந்த உரிமைகளின் போராட்டத்துக்காக ரோஹித் வெமுலா உயிர்விட நேர்ந்தது. சங்கபரிவாரத்தினரிடம் நேராகச் சொல்கிறோம், ‘உங்கள் அரசால் அவமானம்!’. ரோஹித் வெமுலாவுக்கு என்னென்ன அநீதிகளைச் செய்தீர்களோ அது எதையும் JNU-வில் நீங்கள் செய்ய முடியாது. ரோஹித்தின் தியாகத்தை நாங்கள் மறக்கமாட்டோம். நாங்கள் கருத்துரிமைக்குத் தோள் கொடுப்போம்.

பாகிஸ்தான், வங்கதேசத்தை விடுத்து மற்ற எல்லா நாட்டு ஏழைகள், பாட்டாளிகள் ஆகியோரின் ஒற்றுமைக்கு அறைகூவல் விடுக்கிறோம். உலகின் மனிதநேயத்தை, இந்திய மனித நேயத்தை நாங்கள் துதிக்கிறோம். நாங்கள் மனிதத்துக்கு எதிரானவர்களை அடையாளம் காட்டியுள்ளோம். இதுவே நம் முன்னால் உள்ள மிகப்பெரிய பிரச்னை. சாதியத்தின் உண்மை முகத்தை, மனுவின் முகத்தை, பிராமணியம், முதலாளித்துவம் ஆகியவற்றுக்கு இடையே உள்ள உறவை வெளிப்படுத்தி உள்ளோம். இந்த அயோக்கியமான முகங்களைத் தோலுரிக்க வேண்டும். நாம் உண்மையான விடுதலையை அடையவேண்டும். அந்த விடுதலை அரசமைப்பு சட்டத்தின் மூலம், நாடாளுமன்றத்தின் மூலமே சாத்தியம். அதை நாம் அடைந்தே தீருவோம்.

நம்முடைய எல்லா முரண்பாடுகளைத் தாண்டி நம்முடைய கருத்துரிமையை, நம்முடைய அரசமைப்புச் சட்டத்தை, இந்தத் தேசத்தின் ஒற்றுமை, ஒருமைப்பாடு ஆகியவற்றைக் காக்க வேண்டும் நண்பர்களே என வேண்டிக் கொள்கிறேன். நம்முடைய தேசத்தைப் பிளவுபடுத்தும் இந்தச் சக்திகளை, தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் தரும் இவற்றுக்கு எதிராக அணிதிரண்டு நாம் உறுதியோடு போராடவேண்டும்.

என்னுடைய உரையை முடிக்கும் முன்னால் ஒரு இறுதி வினா. யார் இந்த கசாப்? யார் இந்த அப்சல் குரு? உடம்பை குண்டுகளால் நிறைத்துக் கொண்டு கொலைத்தொழில் புரியும் இவர்கள் யார்? இந்த கேள்விகளைப் பல்கலைகளில் எழுப்பாவிட்டால் பல்கலைகளின் இருப்பில் அர்த்தமில்லை. நீதியை, வன்முறையை நாம் வரையறுக்காவிட்டால், எப்படி வன்முறையை நாம் எதிர்கொள்வது. வன்முறை என்பது ஒருவரைக் கொல்வது மட்டுமில்லை, தலித்துகளுக்கு வழங்கப்பட்ட சட்ட ரீதியான உரிமைகளை மறுக்கும் JNU நிர்வாகம் நிகழ்த்துவதும் வன்முறையே ஆகும். இது நிறுவனமயமாக்கப்பட்ட வன்முறையாகும்.

நீதியைப்பற்றி அவர்கள் பேசுகிறார்கள். எது நீதி என்பதை யார் தீர்மானிப்பது. பிராமணியம் தலித்துகளைக் கோயில்களுக்குள் விடவில்லை. அதுவே அன்றைய நீதி. அதனை நாம் கேள்வி கேட்டோம். இன்றைக்கு ABVP, ஆர்.எஸ்.எஸ். ஆகியோரின் நீதி, சுதந்திரம் நம்மை உள்ளடக்கிய நீதி இல்லை என்பதால் அதனைக் கேள்வி கேட்கிறோம். ஒவ்வொரு மனிதனுக்கும் சட்ட ரீதியான உரிமைகள் உறுதி செய்யப்படும் பொழுது நாங்கள் உங்களின் விடுதலையை ஏற்கிறோம். எல்லாருக்கும் சம உரிமை வாய்க்கும் நாளில் அவர்களின் நீதியை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.

நண்பர்களே இது ஒரு மோசமான சூழல். JNU மாணவர் கூட்டமைப்பு எப்பொழுதும் வன்முறையை, எந்த ஒரு தீவிரவாதியையும் , எந்தத் தீவிரவாத செயலையும் , எந்த இந்தியாவுக்கு எதிரான செயலையும் ஆதரித்தது இல்லை. பெயர் தெரியாதவர்களால் எழுப்பப்பட்ட ‘பாகிஸ்தான் வாழ்க!’ என்கிற கோஷத்தை நம்முடைய மாணவர் அமைப்புக் கடுமையாகக் கண்டிக்கிறது.

நான் உங்களிடம் ஒன்றை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் நண்பரகளே. அது JNU நிர்வாகம் மற்றும் ABVP பற்றியதாகும். ABVP தற்போது எழுப்பிய கோஷங்களைக் கவனித்தீர்களா? அவர்கள் நம்மைக் ‘கம்யூனிஸ்ட் நாய்கள்’,’ அப்சல் குருவின் நாய்கள்’, ‘ஜிஹாதிகளின் பிள்ளைகள்’ என்று அழைக்கிறார்கள். நமக்கு அரசமைப்புச் சட்டம்,  குடிமகன் என்கிற உரிமையை உறுதியளித்திருக்கும்பொழுது நம்முடைய பெற்றோரை நாய்கள் என அழைப்பது நம்முடைய அரசமைப்பு சட்ட உரிமை மீதான தாக்குதல் இல்லையா? இதை ABVP – JNU நிர்வாகம் ஆகியோரிடம் கேட்க விரும்புகிறேன்.

JNU நிர்வாகம் யாருக்காக, யாருடன் இணைந்து கொண்டு, எதன் அடிப்படையில் இயங்குகிறது என்று அறிய விரும்புகிறோம். முதலில் கூட்டத்துக்கு அனுமதி தந்த பல்கலை நிர்வாகம்,  நாக்பூரில் இருந்து அழைப்பு வந்ததும் அலறி அடித்துக் கொண்டு அனுமதியை ரத்துச் செய்கிறது. முதலில் உதவித்தொகை அறிவித்துவிட்டு, பின்னர் அதனை ரத்துச் செய்வார்கள். இதுதான் ஆர்.எஸ்.எஸ்., ABVP நம் நாட்டை நடத்த விரும்பும் முறையாகும்.

ABVP ஆட்களைப் பற்றி ஒரு உண்மையைப் புரிந்துகொள்ளுங்கள். அவர்களுக்காக நான் கவலைகொள்கிறேன். FTII- ல் கஜேந்திர சவுகானை கொண்டுவந்ததைப் போல எல்லா நிறுவனங்களிலும் தங்களின் ஆட்களைக் கொண்டு நிரப்பலாம் என்று அவர்கள் குதிக்கிறார்கள். சவுகானை போன்றவர்கள் அதிகாரத்தில் இருந்தால் தங்களுக்கு எங்கும் வேலை கிடைக்கும் என்று கனவு காண்கிறார்கள். வேலை கிடைத்ததும் இந்தத் தேசபக்தி, பாரதமாதா ஆகியவற்றை அப்படியே மறந்துவிடுவார்கள். அவர்கள் எப்பொழுதும் மதிக்காத மூவர்ணக் கொடியை பற்றி என்ன சொல்வது? இப்படியே போனால் தங்களுடைய காவிக் கொடியை கூட அவர்கள் மறக்க நேரிடும்.

எப்படிப்பட்ட தேசபக்தியை அவர்கள் விரும்புகிறார்கள் என அறிய விரும்புகிறேன். தன்னுடைய தொழிலாளிகளிடம் ஒழுங்காக நடந்துகொள்ளாத முதலாளி, விவசாயக் கூலிகளை மரியாதையோடு நடத்தாத நிலச்சுவான்தார், அதிகச் சம்பளம் பெரும் ஊடக தலைமை அதிகாரி,  தன்னுடைய நிருபர்களுக்கு மிகக்குறைவான ஊதியத்தைத் தருவார் என்றால் இவையெல்லாம் எப்படித் தேசபக்தி ஆகும்?

அவர்களின் தேசபக்தி இந்திய-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியோடு முடிவுற்று விடுகிறது. அதற்குப் பிறகு சாலையில் இறங்கி வம்பு செய்வார்கள். ஒரு டஜன் பழத்தை நாற்பது ரூபாய்க்கு விற்கும் ஏழையைக் கொள்ளையடிப்பதாகச் சொல்லி,  முப்பது ரூபாய்க்கு ஒரு டஜன் பழத்தைக் கேட்பார்கள். ‘நீங்கள்தான் உண்மையான கொள்ளையர்கள்’ என அந்த வியாபாரி சொன்னால், உடனே அந்த ஏழையைத் தேசத் துரோகி என்று அறிவித்து விடுவார்கள். வசதிகள், பணம் ஆகியவற்றோடு தேசபக்தி துவங்கி முடிந்துவிடுகிறது. உண்மையிலேயே தேசபக்திதான் இவர்களைச் செலுத்துகிறதா என்று கேட்டேன். ‘என்ன செய்வது தோழா..? ஏற்கனவே இரண்டு ஆண்டு ஆட்சி முடிந்துவிட்டது. இருக்கிற மூன்று வருடத்தில் என்னென்ன செய்ய முடியுமோ அவற்றைச் செய்துமுடிக்க வேண்டும்’ என்று சொல்கிறார்கள்.

நான் அவர்களைக் கேட்கிறேன். நாளைக்குத் தொடர்வண்டியில் நீங்கள் பயணிக்கிற பொழுது, ABVP ஐ சேர்ந்த நபர்கள் மாட்டுக் கறியை யாரேனும் வைத்திருக்கிறார்களா என்று சோதனை செய்கிறார்கள் என வைத்துக் கொள்வோம். அப்பொழுது நீங்கள் JNU-வை சேர்ந்தவர் எனத் தெரிந்ததும் உங்களைத் தேசத்துரோகி என்று சொல்லி வெட்டிப் போட்டால் என்னாகும்? இந்த ஆபத்தை நீங்கள் உணர்கிறீர்களா எனக் கவலையோடு கேட்கிறேன்

அந்த ஆபத்தை உணர்ந்திருப்பதால்தான் #JNUShutdown கோஷத்தை எதிர்ப்பதாகச் சொல்கிறார்கள். தாங்கள் உருவாக்கிய பதற்றமான சூழலின் இறுதியில், தாங்கள் JNU-வில்தான் கல்வி கற்கவேண்டும் என்று உணர்கிறார்கள்.

அதனால் JNU-வின் சக தோழர்களே மார்ச்சில் தேர்தல் வருகிறது. அப்பொழுது ஓம் சின்னம் பொறிக்கப்பட்ட கொடிகளை ஏந்திக் கொண்டு ABVP ஆட்கள் ஓட்டுக் கேட்க வருவார்கள். அவர்களிடம் கேளுங்கள்: ‘நாங்கள் ஜிஹாதிகள், தீவிரவாதிகள், தேசத்துரோகிகள், எங்கள் ஓட்டுக்களைப் பெற்றால் நீங்களும் தேசத் துரோகிகள் ஆகிவிட மாட்டீர்களா?’ எனக் கேள்வி கேளுங்கள். அப்பொழுது அவர்கள்,  ‘உங்களில் சிலர் மட்டுமே அப்படிப்பட்டவர்கள்’ என்பார்கள். பின் ஏன் இதை மீடியாவிடம் அவர்கள் சொல்லக்கூடாது என்றும், அவர்களின் துணை வேந்தர், பதிவாளரும் ஏன் அதை ஊடகங்களிடம் சொல்லவில்லை என்றும் எதிர்கேள்வி கேளுங்கள்.

அவர்களிடம் அந்தச் சில நபர்களும், தாங்கள் ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என்று கோஷம் போடவில்லை எனச் சொல்வதாகவும், அவர்கள் தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை என்றும் தெளிவுப்படுத்துங்கள். அவர்கள்,  ‘ஏன் முதலில் கூட்டத்துக்கு அனுமதி தரப்பட்டு, பின்னர் அது மறுக்கப்பட்டு ஜனநயாக உரிமை மீது தாக்குதல் நடத்தப்பட்டது?’ என்றே கேட்கிறார்கள் எனத் தெரிவியுங்கள். ஒரு ஜனநாயக போராட்டம் நடைபெறுகிறது என்றால், அதில் உறுதியாக அந்தச் சிலபேர் நிற்பதாக அவர்களுக்குச் சொல்லுங்கள்.

அவர்களுக்கு இவை எதுவும், எப்பொழுதும் புரியப்போவதில்லை. ஆனால், குறுகிய கால அழைப்பில் இங்கே பெருமளவில் கூடிய நீங்கள் பிரச்னையைப் புரிந்து கொண்டுள்ளீர்கள் என நம்புகிறேன். நீங்கள் வளாகம் முழுக்கச் சென்று ABVP,  தேசத்தையும் JNU-வையும் பிளவுபடுத்துகிறது என மாணவர்களிடம் சொல்லுங்கள். அதை நடக்க விடமாட்டோம்.

ஜெய் பீம்! செவ்வணக்கம்! ”

தமிழில்: பூ.கொ.சரவணன்

ஷூ பாலீஷ் போடச்சொன்ன பிரபஞ்சன், ஜெயலலிதாவை போற்றிய கருணாநிதி!


கேள்விகள் என்கிற ஞாநி அவர்கள் மேற்கொண்ட நேர்காணல்களின் தொகுப்பு நூலை வாசித்து முடித்தேன். கமலில் துவங்கி அக்கினிபுத்திரன் வரை பதினாறு ஆளுமைகளின் பேட்டிகள் இதில் உண்டு. அசோகமித்திரன், சோ ஆகியோரிடம் இரு வேறு காலங்களில் எடுக்கப்பட்ட நான்கு நேர்காணல்களும் இந்நூலில் இருக்கின்றன. எண்பத்தி இரண்டில் துவங்கி இருபது வருட காலங்களில் எடுக்கப்பட்ட நேர்காணல்கள் என்பதால் பல்வேறு காலங்களைப் பதிவு செய்யும் ஆவணமாக நூல் தோன்றுகிறது.
 
பிறர் கவனிக்க வேண்டும் என்பதற்காக நாட்டியம் கற்க ஆரம்பித்த கமல், அதை பலரும் கவனிக்க மாட்டார்கள் என்று உணர்ந்ததும் இயக்குனராக முயற்சித்து பின்னர் நடிகராக தன்னுடைய பயணத்தைத் தொடர்கிறார். சினிமாவில் தொட்டு நடிக்க மாட்டேன், முத்தம் கொடுக்க மாட்டேன் என்பது தொழில் தர்மத்துக்கு எதிரானது என்று சொல்கிற கமல், தன்னுடைய உடம்பைக் காட்டி நடிப்பதை நியாயமே என்கிறார். ஒரு வகையான கவர்ச்சி ஆண், பெண் உடலின் மீது இருக்கிறது. இவற்றின் மீது நிறைய பிரமை இருக்கிறது. இவை உடைய எல்லாவற்றையும் காட்டுங்கள். ஒரு பெண்ணின் உடம்பை, முலைகளை காட்டுங்கள். அவள் நடந்து போவதை, ஏணியில் ஏறுவதை, ஆணைப் போல ஆபிஸ் போவதைக் காட்டுங்கள். அடுத்து அவளுக்கு மூளை இருப்பதை காட்டவேண்டும் என்கிறார் கமல்.
 
ஆத்திகர்கள் கடைசியாகக் கேட்பது, ‘சரி, நமக்கு மேலே ஒரு சக்தி இருக்கிறதா இல்லையா?’ என்பதுதான். நாத்திக நண்பன் சொன்னான், ‘ இருந்து விட்டுப் போகட்டும். நான் அதை பூஜை செய்து கொண்டிருக்க முடியாது. மின்சாரமும் கண்ணுக்குத் தெரியாத பெரிய சக்திதான். ஆனால், நாம் விளக்கு கம்பத்தை எல்லாம் கும்பிடுவதில்லை.’ என்று நண்பன் சொன்னதை சொல்கிறார்.
ரஜ்னி கோத்தாரி எனும் புகழ்பெற்ற அரசியல் அறிவியல் அறிஞரிடம் மேற்கொள்ளப்பட்ட நேர்காணல்
சுவையானது. காங்கிரசில் விடுதலைக்குப் பின்னர் அதிகாரத்தை கிராமப்புற பணக்காரர்களும், நடுத்தர விவசாயிகளும் பகிர்ந்து கொண்டார்கள். அது ஏழைகளுக்கான அரசில்லை என்பது உணரப்பட்ட பொழுது வெறுப்பு ஓட்டுக்களை மாற்று அணிகளுக்கு வழங்கத் துவங்கியது. ஆனால், இந்திரா ஏழைகளின் காவலராக தன்னைக் காட்டிக்கொண்டு அரசியலில் பொருளாதார பார்வையை முன்னிறுத்தினார். அவர் அதை பெரும்பாலும் ஓட்டு வாங்கும் கோஷமாக மட்டுமே மாற்றியதோடு, கட்சிக்குள் தனக்கு எதிராக இருக்கும் தலைவர்கள், குழுக்களை ஒழித்துக்கட்டினார். அதிகாரம் முழுவதும் அதிகாரிகள் வசம் போய்ச்சேர்ந்தது.
 
இந்திரா அதிகாரம் செலுத்தியவர் என்பது உண்மையில் இல்லை, அவருக்கு அதிகாரம் என்பதே இல்லாமல் போனதால் தான் தொடர்ந்து அதிகாரத்தை நிறுவ அவர் முயன்றார். குண்டுராவ்கள், அந்துலேக்கள் ஆகியோரின் ஆட்சியாகவே அவரின் ஊழல் ஆட்சி பரிணமித்தது. குண்டர்களை ஒருங்கிணைப்பதையே சஞ்சய் காந்தி செய்தார். மைய அரசியலில் ஈடுபடும் இடதுசாரிகளை இந்திரா அயலுறவு கொள்கையில் ரஷ்யாவுடன் இணைத்துக் கொண்டும், தேசிய இனங்களின் போராட்டத்தை எதிர்க்க அவர்களைத் தூண்டுவதன் மூலமும் சாதிக்கிறார் என்பதை கோத்தாரி சுட்டிக்காட்டுகிறார்.
 
மேலும், நக்சலைட் முதலிய மக்கள் பிரச்சனைகளுக்காக போராடுபவர்களுக்கு ஆதரவு குரல் கொடுப்பதை இடதுசாரிகள் செய்யவில்லை. அமைச்சராக இல்லாத எம்பிக்கள், எம்.எல்ஏக்கள் ஒன்றுக்கும் லாயக்கில்லாதவர்களாக உள்ளார்கள். சுயாட்சியை பரவலாக்க வேண்டியது தற்போதைய தேவை என்கிறார். வன்முறை என்பது வழிமுறையாக இருக்க முடியாது, அது குறிப்பிட்ட கணத்தில் பதில் வன்முறையாக எழக்கூடும் என்று தன்னுடைய கருத்தை வெளிப்படுத்துகிறார்.
 
சரத் ஜோஷி, சரண் சிங் ஆகியோர் சொன்ன விவசாய சிக்கல்கள் உண்மையில் அவர்களின் குரலை பிரதிபலிக்கவில்லை. விவசாயிகளின் ஆதரவை முழுமையாக பெறுவது அரசியல் அதிகாரத்தை பெற உதவும் என்றும் பரிந்துரைக்கிறார் கோத்தாரி. இந்து மதத்தின் காவலன் என்று சொல்லிக்கொள்ளும் ஆர்.எஸ்.எஸ். செயல்பாடு மேற்கின் சர்ச் போலவே இருக்கிறது என்று கச்சிதமாக குறிப்பிடுகிறார் கோத்தாரி. தமிழகத்தில் இந்துத்வா பல்லைக் காண்பிக்க காரணம் நடுத்தர ஜாதிகளுக்கே திராவிட இயக்கம் பயனளித்தது. அதோடு பிராமணிய எதிர்ப்பு என்பதை அதீதமாக செய்து அதை பிராமண எதிர்ப்பாக மாற்றிவிட்டார்கள்.
 
கோமல் சுவாமிநாதன் சபாக்களால் நாடகங்கள் சீரழிகின்றன என்கிற தன்னுடைய ஆனந்த விகடன் அட்டைப்பட பேட்டியால் சபாக்கள் தன்னுடைய நாடகங்களை மேடையேற்ற அனுமதி மறுத்ததை சொல்கிறார். அதேசமயம், தமிழ் அடையாளத்தில் குறைகள் இருந்தாலும் அப்படியொன்று இருப்பதை மக்களுக்கு தேவர் மகன் போன்ற முயற்சிகளின் மூலம் காட்டவேண்டும், அதை விமர்சிப்பதை செய்வது இன்னமும் சாத்தியமாகும் என்கிறார்.
 
வெறும் யாரும் வேலை தரவில்லை, தானும் வேலையை கேட்டுப் பெறும் சாமர்த்தியம் கொண்டிருக்கவில்லை என்று சொல்லும் அசோகமித்திரன், சாவி கணையாழியில் எழுதுவதை விடுத்தது தினமணிக் கதிரில் மட்டும் எழுதினால் வேலை தருவதாக சொன்னதை ஏற்க மறுத்ததை நினைவுகூர்கிறார். எழுத்தாளனின் அகங்காரம் தவிர்த்த எழுத்தே இருக்கவேண்டும், கதாபாத்திரமாக நான் வருவதற்கும், அகங்காரம் கொண்ட எழுத்தாக இருப்பதற்கும் வேறுபாடு உண்டு. க.நா.சு., தாஸ்தாவெஸ்கி முதலியோர் நான் என்பதை எழுத்தில் தவிர்த்தவர்கள். டால்ஸ்டாய், சுந்தரராமசாமி எழுத்தில் அதை தவிர்க்க முடியாதவர்கள் என்கிறார்.
கரைந்த நிழல்கள் கதையை ஐந்தாறு நாட்களில் வேறு மாதிரி நா.பாவின் அவசரத்துக்கு மாற்றி எழுதியதை நேர்மையாக ஒப்புக்கொள்கிறார்.
 
அலங்காரமான நடையை விடுத்து, இயல்பாக சார்பில்லாமல் எழுதுவதே தன்னுடைய பாணி என்கிறார் அசோகமித்திரன். புதுமைப்பித்தன், ஜெயகாந்தன் ஆகியோரின் எழுத்துக்களின் மீது கூர்மையான விமர்சனத்தை முன்வைக்கிறார். புதுமைப்பித்தனின் கிண்டல் மனிதநேயம் சார்ந்தது அல்ல. ஜெயகாந்தனிடம் பொறுமையின்மை, எல்லாவற்றையும், எல்லாவற்றைப்பற்றியும் சொல்லிவிட வேண்டும் என்கிற வேகம் இருக்கிறது. கருத்து முக்கியமாகி பாத்திர வார்ப்பு, நிகழ்ச்சி சித்தரிப்பு பின்தங்கி விடுகின்றன. அவரின் பிற்கால எழுத்துக்கள் மேலும் சிறப்புடையவையாக தனக்கு பட்டதாக அசோகமித்திரன் சொல்கிறார்.
 
சா.கந்தசாமியின் ‘தொலைந்து போனவர்கள்; உலக இலக்கியத்துக்கான நிகரான படைப்பு என்கிற அசோகமித்திரன் பிற தற்கால படைப்புகளை அப்படி ஏற்க மறுக்கிறார். காந்தி ஒரு பிற்போக்குவாதி, ஜாதியவாதி என்று சொல்பவர்கள் இருக்க அவர் எல்லோரையும் முன்னேற்ற வேண்டும் என்று எண்ணினார், அவரே தனக்குப் பிடித்த அரசியல்வாதி என்கிறார் அசோகமித்திரன். இங்கே இருக்கும் சாதிகள் எதோ ஒரு வகையில் இன்னொரு சாதிக்கு ஆதரவு தரும் என்கிறார் அசோகமித்திரன். ஒரு பிச்சைக்காரனை ஐம்பது பேர் போடா என்றாலும் ஒருவர் சோறு போடும் சிறப்பு மிகுந்தது நம்முடைய சமுதாயம் என்கிறார் அவர். இதை அவரின் நகைச்சுவை என்பதா இல்லை மனதரிசனம் என்பதா என்று தெரியவில்லை.
 
சிட்டி சுந்தரராஜன் திராவிட இயக்கம் தமிழ் வளர்ப்பில் மிக முக்கியமான பங்காற்றியதாக பதிவு செய்கிறார். அண்ணா, கலைஞர் ஆகியோர் நல்ல எழுத்துக்களை தந்தார்கள். மேலும், பராசக்தி படத்துக்குப் பிறகே தமிழில் உரையாடல் போக்கு மாறியது என்பதை செமினார் இதழில் பதிகிறார். ரா.பி.சேதுப்பிள்ளை, வையாப்புரிபிள்ளை முதலிய பிராமணர் அல்லாத சிறந்த தமிழறிஞர்களை மணிக்கொடி குழு கண்டுகொள்ளவில்லை என சிட்டி வாக்குமூலம் தருகிறார்.
 
புதுமைப்பித்தன் தழுவல் கதைகளை தன்னுடைய பெயரில் வெளியிட்டுக் கொண்டதில்லை. அப்படி வெளியிட்டது பதிப்பாளர்கள் தான் என்று நேர்மையாக சொல்கிறார். ஆனந்த விகடனில் இயங்கிய கல்கிக்கும், மணிக்கொடி குழுவினருக்கும் ஒத்துவராது என்பதை சொல்கிறார். அதனால் காந்திய வழியில் இயங்கிய மணிக்கொடி குழுவினர் தியாக பூமி படத்தை இருட்டடிப்பு செய்தார்கள். கல்கிக்கோ ஐம்பத்தி இரண்டாயிரம் பிரதிகள் ஆனந்த விகடன் விற்றாலும் ராஜாஜி முதலியவர்கள் மணிக்கொடியை படிப்பதும், தன்னுடைய பணிகள் கணக்கில் கொள்ளப்படாததும் வருத்தம் தந்தது.
 
கோவை ஞானி, அ.மார்க்ஸ் முதலியோர் தற்காலத்தில் தன்னை ஈர்த்த விமர்சகர்கள் என்று மனமார ஒப்புக்கொள்கிறார். தீவிரமாக வைதீகத்துக்கு எதிரான கருத்துக்கள் கொண்டவர் போல தோன்றும் அவர் ஆலய நுழைவை எதிர்த்த காஞ்சி சங்கராச்சாரியாரை பற்றி பரமாத்மா என்கிற நூலை ஆங்கிலத்தில் எழுதியதை குறித்து கேட்கப்படுகிறது. காந்தியிடம் முப்பதில் தான் ஒரு நிறுவனத்தின் தலைவராக எதுவும் இது சார்ந்து செய்வதற்கில்லை என்று கைவிரித்தது உண்மை என்றாலும், அவரை ஒரு புனிதராக அணுகாமல் மனிதராக இந்த நூலில் அணுகியிருப்பதாக சொல்கிறார்.
 
 
சோவின் நேர்முகம் எதற்கு இரண்டு என்று தோன்றுகிற அளவுக்கு தரமற்று இருந்தன. பெண்களுக்கு விடுதலை கிடைத்து விட்டது, அவர்களை யார் அடக்கி வைக்கிறார், ஆண்கள் சமையல் செய்வது தான் சமநீதியா, என்னை ஆணாதிக்கவாதி என்றே சொல்லிக்கொள்ளுங்கள். பெண்கள் விடுதலை பெறவேண்டும், ஆண்கள் அதை தடுக்கிறார்கள் என்பது சுத்த நான்சென்ஸ் என்று கடைந்து எடுத்த முட்டாள் போல பேசுகிறார். பாபர் மசூதி இடிப்பதைத் தூண்டிவிட்ட அத்வானியை, இந்து-முஸ்லீம் வெறுப்பை தீவிரமாக விதைத்த அவரை அவர் ரொம்ப நல்லவர், நான் சொல்லுறேன் கேட்டுக்கோங்க என்கிற பாணியில் உண்மைக்கு புறம்பாக, அயோக்கியமாக பேசுகிறார்.
சிவாஜியின் ஓவர் ஆக்டிங் கதையும், இவருக்கு தனியாக நடித்து காண்பித்ததும் இந்த நேர்முகத்தில் இருந்தே புகழ்பெற்று இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். பந்தயம் கட்டி பத்திரிக்கை ஆரம்பித்தது, அதற்கு ஆனந்த விகடன் முழு ஆதரவு தந்தது என்று பல்வேறு கதைகளை சொல்கிறார். நாடகம் நடத்தி எந்த வருமானமும் பார்த்ததில்லை என்கிறார் சோ.
 
கலைஞர் கருணாநிதி குணா மொழிசார்ந்து முதலமைச்சராக இருந்தவர்களை நிராகரிப்பதை ஏற்க முடியாது என்று மொழி வெறிக்கு எதிராக பேசுகிறார். ஜெயலலிதாவிடம் பிடித்த விஷயம் என்று கேட்கிற பொழுது எப்பொழுதும் இருக்கும் நடிப்புத் திறன் என்கிறார். தமிழ்வழியில் கல்லூரிப் படிப்பை முழுக்க நடத்த முயன்ற பொழுது மாணவர்கள் கடும் எதிர்ப்பை கிளர்ச்சியின் மூலம் ஏற்படுத்தினார்கள். காமராஜரும் அதற்கு ஆதரவு தந்தார் என்பது அதிர்ச்சிகரமான செய்தி. ஏ.எல்.முதலியார் தலைமையில் ம.பொ.சி., குன்னக்குடி அடிகளார் ஆகியோர் கொண்ட குழு மாணவர்களின் முடிவுக்கே இதனைவிட வேண்டும் என்றதில் தமிழ் வழிக்கல்விக்கு முற்றும் போடப்பட்டது.
 
பழ நெடுமாறன் அவர்கள் இந்திய தேசியத்தில் இருந்து தமிழ் தேசியம் நோக்கிப் பயணித்த கதையை சுவைபட சொல்கிறார். இந்தித் திணிப்பு காலத்துக்கு பின்னர் அவர் அரசியலில் நுழையக்கூடும் என்று பச்சையப்பாவுக்கு பதிலாக அண்ணாமலை பல்கலைக்கு அனுப்பினால் அங்கும் அரசியலே செய்ய நேர்ந்தது. காமராஜர் மாணவர்களை வழக்கில் இருந்து விடுவிக்கிறார். அவரின் ஆசியோடு கட்சியில் இணைந்தார். எம்ஜிஆர் இந்திராவுடன் சேர்ந்துகொள்ளுமாறு பழ நெடுமாறனிடம் சொன்ன பொழுது, ‘நீங்கள் ஏன் திமுகவுடன் சேரக்கூடாது?’ என்று எதிர்க்கேள்வி கேட்டிருக்கிறார்.
 
தன்னுடைய தமிழர் தேசிய இயக்கத்தின் மூலம் காவிரிக்கு நதிநீர் மன்றத்தின் மூலம் தீர்வு, பெரியார் பிரச்சனை குறித்து கவனம் ஆகியவற்றை எண்பதுகளில் ஏற்படுத்தியுள்ளார். தனி ஈழத்தை விரும்பாவிட்டாலும் ஜி.பார்த்தசாரதி அனெக்ஸ்-சி எனும் பிரிவின் மூலம் கூட்டாட்சியை கிட்டத்தட்ட கொண்டுவரும் சூழலில் பதவியை விட்டு ராஜீவால் மாற்றப்பட்டார். அதனோடு நில்லாமல் வெங்கடேஸ்வரன் பத்திரிக்கையாளர் கூட்டத்தில் வெளியுறவு செயலாளர் பதவியை விடுமாறு ராஜீவ் செய்தார்.
இதனை எல்லாம் நேர்மையாக சொல்லும் பழ நெடுமாறன், ராஜீவ் காந்தி கொலையில் புலிகளுக்கு கையில்லை என்று அடித்து பேசுகிறார். அதனோடு நில்லாமல் புலிகள் ஆட்சிப்பகுதியில் மரண தண்டனை இருப்பதை சொல்லிவிட்டு, தமிழகத்தில் தூக்கு தண்டனை இருக்கக்கூடாது என்று முரண்பாடாக பேசுகிறார். வங்கத்தில் தனிதேசம் கேட்டு ஃபசூல் என்பவரும், விடுதலைக்குப் பின்னர் சுஹ்ரவர்த்தியும் மொழி சார்ந்து தனி நாட்டை கேட்டிருக்கும் வரலாற்றை பதிவு செய்கிறார். அறுபத்தி ஆறு வயதில் இதய நோய் அறுவை சிகிச்சைக்குப் பின்னர் ராஜ்குமாரை மீட்க பல மைல்கள் நடந்தே பேச்சு வார்த்தை நடத்தியதையும் இயல்பாக சொல்கிறார். ஜனநாயகத்தின் மீதும், வன்முறையை துறந்த பாதையையுமே விரும்புவதாக சொல்கிறார்.
 
பிரபஞ்சன் அவர்கள் பதின்ம வயதில் காதல் பூண்டு ஒரு பெண்ணுக்கு கடிதம் எழுதுகிறார். அவளின் மீதான தன்னுடைய உணர்வுகளை பாதி சொல்வதற்குள் நாற்பது பக்கங்களை கடிதம் தொட்டிருக்கிறது. அப்பாவின் கையில் அது மாட்டிய பொழுது நல்லவனவற்றை பற்றி எழுது என அவர் தந்த உற்சாகம் இவரை செலுத்துகிறது., மாயகோவ்ஸ்கி போல கவிதை எழுதுவதாக தன்னை தூண்டிவிட்டவரை பற்றி நகைச்சுவையோடு பகிர்ந்து கொள்கிறார்.
 
மண்டல் கமிஷன் அமல்படுத்தப்பட்ட பொழுது, ஷூ பாலீஷ் போட்டு ஆதிக்க ஜாதியினர் அந்த இட ஒதுக்கீடு வந்தால் தாங்கள் அதைத்தான் செய்ய வேண்டும் என்று போராடிய பொழுது, ‘இதுவரை ஒரே ஜாதி ஷூவுக்கு பாலீஷ் போட்டது. இப்பொழுது நீங்கள் போட்டால் என்ன? இரண்டாயிரம் வருடங்களாக அவர்கள் செய்ததை இப்பொழுது நீங்கள் செய்தால் என்ன ஷூ பாலீஷ் ஆகாதா?’ என்று சூடாக எழுதியிருக்கிறார். பங்கரப்பா காவிரி விஷயத்தில் தமிழகத்துக்கு துரோகம் செய்த பொழுது நூறு வண்டிகளில் எல்லையை அடைந்து போராடுவோம் என்ற பொழுது ராமதாசுக்கு தான் ஆதரவு தந்ததையும், பின்னர் அவரின் ஜாதி அரசியலால் அதனை விளக்கிக்கொண்டதையும் நேர்மையோடு பதிவு செய்கிறார்.
தமிழே தெரியாமல் பாலக்காட்டு பிராமணர், சிந்தி பெண் ஆகியோருக்கு மகனாக பிறந்த தன்னுடைய கதையை அஜித் இயல்பாக சொல்கிறார். கார் ரேஸ், கார்மென்ட் தொழில் என அனைத்திலும் தோல்வி அடைந்து கடன்கள் அடைக்க சினிமாவில் கிடைத்த வேடங்களில் நடித்துக் கொண்டிருந்ததை ஒப்புக்கொள்கிறார். அப்பா நீ ஒரு எஸ்கேப்பிஸ்ட் என உசுப்பேற்றியதால் படங்களைப் பார்த்து நடிக்க தன்னால் முடிந்தது என்கிற அஜீத் தமிழ் உச்சரிப்பை பள்ளிக்காலங்களில் கற்காமல் சினிமாவுக்காக கற்று மாறியதால் ஆரம்பத்தில் சிரமப்பட்டதையும் சொல்கிறார். ரசிகர் மன்றங்கள் இருந்தாலும் ரசிகர்கள் தங்களின் குடும்பத்தை கவனிக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்.
அன்னம் வெளியீடு
பக்கங்கள்: 216

இந்தியாவை எதிர்பார்த்தல்! பாகம் -1


சேகர் குப்தா இந்தியாவின் குறிப்பிடத்தகுந்த பத்திரிக்கையாளர்களில் ஒருவர். இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் ஆசிரியராக பதினெட்டு வருடங்கள் கோலோச்சியவர். தீர்க்கமான இதழியலுக்கு பெயர் போன அவர் ‘NATIONAL INTEREST’ என்கிற பெயரில் ஒவ்வொரு சனிக்கிழமையும் பத்தி ஒன்றை தொடர்ந்து எழுதி வருகிறார். அதிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் மட்டும் ‘ANTICIPATING INDIA’ என்கிற பெயரில் தொகுக்கப்பட்டு இருக்கிறது. அந்தக் கட்டுரைகளின் சாரமாக இந்த நூல் அறிமுகம் அமையும். இரண்டு பகுதிகளாக அமையும் இந்த நூல் அறிமுகத்தின் முதல் பாகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்காலம், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் எழுச்சி, முதல் ஆட்சிக்காலம் ஆகியவைக் குறித்து மட்டும் காண்போம்.
சேகர் குப்தாவின் முன்னுரையே ஒரு சுவாரசியமான நாவலை நினைவுபடுத்துகிறது. தான் மெத்த தெரிந்த மேதாவி என்கிற தொனியில் எழுதுபவர்களுக்கு நடுவே அரசியல்வாதிகளிடம் தான் கற்றுக்கொண்ட பாடங்களைக் கொண்டே தன்னுடைய முன்னுரையை அவர் துவங்குகிறார்.

இந்தியாவின் அரசியலின் போக்கை எப்படி ஒருவர் புரிந்துகொள்வது அல்லது விளக்குவது? ராஜீவின் ஊழல்மயமான காங்கிரசை ஆட்சியை விட்டு விலக்கி வைக்க இடதுசாரிகள், பாஜக இருவரும் வி.பி,சிங்குக்கு ஆதரவு தந்தார்கள். ஆனால், அதே இடதுசாரிகள் காங்கிரசுடன் கூட்டணி சேர்ந்து பாஜகவை ஆட்சியை விட்டு தள்ளி வைத்தார்கள். தேவகவுடா, குஜ்ரால் பிரதமர்கள் ஆவது இதனால் சாத்தியமானது. காங்கிரஸ் ஆட்சிக்கு வர இடதுசாரிகள் அடுத்து உதவினார்கள். அதே இடதுசாரிகள் அமெரிக்க அணு ஆயுத ஒப்பந்தம் நிறைவேறாமல் இருக்க பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தார்கள். தலைசுற்றும் இந்தியாவின் அரசியல் ஆடுகளத்தில் பார்வையாளனாக இருந்து ரசிப்பதே சிறந்தது. எதுவும், எப்பொழுதும் மாறும் என்கிற புரிதல் தேவை. பல்வேறு காரணிகள் தொடர்ந்து செயல்படுவதால் எது வேண்டுமானாலும் நடக்கும் என்கிற அதிர்ச்சி கொள்ளாத மனம் மட்டுமே தேவை.

குமாரசாமி பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து முதல்வர் ஆனதை சந்தர்ப்பவாதம் இல்லையா? என ஆசிரியர் கேட்க, ‘என் தந்தை மத்தியில் பிரதமர் ஆகி மாநிலத்தில் ஆட்சியை, கட்சியை இழந்தார். மாநிலத்தில் பலமாக இருந்துகொண்டு தான் மத்தியை பற்றி கவலைகொள்ள வேண்டும்.’ என்று அவர் சொன்னபொழுது ஒரு புதிய பாடம் புலப்பட்டது.

யார் ஜாதி பார்க்கிறார் என்று சொல்கிறவர்களுக்கும். இந்து மதத்தில் மட்டுமே ஜாதி உண்டு என்பவர்களுக்கும் இந்தியாவின் ஜனாதிபதியான கியானி ஜெயில் சிங்கின் கதை ஒன்று போதும். சேகர் குப்தாவிடம் பஞ்சாபின் முதல்வர்களாக ஜாட் ஜாதியை சேர்ந்த சீக்கியர்கள் மட்டுமே ஆகமுடியும், ராம்கார்ஹியா எனும் தச்சர் பிரிவை சேர்ந்த ஜெயில் சிங் இந்திராவால் பஞ்சாப் முதல்வர் ஆனார். ‘எனக்கு பின் நான் யாரும் ஜாட் பிரிவைத் தாண்டி பஞ்சாபின் முதல்வராக முடியும் என்று எண்ணவில்லை.’ என அவர் சொல்லி நாற்பது வருடங்கள் ஆகப்போகிறது. ஏழு பஞ்சாப் முதல்வர்கள் ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள். எல்லாரும் ஜாட் சமூகத்தினர் மட்டுமே.

வாஜ்பேயி உடன் தான் மேற்கொண்ட முதல் சந்திப்பை விவரிக்கிற பொழுது அவர் எத்தகைய ஜனநாயக பண்பு கொண்டவர் என்பது புலப்படுகிறது. வடகிழக்கு பற்றி அங்கே பத்திரிக்கையாளராக களத்தில் பணியாற்றிய ஆசிரியரை பேசவிட்டு வாஜ்பேயி கேட்டதை, ‘எல்லாம் எனக்குத் தெரியும்!’ என்று சர்வாதிகார போக்கில் பேசிய ஆர்.ஆர்.எஸ். தலைவர் சுதர்சனுடன் ஒப்பிடுகிறார்.

நரசிம்ம ராவ் என்றாலே பாபர் மசூதி இடிப்புக்கு காரணமானவர் என்கிற பிம்பம் நம்முடைய மனதில் பதிந்துவிட்ட சூழலில் அவரின் வெவ்வேறு முக்கியமான பக்கங்களை சேகர் குப்தா முன்வைக்கிறார். நரசிம்ம ராவ் காலத்தில் இந்தியா அணுகுண்டு வெடிப்பை மேற்கொள்ள முயன்று அமெரிக்காவிடம் மாட்டிக்கொண்டதாக பரவலாக சொல்லப்படுகையில் சேகர் குப்தா அது அமெரிக்காவிடம் வேண்டுமென்றே மாட்டிக்கொண்டு, ‘இனிமேல் இவர்கள் செய்ய மாட்டார்கள்!’ என்கிற போலி நம்பிக்கையை விதைக்க முயன்ற ராவின் ராஜதந்திரம் என்று அடித்துச் சொல்கிறார்.

நரசிம்ம ராவ் அறுபதாண்டு பொதுவாழ்க்கையில் இருந்த நிலையில் இந்தியாவின் பிரதமரான பொழுது பாபர் மசூதி இடிப்பை அவரே வழிவிட்டு செய்தார் என்று நமக்கு சொல்லப்படுகிறது. அத்வானி, வாஜ்பேயி முதலிய பாஜக தலைவர்களை குற்றவாளிகள் என்று அறிவித்த லிபரான் கமிஷன் ராவை விடுவித்ததை ஆசிரியர் சுட்டிக்காட்டுகிறார்.

 
‘தான் அதிகமாக அத்வானியை நம்பிவிட்டதாக’ ராவ் குப்தாவிடம் புலம்புகிறார். மேலும், ‘ஏன் ராணுவம் கரசேவகர்களை சுடச்சொல்லி உத்தரவிடவில்லை?’ என்று கேட்டதற்கு, ‘அவர்கள் ராம் ராம் என்று முணுமுணுத்துக்கொண்டு இருந்தார்கள். ராணுவத்தில் சிலரும் ராம், ராம் என்று முணுமுணுத்துக்கொண்டு அவர்கள் பக்கம் சேர்ந்துகொண்டு ராணுவத்தை தாக்கியிருந்தால் அதில் ஏற்பட்ட தீ நாட்டையே அழித்திருக்கும்!’ என்று ராவ் சொல்கிறார். மேலும், ராவ் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் பதியப்பட்டாலும் அவை அனைத்திலும் இருந்து அவர் விடுதலை பெற்றார். அதைக் குறித்து கேட்டதற்கு, தன்னுடன் இருந்தவர்கள் கொள்ளையடித்ததை தான் வேடிக்கை பார்த்ததை சூசகமாக, ‘நான் முட்டையைத் திருடினேன் என்றும், நான் கோழியைத் திருடினேன் என்றும் வெவ்வேறு சாரார் சண்டையிட்டுக் கொள்கிறார்கள். ஆனால், நான் திருடன் என்பதில் மட்டும் அவர்களுக்கு சந்தேகமில்லை!’ என்று சொல்லியிருக்கிறார்.


சீனாவுக்குப் பயணம் போய்விட்டு வந்த காங்கிரசின் தலைவர் சீதாராம் கேசரியிடம் ‘எப்படி இருந்தது சீனா?’ எனக் கேட்டதற்கு, ‘அவர் நம்மூர் பஸ் டிரைவர்கள் போலத்தான். இண்டிக்கேட்டரை இடது பக்கம் போட்டுவிட்டு, வலதுபக்கம் பொருளாதாரத்தில் போய்க்கொண்டே இருக்கிறார்கள்!’ என்றார். மாதவராவ் சிந்தியா இந்தியாவின் பிரதமர் ஆகக்கூடுமா என்கிற கேள்விக்கு, ‘ஒரு விமான விபத்துக்காக அவர் பதவியைத் துறந்தார். அதுவே அவசரமான செயல். அதற்கடுத்து அதைப் பயன்படுத்திக் கொண்டு நாடகமாடி இருக்க வேண்டும், அவர் ஒருவாரம் குடும்பத்தோடு சுற்றுலா போய்விட்டார். இவரெல்லாம் தேறமாட்டார்!’ என்றிருக்கிறார் சீதாராம் கேசரி.

கருணாநிதியை ‘தங்களை பிரிவினைவாதி என்று சித்தரிப்பதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்’என்று கேட்ட பொழுது, ‘நான் பிரிவினைவாதியாக சித்தரிக்கப்படவில்லை, நான் பிரிவினைவாதியாக இருந்தவன் தான்; இந்தியா மேற்கொண்ட 62, 65, 71 போர்கள் இந்தியக்குடியரசுக்கு வெளியே சிறிய தேசமாக இறையாண்மையோடு இருக்க முடியாது என்று உணர்ந்துகொண்டதன் விளைவே இது!’ என்று பதில் தந்திருக்கிறார்.

12 ஆகஸ்ட் 1990 அன்று ருச்சிகா கிர்ஹோத்ரா என்கிற பதினான்கு வயது சிறுமி டென்னிஸ் விளையாட போன பொழுது ஹரியானா டென்னிஸ் சங்கத் தலைவரும், ஐ.பி.எஸ். அதிகாரியுமான ரத்தோர் அப்பெண்ணை மானபங்கபடுத்தி இருக்கிறான். அதை வெளிப்படையாக அப்பெண் சொன்னதும் முதல் தகவல் அறிக்கை கூட பதியப்படாமல் அவளின் சகோதரன் மீது ஆறு வாகனத் திருட்டு வழக்குகள் பதியப்பட்டது. (அனைத்திலும் அவர் விடுதலை செய்யப்பட்டார்.) அப்பெண்ணின் குடும்பமும், அவளும் கடும் அச்சுறுத்தலுக்கு ஆளாகி பதினேழு வயதில் அவள் தற்கொலை செய்துகொண்டாள். அந்த அதிகாரியின் மீது சுண்டு விரலைக் கூட பதிக்காத அரசின் செயல்பாட்டை கடுமையாக சேகர் குப்தா விமர்சிக்கிறார்.

ஐ.பி.எஸ் அதிகாரி கே.பி.எஸ்.கில் மீது மானபங்க வழக்கை ரூபன் தியோல் பஜாஜ் தொடர்ந்த பொழுது பொங்கிய போராளிகள் ஒரு நகர்ப்புறத்தை சேர்ந்த பெண்ணுக்கு குரல் கொடுக்காமல் போய் அவள் இறந்தாள் என்று மனசாட்சியை உலுக்குகிறார். பத்து வருடங்கள் கழித்து ரத்தோர் மீது சிபிஐ மானபங்கப்படுத்தியதற்காக மட்டும் வழக்கு பதிவு செய்து, இன்னுமொரு பத்து வருடங்கள் கழித்து சிறைத்தண்டனை பெற்றுக்கொடுத்தது. தற்கொலைக்கு தூண்டியது என்று எந்த வழக்கும் பதியப்படவில்லை.

அசோம் கண பரிஷத் கல்லூரி மாணவர்களின் இயக்கமாக, அசாமிகளின் சுயாட்சிக்கான இயக்கமாக வங்காளிகளின் ஆதிக்கத்துக்கு எதிராக உருவானது. அரசின் அடக்குமுறைகளை வெற்றிகரமாக அவர்கள் எதிர்கொண்டார்கள். தேர்தல்களை புறக்கணித்தார்கள். ஊரடங்கு உத்தரவு என்பதை கேலிக்கு உள்ளாக்கினார்கள். ஆனால், அவர்கள் ஆட்சி செய்த ஐந்து வருடத்தில் ஊழல் மட்டுமே மூச்சானது. நிர்வாகம் என்கிற ஒன்றையே மறந்தார்கள். மாநிலக்கட்சிகளே சிறந்த உள்ளூர் நிர்வாகத்தை பெரும்பாலும் தந்துகொண்டிருக்கும் சூழலில் இப்படிப்பட்ட கட்சிகள் மரிப்பதும் நன்மைக்கே என்கிறார்.

உத்திர பிரதேசத்தை விடுதலைக்குப் பின்னால் பிரிக்க முயன்ற பொழுத, ஜி.பி.பந்த் அதை மறுத்து சொன்ன காரணம் வேடிக்கையானது, ‘கிழக்கில் ராமனின் பிறப்பிடமான அயோத்தியும், மேற்கில் கிருஷ்ணரின் மதுராவும் இருக்கிறது. எப்படி இதைப் பிரிப்பது?’. காங்கிரசின் அதிகார மையங்கள் அங்கிருந்தே பெரும்பாலும் வந்தார்கள், நேரு, இந்திரா ஆகியோரை முன்னிறுத்தி ஒட்டுமொத்த இடங்களையும் அள்ளிவிடவே காங்கிரஸ் இப்படி செயல்பட்டது. அங்கே ஓரளவுக்கு நொய்டா மட்டுமே வளர்ந்திருக்கிறது. காரணம், அங்கே தான் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் வசிக்கிறார்கள். கூடவே, டெல்லிக்கு அருகில் இருக்கின்றது அது. பூர்வாஞ்சல், ரோஹில்கன்ட்., பந்தல்கன்ட், அவாத் என்று பிரித்து தொலைத்தால் ஆவது அங்கே வளர்ச்சி ஓரளவுக்கு எட்டிப்பார்க்கும்.

மோடியை கோத்ரா கலவரங்கள் சார்ந்து குத்திக் கிழிக்கிறார், ‘ஐம்பது வயதில் இருக்கும் உங்களுக்கு ஒரு பேரன் இருக்கவேண்டும்.. அவன் குஜராத் கலவரங்களின் பொழுது நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் தாத்தா?’ என்று கேட்பதில் இருந்து உங்களின் பிரம்மச்சரியம் காத்திருக்கிறது. ‘கலவரங்களின் பொழுது காவல்துறை, அரசு செயல்பட்டது எனக்கு முழுத்திருப்தி, வன்முறை பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டதில் எனக்கு மகிழ்ச்சி.’ என்று நீங்கள் சொன்னதற்கும், ‘பழுத்த மரம் விழுந்தால் நிலம் அதிரத்தான் செய்யும்.’ என சீக்கிய படுகொலைகளின் பொழுது ராஜீவ் சொன்னதற்கும் என்ன வித்தியாசம்?’ எனக் கேள்வி எழுப்புகிறார்.

எண்பத்தி மூன்றாம் வருடம் அசாமின் நெல்லியில் பெரும்பாலும் இஸ்லாமியர்கள் உட்பட 3,300 அப்பாவி மக்கள் அவர்கள் வங்காளிகள் என்கிற ஒரே காரணத்துக்காக அசாம் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டார்கள். உட்பகுதியில் நடந்த அந்த படுகொலையை CRPF-ன் பாதி பிரிவை மட்டும் கொண்டு பெருமளவில் தடுத்த H.B,N.அப்பா என்கிற தலைமைக் காவலர் ‘ஐயோ நான் இன்னமும் முன்னரே வந்திருந்தால் இன்னம் சில ஆயிரம் பேரைக் காப்பாற்றியிருக்கலாமே!’ எனக்கண்ணீர் வடித்தார். வெறும் சப் இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்று வாழ்க்கை முடிந்த போன அவருக்கு இருந்த உறுத்தல் ஏன் மோடிக்கு இல்லை என்று கேட்கிறார் குப்தா.

‘ராஜதர்மத்தை இழந்துவிட்டார் மோடி’ என்று முழங்கிய வாஜ்பேயி மோடியை பதவியைவிட்டு நீக்கியிருக்க வேண்டும். அத்வானியின் அழுத்தத்துக்கு அடங்கி அவர் அதைச் செய்யவில்லை. அது சிறுபான்மையினரை அவருக்கு எதிராக திருப்பிவிட்டது என்கிறார் ஆசிரியர்.

சிலைகளைக் கொண்டு நடக்கும் அரசியலைக் கடுமையாக சாடுகிறார். சவார்க்கருக்கு படம் கூடாது என்று பொங்கிய காங்கிரஸ் ஏன் இந்திரா காலத்தில் அவருக்கு அஞ்சல் தலை வெளியிட்டது? பாஜகவின் பசு எதிர்ப்பு அரசியலுக்கு அச்சாரம் போட்டதே காங்கிரஸ் தான். காங்கிரஸ் இன்னமும் நேரு, காந்தியின் பெயரைச் சொல்லி ஓட்டு வாங்க பார்க்கிறது. எப்பொழுதோ இருந்ததாக நம்பப்படும் ராமர், கிருஷ்ணர் பெயரால் பாஜக ஒட்டுக் கேட்கிறது. மாயாவதி அம்பேத்கரின் பெயராலும், முலாயம் சிங் லோஹியாவின் பெயராலும்,. ஜெயலலிதா எம்ஜிஆரின் பெயராலும் ஆட்சியைப் பிடிக்க முனைகிறார்கள். எதிர்காலத்தை எப்படி கட்டமைப்போம் என்று சொல்லியோ, தொலைநோக்கை கொண்டோ, தங்களின் செயல்பாட்டை கொண்டோ ஓட்டுக் கேட்கும் தைரியம் ஏன் வரவில்லை என்று வினவுகிறார்.

குஜராத்திலும், காஷ்மீரிலும் முதுகெலும்போடு தேர்தல் நடத்திய ஜே.எம்.லிங்டோவை ‘ஜேம்ஸ் மைக்கேல்’ லிங்டோ என்று மதச்சாயம் பூசி அவதூறு செய்யப்பார்த்தார் மோடி. ஐந்தே தொகுதிகளில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை பயன்படுத்தி அதில் தன்னுடைய கட்சி தோற்றதால், ஓட்டு அளிப்பதை வாக்குச் சீட்டில் தான் செய்யவேண்டும் என்கிற பழைய வரியைக் கொண்டு தேர்தல் ஆணையத்தை மின்னணு வாக்கு இயந்திரம் பயன்படுத்தாமல் சிலகாலம் தடுத்தார் ராஜீவ். பி.ஜே.ராவ் எனும் தேர்தல் ஆணையர் லாலூவுக்கு அஞ்சாமல் தேர்தலை நேர்மையாக நடத்திக் காட்டினார். அவர் வாங்கிய சம்பளம் 12,000 ரூபாய்! சேசன் தேர்தல் ஆணையம் எவ்வளவு சிறப்பாக செயல்படமுடியும் என்று காட்டினாலும், அவரே பின்னர் ஜனாதிபதி பதவி, ராஜ்ய சபா சீட் ஆகியவற்றுக்கு ஆசைப்பட்டு வழிமாறிப் போனார்.

2004 தேர்தலில் பாஜக தோற்றதற்கு காரணமாக விவசாயத்தை கண்டுகொள்ளாதது, அடித்தட்டு மக்களுக்கு எட்டு சதவிகித வளர்ச்சியே திருப்தி தந்துவிடும் என்று நம்பியது, குறைந்த வட்டி வீட்டுக்கடன்கள், மலிவான தொலைபேசி இணைப்புகள் நாட்டை நம் பக்கம் ஈர்க்கும் என்று தப்புக்கணக்கு போட்டார்கள் என்கிறார் குப்தா.

அதேசமயம் வேறு சில வாதங்களை முன்வைக்கிறார்: ஏழைகள்
காங்கிரசுக்கு ஓட்டுப் போட்டார்கள் என்றால் ஏன் ஒரிசாவில் மீண்டும் பாஜக கூட்டணி பெருவெற்றி பெற்றது? கிராமப்புற மக்கள் ஐடி புரட்சிக்கு எதிராக கிளர்ந்தார்கள் என்றால் ஏன் ஆந்திராவில் மட்டும் அப்படி ஆனது? கர்நாடகாவில் பாஜக நல்ல வெற்றியை ஈட்டியுள்ளதே? சீரற்ற ஆட்சி நிர்வாகம், சொரணையில்லாத அரசியல், கேவலமான வாழ்க்கை நிலை ஆகியவற்றால் மாற்றி ஓட்டுப் போட்டார்கள் என்றால் ஏன் லாலுவும், முலாயமும் தொகுதிகளை அள்ளினார்கள்? கிராமப்புறங்களில் தான் பாஜக தோற்றதாக ஒரு கதை சொல்லப்படுகிறது. உண்மையில் நகரங்களில் தான் அது துடைத்து எறியப்பட்டது. கிராமங்களில் முன்னர் இருந்த நிலையையே அது பெரும்பாலும் பெற்றது. நகர்ப்புற இடங்கள் அந்த கூட்டணிக்கு 51-ல் இருந்து 21 ஆக குறைந்தது. காங்கிரஸ் கூட்டணிக்கு 16-ல் இருந்து 35-ஆக உயர்ந்தது.

தரகர், விவசாயி யாரேனும் ஒருவரை திருப்திப்படுத்தினால் போதும் என்கிற பார்வையே பாஜகவுக்கு இருந்தது. தரகர்,விவசாயி இருவரையும் திருப்திபடுத்துவதே சமச்சீரான வளர்ச்சி. அமர்த்தியா சென் ‘அடிப்படைக் கல்வியை பரவலாக்கி, பொது மருத்துவ நலச்சேவையை மக்களுக்கு சிறப்பாக வழங்கி, நிலச்சீர்திருத்தங்கள் நடந்து, குறுங்கடன்கள் சமூகத்தின் அடித்தட்டு மக்களுக்கு எளிமையாக, நியாயமாக கிடைத்திருந்தால் இப்படிப்பட்ட வளர்ச்சி ஏற்பட்டிருக்கும்.’ என்கிறார்.

இடதுசாரிகள் இந்திய-அமெரிக்க அணு ஒப்பந்தத்தின் பொழுது காங்கிரசுக்கு தங்களின் ஆதரவை விளக்கிக் கொண்டதை கடுமையாக சாடுகிறார் சேகர் குப்தா. இடதுசாரிகள் மத்திய அரசில் பங்கேற்ற பொழுது நிர்வகிக்கப்பட்ட விலை முறைமையை (APM) நீக்கியதையும், பொதுத் துறையில் அரசு பங்குகளை விற்கும் கமிட்டியை முதன்முதலில் அவர்கள் காலத்திலேயே துவங்கியதையும் சுட்டிக்காட்டுகிறார். மேலும், தேவ கவுடா ஆட்சியில் சிதம்பரம் சீர்திருத்தங்கள் நிறைந்த பட்ஜெட்டை தாக்கல் செய்த பொழுது அமைதி காத்தவர்கள், லாலு தனியார் துறையை ரயில்வே கண்டெயினர் துறையில் கொண்டு வந்த பொழுது எதிர்க்காதவர்கள், அதையே காங்கிரஸ் செய்தால் கத்தியிருப்பார்கள். BHEL பங்குகளில் பத்து சதவிகிதத்தை விற்க அரசு முனைந்த பொழுது எதிர்த்த இடதுசாரிகள் அதுவே NTPC எனும் இன்னொரு நவரத்னா நிறுவனத்தில் பங்குகளை விற்ற பொழுது அமைதி காத்தது ஏன் என்று துளைத்து எடுக்கிறார். அறுபது எம்பிக்களை வைத்து கொண்டு ஆட்சியை நிர்மாணிக்கும் போக்கு சர்வாதிகாரமானது என்று பாய்கிறார்.

நம்முடைய நகரங்கள் பெரும்பாலும் வளர்ச்சியிலும், திட்டமிடுதலிலும் பின்தங்கியிருப்பதை சுட்டிக்\காட்டி அமெரிக்காவில் பல்வேறு முக்கியமான நகரங்கள் அந்தந்த மாநிலத்தின் தலைநகராக இல்லாததைப் போல இந்தியாவிலும் செய்யலாம் என்று ஆலோசனை தருகிறார். நடுத்தர வர்க்கம் மின்சாரம், சமையல் எரிவாயு, தண்ணீர் என்று அனைத்திலும் மானியத்தையும், தரத்தையும் இணைத்தே எதிர்பார்ப்பது மேலும், மேலும் நிதிப் பற்றாக்குறையை அதிகமாக்கவே செய்யும் என்று எச்சரிக்கையும் உண்டு.

டெல்லியில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் மெத்தனம் காட்டிய அரசின் போக்குக்கு பின்னால் இருக்கும் அரசியலை தோலுரிக்கிறார். ஒளிவுமறைவற்ற நில ஆவணங்கள், தெளிவான சொத்து வரிகள், சொத்து சார் சட்டங்களை சீர்திருத்தல் ஆகியவற்றை செய்யாமல் அரசுகள் காலம் கடத்துகின்றன. காரணம் இப்படிப்பட்ட சூழலில் அரசியல்வாதிகளையே மக்கள் நாடவேண்டி இருக்கும், தேவையானதை பெற்றுக்கொண்டு செய்வதை அவர்கள் செய்வார்கள். அதேபோல் ஓட்டுக்கள் பறிபோகும் என்கிற வாதத்தை பதினெட்டாயிரம் குடியிருப்புகள் ஆக்கிரமிப்புகள் என்று வைத்துக்கொண்டு ஒவ்வொன்றுக்கும் ஐந்து ஓட்டு என்றாலும் ஒரு லட்சம் ஓட்டைத் தொடாத பொழுது அஞ்சுவதற்கு ஒன்றுமில்லை. பலர் அரசின் நேர்மையான போக்குக்கு வாக்களிப்பார்கள் என்று உத்வேகம் தருகிறார்.

கல்வி அமைச்சரின் வீட்டின் முன்னால் கேந்திரிய வித்யாலயாவில் இடம் வேண்டி பலர் நிற்கும் காட்சியை கண்முன் ஓடவிட்டு, நாம் வருடத்துக்கு மிக மிக குறைவான மேற்படிப்பு முடித்த மருத்துவர்களையே உருவாக்குகிறோம். போதாது என்று கலைசார்ந்த கல்லூரியில் ஒரு தத்துவத்தை மட்டுமே சார்ந்து, புதிய சிந்தனைகளை வரவேற்காத போக்கு நிலவுவதையும் காணமுடிகிறது. தேவை மிக அதிகமாக இருக்க சத்தற்ற கல்வி நிறுவனங்களை, சீரழியும் நிலையில் கல்வியின் போக்கை வைத்திருப்பது இந்தியாவின் பெருங்கனவுகளுக்கு உகந்தது அல்ல என்பது அவரின் அச்சம்,.

வடகிழக்கு பகுதி வேறுபட்ட பகுதி என்பதை உணர்ந்த நேரு அங்கே பரந்த அறிவைக் கொண்டிருந்த மானுடவியல் அறிஞர் வெர்ரியர் எல்வினை நம்பினார். அவரின் வழிகாட்டுதலில் இந்தியாவின் மைய நீரோட்டத்தோடு வேகமாக வடகிழக்கு மக்களை இணைக்காமல் பொறுமையாகவே அரசு இயங்கியது. இதை ‘மெதுவாக வேகப்படுத்தல்’ என்று நேரு அழைத்தார். இவை நல்ல நோக்கத்தோடு துவங்கப்பட்டாலும் ILPS முதலிய கட்டுப்பாடுகளின் மூலம் வளர்ச்சியை மழுங்கடித்து விட்டன. இந்திய பழங்குடியின ஆட்சிப் பணி தந்த தேர்ந்த அதிகாரிகள் போன்ற சிற்சில நன்மைகள் உண்டு,ஆனால். கிறிஸ்துவ மிஷனரிக்கள் பலமாக வேரூன்றிய பகுதிகளில் நவீன கல்வி, சிந்தனைகள் புகுந்தன. அப்படியிருந்தா மிசோரம், நாகலாந்து சிறப்பாக வளர்ச்சியடைந்தது. மற்ற பகுதிகள் குறிப்பாக அருணாசல பிரதேசம் பின்தங்கியது. சாலைகள், கட்டுமானம், வேலைவாய்ப்பு, வாழ்க்கை நலம் உயர்த்துதல் என்று நாம் போகவேண்டிய தூரம் பெரிது.

இந்தியா முழுமையான ஜனநாயகம் இல்லை என்பதைப் போல பாகிஸ்தான் முழுமையான சர்வாதிகார நாடில்லை என்கிற சுவராசியமான வாதத்தை முன்வைக்கிறார். எப்படி இந்தியாவில் எல்லா அமைப்புகளும் முழுமையாக சிறப்பாக செயல்படுகிறது என்று சொல்லமுடியாதோ அது போல பாகிஸ்தானில் பத்திரிக்கைகளின் செயல்பாட்டை நிறுத்தவோ, நீதிமன்றங்கள் அவ்வப்பொழுது தங்களின் சுயாட்சி போக்கை காட்டவோ, மக்களுக்கு எல்லா உரிமைகளையும் மறுக்கும் சர்வாதிகாரமோ பாகிஸ்தானில் எப்பொழுதும் சாத்தியப்படவில்லை. இந்தியாவில் நிர்வாகம் சரியில்லை என்பதற்காக ராணுவத்திடம் ஆட்சியை கொடுக்கலாம் என்பவர்கள் பாகிஸ்தானையே பாடமாக எடுத்துக்கொள்ளலாம். ஆயுதங்களை மக்கள் கையில் கொடுத்தால் தீர்வு வந்துவிடும் என்பதை விட பயங்கரமான யோசனையும் இருக்க முடியாது. தென் ஆப்ரிக்காவில் அப்படி செய்ய முயன்று மக்கள் தனித்த தீவுகளாக வீட்டுக்குள்ளேயே பயத்தில் முடங்கிக் கிடப்பதே நடந்தது. உள்ளே இருந்தே மாற்றங்கள் நிகழ வேண்டும் என்பதே சரி.

பெருத்த சிந்தனையாளர்கள், தொழில் முனைவோர், சமூக சேவகர்கள் தேர்தல் அரசியலில் குதிக்கிறார்கள். ஆனால். மக்கள் அவர்களுக்கு ஓட்டளிப்பதில்லை. அவர்களை உணர்ந்து கொள்ள மக்களுக்கு திறனில்லை என்கிற வாதத்தை எதிர்கொள்கிறார் சேகர் குப்தா. மக்களை நோக்கி வருவதாக சொல்லிக்கொள்ளும் இந்த போராளிகள் பல்வேறு குறைகள் இருந்தாலும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கட்சி முறையை முற்றாக நிராகரிக்கிறார்கள். அதோடு நில்லாமல், அந்த கட்சிகள் பரவலாக இருக்கும் தேர்தல் முறையில் பங்கேற்று அந்த முறையையே மாற்றப் போவதாக வெற்றுக்கூச்சல்கள் போடுகிறார்கள். பலரையும் அனுசரித்து, தேர்தல் அரசியலை மதித்து,. கட்சி என்கிற கோட்பாட்டை முற்றும் ஒழித்து விடலாம் என்று கனவுகாணாமல் கள யதார்த்தம் உணரும் வரை விடிவில்லை.

எப்படி ஊடுருவல்கள், மாவோயிஸ்ட்கள் ஆகியோரை சமாளிப்பது என்று சேகர் குப்தா முந்தைய எடுத்துக்காட்டுகளை சொல்கிறார். மிசோரமில் ஜனவரி பதிமூன்று அன்று நாற்பது வருடங்களுக்கு முன்னால் மிசோ போராளிகள் நுழைந்து ஒட்டுமொத்த போலீஸ் தலைமையகத்தை அழித்தார்கள். இந்திரா இன்னமும் கடுமையான ஜி.எஸ்.ரன்தாவாவை அனுப்பி வைத்தார்.மிசோரம் காவற்படையை பழங்குடியினரை கொண்டு அவர் உருவாக்கினார். கடும் பதிலடி தரப்பட்டது. இ.எஸ்..பார்த்தசாரதி எனும் கமிஷனர் அசாமில் கொல்லப்பட்டார். குறுக்கு வழியில் ஹிதேஸ்வர் சைக்கியாவை அசாம் முதல்வர் ஆக்கினார் இந்திரா. இரும்புக்கரத்தோடு சிறப்பான நிர்வாகத்தை அவர் சாத்தியப்படுத்தினார். இந்த இரண்டு தருணங்களின் உச்சத்தை ராஜீவ் அமைதி உடன்படிக்கையாக மாற்றிக்கொண்டார்.

இந்த போராட்டங்கள் ஆரம்பத்தில் எண்ணற்ற இழப்பை இருதரப்புக்கும் தருகிறது. போகப்போக அரசை எதிர்த்து போரிட முடியாது, அரசு வலிமையானது என்று அவர்கள் உணர நேரிடுகிறது. அதே சமயம், அரசு மாவோயிஸ்ட்கள் போர் செய்வது வீண் என்கிற உணர்வை உண்டாக்க களத்திலும். நிர்வாகத்திலும் மாற்றங்கள் செய்ய வேண்டும். அமைதியை தன் பக்கம் கையோங்கி இருக்கும் சூழலில் அரசு தரவேண்டும். இல்லையேல் அதை பலவீனத்தின் அடையாளமாக பல்வேறு சமயங்களில் காணக்கூடும்.

இந்தியா பொறுமையான அரசு என்று சப்பை கட்டு கட்டுகிறவர்கள், அறுபதில் நேரு நாகாக்களை வான்படையை கொண்டு தாக்கியதை மறக்கலாம். இந்திரா கருவூலத்தை மிசோக்கள் கைப்பற்ற முனைந்த பொழுது விமானத்தாக்குதல் நடத்த வைத்தார். படேல் ஹைதரபாத் மீது ராணுவத்தை ஏவிவிட்டு அதை ‘காவல்துறை செயல்பாடு’ என அழைத்தார். கோவா மீது முப்படைகளையும் அனுப்பினாலும் நேரு அதே பாணியில் ‘காவல்துறை நடவடிக்கை’ என்றே அழைத்தார். வலிய அரசுகள் தான் பிழைக்கும் என்கிறார் சேகர் குப்தா.

கர்நாடக நீதிபதி சைலேந்திர குமார் தன்னுடைய சொத்துக்களை வெளியிட்ட நிலையில் அப்படிப்பட்ட ஒளிவுமறைவற்ற தன்மை ஏன் மற்ற நீதிபதிகளிடம் இல்லை என்று வினவுகிறார். எல்லாரின் நேர்மையை சோதிக்கும் நீதித்துறையும் அந்த கட்டத்துக்குள் வரவேண்டும் அல்லவா? அகமதி எனும் நீதிபதி யூனியன் கார்பைட் வழக்கு ஆண்டர்சன் தப்பிக்கும் வகையில் வலுவற்றது ஆக்கினார் என்கிற குற்றச்சாட்டை பொதுவெளியில் சட்ட அமைச்சர் மொய்லி வைத்தார். மேலும் சபர்வால் எனும் உச்சநீதிமன்ற நீதிபதியை மனித உரிமைகள் தலைவராக அவரைப்பற்றி செய்தித்தாள்களில் தவறான செய்திகள் அடிபட்டன என்று சொல்லி மத்திய அரசு ஒன்றரை வருடம் தலைவர் பதவியை காலியாக வைத்திருந்ததை சுட்டிக்காட்டி நீதித்துறையும், அரசும் மோதிக்கொள்வது தவறான எண்ணங்களை உண்டாக்கும் என்று எச்சரிக்கிறார்.

ANTICIPATING INDIA
PAGES: 516
HARPER COLLINS
SHEKHAR GUPTA
PRICE: 799

ரோமைன் ரோலண்ட் எனும் மனிதநேயர் !


ரோமைன் ரோலண்ட் எனும் மாபெரும் மனிதநேயர் மறைந்த தினம் டிசம்பர் முப்பது.
பிரான்ஸ் தேசத்தில் 1844 இல் பிறந்த இவர் தத்துவத்தில் பட்டம் பெற்றார்; ஆசிரியராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கினார். எனினும் காலப்போக்கில் ஆசிரியர் தொழில் மீது வெறுப்பு உண்டானது; மாணவர்களை அரட்டி,உருட்டி மிரட்டும் அது  அவரின் கனிவான சுபாவத்துக்கு ஒத்துவராத பண்பாக இருந்தது.

வேலையை உதறிவிட்டு முழுநேர எழுத்தாளர் ஆனார் .அவரின் ஆரம்பகால நாடகங்கள் பெரிய
வரவேற்பை பெறவில்லை; அவரை டால்ஸ்டாயின் எழுத்து ஈர்த்தது. பீத்தோவனின் இசைக்கோர்வை அவரை ஈர்த்தது; ஓயாத உழைப்புக்காரர் ஆன மைக்கேலாஞ்சேலோவும்
தான். மூவரின் வாழ்க்கை வரலாற்றையும் அற்புதமான நூல்கள் ஆக்கினார் .

அவருக்கு இந்தியாவின் ஆன்மீகத்தின் மீது காதல் வந்தது; இந்தியாவைப் பற்றி தெரிந்து கொள்ள ஆவல் கொண்டார் .தாகூரை அவர் அவர் தேசத்தில் சந்தித்த
பொழுது ,”நீங்கள் விவேகானந்தரை படித்தால் இந்தியாவைப் புரிந்துகொள்ளலாம்.” என சொல்லப்படவே இவர் அவரின் நூல்களை வாசிக்க ஆவல் கொண்டார் .இவருக்கு ஆங்கிலம் தெரியாது; பெரும்பாலான நூல்கள் ஆங்கிலத்தில் இருந்தன . இவரின்  சகோதரியின் உதவியோடு அவற்றைப் படித்து நெகிழ்ந்து போனார் .The Life of Ramakrishna andSwami Vivekanandas Life and Gospels.என்கிற அற்புதமான நூலை எழுதினார் .

ரோலண்ட் குறுகிய மனப்பான்மை கொண்டு நாடுகள் சண்டைப்போடுவதைக் கண்டு மனம்
நொந்தார் . இரண்டு வெவ்வேறு துருவங்கள் எனக்கருதப்படும் மனிதர்கள் அன்பால் இணைய முடியாதா? எனக் கேள்வி எழுப்பிக்கொண்டார் . அதை JEAN-CHRISTOPHE என்கிற தன் நாவலுக்குக் கருப்பொருள் ஆக்கினார்; கதையின் நாயகன் ஒரு ஜெர்மன் இசைக்கலைஞன் அவன் இக்கட்டான சூழல்களிலும் பிரான்ஸ் தேசத்து இளைஞன் ஒருவன் மீது நட்பு பாராட்டுகிறான் -நாடுகளைக் கடந்து அன்பால் மனிதர்கள் இணைய முடியும் என அடித்துச் சொன்ன ரோலண்டுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது

காந்தியை மிகவும் நேசித்தார். அவரைச் சந்தித்த பொழுது காந்தி தன்னை முத்தமிட்ட தருணத்தைப் புனித பிரான்சிஸ் மற்றும் டொமினிக் ஆகியோரின்  முத்தத்தோடு ஒப்பிட்டு சிலாகித்தார் .காந்தியை பெரும்பாலும் நம் இந்திய விடுதலைக்காகப் பாடுபட்ட ஒரு ஜீவனாக மட்டுமே பார்க்கிறோம்; ஆனால்,ரோலண்ட்  அப்படிப் பார்க்கவில்லை,உலகம் முழுக்க உள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் குரல் கொடுக்கிற ஒரு மனிதராகத் தான் அவரை அவர் பதிவு செய்கிறார் . அதை ஜெயகாந்தன் தமிழில் மொழிபெயர்த்து உள்ளார். காந்தியை  பற்றிய இவரின் நூல் அனைவரும் வாசிக்க வேண்டிய ஒன்று. உலகமே பாசிசம் கண்டு அஞ்சிக்கொண்டு இருந்த பொழுது இவர் வன்முறையின்மையை (PACIFISM ) காந்தியின்  வழியில் வலியுறுத்தினார் .

ஜனநாயகம் தின்ற இந்திராவின் எமெர்ஜென்சி


எமெர்ஜென்சி பற்றி எழுத வேண்டும் என்று நினைத்தாலே கை நடுங்குகிறது. இந்திய ஜனநாயகத்தின் மிக இருண்ட கட்டம் என்று குறிக்க வேண்டுமென்றால் அந்த காலகட்டத்தை தான் சொல்லவேண்டும். அலகாபாத் உயர்நீதிமன்றம் யஷ்பால் கபூர்  என்கிற அரசுப்பொறுப்பில் இருந்த அதிகாரி அதிலிருந்து விடுவிக்கப்படுவதற்கு முன்பே இந்திராவுக்கு தேர்தல் பணி செய்தது,அரசாங்க இடத்தில் விதியை மீறி அதிக உயரத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்ததுஆகிய காரணங்களில் இந்திரா குற்றவாளி என்று முடிவு செய்து ஆறு ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதித்தது. 

ஏற்கனவே சுப்ரீம் கோர்ட் மன்னர் மானிய ஒழிப்பு முதலிய பல்வேறு விஷயங்களில் அரசுக்கு எதிராக லடாய் போட்டிருந்தது. கேசவனானந்தா பாரதி வழக்கில் அடிப்படை கூறுகள் என்று சிலவற்றை பட்டியலிட்டு இவற்றில் கையை வைத்தால் தொலைத்து விடுவேன் என்று சொல்லிவிட்டது சுப்ரீம் கோர்ட்.

தேர்தலில் போட்டியிட தடை என்ற தீர்ப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட் போனால் வி.ஆர்.கிருஷ்ணய்யர் தீர்ப்புக்கு முழுமையாக தடை விதிக்காமல் இந்திரா நாடாளுமன்றத்தில் பிரதமராக பணியாற்றலாம்,ஆனால்,வாக்களிக்கிற உரிமை கிடையாது என்று சொல்ல பற்றிக்கொண்டு வந்தது. நீதித்துறை இப்படி முரண்டு பிடிக்கிறது என்று பற்றிக்கொண்டு வந்தது இந்திராவுக்கு.

ஊழல் மலிந்த குஜராத் அரசு விலக வேண்டும் என்று போராடக்கிளம்பிய ஜே.பி. அடுத்து அப்படியே பீகார் பக்கம் நகர்ந்திருந்தார். மாணவர்களின் போராட்டத்துக்கு வழிகாட்ட அவர் தயார் என்றிருந்தார். முழு மாணவர் போராட்டமான நவநிர்மான் அந்தோலன்,அடுத்து நடந்த ஜெபியின் பீகார் எழுச்சி,பல லட்சம் தொழிலாளர்கள் கலந்து கொண்ட ரயில்வே போராட்டம் ஆகியன இந்திராவை மேலும் சூடேயேற்றிய சூழலில் இந்த தீர்ப்பு எதிர்கட்சிகளுக்கு போதுமானதாக இருந்தது. “ராணுவம் அரசியலமைப்பின் படி இயங்காத அரசுக்கு ஒத்துழைக்க வேண்டிய அவசியமில்லை !” என்று ஜே.பி பேசியது போதுமானதாக இருந்தது. உள்நாட்டில் குழப்பம் என்றால் எமெர்ஜென்சி வரலாம் என்பதை இந்திரா சாதகமாக்கி கொண்டார். பக்ரூதின் அலி முகமது கேபினட்டின் அனுமதி பெறாத எமெர்ஜென்சி அறிவிப்புக்கு அப்படியே கையெழுத்து போட்டார். அதிகார வர்க்கம் குனிய சொன்னால் தவழ்ந்தது. பெரும்பாலான எதிர்க்கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள். யாரை வேண்டுமானாலும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று வதைக்கலாம்,கைது செய்யலாம் என்கிற நிலை நிலவியது. பலபேர் காணாமல் போனார்கள். என்ன ஆனார்கள் என்பது இன்னமும் கேள்விக்குறி

சஞ்சய் காந்தி களத்துக்கு வந்தார். இருபது அம்ச திட்டம் என்று அறிவித்து கொண்டு அராஜகம் செய்தார்கள். டெல்லியை சுத்தப்படுத்துகிறேன் என்று ஏழைகள் இருந்த சேரிகள் இடிக்கப்பட்டன. எதிர்த்த இடத்தில் துர்க்மான் கேட்டில் கொல்லப்பட்ட நூற்றி ஐம்பது அப்பாவி முஸ்லீம்கள் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். நாட்டின் மக்கள் தொகையை குறைக்கிறேன் பேர்வழி என்று ஐந்தே மாதத்தில் முப்பத்தி ஏழு லட்சம் ஆண்கள் கதறக்கதற கட்டாய குடும்ப கட்டுப்பாட்டுக்கு உள்ளாக்கப்பட்டார்கள். நூற்றுக்கணக்கில் வாரத்துக்கு குடும்ப கட்டுப்பாடு செய்தார்கள் டாக்டர்கள். பத்திரிக்கைகள் தணிக்கைக்கு உள்ளாகின ; சென்சார் செய்யப்பட்டு பெரும்பாலும் வெள்ளையாக ஒரு சில இதழ்கள் வந்தன. அரசியல் எதிரிகள் எல்லாரும் சிறைக்கு அனுப்பப்பட்டார்கள். ஜே.பி.யும் ஹரியானாவுக்கு அனுப்பப்பட்டார்.

மக்கள் மவுனமாக இருந்தார்கள் ; எமெர்ஜென்சி வருவதற்கு முந்தைய தினம் பெரிய அளவில் ஜே.பியின் கூட்டத்தில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டார்கள் என்றால் அடுத்த நாள் சிறு முணுமுணுப்பு கூட இல்லாமல் சட்டப்பூர்வ சர்வாதிகார ஆட்சியை ஏற்றுக்கொண்டார்கள். ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உட்பட யாருமே ராஜினாமா செய்யவில்லை. உச்சநீதிமன்ற நீதிபதிகள் முன்தேதியிட்டு சட்டங்களை தனக்கு சாதகமாக இந்திரா வளைத்த பொழுது மவுனம் காத்தார்கள். எமெர்ஜென்சி காலத்து கைதுகள் செல்லுபடியாகும் என்று நான்கு நீதிபதிகள் சொல்ல எதிர்த்து தீர்ப்பு சொன்ன தைரிய சாலி ஹெச்.ஆர்.கன்னா போல ஒரு சில நீதிபதிகள் மட்டும் ஜனநாயகத்தின் மவுன அலறலை பிரதிபலித்தார்கள். அப்படி கைதுகள் செல்லாது என்று மனித உரிமையை காக்கும் ரீதியில் தீர்ப்பு சொன்ன நீதிபதிகள் தூக்கி அடிக்கப்பட்டார்கள்.

தமிழகத்தில் இருந்த திமுக அரசு எமெர்ஜென்சிக்கு எதிராக குரல் கொடுத்து கடுமையான அடக்குமுறையை சந்தித்தது. எல்லா அரசாங்க அலுவலங்களும் ஒழுங்காக இயங்கின; நேரத்துக்கு எல்லா அரசுப்பணிகளும் நடந்தன. விலைவாசி கட்டுக்குள் வந்தது ஆகியவையும் நடந்தன. பதுக்கல்காரர்களை பிடிக்க கொண்டுவரப்பட்ட சட்டம் எதிர்த்த மக்களை சிறைக்குள் தள்ள பயன்பட்டது !

இந்திரா ஒரு வழியாக தனக்கு எதிராக இருந்த சட்ட சிக்கல்களை எதிர்க்கட்சிகளே இல்லாத நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி திருப்தியடைந்தார். வெற்றி நமக்கே என்று உளவுத்துறை ரிப்போர்ட் தர தேர்தல் என்று அவர் அறிவித்தார். ஒரு கட்சி ஆட்சியை கொண்டுவர வங்கதேசத்தில் முயன்ற முஜீபின் படுகொலையும் ஒரு காரணமாக இருக்கலாம்.’இந்திராவே இந்தியா !’ என்கிற கோஷத்தோடு பண பலம் மற்றும் படை பலத்தோடு காங்கிரஸ் தேர்தலை சந்தித்தது. சிறையை விட்டு மீண்டு பல்வேறு கொள்கைகள் கொண்ட கட்சிகள் இணைந்து தேர்தலை சந்தித்தன. கிச்சடி கூட்டணி என்று கிண்டலடித்தார் இந்திரா.

முடிவுகள் வந்தன ; ஹிந்தி பிரதேசத்தில் துடைத்து எறியப்பட்டு இருந்தது காங்கிரஸ். சஞ்சய்,இந்திரா இருவரும் தேர்தலில் பெரிய ஓட்டு வித்தியாசத்தில் தோற்றிருந்தார்கள். மக்கள் எங்களுக்கு சுதந்திரம் முக்கியம் என்று சொல்லாமல் சொல்லியிருந்தார்கள். அடுத்து ஆட்சிக்கு வந்த ஜனதாக்கட்சி இந்திரா உருவாக்கிய நாடாளுமன்றமே உச்சம் என்கிற பாணியிலான சட்டங்களை நீக்கினார்கள். உள்நாட்டுக்கலவரம் என்பதை ஆயுதமேந்திய புரட்சி என்று மாற்றியதோடு கேபினட் அனுமதி வேண்டும் முதலிய கட்டுப்பாடுகளை கொண்டு வந்தார்கள். ஆனாலும்,எமெர்ஜென்சி கொண்டுவரும் சட்டப்பிரிவு இன்னமும் இருக்கிறது. கூடவே,இந்திரா ஏற்படுத்திய அடக்குமுறை வடுக்களும் தான் !

எமெர்ஜென்சி அறிவிக்கப்பட்ட நாள் இன்று

இந்திய குடியரசின் டாப் 10 தருணங்கள் !


இந்தியாவை செலுத்துவது, ஒன்றாக இணைத்து வைத்திருப்பது என்று கேட்டால் எண்ணற்ற பதில்கள் வரலாம். ஆனால், இந்தியா என்கிற தேசம் ஒருங்கிணைந்து இருப்பதற்கான வழிகாட்டுதல் அரசியல் சட்டத்தின் வழியாகவே நமக்கு கிடைக்கிறது. அதன் விதை முதல்  விருட்சமாக விரிந்தவரை நிகழ்ந்த முக்கியமான நிகழ்வுகள் :

சேர்ந்து உருவான அற்புதம் :

காங்கிரசை எதிர்த்த அம்பேத்கர், சர்தார் ஹுக்கம் சிங், கம்யூனிஸ்ட் கட்சியின் லஹிரி ஆகியோரும் சட்ட உருவாக்கத்தில் பங்குபெற்றார்கள். பல்வேறு அம்சங்களை விவாதித்து சட்டத்தை வரையறுத்த அவர்கள்,அதை அப்படியே ஏற்றுக்கொள்ளவில்லை . மக்களிடம் இருந்து கருத்துக்களை பெற்றார்கள்,அதைக்கொண்டே அதிலிருந்து கருத்துக்களை ஏற்று அதை திருத்தினார்கள் ;பல்வேறு விவாதங்களுக்கு பிறகு,மாற்றங்களுக்கு உள்ளாகி ஜனநாயக முறையில் இந்தியாவின் அரசியலமைப்பு சட்டம் உருவாகி இருந்தது .

117,369 வார்த்தைகளோடு மிகப்பெரிய எழுதப்பட்ட அரசியலமைப்பு சட்டமானது. அம்பேத்கர் அரசியலமைப்பு சட்டம் உருவாகி முடிந்ததும் “அரசியலமைப்பு சட்டம் செயல்படுவதற்கு ஏற்றது என்றே எண்ணுகிறேன். அது நெகிழும் தன்மை கொண்டிருந்தாலும் இந்தியாவை இது பிணைத்திருக்கிற அளவுக்கு வலிமையானது. ஏதேனும் புதிய அரசியலமைப்பின் கீழே தவறாக போகுமென்றால் அதற்கு அரசியலமைப்பு சட்டம் காரணமாக இருக்குமென்று நான் சொல்ல மாட்டேன்.  மனிதர்கள் இழிவான வகையில் நடந்து கொண்டார்கள் என்றே சொல்லவேண்டி இருக்கும் !”

வரலாற்றின் மிகப்பெரிய சூதாட்டம் :

உலகின் எந்த நாட்டிலும் அதற்கு முன் நடந்திருந்த ஒரு செயலை இந்தியர்கள் முன்னெடுத்தார்கள். வயது வந்த எல்லா குடிமக்களுக்கும் முதல் தேர்தலிலேயே எந்த அரசும் அதற்கு முன்னர் வாக்குரிமை தந்ததில்லை. அதிலும் பதினைந்து கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் கல்வியறிவு இல்லாதவர்களாக இருந்த சூழலில் அது வரலாற்றின் மிகப்பெரிய சூதாட்டம் என்றே வர்ணித்தார்கள். மக்களுக்கு அறிமுகமான சின்னங்கள், தனித்தனி வண்ண பெட்டிகள் ஆகியவற்றின்
மூலம் நடந்த தேர்தலில் 4,500க்கும் மேற்பட்ட தொகுதிகளின் வெற்றி வேட்பாளர்கள்  முடிவு செய்யப்பட்டார்கள். சூதாட்டம் சூப்பராகவே முடிந்தது !

பொது இந்து சிவில் சட்டம்-அம்பேத்கரின் கனவு நேருவாக்கிய நினைவு :

இந்தியா மதச்சார்பற்ற நாடாகவே இருக்கும் என்று காங்கிரஸும், காந்தி மற்றும் நேருவும் மிகத்தெளிவாக இருந்தார்கள். காந்தியின் மறைவு அந்த எண்ணத்தை இன்னமும் வலுப்படுத்தவே செய்தது.   குடியரசான ஒரு வருடத்திலேயே பெண்களுக்கு சொத்துரிமை,பல தார திருமணத்துக்கு தடை,ஜீவனாம்சம்,விவாகரத்து ஆகியவற்றுக்கு உரிமை ஆகியவற்றை சாதிக்க முனைந்தார்கள். வலதுசாரிகளின் எதிர்ப்பு தடுக்கவே நான்கு வருடங்கள் கழித்து தனித்தனி சட்டங்களாக பிரித்து அவற்றை நிறைவேற்றினார் நேரு. அம்பேத்கர்  நேரு தன்னை ஏமாற்றிவிட்டார் என்று எண்ணி  பிரிந்து சென்று எதிர்க்கட்சி பக்கமிருந்து அதை பார்த்துக்கொண்டு இருந்தார். !

மொழிவாரி மாநிலங்கள்-எஸ் ! தேசிய மொழி-நோ நோ  :

மொழிவாரியாகவே காங்கிரஸ் கட்சி தன்னுடைய பிராந்திய அமைப்புகளை நடத்தியது. மொழிவாரியான மாநிலங்கள் கட்டாயம் தருவோம் என்று வாக்குறுதி தந்திருந்தார்கள். மதரீதியாக நாடு பிளவுபட்டதால் அந்த யோசனையை கிடப்பில்
போட்டார்கள். பொட்டி ஸ்ரீராமுலுவின் உண்ணாவிரதம் மீண்டும் மொழிவாரி மாநில கோரிக்கையை எரிய விட்டது. அவரின் மரணம் அதை பெருந்தீயாக ஆக்கியது. முதலில் நேரு முரண்பட்டாலும் பின்னர் பெருவாரி மக்களின் கோரிக்கையை ஏற்று மொழிவாரி மாநிலங்களுக்கு ஒத்துக்கொண்டார். அது எவ்வளவு புத்திசாலித்தனமான முடிவு என்பதை மொழி அடிப்படையில் மாற்றந்தாய் மனோபாவம் காட்டப்பட்டு தனி நாடாக பிரிந்த வங்கதேசம் நிரூபித்தது. இந்தியா அப்படியே உயிர்த்து நிற்கிறது.

அதே போல தேசிய மொழியாக இந்தி என்று எழுந்த கோரிக்கை இந்தி பேசாத மாநிலங்களின் எதிர்ப்பால் ஏற்கப்படவில்லை. அதிகாரப்பூர்வ மொழிகள் மட்டுமே இன்னமும் இந்தியாவில் உண்டு. தேசிய மொழி இந்தி என்று யாராவது சொன்னால் “சட்டமும்,வரலாறும் தெரியுமா உனக்கு ?” என்று கேட்டு பின்னுங்கள்

இந்திராவின் எமெர்ஜென்சி, கோமாவுக்கு போன ஜனநாயகம் :

தேர்தல் முறைகேடுகளில் ஈடுபட்டீர்கள் ; பிரதமர் நாற்காலியை காலி செய்யுங்கள் என்கிற ரீதியாக ஆறு வருடங்கள் தேர்தலில் போட்டியிடக்கூடாது என்று கோர்ட் சொல்லியிருந்தது. கேசவாநந்தா பாரதி வாழ்க்கை அரசியலமைப்பின் அடிப்படையை மாற்றக்கூடாது என்று  உச்சநீதிமன்றம் சொல்லவே தலை கிறுகிறுத்தது இந்திராவுக்கு ! மன்னர் மானியம் நீக்கியதும் தவறு என்று கோர்ட் சொல்லியது ஒரு பக்கமென்றால் ஜெபி மற்றும் மாணவர்கள் நாடுமுழுக்க போராட்டங்களை முன்னெடுக்க உள்நாட்டு கலகம் இருந்தால் எமெர்ஜென்சி அறிவிக்கலாம் என்பதை பயன்படுத்தி எல்லா உரிமைகளையும்  பறித்தார். அமைச்சரவையை கூட கலந்து ஆலோசிக்காமல் நடந்த அநியாயம் அது.

பேச்சுரிமை,எழுத்துரிமை எல்லாமும் போனது. கோர்ட்கள்,அதிகாரிகள்  மவுனம் சாதித்தனர் ; எதிர்த்த நீதிபதிகள் தூக்கி அடிக்கப்பட்டார்கள். எதிர்க்கட்சி தலைவர்கள் சிறை போனார்கள்.  இந்தியாவின் இருண்ட பக்கங்கள் அவை. பிரதமர் முதலிய முக்கிய பதவிகளில்  கோர்ட் விசாரிக்க முடியாது என்றெல்லாம் சட்டங்கள் திருத்தப்பட்டன. பாராளுமன்றம் தான் இருப்பதிலேயே பெரிய தாதா  என்கிறவாறு அரசியலமைப்பு அலங்கோலமானது

மீட்கப்பட்ட மாட்சிமை :

தேர்தல்கள் வந்ததும் மக்கள் மவுனப்புரட்சி செய்தார்கள். முப்பது ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியை காலி செய்திருந்தார்கள். இந்திராவே தோற்றுப்போனார். இந்திரா செய்த திருத்தங்கள் திரும்பபெறப்பட்டன. உள்நாட்டு கலகம்,ஆயுத புரட்சி ஏற்பட்டால் மட்டுமே எமெர்ஜென்சி என்று ஆனது. கேபினட் அனுமதி வேண்டும்,மூன்றில் இரண்டு பங்கு மெஜாரிட்டி இரண்டும் அவசியம் என்றும் மாற்றினார்கள். ஒரு வருட எமெர்ஜென்சி நீட்டிப்பு ஆறு மாத கால நீட்டிப்பு என்று குறைக்கப்பட்டது. நீதித்துறையின் சுதந்திரம் காப்பற்றப்பட்டது. பிரதமர் முதலிய பதவிகளை எந்த வகையான விசாரணையில் இருந்தும்  காத்த சட்டங்கள் கழித்துக்கட்டப்பட்டன

நியாயம் காக்கும் நீதிமன்றம் :

எண்பதுகளுக்கு முன்னர்வரை பாதிக்கப்பட்ட நபர் மட்டுமே தனக்கு நீதிவேண்டி கோர்ட் வாசலை தொட முடியும். பீகாரில் கைதிகள் சரியாக நடத்தப்படவில்லை என்று அவர்களின் சார்பாக கோர்ட் வாசல் ஏறினார் ஹூஸ்னாரா எனும் வழக்கறிஞர். பொது நலன் மனு என்கிற கருத்தாக்கம் எழுந்தது அப்பொழுது தான்.  பொது மக்களின் நலன் பாதிக்கப்படுகிற பொழுதோ,அல்லது நியாயம் கேட்டு கோர்ட் படியேற பாதிக்கப்பட்ட எளியவர்களால் முடியாத பொழுதெல்லாம் பொது நல வழக்குகள் தான் ஒரே ஆறுதல்

உள்ளாட்சியின் மூலம் சுயாட்சி :

காந்தியின் கிராம சுய ராஜ்யத்தை அது சாதியத்தை வளர்க்க கூடும் என்று அப்பொழுது அமல்படுத்தாமல் நேரு நகர்ந்தார். மேற்கு வங்கமும், கேரளாவும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் வழங்கி அதிகார பரவலாக்கலை சாதித்தன. அதிகாரம் ஒரே இடத்தில் குவிந்து கிடப்பதை மாற்றி கிராம மற்றும் நகராட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் தரும் வகையில் அரசியலமைப்பு சட்டத்தை தொன்னூறுகளின் ஆரம்பத்தில் மாற்றியது இன்னுமொரு முக்கிய தருணம்.
எளியவர்கள் அதிகாரத்தின் கரங்களை கொடுப்பதை சாதித்தது.

சமூக நீதி காத்த வி.பி.சிங் :

முந்தைய ஜனதா அரசு கொண்டு வந்திருந்த மண்டல் கமிசனின் இருபத்தி ஏழு சதவிகித இடஒதுக்கீட்டை சாத்தியமாக்கினார் வி.பி.சிங். பல்வேறு உயர்சாதியினர் போராட்டத்தில் குதித்தார்கள். தீக்குளிப்புகள் நடந்தன. ஆனாலும்,சமூக நீதிக்கான முன்னெடுப்பு சட்டமாகி சாதித்தது. அரசுகள் பல மாறினாலும் அச்சட்டத்தை மாற்ற யோசிக்கவே செய்கின்றன. க்ரீமி லேயர் என்று கோர்ட் மட்டும் அதிக வருமானம் ஈட்டுபவர்களை தள்ளியே வைத்திருக்கிறது.

இரும்புத்திரைகளை கிழித்திடும் தகவல் அறியும் உரிமைச்சட்டம் :

“ஏண்டா கொண்டு வந்தோம் !” என்று காங்கிரசே கதிகலங்கி இருக்கும். நிர்வாகத்தில் ஒழுங்கை கொண்டு வர அது மக்களுக்காக இயங்க ஒளிவுமறைவற்ற தன்மை அவசியம். அதை சாதிக்க வெகுகாலம் கழித்து நிறைவேற்றப்பட்டது இந்த அற்புதம். எளியவர்களின் ஆயுதமானது இது. மறுக்கப்பட்ட அடிப்படை உரிமைகள்,கால தாமதங்கள்,ஊழல்கள் எல்லாமும் வெளியே வந்து தலைக்கு மேலே இருக்கும் சட்டத்தின் கத்தியானது இச்சட்டம்