பேராசிரியர் பிரதாப் பானு மேத்தா இந்தியாவின் முதன்மையான அரசியல் அறிவியல் அறிஞர்களில் ஒருவர். ப்ரின்ஸ்டனில் முனைவர் பட்டம் பெற்ற அவர் ஹார்வர்ட், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகங்களில் பேராசிரியராக பணியாற்றினார். தற்போது Centre For Policy Research மையத்தின் தலைவராக உள்ளார். ஆழமான பார்வைகளுக்கும், கூர்மையான கருத்துக்களுக்கும் பெயர் பெற்ற அவரின் ‘Ambedkar-Slayer of All Gods’ கட்டுரை அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது:
#அம்பேத்கர் அதிகாரம்-ஜனநாயகம், பொருளாதார வளம்-வன்முறை, இந்து மதம்-பாரம்பரியம், தேசியம்-நீதி, எல்லாவற்றுக்கும் மேலாக மெய்யியல் என்கிற பெயரில் நிகழ்த்தப்படும் நேர்மையற்ற, அபத்தமான சொற்பொழிவுகள் ஆகியவை குறித்த நம்முடைய பிரமைகளைக் கடுமையாகக் கேள்விக்கு உட்படுத்துகிறார். அம்பேத்கர் நம்மை நாமே பார்த்துக்கொள்ள அஞ்சுகிற கண்ணாடியாகச் சுட்டெரிக்கிறார். அவரின் இருப்பு நம்முடைய மோசமான மனசாட்சி, இறைநம்பிக்கை குறித்த உறுத்தலை தந்துகொண்டே இருக்கிறது.#
தலைவர்களின் பிறந்தநாள்கள், வரலாற்று நிகழ்வுகளை நினைவுகூறும் நாட்கள் போன்றவை அப்போதைய நிலைமையை உணர்ந்து கொள்ளவும், வெற்றி, தோல்விகளைச் சீர்தூக்கிப் பார்க்கவும் வாய்க்கும் தருணங்களாகவே பெரும்பாலும் திகழ்கின்றன. இப்படிப்பட்ட அளவுகோல்கள், வெற்றி-தோல்விகளுக்குள் அண்ணல் அம்பேத்கரை அடக்க முயல்வது முந்திரிக்கொட்டைத்தனமானதும், முட்டாள்தனமானதும் ஆகும். மகத்தான தலைவர்கள் பலரைப் பொறுத்தவரை, ஒரு பண்பாட்டின் தர அளவுகோல்கள் லட்சியங்கள் ஆகியவற்றுக்கு ஏற்ப அவர்கள் எந்த அளவுக்கு வாழ்ந்தார்கள் என்றே நாம் அவர்களைச் சீர்தூக்கிப் பார்க்கிறோம். அண்ணல் அம்பேத்கரைப் பொறுத்தவரை இது தலைகீழான ஒன்று. ஒட்டுமொத்த பண்பாடே தன்னை மதிப்பிட்டுப்பார்த்துக்கொள்ள வேண்டிய அளவுகோல் அவரே. நம்முடைய ஆதர்சங்களால் அவரை எடை போட முடியாது. அம்பேத்கர் எனும் ஆளுமையின் ஆதர்சங்களால் தான் நம்மை நாமே மதிப்பிட்டுப் பார்க்க வேண்டும். அம்பேத்கருடன் உறவாடுவதென்பது அவரை மதிப்பிடுவதென்பதல்ல, நம்மை மதிப்பிட்டுக்கொள்வதும், நாம் ஏன் இன்னமும் அவரின் நீதிக்கான அறைகூவலை, பகுத்தறிவுக்கான வாதத்தை, அமைப்புகள் குறித்த ஆழமான கற்பனைகளைப் பற்றிக்கொள்ளவும், முகத்துக்கு நேராக எதிர்கொள்ளவும் மறுக்கிறோம் என்பதைப் புரிந்துகொள்வதும் ஆகும்.? அம்பேத்கர், நம்மை நாமே பார்த்துக்கொள்ள அஞ்சுகிற கண்ணாடி. அவரின் இருப்பு நம்முடைய மோசமான மனசாட்சியையும்,மோசமான நம்பிக்கைகளையும் பற்றி நமக்குத் தொடர்ந்து நினைவுறுத்துகிறது.
அம்பேத்கர் குறித்து எழுதுவது மிகவும் கடினம்; இதற்குப் பல காரணங்கள் உண்டு. அறிவுத்துறையைச் சேர்ந்தவர்கள் அம்பேத்கர் குறித்துப் போதுமான அளவில் பங்களிப்பு செய்யவில்லை என்பது வருத்தம் தரும் உண்மையாகும். தன்னைக் குறித்த ஒரு நல்ல வாழ்க்கை வரலாறுக்காக அம்பேத்கர் இன்னும் காத்துக் கொண்டிருக்கிறார். மராத்தி மொழியில் மேற்கொள்ளப்பட்ட ஒரு சில முயற்சிகளைத் தவிர்த்து செறிந்த விளக்கங்கள் கொண்ட, அதிகாரப்பூர்வ அம்பேத்கர் படைப்புகள் இன்னமும் கனவாகவே உள்ளது. அவருடைய கடிதங்கள் இங்கும் அங்குமாகச் சிதறியும் தேடிக் கண்டுபிடிப்பதற்கு வெவ்வேறு அளவில் சிரமம் கொண்டதாக இருப்பதோடு, வெவ்வேறு வகையான அமைப்பு ரீதியான உரிமைப்போர்களில் சிக்கிக்கொண்டிருக்கின்றன.. அவருடைய 125-வது பிறந்தநாளுக்குச் செய்யப்படும் மிக மிக அவசியமாக மேற்கொள்ள வேண்டிய ஒரு பணி உண்டென்றால், அது அவரின் படைப்புகள், கட்டுரைகள், கடிதங்கள் ஆகிய அனைத்தையும் முழுமையாக, கச்சிதமாகத் தொகுப்பதே ஆகும். அவருடைய எல்லாப் படைப்புகளிலும் நீங்கள் மூழ்கி முத்தெடுத்தாலும் காந்தி, நேருவை நெருக்கமாக உணர்வதைப் போல அம்பேத்கர் என்கிற ஆளுமையை நீங்கள் கண்டுணர முடியாது. அறிவுத்துறை சார்ந்த ஆய்வுகள், அதிகாரபீடங்கள், பலத்த சமூக ஆதரவு, சமகால நினைவலைகள் காந்தி, நேரு குறித்த அறிவுத்துறை ரீதியான கட்டமைப்பை உறுதிசெய்வதற்கு வழிகோலின. அந்த அளவுக்குக் கண்டுகொள்ளப்படாமல் இருக்கும் அண்ணல் அம்பேத்கர் அலட்சியத் திரை தாண்டி பிரகாசிக்க வேண்டியவராக இருக்கிறார்.
அம்பேத்கரை ஓரங்கட்டப் பார்க்கும் எந்த முயற்சியும் சுடர்விட்டு எரியும் அவரின் அரசியல், அற ஆற்றலை அணைத்து விட முடியாது. அவர் காலத்தின் தலைவர்களில் அவர் மட்டுமே இன்று பல கோடி மக்களிடையே மதரீதியிலான முக்கியத்துவத்தைவிட மேலான முக்கியத்துவத்தைப் பெற்றிருக்கிறார். தலித் காலனிகளின் வழிப்பாதைகளில் அவர் கடவுளாக்கப்பட்டு, சிலைவைக்கப்பட்டு நினைவுகூரப்படுகிறார். சாதாரண அரசியல் தலைவர்களை மக்கள் கொண்டாடுவதோடு அதனை ஒப்பிட முடியாது. அவரைப் பற்றிய நினைவுகூரல் கடந்த காலங்களின் மதப் புரட்சிகளை ஒத்திருக்கிறது. ‘ஜெய் ஸ்ரீராம்’ என்பதைவிட அதிக வல்லமை கொண்ட சக்தியாக ‘ஜெய் பீம்’ எனும் தலித் இயக்க வழிபாட்டுத் தன்மைகொண்ட ‘அம்பேத்கர் வணக்க முழக்கம்’ திகழ்கிறது. அம்பேத்கர் இனி வெறும் தலைவர் இல்லை. அவர் தீர்க்கதரிசி, மீட்பர்.
தீர்க்கதரிசிகள் குறித்து எழுதுவது மிகவும் கடினம். அதற்கு ஒன்றுக்கொன்று நேரெதிரான இரு முரண்பாடான காரணங்கள் உண்டு. அம்பேத்கர் கண்மூடித்தனமான வழிபாடு, துதிபாடல் ஆகியவற்றைக் குறித்து எச்சரித்தார். அதைக் கருத்தில் கொண்டால் அவரை ஆதர்சமாகக் கொண்ட மக்களோடு விவாதத்தில் ஈடுபடவே முடியாது.. அவர்களைப் பொறுத்தவரை அம்பேத்கர், கருத்தாடல் நிகழ்த்துவதற்கானவர் என்பதைவிட ஒரு பீடமாகக் கருதப்படுபவர். அம்பேத்கர் குறித்து எழுதுபவர்களை ஒரு சந்தேகக் கண்ணோடு காண்பது நிகழ்கிறது. தலித் அல்லாதோர் அவரைப் பற்றித் தாங்கள் ஏன் எழுத வேண்டும் என்கிற மனதளவிலான விலக்கலை மேற்கொண்டிருக்கிறார்கள். பல்லாண்டுகளாக நமக்கு அசௌகரியமான உணர்வைக் கொடுத்துக்கொண்டிருந்த ஆளுமையாகத் திகழும் அவரைக் கண்டுகொள்ளாமல் தவிர்த்தோம். ஒரு பெருந்தலைவரை ஓரங்கட்ட சமூகம் முயன்றாலும், அவர் அதைத் தாண்டி வெல்லும் அவரது பரிவாரத்தில் இணைந்துகொள்ள முயல்கிறது.
அம்பேத்கரை பயன்படுத்திக் கொள்வது கொள்ளும் முயற்சிகள் அவரை வசப்படுத்தி, கட்டுப்படுத்தும் முயற்சி என்றும் ஐயத்தோடு நோக்கப்படுகிறது. அம்பேத்கரைக் கடவுள் போல ஆக்குவது அவரின் புரட்சிகரமான கருத்துக்களை எதிர்கொள்ளாமல் தவிர்ப்பதற்கான எளிமையான, செய்கையே. அம்பேத்கரை பாஜக அபகரித்துக்கொள்வதற்கான முயற்சிகளில் இது வெளிப்படையாகத் தெரிகிறது. காங்கிரஸ் அவரை ஓரங்கட்டியதும், பாஜக அவரை அரசியல் லாபங்களுக்காகப் பயன்படுத்திக் கொள்ள முயல்வது நமக்குப் பலவற்றைச் சொல்லாமல் சொல்கின்றன. குறைந்தபட்சம் இப்பொழுதாவது அவர் குறித்து அதிகம் பேசுகிறார்கள். இப்படிப்பட்ட பெயரளவிலான போற்றுதல்கள் அவை பெரிதளவில் பயன் தராது என்பதை உணர்த்துவதோடு நின்றுவிடவில்லை. அம்பேத்கர் முன் நாம் தலைகுனிந்து வணங்கி நிற்பதன் மூலம் அவர் நம்முடைய ஆன்மாவைக் குத்திக் கிழிப்பதில் இலிருந்து தப்பிக்க எண்ணுகிறோம்.
பிரதமர் நரேந்திர மோடி அண்ணல் அம்பேத்கர் நினைவகத்துக்கான அடிக்கல் நாட்டும் விழாவில் அம்பேத்கரை தலித்துகளின் தலைவர் என்பதைத் தாண்டிக் காண வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். இது உண்மை என்பதில் ஐயமில்லை.நீதி, ஜனநாயகம் குறித்துக் கவலை கொள்ளும் யாரும் அம்பேத்கரின் அறிவாற்றலால் நிச்சயம் பயன்பெறுவார்கள். அதே சமயம் அம்பேத்கர் வெறும் தலித் தலைவர் அல்ல என்பது வெற்று முழக்கமாக இருக்கக் கூடாது. அம்பேத்கர் ஏன் நம் எல்லாருக்குமான தலைவர் என்கிற ஆழமான கேள்வியை எழுப்பிக்கொள்ளும் திறப்பாக இந்த முழக்கம் அமையவேண்டும். அம்பேத்கர் பல்வேறு உலகளாவிய பொதுஉண்மைகளைப் பேசினார். தன்னை யாரேனும் உரிமை கொண்டாட வேண்டும் என்றால் அதற்கு அவர்கள் தங்களைத் தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதில் அவர் தெளிவாக இருந்தார். என்றைக்குத் தலித் விடுதலையைச் சாதிக்கிறோமோ அன்றே அம்பேத்கரை உரிமை கொண்டாடுவதற்கு நாம் தகுதியானவர்களாக ஆவோம் அம்பேத்கர் தலித்துகளுக்கு மட்டுமல்ல, எங்களுக்கும் தலைவர் என்கிறோம் என்றால் அவரின் அறைகூவல்களுக்கு நேர்மையானவர்களாக, அவர் வைத்திருக்கக் கூடிய தேர்வுகளைத் திடமாக எதிர்கொள்பவர்களாக இருக்க வேண்டும்.
அம்பேத்கரை தலித் தலைவர் என்கிற முகம் மட்டுமே கொண்டவரில்லை என்பதன் மூலம் அவரின் புரட்சிக்குரலை மழுங்கடிப்பது சத்தமில்லாமல் சாதிக்கப்படுகிறது எனத் தலித்துகள் அஞ்சுவது பல சமயங்களில் நியாயமாகவே உள்ளது. அநீதிக்கு எதிராக அண்ணல் அம்பேத்கர் காட்டும் குத்திக் கிழிக்கும், தயவு தாட்சண்யமற்ற கோபத்தை மழுங்கடிப்பதன் மூலம் அம்பேத்கரோடு இணக்கமாகத் தலித் அல்லாதோர் உணர்கிறார்கள். அவரின் ஆங்கில எழுத்துக்களை விட மராத்தி மொழியில் இந்தக் கோபம் கூடுதலாகக் கொப்பளிக்கிறது. அவர் வாழ்நாள் முழுக்க அநீதியை அம்பலப்படுத்துவதை அயராமல் செய்தார். ஒரு செயல்நோக்கமோ, தேசமோ, அதிகாரமோ, கலாச்சாரமோ, செல்வமோ அநீதியைச் சற்று மூடி மறைக்க முயன்றாலும் அவற்றை ஏற்றுக்கொண்டு, அவற்றுக்கு அர்ப்பணிப்போடு இருக்க முடியவே முடியாது என்பதில் அம்பேத்கர் தெளிவாக இருந்தார். அருண் ஷோரி முதலிய விமர்சகர்கள் அம்பேத்கர் தேசியவாதி இல்லை என்கிறார்கள். ‘நீதியின் அடித்தளத்தின் மீது எழுப்பப்படாத ஒரு தேசம் தேசமே அல்ல’ என்றதில் அம்பேத்கரின் ஆளுமை பிரமிக்க வைக்கிறது. அவர், கிட்டத்தட்ட எல்லாச் சித்தாந்தங்களும் தலித்துகள் ஒடுக்கப்படுவதை மூடி மறைக்கும் சூழ்ச்சிகளாக நிகழ்ந்ததைக் கண்டு கொதித்தார். சித்தாந்தங்களின் நுண்மையான விவாதங்கள் எனும் பனிமூட்டத்தில், தலித் அடக்குமுறை எனும் உள்ளார்ந்த உணர்வு மூடி மறைக்கப்படுகிறது என்பதை அவர் புலப்படுத்தினார்.
தலித்துகள் மீது கட்டவிழ்த்து விடப்படும் மூர்க்கமான வன்முறை, தந்திரமான ஒடுக்குமுறை, தினசரி அவமானங்கள் ஆகியவற்றை நாம் கண்கொண்டு பார்ப்பதே இல்லை. தலித்கள் மீதான வன்முறைகளை அப்படி நடப்பதாக முழுமையாக யாரும் ஒப்புக்கொண்டதே இல்லை. அப்படியே ஒப்புக்கொண்டாலும், அந்த ஒப்புதல் வாக்குமூலத்தின் முக்கியத்துவத்தைப் பொய் வேடத்தாலும், தற்காப்புத் தொனியின் மூலமும் இருட்டடிப்பு செய்துவிடுவதை அவர் சுட்டிக்காட்டினார். காந்தியை கடுமையாகத் தாக்கிய அம்பேத்கர் அதைவிடக் கூடுதலான கடுமையோடு நேருவை நோக்கி முக்கியமான விமர்சனத்தை இப்படி வைத்தார்: இந்திய சமூகத்தின் மையமாக உள்ள இந்த வன்முறையின் இருப்பை நேரு ஒப்புக்கொள்ள மறுக்கிறார். ‘நேருவை பாருங்கள். அமெரிக்காவை உருவாக்கிய தலைவர்களில் ஒருவரான ஜெபர்சனின் விடுதலை அறிவிப்பில் அவர் உத்வேகம் பெறுவதாகப் பெருமிதம் கொள்கிறார்.
இந்தியாவில் உள்ள ஆறு கோடி தீண்டப்படாத மக்களின் நிலை குறித்து எப்போதாவது சஞ்சலமோ, அவமானமோ நேரு அடைந்திருக்கிறாரா? அவரின் எழுதுகோலிலிருந்து ஊற்றெடுக்கும் இலக்கிய வெள்ளத்தில் எங்கேனும் அவர்கள் பற்றிய குறிப்புகள் இருக்கின்றனவா?’. அம்பேத்கர் தலித் அல்லாத மக்களை நோக்கித் தொடர்ந்து ஒரு குற்றச்சாட்டை முன்வைக்கிறார். ‘தாங்கள் எப்படிப்பட்ட அநீதியை மேற்கொண்டிருக்கிறோம் என்று அவர்கள் உணர்வதே இல்லை!’. இன்றுவரை நாமும் உணர்ந்ததாகத் தெரியவில்லை.
அம்பேத்கரின் கோபத்தில் பழிவாங்கும் சாயல் எங்கும் இல்லாததால் அது ஆக்கப்பூர்வமானதாகத் திகழ்கிறது. அது கூர்மையான இலக்குக் கொண்ட சமூக விமர்சனமாகவே எப்பொழுதும் திகழ்கிறது. பழிக்குப் பழி எனப் பேசாத அம்பேத்கரின் பண்பை கொண்டே அவரின் புரட்சிகரமான முகத்தை மழுங்கச் செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இரண்டு சிக்கல்கள் எழுகின்றன. முதலாவது இறுதி இலக்கு, அதற்கான வழிமுறை ஆகியவற்றுக்கு இடையே உள்ள தொடர்பு குறித்த அம்பேத்கரின் ஆழமான அலசல். இது குறித்து விரிவாகப் பின்னர்க் காண்போம். சாதி, அமைப்பு ரீதியாக அடக்குமுறையை மேற்கொண்டு சமூகத்தில் தலித்துகளைத் தொடர்ந்து அடிமைப்படுத்துவதன் மீது நமக்கு எழவேண்டிய நியாயமான கோபத்தை, அம்பேத்கரிடம் பழிவாங்கும் உணர்ச்சி இல்லாததைக் கொண்டு தணித்துக் கொள்கிறோம் என்று தலித்துகள் குற்றஞ்சாட்டுவது சரியே ஆகும்.
காந்தியுடன் அம்பேத்கர் மேற்கொண்ட உரையாடல்களில் ‘தலித் விடுதலை என்பது தலித்துகளை அதிகாரம் மிக்கவர்களாக மாற்றுவதற்குக் குறைவானது.’ என்கிற கருத்தாக்கத்தால் காயப்பட்டார். தலித்துகள் மீதான அடக்குமுறையை ஆதிக்கச் சாதியினரின் பிரச்சினையாகக் காந்தி புரிந்துகொள்ள முயன்றது ஒருவகையில் தலித் அதிகாரத்தை மறுதலிக்கும் தந்திரமே. காந்தி-அம்பேத்கர் விவாதத்துக்குள் போவதற்கு இது தருணமில்லை. (இந்தத் தலைப்பில் மேலும் ஆர்வம் கொண்டவர்கள் காண்க: டி.ஆர்.நாகராஜின் சிறந்த நூல்: The Flaming Feet and Other Essays: The Dalit Movement in India தமிழில் : ‘தீப்பற்றிய பாதங்கள்’ மொழிபெயர்ப்பு: ராமாநுஜம்)).
அம்பேத்கர் தலித்துகள் பேசாமடந்தைகளாக அநீதிகளை வாங்கிக்கொள்பவர்களாக இருக்க மாட்டார்கள் என அழுத்தி சொன்னது, எந்த அளவுக்குத் தலித்துகள் ஒடுக்கப்படுகிறார்கள் என்பதை நாம் மறப்பதற்கு வசதியாக உள்ளது. அரசமைப்பு சட்டத்துக்கு உட்பட்டு அரசியல் செய்ய வேண்டும் என்று அம்பேத்கர் வலியுறுத்தியதைக் கொண்டு, அரசமைப்புரீதியான மேலோட்டமான சலுகைகள் மட்டுமே தலித் விடுதலை என்கிற கயமையை மேற்கொள்கிறோம். நீங்கள் மனசாட்சி உள்ளவராக இருந்தால், அம்பேத்கரின் எழுத்துக்கள் உங்களை அதிர்ச்சியடைய வைக்கும், பேச்சற்றவர்களாக வெட்கித் தலைகுனிய வைக்கும். அம்பேத்கரை தங்களுக்குரியவராக அபகரிக்க முயலும் விந்தையான ரசவாதத்தின் மூலம், அசௌகரியமான உணர்வை ஏற்படுத்த வேண்டிய அம்பேத்கர் கதகதப்பைத் தருபவராக மாற்றப்பட்டுள்ளார். அவர் புனிதராகக் கொண்டாடப்பட வேண்டியவர் என்று,வரும்போது எல்லோரும் ஒருமித்த கருத்துடையவர்களாக இருக்கிறார்கள். உண்மையில், இந்தியாவின் ஆன்மாவின் மீது நடக்கும் மிக முக்கியமான அடிப்படையான மோதல்களின் மையமாக அவரே உள்ளார்.
(தொடரும்)